Friday, July 29, 2011

டிகிரி சர்ட்டிஃபிகேட் மட்டுமே வேலையை காப்பாற்றுமா?


‘படிப்புக்கு அவ்வளவு தான் மரியாதை, இல்லையாடா?” என்ற டயலாக் என் கல்லூரி நண்பர்களிடையே மிகவும் பிரபலம். காரணம் அதைக் கேட்ட சுரேஷும், கேட்கப்பட்ட கேப்டனும். கேப்டன் என்றால், கல்லூரியில்  கிரிக்கெட் டீம் கேப்டனாக இருந்து ‘கேப்டன்’ என்று பெயர் பெற்ற நண்பர்.

என்னைப் போன்றே கேப்டனும் ஏழ்மையான சூழ்நிலையில் ஒரு கிராமத்தில் இருந்து தட்டுத்தடுமாறி படித்து வந்தவர். நாங்கள் பயின்றது அரசுக் கல்லூரிகள் லிஸ்ட்டில் வரும் தன்னாட்சி பெற்ற மதுரை தியாகராசா பொறியியல் கல்லூரி. எனவே மதிப்பெண் அடிப்படையில் வரும் பெரும்பாலான மாணவர்கள் முதல் தலைமுறைப் பட்டதாரிகள், தமிழ்வழியில் பள்ளிக்கல்வியை பயின்றவர்கள். இதை எங்கள் கல்லூரி நிர்வாகமும் புரிந்தே இருந்தது. 

எனவே முதல் இரு வருடங்களுக்கு பாடம் நடத்தும்போது தமிழிலும் சொல்வார்கள். அடுத்த ஆண்டில் அது கொஞ்சம் குறைந்து, இறுதி ஆண்டில் முழு ஆங்கிலத்திற்கு அனைத்து லெக்சரர்களும் மாறியிருபபர்கள். அது எங்களுக்கு மிகவும் உதவியாக இருந்தது.

கேப்டனும் கல்லூரியிலும் பாஸ் பண்ணுவதற்கே ஆரம்ப வருடங்களில் போராடியவர்.சராசரி மதிப்பெண்களுடன் பி.இ. முடித்தார். அதன்பின் ஆங்கிலமும் வசப்பட்டு விட அடுத்து எம்.இ. முடித்தார். 

கல்லூரிக் காலம் முடிந்து, வேலை தேடும் படலம் தொடங்கியது. கேப்டனுக்கும் நல்ல ஒரு கம்பெனியில் செட்டில் ஆனார். அங்கு நல்ல பெயரும் சில வருடங்களில் கிடைத்தது. அதுவரை எந்தவொரு இடத்திலும் வேலையில் சேராமல்/நிலைக்காமல் சுரேஷ் போராடிக் கொண்டிருந்தார். சுரேஷ், படித்த நல்ல வேலையில் இருக்கும் பெற்றோரின் மகன். எனவே ஆரம்பக் காலம் முதல் நல்ல மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றவர். அவரும் பின்னர் கேப்டன் வழியில் எம்.இ. முடித்தார், அதிக மதிப்பெண்களுடன்.

துரதிர்ஷ்டவசமாக சுரேஷிற்கு வேலை எதுவும் அதன்பிறகும் கிடைக்கவில்லை. எனவே நண்பர்களின் உதவியை நாடினார். நம் கேப்டனும் தன் கம்பெனியில் பேசி, நண்பனுக்கு வேலை வாங்கிகொடுத்தார். அடுத்துத் தான் பிரச்சினை ஆரம்பம் ஆனது. கம்பெனி எதிர்பாப்பது முதலில் குவாலிட்டியை, அடுத்து குவாண்ட்டிடியை. தரமான முறையில் வேலை செய்வது எல்லோருக்கும் வருவதல்ல. பெரும்பாலானோர் ரஃப் அடி அடித்து வேலையை முடிப்பவர்களே. அவர்களை கம்பெனி அதற்கே இருக்கும் தரம் அதிகம் தேவைப்படாத புராஜக்ட்களில் போட்டு, வேலை வாங்கிக் கொள்ளும். தரம் அதிகம் எதிர்பார்க்கும் க்ளையண்ட்/ புராஜக்ட்களில் ரொம்ப தரத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கும் ஆட்களை வைத்துக் கொள்ளும். சிலர் இரண்டுக்குமே ரெடியாக இருப்பர்.
சுரேஷிடம் இருந்த பிரச்சினை குவாலிட்டி, குவாண்டிடி இரண்டுமே இல்லாதது தான். ஒரு வேலையை முடிக்க அதிக நேரம் எடுத்துக்கொள்வதும், அப்படி முடிக்கும் வேலையிலும் ஆயிரத்தெட்டு கம்ப்ளைண்ட்ஸ். தொடர்ந்து அவருக்கு வார்னிங் கொடுக்கப்பட்டுகொண்டே வந்தது.

இன்னொரு பக்கம் நம் கேப்டன் ‘தெளிவாக’ அடித்து விளையாடிக்கொண்டிருந்தார். கம்பெனி நிர்வாகம் சுரேஷ் விஷயத்தில் பொறுமை இழந்து கேப்டனை அழைத்தது. கேப்டனுக்கு நல்ல பெயர் இருந்ததால் சுரேஷுக்கு அறிவுரை சொல்லும்படியும், இல்லையென்றால் வேலையை விட்டு தூக்க வேண்டி வரும் என்றும் எச்சரித்தது. கேப்டனும் சுரேஷிடம் ‘பார்த்து இருந்துக்கோ மச்சி. இப்படிச் சொல்றாங்க’ என்ற போது சுரேஷ் சொன்ன பதில் தான் ” படிப்புக்கு அவ்வளவு தான் மரியாதை, இல்லையாடா?”. “நீ எப்படி படிச்சே, என்ன மார்க் எடுத்தே...நான் எப்படிப் படிச்சேன், என்ன மார்க் எடுத்தேன்னு நினைச்சுப்பாருடா. அப்போ நான் படிச்சதுக்கு, என் மார்க்குக்கு ஒரு மரியாதையும் இல்லை. அப்படித் தானே?” என்று சுரேஷ் தொடர்ந்து கேட்க, கேப்டன் நொந்து போனார். 

பெரும்பாலான மாணவர்கள் நினைப்பது நல்ல மார்க் மட்டுமே தன்னைக் கரையேற்றும் என. ஆனால் கம்பெனிகளுக்குத் தேவை ‘எக்ஸிக்யூடிவ்ஸ்’ தான். ஒரு செயலை நிறைவேற்றும்-எக்ஸிகியூட் செய்யும் ஆட்களே கம்பெனிகள் எதிர்பார்ப்பது. டிகிரி சர்ட்டிஃபிகேட்டும் மார்க் ஷீட்டும் இண்டர்வியூ முடிந்ததும் மதிப்பிழந்து விடுகின்றன. அதன்பிறகு கம்பெனி அது பற்றிக் கவலைப் படுவதில்லை. ஏனென்றால் எந்தவொரு க்ளையண்ட்டும் உங்கள் மார்க் ஷீட்டுக்காக ‘பில்’ பண்ணுவதில்லை.

சில பதவிகள் குறிப்பிட்ட படிப்பைக் கோரும். அதற்காக அந்தப் படிப்பு முடித்த சில பேக்குகள் உள்ளே வந்து விடுவதும் உண்டு. அவர்களாலும் சுரேஷ் போல் அதிகநாட்கள் தாக்குப்பிடிக்க முடிவதில்லை. ஒரு வேலையைக் கொடுத்தால் எந்த அளவிற்கு உற்சாகத்துடன், குறிப்பிட்ட நேரத்தில் முடிக்கின்றீர்கள் என்பதே கம்பெனிகளின் தேவை. சில நேரங்களில் கோல்மால்களைக் கூட கம்பெனிகள் சந்தோசமாக அனுமதிக்கும் என்பது அசமஞ்ச மாணவர்கள் அறிந்து கொள்ளவேண்டிய அதிர்ச்சிச் செய்தி.

