Wednesday, April 29, 2015

வாஞ்சிநாதன் I.T.Guy - with Interview Panel


டெக்கி: ஹலோ மிஸ்டர் வாஞ்சிநாதன். நான் டெக்கி...பி.எல்லா இருக்கேன். இவர் ஹெச்.ஆர்..நாம இண்டர்வியூவை ஸ்டார்ட் பண்ணலாமா?

வாஞ்சி: பண்ணுங்க சார்..அதுக்குத் தானே வந்திருக்கேன்.

டெக்கி: ஓகே..டெல் அபவுட் யுவர்செல்ஃப்.

வாஞ்சி: சார்..என்ன சார் இது..100 ரெசியூம் வாங்கி சலிச்சு, அதில என்னைக் கூப்பிட்டிருக்கீங்க. ரெசியூம் படிச்சிட்டுத்தானே கூப்பிட்டிருக்கீங்க? அப்புறம் டெல் அபவுட் யுவர் செல்ஃபான்னா எப்படி சார்?

ஹெச்.ஆர்: ஐ லைக் இட்.

வாஞ்சி: பார்த்தீங்களா...சார் லைக் போட்டுட்டாரு..நான் மனசுல பட்டதைத் தான் பேசுவேன் சார்.

டெக்கி: ஓகே..இதுக்கு முன்னாடி எங்கே, என்னவா ஒர்க் பண்ணீங்க?

வாஞ்சி: கொடுங்க..ரெசியூமைக் கொடுங்க..படிச்சிட்டுச் சொல்றேன்..என்னா சார் நீங்க..ரெசியூமையும் வாங்கி வச்சுக்கிட்டு எங்கே வேலை பார்த்தேன்னா...? படிச்சிட்டுத்தானே சார் சொல்ல முடியும்?

ஹெச்.ஆர்: அவர் கேட்கிறதுக்கு பதில் சொல்லுங்க.

வாஞ்சி: சொல்றேன் சார்..அதுக்குத்தானே வந்திருக்கோம்.

டெக்கி: ஜாவா படிச்சிருக்கிறதா போட்டிருக்கீங்க...அதுல..

வாஞ்சி: சார்..ஜாவா, ஆரக்கிள், சி++ன்னு பலது படிச்சிருக்கோம்..அதானே போட்டிருக்கோம்.

டெக்கி: இல்லை, ஜாவால..

வாஞ்சி: சார்..ஜாவால என்ன சார்?...ரெசுயூம்ல போட்டிருக்கேன்ல..அப்புறம் அதையே நோண்டி நோண்டிக் கேட்டா எப்படி சார்?

ஹெச்.ஆர்: பதில் சொல்லுங்க வாஞ்சி..

வாஞ்சி: சொல்றேன் சார்..அதுக்குத்தானே வந்திருக்கோம்..நீங்க கேட்கிறதுக்கு வந்திருக்கீங்க..நான் பதில் சொல்ல வந்திருக்கேன்..கேளுங்க..கேட்டாத்தானே சார் சொல்ல முடியும்?

டெக்கி: உஸ்ஸ்....!

ஹெச்.ஆர்: மிஸ்டர் வாஞ்சி, டெக்னிகலா நீங்க ஸ்ட்ராங்கான்னு தெரிஞ்சுக்கத்தான் இந்த இண்டர்வியூ.

வாஞ்சி: என்னா சார் நீங்க..ஆளைப் பார்த்தா தெரியலியா? இப்படியே ஓடி, சுவத்துல ஏறித் திரும்பி...அது ஒரு காலம் சார்.

ஹெச்.ஆர்: நான் சொன்னது டெக்னிகலா...

வாஞ்சி: உங்க பேச்சே சரியில்லையே...எந்த டிபார்ட்மெண்ட் நீங்க?

ஹெச்.ஆர்: ஹெச்.ஆர்!

வாஞ்சி: ஹெச்.ஆருக்கு இங்க என்ன சார் வேலை? டெக்கி சார் ஒரு டெக்னிகல் பெர்சன்..நான் ஒரு டெக்னிகல் பெர்சன்..நாங்க டெக்னிகலாப் பேசிக்கிட்டு இருக்கோம்..நீங்க எதுக்கு இங்கே?

ஹெச்.ஆர்: நான் ஒன்னும் சும்மா இல்லை..அட்டிடியூட் பார்க்க உட்கார்ந்திருக்கேன்.

வாஞ்சி: ஆட்டிக்கிட்டே பார்க்க உட்கார்ந்திருக்கிறயா? சார்..நான் எவ்ளோ டீசண்டாப் பேசிக்கிட்டு இருக்கேன்..இந்தாளு எப்படிப் பேசுறான் பாருங்க சார்..அப்படியே ஃபைலைத் தூக்கி அடிச்சிடுவேன்..ஓடிப்போயிடு...சார், நீங்க கேளுங்க சார்.

டெக்கி: ஙே...சே...சே..

வாஞ்சி: என்ன சார்..கேளுங்க சார்..கேட்கத்தான் நீங்க வந்திருக்கீங்க..பதில் சொல்லத்தான் நான் வந்திருக்கேன்.

டெக்கி: (மறுபடியும் முதல்ல இருந்தா..ம்ஹூம்).....சேலரி என்ன எதிர்பார்க்கிறீங்க?

வாஞ்சி: சார்...என்னா சார் கேட்கிறீங்க...மாசம் பத்து லட்சம் கேட்டா, கொடுப்பீங்களா?

டெக்கி: ம்ஹூம்..கம்பெனி பாலிசி ஒத்துக்காது.

வாஞ்சி: கம்பெனி பாலிசி என்ன சார்..கம்பெனி பாலிசி..உங்க ஓனரு ஒத்துக்க மாட்டான்..அதானே..சும்மா சொல்லுங்க சார்..ஏன், ஓனர்னா பயமா? உங்க ஓனர் என்ன கையை வெட்டிடுவானா?

டெக்கி: வாஞ்சீ, போதும்...ஐ ரிசைன் மை ஜாப்.

வாஞ்சி: என்னா சார் நீங்க..இங்கிலீஸ்கூடத் தெரியலை உங்களுக்கு. அதை அப்படிச் சொல்லக்கூடாது...யூ ஆர் செலக்டேட்ன்னு சொல்லணும். எங்க சொல்லுங்க!

டெக்கி: அய்யோ....ராமா!
மேலும் வாசிக்க... "வாஞ்சிநாதன் I.T.Guy - with Interview Panel"
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

3 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.

Tuesday, April 28, 2015

ராஜ தந்திரம் - சினிமா அலசல்

'திருடுவது எப்படி?' எனும் கான்செப்ட்டில் சூது கவ்வும் அடைந்த வெற்றி, மேலும் பலரையும் அத்தகைய நெகடிவ் கான்செப்ட்டில் படங்களை எடுக்கத் தூண்டியது. அப்படி வந்த படங்களில் மூடர்கூடம் மட்டுமே கவனிக்கத்தக்க படமாக இருந்தது, சரபம் மோசமான படமாக அமைந்தது. இப்போது, கவனிக்க வைக்கும் 'இரண்டாம் தர'ப் படமாக ராஜ தந்திரம்.

பைக் எபிசோட்:
சூது கவ்வும் போன்றே எதுபற்றியும் கவலைப்படாமல் திருடுவது/ஏமாற்றுவதைப் பிழைப்பாகக் கொண்ட ஹீரோ & குழு. அவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்று விளக்க, ஒரு அப்பாவியை ஏமாற்றி பைக் விற்கும் சீன். படத்தின் மிகப்பெரிய, முதல் சறுக்கலே இது தான்.

சூது கவ்வும் மாதிரிப் படம் எடுக்க நினைப்பது தப்பில்லை. ஆனால் அந்தப் படத்தில் ஹீரோ கேரக்டரை எப்படி வடிவமைத்திருந்தார்கள், ஏன் திருடனாக இருந்தும் ஹீரோவை ரசித்தோம் என்பதைக் கவனத்தில் கொள்ளாமல் இங்கே சொதப்பியிருக்கிறார்கள்.

