Friday, December 22, 2017

ஜெயலலிதா எனும் மர்ம ராணி!


ஜெயலலிதாவின் அப்பல்லோ வீடியோ வெளியாகி, மீண்டும் ஒரு பரபரப்பு கிளம்பியிருக்கிறது. ‘வீடியோ இருந்தால் வெளியிட வேண்டியது தானே?’ என்று கேட்டவர்களே யூ-டர்ன் அடித்து ‘இப்படி வெளியிடலாமா? நியாயமா?’ என்று கேட்டுக்கொண்டிருக்கிறார்கள். வெளியிட்டவர்களும் ‘அதானே, இப்படி வெளியிடலாமா?’ என்று கேட்டு திகிலூட்டுகிறார்கள்.

உண்மையில் ஜெயலலிதாவிற்கு என்ன தான் நடந்தது, ஏன் இந்த மர்மம் என்பது தான் பலரின் கேள்வி. இதற்குப் பதில் தெரிய வேண்டுமென்றால், ஜெயலலிதா உயிரோடு இருந்தபோது எப்படி இருந்தார் என்று நினைத்துப் பார்க்க வேண்டும்.

அவர் எப்போதுமே மர்மங்களின் ராணி தான். என்ன நினைக்கிறார், என்ன செய்வார், யாரை எப்போது தூக்கி அடிப்பார் என்று யாருக்கும் தெரியாது. ஆட்சி அமைக்கும்போது மட்டும் மீடியாவைச் சந்திப்பார். அதன்பிறகு யாரும் அவரை அணுக முடியாது. கட்சிக்காரர்களைத் தொடர்ந்து சந்திக்கும் வழக்கமும் கிடையாது.

கடைசியாக எதிர்க்கட்சித் தலைவராக இருந்த ஐந்து ஆண்டுகளில் அவர் வெளியே வரவே இல்லை. ஒரு அறிக்கை மட்டும் வரும். ‘இன்று, இந்த ஊரில் ஆர்ப்பாட்டம்’ என்று. அந்த ஏரியா கட்சிக்காரர்கள் அதைப் படித்து, போராடிக் களைவார்கள். பிரச்சாரத்தைத் தவிர எதற்கும் மக்களைச் சந்திக்கும் வழக்கம் அவருக்கு இருந்ததும் இல்லை. அதனால் தான் மூழ்கிய சென்னை மக்களைப் பாக்க வந்து ‘வாக்காளப் பெருமக்களே’ என்று பேசினார்.

தமிழ்நாட்டின் பெருமைகளில் ஒருவரான அப்துல் கலாம் இறந்தபோது அஞ்சலி செலுத்தக்கூட அவர் வெளியே வரவில்லை. அதற்கு எந்த விளக்கமும் அவர் தந்ததும் இல்லை. விளக்கம் சொல்லும் அளவிற்கு, மக்களோ டயர் நக்கிகளோ  ஒர்த் இல்லை என்ற திட நம்பிக்கை அவருக்கு உண்டு.

ஒருமுறை சிறுதாவூர்க்கு ஓய்வு எடுக்கப்போகிறார் என்று செய்தி வந்தது. அடுத்து இரு மாதங்களுக்குப் பிறகு சிறுதாவூரில் இருந்து கொடநாட்டிற்கு ரெஸ்ட் எடுக்கப்போவதாக செய்தி வந்தது. ஃபேஸ்புக்கில் நாம்கூட ‘ரெஸ்ட் எடுத்து ரெஸ்ட் எடுத்தே டயர்டு ஆன ஒரே தலைவர் நம்ம சி.எம் தான்’ என்று கிண்டல் செய்தோம். பிறகு கொடநாட்டில் மூன்று மாதங்களுக்கு மேல் இருந்தார். இடைப்பட்ட காலத்தில் யாரையும் பார்ப்பதில்லை. ஒரு ஃபோட்டோகூட வெளியே வராது.