அப்படியென்றால் படிப்புக்கும் வேலைக்கும் சம்பந்தம் இல்லையா? அப்புறம் ஏன் கம்பெனிகள் அதிக மார்க் எடுத்தவனை கேம்பஸ் இண்டர்வியூவில் தேர்ந்தெடுக்கின்றன என்பது அடுத்து எழும் கேள்வி. நம் மார்க் ஷீட் ஒரு வகையில் நம் கேரக்டரையும் பிரதிபலிக்கவே செய்யும். படிப்பும் கல்லூரிக் காலத்தில் ஒரு வேலையே. அந்த வேலையை எந்த அளவிற்கு அக்கறையுடன் செய்திருக்கின்றோம் என்பதைக் கண்டுபிடிக்க மார்க்‌ஷீட்டும் ஒரு வழி. ஆனால் அதுவே முழுக்க சரியான முறையும் அல்ல. வேறு மாற்று வழிகள் இல்லாத சூழலில், மார்க் ஷீட்டையே கம்பெனிகள் கணக்கில் கொள்ள வேண்டியிருக்கிறது. 

எனது நண்பர் ஹிசாம் அலி ஒரு டஜனுக்கும் மேல் அரியர்ஸ் வைத்திருந்தவர். கடைசி 1 1/2 வருடங்களில் அத்தனை அரியர்ஸையும் வெறியோடு படித்து க்ளியர் செய்தார். அது தான் அவர் டார்கெட். அதைக் குறித்த நேரத்தில் முடித்தார். இன்று வரை அவர் அப்படியே! புராஜக்ட் டார்கெட் டேட்டை நெருங்கும்வரி கெக்கேபிக்கே என்று இருப்பதும் கடைசியில் லபோதிபோ என அடித்துக்கொண்டு வேலையை முடிப்பதும் அவர் வழக்கம்.  சரியான நேரத்தில் வேலையை முடிப்பவர் என்றுகம்பெனியும் அவரைக் கொண்டாடுகிறது. அதைத் தான் சொல்கிறேன், மார்க் ஷீட்டும் உங்கள் கேரக்டரைக் காட்டும்.

டிகிரி சர்ட்டிஃபிகேட் என்பது வெறும் விசிட்டிங் கார்டு. அக்கறையும் செயல்திறனுமே உங்களை செய்யும் இடத்தில் முன்னேற்றும்.

முக்கி வாங்கிய மதிப்பெண்களும் வாராது காண் கடைவழிக்கே!
நன்றி: லீலையில் மயங்கி வேலையைப் பற்றி எழுதாமல் விட்ட என்னை நறுக்கென்று குட்டிச் சொன்ன நண்பர் ‘மெட்ராஸ் பவன்’ சிவக்குமாருக்கு!

வேண்டுகோள் : மேலதிக/விடுபட்ட விபரங்களை அனுபவம் வாய்ந்தோர் பின்னூட்டத்தில் சொல்லி, பதிவைப் படிப்போர்க்கு உதவுங்கள்.
மேலும் வாசிக்க... "டிகிரி சர்ட்டிஃபிகேட் மட்டுமே வேலையை காப்பாற்றுமா?"
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

66 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.

Tuesday, July 26, 2011

Malena (2000) - திரை விமர்சனம் (கண்டிப்பாக 21+)

உப தலைப்பு : மெலீனாவின் தேகமும் தேசமும்

டிஸ்கி: இந்தப் படத்தையும் முடிந்தால் இந்தப் பதிவையும் 18,28,38,48,58,68,78,88 வயது நிரம்பாத யோக்கியர்கள் தவிர்க்கவும்.

குப்பையில் கிடைத்த மாணிக்கம் என்று இந்தப் படத்தை நான் தாராளமாகச் சொல்லலாம். பல வருடங்களுக்கு முன் நண்பர் அனுப்பிய மின்னஞ்சலில் இருந்த ஒரு வீடியோ பார்த்துவிட்டு மிரண்டு போனேன். அந்த ஒரு சீனுக்காகவே பல நாட்கள் இந்தப் படத்தைத் தேடி அலைந்தேன். கிடைத்த பிறகே தெரிந்தது இது உலக சினிமாக்களில் முக்கியமான படம் என்று.

இரண்டாம் உலகபோரில் கலந்து கொள்ள கணவனை அனுப்பிவிட்டு, இத்தாலியின் சிசிலி நகரில் வாழும் தனியே வாழும் பேரழகி மெலீனா.(சரியான உச்சரிப்பு மலேனா!). கணவனுக்காகவே காத்திருக்கும் அவள் ஊரில் உள்ள ஆண்களால் காமத்தாலும் பெண்களால் பொறாமையாலும் பார்க்கப்படுபவள்.  இரண்டாம் உலகப் போரில் நாடுகள் சக நாடுகள் மீதான ஆக்கிரமிப்பில் தீவிரமாக இறங்குகின்றன. அவளது காத்திருப்புக்குப் பதிலாக கணவனின் இறப்புச் செய்தி கிடைக்கிறது. 

கணவன் இருக்கும்போதே வட்டமிட்ட கழுகுகள், மேலும் முன்னேற ஒரு பொய்யான வழக்கில் சிக்க வைக்கப்படுகிறாள். ஊராரின் ஏச்சும் பேச்சும் தொடங்குகிறது. அவளைப் பற்றிய வதந்திகள் இறக்கை கட்டிப் பறக்க, மெலீனாவிற்கு ஆதரவாக இருக்கும் தந்தை மனம் உடைகிறார். தொடர்ந்து நடக்கும் போர்த் தாக்குதலில் அவரும் இறக்கிறார். 

அழகைத் தவிர ஏதுமற்ற அனாதை ஆகிறார் மெலீனா. அவளது நாடு ஜெர்மானியர்களால் ஆக்கிரமிக்கப் படுகிறது. அவள் அழகே அவளுக்கு ஆபத்தாக ஆகி, விபச்சாரியாக அவளை ஆக்குகின்றது. ஜெர்மானிய ராணுவ ஆக்கிரமிப்பாளர்களின் இச்சைக்கு ஆளாகிறாள். அவள் நன்றாக இருந்த போதே அவளை ஏசிய பெண்கள் கூட்டம், அவள் வேசி ஆனதும் கடும் வெறுப்பை உமிழ்கிறது. அதே நேரத்தில் அவளின் நாடு போரில் வென்று விடுதலை ஆகிறது.
மெலீனாவின் மேல் ஆத்திரமுற்ற பெண்கள் கூட்டம், இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி அவளை கடுமையாகத் தாக்கி அவமானப்படுத்தி ஊரை விட்டே துரத்துகின்றனர். அதன்பிறகு போரில் இறந்ததாகச் சொல்லப்பட்ட மெலீனாவின் கணவன் திரும்பி வருகிறான். அவள் இருக்கும் இடத்தைக் கண்டு பிடித்து அவளை மீண்டும் தன் ஊரிலேயே தலை நிமிர்ந்து வாழ வைக்கின்றான்.

ஒரு படைப்பு இலக்கியம் ஆவது தனக்குள் பல திறப்புகளை ரசிகனுக்காக கொண்டிருக்கும் போதே. சாதாரண கதையாகத் தோன்றும் இந்தக் கதையை உலகத் திரைப்படமாக ஆக்கியது இயக்குநர் செய்த நுணுக்கமான இரு வேலைகள்.

முதலாவது மேலோட்டமாக அழகிய பெண்ணின் கதையாகக் காட்டிக் கொண்டாலும், அடிநாதமாக ஓடுவது அந்த தேசத்தின் கதை. இரண்டாம் உலகப் போர் பிண்ணனியில், மெலீனாவிற்கு நடப்பது தேசத்திற்கும் தேசத்திற்கு நடப்பது மெலீனாவிற்கும் நிகழ வைத்து இப்படைப்பை பேரிலக்கியமாக உயர்த்துகிறார். சரியான பாதுகாப்பின்றி இருக்கின்ற பெண்ணை வைத்து, அப்பொதைய இத்தாலியை உருவகப்படுத்தியதே இயக்குநரின் தனித் திறமைக்குச் சான்று.
இரண்டாவது (முக்கியமானது), ஒரு 13 வயதுப் பையனின் பார்வையிலேயே படத்தை நகர்த்தியது. பலரும் பேசத் தயங்கும் பால்ய கால பாலியல் பிரச்சினையை தைரியமாக முன் வைத்தது. ரெனாட்டோ அதீத பாலுணர்ச்சி கொண்ட பாலகுமாரன் சொல்லும் ‘உடம்பு விழிக்கும் முன்னே புத்தி விழித்திக் கொண்ட’ பையன். டீன் ஏஜில் இருக்கும் ரெனாட்டா பேரழகி மெலீனாவை ஒரு தலையாகக் காதலிப்பவன்.