சூது கவ்வும் செட்டப் பகுதியை யோசித்தால், நம் நினைவுக்கு உடனே வருவது கடத்திய குழந்தைக்கு ஐஸ்க்ரீம் வாங்கிக்கொடுத்து, பத்திரமாக இறக்கிவிடும் சீன் தான். அது ஒரு புத்திசாலித்தனமான 'Save the Cat'. எம்.ஜி.ஆர், ரஜினி என ஹீரோக்கள் வில்லனாக/ஆன்ட்டி ஹீரோவாக நடித்த படங்களை எல்லாம் எடுத்துப் பார்த்தால், அந்த கேரக்டர்மேல் நமக்கு சிறுதும் வெறுப்பு வந்துவிடக்கூடாது எனும் கவனத்துடன் அவை வடிவமைக்கப்பட்டிருப்பது புரியும். (உ-ம்: குடியிருந்த கோயில், பில்லா, சதுரங்க வேட்டை).

ஏற்கனவே எனக்கு அந்த ஹீரோவைப் பிடிக்கவில்லை...விஜய் சேதுபதியை விட்டுத்தள்ளுங்கள், சதுரங்க வேட்டை நட்டி அளவுக்குக்கூட  ப்ஸ்க்ரீன் பிரசன்ஸ் இல்லை. இப்படி இருக்கும்போது, படம் பார்க்கும் ஆடியன்ஸுக்குப் பிடிக்கும் ஒரு சாமானியன் / அப்பாவியை ஏமாற்றுவதுடன் படம் ஆரம்பிக்கிறது. ஒரு பெரிய வெற்றிப்படமாக ஆகியிருக்க வேண்டிய ராஜதந்திரம் சொதப்பியது இங்கே தான். அடுத்து பரபரப்பான கோல்டு பிஸ்கட் சீகுவென்ஸ் வரும்வரை,படத்துடன் ஒன்ற முடியாமல் வெறித்துப் பார்த்தபடி அமர்ந்திருக்கிறோம்.

கோல்டு சீகுவென்ஸ்:
10 லட்ச ரூபாயைத் திருடும் எபிசோடில் திரைக்கதையாசிரியரின் புத்திசாலித்தனம் தெரிந்தது. பையை மாற்ற முயல, அது சொதப்ப, கூடவே ஹீரோயினும் ஏமாற்றப்பட்ட அப்பாவியும் அங்கே வந்து சேர, வில்லன்கள் ஹீரோவைப் புரட்டி எடுக்க, பையில் இருப்பது 10 லட்சம் அல்ல என்று தெரிய வர..செம சீன்.

இந்த முயற்சி அவர்களைப் பெரிய ஆபத்தில் சிக்க வைக்க, படம் அதன்பின் வேகமெடுத்துவிடுகிறது.

ஹீரோயின் - நரேன் எபிசோட்:

ஹீரோயினுக்கு நரேன் வில்லன்..இப்போது ஹீரோவுக்கும் நரேன் வில்லன் என்றாக, செம ட்விஸ்ட்டாக வில்லாதி வில்லன் 'பட்டியல் சேகர்' அறிமுகம் ஆகிறார். ஒரு நகைக்கடை அண்ணாச்சியைப் பார்த்த எஃபக்ட்டை அனாயசமாக மனிதர் கொண்டுவந்துவிடுகிறார். ஹீரோ-ஹீரோயின் -நரேன் என எல்லோருக்கும் பொது எதிரி அவர் தான் என ஆகும்போது, ஹீரோவே நரேனின் திட்டங்களை வில்லனிடம் உளறி வைத்திருப்பது நல்லவொரு கான்ஃப்ளிக்ட்.

நம் எதிர்பார்ப்புகளை எல்லாம் அடித்து நொறுக்கியபடியே, சீன்கள் நகர்கின்றன. 'எங்கிட்டுப் போனாலும் கேட் போட்ட' கதையாகப் படம் நகர்வது தான் சுவாரஸ்யம்.

ஜூவல்லரி எபிசோட்:
நம்ப முடியாத விஷயத்தையும் நம்ப்புற மாதிரிச் சொல்வது தான் ஒரு திரைக்கதையாசிரியனின் திறமை. அதை இங்கே ஏ.ஜி.அமித் அட்டகாசமாகச் செய்திருக்கிறார். கொள்ளையடிக்கப் போவதை முன்கூட்டியே நகைக்கடை அதிபரான வில்லனுக்குச் சொல்லிவிட்டுச் செய்யும் இரண்டாம்பாதி அதகளம். டைமிங்கை மட்டுமே நம்பி போடப்படும் திட்டம்..ஒரு நிமிடம் லேட் ஆனாலும் சொதப்பி விடும் ஆபத்து..இது நமக்குப் புரிந்ததும், சஸ்பென்ஸ் எகிறிவிடுகிறது.

ஒரு கல்...பல மாங்காய்கள்:
ஹீரோ -நரேன் - அய்யர்
கோல்டு பார்ட்டி மணி
பட்டியல் சேகர் - மருமகன்
போலீஸ்

இந்த நான்கு குரூப்பும் செய்யும் செயல்களை ஒரே நேரத்தில் சொல்லியபடி நகர்கிறது படம். பாராட்டப்பட வேண்டிய விஷயம், இவை எங்கேயும் குழப்பாமல் தெளிவாகச் சொல்லப்பட்டிருப்பது. ஏறக்குறைய எல்லோருமே அறிமுகமற்ற நடிகர்கள் தான். ஆனாலும் நாம் குழம்பாமல் இருக்கிறோம் என்றால், அது திரைக்கதை ஆசிரியரின் திறமை தான்.

திருஷ்டி-2:
படத்தின் ஆரம்ப பைக் எபிசோட் போன்றே சொதப்பலான இன்னொரு விஷயம், கிளைமாக்ஸ். ஹீரோ திடீரெனத் திருந்துவது ஒரு கொடுமை என்றால், அதைவிடக் கொடுமை அந்த தங்க பிஸ்கட்களை போலீஸிடம் ஒப்படைப்பது. அவை கவர்ன்மென்ட் சொத்து அல்ல..கடத்தல்காரர்களின் சொத்து. அவற்றை ஹீரோ போன்ற ஒரு கேரக்டர் தானே எடுத்துக்கொள்வது தான் பொருத்தமாக இருந்திருக்கும். பிட்டுப்படங்களில் வருவது போல், கிளைமாக்ஸில் குத்து குப்புசாமி திடீரென கருத்து கந்தசாமி ஆவது சகிக்கவில்லை.

இதையெல்லாம்விடப் பெருங்கொடுமை, ஆம்வே போன்ற எம்.எல்.எம்மை தீர்வாகப் படம் முன்வைப்பது. எல்லா கோல்மால்களையும் மூட்டை கட்டும் ஹீரோ, இந்த சதுரங்க வேட்டையை நல்வழியென சீரியஸாக நம்புவது என்ன லாஜிக் என்று தெரியவில்லை.

மொத்தத்தில் ஆரம்ப செட்டப் போர்சனையும் கிளைமாக்ஸ் போர்சனையும் நீக்கிவிட்டுப் பார்த்தால், பாராட்டப்பட வேண்டிய படம்...ராஜ தந்திரம்.

நன்றி : இந்த படத்தைப் பரிந்துரைத்த நண்பர் வினையூக்கி செல்வாவிற்கு!
மேலும் வாசிக்க... "ராஜ தந்திரம் - சினிமா அலசல்"
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

0 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.