இது தான் ஜெயலலிதா. வெளியே என்ன நடந்தாலும் சிறு அசைவுகூட இல்லாமல் ‘தானுண்டு ...தன் சசி உண்டு’ என்று வாழ அவரால் மட்டுமே முடியும்.

இந்த ஏகாந்த பழக்கம் தான் இன்றைக்கு சசிகலாவிற்கு பெரும் தலைவலியாக முடிந்திருக்கிறது.

என்னைப் பொறுத்தவரை, சசிகலா உலகத்திற்கே கெட்டவராக இருக்கலாம். ஆனால் ஜெயலலிதாவிற்கு அவர் சிறு தீங்குகூட நினைக்க மாட்டார். அவர் அப்ரூவர் ஆகி, தப்பிக்கும் வாய்ப்புகள் இருந்தும், எந்த சூழ்நிலையிலும் ஜெயலலிதாவை சசிகலா கைவிட்டதே இல்லை.

சசிகலா குரூப்பை அழிக்க சிறு ஆயுதம் கிடைத்தாலும் மோடி அரசு விடாது. ஜெயலலிதா தாக்கப்பட்டு, உயிருக்கு ஆபத்தான நிலையில் அப்போல்லாவில் அனுமதிக்கப்பட்டிருந்தால், இவ்வளவு நேரம் விட்டு வைத்திருக்க மாட்டார்கள். அப்பல்லோவில் ஏதாவது நடந்திருந்தாலும், அவர்கள் அழிக்கப்பட்டிருப்பார்கள். ஒன்றும் இல்லை என்பதால் தான் இன்னும் சுற்றிச் சுற்றி வந்து குரைத்துக்கொண்டே இருக்கிறார்கள்.

டெல்லியில் இருந்து ஒருநாள் ஒரு ஃபோன்கால் வருகிறது. சொத்துக்குவிப்பு தீர்ப்பு பற்றிய கால் என்று ஊடகங்கள் சொல்கின்றன. உடனே கோபத்தில் ஃபோனில் பேசியவரிடமும், அருகில் இருந்தோரிடமும் கத்துகிறார். மயங்கிச் சரிகிறார். அப்பல்லோவிற்கு கொண்டு செல்கிறார்கள். சில நாட்களில் தேறி அமர்கிறார். முதல்மரியாதை பார்க்கிறார். ஜூஸ் குடிக்கிறார். வழக்கம்போல் சசிகலாவை மட்டுமே பார்க்கிறார். கவர்னர், அடிமைகள், வெங்கய்யா, சொம்பய்யா என யார் வந்தாலும் ‘அந்த மூஞ்சிகளை எல்லாம் பார்க்க முடியாது. போகச் சொல்லு’ என்று விரட்டி விடுகிறார். அவர்களும் வெளியே சொன்னால் வெட்கக்க்கேடு என ‘பார்த்தோம்...பார்த்தவர்களைப் பார்த்தோம்..டாக்டரைப் பார்த்தோம்..சசிகுரூப் எங்களைப் பார்க்கவிடவில்லை’ என்று உளறி, வெளிறி ஓடுகிறார்கள்.

ஏதோ கொடநாட்டில்/சிறுதாவூரில் இருப்பது போல் கூலாக இருக்கும்போது, மீண்டும் உடல்நிலை மோசமாகிறது. சிலநாட்களில் சீரியஸ் ஆகி, மரணிக்கிறார்.

- இது தான் என் யூகம்.

ஏன் மக்களைப் பார்க்கவில்லை, ஏன் வீடியோ வெளியிடவில்லை, ஏன் ஒரு ஆடியோகூட வெளியிடவில்லை என்று கலைஞர் மாதிரி அரசியல்வாதிகளிடம் கேட்கலாம். எப்போதுமே ஜெயலலிதா அதைச் செய்ததே கிடையாது. ஏதோ வாராவாரம் கட்சியினருடன் கட்சி வளர்ச்சி பற்றியும், மாநில வளர்ச்சி பற்றியும் அளவளாவிக்கொண்டிருந்த மாதிரியும், அப்பல்லோ போன உடன் தான் அது நின்றுவிட்ட மாதிரியும் ஃபீல் செய்வதைவிடக் காமெடி ஏதுமில்லை.

