டிஸ்கி-1 : இது சாரு சம்பந்தப்பட்ட பதிவு. ஆகவே 18 வயதிற்கு உட்பட்டோரும், அன்புச்சகோதரிகளும், கலாச்சாரக் காவலர்களும் மற்ற பிற யோக்கியக் கனவான்களும் இப்பதிவைத் தவிர்க்கவும். அடுத்ததாக ‘ஸ்பெக்ட்ரம் விசாரணையும் வாழைப்பழக் காமெடியும்’ என்ற ’நல்ல’ பதிவு வந்துகொண்டேயிருக்கிறது. அதில் சந்திப்போம்.
டிஸ்கி-2 : இந்த நாவல் அனுஷ்காவையோ, அனுஷ்காவின் தெலுங்கு டப்பிங் படமான தேகத்தையோ தழுவி எழுதப் பட்டதல்ல.
பரந்து விரிந்த பொட்டல் காட்டில் சாரைப்பாம்பு ஒன்று சுருண்டு படுத்திருந்தது. அதையறியாத சிறுவர்களாகிய நாங்கள் வெறும் அரை டவுசரோடு, சுட்டெரிக்கும் வெயிலில் அந்த செம்மண் காட்டிற்கு விளையாடப் போனோம், ஆள் அரவம் கேட்ட சாரைப்பாம்பு சரசரவென ஓடத்துவங்கியது. ’ஹோ’வென்ற கூச்சலோடு ஏதோவொரு குருட்டு தைரியத்தில் அந்தப் பாம்பைத் துரத்திக்கொண்டு புழுதி பறக்க ஓடினோம். வெயிலில் உடல் மின்ன, அந்த நீண்ட செம்மண் பரப்பில் வளைந்தும் நெளிந்தும் சரசரவென அந்தச் சாரைப்பாம்பு ஓடியது கண்கொள்ளாக் காட்சியாக இருந்த்து. கொஞ்ச தூரம் ஓடிய பின் பாம்பின் வேகத்திற்கு ஈடு கொடுக்கமுடியாமல் களைத்து விழுந்தோம். அதன்பின் அந்தப் பாம்பு ஓடிய சித்திரம் என் நினைவில் நெடுநாள் நின்றது. பிறகு ’அறிவு’ வளர்ந்துவிட்டதால் அதை மறந்தும்போனேன்.
’டார்ச்சர் செய்யும்போது தர்மா தன் முகத்தைக் கறுப்புத்துணியால் மூடிக்கொள்வது வழக்கம்’ என்ற வரியோடு துவங்கும் சாருவின் எழுத்து, அந்த சாரைப்பாம்பின் ஓட்டத்தை பல வருடங்களுக்குப் பின் எனக்கு ஞாபகப்படுத்தியது. தொடர்ந்து இங்கும் அந்த எழுத்தைப் பிடிக்க மூச்சிரைக்க, தேகத்தின் கடைசிவரை ஓடவேண்டியதாயிற்று.
கதையென்ன என்றால் ‘சிறுவயது முதலே சுற்றத்தில் வன்முறையைப் பார்த்து வளர்கின்ற தர்மா, பின்னாளில் பிறரை உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் துன்புறுத்தக்கூடியவனாக ஆகின்றான்’ என்று சுருக்கமாகச் சொல்லலாம். மற்றபடி ‘ கலவி கொள்ளும்போது இன்பம் கிடைக்க அந்த வளையங்கள் தான் காரணம்’, ‘அவனுடைய 15வது வயதில் எதிர்வீட்டு ஆங்கிலோ இந்தியக் கிழவியைப் புணர்ந்தபோது’, ‘குப்பி அடிப்பவன்’ (இங்க இவ்வளவுதாங்க எழுத முடியும்!) போன்ற சாருவின் ஸ்பெஷல் அணுகுண்டுகளால் நிறைந்தது இந்த நாவல். வன்முறையாளர்களுக்கு தர்மா என்றும் நீதி என்றும் பெயரிட்டிருப்பது சாருவுக்கே உரித்தான நக்கல்(இது, அது அல்ல!).
இந்த நாவலில் குறையென்று பார்த்தால், திடீரென்று சாருவே இடையில் தோன்றுகிறார், கூடவே கிருஷ்ணா வேறு. இவர்களைப் பார்த்ததுமே அய்யய்யோ மறுபடியும் ஜீரோ டிகிரியா எனப் பதறினேன். நல்ல வேளையாக சீக்கிரம் காணாமல் போனார்கள். இந்த தரிசனத்திற்கு ஒரு வேளை பின் நவீனத்துவம் தான் காரணமோ?
