Saturday, April 29, 2017

பாகுபலி 2 – பிரம்மாண்டத்தின் உச்சம்

பாகுபலி-1ல் கதையே இல்லை..வெறும் கேரக்டரை மட்டுமே அறிமுகப்படுத்தினேன் என்று ராஜமௌலி சொன்னாலும், அது உண்மை இல்லை. அங்கே ஒரு கதை இருந்தது. தன் மகன் வந்து மீட்பான் என்று தாய் காத்திருக்க, காதலிக்காக தாய் என்று தெரியாமலேயே மகன் மீட்டு வருகிறான் என்று ஒரு முழுமையான சித்திரத்துடன் முதல்பாகம் வந்தது.
இரண்டாம் பாகத்தில் தாய் ஏன் சிறைப்பட்டாள் என்றும் மில்லியன் டாலர் கேள்வியான கட்டப்பா ஏன் பாகுபலியை கொன்றார் என்றும் சொல்லியிருக்கிறார்கள். 

மகாபாரதத்தில் திருதராஷ்டிரன் பார்வையற்றவன். எனவே தம்பி பாண்டுவை மன்னன் ஆக்குகிறார்கள். அடுத்த தலைமுறையிலாவது தன் ரத்தம் முடிசூட வேண்டும் எனும் திருதராஷ்டிரனின் நியாயமான ஆசையும், பாஞ்சாலியை சபதம் செய்ய வைக்கும் கௌரவர்களின் கீழ்த்தரமான நடவடிக்கையும் தான் மகாபாரதப் போருக்கு அடிப்படை. பாகுபலி-2 படத்தின் கதையில் மகாபாரதத்தின் மேலே சொன்னதின் தாக்கம் நிறையவே இருக்கிறது.

பாகுபலிக்கும் தேவசேனாவிற்குமான காதல் காட்சிகளே முதல்பாதியை ஆக்கிரமிக்கின்றன. வழக்கம்போல் பிரம்மாண்டம் & அழகுடன் நகைச்சுவையும் சேர முதல்பாதி களைகட்டுகிறது. சத்தியராஜின் வசனங்களுக்கு தியேட்டரில் சிரிப்பலை. இடைவேளையிலேயே விதியின் சதியால் தேவசேனாவிற்காக, அம்மாவையே பாகுபலி எதிர்க்க வேண்டியதாகிறது.

தொடர்ச்சியான பிரிவும் துரோகங்களும் சூழ்ச்சிகளும் முதல்பாகத்தின் ஆரம்பக்காட்சிக்கு இட்டுச்சென்கின்றன. அதை இரண்டாம்பகுதியில் விரிவாகச் சொல்லியிருக்கிறார்கள்.

முதல் பாகம் போன்றே இதிலும் பிரம்மாண்டமாக மிரட்டியிருக்கிறார்கள். யானைக்கு மதம் பிடிப்பதாகட்டும், மூன்று அம்புகளை தொடுக்க பிரபாஸ் அனுஷ்காவிற்கு சொல்லிக்கொடுக்கும் சண்டைக்காட்சி, பாகுபலியின் பிள்ளையை ரம்யாகிருஷ்ணன் மாடத்தில் இருந்து உயர்த்திப்பிடிக்கும் காட்சியாகட்டும் விஷுவல் எஃபக்ட்ஸை உணர்வுப்பூர்வமாக பயன்படுத்துவது எப்படி என்று ராஜமௌலி துல்லியமாக அறிந்திருக்கிறார்.


பிரபாஸின் நடிப்பும் உழைப்பும் பாராட்டுக்குரியது. அவரே ஒரு பேட்டியில் சொன்னது போல், இன்னொரு படத்தில் இதே அளவிற்கு உழைத்தால் பாடி தாங்காது. மறக்க முடியாத ஆளுமை.

படம் முழுக்க அனுஷ்கா தான். தமன்னா கிளைமாக்ஸ் யுத்தத்தில் தான் வாளுடன் ஓடிவருகிறார். ஒரு நண்பர் ‘இந்த பாகத்திலாவது தமன்னா திரும்பி நிற்பாரா?’ என்று கேட்டிருந்தார். இதுவொரு பிரம்மாண்டப்படம் என்பதால், அதற்கு வாய்ப்பில்லை என்று சொல்லியிருந்தேன். நான் சொன்னபடியே ஆயிற்று. அவரை நிற்கவே விடவில்லை. இதில் எங்கே திரும்புவது.