ஜெயலலிதா நலமாகத் தேறி வந்திருந்தால் ‘ஏன் 75 நாள் யாரையும் தொடர்பு கொள்ளவில்லை?’ என்று யாருமே அவரிடம் கேட்டிருக்க முடியாது. தூக்கிப்போட்டு மிதித்திருப்பார். எல்லோரும் ஒன்றுமே நடக்காத மாதிரி, கலைந்திருப்பார்கள். கிளைமாக்ஸ் நெகடிவ்வாகப் போனதால், இத்தனை ரகளை!

‘நீங்க டிஸ்சார்ஜ் ஆகலாம்’ என்று டாக்டர்கள் சொன்னபிறகும் ‘நல்லநாள் பார்த்துத் தான் போவோம்’ என்று அடம்பிடித்து உள்ளே உட்கார்ந்திருந்தார். அப்பல்லோ ரெட்டியே நொந்துபோய் ‘பேசண்ட் தான் முடிவு செய்வார்’ என்று இதைச் சொன்னார். நல்லவேளை உடனே வெளியே வரவில்லை. மருத்துவமனையில் இறந்ததற்கே இத்தனை கேள்வி. வீட்டிற்குப் போய் இறந்திருந்தால், அவ்வளவு தான்.

என் உறவினர் ஒருவர் ஜெயலலிதா மாதிரி தான். சுகர், பிரஷர் என ஜெயலலிதாவிற்கு இருந்த அத்தனை வியாதிகளும், ஊழல் தவிர்த்து, அவருக்கு உண்டு. அவர் நன்றாகத்தான் இருந்தார். திடீரென ஒருநாள் கை வலிக்கிறது என்றார். ஆஸ்பத்திரி போவதற்குள் கோமாவில் விழுந்தார். ஒரு மாதம் கழித்து, கண் விழித்தார். கொஞ்சநாளில் பேச ஆரம்பித்தார். அடுத்த ஒரு மாதத்தில் மெதுவாக நடக்க ஆரம்பித்தார். வீட்டிற்கும் வந்து சில மாதங்கள் நன்றாக இருந்தார். திடீரென ஒருநாள் சாப்பிட முடியவில்லை என்றார். அடுத்த நாள் இறந்துவிட்டார்.

காலையில் நன்றாக இருந்தவர் எப்படி மாலையில் கோமாவில் விழுந்தார்? எனவே இது சதி என்று சொல்லலாமா? வீட்டிற்கு நல்லபடியாக டிஸ்சார்ஜ் ஆகிவந்தவர், எப்படி இரண்டு நாள் சீரியஸாக இருந்து இறப்பார்? கொலை என்றும் கத்தலாமா?

திமுகவிற்கு எப்படி 2ஜி-யோ, அப்படித்தான் சசிகலா குரூப்பிற்கு அப்பல்லோ மர்மம். உரிக்க, உரிக்க வெங்காயம் போல் ஒன்றும் தேறாது. ஆனாலும் எதிர்க்கட்சிகளும் சசிகலாவின் எதிர்க்கோஷ்டிகளும் ‘கொலை..கொலை’என்று கத்திக்கொண்டே தான் இருப்பார்கள். அது பாதிக்கவும் செய்யும். மக்களும் அதை நம்புவார்கள். காரணம், வரலாறு அப்படி!

நமக்கும் பரபரப்பாக பதிவு போட மேட்டர் வேண்டுமென்பதால், பல யூகங்களைக் கிளப்பலாம். காரணம், உண்மை எப்போதும் போரடிக்கும்!
மேலும் வாசிக்க... "ஜெயலலிதா எனும் மர்ம ராணி!"
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

0 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.