Saturday, April 18, 2015

ஓ காதல் கண்மணி - திரை விமர்சனம்

அதாகப்பட்டது..:
அலைபாயுதே எனும் ஹிட் கொடுத்து 15 வருடங்கள் ஆகிவிட்ட சோகச்சூழ்நிலை. கூடவே எங்கு சென்றாலும் ‘அலைபாயுதே மாதிரி ஒரு படம் கொடுங்க சார்’ எனும் நச்சரிப்பு. இதையெல்லாம் கண்டு வெகுண்டெழுந்த மணிரத்னம், மீண்டும் ஒரு லவ் ஸ்டோரியுடன் களமிறங்கியுள்ளார். கூடவே ஏ.ஆர்.ரஹ்மானும், பி.சி.ஸ்ரீராமும் சேர்ந்துகொள்ள, வழக்கம்போல் மணிரத்னம் படத்தின் எதிரியான ’எதிர்பார்ப்பு’ எகிறிவிட்டது. மணியின் கடைசி பிரம்மாஸ்திரமான ‘அலை பாயுதே’-வைக் கையில் எடுத்த பின்பாவது, ஜெயித்தாரா?
ஒரு ஊர்ல :
ஹீரோவுக்கும் ஹீரோயினுக்கும் கல்யாணம் என்றாலே பிடிக்காது. (காரணம், கீழே சொல்கிறேன்!). எனவே லிவிங் டுகெதராக வாழ முடிவு செய்கிறார்கள். அந்த முடிவில் ஜெயித்தார்களா? அல்லது லிவிங் டுகெதர் அபத்தம் உணர்ந்து, கல்யாணம் எனும் ஓல்டு ஃபேசனுக்கே திரும்பினார்களா என்பதே கதை. (ஆக்சுவலி இது தான் கதைன்னு மணிரத்னத்துக்கே தெரியாது. படம் முடிஞ்சு, இரண்டு மணி நேரம் நானா யோசிச்சுக் கண்டுபிடிச்சேன்! படத்தில் வேறு கதைகூட இருக்கலாம், ஜாக்ரதை!)

உரிச்சா:
ஹிட் படம் கொடுத்து 15 வருடங்கள் ஆனாலும், மணி மீதான கிரேஸ் கொஞ்சமும் குறைந்துவிடவில்லை. இண்டர்வெல்வரை, படத்தில் இருப்பது காதல்..காதல்..காதல் மட்டுமே. மணி எப்போதுமே ரொமான்ஸாகக் கதை சொல்வதில் மன்னன். இதிலும் அப்படியே. படம் ஆரம்பித்த ஐந்து நிமிடங்களில் வரும் சர்ச் சீனில் துல்கரும் நித்யாவும் பேசிக்கொள்ளும் காட்சியில் இருந்து ஆரம்பிக்கிறது இளமைத் துள்ளல். வாவ்!

மணிரத்னத்தின் வயது 58 என்றும், அவர் மனைவி சுகாசினி என்றும் விக்கிபீடியா சொல்கிறது. இருந்தும், அவரிடம் இருந்து இப்படி ரகளையான ரொமான்ஸ் சீன்கள் வருகிறது என்பதை, நம்பவே முடியவில்லை. வேலைக்காக மும்பை வரும் துல்கர், நித்யா மேனனைப் பார்க்கிறார். இருவருக்கும் திருமணத்தில் நம்பிக்கை இல்லை. ஆனால் இருவருக்குமே ஒருவரையொருவர் பிடித்துப்போகிறது. அடிக்கடி சந்திக்கிறார்கள். நித்யா போகும் இடமெல்லாம் துல்கரும் போகிறார். ஏறக்குறைய இண்ட்ர்வெல்வரை இது தான். ஆனால் அத்தனை சீன்களும் ஃப்ரெஷ்ஷாக இருக்கிறது.

அகமதாபாத்தில் இருவரும் தங்கும் சீனில் ஒளிப்பதிவும் இசையும் சேர்ந்து நம்மைப் ’பறந்து செல்ல’ வைக்கின்றன. ஒரு பக்கம் இந்த ஜோடியின் இளமைத் துள்ளல், இன்னொரு பக்கம் ஹவுஸ் ஓனரான பிரகாஷ்ராஜுக்கும் அவரது ‘அல்சைமர்’ மனைவிக்கும் இடையிலான முதிர்ச்சியான காதல். இரண்டு ஜோடிகளும் நம் மனதில் நிறையும்போது, ‘கல்யாணம் வேண்டாம்...லிவிங் டுகெதராக வாழ்வோம்’ என்று முதல்ஜோடி முடிவெடுக்கிறது. ஏன் கல்யாணம் வேண்டாம் என்று சொல்கிறார்களென நாம் பலவாறு யோசித்ததில் கிடைத்த பதில், ***க்கொழுப்பு தான்.

ஹீரோயினுக்காவது ஒரு சப்பைக்காரணம் இருக்கிறது. ஹீரோவுக்கு அதுவும் இல்லை. ’படிக்கணும், கல்யாணமே(!) வேண்டாம்....பில்கேட்ஸ் மாதிரி ஆகணும், அதனால் கல்யாணமே(!) வேண்டாம்’ என்று ஹீரோ-ஹீரோயின் முடிவெடுக்கிறார்கள். ‘ஏம்ப்பா..படிக்கிறதுக்கும் பில்கேட்ஸ் மாதிரி ஆகறதுக்கும் கல்யாணத்துக்கும் என்னய்யா சம்பந்தம்? படிச்சிட்டுக் கல்யாணம் பண்ணு, இல்லேன்னா கல்யாணம் பண்ணிட்டுப் படி’ என சி செண்டர் ரசிகன்கூட இண்டர்வெல்லுக்கு முன்பே சொல்வதை, ஏகப்பட்ட கும்தலக்கடி கும்மா செய்து கிளைமாக்ஸில் ஹீரோவும் ஹீரோயினும் சொல்கிறார்கள்.

ஹீரோவின் கடுமையான அண்ணன் என்று அறிமுகமாகும் ஒரு சப்பை ஆள்கூட கல்யாணத்திற்கு ஒத்துக்கொள்கிறார். பயங்கர வில்லியாக அறிமுகமாகும் கோடீஸ்வரியான நித்யாவின் அம்மாவும் கல்யாணம் செய்ய ஒத்துக்கொள்கிறார். பிரகாஷ்ராஜும் கல்யாணம் செஞ்சுக்கோங்கப்பா என்று கெஞ்சுகிறார். ஆடியன்ஸும் ‘ங்கொய்யால...என்னதாண்டா பிரச்சினை உங்களுக்கு? கல்யாணம் செஞ்சு தொலைங்கடா’ என்று திட்டுகிறார்கள். ம்ஹூம்..அதெப்படி?..’கிளைமாக்ஸ் இன்னும் வரலைல்ல’ என அந்த அருமையான ஜோடி நிறுத்தி, நிதானமாக யோசித்து முடிவு செய்கிறார்கள்..கூடவே நம்மையும் செய்கிறார்கள்..யப்பா!

அலைபாயுதேவில் ஹவுஸ் ஓனர் அழகம்பெருமாள் கேரக்டர் + அர்விந்தசாமி-குஷ்பூ ஜோடிகளை ஜெராக்ஸ் எடுத்து, பிரகாஷ்ராஜ் ஜோடியை உருவாக்கியிருக்கிறார்கள். அந்த ஜோடி அறிமுகமாகும்போதே, கிளைமாக்ஸ் இந்த ஜோடியை வைத்துத்தான் என்று தெரிந்துவிடுகிறது. எனவே கிளைமாக்ஸில் ஹீரோ-ஹீரோயின் பரபரப்பாக அங்கே இங்கே ஓடினாலும், ஒன்றும் வேலைக்காகவில்லை.

அலைபாயுதேவில் ’காதல் என்பது கல்யாணத்தில் முடியும் கலர் கனவல்ல.’ எனும் செய்தி அழுத்தமாகச் சொல்லப்பட்டிருக்கும். ஆனால் இங்கே லிவிங் டுகெதரின் பிரச்சினைகள் எதுவும் பேசப்படவேயில்லை. ’இரண்டுபேர் விரும்புகிறார்கள், ஒன்றாகத் தங்குகிறார்கள், ஜல்சா செய்கிறார்கள், கிளைமாக்ஸில் கல்யாணம் செய்ய முடிவெடுக்கிறார்கள்’ என்று தட்டையாகப் படம் நகர்வது தான் கொடுமை.

