Wednesday, June 21, 2017

லென்ஸ் - ஒலக சினிமா அலசல்

இந்த வருடம் பரபரப்பாக பேசப்பட்டு, அதிக எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்திய படம். ஆனால் இந்த வருடம் என்னை அதிகம் ஏமாற்றிய படம் இது தான். போலி உலக சினிமாக்கள் என்று ஒருவகை உண்டு. மிகவும் அக்கறையோடு எடுக்கப்பட்ட படம் எனும் மேல்மட்ட தோற்றத்துடன், கொஞ்சம் உலுப்பினால் வெளிறிப்போகும் கலைப்படைப்புகள் இங்கே நிறைய உண்டு. ஒரு பெரிய குடும்பத்தையே காப்பாற்றும் பெண்ணின் கண்ணீர்க்கதை என்று 1970களில் வந்த ஒலக சினிமாக்களை இதற்கு உதாரணமாகக் கொள்ளலாம். இந்த மாதிரிப் படங்களை குறை சொல்ல யாரும் துணியமாட்டார்கள் என்பது பெரிய அட்வாண்டேஜ்.

இந்த படத்தின் பிரச்சினை என்னவென்று பேசவேண்டும் என்றால், கதையை விலாவரியாக இங்கே சொல்லியாக வேண்டும். ஸ்பாய்லர் அலர்ட்!

படத்தின் கதை என்ன?

ஹீரோ-ஹீரோயினின் முதலிரவுக் காட்சியை ஒருவன் ரகசியமாகப் படம் பிடித்துவிடுகிறான். அந்த பென் ட்ரைவ் வில்லன்/செகண்ட் ஹீரோ(?)வுக்கு கிடைக்க, இண்டர்நெட்டில் அப்லோட் செய்துவிடுகிறான். எல்லோருக்கும் விஷயம் தெரிந்து, ஹீரோயின் தற்கொலை செய்துகொள்கிறாள்.

ஹீரோ நெட்டில் அப்லோட் செய்தவன் யார் என்று பல ஆராய்ச்சிகள் செய்து, ஒரு முகமூடி அணிந்த பெண்ணின் வெட்சாட் மூலம் செகண்ட் ஹீரோவை கண்டுபிடிக்கிறான். அந்த முகமூடிப் பெண்ணின் கணவன் தான் தான் என்று ஹீரோ, செகண்ட் ஹீரோவிடம் சாட்டுக்கு வருகிறான். அவன் பின்னால் கட்டிலில் அந்த முகமூடிப்பெண் மயங்கிக்கிடக்கிறாள். செகண்ட் ஹீரோ கண்முன்பே அந்த பெண்ணின் ஆடைகளை எல்லாம் ஹீரோ துகிலுரிகிறான். இறுதியாக அந்த முகமூடியைக் கழட்டுகிறான்..அய்யோ, அது முகமூடிப்பெண் அல்ல..செகண்ட் ஹீரோவின் மனைவி!

செகண்ட் ஹீரோ மனைவியை விட்டுவிடும்படி கெஞ்ச, ஹீரோ தன் முன்கதையைச் சொல்லி செகண்ட் ஹீரோவின் தப்பை உணரச்செய்கிறான். அவளை விட்டுவிட வேண்டும் என்றால் தான் தற்கொலை செய்து இறப்பதை பார்க்க வேண்டும் என்று சொல்லி, தற்கொலை செய்துகொள்கிறான்..சுபம்! (செகண்ட் ஹீரோவுக்குத் தெரியாத முக்கிய பின்குறிப்பு & நீதி: ஹீரோ நல்லவர்..துகிலுரியப்பட்டது செகண்ட் ஹீரோவின் மனைவி அல்ல, அந்த முகமூடிப்பெண் தான்..அவள் ஒரு கால்கேர்ள்..அவளை அம்மணம் ஆக்கலாம்..தப்பில்லை!)

1980களில் அறிஞர் எஸ்.ஏ.சி.அவர்களின் படங்கள் ஏகப் பிரபலம். முதல் காட்சியில் ஹீரோவின் தங்கையையோ, பாட்டியையோ நான்கு வில்லன்கள் ரேப் செய்துவிடுவார்கள். ஹீரோ ஒவ்வொரு வில்லனாகத் தேடிச் சென்று, கொன்று பழிவாங்குவார். அந்த படங்கள் லென்ஸை விட பெட்டர் என்று தான் சொல்ல வேண்டும்.

