Wednesday, July 31, 2013

சித்திரம் பேசுதடி - திரை விமர்சனம் (பாகம்-1)


அறிமுகம்:

தமிழ்சினிமாவில் வருடத்திற்கு 150 படங்களுக்கு மேல் வெளியாகின்றன. இந்தப் படங்களின் முன் நிற்கும் பெரும் சவால், மக்களின் கவனத்தைக் கவர்வது தான்.

சராசரி சினிமா ரசிகனை தியேட்டருக்கு வரவைக்க, பிரபல நடிகர்கள்/இயக்குநர்களின் பங்களிப்பு அவசியம் ஆகின்றது. அவ்வாறு இல்லாமல், புதிய இயக்குநர் மற்றும் புதுமுக நடிகர்களின் பங்களிப்பில் உருவாகும் படங்களின் வியாபார ரீதியிலான வெற்றி என்பது, இந்த தகவல் தொழில்நுட்பக் காலத்திலும், கஷ்டமான ஒன்றாகவே இருக்கிறது. ஆரண்ய காண்டம் படத்திற்கு நேர்ந்த கதியை நாம் அறிவோம். ஏறக்குறைய ஆரண்ய காண்டம் போன்ற மார்க்கெட்டிங் குறைபாடுகளுடன் 2006ம் ஆண்டு பிப்ரவரி மாதம் வெளியான படம் தான் "சித்திரம் பேசுதடி".

புதிய இயக்குநர், புதிய இசையமைப்பாளர், புதிய ஹீரோ மற்றும் புதிய ஹீரோ என ஏறக்குறைய புதுமுகங்களாலேயே எடுக்கப்பட்ட இந்தப் படம், வெளியான உடனேயேபாக்ஸ் ஆபீஃஸில் சுருண்டதில் ஆச்சரியம் இல்லை. பல தியேட்டர்களில் இருந்து தூக்கப்பட்டாலும், படத்தில் இடம்பெற்ற 'வாளை மீனுக்கும்.."பாடல் சேனல்களில் சூப்பர்ஹிட் ஆனது.

அதே நேரத்தில் பிரபல தயாரிப்பாளர் ஆஸ்கர் ரவிச்சந்திரனுக்கு, இது வழக்கமான படம் அல்ல என்று புரிந்துபோக, படத்திற்கு மறுவாழ்வு பிறந்தது. அதே ஆண்டு மார்ச் மாதம், சித்திரம் பேசுதடி நிறைய நல்ல தியேட்டர்களில் அதிக பப்ளிசிட்டியுடன் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டது. அதன்பின், அந்த ஆண்டின் சூப்பர் ஹிட் படங்களில் ஒன்றாக இந்தப் படம் ஆனது வரலாறு.

ஒரு நல்ல சினிமாவிற்கு பாடல்கள் தேவையோ இல்லையோ, ஆனால் சினிமா வியாபாரத்திற்கு பாடல் அவசியமாய் இருக்கிறது என்று பலருக்கும் புரிய வைத்தது கானா உலகநாதனின் 'வாளை மீனுக்கும்..' பாடல்.

 

ஒன் லைன்:

வறுமையின் காரணமாக அடியாள் வேலை பார்க்கும் திருவிற்கு, சாருலதாவுடன் மோதலுக்குப் பின் காதல் மலர்கிறது. அந்தக் காதலுக்கு இருதரப்பு குடும்பமும் சம்மதம் தெரிவித்த நிலையிலும், ஒரு பெரும் தடை ஏற்படுகிறது. அதையும் தாண்டி, அந்தக் காதல் ஜெயித்ததா?

தீம்:

நாம் ஒரு மனிதனின் குணாதியசத்தை தோற்றத்தையும் வசதியையும் வைத்தே கணக்கிடுகிறோம். வெளியில் தெரியும் தோற்றமே, உள்ளுக்குள்ளும் இருக்கும் என்று நம்புகிறோம். அது சரி தானா? அடியாளாய் அழுக்குச் சட்டையுடன் திரிபவனும், ஜென்டில் மேனாய் வெள்ளை உடைகளில் வலம்வருபவனும் உள்ளுக்குள்ளும் அப்படியே தான் இருக்கிறார்களா?

மொத்தத்தில் அகத்தின் அழகு முகத்தில் தெரியுமா?