அனுஷ்கா தற்போது ஆண்ட்டி மாதிரி ஆகிவிட்டாரே என்று கவலை(?)யுடன் உள்ளே போனால், பழைய அனுஷ்காவாக கொடியிடையுடன் வந்து அசத்திவிட்டார். அழகும் கம்பீரமும் ஒருங்கே அமைவதெல்லாம் எல்லோருக்கும் கிடைப்பதில்லை. அனுஷ்கா, அந்த வரம் வாங்கி வந்த தேவதை. வழக்கமான மருமகள் போல், அம்மாவையும் மகனையும் வாய்த்துடுக்கால் பிரிப்பதைப் பார்க்கத்தான் ஒரு மாதிரியாக இருந்தது!

பிரபாஸ் & அனுஷ்கா தோன்றும் எம்.ஜி.ஆர்த்தனமான மக்கள் கொஞ்சும் காட்சிகளும், கிளைமாக்ஸ் யுத்தக்காட்சிகளும் சற்று போரடிக்கின்றன. மற்றபடி, படம் முழுக்க போரடிக்காமல் சென்றது.

படகில் ஏற பாகுபலியின் தோளில் தேவசேனா நடப்பது, படகு பறப்பது, கரடி வேட்டை, அனுஷ்கா கோட்டையில் நடக்கும் போர்காட்சிகள் என்று படம் முழுக்க கண்களுக்கு விருந்து தரும் விஷுவல் ட்ரீட்ஸ் நிறைய. பாகுபலியின் பலமே அது தான்.

கட்டப்பா ஏன் பாகுபலியைக் கொன்றார் என்பதற்கு பதில் தான் இந்த படத்தின் கதை என்பதால், கதையைப் பற்றி ஒன்றும் சொல்லாமலேயே முடித்துக்கொள்கிறேன்.

படம் முடியும்போது ஒரு சோகம் நம்மைக் கவ்விக்கொள்கிறது. அதற்குக் காரணம், பாகுபலி படம் அவ்வளவு தானா, இந்த மேஜிக் சினிமாவில் அடுத்து எப்போது நிகழும் என்பது போன்ற சிந்தனைகள் தான். படம் முடிந்தபின்னும் ஆடியன்ஸ் ஒரு நிமிடம் ஸ்க்ரீனையே வெறித்தபடி உட்கார்ந்திருக்கிறார்கள். வேறுவழியின்றி பாகுபலிக்கு பிரியாவிடை கொடுத்தபடி வெளியேறுகிறோம். பாகுபலி டீமின் உழைப்புக்கு கிடைத்த வெற்றி, இந்த அன்பு தான்!
  
மேலும் வாசிக்க... "பாகுபலி 2 – பிரம்மாண்டத்தின் உச்சம்"
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

0 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.

Monday, April 17, 2017

இனியாவும் மாலாக்காவும் பின்னே ஷிவதாவும்...


'வாகை சூட வா’ பார்த்தபோது, இனியா ஒரு நல்ல நடிகையாக வருவார் என்று நினைத்தேன். மிக யதார்த்தமான நடிப்புடன், ஒரு கிராமத்துப்பெண்ணை பிரதிபலித்திருந்தார்.

ஆனால் கொஞ்சநாளிலேயே ஒரு குத்துப்பாட்டுக்கு டான்ஸ் ஆடினார். பிறகு கள்ளக்காதல் கேரக்டர் என்றாலே இனியா தான் என்று பெயர் வாங்கிவிட்டார். ஏன் இப்படி ஆனது என்று எவ்வலவு யோசித்தும் புரியவில்லை.

இப்போது, மாலாக்கா முறை. சிஜாவோ..ரோஸோ..ஏதோ ஒரு பெயர்..அது என்னவாக இருந்தால் என்ன, நமக்கு அவர் மாலாக்கா தான். (உங்களுக்குமா அங்கிள்னு ஷாக் ஆகக்கூடாது!)

கோழிகூவுது, மாசாணி என இரண்டு படங்களில் ஹீரோயினாக நடித்தார். கோழிகூவுது படத்தின் சில ஸ்டில்கள் கவனிக்க வைத்தன. நல்ல பாந்தமான முகம். ஒரு ஹோம்லி ஹீரோயினாக வலம் வருவார் என்று நினைத்தேன். நினைத்தபடியே மாலாக்காவாக வந்தார்.
ஆனால் அடுத்து பைரவா பார்த்தபோது நெஞ்சே வெடித்துவிட்டது. கீர்த்தி சுரேஷ் தங்கையாம்..இவர் அக்காவாம்..கீர்த்தி விஜய்க்கு ஜோடியாம்..இவர் ஒரு வில்லன் நடிகருக்கு ஜோடியாம்.றெக்க படத்தில் லஷ்மி மேனனை ஹீரோயின் என்று சொன்னதையே ஊர் நம்பவில்லை. இதில் பைராவா இப்படிச் செய்தால் படம் எப்படி ஓடும்கிறேன்?