Saturday, December 2, 2017

தேவர் மகன் - தமிழில் ஒரு உலக சினிமா (பாகம்-2)



பரமக்குடி மண்ணின் மைந்தனான கமலஹாசனுக்கு தேவர் சாதி பற்றி அதிகளவு பரிச்சயம் உண்டு. கமலஹாசனின் அப்பா வக்கீலாக இருந்தவர். தேவர்சாதியினர் சம்பந்தப்பட்ட வழக்குகளுக்காக வாதாடிவர். ‘அய்யர் இருக்காரு..வெட்டுங்கடா..பார்த்துக்கலாம்என்று அவர்கள் துணிந்து வெட்டுகுத்தில் இறங்கிய சம்பவங்களை கமலஹாசனே பேட்டியில் சொல்லியிருக்கிறார். எனவே ஜனநாயகத்திற்கும் பழமைவாததிற்குமான போராட்டக்கதைக்கு, தேவர்சாதியை எடுத்துக்கொள்வது கமலுக்கு எளிதாக இருந்தது.


ஒரு எளிய கிராமத்தில் நடக்கும் சம்பவங்களாக கதையை அமைத்தார். தூவலூர் கிராமத்தில் வாழும் அண்ணன் தம்பிகளான இரு தேவர்களின் குடும்பத்திற்கிடையே பகை. அதன்காரணமாக ஊரே இரு பிரிவாகப் பிரிந்து அடித்துக்கொள்கிறது. பெரிய தேவருக்கு தன்னை நம்பி இருக்கும் மக்களுக்கு நல்லது செய்து, அவர்களை உயர்த்திவிட வேண்டும் என்று ஆசை. வெளிநாட்டில் படித்துவிட்டுத் திரும்பும் தன் மகன் சக்திவேல் அதைச் செய்வான் என்று நம்புகிறார். ஆனால் சக்திவேலுக்கோ சிட்டியில் ரெஸ்டாரண்ட் பிஸினஸ் செய்யத்தான் ஆசை. சின்னத் தேவரின் மகனான மாயத் தேவன், நிலபிரபுத்துவ மனநிலையில் ஊறியவன். காட்டுமிராண்டித்தனத்தை வீரமாக நினைத்துக்கொண்டிருப்பவன். திடீரென பெரிய தேவர் மரணமடைய, சக்திவேல் அப்பாவின் இடத்தில் உட்கார வேண்டிய சூழ்நிலை. பழமையில் ஊறிய மாயத்தேவனுக்கும், நவீன சிந்தனை கொண்ட சக்திவேலுக்கும் நேரடி மோதல் துவங்குகிறது. இந்த இரண்டு சிந்தனைகளில் எது வென்றது என்பதே கதை.

சக்திவேல் படித்து முடித்து, தன் காதலியுடன் ஊருக்கு வருகின்ற காட்சியுடன் படம் துவங்கிறது. மிகவும் கொண்டாட்டமான மனநிலையுடன் தெருவில் ஆடுபவனாக, அந்த மண்ணின் இயல்பற்ற சந்தோசமான இளைஞனாக சக்திவேல் கேரக்டர் அறிமுகப்படுத்தப்படுகிறது. தன் காதலுக்கு அப்பாவின் சம்மதம் பெறுவதும், காதலியின் அப்பாவுடன் சேர்ந்து ரெஸ்டாரண்ட் பிஸினஸ் ஆரம்பிப்பதையும் தவிர, அவன் மனதில் வேறு எண்ணங்கள் ஏதும் இல்லை. ஆனால் அந்த ஊரின் நிலையின் தீவிரம் கொஞ்சம் கொஞ்சமாக அவனுக்குப் புரிகிறது

