Friday, July 28, 2017

எங்க மாமாவும் நளினி அத்தையும் பின்னே ராமராஜன் அங்க்கிளும்...


என் தூரத்து உறவினரான மாமா ஒருவருக்கு ராமராஜன் என்றாலே பிடிக்காது. கரகாட்டக்காரனைத் தவிர வேறு ராமராஜன் படங்களை அவர் பார்த்ததில்லை. சிறுவயதில் இதுபற்றி அண்ணன் ஒருவரிடம் கேட்டபோது, ‘அந்த டவுசர் பாண்டியன் நளினியை தள்ளிக்கிட்டுப் போய்ட்டான்லடா...அந்த கோபம் மாமனுக்கு!’ என்று சொன்னார். சிவாஜி-எம்ஜிஆர்-ரஜினி ரசிகர்களை மட்டுமே தெரிந்த அந்த வயதில் ஒரு நடிகைக்கு ரசிகர் என்பதை நம்ப முடியவில்லை. அண்ணன் அதை ஒருநாள் நிரூபித்தார். மாமா ஃபுல் மப்பில் மஹாதியானத்தில் ஆழ்ந்திருந்தபோது, அண்ணன் ஏதோ ஒரு மழைப்பாட்டையும் அதில் நளினியின் நவரச நடிப்பையும்(!) சிலாகிக்கத் தொடங்கினார். மாமாவுக்கு வந்ததே கோபம். ‘டேய்..அவளைப் பத்தி எப்படிடா நீ இப்படிப் பேசலாம். அவ உனக்கு அத்தை முறைடா’ என்று மாமா அடிக்கப் பாய்ந்து, ஒரே ரகளை. அன்று முதல் நளினி எங்களுக்கு அத்தை ஆனார்!

கால ஓட்டத்தில் மாமா தொடர்பு எல்லைக்கு வெளியே போய்விட்டார்; நளினி அத்தையையும் மறந்துவிட்டேன். சமீபத்தில் 1980களில் வந்து கமர்சியலாக வெற்றியடைந்த படங்களைத் தொடர்ந்து பார்த்து வருகிறேன்.

தங்கைக்கோர் கீதம்
24 மணி நேரம்
நூறாவது நாள்
யார்?
பிள்ளைநிலா
கீதாஞ்சலி - என எந்த படத்தை எடுத்தாலும், அதில் நளினி அத்தை இருப்பது ஆச்சரியப்படுத்தியது.

கமலும் ரஜினியும் மாஸ் ஹீரோ ஆகும் ஆசையில், கமர்சியல் குப்பைகளை அள்ளிக்கொட்டிக்கொண்டிருந்தபோது, மோகன் - விஜயகாந்த் - சத்தியராஜ் போன்ற ஹீரோக்கள் தான் நினைவில் நிற்கும் படங்களைக் கொடுத்திருக்கிறார்கள். மணிவண்ணன் போன்ற குறைத்து மதிப்பிடப்பட்ட இயக்குநர்கள் தான் த்ரில்லர் ஜெனரில் பட்டையைக் கிளப்பியிருக்கிறார்கள். இவர்களுக்கு எல்லாம் பெரிய உதவியாக நளினியும் இருந்திருக்கிறார்.

ஏனென்றால், பொதுவாகவே ஹீரோயின்ஸ் குழந்தைக்கு அம்மாவாக நடிப்பதையோ கல்யாணமான பெண்ணாக நடிப்பதையோ விரும்புவதில்லை. காதலியாக நடித்து, ரசிகர்களின் கவர்ச்சிக்கன்னியாக பெயர் எடுப்பதே பொருளாதார ரீதியாகவும் அவர்களுக்கு நல்லது. அத்தைக்கு அந்த மாதிரி பிற்போக்கு சிந்தனைகள் எல்லாம் இருந்த மாதிரித் தெரியவில்லை.

பெரும்பாலும் திருமணமான குடும்பப்பெண் கேரக்டரைத் தான் செய்திருக்கிறார். தங்கைக்கோர் கீதத்தில் கல்லூரி மாணவி, 24 மணி நேரம்/100வது நாளில் மனைவி, பிள்ளை நிலாவில் அம்மா, கீதாஞ்சலியில் திமிர்பிடித்த பெண் என்று கதை நாயகியாக, டைரக்டர்களின் ஆர்ட்டிஸ்ட்டாகவே இருந்திருக்கிறார்.