அவளை நிழல் போல் பின் தொடர்பவன். அவளின் அந்தரங்க வாழ்க்கை ரெனாட்டோவின் கண்களின் வழியே நமக்குக் காட்டப்படுகிறது. பார்வையாளனை திட்டமிட்டே ரெனாட்டோவின் மனநிலைக்குக் கொண்டு செல்கிறார் இயக்குநர். ரெனாட்டோ மெலீனாவின் மேல் வைத்திருக்கும் அதீத காமம் கலந்த காதலை நாமும் உணர்கின்றோம். மெலீனாவை பிறர் வதந்திகளால் பேசியே கொல்லும்போதும், கடுமையாக அவளைத் தாக்கி அவமானப்படுத்தும் போதும் எதுவும் செய்ய முடியாத கையாலாகாத் தனத்துடன் துடிக்கின்றான் ரெனாட்டோ. தன் தேசம் அதிகார போதை கொண்டோரால் போரில் சீரழிக்கப்படும்போது துடிக்கும் சாமானிய மக்களின் பிரதிநிதி அவன்.

ஒரு சீரியசான கதையை நகைச்சுவையாகக் கொண்டு செல்ல ரெனாட்டோவின் பாலுணர்வு காட்சிகள் உதவுகின்றன. 13 வயதுப் பையனின் கற்பனைகளும் செயல்பாடுகளும் எவ்வித ஒளிவுமறைவுமின்றி காட்சிப்படுத்தப் படுகின்றன. காம உணர்ச்சியின் உச்சத்திற்கே பார்வையாளனைக் கொண்டு செல்ல ரெனாட்டோ பாத்திரம் உதவுகின்றது. அதுவே இறுதிக்காட்சியில் காமம் கழன்று பேரன்பு மட்டுமே மிஞ்சும் ரெனாட்டோவின் நிலைக்கு நம்மையும் கொண்டு செல்கிறது. 

மெலீனாவாக மோனிகா பெல்லுசி. இத்தாலிய செக்ஸ் பாம். இயக்குநர் Giuseppe Tornatore இந்தக் கதைக் கருவுடன் பேரழகி மெலீனா பாத்திரத்திற்கு பொருத்தமான நடிகை கிடைக்காமல் பலநாட்கள் திரிந்தவர். எப்போது மோனிகாவை சந்தித்தாரோ, அந்த நிமிடமே அவர் முடிவு செய்தார் இவரே மெலீனா என. அதன்பிறகே திரைக்கதை டெவலப் செய்யப்பட்டது.

அழகு என்பது சாதாரணமானது. கம்பீரமான அழகு என்பது அவ்வளவு எளிதில் வாய்க்கப்படுவதில்லை. ஆரம்பக்காட்சிகளில் மோனிகாவைப் பார்க்கும் எவரும் கம்பீர அழகை உணர்ந்து கொள்வர். இந்தப் படத்தைப் பார்த்தபின் பலநாட்களுக்கு மோனிகா நம் மனதை விட்டு நீங்கவில்லை. உண்மையில் வேரு படங்களில் வேறு கேரக்டரில் அவரைப் பார்க்கவும் மனம் ஒப்பவில்லை.

ரெனாட்டோவாக GIUSEPPE SULFARO. முதல் படமான மெலீனாவில் நடித்த போது 14 வயது. ”மோனிகாவைப் பார்த்த கணமே அவர் மேல் காதலில் விழுந்தேன். டீன் ஏஜில் அத்தகைய பேரழகியின் மேல் காதல் வருவது ஆச்சரியம் அல்ல. ஆனாலும் எனக்குத் தெரியும் இது நிறைவேறாக் காதல் என்று!”-இது ஒரு பேட்டியில் அவர் சொன்னது. அந்தக் கெமிஸ்ட்ரியே இயல்பான நடிப்பை அவரிடம் இருந்து வெளிக்கொண்டு வந்தது. நடித்தார் என்பதை விட வாழ்ந்தார் என்றும் ‘வாழ்ந்தார்’ என்றும் சொல்லலாம்.

இயக்குநர் Giuseppe Tornatore ஏற்கனவே சினிமா பாரடைஸ் கொடுத்தவர். அதற்கு மேலும் அவரைப் பற்றிச் சொல்லவும் வேண்டுமா என்ன? 

படத்தின் வசனங்கள் பல நம் மனதைத் தொடுபவை. மெலீனா விபச்சாரி ஆனபின் வரும் கஸ்டமரான ஆர்மி ஆஃபீசர் ‘நான் ஒவ்வொரு வியாழனும் வருவேன்’ எனும்போது மெலீனா விரக்தியுடன் சொல்லும் ‘நீ எனக்கு சாப்பாடு கொண்டுவரும் வரை தாராளமாக வரலாம்’ எனும் வசனம் வெறும் காமக்காட்சியை சட்டென்று நிறம் மாற்றும். படத்தின் இறுதியில் மெலீனாவை விட்டு எதிர்த்திசையில் விலகிச் செல்லும் ரெனாட்டோ சொல்லும் வசனம் புகழ்பெற்றது: என்னிடம் நெருங்கிப் பழகிய பெண்கள் கேட்பர் ‘என்னை எப்போதும் நினைவில் கொள்வாயா என! நானும் ‘ஆம்’ என்பேன். ஆனால் நான் எப்போதும் நினைவில் கொள்ளும், என்னிடம் அவ்வாறு ஒரு போதும் கேட்காத மெலீனா”

மீண்டும் மீண்டும் பார்க்கத் தூண்டும் அற்புதமான கலைப்படைப்பு வெளியான நேரத்தில் கடும் எதிர்ப்பைச் சந்தித்து. காரணம், பதின்ம வயதுப் பையனின் பாலியல் காட்சிகள் தான். அந்த எதிர்ப்பு ஓரளவு நியாயம் ஆனதே. எனவே மனமுதிர்ச்சி இல்லாதோர் இப்படத்தைப் பார்ப்பதைத் தவிர்ப்பது நல்லது.

அதே நேரத்தில் நல்ல சினிமா மேல் ஆர்வம் கொண்டோருக்கு, மெலீனா பேரழகி தான்!

மேலும் வாசிக்க... "Malena (2000) - திரை விமர்சனம் (கண்டிப்பாக 21+)"
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

69 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.

Wednesday, July 20, 2011

ஆண்களுக்கு பெல்ட் அவசியமா?

உங்களோட ஆலோசனை அவசரமா எனக்குத் தேவைப்படுது பாஸ்..ஏற்கனவே அம்பிகா சிடி/சீதா சிடிக்கு நீங்க கொடுத்த ரெஸ்பான்ஸை நினைச்சா, உங்ககிட்ட திரும்ப உதவி கேட்க மனசு வரலை தான்..ஆனாலும் உங்களை விட்டா எனக்கு யாரு இருக்கா?

இப்போ என்ன பிரச்சினைன்னா...ஊர்ல இருக்கும்போது தைச்ச பேண்ட் எல்லாம் டைட் ஆகிடுச்சு. அதனால இப்போ பெல்ட் இல்லாமலேயே பேண்ட் கம்பீரமா நிக்குது. ’அட கர்மம் பிடிச்சவனே, இதுல என்னய்யா பிரச்சினை’ங்கிறீங்களா..சொல்றேன்.
இப்போ எனக்கு பெல்ட் தேவையா இல்லையா? பெல்ட் இல்லாம பேண்ட் போட்டா மொட்டையாத் தெரியுது. அப்படிப் போடக்கூடாதுன்னு ‘சர்வதேச சட்டம்’ ஏதாவது இருக்கான்னு யாராவது சொல்ல முடியுமா? சும்மா பெல்ட்டை இடைப்பைச் சுத்திக் கட்டிட்டுத் திரியவும் கஷ்டமா இருக்கு. வேஸ்ட்டா அதைச் சுமந்துக்கிட்டுத் திரியறமேன்னு நினைக்கும்போது வேதனையாவும் இருக்கு.