கோவில் பூட்டை உடைத்ததற்காக இசக்கியின் கை வெட்டப்படுவது, பதிலுக்கு எதிர்தரப்பின் குடிசைகள் கொளுத்தப்படுவது என வன்முறையை மிக இயல்பாக கையில் எடுக்கும் தன் இனத்தின் முரட்டுத்தனம், அவன் முகத்தில் அறைகிறது. நவீன கல்வி அவனுக்கு கற்றுக்கொடுத்திருக்கும் நாகரீகத்திற்கும், அந்த மக்களின் வாழ்வுமுறைக்கும் உள்ள வேறுபாட்டை அவன் உணர்கிறான். கொண்டாட்டமான மனிதன் என்பதில் இருந்து வாழ்வின் கசப்பை உணர்ந்தவனாக சக்திவேல் மாறுவதை, மிகத் தெளிவான திரைக்கதையுடன் காட்டுகிறார் கமலஹாசன். கொஞ்சமும் பிசிறு தட்டாத, நீட்டான திரைக்கதைகளுள் ஒன்றாக இதைச் சொல்லலாம். அதுவே பார்வையாளனை சக்திவேலாக உணரச் செய்கிறது. அதுவே இது படமல்ல, ஒரு கிராமத்து வாழ்க்கையைப் பார்க்கிறோம் என்ற உணர்வை கொடுத்துவிடுகிறது.

200 ஆண்டுகள் பின் தங்கிய மனநிலை கொண்டவர்கள் என்பதை காட்சிகளின் மூலமாகவும், ‘போலீஸ்.கோர்ட்டுன்னு போனா நியாயம் கிடைக்காதுய்யா..ஒன்னு பஞ்சாயத்து இல்லை வீச்சருவாபோன்ற வசனங்களின் மூலமாகவும் சொல்லிவிடுகிறார் கமல். பெரிய தேவரின் மறைவுக்குப்பின் தன் பொறுப்பை உணர்ந்து, தலைமைப் பொறுப்பை ஏற்பதும், மாயத்தேவர் தன்னை கீழே இழுக்க முயலும்போதெல்லாம், கற்ற கல்விக்கு தக்கப்படி நிற்கப் போராடுவதும் ஒரு விறுவிறுப்பை படத்திற்குக் கொடுத்துவிடுகிறது.

நடிகர் திலகத்தின் நடிப்பில் ஒரு மைல் கல் என்று இந்த படத்தைச் சொல்லலாம். நாடகத்தனமான ஆரம்பகட்ட சினிமாவில் நடித்தவர்கள், யதார்த்த சினிமாக் காலகட்டத்திற்கு வரும்போது ஈடுகொடுக்க முடியாமல் தடுமாறிவிடுவார்கள். ஆனால் ஓவர் ஆக்ட்டிங் ஆனாலும் அண்டர்ப்ளே ஆனாலும், அசராமல் நின்று விளையாடியவர் நடிகர் திலகம். இந்தப் படத்தில் அவர் நடித்தார் என்று சொல்வதைவிட, வாழ்ந்தார் என்றே சொல்லலாம்.

தமிழ் சினிமாவின் சிறந்த காட்சிகள் என்று ஒரு பட்டியலிட்டால், சிவாஜியும் கமலும் பேசிக்கொள்ளும்பெருமையா..கடமைகாட்சி கண்டிப்பாக இடம்பெறும். இரு மாபெரும் நடிப்பு மேதைகளின் சங்கமம் அந்தக் காட்சி. சினிமா ரசிகர்களுக்கு அந்த காட்சி கிடைத்ததே ஒரு வரம் என்று தான் சொல்ல வேண்டும். படத்தின் மையக்கருத்து தெளிவாக வெளிப்படும் அதே நேரத்தில், உணர்ச்சிமயமான நடிப்பால் இருவரும் நம்மை கலங்கடித்துவிடுவார்கள். முதல் தலைமுறை பட்டதாரிகள் அனைவருக்குமே ஒரு நிமிடம், தன் தந்தை ஞாபகம் வந்து செல்லும் அளவிற்கு, அந்த காட்சியில் உண்மை இருக்கும். மழைப்பிண்ணனி, சிவாஜி முன் கமல் மண்டியிட்டு உட்காரும் பெஃபெக்ட் காம்போசிசன் என பி.சி.ஸ்ரீராமும் கமலும் இழைத்து இழைத்து, அந்த காட்சியை நெய்திருப்பார்கள். ஜெயமோகன் எழுதியயாருடைய ரத்தம்என்ற பதிவு ஒன்று உண்டு. அதன் சாராம்சத்தை அப்போதே அந்த காட்சி வசனத்தில் பேசியிருப்பார்கள். ‘2000 வருசமா வெட்டருவாளும் வேல்கம்பையும் தூக்கிட்டுத் திரிஞ்ச பயக..விஞ்சானம் படிக்க வான்னா எப்படி வருவான்..நீ படிச்சவனாச்சே, கூட்டிட்டுப் போஎனும் வசனம் தான் படத்தின் கரு. அதை பார்வையாளனின் மனதில் ஆழப்பதிய வைத்துவிடும் அந்தக் காட்சி.