நூறாவது நாள் படத்தின் வெற்றிக்கு நளினியின் கண்களும் முக்கியக்காரணம். தான் கண்ட கனவு பலித்துவிடுமோ என்று பதறி, ஒரு உயிரைக் காப்பாற்ற துடிக்கும் கேரக்டரில் வாழ்ந்திருக்கிறார். கீதாஞ்சலியில் திமிர்பிடித்த பணக்காரப்பெண்ணாக வந்து திருந்தும் கேரக்டர். பிள்ளை நிலாவில் அந்த திமிர் கேரக்டரை ராதிகா எடுத்துகொள்ள, தலைகீழாக அப்பாவிப் பெண் வேடம். தன் குழந்தையின் உடலில் ஆவியிருப்பதை அறிந்து, குழந்தையை விட்டு விலகவும் முடியாமல் நெருங்கவும் முடியாமல் தவிக்கும் அம்மாவாக அசத்தியிருப்பார். எந்த கேரக்டர் கொடுத்தாலும் அதற்குரிய நியாயத்தைச் செய்பவராகவே இருந்திருக்கிறார்.

யார் படத்திலும் குறிப்பிடத்தக்க கேரக்டர். சாத்தான் ஹீரோயினின் மனதை மயக்கி, ஆசையைத் தூண்டிவிட, தனக்கு ஏன் அப்படி ஒரு கெட்ட எண்ணம் வந்தது என்று துடித்துப்போகும் கேரக்டர். ஒரு மிடில் கிளாஸ் பெண்ணின் மனவோட்டத்தையும், குற்றவுணர்ச்சியையும் கண்முன் கொண்டுவந்திருப்பார்.

பயம், கோபம் போன்ற உணர்ச்சிகளுக்கு இணையாக சிருங்காரத்தை நயமாக வெளிப்படுத்தும் ஆற்றல் அத்தைக்கு இருந்ததை, மாமா கோவித்துக்கொண்டாலும், நாம் ஒத்துக்கொள்ளத்தான் வேண்டும். வாணிஸ்ரீக்கு அடுத்து, உதடுகளை நளினமாகப் பயன்படுத்தி நடித்தது நளினி அத்தை தான். மாமா அத்தையிடம் கவிழ்ந்ததிலும் ஒரு அர்த்தம் இருக்கத்தான் செய்கிறது.

இப்படி ஹீரோயினாக நடித்துக்கொண்டிருக்கும்போதே, மண்ணுக்கேத்த பொண்ணு படத்தில் ஒரு சிறிய வேடத்தில் நிழல்கள்ரவிக்கு ஜோடியாக வருகிறார். காரணம், அந்த படத்தின் டைரக்டர் ராமராஜன் அங்கிள்!

’நளினி தேவிகா போன்ற ஒரு நடிகை. 1980களில் பத்து வருடங்களுக்கு மேல் வெற்றிகரமான கதாநாயகியாக, நடிப்புக்குத் தீனி போடும் வித்தியாசமான வேடங்களில் நடித்தவர்’ என்பது தான் நான் உட்பட பலரின் எண்ணம். ஆனால் அவர் 1983ல் தான் உயிருள்ளவரை உஷா மூலம் ஒரு நாயகியாக உருவெடுக்கிறார். 1984ல் நூறாவது நாள், 24 மணிநேரம் மூலம் கரியரின் உச்சத்திற்குப் போகிறார். பிள்ளைநிலா, கீதாஞ்சலி, ஈட்டி, யார்? போன்ற படங்களின் மூலம் 1985ல் ஒரு ஸ்டாராக ஆகிறார். கரிமேடு கருவாயன், பாலைவன ரோஜாக்களில் பெயர் வாங்கினாலும், 1986ல் காதலில் விழுந்து வீழ்ச்சி அடைகிறார்.

சிவாஜியுடன் அவர் நடித்த சாதனை(1986) படத்தில் சினிமா ஹீரோயினாக நளினி வருவார். ஹீரோயின் நளினியை நம்பி இயக்குநர் சிவாஜி ‘அனார்கலி’ எனும் காவியத்தை எடுக்க ஆரம்பிப்பார். பாதியிலேயே திருமணம் செய்யப்போகிறேன் என்று சொல்லிவிட்டு, நளினி காணாமல் போய்விடுவார். இதையே சொந்த வாழ்க்கையிலும் செய்து, பல ரசிகர்களின் மனதை சுக்குநூறாக உடைத்தார். 1987ல் கல்யாணத்துடன் காணாமல் போனார்.