லென்ஸ் படக்கதையைச் சுருக்கி, எஸ்.ஏ.சி. ஃபில்டரில் வைத்துப் பார்த்தால்....

ஹீரோவின் மனைவியை வில்லன் ரேப் செய்துவிடுகிறான்.

ஹீரோ வில்லனைத் தேடிக் கண்டுபிடிக்கிறான். வில்லனின் மனைவியை வில்லனின் கண்முன்னாலேயே ரேப் செய்கிறான்..வில்லன் துடித்து, தன் தவறை உணர்கிறான்...சுபம்!

மாபெரும் புரட்சிக்கதை தான் இது!

 சில பம்மாத்து வேலைகள் மூலம் லென்ஸ் திரைப்படம் பார்ப்போரை நல்ல படம் என்று நம்ப வைக்கிறது.

1. ஹீரோவை வில்லன் போல் அறிமுகம் செய்கிறது. வில்லனை ஹீரோ போல் அறிமுகம் செய்கிறது. இந்த ட்விஸ்ட் என்னையும் சேர்த்து பலருக்கும் பிடித்திருக்கிறது. ஸ்க்ரிப்ட்டில் உருப்படியான விஷயம் இது.

2. பெண்களின் வீடியோக்களை நெட்டில் அப்லோடு செய்யும் கயவர்களை கண்டிப்பதாக பாவனை செய்கிறது.

3. ஹீரோ-வில்லன் - மோதலுக்கான காரணம் மூன்றும் தான் ஆக்சன்/த்ரில்லர் படங்களின் திரைக்கதைக்கு அடிப்படை. இதில் ஹீரோ கேரக்டர்(சாட்டில் வரும் சைக்கோ), வில்லன் கேரக்டர்(வெட்சாட் வேந்தன்), மோதலுக்கான காரணம் (நெட்டில் அப்லோட் செய்யப்படும் அப்பாவி பெண்களின் வீடியோக்கள்) மூன்றையும் புதிதாகச் சொன்னால் போதும்..பார்ப்பவன் அசந்துவிடுவான்.

லென்ஸ் ஒரு த்ரில்லர் என்று மட்டும் சொல்லியிருந்தால் நமக்குப் பிரச்சினை இல்லை. சர்வதேச விருது பெற்ற சர்வரோக நிவாரணி என்றபின், துகிலுரிவது நம் கடமையாகிறது. இந்த படத்தின் முக்கியப் பிரச்சினையைப் பற்றிப் பேசுவோம்.

எல்லா நாட்டிலும் ஆண்பிள்ளைகளிடம் ‘பெண் என்பவள் வெறும் உடல் அல்ல..அதுவும் உணர்ச்சிகள் & புத்தி நிறைந்த மனித ஜென்மம்’ என்று சொல்லித்தர முயற்சிகள் நடக்கின்றன. இந்தியாவில் தான் பெண்களிடமே ‘நீ வெறும் உடம்பு அல்ல’ என்று புரிய வைக்க போராட வேண்டியுள்ளது. இடுப்பு தெரிந்துவிட்டாலோ, க்ளிவேஜ் தெரிந்துவிட்டாலோ உலகம் அழிந்துவிடாது, உடையை சரிசெய்தால் போதும் என்று இன்னும் எடுத்துச் சொல்ல வேண்டியிருக்கிறது. தன்னை உடலாக மட்டுமே உணரும் பெரும் சிக்கலில் நம் பெண்கள் சிக்கியிருக்கிறார்கள்.

தெரியாமல் க்ளிவேஜ் தெரிய உட்கார்ந்திருக்கும் அலுவலகத் தோழியிடம் அதைச் சுட்டிக்காட்டவே பயமாக இருக்கிறது. சொன்னால் மிகப்பெரிய அவமானம் நடந்துவிட்டதாக புண்பட்டுப் போய்விடுகிறார்கள். பத்து நாட்களுக்கு தூங்க மாட்டார்கள், சிரிக்க மாட்டார்கள். சமீபத்தில் தீபிகா படுகொனே ஒரு பத்திரிக்கையிடமே ‘ஆமாய்யா...நான் ஒரு பொம்பளை..எனக்கு முலை இருக்கத்தான் செய்யும். அது வெளில தெரியத்தான் செய்யும். அதுல உனக்கென்ன பிரசிச்னை?’என்று தைரியமாக கேட்டிருந்தார். அந்த அளவிற்கு இல்லையென்றாலும், முப்பது நொடிக்கு ஒருதரம் முந்தானையை சரிசெய்யும் பரிதாபத்துக்குரிய அனிச்சைச்செயலைக்கூட பலரால் விட முடிவதில்லை.