குறும்புத்தனம் நிறைந்த இளைஞனாக அறிமுகம் ஆகும் கமலஹாசன், கொஞ்சம் கொஞ்சமாக முகத்தில் முதிர்ச்சியைக்கூட்டிக்கொண்டு செல்வார். சிவாஜி இறந்ததும், கெட்டப்பை மாற்றி வந்து நிற்கும்போது, நமக்கு புல்லரித்துவிடும். அப்போது இளையராஜா கொடுக்கும்போற்றிப் பாடடிபிஜிஎம், காட்சியை உச்சத்திற்கே கொண்டு சென்றுவிடும். தண்ணீரில் மூழ்கி இறந்த குழந்தையை தூக்கும் காட்சியிலும் இறுதிக்காட்சியில்இந்த பாவம் என்னை சும்மா விடாதுடாஎன்று அழுது அரற்றியபடியே போகும்போதும் கமல் நடிப்பில் மிரட்டி இருப்பார்

தமிழ்த் திரையுலகில் அதிகளவு எதிர்ப்புகளை எதிர்கொண்டவர் என்று கமலஹாசனைச் சொல்லலாம். இந்து மத விரோதி, இஸ்லாமிய விரோதி, பிராமணீயத்தை தூக்கிப் பிடிப்பவர், முதலாளித்துவ அடிவருடி என்று பாரபட்சமில்லாமல் எல்லாத்தரப்பு எதிர்ப்பையும் சம்பாதித்து வைத்திருப்பவர். அவருடைய நேர்மையை எப்போதும் ஏதாவது ஒரு தரப்பிடம் அவர் நிரூபித்துக்கொண்டே இருக்க வேண்டியுள்ளது. கட்டுரையின் ஆரம்பத்தில் சொன்னதுபோல், கமலின் அப்பா ஒரு வக்கீலாக தேவர்சாதிச் சண்டைகளில் ஆஜரானவர். அதன் பாதிப்பில், ஒரு வக்கீல் கேரக்டரும் இந்த படத்தில் வரும். பிராமண வக்கீலாக மதன்பாப் அந்த கேரக்டரைச் செய்திருப்பார். சொந்த சாதி, அதிலும் தந்தையின் தாக்கத்தில் உருவான அந்த கேரக்டரை கமல், சகுனித்தனமான கேரக்டராக வடிவமைத்திருக்கும் பாங்கிலேயே, அவரின் நேர்மையை நாம் அறிந்து கொள்ளலாம். யாரோ ஒருவன் தப்பு செய்துவிட்டால் வானத்துக்கும் பூமிக்கும் குதிப்பதும், சொந்த சாதி/மதத்துக்காரனோ, கொள்கை/கட்சிக்காரனோ அதே தப்பைச் செய்தால் மூடிக்கொண்டிருக்கும் முற்போக்கு போலிக்கூட்டங்களுக்கு மத்தியில், படைப்புக்கு நேர்மையாக இருந்த உண்மையான கலைஞன் கமலஹாசன்.