இண்டர்வெல்வரை, படம் ஒரு கலர்ஃபுல் கனவு. பி.சி.ஸ்ரீராம், ஏ,ஆர்,ரஹ்மான், மணிரத்னம் மூவரும் பட்டையைக் கிளப்பியிருக்கிறார்கள். அதன்பின், படம் ஒரு கொடுங்கனவு!

மொத்தத்தில், முதல்பாதி............ஓகே இல்லை, ..........பெஸ்ட்.
இரண்டாம்பாதி...கண்மணி இல்லை, ...சுகாசினி.

துல்கர் சல்மான்:
’வாயை மூடிப் பேசவும்’ படத்தில் மொக்கையாக வந்த மம்முட்டியின் வாரிசு. இதில் பெண்கள் ரசிக்கும் வண்ணம் அட்டகாசமாக வருகிறார். செம ஜாலியான கேரக்டர். பல இடங்களில் மாதவன் ஞாபகம் வருவதைத் தவிர்க்க முடியவில்லை. இதுவே இவருக்கு முதல் படமாக இருந்திருக்க வேண்டும். இனி ரொமாண்டிக் ஹீரோவாக ஒரு ரவுண்டு வருவார்.

நித்யா மேனன்:
’ஜேகே’ பார்க்கும்போதே, இந்தப் பெண்ணிற்கு ஒரு நல்ல படம் அமைந்தால் கலக்கிவிடுவார் என்று தோன்றியது. இதில் அதை நிரூபித்திருக்கிறார். உயரம்தான் அவ்வப்போது இடிக்கிறது. ஆனாலும் அழகும் நடிப்புத்திறமையும் கலந்த நடிகை. அந்தக் கண்களே அவர் நினைப்பதைச் சொல்லிவிடுகின்றன. துல்கருக்கு இணையாக, உற்சாகமான பெண்ணாக வருகிறார். அதிலும், தான் கர்ப்பமாக இருப்பதாக துல்கரை கலங்க வைக்கும் சீனில் பின்னிவிட்டார். இரண்டாம்பாதியில் சீரியஸ் சீன்களில் அவர் நன்றாக நடித்தாலும், நாமும் ‘சீரியஸ்’ கண்டிசனில் இருப்பதால் ரசிக்க முடியவில்லை.

பிரகாஷ்ராஜ் - லீலா:

ரொம்ப நாளைக்கு அப்புறம், பிரகாஷ்ராஜ். இவர் எப்படி நடிப்பார் என்பதைச் சொல்ல வேண்டியதில்லை. ஆனால் இவருக்கு ஜோடியாக வரும் லீலா என்பவரின் நடிப்பும் கேரக்டரைசேசனும் சூப்பர். இருவரும் பேசிக்கொள்ளும் வசனங்களும், இருவருக்கிடையிலான அன்பும் சூப்பர். கிளைமாக்ஸ்வரை நமக்கு ஆறுதல் தருவது, இந்த ஜோடி தான்.

நெகடிவ் பாயிண்ட்ஸ்:
- இரண்டாம்பாதி. உண்மையில் என்ன செய்வது எனத் தெரியாமல் சுற்றோ சுற்றென்றி சுற்றியிருக்கிறார்கள். முதல்பாதியில் இருந்த மேஜிக் எல்லாம் காணாமல் போய், ஆடியன்ஸின் பொறுமையை முடிந்தவரை சோதிக்கிறார்கள்.
- இரண்டு பேர் லிவிங் டுகெதர் வாழ முடிவெடுக்கிறார்கள் என்றால், ஏதாவது ஒரு வலுவான காரணம் வேண்டும். கொழுப்பு தான் காரணம் என்றால், அந்தக் கேரக்டர்கள்மீதே வெறுப்பு வந்துவிடுகிறது. ஏற்கனவே இதுவொரு சென்சிடிவ்வான விஷயம். இதில் ’ஜஸ்ட் லைக் தட்’ என லிவிங் டு கெதரில் குதிப்பதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
- கிளைமாக்ஸில் திருந்துவதற்கும் வலுவான காரணம் இல்லை. பிரகாஷ்ராஜ் ஜோடியைப் பார்த்துத் திருந்துகிறார்கள் என்றால், படத்தின் ஆரம்பத்தில் இருந்தே அந்த ஜோடி இருக்கிறதே?
- தன் ட்யூனைத் தானே காப்பியடிக்கிற ஹாரிஸ் ஜெயராஜ் மாதிரி மணிரத்னம் ஆகிட்டாரே!

பாசிடிவ் பாயிண்ட்ஸ்:


- மணிரத்தினத்தின் ரொமாண்டிக் முதல்பாதி ஸ்க்ரிப்ட்
- நித்யாமேனன்..........வாவ்!
- அழுக்கான மும்பையைக்கூட அழகாகக் காட்டும் பி.சி.ஸ்ரீராமின் கேமிரா. ஆர்க்கிடெக்ட் பற்றி வரும் வசனங்களைவிட, ஷாட்கள் அசத்தல்.
- ஏ.ஆர்.ரஹ்மானின் துள்ளலான இசையில் மெண்டல் மனதில், நமநம, பறந்து செல்லவா மூன்றும் சூப்பர். மற்றவை மனதில் ஒட்டவில்லை. பிண்ணனி இசையில் இளமைத்துள்ளல் அதிகம். இன்னொருவரும் பிண்ணனி இசையில் ரஹ்மானுடன் இணைந்திருக்கிறார். பெயர் மறந்துவிட்டது.
- பிரகாஷ்ராஜ்+லீலா ஜோடி

ரேட்டிங்:

                       2/5

மேலும் வாசிக்க... "ஓ காதல் கண்மணி - திரை விமர்சனம்"
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

5 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.

Monday, April 13, 2015

திரைக்கதை சூத்திரங்கள் – II-பகுதி 41

இந்திய உணவுகளைப் போன்றே, இந்திய சினிமாக்களுக்கும் உரிய சிறப்பம்சம், மசாலா.

மசாலா என்ற வார்த்தையே சமீபகாலத்தில் மரியாதை இழந்துவிட்டாலும், மசாலா இல்லாமல் நம் சினிமாக்கள் இல்லை. இங்கே மசாலா என்று எதைச் சொல்கிறோம்?

ஒரே படத்தில் ஆக்சன், காமெடி, காதல், சென்டிமென்ட் என அனைத்துமே மிக்ஸ் செய்யப்பட்ட கதைகளையே மசாலாக்கதைகள் என்கிறோம். இந்த அளவுகோலின்படி வந்தமாளிகை-சுறா-ஆரண்ய காண்டம் மூன்றுமே மசாலாப்படங்கள் தான். மசாலாவின் அளவு தான் வேறுபடும். ஹீரோயிசப் படங்கள் மட்டும் தான் மசாலாப்படங்கள் எனும் கருத்து சமீபகாலமாக சொல்லப்படுகிறது. உண்மையில் அது சரியான கருத்து அல்ல.

மசாலா என்பது சினிமாவில் மட்டுமல்லாது நமது புராணக்கதைகளில் ஆரம்பித்து இலக்கியங்கள்வரை இருக்கின்ற ஒரு விஷயம். மசாலாவுக்கென்று நம் வாழ்க்கையில் ஒரு குறிப்பிட்ட இடம் இருக்கிறது. உங்கள் வாழ்க்கையில் மோசமான காலகட்டம் என்று நீங்கள் கருதும் காலத்தை நினைவில் கொண்டுவாருங்கள். அது, ஒருவேளை நீங்கள் வேலையில்லாமல் அவமானத்துடன் அலைந்த காலமாகக்கூட இருக்கலாம். அந்த நேரத்தில், நீங்கள் ஒருநாள்கூட சிரிக்கமால் அலைந்தீர்களா? அந்தச் சமயத்தில் துக்கத்தைத் தவிர வேறு உணர்வுகளுக்கே இடமில்லையா? அப்போதும் நீங்கள் சிரித்திருப்பீர்கள், எங்காவது பிரியாணியை வெளுத்துக்கட்டியிருப்பீர்கள், யார் கண்டது, காதலில்கூட விழுந்திருக்கலாம்!