1983-1986 என நான்கு ஆண்டுகளில் தான் இவ்வளவு நல்ல படங்களையும், நல்ல கேரக்டர்களையும் செய்துமுடித்திருக்கிறார். எந்த வேடத்தையும் செய்யத் துணியும் நல்ல நடிகர், நடிகை இருந்தால் தான் இயக்குநர்களாலும் வித்தியாசமான கதைகளை யோசிக்க முடியும். அந்த மூன்று ஆண்டுகளில் பல இயக்குநர்களின் நம்பிக்கையைப் பெற்றிருந்திருப்பார். அதை அவரே உடைத்து வெளியேறியது துரதிர்ஷ்டவசமானது. நளினி விட்டுச்சென்ற வெற்றிடத்தைத் தான் பின்னர் வந்த சீதாவும், ரேவதியும் பயன்படுத்திக்கொண்டார்கள்.

நளினி அத்தையின் பழைய படங்களையும் நடிப்பையும் பார்த்துவிட்டு, இப்போது யானையின் பிளிறல் ஓசை பிண்ணனியில் ஒலிக்க அவர் நடிக்கும் காமெடி சீன்களைப் பார்க்கும்போது கஷ்டமாக இருக்கிறது. அத்தையை இந்த கோலத்தில் பார்த்து, மாமா எப்படி தாங்கிக்கொள்கிறார் என்று தெரியவில்லை. அவர் எங்கள் கண்ணில் சிக்காமல் காணாமல் போனதிற்கும், இந்த காமெடி கொடுமைக்கும் ஒருவேளை தொடர்பிருக்கலாம்!
மேலும் வாசிக்க... "எங்க மாமாவும் நளினி அத்தையும் பின்னே ராமராஜன் அங்க்கிளும்..."
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

0 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.

Saturday, July 22, 2017

விக்ரம் வேதா - திரை விமர்சனம்



ரொம்ப நாளைக்கு அப்புறம் ஒரு நல்ல படம் பார்த்த திருப்தி.

என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் விக்ரம் (மாதவன்), தாதா வேதா(விஜய் சேதுபதி) கூட்டத்தை வரிசையாக என்கவுண்டரில் போட்டுத்தள்ளுகிறார். அடுத்து விஜய் சேதுபதிக்கே குறிவைக்கும்போது, அந்த வேதாளமே வந்து சரண்டர் ஆகிறது. அது ஏன் என்பதைத் தான் மிரட்டலாகச் சொல்லியிருக்கிறார்கள்.

படத்தில் முதலில் பாராட்டப்பட வேண்டியது, பிண்ணனி இசை. ‘தனனனணா’ இன்னும் காதுகளில் ஒலித்துக்கொண்டே இருக்கிறது. டஸ்க்கு டஸ்க்கு பாடல், கறுப்பு வெள்ளை தீம் மியூசிக் என ஒரு இசைப்புரட்சியே நடத்தியிருக்கிறார் சாம் சி.எஸ். கடந்த ஒரு வருடமாக எனது ஃபேவரிட் மியூசிக் ஆல்பமாக இருப்பது, புரியாத புதிர் (மெல்லிசை). விஜய் சேதுபதி நடித்த அந்தப் படம் ஏனோ ரிலீஸ் ஆகாமல் கிடக்கிறது. ஆனால் அதன் மியூசிக் ஆல்பத்தில் உள்ள பாடல்கள் ஒவ்வொன்றும் அட்டகாசம். இன்னும் சொல்வதென்றால், விக்ரம்வேதாவை விட மெல்லிசை பெட்டர். ஒரு புதிய இசை ஆளுமை உருவாகி வருவதாகவே கணிக்கிறேன். விக்ரம்வேதாவை தாங்கிப் பிடிப்பது சாமின் இசை தான். இதற்காகவே தியேட்டருக்குப் போகலாம்.

புஷ்கர் காயத்ரி எப்போதுமே மெயின் ஸ்ட் ரீம் படங்கள் எடுப்பதில்லை. புதிதாக ஏதாவது செய்ய வேண்டும் எனும் ஆர்வத்தை அவர்களது படங்களில் தொடர்ந்து பார்க்கலாம். இந்த படத்தில் தான் அது சரியாக கூடிவந்திருக்கிறது.