விஷுவல் இலக்கியங்களாகிய உலக சினிமாக்களின் கடமை, பெண்களை அவர்களின் உடலில் இருந்து விடுதலை செய்வதாகவே இருக்க வேண்டும். சமீபத்தில் நிசப்தம் எனும் கொரியக் காப்பி படம் வந்தது. பாலியல் கொடுமைக்கு ஆளான பெண்குழந்தையை அவள் குடும்பம் எப்படி நார்மல் லைஃபுக்கு கொண்டுவருகிறது என்பது தான் முழுப்படமுமே. சமீபத்தில் வந்த நல்ல படம் அது. பிரச்சினையை ஊறுகாயாகத் தொட்டுக்கொண்டு, பழி வாங்கலில் இறங்காத நேர்மையான கதை அது. அந்த பெண் குழந்தையின் நார்மல் லைஃப், அந்த சம்பவத்தால் அது சிதைவது, மொத்த குடும்பமும் மீண்டும் அவளை மீட்டு, மீண்டும் குழந்தையாக ஆக்க போராடுவது என்று ஒரு வாழ்க்கையை சித்தரித்தது நிசப்தம்.

ஒரு பெண்ணுக்கு பாலியல் துன்புறுத்தல் நிகழ்ந்துவிட்டால் பெண்ணோ, குடும்பமோ தற்கொலை செய்வதை இன்னும் எவ்வளவு காலத்திற்கு யதார்த்தமான விஷயமாகக் காட்டப்போகிறோம்? அவள் அதிலிருந்து மீள்வதைப் பற்றிப் பேசுவது தான் நேர்மையான படைப்பாக இருக்க முடியும்.

இதே படத்தில் ஒரு கால் கேர்ள் கேரக்டர் வருகிறது. அவரின் முகத்தைக்கூட இயக்குநர் காட்டுவதில்லை. செகண்ட் ஹீரோவின் மனைவியை அம்மணமாக்குவதாகச் சொல்லி, இவரின் உடைகளை ஹீரோ முழுக்க கழட்டுகிறார். அதற்காக அவர் அழுவதில்லை, தற்கொலை செய்வதில்லை. ஹீரோவின் பழி வாங்கலுக்கு அவர் முழுமையாக ஒத்துழைக்கிறார். ஆடையின்றி இந்த இரு ஆண்களின் முன் நின்றபின்பும், அவரால் இயல்பாக வாழ முடிவதைப் பார்த்தபின்னும், முட்டாள்களான இரு ஆண்களுக்கும் எதுவும் உறைப்பதில்லை. மனைவியை பார்த்துவிட்டார்களே என்று ஒரு லூசு புலம்புகிறது, மனைவி வீடியோவை ரிலீஸ் செய்துவிடாதே என்று இரண்டாவது லூசு கதறுகிறது. அந்த கால்கேர்ள் கேரக்டர் இவர்களைப் பார்த்து எதால் சிரித்திருக்கும் என்று யோசிக்கிறேன்.

ஆனாலும் இதுவெல்லாம் புரியாமல், மிகவும் சின்ஸியராகவே இயக்குநர் ஜெயப்ரகாஷ் இந்த படத்தை எடுத்திருக்கிறார். அந்த சின்சியாரியையும், அவரின் நடிப்பு & ஆனந்த் சாமியின் நடிப்பையும் பாராட்டவே செய்ய வேண்டும். மேலும், ஆபாச கதைக்களம் என்றாலும் ஆபாசக் காட்சிகளை தவிர்த்திருப்பது நல்ல விஷயம்.