இவர் ஏன் இது மாதிரி சப்பையான கேரக்டர்களை எல்லாம் ஒத்துக்கொள்கிறார் என்று தெரியவில்லை. கொஞ்சம் பொறுமையாக இருந்து முயற்சி செய்தால், இரண்டாம் கட்ட ஹீரோயினாக வலம் வர முடியும்.

ஒருவேளை பொருளாதார அழுத்தங்கள் இனியாவிற்கும் மாலாக்காவிற்கும் இருக்குமோ, என்னவோ!

அந்தவகையில் சரியான வழியில் பயணிப்பது ஷிவதா தான். நெடுஞ்சாலை என்று ஒரு படம் 2014ல் வந்தது. அதில் வரும் ஹீரோயின் கேரக்டர் அருமையாக இருக்கும். அதில் நல்ல நடிகை என்று பெயர் எடுத்தவர் பிறகு காணாமல் போனார். இப்போது அதே கண்களுடன் (!) திரும்பி வந்திருக்கிறார். இந்த வருடத்தில் குறிப்பிடத்தக்க பெர்ஃபார்மன்ஸ், அதே கண்கள் படத்தில்.

 
இடையில் திருமணம் வேறு ஆகிவிட்டதாக விக்கிபீடியா கிலி கிளப்புகிறது. ஆனாலும் அட்டகாசமான பெர்ஃபார்மன்ஸுடன் பார்த்த எல்லோர் மனதிலும் தந்திராவாக சிம்மாசனமிட்டு அமர்ந்துவிட்டார். அடுத்து எஸ்.ஜே.சூர்யாவுடன் மாயா இயக்குநர் படத்தில் நடிக்கப்போவதாக செய்தி பார்க்க, சந்தோசமாக இருக்கிறது.

மாலாக்காவை ஷிவதாவிடம் ட்யூசன் அனுப்ப வேண்டும்!
மேலும் வாசிக்க... "இனியாவும் மாலாக்காவும் பின்னே ஷிவதாவும்..."
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

0 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.

Saturday, April 15, 2017

வெளிநாட்டு வேலைவாய்ப்பு : எங்கே செல்லும் இந்தப் பாதை….



அமெரிக்கா ஐ.டி. ஊழியர்களுக்கு விசா தருவதில் பல கட்டுப்பாடுகளை விதித்திருக்கிறது. சிங்கப்பூரும் அமெரிக்காவின் பாதையில் நடைபோட ஆரம்பித்துள்ளது. ஏறக்குறைய எல்லா நாடுகளுமே ‘மண்ணின் மைந்தர்’ கோஷத்தை நோக்கி நகர்கின்றன. 

பலரும் இது ஏதோ ஐ.டி.துறையை மட்டுமே பாதிக்கும் விஷயம் என்று நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். உண்மையில் ஐ.டி.துறையில் மட்டுமல்லாது, எல்லா துறைகளுமே இந்த நகர்வினால் கடும் பாதிப்புக்கு ஆளாகப் போகின்றன. வெளிநாட்டு வேலை வாய்ப்புகள் எல்லாமே அபாயகரமான கட்டத்தை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கின்றன.

அரபு தேசங்களில் அரசு வேலை என்பது நமக்கு எளிதாக கிடைத்துக்கொண்டிருந்தது. கடந்த ஐந்து வருடங்களில் வேறு வழியில்லை என்றால் மட்டுமே வெளிநாட்டவருக்கு அரசுவேலை எனும் நிலை வந்திருக்கிறது. ‘ஏன் வெளிநாட்டவரை எடுக்கிறோம்?’ என்று சம்பந்தப்பட்ட துறை அரசுக்கு விளக்கம் சொல்ல வேண்டிய நிலை உருவாகியுள்ளது.

அது இப்போது அடுத்த கட்டத்தை நோக்கி நகர ஆரம்பித்துள்ளது. தனியார் கம்பெனிகளிலும் மண்ணின் மைந்தர்களை வேலையில் அமர்த்தும்போக்கு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இனி பத்து வருடங்களில் வெளிநாட்டு ஒயிட் கால்ர் ஜாப் என்பது அரிதான விஷயமாக ஆகப் போகிறது.

ஆயில் கண்டுபிடிக்கப்பட்டபோதும் சரி, கணிணித்துறை வளர்ச்சி ஆரம்பிக்கப்பட்டபோதும் சரி, போதுமான பணியாளர்கள் இந்த தேசங்களில் இல்லை. எனவே எல்லா நாடுகளுமே உலகில் உள்ள திறமைசாலிகளை எல்லாம் வரவேற்று, அரவணைத்தன. இப்போது உள்ளூரிலேயே எல்லோரும் படித்து, வேலை செய்ய தயாராக இருக்கிறார்கள்.