வேதாளம் ஒரு கதை சொல்லும். முடிவில் இக்கட்டான ஒரு கேள்வி கேட்கும். சரியாக பதில் சொல்லவில்லையென்றால், விக்ரமாதித்யனின் தலை வெடித்துவிடும். இந்த ஐடியாவை வைத்துக்கொண்டு திரைக்கதையில் புகுந்து விளையாடியிருக்கிறார்கள். இவ்வளவு மெனக்கெடல்களுடன் தமிழ் சினிமாவில் சமீபத்தில் வந்த திரைக்கதை எதுவும் இல்லை.

முதலில் வேதா ஒரு கதை சொல்கிறான். முடிவில் ஒரு கேள்வி கேட்கிறான். ‘செய்தவனைக் கொல்லணுமா? செய்யச் சொன்னவனைக் கொல்லணுமா?’ அதற்கு விக்ரம் ஒரு பதில் சொல்ல, விக்ரமின் நண்பன் கொல்லப்படுகிறான். வேதா கேட்ட கேள்விக்கான அர்த்தமே வேறோ என்று விக்ரமுடன் சேர்ந்து நாமும் மிரண்டு போகிறோம். படத்தின் ஆரம்பக் காட்சிகளில் காமெடியாக வரும் பே-ஆஃப் வசனங்கள், பிற்பாதியில் மெயின் ட்விஸ்ட்டாக ஆசம், ஆசம். கேங்ஸ்டர் மூவிகளில் துரோகத்திற்கு முக்கிய இடம் உண்டு. இதில் யார், யாருக்கு துரோகம் செய்கிறார்கள் என்பதில் காட்டியிருக்கும் ட்விஸ்ட் அருமை.

மணிகண்டனின் வசனங்கள் இயல்பாகவும், புன்னகையை வரவழைப்பதாகவும் இருக்கின்றன. வரலட்சுமி சொல்லும் ‘அக்காங்’கைக்கூட ரசிக்க முடிகிறது.

கறுப்புக்கும், வெள்ளைக்கும் நடுவே நடக்கும் போராட்டத்தில், இரண்டுக்கும் இடையே இருக்கும் கோடு ஒரு கட்டத்தில் அழிவதை ரசிக்கத்தக்க வகையில் சொல்லியிருக்கிறார்கள். நல்லது-கெட்டது பற்றிய பல்வேறு கேள்விகளையும் சிந்தனைகளையும் கேள்விகளையும் எழுப்பியபடியே போகிறது படம். முழுக்க பதிலும் சொல்லாமல், நம்மிடமே கேள்விகளைக் கொடுத்து அனுப்பிவைக்கிறார்கள்.

மாதவனின் இண்ட்ரோ சீன் ஆகிய அந்த என்கவுண்டர் சீனைவிட, விஜய் சேதுபதியின் இண்ட்ரோ சீனுக்கு தியேட்டரே அதிர்கிறது. இத்தனைக்கும் ஆளைக் காட்டுவதே இல்லை. கால்கள், கையில் மசால்வடை, அருமையான ஷாட்ஸ், அட்டகாசமான பிண்ணனி இசையைக் கொண்டு தியேட்டரையே கொண்டாட வைத்திருக்கிறார்கள்.

சூது கவ்வும் கெட்டப் தான் விஜய் சேதுபதிக்கு. ஆனால் உடல்மொழியில் முற்றிலும் வேறு ஆளைக் கொண்டுவருகிறார். என்ன மனுசன்யா இவரு! படம் முழுக்க விஜய் சேதுபதிக்கு கைதட்டல் விழுந்துகொண்டே இருக்கிறது. எதையும் கேஷுவலாக எடுத்துக்கொண்டு, சீரியஸ் விஷயத்தையும் நக்கலான பேச்சுடன் செய்யும்போது, ரசிக்காமல் வேறு என்ன செய்ய?