சில நண்பர்கள் இதுவொரு உலக சினிமா என்றும் அவசியம் நான் இதைப் பார்க்க வேண்டும் என்றும் பரிந்துரைத்தார்கள். வெற்றிமாறன் ரிலீஸ் என்றதும் இன்னும் கொஞ்சம் நம்பினேன். பார்த்தால் இதுவொரு நவீன எஸ்.ஏ.சி. படம் என்பதைத் தாண்டி, சொல்வதற்கு ஒன்றுமில்லாத காலி பெருங்காய டப்பா!
மேலும் வாசிக்க... "லென்ஸ் - ஒலக சினிமா அலசல்"
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

0 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.

Monday, June 19, 2017

டுபாக்கூர்களிடம் ஜோசியம் பார்க்கப் போகலாமா?


பெரும்பாலான ஜோதிடர்கள் அரைகுறைகள், டுபாக்கூர்கள். அதுபற்றிய பதிவு இது.

நான் எப்போது இந்தியா போனாலும் செய்வது, ஒரு ஜோதிடரைப் பார்த்துவிடுவது. அதை விட சிறந்த பொழுதுபோக்கு இல்லையென்றே சொல்வேன். நானே ஒரு அரைகுறை ஜோசியன் என்பதால் ஆரம்பித்த விளையாட்டு இது.

ஒருவன் ஜோசியம் பார்க்க வருகிறான் என்றால் அவனுக்கு ஏதோவொரு பிரச்சினை என்பது ஜோதிடர்களின் திடமான நம்பிக்கை. படிப்பு, வேலை, கல்யாணம், பணம், உடல்நலம் என ஏதோவொன்றில் சிக்கல் என்று அவர்களாகவே நினைத்துக்கொள்கிறார்கள். நான் அப்படி நாறிக்கிடந்த காலங்களில் ஜோதிடம் பக்கம் திரும்பியதில்லை. இப்போது ஒரு ஹாபியாக ஜோதிடரை பார்ப்பது என் வழக்கம். சிலநேரங்களில் வீட்டு அம்மணியும் வேடிக்கை பார்க்க வருவதுண்டு.

இப்படி ஒரு கிறுக்கன் சும்மா வருவான் என்று அவர்கள் கனவிலும் நினைத்திருக்க மாட்டார்கள் போலும். ஜாதகத்தை பவ்யமாக கையில் கொடுத்துவிட்டு எதிரே அமர்வேன். ஜோதிடர் கொஞ்ச நேரம் ஜாதகத்தையும் என்னையும் எடை போடுவார். பொதுப்பலன்களுடன் ஜோதிடர் ஆரம்பிப்பார்.

‘இந்த ஜாதகர் கடின உழைப்பாளி’ என்று அவர் ஆரம்பிக்கவும் தங்கமணி என்னைப் பார்ப்பார். ‘இந்த விஷயம் உங்க மேனேஜருக்குத் தெரியுமா?’ என்பது பார்வையின் பொருள்! இந்த பார்வைப் பரிமாற்றம் ஜோதிடரை பீதியாக்கும். அடுத்த அஸ்திரத்தை எடுத்துவிடுவார். ‘ஏழில் சந்திரன்..அழகான, லட்சணமான மனைவி அமைவாள்’ என்பார். நான் ‘ஆஹான்’ என்றபடியே வீட்டுக்காரம்மாவை திரும்பிப்பார்ப்பேன். அவரோ ‘சரி, சரி...தானிக்குத் தீனி சரியாப் போச்சு’ என வேறுபக்கம் திரும்பி சுவரை வெறிப்பார். இதிலேயே ஜோதிடர் வெறுத்துவிடுவார்.

அடுத்து கொஞ்ச நேரம் மயான அமைதி நிலவும். கட்டத்தை ஸ்டடி பண்ணுகிறாராம். சரி செய்யட்டும் என காத்திருப்போம். ஜோதிடர் கணக்குகளில் ஆழ்ந்திருப்பார். ‘இவனைப் பார்த்தால் படிக்கிற குழந்தையாத் தெரியலை. கழுத்தில் செயினையும் தொப்பையையும் பார்க்கும்போது வசதியாத்தான் தெரியுது. கல்யாணமும் ஆகித் தொலைஞ்சிருக்கு. குழந்தைங்க...ஆங்’ என்று நிமிர்வார். ‘ஆண் குழந்தை இருக்க வேண்டுமே?’ என்று பாசிடிவ்வாக ஆரம்பிப்பார். ‘ஆமாம்...இரண்டு பசங்க’ என்பேன். ‘அப்போ அதுவும் பிரச்சினை இல்லையா?..அட நாதாரிகளா’ என ஜோதிடர் மனதில் திட்டுவது நன்றாகவே கேட்கும்.