பானுமதியாக வரும் கௌதமியின் நடிப்பையும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும். நாம் அறிந்தவரை, அவர் அதற்கு முன் எந்த படத்திலும்நடித்ததேஇல்லை எனலாம். டூயட்டுக்கு ஆடியே காலத்தைக் கழித்த நடிகை. இதில் அவ்வளவு யதார்த்தமான நடிப்பு. ரேவதி போன்ற திறமைமிக்க நடிகையைவே, இதில் அவர் மிஞ்சியிருப்பார். ‘ஒய் சக்தி..ஒய்என்று அழும் காட்சியும், கடைசியாக முத்தம் கொடுத்துவிட்டுகோ மேன்என்று சொல்லும் காட்சியும் மட்டுமே கௌதமியின் திரைவாழ்க்கைக்குப் போதுமானது. ஆரவாரமாக அறிமுகமாகும் முதல் காட்சியில் மாடர்ன் ட்ரெஸ்ஸில் அவரை வர வைத்திருப்பார்கள். இரண்டாவது முறை வரும் காட்சியில், அடுத்து அவர் எதிர்கொள்ளப்போகும் அதிர்ச்சியை உத்தேசித்து சேலையில் பாந்தமாக வர வைத்திருப்பார்கள். காஸ்ட்யூம் டிசைன் என்பது காட்சியின் இயல்புக்கு எப்படி ஒத்திருக்க வேண்டும் என்பதற்கு அது ஒரு நல்ல உதாரணம்.

ரேவதி போன்ற நடிகைக்கு இந்த மாதிரி வெகுளிக்கேரக்டர் எல்லாம் தூசி மாதிரி. அட்டகாசமாகச் செய்திருப்பார். ‘நான் தான் சாரி..என்னால தான் சாரிஎன்று பேசும் காட்சியும், கௌதமியிடம் தனியாக பேசும் காட்சியும் அவரது நடிப்புக்குச் சான்று. படத்தின் முக்கியமான கேரக்டராக நாசர். நீண்ட மூக்கும், இறுகிய முகபாவமுமாக வன்முறை வெறி பிடித்த கேரக்டருக்கு பொருத்தமான தேர்வு. தேவர்சாதியின் இன்னொரு முகத்தை தெளிவாகத் தன் நடிப்பில் கொண்டுவந்திருப்பார்

தேவர் மகன் படத்திற்கு இருபெரும் தூண்களாக இளையராஜாவின் இசையையும் பி.சி.ஸ்ரீராமின் ஒளிப்பதிவையும் சொல்லலாம். போற்றிப் பாடடி பெண்ணே பாடல், அந்த சாதியின் தேசிய கீதமாக ஆகிப்போனது மட்டுமில்லாமல், 90களில் நடந்த ஜாதிக்கலவரத்திலும் முக்கியப்பங்காற்றியது. அந்த பாடலும், அதை உருவாக்கியவர்களின் சாதி முரணும், அது சமுதாயத்தில் ஏற்படுத்திய தாக்கமும் தனி ஆய்வுக்குரியது. சினிமாப் பாடல்களில் வேறு எதற்கும் இந்த சிறப்பு(??) கிடையாது. படத்தின் பிண்ணனி இசையிலும் கலக்கியிருப்பார் இளையராஜா. ரேவதியின் செண்ட்டிமெண்ட் காட்சிகளில் அவர் போட்டிருக்கும்மாசறு பெண்ணேஇசையைக் குறிப்பிட்டுச் சொல்லலாம்