அரபிகள் தங்கள் குழந்தைகளை ஐரோப்பா/அமெரிக்காவில் படிக்க அனுப்புகிறார்கள். படித்து முடித்து வந்ததும், அவர்களுக்கு வேலை கொடுப்பது அரசாங்கத்தின் கடமை ஆகிறது. எனவே ஒரு வெளிநாட்டு ஆசாமி வேலையை விடுகிறார் என்றால், அந்த வேலையை தனது குடிமக்களுக்கு மாற்றிவிடவே அரசுகள் முனைகின்றன. இதை ஒரு தவறாக யாரும் சொல்ல முடியாது.

ஆனால் இது நம்மை மோசமாக பாதிக்கப்போகிறது என்றே அஞ்சுகிறேன். நமது தலைமுறைவரை, படித்தால் உள்நாட்டிலோ அல்லது வெளிநாட்டிலோ வேலை செய்து பிழைத்துவிடலாம் என்பதே நிலை. தற்போது வெளிநாட்டு வேலை இல்லை என்று ஆகும்போது, அத்தனை மனிதவளமும் உள்ளூர் நோக்கித் திரும்பும். அவர்களுக்கு வேலை தருவதற்கான கட்டமைப்பு நம்மிடம் இல்லை.

ஜப்பான், சீனா நோக்கி பயணிக்கலாம் எனும் சிந்தனை விழித்துக்கொண்டோரிடம் வந்திருக்கிறது. ஆனால் எத்தனை நாள் ஓடிக்கொண்டே இருக்க முடியும்?

நமது மத்திய, மாநில அரசுகள் இந்த அபாயத்தை உணர்ந்திருக்கின்றனவா, அதற்கான தொலைநோக்குத் திட்டத்தை வைத்திருக்கின்றனவா என்றால் இல்லையென்றே சொல்ல வேண்டும். 

பள்ளி செல்லும் குழந்தைகளை வைத்திருக்கும் பெற்றோருக்கு இதுபற்றிய விழிப்புணர்வு வரவேண்டியது அவசியம், அவசரம். இனியும் கார்போரேட் அடிமைகளை மட்டும் உற்பத்தி செய்யாமல், சுய தொழில் பற்றிய ஆர்வத்தையும் நம் குழந்தைகளுக்கு ஊட்ட வேண்டிய நேரம் இது.

இந்தியாவில் அதிக வேலை வாய்ப்பைத் தரும் தொழில், விவசாயம். ஆனால் அதனை அழித்து ஒழிப்பதில் தான் நம் அரசுக்ள் முனைப்பாக இருக்கின்றன. எனவே விவசாயிகள் விவசாயத்தைக் கைவிட வேண்டியதாகிறது. பிள்ளைகளை படிக்க வைத்து ‘நீயாவது தப்பிச்சுப் போயிடு’ என்று அனுப்பி வைக்க வேண்டியிருக்கிறது. எனது அப்பாவே என்னை அப்படித்தான் அனுப்பி வைத்தார். ஆனால் இனி போக்கிடம் இல்லை என்று ஆகும்போது, விவசாயம் உள்ளிட்ட வேலைகளை லாபகரமாக ஆக்குவது எப்படி என்று நமது அரசுகள் அக்கறையுடன் யோசிக்க வேண்டிய நேரம் இது.

‘எப்படியாவது கஷ்டப்பட்டு பிள்ளைகளை படிக்க வச்சிட்டாப் போதும்..பிழைச்சுக்குவாங்க’ என்று நம்பும் அப்பாவி பெற்றோர்கள் கால மாற்றத்தையும் உணர வேண்டிய நேரம் இது. வளர்ந்த நாடுகளைப் போலவே இங்கும் டிகிரி படிப்பு என்பது எல்லோரிடமும் இருக்கும் அடிப்படை விஷயமாக ஆகிவிட்ட காலம் இது.எனவே அடிமைகளை மட்டும் வார்த்தெடுக்காமல், சொந்தக்காலில் நிற்கவும் பிள்ளைகளை பழக்குவோம்.


மேலும் வாசிக்க... "வெளிநாட்டு வேலைவாய்ப்பு : எங்கே செல்லும் இந்தப் பாதை…."
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

0 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.