’பத்தாம் அதிபதி ஏழில்...தொழில்காரகனைப் பார்க்கிறான். சுக்கிரனோடு...’எனும் ரேஞ்சில் ஏதோ தொழில் கட்டம் பற்றி சொல்லிவிட்டு முகத்தைப் பார்ப்பார். உஷாராகி ரியாக்சன்களையெல்லாம் ரிமூவ் செய்து, க்ளீன் சிலேட்டாக முகத்தைக் காட்டுவேன். வீட்டுக்காரம்மாவோ எப்போதும் பூர்ண சந்திரன். ‘இப்படி உட்கார்ந்தா எப்படிடா...இப்போ இவனுக்கு தொழில்ல பிரச்சினைன்னு சொல்றதா, இல்லேன்னு சொல்றதா?’ என ஜோதிடரே கடுப்பில் கன்ஃபியூஸ் ஆவார்.

‘சரி கழுதை அதை விடுவோம்...இப்போ இவனுக்கு 37 வயசுன்னா அப்பா-அம்மா ஓல்டு பீப்பிள்..பிடிச்சுட்டேன்...அவங்கள்ல யாருக்கோ உடம்பு சரியில்லை’ என தெளிவாகி ஜோதிடர் அடுத்த பாயிண்டைப் போடுவார். ‘அப்பா - அம்மா ரெண்டு கட்டமுமே கொஞ்சம் பிரச்சினை காட்டுதே’. நான் ‘ஆமாம்’ என்று சொன்னதும் அவர் முகத்தைப் பார்க்க வேண்டுமே...மூன்று மணி நேரம் உச்சாவை அடக்கியவன் ட்ரான்ஸ்ஃபார்மரைக் கண்டதுபோல் இருக்கும்!

அப்படியெல்லாம் நிம்மதியாக இருக்க விடுவோமா? ‘அவங்கள்லாம் போய்ச் சேர்ந்து பல வருசம் ஆச்சு’ என்று அடுத்த குண்டைப் போடுவேன். ‘ஆங்..அதான் கட்டம் சொல்லுது’ என்றபடியே என்னை உற்றுப்பார்ப்பார். ‘மீ பாவம்..உனக்கு என்ன தான் வேணும்’ என்று கண்கள் கெஞ்சும். கடைசியில் அவரே சரண்டர் ஆகி ‘சரி..இப்போ உங்களுக்கு என்ன பார்க்கணும்?’ என டைரக்ட் டீலிங்கிற்கு வருவார்.

‘இப்போ நேரம் எப்படி இருக்கு? அது எல்லாக் கட்டத்துக்கும் என்ன சொல்லுதுன்னு சொல்லுங்க’ என்பேன். ‘எல்லாக் கட்டத்துக்குமா?...மறுபடி முதல்ல இருந்தா?’ என ஜோதிடர் வெறுத்துப்போவார். பெரும்பாலும் வீட்டுக்காரம்மா தான் மனமிரங்கி ‘நாங்க சொந்த ஊர்ல எப்போ செட்டில் ஆவோம்?’ என்று கேட்பார். ஏதோ ‘2+2 எவ்ளோ சொல்லுங்க’ என்று கேட்டதுபோல் ஜோதிடர் உற்சாகமாகிவிடுவார். அஜக்குபுஜக்கு என்று வேகமாக கணக்குப் போட்டு ‘இன்னும் இரண்டே வருசம் தான்..வந்திடலாம்’ என்று தீர்ப்பளிப்பார். ‘இதைத் தான்யா ஆறு வருசமா சொல்றீங்க’ என நினைத்தபடி நன்றி கூறி விடைபெறுவோம். அப்போது அவர் ‘போய்ட்டு வாங்க’ என்று சொல்வது முப்பத்து முக்கோடி தேவர்கள் பூமாரி பொழிந்து ஆசீர்வதித்தது போல் இருக்கும்!