மாதவனுக்கு நடிக்க அதிக ஸ்கோப் உள்ள கேரக்டர். ஒரு விறைப்பான & ஜாலியான என்கவுண்டர் போலீஸாக அறிமுகமாகி, விஜய் சேதுபதியால் அலைக்கழிக்கப்பட்டு, உண்மையை கொஞ்சம் கொஞ்சமாக உணர்ந்து என முதிர்ச்சியான நடிப்பில் அசத்தியிருக்கிறார். இறுதிச்சுற்றுக்குப் பிறகு, நடிப்பிலும் படத்தேர்விலும் அதே தரத்தை மெயிண்டெய்ன் செய்வது அழகு.

இன்னொரு ஆரண்ய காண்டம் என்று சிலர் பாராட்டினாலும், படம் அந்த அளவிற்கு இல்லை. ஒரு நல்ல கேங்ஸ்டர் த்ரில்லர் மூவி என்று தான் விக்ரம்வேதாவைக் சொல்ல வேண்டும். படத்தைப் பற்றி பலரும் பாராட்டித் தள்ளிவிட்ட நிலையில், சில உறுத்தல்களை இங்கே பேசுவோம்.

தம்பியும் கங்காவும் கொல்லப்பட்ட பிறகும், வேதா ரொம்ப கேஷுவலாக விஷயங்களை டீல் செய்வது இம்பாக்ட்டை குறைக்கிறது. அதிலும் கங்கா இறந்த இடத்தில் நின்றுகொண்டு காமெடி செய்வதெல்லாம் ரொம்பவே ஓவர். அவருக்கென இருந்த குடும்பமே சிதைக்கப்பட்ட பின்பும், காமெடி செய்வதெல்லாம் கொடூரம். தியேட்டரில் சிரித்தாலும், படத்தின் தரம் குறைந்துவிடுகிறது.

அந்த சேட்டன் என்ன ஆனார், கேரள கேங் என்ன ஆனார்கள் என பதில் சொல்லப்படாத கேள்விகள் அந்தரத்தில் தொங்குகின்றன.

இரண்டாவது கதை சொல்லும்போது, படம் தொய்வடைந்துவிடுகிறது. இண்டர்வெல்லுக்குப் பிறகு தான் வேகமெடுக்கிறது. படத்தின் கதையை நேர்கோட்டில் தொகுத்து, இது தான் நடந்தது என்று சாமானியர்களால் புரிந்துகொள்வது கஷ்டம். நிறைய விஷயங்களை நாமே யூகித்துக்கொள்ளட்டும் என்று விட்டிருக்கிறார்கள். அதனால் தான் அதுவொரு புத்திசாலித்தனமான திரைக்கதை; அதே நேரத்தில் அதுவொரு மைனஸ் பாயிண்டாகவும் ஆகிறது.

ஷ்ரதா, வரலட்சுமி என படத்தில் இரண்டே பெண் கேரக்டர்கள் தான். அவர்களுக்கும் ஸ்கோப் மிகவும் குறைவு. புதுபேட்டை மாதிரி முழுக்க முழுக்க ஆண்களின் உலகைக் காட்டும் வறட்சியான, ராவான கதைக்களம். விஜய் சேதுபதி மட்டுமே எல்லாத் தரப்பு ஆடியன்ஸையும் பேலன்ஸ் செய்கிறார்.

இப்படி சிற்சில குறைகள் இருந்தாலும், இந்த அளவிற்கு தமிழில் ஒரு படம் வருவதும், அதில் முண்ணனி நாயகர்கள் தைரியமாக நடிப்பதும் பெரிய அதிசயம். இது தொடர வேண்டும் என்றால், இந்தப் படத்தின் வெற்றி உதவும். புதுப்பேட்டை, ஆரண்ய காண்டம் படங்களின் தோல்வியால் நாம் இழந்தது அதிகம். விக்ரம்வேதா புதிய தொடக்கமாக இருக்கட்டும்.

படத்தில் பெஸ்ட் சீன் என்றால், கடைசி ஒரு நிமிடம் தான். மூன்றே ஷாட்களுடன் படத்தை முடிக்கும்போது, எழுந்து நின்று கைதட்டினோம். விஜய் சேதுபதி இண்ட்ரோ சீனுக்கும் இந்த கடைசி குறும்புக்குமே படத்தைப் பார்க்கலாம்.

டிக்கெட் விலையைப் பற்றி யோசிக்காமல்..........கண்டிப்பாகப் பார்க்க வேண்டிய படம்.
மேலும் வாசிக்க... "விக்ரம் வேதா - திரை விமர்சனம்"
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

0 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.