கடைசி அத்தியாயத்தில் மறுபடியும் கிருஷ்ணா வந்து” நாவலின் முடிவெங்கே” என்கிறார். சாருவும் பிரசன்னமாகி” அப்புறம் என்னாச்சுன்னா..”என விளக்குகிறார். இதற்கும் அந்த நாசமாய்ப் போன பின் நவீனத்துவம் தான் காரணமோ என்னவோ? பழைய திரைப்படங்களில் கிளைமாக்ஸில் மொத்தமாக எல்லோரும் ஃபோட்டொவிற்கு போஸ் கொடுக்கும்போது, மொக்கையாக காமெடியன் ஏதாவது சொல்வதைக் கேட்டு சிரிப்பார்கள். அதுதான் எனக்கு ஞாபகம் வந்தது. கடைசி அத்தியாயம் கொஞ்சம் தேவையற்றதாகவே எனக்குப் பட்டது. எங்கே கடைசி வரியில் மேஜர் சுந்தர்ராஜன் வந்து “தர்மா, யூ ஆர் அண்டெர் அரெஸ்ட்..நான் உங்களைக் கைது செய்யுறேன்’ என சொல்லி விடுவாரோ எனப் பயந்தேன். நல்லவேளையாக அப்படி எதுவும் நடக்கவில்லை.
இந்த நாவல் கருப்பொருளாய் வதையை, வன்முறையை எடுத்துள்ளது. வன்முறை நம் மனதிற்குள் எப்போதும் வெளிவரத் தயாராய்த் தான் இருக்கிறது. அதற்கு வாய்ப்புக் கொடுக்கவில்லையெனில், மனதிற்குள்ளாவது வன்முறை நிகழ்ந்துகொண்டேயிருக்கிறது. நாம் வன்முறையில் இறங்க தேவையெல்லாம் நம் மனச்சாட்சியைக் கன்வின்ஸ் பண்ணுகிற ஒரு காரணமே. உதாரணமாக ஒரு கலாச்சாரக் காவலர் சாருவைக் கத்தியால் குத்த, இந்த நாவல் ஒன்றே போதுமானது.
ஆண்களின் மீதும், பெண்களின் மீதும் உடல் ரீதியாகவும் மனரீதியாகவும் நிகழ்த்தப் படும் வன்முறை தொடர்ந்து இந்த நாவலில் காட்டப்படுகிறது. வழக்கமாக இந்த வன்முறையானது பாதிக்கப்பட்ட பெண்ணின் பார்வையிலோ அல்லது மிஸ்டர்.பொதுஜனத்தின் பார்வையிலோ தான் காட்டப்படும். இந்த நாவல் அதிலிருந்து மாறுபட்டு, வன்முறையாளனின் பார்வையில் அவனது நியாயங்களோடு காட்டப்படுகிறது. ஆகவே தான் வெறும் பரபரப்பு நாவலாக ஆகியிருக்க வேண்டிய தேகம், இலக்கியமாக ஆகிறது.
சாரு தன் அபின் தடவிய சாரைப்பாம்பு எழுத்தால், நம்மை தர்மாவோடு ஒன்றச் செய்கிறார். பஸ்ஸில் பெண்கள்மீது நடக்கும் வன்முறையை, வன்முறையாளனின் பார்வையில் மிகவும் ரசனையோடு விவரிக்கிறார். நாமும் மனதள்வில் லுங்கியை ஏற்றிக் கட்டி பஸ்ஸில் ஏறிவிடுகிறோம். தொடர்ந்து இந்த நாவல் முழுக்க திட்டமிட்டே நம்மை வன்முறையில் கூட்டாளியாக ஆக்குகின்றார். வன்முறையின் சுவை இந்நாவல் முழுக்க செக்ஸாகவோ, வதையாகவோ நமக்குக் காட்டப் படுகிறது. வன்முறை என்பது ஏதோ ஒரு தேசத்தில் யாரோலோ நட்த்தப் படுவது மட்டுமல்ல, தனி மனிதனுக்குள்ளும் உறைந்திருப்பது என்பதை வெட்டவெளிச்சமாக்குகிறது இந்த நாவல். இதைப் படித்து முடித்தபின் இதில் எதையெல்லாம் ரசித்தோம் என்று பார்த்தால் ’நாமெல்லாம் கல்வி கற்ற நாகரீக மனிதர்தானா’ என்ற கூச்சத்தை சாரு தன் எழுத்தால் உண்டாக்குகின்றார். யோசித்துப் பார்க்கையில் நமக்கே நம்மைக் கண்டால் பயம் வருகிறது.
உபநிஷத்களும் பைபிளும் ஒவ்வொரு அத்தியாயத்தின் ஆரம்பத்திலும் கொஞ்சம் நக்கலுடன் மேற்கோள் காட்டப்படுகின்றன. உதாரணமாக தர்மா பட்டினியால் வாடும் அத்தியத்தில் வரும் சாண்டோக்ய உபநிஷத் : ”நாய்களுக்கும் பட்சிகளுக்கும் என்னவெல்லாம் உணவாகக் கிடைக்கிறதோ அதெல்லாம் உனக்கும் உணவாகும்”
இந்த நாவலின் மூலம், எவ்வளவு தான் சர்ச்சையில் மாட்டினாலும், தமிழ் இலக்கிய சூழலில் தான் ஒரு தவிர்க்க முடியாத, முக்கியமான எழுத்தாளர் என மீண்டும் நிரூபித்திருக்கிறார் சாரு நிவேதிதா.
நூல் விபரம்:
தலைப்பு : தேகம்
ஆசிரியர் : சாரு நிவேதிதா
விலை : ரூ.90/-
வெளியீடு : உயிர்மை பதிப்பகம்