ஏன் அப்படி? ஏனென்றால், வாழ்க்கையே அப்படித்தான். வேலை இல்லைஎனும் துக்க உணர்ச்சி ஓங்கியிருந்தாலும், கூடவே மற்ற உணர்வுகளுக்குரிய காரியங்கள் நடந்துகொண்டே தான் இருக்கும். ஒரு படைப்பு என்பது வாழ்க்கையைப் பிரதிபலிப்பது தான். எனவே தான் நம் முன்னோர், கதை சொல்வதிலும் இதே பேட்டர்னைக் கொண்டுவந்தார்கள். ஒரு கதை.கூத்து/நாடகத்தைப் பார்க்கும் ஒருவனுக்கு, ஒரு வாழ்க்கையைப் பார்த்த ஃபீலிங் வரவேண்டும் என்றால் சந்தோசம், துக்கம், கோபம் உள்ளிட்ட எல்லா உணர்வுகளுக்கும் அவன் ஆட்பட வேண்டும். எனவே ஒரு கலையை எப்படிப் படைப்பது என்பதற்கு பல்வேறு இலக்கணங்கள் உருவாக்கப்பட்டன. அவற்றைத் தொகுத்து, ரத முனிவர் எழுதிய நூல் தான் நாட்டிய சாஸ்திரம்.

அந்த நூல் குறிப்பாக பரத நாட்டியத்திற்காக உருவாக்கப்பட்டது என்றாலும், ஒரு படைப்பில் இருக்க வேண்டிய சுவைகள் பற்றி தெளிவான சித்திரத்தைக் கொடுத்தது. எட்டு சுவைகள் ஒரு கலைப்படைப்பில் இருக்க வேண்டும் என்று பரத முனிவர் வகுத்தார். பின்னர், அது ஒன்பது சுவையாக நவரசங்களாக ஆக்கப்பட்டன.

அந்த நவரசங்கள் : அன்பு/காதல், நகைச்சுவை, துக்கம், கோபம், வீரம், பயம், அருவறுப்பு, வியப்பு, அமைதி. (இந்தப் பட்டியலின் மாறுபட்ட வெர்சன்களும் புழக்கத்தில் உள்ளன.!)

ஹாலிவுட் மிஸ் பண்ணுவது இதைத்தான்..இரண்டே உணர்ச்சிகள், ஒன்று ஏ ஸ்டோரிக்கு..ஒன்று பி ஸ்டோரிக்கு என்று கதையை முடித்துவிடுகிறார்கள். Die-Hardபோன்ற படங்கள் இவற்றிற்கு நல்ல உதாரணங்கள். கொஞ்சம் யோசித்தாலே, இத்தகைய படங்கள் உள்ளீடற்ற, எலும்புக்கூடுகள் என்பது புரியும்.

சாப்பாட்டில்கூட ஃபுல் மீல்ஸ் என்று வெளுத்துக்கட்டும் தமிழனிடம் இரண்டே இரண்டு சுவைகளை மட்டும் கொடுத்தால் என்ன செய்வா? 'என்னய்யா படம் இது..சவசவன்னு' என்று தான் விமர்சனம் செய்வான். முன்பு ஹாலிவுட்கூட நன்றாகத்தான் இருந்தது. Jaws, Starwars போன்ற படங்களின் வெற்றியால் எப்போது சர்வதேச மார்க்கெட் என்று உருவானதோ, அப்போதே ஹாலிவுட் படங்கள் தன் ஆன்மாவை இழந்தன.

அதே நேரத்தில் சிட் ஃபீல்ட் போன்றோர் திரைக்கதை வித்தையைப் பொதுவில் வைக்க, ஹாலிவுட்டிற்கு திரைக்கதை எழுதுவது என்பது வெறும் டெக்னிகல் விஷயமாக மாறிப்போனது. படைப்பாளிகளின் கையில் இருந்த சினிமா, டெக்னினிஷியன்களின் கையில் சிக்கியது. வாழ்க்கையில் சொந்தமாக ஒரு சிறுகதைகூட எழுதியிராத ஆட்கள் எல்லாம், ஆக்ட்-1 ,ஆக்ட்-2 என திரைக்கதையைப் பிரித்து மேய ஆரம்பித்தார்கள். ஏகப்பட்ட திரைக்கதைப் பயிற்சி வகுப்புகள் ஆரம்பிக்கப்பட்டன. ஒட்டுமொத்த விளைவாக, உள்ளீடற்ற டைம்-பாஸ் மூவிகள் உருவாக்கப்பட்டன. சினிமா என்பது டெக்னிஷியன்களும் வியாபாரிகளும் உருவாக்கும் இங்கிபிங்கி பாங்கியாக ஆகிப்போனது. அதன்விளைவை சமீபத்தில் வந்த Fast & Furious 7 வரை பார்க்கலாம்.

அதிர்ஷ்டவசமாக ஐரோப்பிய சினிமாக்களும் ஆசிய சினிமாக்களும் இந்தக் கொடுமையில் இருந்து தப்பித்தன. ஹாலிவுட்டில் பெயர் பெற்ற பல நல்ல படைப்பாளிகள், ஐரோப்பியர்களாக இருப்பதைக் காணலாம். எனவே பத்து ஹாலிவுட் படங்களும் பத்து ஆங்கில திரைக்கதைப் புத்தகங்களையும் படித்தால், தமிழில் திரைக்கதை எழுதிவிடலாம் என்று நினைத்தால்...சாரி ப்ரதர்.

நம் மக்கள் நவரசங்களுடன்கூடிய கதைக்குப் பழக்கப்பட்டவர்கள். இந்த மண்ணுடன் பின்னிப்பிணைந்த, அவர்களின் மனங்களுடன் உறவாடும் கேரக்டர்களையும் படைப்புகளையும் படைத்தால் மட்டுமே இங்கே ஜெயிக்க முடியும். இதற்கு சமீபத்திய உதாரணம், வேலையில்லாப் பட்டதாரி.
உலகத்தில்  உள்ள எந்த திரைக்கதை விதிகளுக்கும் பொருந்தாத படம். ஆனால் ஒரு எஞ்சினியரிங் பட்டதாரியின் வாழ்க்கையைச் சொன்ன படம்.

வி.ஐ.பி.மாதிரித் திரைக்கதை எழுதுவது ரிஸ்க்கான விஷயம். எந்தவகையிலும் சேராத குப்பையாக ஆகவே வாய்ப்பு அதிகம். ஆனால் வி.ஐ.பி.யில் இருக்கும் வாழ்க்கையையும், இதுவரை படித்த 'ஸ்ட் ரக்சரையும்' மிகச்சரியாக இணைத்துவிட்டீர்கள் என்றால், நீங்கள் தான் திரைக்கதை மன்னன்.

துப்பாக்கி படத்தை சீன் பை சீன் எழுதிய முந்தைய பதிவுக்குப் போய்ப் பாருங்கள். பி ஸ்டோரியும் காமெடியும் எப்படி படம் முழுக்க தூவப்பட்டிருக்கிறது என்று பாருங்கள். ஒரு நல்ல மசாலாப் படத்திற்கு அதுவொரு நல்ல உதாரணம்.

இப்போது நீங்கள் எழுதிக்கொண்டிருக்கும் கதை, வெறும் ஹாலிவுட் எலும்புக்கூடா அல்லது தமிழ் சினிமாவா என்று சரிபார்த்துக்கொள்ளுங்கள்.

 (தொடரும்)
மேலும் வாசிக்க... "திரைக்கதை சூத்திரங்கள் – II-பகுதி 41"
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

0 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.