சும்மா சொருகி வச்சிருக்கிற பெல்ட்டை இங்க லோக்கல்ல சுமந்துக்கிட்டுத் திரியறது கூடப் பரவாயில்லை. ஊருக்குப் போகும்போது.வரும்போது ஏர்போர்ட்ல வேற இந்த பெல்ட்டைக் கழட்டச் சொல்லி இம்சை பண்றாங்க. நாலு தடவையாவது கழட்டி செக் பண்றாங்க. லக்கேஜ்ல போடலாம்னா வெயிட் ஏறிடும்(!)னு ’வீட்ல’ வைக்க விட மாட்டேங்கிறாங்க. என்ன ஒரு கேவலமான நிலைமை பார்த்தீங்களா..!

இப்போ நான் என்ன செய்ய? சரி, இணையத்துல எல்லா தகவல்களும் கிடைக்குதாமே..பெல்ட் பத்தி ஏதாவது சொல்லியிருக்கான்னு பார்த்தா, ஒன்னுமே இல்லை. எப்படி இருக்கும்? இதான் ஆம்பிளைங்க மேட்டர் ஆச்சே..’மனுசன் எழுதுவானா அதைப் பத்தி’-ன்னு விட்டுட்டாங்க போல.

லேடீஸ்க்கு மட்டும் ’உருளைக்கிழங்கு பொரியல் செய்வது எப்படி’ன்னு ஆரம்பிச்சு ‘உத்துப் பார்க்கிறவன் கண்ணை நோண்டுறது எப்படி’ங்கிறது வரைக்கும் அட்வைஸா கொட்டிக்கிடக்கு.

ஆனா ஆம்பிளைங்களுக்கு?..ஷேம் ஷேம்..பப்பி ஷேம். ஏன் நம்ம பிரச்சினைகளைப் பத்தி யாருமே எழுதறதில்லை? இந்த ஆம்பிளைப் பதிவர்கள் எல்லாம் என்ன தான் செஞ்சுக்கிட்டு இருக்காங்க?

மூணு டைப் ஆம்பிளைப் பதிவருங்க இங்க இருக்காங்க. முத டைப் என்ன பண்றாங்கன்னா, அதைச் சொல்லவே நாக்கூசுது. அந்தக் கொடுமையை நீங்களே பாருங்க:




பார்த்தீங்களா அந்த அநியாயத்தை..இந்த மாதிரி நல்லா பெரிய்ய்ய நடிகைங்க படத்தை பதிவுல போட்டுட்டு, நாள் பூரா அதைப் பார்த்துக்கிட்டே பொழுதை ஓட்டுறாங்க.ஆண் இனத்திற்கு ஏதாவது செய்வோம், எழுதுவோம்னு ஒரு இனப்பற்றே இவங்க கிட்ட இல்லை.

ரெண்டாவது டீசண்ட் குரூப்.பெண்னுரிமைக்காக தூங்காமக் குரல் கொடுக்குறவங்க. எங்காவது பொம்பளைப் படம் போட்டாங்கன்னா ‘எப்பிடி நீ இப்படிப் பண்ணலாம்..ஃபூக்கோ என்ன சொல்லியிருக்காரு தெரியுமா? பெண்களை எப்படி மதிக்கணும் தெரியுமா?”ன்னு மிரட்டுவாங்க.

மூணாவது குரூப் இன்னும் டீசண்டு. பொம்பளைங்களே பிடிக்காது. ஒன்னு ‘சம்போ சிவ சம்போ’ன்னு எழுதறாங்க .இல்லேன்னா ‘பொம்பளைங்க என்ன பெரிய அப்பாடக்கரா’ன்னு எழுதி புரட்சி பண்றாய்ங்க.(ச்சே..ச்சே..நம்ம தொப்பி தொப்பியைச் சொல்லலீங்க!)

ஆக மொத்தத்துல எல்லா ஆம்பிளைங்களும் பொம்பளைங்களைப் பத்தித் தான் எழுதிக்கிட்டு இருக்காங்க. ஆம்பிளைங்களை அம்போன்னு விட்டுட்டாங்க.ஆண் இனத்தோட அவல நிலையை நினைச்சுப் பார்க்கும்போது கண்ணீரு முட்டிக்கிட்டு வருது.

ஒரு பெல்ட் வேணுமா, வேணாமான்னு கூட இணையத்துல நாம ஒரு தீர்மானம் நிறைவேத்தலைன்னா, மத்த இனங்கள்லாம் நம்மளைக் கேவலமா நினைக்காதா? 

இன்னும் கொஞ்சம் தீவிரமா யோசிச்சா...நாகரீகம்ங்கிற பேர்ல நம்மோட ஃப்லெக்ஸிபிள் பெல்ட்டான ’அண்ணாக்கயிறு’ என்று தொண்டர்களால் அன்போடு அழைக்கப்படும் அரைஞான் கயிறை மறந்தது தான் இதற்கெல்லாம் காரணமோன்னு தோணுது.

இதைப் பத்தி பதிவுல தான் ஒன்னும் இல்லை. சரி..நம்ம சங்க கால இலக்கியங்கள்ல ஏதாவது சொல்லி இருக்கான்னு தேடிப்பார்த்தா, அங்கயும் ஒன்னும் கிடைக்கலை.

திருக்குறள் அடக்கமுடைமை அதிகாரத்தையும் படிச்சுப் பார்த்துட்டேன்.ம்ஹூம்..திருவள்ளுவரும் நம்மளை தெருவுல விட்டுட்டாரு.

இனியும் நாம தூங்கிக்கிட்டு இருந்தா ஆண் இனத்துக்கு பெரிய அழிவு தான் வந்து சேரும். அப்புறம் வரலாறுல “ராஜராஜ சோழன் ஆண் என்பது பெரும் புரட்டு. அவர் ஒரு பெண். அவரது உண்மையான பெயர் ராஜராஜ சோழி”ன்னு நம்ம பேரப் புள்ளைங்க படிக்க வேண்டிய துர்பாக்கிய நிலைமை வந்து சேரும்.

அதனால இதைப் படிக்கிற ஆண் சிங்கங்கள் எனக்கு ஒரு முடிவைச் சொல்லுங்க.

தேவையே இல்லாத ஒரு பெல்ட்டை நான் சுமந்துக்கிட்டுத் திரியத் தான் வேணுமா? வேற வழியே இல்லையா? பெல்ட் என்பது அவ்வளவு அவசியமான விஷயாமாஆஆஆஆஆஆஆ?


டிஸ்கி: அந்த பெல்ட்டை கழுத்துல மாட்டிக்கிட்டுத் தொங்கு - என்பது போன்ற ஆக்ரோச பின்னூட்டங்களைத் தவிர்க்கவும்.


மேலும் வாசிக்க... "ஆண்களுக்கு பெல்ட் அவசியமா?"
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

106 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.

Tuesday, July 19, 2011

சாரு பற்றிய கடிதமும் சரிகின்ற பிம்பமும்

“எழுதும்போது உள்ள சாரு வேற. எழுதும்போது மட்டுமே நான் சாருநிவேதிதா. மற்ற நேரங்களில் உங்களைப் போன்ற சாதாரண மனிதன் நான்.” -  சாரு.

தேகம் புத்தக வெளியீட்டு விழாவில் சாரு பேசிய மேற்கண்ட பேச்சைப் பற்றி, நீண்ட நாட்களாகவே சிந்தித்துக் கொண்டிருந்தேன். தொடர்ச்சியாக பல கேள்விகளை அது எழுப்பிக்கொண்டே இருந்தது. அது பற்றி எழுதுவதற்கான நேரம் இப்போது வந்திருக்கின்றது. 