Friday, April 14, 2017

இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்



சிவ சிவ
திருச்சிற்றம்பலம்
*60 தமிழ் வருடங்கள்...*
01. பிரபவ - நற்றோன்றல்
Prabhava1987-1988
02. விபவ - உயர்தோன்றல்
Vibhava 1988–1989
03. சுக்ல - வெள்ளொளி
Sukla 1989–1990
04. பிரமோதூத - பேருவகை
Pramodoota 1990–1991
05. பிரசோற்பத்தி - மக்கட்செல்வம்
Prachorpaththi 1991–1992
06. ஆங்கீரச - அயல்முனி
Aangirasa 1992–1993
07. ஸ்ரீமுக - திருமுகம்
Srimukha 1993–1994
08. பவ - தோற்றம்
Bhava 1994–1995
09. யுவ - இளமை
Yuva 1995–1996
10. தாது - மாழை
Dhaatu 1996–1997
11. ஈஸ்வர - ஈச்சுரம்
Eesvara 1997–1998
12. வெகுதானிய - கூலவளம்
Bahudhanya 1998–1999
13. பிரமாதி - முன்மை
Pramathi 1999–2000
14. விக்கிரம - நேர்நிரல்
Vikrama 2000–2001
15. விஷு - விளைபயன்
Vishu 2001–2002
16. சித்திரபானு - ஓவியக்கதிர்
Chitrabaanu 2002–2003
17. சுபானு - நற்கதிர்
Subhaanu 2003–2004
18. தாரண - தாங்கெழில்
Dhaarana 2004–2005
19. பார்த்திப - நிலவரையன்
Paarthiba 2005–2006
20. விய - விரிமாண்பு
Viya 2006–2007
21. சர்வசித்து - முற்றறிவு முழுவெற்றி
Sarvajith 2007–2008
22. சர்வதாரி - முழுநிறைவு
Sarvadhari 2008–2009
23. விரோதி - தீர்பகை
Virodhi 2009–2010
24. விக்ருதி - வளமாற்றம்
Vikruthi 2010–2011
25. கர - செய்நேர்த்தி
Kara 2011–2012
26. நந்தன - நற்குழவி
Nandhana 2012–2013
27. விஜய - உயர்வாகை
Vijaya 2013–2014
28. ஜய - வாகை
Jaya 2014–2015
29. மன்மத - காதன்மை
Manmatha 2015–2016
30. துன்முகி - வெம்முகம்
Dhunmuki 2016–2017
*31. ஹேவிளம்பி - "பொற்றடை"*
*Hevilambi 2017–2018*
*(இவ்வருடம் "பொற்றடை" தமிழ் புத்தாண்டு)*
32. விளம்பி - அட்டி
Vilambi 2018–2019
33. விகாரி - எழில்மாறல்
Vikari 2019–2020
34. சார்வரி - வீறியெழல்
Sarvari 2020–2021
35. பிலவ - கீழறை
Plava 2021–2022
36. சுபகிருது - நற்செய்கை
Subakrith 2022–2023
37. சோபகிருது - மங்கலம்
Sobakrith 2023–2024
38. குரோதி - பகைக்கேடு
Krodhi 2024–2025
39. விசுவாசுவ - உலகநிறைவு
Visuvaasuva 2025–2026
40. பரபாவ - அருட்டோற்றம்
Parabhaava 2026–2027
41. பிலவங்க - நச்சுப்புழை
Plavanga 2027–2028
42. கீலக - பிணைவிரகு
Keelaka 2028–2029
43. சௌமிய - அழகு
Saumya 2029–2030
44. சாதாரண - பொதுநிலை
Sadharana 2030–2031
45. விரோதகிருது - இகல்வீறு
Virodhikrithu 2031–2032
46. பரிதாபி கழிவிரக்கம்
Paridhaabi 2032–2033
47. பிரமாதீச - நற்றலைமை
Pramaadhisa 2033–2034
48. ஆனந்த - பெருமகிழ்ச்சி
Aanandha 2034–2035
49. ராட்சச - பெருமறம்
Rakshasa 2035–2036
50. நள - தாமரை
Nala 2036–2037
51. பிங்கள - பொன்மை
Pingala 2037–2038
52. காளயுக்தி - கருமைவீச்சு
Kalayukthi 2038–2039
53. சித்தார்த்தி - முன்னியமுடிதல்
Siddharthi 2039–2040
54. ரௌத்திரி - அழலி
Raudhri 2040–2041
55. துன்மதி - கொடுமதி
Dunmathi 2041–2042
56. துந்துபி - பேரிகை
Dhundubhi 2042–2043
57. ருத்ரோத்காரி - ஒடுங்கி
Rudhrodhgaari 2043–2044
58. ரக்தாட்சி - செம்மை
Raktakshi 2044–2045
59. குரோதன - எதிரேற்றம்
Krodhana 2045–2046
60. அட்சய - வளங்கலன்
Akshaya 2046–2047
ஆண்டின் தமிழ்ப் பெயர்களை இங்கு வழங்கியுள்ளோம்...
இனி எந்த தங்குத்தடையும் இன்றி, 60 தமிழ் வருடங்களை தமிழ்ப்பெயரோடு தமிழ் புத்தாண்டு வாழ்த்துவோம்...!
நன்றி : Surya Suresh
மேலும் வாசிக்க... "இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்"
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

0 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.