கதை:

படிக்காத, வேலைக்காக அலையும் இளைஞனான திருநாவுக்கரசு என்ற திரு, ஆபத்தில் இருக்கும் இன்னொரு இளைஞனைக் காக்கிறான். அந்த இளைஞனின் தந்தை, அந்த ஊரில் ஒரு மினி தாதாவான அண்ணாச்சி. எனவே அவர் திருவை தன் அடியாளாக சேர்த்துக்கொள்கிறார்.

சாருலதா என்ற சாரு, அன்பான அப்பாவினால் வளர்க்கப்பட்ட மனித நேயமிக்க பெண். அவளின் அப்பாவின் நண்பர் நடத்தும் ஆர்பன் - எயிடு எனும் தன்னார்வுத் தொண்டு நிறுவனத்தில் வேலை செய்கிறாள்.

திரு-சாரு எனும் இந்த இரு எதிரெதிர் துருவங்களுக்கிடையே மோதல் ஏற்படுகிறது. அவளின் அறிவுறுத்தலில் திரு அடியாள் வேலையை விட்டுத் திருந்த, இருவரும் காதலிக்கத் தொடங்குகின்றனர்.

இரு வீட்டாரும் இந்தத் திருமணத்திற்கு சம்மதித்து, திருமண ஏற்பாடுகள் நடக்கும் நேரத்தில், திரு விபச்சார வழக்கில் கைது செய்யப்படுகிறான். திருமணம் தடைபட, சாருவின் அப்பா தற்கொலை செய்துகொள்கிறார். திரு மீண்டும் அண்ணாச்சியிடம் வேலைக்குச் சேர்கிறான்.

சாரு, தன் அப்பாவின் நண்பரிடம் அடைக்கலம் ஆகிறாள். அவளுக்கு அவர் வேறு திருமண ஏற்பாடு செய்ய, அண்ணாச்சியால் அந்த திருமணத்திற்கு தடை ஏற்படுகிறது. அண்ணாச்சியின் பையன், சாருவைக் காதலிப்பதே அதன் காரணம்.

அண்ணாச்சியின் தடையை மீறி, சாருவின் திருமணத்தை நடத்தி வைக்க திரு முடிவுசெய்கிறான். அண்ணாச்சியைவே எதிர்த்து நிற்கின்றான். இறுதியில் சாருவும் அண்ணாச்சியும் உண்மையை உணர்ந்துகொள்ள, திருவின் காதல் ஜெயிக்கிறது.

அந்த உண்மை, படத்தின் மாபெரும் ட்விஸ்ட், தூண். விபச்சாரம் செய்யப் போனது திரு அல்ல, இளம்வயதிலேயே மனைவியைப் பறி கொடுத்து மகளுக்காகவே வாழ்ந்த சாருவின் அப்பா!

பொதுவாக காதலுக்கு அந்தஸ்து குறுக்கே வரும் அல்லது ஜாதி குறுக்கே வரும் அல்லது (இந்தப் படத்தில் வந்தது போல்) வில்லனின் ஒரு தலைக்காதல் குறுக்கே வரும். ஆனால் ஒரு சராசரி மனிதனின் பலவீனம், ஒரு காதலை, அந்த காதல் ஜோடிகளின் வாழ்க்கையை தலைகீழாகப் புரட்டிப் போட்டுவிட்ட அவலத்தை இந்தப் படம் சொன்னது. காதலுக்கு எதிரியாக வருபவரை வெறுத்தே பழகிய ஆடியன்ஸுக்கு, சாருவின் அப்பாவை எதிர்கொள்வது பெரும் அதிர்ச்சியாகவும் சவாலாகவும் இருந்தது. அதுவே இந்த சாதாரண காதல் கதையை, வித்தியாசமானதாக உயர்த்தியது.

"சினிமா என்பது கதை சொல்லும் மீடியா தான். நான் என் படங்களில் கதை தான் சொல்கிறேன்" என்று மிஷ்கின் முன்பொரு பேட்டியில் சொன்னார். அதற்கு இந்தப் படம் சாட்சி.

(அலசல் தொடரும்)

மேலும் வாசிக்க... "சித்திரம் பேசுதடி - திரை விமர்சனம் (பாகம்-1)"
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

21 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.