சாருநிவேதிதா பற்றி சாருவின் மனைவி நித்யானந்தாவிற்கு எழுதிய கடிதம் வெளியிடப்பட்டது நாகரீகமான செயலும் அல்ல, அத்தகைய நாகரீகத்தை நாம் நித்யானந்தாவிடம் எதிர்பார்ப்பது நியாயமும் அல்ல என்பதால் அதை விடுத்துப் பொதுவாக சிந்திப்போம்.

இலக்கிய உலகில் நீண்டநாட்களாகவே சர்ச்சைக்குள்ளாகிக் கொண்டிருக்கும் விஷயம் எழுத்துக்கும் எழுத்தாளனுக்குமான இடைவெளி. உலக நாகரீகத்தின் உச்சத்தில் இருப்பவனாகவும், நம்மையும் அந்தத் தளத்திற்கு உயர்த்தப் பாடுபடுவனாகவும் எழுத்தின் மூலம் அறியப்படும் எழுத்தாளன், நடைமுறை வாழ்வில் வீட்டிற்குள் தன் மனைவியைக் கை நீட்டி அடிக்கும் பேடியாக இருப்பதின் முரணே இங்கு நாம் பேச விழைவது.

எழுத்துக்கும் எழுத்தாளனின் நடவடிக்கைக்கும் உள்ள இடைவெளி, வாசகனை ஏமாற்றும் ஒன்றல்லவா? ஜெயகாந்தனுக்கு இரு மனைவிகள் என்று அறிந்த போதும் இதே போன்ற கசப்புணர்வே மேலிட்டது. இந்த இடைவெளிக்கான காரணம் தான் என்ன?
எழுத்தில் புரட்சியாளனாகவும், நிகழ்வாழ்வில் அடிமாட்டு ரேட்டில் ஆட்களை வேலை வாங்கும் நவீன பூர்ஷ்வாவாகவும் எழுத்தாளன் இருந்தால் அது நியாயம் தானா?
அப்படியென்றால், எழுத்து என்பது வெறும் ஏமாற்று வித்தை தானா? எழுத்தாளன் தான் சொன்னதைப் பின்பற்றாவிட்டாலும், அவன் எழுத்தைப் படிப்போர் பின்பற்றினால், சமூகத்திற்கு நன்மை தானே? அந்த வகையில் பார்த்தால் இந்த இடைவெளி என்பது சாதாரணமான ஒன்றா? 

ஒரு விஷயத்தை, கொள்கையை முழுமையாக அட்சுரம் பிசகாமல் பின்பற்றுவோர் மட்டுமே அதைப் பற்றிப் பேசவேண்டும் என்று எதிர்பார்ப்பது நடைமுறைச் சாத்தியம் தானா?

ஏ.ஸி.ஆஃபீஸீல் உட்கார்ந்துகொண்டு, எதற்குமே தெருவில் இறங்கிப்போராடாத ஒருவன் மெரீனாவில் ஈழத்தமிழருக்கான தீபமேற்றும் நிகழ்வு பற்றி உக்கிரமான கட்டுரை எழுதி, மக்களை அதன் பக்கம் திருப்புவது தவறான செயல் ஆகுமா?

பிறப்புச் சான்றிதழ் முதல் இறப்புச் சான்றிதழ் வரை எதை வாங்க வேண்டும் என்றாலும் லஞ்சம் கொடுத்து ’உடனே’ வேலையை முடிக்கும் ஒருவன் லஞ்சத்தை ஒழிப்போம் என அன்னா ஹாசாரெக்கு ஆதரவாக எழுதுவது முற்றிலும் தவறென்று சொல்ல முடியுமா?

இந்த இடைவெளிக்கு ஏதேனும் அளவீடுகள் கொள்ளலாமா? ஏற்றுக்கொள்ளக்கூடிய இடைவெளி, ஏற்றுக்கொள்ள முடியாத இடைவெளி என்று பிரிக்க முடியுமா?

இதன் அடிப்படையில் பார்த்தால், தன் வாழ்வில் கடைப்பிடிக்க முடியாத, கடைப்பிடிக்காத உயர் விழுமியங்களை சமூகத்தின் முன்வைக்கும் எழுத்தாளனின் செயல், வெறும் ஏமாற்று வேலையே என்ற முடிவுக்கு வர முடியவில்லை. படைப்பு மனம் செயல்படும் முறை விசித்திரமானது. பல நல்ல படைப்புகள், எழுத்தாளனையும் தாண்டி வந்து விழுந்தவையே.

நம்முடைய இந்தக் குழப்பங்களுக்கெல்லாம் அடிப்படைக் காரணம் எழுத்தாளன் மீதிருக்கும் ’ஞானி’ பிம்பம்! அவர்களை வாழ்வின் வழிகாட்டிகளாகவும், மகானாகவும் கொண்டாடும் நிலையும் இங்கு நிலவுகிறது. மீள முடியா புகழ்ச்சிச் சக்கரத்தில் மாட்டிக்கொண்ட ஸ்ரீமான் எழுத்துச்சித்தர் சத்குரு பாலகுமார ஸ்வாமிகளை அதற்குச் சிறந்த எடுத்துக்காட்டாக நாம் கொள்ளலாம். எழுத்தாளன் மேல் நாம் கொண்டிருக்கும்  ஞானி பிம்பத்திற்குக் காரணம் தான் என்ன?

சென்ற தலைமுறை வரை எழுத்து என்பது ஊடகம் சார்ந்ததாகவே இருந்தது. ஊடகங்களில் எழுத்து வருவதென்பது பெரும் சாதனையாகவே இருந்தது. அவ்வாறு கிடைத்த இடத்தைத் தக்க வைக்க தொடர் போராட்டமே வாழ்க்கையாக ஆனது. குறைவான ஊடகங்கள், அதிக அளவிலான எழுதும் திறன் படைத்தோர் என்ற ஏற்றத்தாழ்வினால், எழுதும் திறன் படைத்தோரில் வெகுசிலரே ’எழுத்தாளனாக’ உருவெடுக்க முடிந்தது. 

அப்படி எழுத்தாளன் ஆன பின்னும் வருமானம் என்பது பெரிதாக ஏதுமில்லை என்பதே உண்மை. ஆத்மத் திருப்தியே பலரையும் எழுத்துக்காக தங்கள் வாழ்க்கையை அர்ப்பணிக்க வைத்தது. அந்த வறுமையே பல உக்கிரமான படிப்புகளையும் பாரதி, புலமைப்பித்தன் போன்றோரால் படைக்கப்படக் காரணமாயிற்று.

அப்படி பெரும் போராட்டத்திற்குப் பின்னரே அடையக்கூடிய இடமாக ‘எழுத்தாளன்’ ஸ்தானம் இருந்ததும், அவர்களில் சிலர் லட்சிய வாழ்க்கைமுறைகளை நம் முன் வைத்ததுமே எழுத்தாளன் என்ற பிம்பத்தை நாம் கொண்டாடக் காரணமாக இருந்தது.

நவீன தொலைத்தொடர்புக் காலம் கொண்டு வந்த மாற்றங்களில் முக்கியமானது இணைய எழுத்து. ஊடகங்களில் எழுதமுடியாத விஷயங்கள்கூட, இங்கு தைரியமாக முன்வைக்கப்பட்டன. ஊடகங்களும் அவற்றைத் திருப்பிச் சொல்லும் நிலைக்குத் தள்ளப்பட்டன.(உதாரணம் சவுக்கின் கட்டுரைகளும் ஜூவியும்)

இலக்கிய உலகமும் இப்போது அந்த சிக்கலைச் சந்தித்துக் கொண்டிருக்கின்றது. இணையத்தின் வீச்சு குறைவாக இருக்கும் இந்தக் காலத்திலேயே பல நல்ல கதை-கவிதை-கட்டுரைகள் இங்கு கொட்டப்படுகின்றன. அவற்றில் சில புத்தகங்களாகவும் உருவெடுக்கின்றன. 