Monday, April 10, 2017

சினிமா விமர்சனம் மூன்று நாட்களுக்கு அப்புறம்…..அப்புறம்?


நான் தீவிரமாக இணையத்தில் புழங்கிய காலத்தில் வியாழக்கிழமையே விமர்சனம் போட்டுவிடுவேன். அதற்காக நள்ளிரவில் காத்திருக்கும் பல நண்பர்கள் உண்டு. படம் ரிலீஸ் ஆகும் முன்பே நெகடிவ்வாக போடுவதால், வசூல் பாதிக்கிறது என்று சில சினிமா நண்பர்கள் தனிப்பட்ட முறையில் தொடர்ந்து என்னிடம் வருத்தப்பட்டார்கள்.

’மோசமான படத்தை நன்றாக இருக்கிறது என்று சொன்னால் என் நம்பகத்தன்மை போய்விடுமே?’ என்றேன். ‘நல்லா இருந்தால் மட்டும் சொல்லு..இல்லே விமர்சனம் போடாதே’ என்றார்கள். அப்படியென்றால் அதற்குப் பெயர் விமர்சனம் அல்ல, சொம்படித்து வாழ்வது. இந்த பிழைப்பு எதற்கு என்று இப்போதெல்லாம் புதுப்படங்களுக்கு விமர்சனம் எழுதுவதில்லை. மிக நல்ல படம் – மிக மோசமான படக்கள் பற்றி மட்டும் கொஞ்சம் புலம்புகிறேன்.


ஒரு தொழில் செய்பவராக, சினிமா நண்பர்களின் வேண்டுகோள் நியாயமானது தான். ஆனால் விமர்சனத்திற்கும் நியாயம் செய்ய வேண்டும், சினிமாவிற்கும் நல்ல செய்ய வேண்டும் என்றால் சும்மா தான் இருக்க வேண்டும். அதைத் தான் விஷால் இன்று சொலியிருக்கிறார்.

நெருப்புடா ஆடியோ ரிலீஸ் பங்சனில் ‘படம் ரிலீஸான முதல் மூன்று நாட்களுக்கு மீடியா விமர்சனம் எழுத வேண்டாம்’ என்று விஷால் கேட்டுக்கொண்டிருக்கிறார். சூப்பர் ஸ்டார் அதை ஆமோதித்திருக்கிறார். லாரன்ஸ் இன்னும் ஒருபடி மேலே போய் விமர்சனம் செய்பவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொங்கியிருக்கிறார்.

உண்மையில் சினிமா மிக மோசமான நிலையில் தான் இருக்கிறது. முன்பெல்லாம் சினிமா மட்டுமே மக்களின் பொழுதுபோக்காக இருந்தது. டிவியும் இண்டர்நெட்டும் பொழுதுபோக்கை வீட்டுக்குள்ளேயே கொண்டுவந்தபின், தியேட்டருக்கு போவது என்பது அவசியமா எனும் கேள்வி எழுந்து நிலைபெற்று நிற்கும் காலம் இது.

டிக்கெட் விலை, பார்க்கிங் கொள்ளை, கேண்டீன் கொள்ளை என்றெல்லாம் புறக்காரணிகள் இருந்தாலும், நேரம் என்பதும் பலருக்கு முக்கியமான விஷயமாக ஆகிவிட்டது. அரைநாள் செலவழித்து தியேட்டருக்குப் போவதை விட, ஹாயாக வீட்டிலேயே படுத்துக்கொண்டு விரும்பிய நேரத்தில் படம் பார்க்கும் மனநிலை எப்போதோ வந்துவிட்டது. எல்.இ.டி டிவி என்பது சர்வசாதாரணமாக பலரின் வீடுகளிலும் இருக்கிறது.

எனவே தியேட்டருகுப் போக வேண்டும் என்றால் ஒரு வலுவான காரணம் மக்களுக்கு தேவைப்படுகிறது. படம் நன்றாக இருக்கிறது என்று தெரிந்தால் ஒழிய யாரும் வீட்டை விட்டு நகர்வதில்லை. அதையும் இண்டர்நெட் சொல்லிவிடுகிறது. போட்டி நிறைந்த உலகில், முதலில் யார் சொல்வது என்று பெரும் போட்டியே நிகழ்கிறது. வலைத்தளங்கள், யூடியூப் மட்டுமல்லாது விகடன், ஹிந்து போன்ற பெரிய ஊடகங்கள்கூட சுடச்சுட விமர்சனம் போட வேண்டிய நிலை.