ஆனால் இந்தமுறை நாங்கள் பார்த்த ஜோதிடர் கொஞ்சம் சூடான பார்ட்டி. கொஞ்ச நேரத்திலேயே டென்சன் ஆனவர் ‘இது உன் ஜாதகமே இல்லை..நீ சொல்றதும் கட்டமும் மேட்ச்சே ஆகலை..ஓடிப்போயிரு’ என்று விரட்டிவிட்டு விட்டார். ‘இதைக் காட்டித்தான்யா இந்தம்மாவை நான் கல்யாணம் பண்ணியிருக்கேன்’ என்று நான் சொல்லியும் அவர் கேட்கவில்லை. ‘அதெல்லாம் தெரியாது. கரெக்டான ஜாதகத்தோடு வாங்க’ என்று கழுத்தைப் பிடித்து தள்ளாத குறையாக அனுப்பி வைத்துவிட்டார்...ஆனால் நாம் அப்படில்லாம் விட்ற முடியுமா? அடுத்த லீவில் மறுபடி போகணும்!
மேலும் வாசிக்க... "டுபாக்கூர்களிடம் ஜோசியம் பார்க்கப் போகலாமா?"
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

4 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.

Saturday, June 17, 2017

த்ரில்லர் படங்களின் சாபம்...

சமீப காலமாக சில நல்ல த்ரில்லர் படங்கள் தமிழில் வர ஆரம்பித்திருக்கின்றன. துருவங்கள் பதினாறு, மெட்ரோ, 8 தோட்டாக்கள், அதே கண்கள், மாநகரம் போன்ற படங்கள் ஃபேஸ்புக்கிலும் மீடியாக்களிலும் நல்ல பாராட்டைப் பெறுகின்றன. இவற்றில் துருவங்கள் பதினாறு தவிர மற்ற படங்கள் போட்ட காசை வசூலிக்க முடியவில்லை என்பது கசப்பான உண்மை. துருவங்கள் பதினாறும் ஏழு கோடி மட்டுமே வசூலித்ததாக தகவல்.

நண்பர்கள் வட்டாரத்திலும் உறவுகளிடமும் இந்த படங்களைப் பற்றிக் கேட்டால் பெரும்பாலும் தெரிவதில்லை. தெரிந்தவர்களும் ஆன்லைனில் டவுன்லோடு தான் பார்த்திருக்கிறார்கள். ’நீங்கள் என்னென்ன படங்களை தியேட்டரில் போய்ப் பார்த்தீர்கள்?’ என்று கேள்வியைக் கேட்டால், அதில் த்ரில்லர் படங்களுக்கு இடமே இல்லை. ரஜினி-விஜய்-அஜித் படங்கள், ரஜினி முருகன், பாபநாசம், பவர் பாண்டி, சிவலிங்கா(!) என்று தான் லிஸ்ட் போடுகிறார்கள். பாபநாசம் பார்த்தவர்கள்கூட தூங்காவனத்தை கண்டுகொள்ளவில்லை.

இன்னும் எளிமைப்படுத்தினால், தங்கள் வாழ்க்கையைப் பிரதிபலிக்காத அல்லது பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த படங்களையே பெரும்பாலானோர் பார்க்கிறார்கள். ஃபேமிலி டிராமா, காதல், நகைச்சுவைப் படங்களுக்கு எப்போதும் போதிய வரவேற்பு இருக்கிறது. த்ரில்லர் படங்கள் எல்லாம் பிரபல ஹீரோக்கள் நடிக்காவிட்டால், கவிழ்ந்துவிடுகின்றன. ஆனால் அது இங்கே மட்டுமே நடக்கும் விஷயம் அல்ல.

த்ரில்லர் படங்களின் ஆதிமூலம், ஃபிலிம் நுவார் படங்கள் தான். 1940களில் பிரபலமான இந்த ஜெனரின் சிறப்பம்சமே, லோ பட்ஜெட் படங்கள் என்பது தான். இவையெல்லாம் பி கிரேடு (இரண்டாம் தர) படங்களாகவே பார்க்கப்பட்டன, தயாரிக்கப்பட்டன. இரவு நேர நகரம் + மனிதர்களின் இருண்ட பக்கம்+குறைவான கேரக்டர்கள்+ஆனால் டெக்னிகலாக சிறப்பான கேமிரா & எடிட்டிங் அமைந்தால், அதுவே ஃபிலிம் நுவார். இவையே பின்னாளில் த்ரில்லர் என்று பரிணாமம் பெற்றன.