ஒரு குறிப்பிட்ட சாதியை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இந்தப் படம், அனைத்துத் தரப்பினரின் ஆதரவைப் பெற்று மாபெரும் வெற்றி அடைந்தது. அதற்குக் காரணம், இந்தப் படத்தின் மையக்கரு. தேவர்சாதி வன்முறையில் உறைந்தது போலவே, பெருந்தலைவர் காமராசர் கல்விக்கண்ணைத் திறந்து வைக்கும்வரை பிறசாதிகளும் தங்களது குலத்தொழிலில் உறைந்தே கிடந்தன. கல்வி என்பது மறுக்கப்பட்ட, எட்டாத விஷயமாகவே இருந்து வந்தது. அதன்பின் வந்தது தமிழகத்தின் மறுமலர்ச்சிக்காலம் எனலாம். படிப்பு மட்டுமே தன் சந்ததியை முன்னேற்றும் என்று பலரும் கண்டுகொண்டார்கள். எல்லா சாதியிலும், குடும்பத்திலும் படிப்பு கட்டாயமாக்கப்பட்டது. பல குழந்தைகளுக்கும் கல்வி, கட்டாய வன்முறை மூலமாகவே ஊட்டப்பட்டது. அதற்கு சமூகக் காரணமும் இருந்தது

அந்த கல்வி எல்லா சமூகத்திலும் ஒரு தரப்பை மேலே கொண்டுவந்தது. அதன்பின் படித்த பெரும்பாலானோர்க்கு வெளியுலகம் புரிந்தது. சாதிய கோட்பாடுகளுக்கு, நாகரீக உலகில் இடமில்லை என்பதும் புரிந்தது. இறுக்கிப் பிடித்துக்கொண்டிருக்கும் சாதிக்கட்டு என்பது வெறும் மாயமான் தான் என்பதை கல்வி உணர வைத்தது. எல்லா சாதிக்கோட்பாடுகளும், சம்பிரதாயங்களும் பொதுவெளியில் விவாதத்திற்கு உள்ளாகின. ஆண்டான் - அடிமை காலம் முடிந்ததை கற்றோர் உணர்ந்தார்கள். காந்தியம், பெரியாரியம் போன்ற எல்லா இசங்களுமே சாதியமைப்பின் அபத்தத்தை எல்லா மட்டத்திற்கும் கொண்டுசென்றன

அப்போது எல்லா சாதியிலும் கற்றவருக்கும், கல்வியில்லாமல் பின் தங்கிவிட்டவர்களுக்கும் இடையே சிந்தனையளவில் பெரும் இடைவெளி ஏற்பட்டது. அந்த இடைவெளி பற்றிப் பேசியதாலேயே, எல்லாராலும் தேவர் மகனுடன் தன்னை ஐக்கியப்படுத்திக்கொள்ள முடிந்தது. சாதி என்பது தொழில்முறை அடுக்கு மட்டுமே அல்ல, அது வம்சத்தின் நீட்சி. படித்து முடித்ததும், தனக்கு கீழே இருக்கும் வம்சத்துடன் உறவை அறுத்துகொண்டு, தன்னைப்போலவே படித்த தன்சாதி ஆட்களுடன் ஐக்கியமானோர் உண்டு. தன்னைப் போலவே, சொந்த பந்தங்களும் கல்வி எனும் ஏணியைப் பற்றி மேலே வரவேண்டும் என்று நினைத்தவர்களும் உண்டு. அதற்குக் காரணம், இன்னும் கீழே இருக்கும் பிறரை கைவிட்டுவிடக் கூடாது எனும் கருணையே

தேவர் மகன் படம் அந்த கருணையின் கதை. ‘பிள்ளைகுட்டிங்களைப் படிக்க வைங்கடாஎனும் கமலின் கடைசிக்காட்சிக் கதறல், அந்த கருணையின் வெளிப்பாடு. அதனால்தான் ஈர மனதுள்ள அனைவரின் நெஞ்சிலும், இந்த தேவர் மகன் தனி இடம் பெற்றது. இந்த உலகசினிமா தொடரிலும் சிறப்பான இடத்தினைப் பெறுகிறது.
மேலும் வாசிக்க... "தேவர் மகன் - தமிழில் ஒரு உலக சினிமா (பாகம்-2)"
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

0 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.