Monday, April 6, 2015

முதல் மரியாதை - தமிழில் ஒரு உலக சினிமா

 உலகசினிமா:
உலகம் முழுக்க பல்வேறு மொழிகளில் பல்லாயிரம் சினிமாக்கள் படைக்கப்பட்டுக்கொண்டே இருக்கின்றன. அவற்றில் சில முத்துக்கள் மட்டுமே உலக சினிமா என்று கொண்டாடப்படுகின்றன. உலக சினிமா என்பதற்கான வரையறை சிக்கலானதாக இருந்தாலும், எளிமையாகப் பின்வருமாறு சொல்லலாம்

தன் சொந்த மக்களின் வாழ்க்கையை யதார்த்தமாக முன்வைக்கின்ற, அதே நேரத்தில் மனித வாழ்வின் அபத்தத்தை/மேன்மையை நமக்கு உறைக்கின்றாற் போன்று சொல்கின்ற, இதுவரை நாம் தரிசிக்காத கோணத்தில் வாழ்வைப் பேசுகின்ற சினிமாவே உலக சினிமா ஆகின்றது.  

அந்த வகையில் தமிழில் வந்த முக்கியமான படங்கள் பற்றி www.tamilss.com-ல் தொடராக எழுதினேன். அவை இனி இங்கே பதிவிடப்படும். திரைக்கதை தொடரைப் படிப்பவர்கள் இதைத் தவறவிட வேண்டாம்.

           முதல் மரியாதை - தமிழில் ஒரு உலக சினிமா
 
ல்லா இடத்திலும் தான் இருக்க முடியாது என்பதாலேயே இறைவன் தாயைப் படைத்தான். இறுதிவரை தாய் உடன்வர முடியாது என்பதாலேயே மனிதன் தாரத்தையும் படைத்துக்கொண்டான். தாயன்பும், அதற்கு நிகரான தாரத்தின் அன்பும் எல்லாருக்கும் கிடைத்துவிடுவதில்லை. சில அதிர்ஷ்டசாலிகளுக்கு மட்டுமே இரண்டும் சரியாக அமைந்துவிடுகிறது. பலருக்கு ஒன்று கிடைத்தால் இன்னொன்று இல்லையென்றாகி விடுகிறது.  முதலில் தாயன்பு கிடைக்காமல், பின்னர் நல்ல தாரத்தின் அன்பில் நனைவோர் வாழ்க்கையாவது பரவாயில்லை எனலாம். ஆனால் நல்ல தாயன்பைப் பெற்றுவிட்டு, மோசமான தாரத்திடம் சிக்குவது நரகம். நாற்பது வயதைக் கடந்த நிலையிலும்பாராட்ட..மடியில் வைத்துத் தாலாட்டதாய்மடி தேடித் தவிப்பது கொடுமை. அத்தகைய ஒரு துரதிர்ஷ்டசாலியான மலைச்சாமி எனும் மனிதரின் கதை தான் முதல் மரியாதை.
கிராமத்துப் பெரிய வீட்டுப் பெண்ணான பொன்னாத்தா, காதல் என்ற பெயரில் ஒருவனிடம் ஏமாந்து வயிற்றில் பிள்ளையுடன் நிற்கிறாள். குடும்ப கௌரவம் காக்க,மாமாவின் சொல்லுக்குக் கட்டுப்பட்டு ஏழை மலைச்சாமி பொன்னாத்தாவை மணக்கிறார். அவளுக்குப் பிறக்கும் பெண் குழந்தையை தன் குழந்தையாகவே எண்ணி வளர்த்து, திருமணம் செய்து கொடுக்கிறார். ஆனாலும் பொன்னாத்தா மலைச்சாமியை மதிப்பதே இல்லை. அதே நேரத்தில் ஊருக்குப் புதிதாக வரும் குயிலியுடன் மலைச்சாமிக்கு நட்பு ஏற்படுகிறது. அதுவே அவளின் அன்பினால், காதலாக ஆகிறது.

பொன்னாத்தாவுக்கு விஷயம் தெரிய வந்து, அவர்களைப் பிரிக்க முற்படுகிறாள். அதே நேரத்தில் பொன்னாத்தாவின் காதலன் அவளைத் தேடி அந்த ஊருக்கு வர, மலைச்சாமியின் குடும்ப கௌரவத்தைக் காக்க குயிலி அவனைக் கொன்றுவிட்டு, ஜெயிலுக்குப் போகிறாள். வாழ்க்கையின் இறுதிக்கட்டத்தை நெருங்கும் மலைச்சாமி, பெயிலில் வரும் குயிலியைப் பார்த்துவிட்டு மனநிறைவுடன் இறக்கிறார். குயிலியும் அவர் பிரிவு தாளாது மரணமடைய,  வாழ்க்கையை அடுத்த உலகிலாவது மகிழ்ச்சியுடன் வாழ, அந்த உன்னத காதல் ஜோடி நம்மிடமிருந்து விடை பெறுகிறது! (இடையில் செல்லக்கண்ணு-செவ்வளியின் விடலைக்காதலும், அதன் சோக முடிவும் உண்டு)

ஒரு திரைப்படத்தின் வெற்றியானது உண்மையில் கதையில் இல்லை, அதைச் சுவாரஸ்யமாகச் சொல்லும் திரைக்கதையிலேயே உள்ளது. அதனாலேயே கதையே இல்லாத அல்லது அரதப்பழசான கதையுள்ள திரைப்படம்கூட, பெரும் வெற்றி பெறுகிறது. முதல் மரியாதையைப் பொறுத்தவரை நல்ல கதையும் அமைந்துவிட, பாரதிராஜாவால் இந்த திரைக்கதை பின்னப்பட்ட விதம் தனி ஆய்வுக்குரியது. தமிழ்சினிமாவின் சிறந்த திரைக்கதைகளில் ஒன்றாக முதல் மரியாதையைத் தாராளமாகக் குறிப்பிடலாம். நேர்கோட்டுப்பாணியில், பொன்னாத்தாவின் காதலில் இருந்து படத்தை ஆரம்பித்து இருந்தால், பெரிதாக சுவாரஸ்யமோ திருப்பமோ படத்தில் இருந்திருக்காது. அதை கொஞ்சம், கொஞ்சமாக சரியான சமயத்தில் வெளிப்படுத்தியதில்தான், இந்தப் படம் ஜெயித்தது.

பொன்னாத்தா ஒரு கடுமையான பெண்மணி என்று ஆரம்பித்து, மலைச்சாமி செருப்புப் போட மாட்டார் என்று சொல்லி, யாரோ காலில் விழுவதாக பின்னர் காட்டி, அது பொன்னாத்தாவின் அப்பா தான் என்று சுவாரஸ்யம் கூட்டுகிறார் பாரதிராஜா. பின்னர் மலைச்சாமி-குயிலி காதல் பார்வையாளனுக்கு உறுதிப்படுத்தப்படும்போது, ஒரு பெரிய மனுசன் இதைச் செய்யலாமா எனும் சிறுகேள்வி நமக்கு உதிக்கும் நேரத்தில், ’மலைச்சாமி பொன்னாத்தாவுடன் வாழவே இல்லை..பொன்னாத்தா மகள் அவர் பெண்ணே இல்லை, பொன்னாத்தா யாரிடமோ ஏமாந்ததில் பிறந்தவள்என்று கதையிம் மர்மமுடிச்சு அவிழ்க்கப்படுகிறது. ஒரு கதையின் முக்கிய விஷயத்தை, எந்த நேரத்தில், எப்படிச் சொன்னால் படம்பார்ப்போர், கலங்கிப்போய் படத்துடன் ஒன்றிவிடுவார்கள் என்பதற்கு அந்தக் காட்சி நல்ல உதாரணம். ஏற்கனவே மலைச்சாமியின் நல்ல மனதும், வேடிக்கையான சுபாவமும், மோசமான வாழ்க்கையும் சொல்லப்பட்டுவிட்ட நிலையில், இந்த விஷயத்தை இப்போதும் மலைச்சாமி சொல்வதாக காட்சி அமைக்காமல் பொன்னாத்தாவே சொல்வதாக காட்சிப்படுத்தியது தான் இயக்குநரின் திறமைக்குச் சான்று