குறைந்த செலவில் படமெடுத்து குறைந்த லாபத்துடன் தப்பிப்பது தான் ஃபிலிம் நுவாரின் சிறப்பம்சமே. சில படங்கள் பெருவாரியான மக்களின் வரவேற்பைப் பெற்று வசூலை வாரிக்குவித்துவிடுவதுண்டு. ஆனாலும் ஏ செண்டர் மக்களைக் குறிவைத்து எடுக்கப்பட்ட பி கிரேடு(!) படங்கள் தான் ஃபிலிம் நுவார் அல்லது த்ரில்லர் படங்கள். பிற்காலத்தில் நியோ-நுவாராக ஃபிலிம் நுவார் ஆகி, ஹிட்ச்காக் படங்கள், Blade Runner போன்ற படங்கள் எல்லாம் ஏ கிரேடுக்கு நகர்ந்தன...அதாவது மெயின்ஸ்ட்ரீம் படங்களாக ஆகின.

மனிதன் சினிமா பார்க்க ஆசைப்படுவது சந்தோசத்திற்குத்தான் எனும் அடிப்படை உண்மை தான் த்ரில்லர் படங்களின் சாபம். அந்த அடிப்படையைத் தகர்த்து வெற்றி பெறுவது தான் த்ரில்லர் படங்களின் முன் இருக்கும் சவால். திருட்டு விசிடி பிரச்சினை மட்டும் இல்லையென்றால், மேலே சொன்ன படங்கள் இன்னும் கொஞ்சம் வசூலை வாரியிருக்கலாம். இரண்டு/மூன்று கோடியில் தரமான த்ரில்லரை எடுத்து மூன்று/நான்கு கோடி வசூலுடன் தப்பிக்கும் படங்கள் அதிகம் வந்திருக்கலாம்.

டிக்கெட் பிரச்சினையைக் காரணம் காட்டி, பைரஸியை பலர் ஆதரித்தாலும் நல்ல சிறுபட்ஜெட் படங்களை திருட்டு விசிடியும் தியேட்டர் கட்டணங்களும் சேர்ந்து காலி செய்வதே யதார்த்தம். இதனால் என்ன ஆகும் என்றால் பேய்க்காமெடி, நாய்க்காமெடி, புனிதக்காதல், பஞ்ச் டயலாக் என சேஃபர் ஜோனிலேயே தயாரிப்பாளர்கள் விளையாட நினைப்பார்கள். நாம் திருட்டு விசிடியில் 8 தோட்டாக்கள் பார்த்துவிட்டு, விஜய்/அஜித் படங்களை கலாய்த்துக்கொண்டிருப்போம். மலையாள சினிமாவில் இதை கச்சிதமாகச் செய்து, ஜெயிக்கிறார்கள். கம்மாட்டிப் பாடம், அங்கமாலி டயரீஸ் என சின்ன பட்ஜெட்டில் தைரியமாக அவர்களால் படமெடுக்க முடிகிறது. நம்மால் அது முடியாதென்பதே யதார்த்தம்.

இவ்வளவு பிரச்சினை இருந்தும் புதிய படைப்பாளிகளுக்கு த்ரில்லர்கள் மீது தீராத மோகம் இருந்துகொண்டே இருக்கிறது. முக்கியக் காரணங்கள், வித்தியாசமான படம் செய்யும் அரிப்பும் டெக்னிகலாக எக்ஸ்பரிமெண்ட்களை செய்துபார்க்கும் வாய்ப்பும். ஆனால் தற்போதைய சூழ்நிலையில், கொஞ்சம் பிரபல நடிகர் இல்லையென்றால் த்ரில்லர் ஜெனர் என்பது தற்கொலை முயற்சிக்கான எளிய வழி என்பதே யதார்த்தம்.

எனவே நாம் எப்போதும் போல் ‘கொரியாப் படம் மாதிரி வருமா?’ என்று பேசிக்கொண்டே காலத்தைக் கழிப்போம்!
மேலும் வாசிக்க... "த்ரில்லர் படங்களின் சாபம்..."
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

0 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.