ஒரு படத்தின் ஆயுளே இன்று ஏழுநாட்கள் தான். அடுத்த வெள்ளிக்கிழமை வேறுபடம் ரிலீஸ் ஆகிவிடுகிறது. இதில் முதல் மூன்றுநாட்களுக்கு விமர்சனம் செய்யாதே என்றால், திங்கட்கிழமை போடும் விமர்சனம் யாருக்கு உதவும்?

’யாராவது படம் எப்படி இருக்கிறது என்று சொல்லட்டும்..நல்ல ரிசல்ட் வந்தால் தியேட்டருக்குப் போவோம்’ என்பது தான் மக்களின் மனநிலை. ஆனால் ‘விமர்சகர்கள் படம் எப்படி என்று சொல்வதால் தான் மக்கள் வருவதில்லை. இவர்கள் சும்மா இருந்தால் தியேட்டர் நிறைந்துவிடும் ’என்று சினிமாக்காரர்கள் தீவிரமாக நம்புகிறார்கள். நடைமுறை யதார்த்தம் இவர்களுக்கு புரியவில்லை. ஒட்டுமொத்தத்தில் இந்த மூன்று நாள் விரதம், இழப்பையே கொண்டுவரும்.

விமர்சனம் என்றால் திட்டுவது மட்டும் தான் என்று முழு கோலிவுட்டும் நம்புகிறார்கள். எத்தனையோ நல்ல படங்களை பாராட்டியிருப்பதை யாரும் நினைவில் வைத்துக்கொள்வதில்லை.

பெரிய நடிகர்கள், இயக்குநர்களின் படங்களுக்கு விமர்சனம் தேவையில்லை. எப்படியும் மூன்றுநாள் வசூல் கிடைத்துவிடும். உதாரணமாக காற்று வெளியிடை படம் இங்கே வெள்ளி-சனி இரண்டுநாளுமே ஹவுஸ்ஃபுல்.

ஆனால் சிறுபடங்களின் நிலை? நன்றாக இருக்கிறது என்று சொல்லாமல் யாரும் தியேட்டர் பக்கம் வரமாட்டார்கள். சமீபத்தில் வந்த துருவங்கள் பதினாறு, குற்றம் 23, மாநகரம் எல்லாம் பரவலாக மக்களை அடைந்ததிற்கு உடனடி விமர்சனங்களுக்கு முக்கியப் பங்கு உண்டு. 

சிறுபடங்கள் பற்றி வெள்ளி-சனி-ஞாயிறு விடுமுறைகளில் பேசாமல் இருந்துவிட்டு, நான்காவது நாள் திங்கட்கிழமை நன்றாக இருக்கிறது என்று சொன்னால் அதைப் பார்க்க தியேட்டரில் படமும், மக்களுக்கு நேரமும் இருக்குமா?

தியேட்டரில் படம் பார்ப்பது என்பது ஆடம்பரமான விஷயமாக ஆகி மாமாங்கம் ஆகிவிட்டது. கமலஹாசனுன் சேரனும் முயன்றது போல் இனி சினிமாவை எப்படி ஒவ்வொரு வீட்டுக்கும் கொண்டு செல்வதும், திருட்டு விசிடியை முழுக்க ஒழிப்பதும் தான் உண்மையிலேயே பயன் தரும்.

ஹாலிவுட்டாக இருந்தாலும் சரி, கோலிவுட்டாக இருந்தாலும் சரி..வெளியாகும் படங்களில் 10% முதல் 15% வரை தான் நல்ல படங்களாக இருக்கின்றன. அது தான் நடைமுறை யதார்த்தம். எனவே விமர்சனங்களும் 15% தான் பாசிடிவ்வாக சொல்ல முடியும். மீதி நெகடிவ்வாகத் தான் இருக்கும். ஏன் பெரும்பாலான படத்தை திட்டுகிறாய் என்ற கேள்வியை எல்லா விமர்சகர்களும் சந்தித்துக்கொண்டே தான் இருக்கிறோம். இருப்பதைத் தானே சொல்ல முடியும்?

ஏறக்குறைய ஆறுவருடங்களுக்கு மேல் விமர்சகனாக இருக்கிறேன். குவைத்தில் ஒவ்வொரு வாரமும் முதல்நாளே தியேட்டருக்குப் போய் படம் பார்க்கிறேன். நான் படம் மட்டும் பார்ப்ப்பதில்லை, ஆடியன்ஸின் மனநிலையையும் சேர்த்தே கவனிக்கிறேன். எப்போது தியேட்டர் ஹவுஸ்ஃபுல் ஆகிறது, எப்போது கூட்டம் குறைய ஆரம்பிக்கிறது, எப்போது தியேட்டர் காலி ஆகிறது என்று ஆறு வருடங்களாக கவனித்து வருகிறேன்.
குறிப்பாக நடிகர் கார்த்தியின் வளர்ச்சியையும் வீழ்ச்சியையும் தியேட்டருக்குள் கண்ணாரக் கண்டிருக்கிறேன். 