இந்தப் படத்தின் கதையில் செல்லக்கண்ணு-செவ்வளி காதலுக்கு எவ்வித முக்கியமும் இல்லை தான். ஆனால் திரைக்கதையில் அந்தக் காதலின் இடம் தவிர்க்க முடியாதது. ஏனென்றால் ஒருவகையில் அந்தக் காதல், பொன்னாத்தா காதலின் கண்ணாடி பிம்பம் தான். விடலைப்பருவத்தில் வாழ்க்கையின் சிக்கல்களை அறியாமல், தனக்கென்று தனி உலகத்தை அமைத்துக்கொண்டு வளர்கிறது அந்தக் காதல். படம் பார்ப்போரின் சப்-கான்சியஸ் மைண்ட்டில் பதியும் இந்தக் காதல், பொன்னாத்தாவின் காதல்கதை வெளிப்பட்டதும் அதனுடன் எளிதில் இணைந்துகொள்கிறது. அந்தக் காதலின் முடிவு போன்றே பொன்னாத்தாவிற்கு அவளது காதலனாலேயே ஒரு முடிவு ஏற்பட்டிருக்கலாம். உண்மையில் பொன்னாத்தாவின் காதலன் கதாபாத்திரமானது, செல்லக்கண்ணு மற்றும் மலைச்சாமி மருமகன் ஆகிய இரு கதாபாத்திரங்களின் கலவை தான். (படத்தின் கதைக்கு அந்த மருமகனும் தேவையில்லை!). 

திரைக்கதையைப் போன்றே படத்தின் பல காட்சிகளும் சிறப்பு வாய்ந்தவை. ஒரு படத்தின் காட்சிகளிலேயே முக்கியமானது, அதன் முதல் காட்சி தான். (இதை மெய்ப்பிக்க நல்ல கதை அவசியம்.) முதல் மரியாதையின் முதல் காட்சி, ஆற்றோரம் இருக்கும் ஒரு குடிசைவீட்டையும், அதை ஆவலுடன் எட்டிப்பார்க்கும் சிறுவர்களையும் காட்டுகிறது.  ஒரு காதலின் நினைவுச்சின்னமான அந்தக் குடிசைக்குள் கிடப்பது மலைச்சாமி மட்டுமல்ல, அவரின் காதலும்தான். அந்தக் குடிசையை ஆவலுடன் எட்டிப்பார்ப்பது சிறுவர்கள் மட்டுமல்ல, நாமும் தான். அந்தக் காட்சி தாம் மொத்தப் படமே. ’உங்களை விழி விரிய வைக்கும் ஒரு காதலைக் காட்டுகிறேன்எனும் இயக்குநரின் சிம்பாலிக் ஷாட் தான் அது. ஏற்கனவே குளோசப் ஷாட்களையும், உவமை ஷாட்களையும் வைப்பதில் கை தேர்ந்தவர் பாரதிராஜா. ’..கிளியிருக்குபாடலில்மாலை வருமுன்னு சோலைக்கிளி ரெண்டும் மத்தளம் கொட்டிக்கிச்சாம்! பாடலுக்கு அவர் வைத்திருக்கும் ஷாட் அதகளம்!

அதே போன்றதேபூங்காற்று திரும்புமாபாடல் முடியவும் இருவரும் பேசிக்கொள்ளும் காட்சியின் கேமிராக் கோணம். மலைச்சாமியின் வாழ்வில் குயிலி புகும் நேரம் அது. அவனது துயரத்தை சரிபாதியாக பங்கிட வந்தவளாக அவள் அவருக்கு காட்சி தரும் நேரம் அது. அந்த முக்கியமான தருணத்தை, இருவரும் ஒருவரில் பாதி இன்னொருவராக ஆவதை பாரதிராஜா காட்டியிருக்கும் விதத்தைப் பாருங்கள், அவர் ஏன் தமிழ்சினிமாவின் முக்கியமான இயக்குநராக கொண்டாடப்படுகிறார் என்று புரியும். அந்த அர்த்தநாரீஸ்வர ஸ்டில் இங்கே:

இந்தப் படத்தின் நடிகர் தேர்வு குறிப்பிடத்தகுந்த விஷயம். ஒரு ஊர்ப் பெரிய மனிதர், அதே நேரத்தில் சோகத்தை நெஞ்சில் சுமப்பவர்; குயிலியால் மரியாதையுடன் பார்க்கப்படுபவர்-எனும் வேடத்திற்கு தமிழ் சினிமாவில் மரியாதைக்குரிய நடிகர் திலத்தை விட்டால், பொருத்தமான ஆளேது!சிவாஜியே சொன்னது போல், பல காட்சிகளில் அவர் இயல்பாக நிற்கிறார்;பேசுகிறார் அவ்வளவே. குளோசப் ஷாட்களில் மட்டுமே கண்களும் கன்னத்தசைகளும் நடிக்கின்றன.

ஏற்கனவே நிறைகுடம், அவன் தான் மனிதன் போன்ற சில படங்களில் நடிகர் திலகம் இத்தகைய நடிப்பை வழங்கியிருந்தாலும், அவை காலத்திற்கும் நிற்கும் கலைபடைப்புகளாக அமையவில்லை. காலத்திற்கும் நிற்கின்ற சிவாஜியின் படங்களான வீரபாண்டிய கட்டபொம்மன், கர்ணன், பாசமலர் போன்ற பல படங்களில் கதாபாத்திரத்தின் தன்மை காரணமாகவும், அந்த காலகட்டத்தின் காரணமாகவும் உணர்ச்சிகரமான நடிப்பாக அமைந்துவிட்டது. (என்னதுய்யா..வரி கேட்டானா? அப்படியா?...என்றெல்லாம் சப்பையாக கட்டபொம்மன் பேசினால் காமெடி ஆகியிருக்காது?)

அடுத்த சிறந்த பாத்திரத் தேர்வு ராதா தான். அழகும் திறமையும் ஒருங்கே அமைவது அபூர்வம். அத்தகைய அபூர்வ நடிகைகளில் ஒருவர் ராதா. குயிலி கதாபாத்திரமானது உழைக்கும் வர்க்கத்தைச் சேர்ந்த ஒரு பெண். ராதாவின் உடல்வாகு அதிக சதைப்பிடிப்பற்ற, அதே நேரத்தில் டொக்காகவும் தோன்றாத வகையைச் சேர்ந்தது. எனவே எளிதில் ராதா, குயிலி கேரக்டரில் செட்டாகிறார். அதற்கு ராதிகாவின் பிண்ணனிக்குரல் தரும் அப்பாவித்தனம், அழகூட்டுகிறது. மற்ற படங்களில் நளினத்தை மட்டுமே காட்டிய ராதா, இந்தப் படத்தில் காட்டியிருக்கும் உடல்மொழி தெனாவட்டானது.

உரசிக்கிறதுக்கு பொன்னாத்தா வீட்டுச்சுவர் தான் வசதியா இருக்குன்னா, வாங்கடி வாங்கஎனும் அற்புதமான டயலாக் பேச தமிழ் சினிமாவில் பொருத்தமான நடிகைகள் இருவர் தான். ஒருவர் காந்திமதி, இன்னொருவர் வடிவுக்கரசி. காந்திமதியின் பார்வையைவிட, வடிவுக்கரசியின் பார்வை கடுமையானது, அதே நேரத்தில் இளமையானது( நன்றி: சிவப்பு ரோஜாக்கள்). எனவே பொன்னாத்தாவாக வடிவுக்கரசியைத் தவிர வேறு யாரையும் நினைக்க முடியவில்லை. அதே போன்ற கள்ளம் கபடமற்ற காதல் ஜோடிகளான தீபன் - ரஞ்சனி முகமும் பொருத்தமானது.