இந்தச் சூழ்நிலையின் மிகப்பெரிய நன்மை, எழுதுபவனும் சாமானியனே என்ற உண்மை பலமுறை பல பதிவர்களின் முகமூடி கிழிக்கப்பட்டதன் மூலம் இங்கு நிரூபிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்தும் அது நிரூபிக்கப்படும்.
எழுதும்போது உள்ள மனநிலை வேறு. அதை முடித்தபின் மீண்டும் சாமானிய நிலைக்கு மனம் திரும்புவதை சிறு கட்டுரை எழுதிப் பார்த்தோர் கூட உணர முடியும். மனித மனத்தால் வாழ்வின் உச்சங்களையும் எச்சங்களையும் தொட முடியும் என்பது இந்த இணைய உலகில் தொடர்ந்து தெளிவாக்கப்படுகிறது. ‘அவரா அப்படிச் செய்தார்?’ என்று வாசகர்களின் கூக்குரல் இங்கு கேட்டுக்கொண்டே இருக்கின்றது.

எழுத்தாளர்களுக்கு வலைப்பதிவுகளும் பதிவர்களும் கசப்பான விஷயமாகத் தோன்றக்காரணம் பதிவர்கள் தங்கள் எழுத்தின் மூலம் உருவாக்கும் பிம்பத்தை, தாங்களே விரைவில் கலைப்பதாலேயே. இதன் நீட்சி இலகிய உலகையும் எட்டும்.

1970களில் என்றால், ஒரு எழுத்தாளனின் மனைவியின் கடிதம் சிற்றிலக்கிய வட்டம் தாண்டி வெளியேற வாய்ப்பில்லை. பிம்பத்திற்கும் பாதிப்பில்லை.

ஆனால் ’தனியே சுவற்றைப் பார்த்துப் பேசும் குடிகாரன்’ போன்ற பதிவர்களாலும் இணைய இதழ்களாலும், ஞானிப் பிம்பம் உடைத்தெறியப்படுகின்றது. பிற சமூக வலைத்தளங்களும் இதை முன்னெடுக்கின்றன.

வெறும் வம்புப்பேச்சு என்பதைத் தாண்டி, இதனால் வரும் நன்மை என்னவாக இருக்கும் என்றால் வருங்காலத்தில் எழுத்துக்கும் எழுதுபவனுக்குமான இடைவெளி சுருங்கும். அவ்வாறு இல்லாமல் தொடர்ந்து நடிப்போரின் முகமூடிகள் கிழித்தெறியப்படும்.

அதுவே நல்ல மனிதர்கள் படைக்கும் நல்ல இலக்கியங்களை வாசகன் பெற உதவி செய்யும். 

மேலும் வாசிக்க... "சாரு பற்றிய கடிதமும் சரிகின்ற பிம்பமும்"
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

56 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.

Friday, July 15, 2011

தெய்வத் திருமகள் - திரை விமர்சனம்

ஒரு கேரக்டருக்காக தன் உடலையே வருத்தி மாற்றிக்கொள்ளும் பிறவி நடிகன் விக்ரம், மதராசப்பட்டிணம் என்ற வித்தியாசமான படத்தை வழங்கிய இயக்குநர் விஜய் இணைந்து ட்ரெய்லரிலேயே மிரட்டும் படம் என்பதால், நீண்டநாட்களாக ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட படம். நாளை காலை படம் ரிலீஸ்..விமர்சனம் உங்களுக்காக இன்றே ரிலீஸ்..ரிலீஸ்..ரிலீஸ்!
ஊட்டி அருகே ஒரு கிராமத்தில் வாழும் மன வளர்ச்சி குன்றிய விக்ரமிற்கு அழகான பெண் குழந்தை பிறக்கிறது, ஆனால் விக்ரமின் காதலி+மனைவி பிரசவத்தில் இறக்கிறார்.  மகளின் மேல் தந்தைக்கு உயிர். தந்தை மேல் மகளுக்கு உயிர். அழகான அந்தக் குழந்தைகளின் வாழ்வில் விக்ரமின் பணக்கார மாமனார் குடும்பம் குறுக்கிடுகிறது. 


விக்ரமின் குழந்தை இறந்து போன தங்கள் மகளின் நினைவாக வேண்டும் என்று விக்ரமை ஏமாற்றி, பேத்தியை தூக்கிச் செல்கின்றனர். சென்னைத் தெருவில் அனாதையாக விடப்படும் விக்ரமிற்கு உதவ முன்வருகிறார் வக்கீல் அனுஷ்கா. மனவளர்ச்சி குன்றியவரிடம் குழந்தையைக் கொடுக்க முடியாதென விஷயம் கோர்ட்டுக்குப் போகிறது. பாசமுள்ள தந்தையும் மகளும் இணைந்தார்களா என்பதே கதை.

விக்ரமின் நடிப்பில் மற்றொரு மைல்கல் இந்தப் படம். மனவளர்ச்சி குன்றியவராக அவர் காட்டும் மேனரிசங்கள் அற்புதம். ஆறு வயது குழந்தையின் மனநிலை கொண்டவராக வாழ்ந்திருக்கிறார் விக்ரம். விரல்களில் ஆரம்பித்து ஒவ்வொரு நகக்கணுவும் நடிக்கின்றது. எந்த வித ஹீரோயிசமும் செய்யாமல் தெய்வத் திருமகனாக வாழ்ந்திருக்கிறார். குழாயில் ஒழுகும் தண்ணீரைக் கண்டுகொள்ளாமல் ‘நார்மல்’ மக்கள் கடப்பதும், விக்ரம் அதை மூடுவதும் ஒரு நிமிடத்தில் நமக்குள் பல சிந்தனைகளைத் தோற்றுவிக்கும் காட்சி. மனைவி இறந்த செய்தி கேட்டு, அவர் கொடுக்கும் க்ளோசப் எக்ஸ்பிரசன் நம்மையும் கண்கலங்க வைக்கிறது. 

தெய்வத் திருமகள் நிலாவாக வரும் குழந்தையும் நல்ல நடிப்பு. ஆனாலும் ஏதோ ஒன்று அதனிடம் மிஸ்ஸிங் தான்.
அருந்ததிக்கு அப்புறம் அனுஷ்காவிற்கு நடிப்பதற்கு வாய்ப்புள்ளபடம். கதையின் முக்கியப் பாத்திரமாக வருகிறார். ’விழிகளில்’ பாடலில் அனுஷ்கா அழகோ அழகு. இந்த அளவிற்கு அவரைக் குளோசப்பில் வேறு யாரும் காட்டியதும் இல்லை. விக்ரமை குழந்தையுடன் சேர்த்து வைக்க அவர் நடத்தும் போராட்டத்திற்கும் படத்தின் ஓட்டத்திற்கும் உறுதுணையாக சந்தானம். வழக்கம்போல் ஒருவரிக் காமெடியால் கலக்குகின்றார். அமலா பாலிற்கு பெரிதாக நடிக்க வாய்ப்பில்லை. காலை-மாலை மட்டுமே யூஸ் ஆகும் ஆவின் பால் ரேஞ்சுக்கே டீல் செய்திருக்கிறார்கள்.

ஊட்டி கதைப்பகுதியில் காமெடிப் பொறுப்பு ஏற்பது எம்.எஸ்.பாஸ்கரும் பாண்டுயும். வழக்கமான பொண்டாட்டி மேல் சந்தேகபப்டும் காமெடி தான் என்றாலும், சீரியசான படத்தில் பெரிய ரிலீஃப் அது தான். வில்லன் வக்கீலாக வரும் நாசர் கம்பீரமாக அந்தப் பாத்திரத்திற்குப் பொருந்திப் போகிறார்.
மனவளர்ச்சி குன்றிய ஹீரோ என்பதைத் தவிர்த்து விட்டுப் பார்த்தால், டிராமா போன்ற கதை தான். அதனாலேயே முதல் பாதியில் கொஞ்ச நேரமும் இடைவேளைக்கு அப்புறம் கொஞ்ச நேரம் சீரியல் போன்று நகர்கிறது. பிறகு மீண்டும் கோர்ட்-சவால் என படம் சூடு பிடிக்கின்றது. டீசண்டான அனுஷ்கா கேரக்டருக்கு டூயட் சாங் போட்டதும் மிகப்பெரிய குறை தான். அது இல்லாமலேயே இந்தப் படத்தை ரசிக்க முடிகின்றது. கிளைமாக்ஸும் செண்டிமெண்ட்டாக இருந்தாலும், அவ்வளவு திருப்தியான முடிவு இல்லை.