பருத்தி வீரன் – பையா – நான் மகான் அல்ல என்று தொடர்ந்து சூப்பர் ஹிட் கொடுத்தார். மக்களுக்கு அவர் மேல் நம்பிக்கை வந்துவிட்டது. முதல் முன்று நாட்களுமே சிறுத்தைக்கு டிக்கெட் புக் ஆனது. அதுவும் சூப்பர் ஹிட்.

அடுத்த ரஜினி இவர் தான் என்றார்கள். கார்த்தியின் அடுத்த படமாக சகுனி வந்தது. தியேட்டர் ஹவுஸ்ஃபுல் தான். ஆனால் யாருக்கும் படம் திருப்தி தரவில்லை. அதற்கு அடுத்து அலெக்ஸ்பாண்டியன். மக்களுக்கு இன்னும் கார்த்தி மேல் நம்பிக்கை இருந்தது. அலெக்ஸ் பாண்டியனுக்கும் நல்ல ஓப்பனிங். தியேட்டர் ஹவுஸ்ஃபுல். ஆனால் இந்த படமும் தோல்வி. 

அடுத்து வந்தது ஆல் இன் ஆல் அழகுராஜா. பாதி தியேட்டர் தான் ஃபுல் ஆகியிருந்தது. சகுனி-அலெக்ஸ் பாண்டியன் கொடுத்த அனுபவத்தில் பாதி மக்கள் எஸ்கேப். மீதிப்பேரையும் அழகுராஜா வீட்டுக்கு அனுப்பி வைத்தார். இன்றுவரை இழந்துவிட்ட அந்த மார்க்கெட்டை மீட்க கார்த்தி போராடிக்கொண்டிருக்கிறார். நீண்ட இடைவெளிக்குப் பின் கார்த்தி – மணிரத்னம் காம்போவிற்கு தியேட்டர் ஹவுஸ்ஃபுல் ஆகியிருந்தது. அந்த மக்களின் நம்பிக்கையை எப்படி சிதைத்தார்கள் என்பதையும் கண்ணாரக் கண்டேன்!

இப்படித்தான் தற்போதைய சிஸ்டம் இயங்குகிறது. தியேட்டருக்குப் போவது என்று ஒரு மக்கள் கூட்டம் இருக்கிறது. எல்லோரும் வருவதில்லை. திருட்டு சிடி அல்லது ஆன்லைன் தான். தியேட்டருக்கே போகாத பல குடும்பங்களை நான் அறிவேன். 

தியேட்டருக்கு வரும் மக்களும், நடிகர் அல்லது இயக்குநர் மீது நம்பிக்கை இருந்தால் மட்டுமே முதல்நாள் தியேட்டருக்கு வருகிறார்கள். இல்லையென்றால் யாராவது இந்த படம் நன்றாக இருக்கிறது என்று சொன்னால் மட்டுமே அடுத்த நாள் டிக்கெட் புக் செய்கிறார்கள். ஆன்லைன் விமர்சனமோ அல்லது நண்பர்களின் பரிந்துரை இல்லாமல் காசையும் நேரத்தையும் செலவளிக்க இங்கே யாரும் தயாரில்லை.

ரஜினி – விஜய் –அஜித் – சிவகார்த்திகேயன் – விஜய் சேதுபதி ஆகியோரின் படங்கள் தான் இங்கே முதல் மூன்று நாட்களுக்கு ஹவுஸ்ஃபுல் ஆகின்றன. மீதி எல்லோருக்கும் பிழைப்பு ஓடுவது, விமர்சனங்களை வைத்துத் தான்.
ஊர் வாயை மூட முடியாது. டெக்னாலஜியுடன் போட்டிபோட முடியாது. இப்போது ஊர் வாய் டெக்னாலஜி வளர்ச்சியால் விமர்சனம் என்ற பெயரில் கொதிக்கிறது. இதை எதிர்த்து அடக்க முடியாது. 

எனவே மக்கள் விழிப்பதற்குள் அதிக தியேட்டரில் ரிலீஸ் செய்து சுருட்டிவிடுவோம் என்ற செயல்திட்டம் போன்றே, வீட்டுக்குள்ளும் எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் சினிமாவைக் கொண்டு சேர்ப்பது தான் இதற்கு இருக்கும் ஒரே வழி. மேலும் விளக்கத்திற்கு கமலஹாசனை விஷால் அணுகலாம்.
மேலும் வாசிக்க... "சினிமா விமர்சனம் மூன்று நாட்களுக்கு அப்புறம்…..அப்புறம்?"
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

0 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.