கதை-வசனம் எழுதிய ஆர்.செல்வராஜ், சினிமாவுலகில் மரியாதைக்குரிய கதாசிரியர். படத்தின் பெரும்பலம், இவரது கிராமத்து இயல்பு கெடாத வசனங்கள் தான். அதே போன்றே ஒளிப்பதிவாளர்கள் கார்த்திக்-அசோக்கின் பங்களிப்பும் பாராட்டப்பட வேண்டியது. செவ்வளி அந்திவானம் பற்றிப் பேசப்பேச, குளோசப்பிலிருந்து லாங் ஷாட்டாக ஜூம் அவுட் ஆகி, மீண்டும் அவளை நெருங்கி வசனத்துடனே பயணிப்பது கொள்ளை அழகு.

ஒவ்வொரு கலைஞனுக்கும் ஒரு உச்சநேரம் வரும். அவனது கலைத்திறமை முழுவீச்சுடன் வெளிப்படும் அந்தக் காலகட்டம், கலைக்கு மிக முக்கியமானது. இந்தப் படமும் அப்படி ஒன்றல்ல, மூன்று மாபெரும் கலைஞர்களின் உச்ச நேரத்தில் வெளிவந்தது. பாரதிராஜா-இளையராஜா-வைரமுத்து எனும் மூன்று கிராமத்து ராசாக்கள், இந்த மண் வாசனை நிறைந்த கதையை காலத்திற்கும் நிற்கும் பொக்கிஷமாக படைத்துத் தந்தார்கள். உண்மையில் இளையராஜாவின் இசையையும், வைரமுத்துவின் வரிகளையும் சிலாகிக்க தனிக் கட்டுரையே தேவைப்படும்.

.கிளியிருக்கு..பழமிருக்குஎன்று ஆரம்பிக்கும் ராஜாவின் இசை ராஜாங்கம், பூங்காற்றாக வருடி, புயலாக அடித்து ஓய்கிறது. இளையராஜாவின் படங்களிலேயே புல்லாங்குழல் அதிகம் உபயோகப்படுத்தப்பட்ட படமாக இது இருக்கலாம். அதிலும் படம் முழுக்க வரும்பூங்காற்று திரும்புமாபாடலின் புல்லாங்குழல் பின்னணியிசை, நம் நெஞ்சை உருக்குவது. எப்போது கேட்டாலும், ஒரு தீவிர இலக்கியப்படைப்பைப் படித்தது போன்ற மனக்கிறக்கத்தைத் தருவது ;பூங்காற்று திரும்புமாபாடல். எந்தவொரு பாடலுமே இந்தப்படத்தில் சோடை போகவில்லை

கவிஞர் வைரமுத்துவின் வரிகளில் கிராமத்து வாசம் பொங்கிய காலம் அது. இதிலும் கவித்தன்மை பெரிதும் இல்லாத, இயல்பான வார்த்தைகளைப் போட்டே நம் மனதைக் கொள்ளை கொண்டிருப்பார். ‘ஏறாத மலைமேலே..இலந்தை பழுத்திருக்குஎனும் கிராமத்துக் குறும்புவரிகளும் உண்டு, ‘சுழியில படகு போல எம்மனசு சுத்துது சுத்துது..பருவம் தெரியாம மழையும் பொழிஞ்சாச்சு..விவரம் தெரியாம மனசும் நனைஞ்சாச்சுஎனும் குயிலியின் நிலையைச் சொல்லும் அர்த்தமான வரிகளும் உண்டு. இளையராஜா-வைரமுத்து கூட்டணி உடைந்ததில் தமிழ்சினிமாவுக்கே பெரும் நஷ்டம்!

இந்த படத்தைப் பற்றியும், படத்தின் கேரக்டர்கள் பற்றியும் அதிகம் பலரால் எழுதப்பட்டுவிட்டாலும், பலரால் கண்டுகொள்ளப்படாத விஷயம் என்னவென்றால் பொன்னாத்தாவும் அவளின் காதலும்தான். இந்தப் படத்தின் அதிசயங்களில் ஒன்று அந்த கதாபாத்திர வடிவமைப்பு.

ஆண்கள் ஏமாற்றத்திற்கு ஆளாகும்போது வன்முறை மூலமோ, வெளியுலகில் நாட்டத்தைத் திசைதிருப்புவதன் மூலமோ அதிலிருந்து மீண்டுவிடுகிறார்கள். ஆனால் அவ்வாறு மீளமுடியாத சமூக நிலையில் இருக்கும் சில பெண்கள் வாழ்வில் அடையும் ஏமாற்றம், அவர்கள் மனதில் வன்மமாக, ஆங்காரமாக மாறி நின்றுவிடுகிறது. சமயம் கிடைக்கும்போதெல்லாம் பேச்சு/நடத்தை மூலம், எதிராளியை செருப்பின் கீழ் மாட்டிய புழுவைப் போல நசுக்கவல்லது அந்த வன்மம். (இந்த நேரத்தில் யாராவது அரசியல்வாதிகள் உங்கள் ஞாபகத்திற்கு வந்தால், இந்த தளம் பொறுப்பல்ல!)

பொன்னாத்தாவின் காதலன் பணத்தாசை பிடித்த, கெட்டபழக்கங்கள் உள்ளவன் என்பது நமக்குக் காட்டப்பட்டாலும் அது பொன்னாத்தாவிற்கு தெரிவதே இல்லை.  தன் காதலை குடும்ப கௌரவத்தின் பெயரால் பிரித்துவிட்டதாகவே எண்ணுகிறாள். அந்த வன்மத்துடனே எல்லாவற்றையும் அவள் அணுகிறாள். பிரித்த அப்பனை செருப்பால் அடிக்க வேண்டும் என்கிறாள். மலைச்சாமியை எவ்வளவு முடியுமோ, அவ்வளவு இழிவாக நடத்துகிறாள். மகளிடம்ஆயிரம் தெய்வம் உலகத்துக இருந்தாலும் பிள்ளை வரம் கொடுக்கிறது புருசன் தாங்கிறதை மறந்துராதேஎன்று மலைச்சாமி முன்னால் சொல்லி, தன் கணவன் தனக்கு பிள்ளை கொடுத்த காதலன் தான் என்கிறாள்

இறுதியில் பிணமாகக் கிடக்கும் காதலனைக் கண்டதும், ஆற்றுநீர் தெறித்து குங்குமம் அழிய நிற்கிறாள். கடைசிவரை அவள் வாழ்ந்தது ஒரு கற்பனை உலகம். அன்பான காதலனிடமிருந்து பிரித்து, வாழ்க்கையை சிதைத்துவிட்டார்களே எனும் ஆங்காரத்தைத் தவிர அவள் வாழ்க்கையில் வேறு ஏதும் இல்லை.

செல்லக்கண்ணு-செவ்வளி காதலை உண்மையில் பொன்னாத்தா தான் ஆதரித்திருக்க வேண்டும். நல்ல வாழ்க்கைக்கும், நல்ல சிந்தனைக்கும் நேரடித் தொடர்பு இருக்கவே செய்கிறது. தனக்குக் கிடைக்காத வாழ்க்கை செவ்வளிக்குக் கிடைக்கட்டுமே எனும் எண்ணமே அவளுக்கு வருவதில்லை. அவள் மனதில் இருப்பதெல்லாம் வெறுப்பும், வன்மமுமே; அங்கே அன்புக்கு இடம் இல்லை.

கதை, திரைக்கதை, வசனம், நடிப்பு, இசை, பாடல்கள் என பலதுறைகளும் சிறப்பாக அமைந்த படங்கள் வெகுசிலவே. அந்தவகையில் முதல்மரியாதை, தமிழ்சினிமாவின் மகுடங்களில் ஒன்று. படம் வெளியாகி 38 ஆண்டுகள் ஆன நிலையிலும், இன்று பூத்த மலராக, புதிதாகப் பார்ப்போரையும் கவரும் இந்த வெட்டி வேரின் வாசனையை மீண்டும் ஒருமுறை அனுபவியுங்கள்!


மேலும் வாசிக்க... "முதல் மரியாதை - தமிழில் ஒரு உலக சினிமா"
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

2 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.