ஜி.வி.பிரகாஷின் இசையில் பாப்பா, வெண்ணிலவே பாடல்கள் நன்றாக உள்ளன. கதை சொல்லும் பாடல் கேட்க சுமார் என்றாலும் எடுத்திருக்கும் விதம் குழந்தைகளையும் கவரும். பாட்டி வடி சுட்ட கதையை ராஜா கதியுடன் மிக்ஸ் பண்ணி விக்ரம் சொல்லும் அழகும், கிராஃபிக்ஸ் உதவியுடன் காட்டிய விதமும் அழகு.
கள்ளங்கபடமற்ற அன்பை படம் முழுதும் தெளித்து நம்மைப் பல இடங்களில் கண்கலங்க வைக்கிறார்கள். படத்தின் முக்கிய பலம் வசனங்கள். படம் நெடுகெ மெல்லிய நகைச்சுவை பரவிக்கிடக்கிறது, அதுவே இப்படத்தை ஃபீல் குட் வகையில் சேர்க்கிறது. 

நீரவ் ஷாவின் ஒளிப்பதிவு பற்றிச் சொல்லவும் வேண்டுமா? சென்னையைக் கூட(!) அழகாகக் காட்டுகிறார். 

வழக்கமான கதைகளை எடுத்துக் கொள்ளாமல், தொடர்ந்து வித்தியாசமான களத்தில் முயற்சிக்கும் இயக்குநர் விஜய்யைப் பாராட்டலாம். குத்துப்பாட்டு, பஞ்ச் டயலாக், ஃபைட் இல்லாமல் ஒரு படம் பண்ண மிகவும் தைரியம் வேண்டும். அதற்கு வாய்ப்புக் கொடுத்த தயாரிப்பாளர் மோகன் நடராஜனையும் பாராட்டலாம்.

குடும்பத்துடன் தான் படம் பார்ப்பேன் என்று அடம்பிடிப்போருக்கு ரொம்ப நாளைக்கு அப்புறம் ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது. விட்டுவிட வேண்டாம். 

தெய்வத் திருமகள் - செண்டிமெண்டல் டிராமா

மேலும் வாசிக்க... "தெய்வத் திருமகள் - திரை விமர்சனம்"
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

70 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.

Wednesday, July 13, 2011

கடன் கொடுக்கிறவன்லாம் இளிச்சவாயன்களா?

”அண்ணே, அடுத்த மாசம் எனக்குக் கல்யாணம்ணே”

“அப்படியா..ரொம்ப சந்தோசம்டா. அண்ணன் இங்க தான் இருப்பேன். கண்டிப்பா கல்யாணத்துக்கு வந்துடறேன்” என்றேன்.

“அண்ணே, அப்புறம் கல்யாணச் செலவுக்குக் காசு கொஞ்சம் தேவைப்படுதுண்ணே. அப்பா என்னடான்னா இத்தனை வருசம் வேலை பார்த்து என்னத்தைக் கிழிச்சேன்னு கேவலமாக் கேட்காரு.”

நான் அப்போது தான் வெளிநாட்டில் இருந்து இந்தியா வந்திருந்தேன். கையில் காசில்லை என்று பொய் சொல்ல முடியாது. சொல்லவும் மனசு வரவில்லை. அவனும் எங்கள் கிராமத்தில் இருந்து படித்து அப்போது சென்னையில் வேலை பார்த்துக் கொண்டிருந்தான். கல்யாணச் செலவுக்கு என்று ஒருத்தன் கேட்கும்போது இல்லையென்று சொல்லவும் மனம் வரவில்லை.

“சரிப்பா வாங்கிக்கோ..எப்போ திருப்பித் தருவே?’ என்று கேட்டேன்.

“உங்களுக்கு எப்போண்ணே வேணும்?” என்று கேட்டான். 

எனக்கு அப்போது தான் பெண் பார்க்க ஆரம்பித்திருந்தோம். “அடுத்து ஆறு மாசத்துக்குள்ள என் கல்யாணமும் வந்திரும். அதுக்குள்ள குடுத்துடு” என்று சொல்லி விட்டு பெருமையுடன் பணத்தைக் கொடுத்தேன்.

அப்புறம் தம்பி புது மாப்பிள்ளை ஆகி, மூன்று மாதத்தில் பழைய மாப்பிள்ளையாகவும் ஆகி விட்டான். எங்கே பார்த்தாலும் நல்லாப் பேசுவான். கொடுத்த காசைப்பற்றி மட்டும் பேச்சில்லை. எனக்கும் அடுத்து கல்யாணம் நிச்சயம் ஆனது. சரின்னு தம்பிக்கு ஃபோன் போட்டேன்.

“கல்யாணமா? ரொம்ப சந்தோசம்ணே..கண்டிப்பா குடும்பத்தோட வந்திர்றேன்”

“தம்பி, அந்தக் காசை சீக்கிரம் ஏற்பாடு பண்ணி திருப்பிக் குடுத்திடுப்பா.”

“குடுத்திடுவோம்ணே..எப்போ வேணும்? அடுத்த மாசம் ஒன்னாம் தேதி ஓகேவா?” என்று கேட்டான்.

“சரிப்பா”ன்னு சொல்லிவிட்டு சந்தோசமா ஃபோனை வைச்சேன். அடுத்த ஒன்னாம் தேதியும் வந்தது, பத்தாம் தேதியும் வந்தது. கொடுத்த பணம் தான் வரலை. திடும்ப ஃபோன்.

“என்னப்பா?”ன்னு கேட்டா “குடுப்போம்ணே..குடுக்காம ஓடியா போயிரப் போறேன். அடிக்கடி ஃபோன் பண்ணிக் காசு கேட்காதீங்க. எம்பொண்டாட்டி ஒரு மாதிரியாப் பாக்கா.” என்றான்.

நமக்கோ ஒன்றும் புரியவில்லை. ’கொடுத்த காசைத் தானே கேட்டோம், அதுக்கு ஏன் ஒரு மாதிரியாப் பார்க்காங்க’ன்னு யோசித்துக் கொண்டே “எப்போத் தான்பா தருவே?” என்றேன்.

“அடுத்த மாசம்” என்றான். அடுத்த மாதமும் போய், கல்யாணமும் நடந்துவிட்டது. கடைசி நேரத்தில் நான் 50,000 ரூபாய் கடன் வாங்கித்தான் கல்யாணம் முடித்தேன். தம்பி குடும்பதோட வந்து ஃபோட்டோவுக்கும் போஸ் குடுத்துட்டுப் போனார்.

அப்புறமும் நான் விடவில்லை. மீண்டும் ஃபோன் செய்து கேட்டால் “இப்போல்லாம் தர முடியாதுண்ணே..எப்போ முடியுதோ அப்போத் தான் தர முடியும். சும்மா டிஸ்டர்ப் பண்ணாதீங்க. நான் நினைச்சா காசே வாங்கலைன்னு சொல்ல முடியாதா? நீங்க காசு குடுத்ததுக்கு என்ன ஆதாரம் இருக்கு?” என்று குரலை உயர்த்தினான்.

“அன்னைக்கு என்ன நிலைமைல வந்து கேட்டேன்னு நினைச்சுப்பாரு” என்றேன்.
”என்ன ரொம்ப ஓவராப் பேசுறே? காசெல்லாம் தர முடியாதுய்யா. என்ன பண்ண முடியுமோ பண்ணிக்கோ” என்று மேலும் பல மரியாதைக் குறைவான வார்த்தைகளை வாரி இறைத்தான். காலேஜில் ஆரம்பித்து வேலை பார்க்கும் இடம் வரை பல இடங்களில் கடன் கொடுத்து பட்ட அனுபவம் நமக்குண்டு. ஆனாலும் ஒரு சின்னப் பையன் ஏமாத்தியது கோபத்தைக் கிளப்பியது.


’இனியும் படிச்சுட்டமேன்னு நாகரீகமாப் பேசுனா கதைக்காகாது’ன்னு புரிந்தது. பிறகு என் திருவாயைத் திறந்தேன். எனது சில ‘நலம் விரும்பிகளும்’ தம்பிக்கு ஃபோன் பண்ணி அன்பாக அறிவுரை சொன்னார்கள். அதன்பிறகே தம்பிக்கு ஞானதோயம் பிறந்தது. பணமும் வந்து சேர்ந்தது.

அது எப்படி பணம் கேட்கும்போது இருக்கின்ற குணம், வாங்கிய பிறகு தலைகீழாக மாறுகிறது என்று ஆச்சரியமாக இருக்கிறது. என்னோட மதிப்பு வெறும் 25,000 தானா? அதுக்காக என் உறவையே துண்டிப்பார்களா என்று வருத்தமாகவும் இருந்தது. அதன்பிறகு இனிமேல் எவனுக்கும் கடன் கொடுப்பதில்லை என்ற முடிவுக்கு வந்தேன்.

ஆனாலும் வாழ்க்கை விசித்திரமானது. அடுத்த ஒரு சில மாதங்களில் எனக்கு வேலை போய் ஓட்டாண்டி ஆனேன். அடுத்து வேலை கிடைத்து குவைத் வரும்வரை பணம் இல்லாமல் பட்ட கஷ்டம் சொல்லி மாளாது. (ஃபாரின்ல சம்பாதிச்சதை எங்கயோ விட்டுட்டான்னு பின்னூட்டம் போட்டு குடும்பத்துல குழப்பம் உண்டாக்காதீங்கப்பா..அதுல வீடு ஒன்னு வாங்கிட்டேன். அப்புறம் தான் கையில கேஷ் இல்லாமப் போயிடுச்சு). சென்னையில் தான் நண்பர்கள் உதவியுடன் தங்கி இருந்தேன். தங்குவதற்கு ஒரு நண்பர் (சாத்தப்பன்) இடம் கொடுத்தார்.

மற்ற செலவுகள் முதல் குவைத் வந்த செலவுகள் வரை மொத்தமாக 40,000 மற்றொரு நண்பர் பூபதி ராஜன் கொடுத்தார். அப்போது தான் யோசித்தேன். நம்மை மாதிரியே என் நண்பர்களும் ‘கடன் கொடுப்பதில்லை’ என்ற முடிவுக்கு வந்திருந்தால், என் நிலைமை என்ன ஆகியிருக்கும்?

’இப்போ முடிவா என்ன தான் சொல்ல வர்றேன்’னு கேட்கின்றீர்களா? 

பாத்திரம் அறிந்து கடன் கொடுங்கள். அதாவது (கதா)பாத்திரம் அறிந்து கடன் கொடுங்கள். தேர்ந்தெடுத்த நண்பர்களுடன்/சொந்தங்களுடன் மட்டும் கொடுக்கல்-வாங்கல் வைத்துக் கொள்வது நலம்.

எச்சரிக்கை: பின்னூட்டத்துல கடன் கேட்கறவங்களுக்கு ‘மொய்க்கு மொய்’ கமெண்ட், ஓட்டு கூடக் கிடைக்காது.
மேலும் வாசிக்க... "கடன் கொடுக்கிறவன்லாம் இளிச்சவாயன்களா?"
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

63 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.

Tuesday, July 12, 2011

நாளை சென்னை திரும்பும் சூப்பர் ஸ்டார் (Rajini Returns)

நீண்டநாட்களாக நாம் எதிர்பார்த்திருந்த சந்தோஷச் செய்தி வந்து விட்டது. ஆம், நமது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நாளை இரவு சென்னை திரும்புகிறார்.
எந்திரன் என்ற மெஹா ஹிட் கொடுத்து இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைத்தார் ரஜினிகாந்த். இந்தியப் படவுலகம் என்றால் பாலிவுட் மட்டும் தான் என்பதை உடைத்து, மற்ற மாநிலப்படங்களும் உள்ளன என்று சர்வதேச அளவில் உணர்த்திய பெருமை சூப்பர் ஸ்டாரையே சேரும். சிவாஜி முதல் எந்திரன் வரை ரஜினி பட ரிலீஸ் என்பது சர்வதேசத் திருவிழா என்று ஆகியது. 

வெளிநாடு வாழ் தமிழர்கள் மட்டுமல்லாது பிற மாநிலத்தவரும் ரஜினி படம் பார்க்க ஆர்வம் காட்டுவதை நேரில் பார்த்த அனுபவம் எனக்கு உண்டு. அத்தகைய வரவேற்பின் மூலம் நமது தமிழ்சினிமாவும் பிறருக்கு அடையாளம் காட்டப்பட்டது.

தமிழகத்தில் சூப்பர் ஸ்டாராக இருந்தாலும், இந்தியில் மிகப்பெரிய வெற்றியைக் கொடுக்கவில்லை என்ற குறை ரஜினியின் வரலாற்றில் இருந்தது. எந்திரன் மூலம் அதுவும் தீர்ந்தது. சிவாஜி ரிலீஸ் ஆனபோது ‘அமிதாப்பா-ரஜினியா’ என்று பட்டிமன்றம் நடத்திய வடநாட்டுச் சேனல்கள்கூட எந்திரனைக் கண்டு மிரண்டன. இந்திய அளவில் தன்னுடைய பெயரை எந்திரன் மூலம் நிலைநாட்டினார்.
பொதுவாகவே இரு படங்களுக்கிடையே போதிய இடைவெளி விடும் சூப்பர் ஸ்டார், இந்த முறை ராணா வேலைகளில் உடனே இறங்கினார், எந்திரன் வெற்றி கொடுத்த கண் திருஷ்டி அறியாமல். படத்துவக்க விழா அன்றே ஆஸ்பத்திரியில் அட்மிட் ஆனார்.

அதன்பிறகு தான் எத்தனை எத்தனை செய்திகள்..இனி அவ்வளவு தான்.அவருக்கு நேரம் சரியில்லை, உயிர் பிழைப்பாரா-என பல ஆராய்ச்சிகள் இங்கு நடத்தப்பட்டன. ஆண்டவனின் அருளும் ரசிகர்களின் அன்பும் இருக்கையில் அவ்வளவு சீக்கிரம் பிறரின் எதிர்பார்ப்பு நிறைவேறிவிடுமா என்ன?

கடந்த மாதமே அவர் ஆஸ்பத்திரியில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகிவிட்டதாகச் செய்திகள் வந்தன. கடந்த ஒரு மாதமாக சிங்கப்பூரில் ஒரு வீட்டில் வாடகைக்கு தங்கி,  உடல்நிலை சீராகிவிட்டதை உறுதிப்படுத்தினர். கடந்த சில நாட்களுக்கு முன் ஐஸ்வர்யா தந்தையை அழைத்து வர சிங்கப்பூர் பயணமானார். இப்போது அடுத்த நல்ல செய்தியும் வந்துவிட்டது.

நாளை இரவு சென்னை திரும்புவதாக உறுதியான தகவல் இப்போது வெளியாகி உள்ளது. பலநாட்களாக பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் செய்து வந்த பிரார்த்தனை வீண் போகவில்லை. நாளை மீண்டும் நம் முன் தோன்றுகிறார் சூப்பர் ஸ்டார். அவரை வரவேற்க தடபுடலான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. 
ரஜினி படம் ரிலீஸ் என்பதே திருவிழா எனும்போது, ரஜினியே ஒரு சிக்கலில் இருந்து ரிலீஸ் ஆகி வருவது மெகா திருவிழா தான். சென்னை திரும்பிய பின் சில நாட்களில் ராணா படப்பிடிப்பு தொடங்கும் என்று சொல்கிறார்கள். நாம் ஏற்கனவே சொன்னது போல் நமக்கு முக்கியம் ரஜினியே, ராணா அல்ல. இனி அவர் நடித்துத் தான் சாதிக்க வேண்டும் என்று எதுவும் இல்லை. உடல்நிலை ஒத்துழைத்துத் தொடர்ந்தால் மகிழ்ச்சியே.

நாளை அவர் முகம் காண லட்சக்கணக்கான ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர், நாமும்!

மேலும் வாசிக்க... "நாளை சென்னை திரும்பும் சூப்பர் ஸ்டார் (Rajini Returns)"
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

54 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.

Monday, July 11, 2011

தில்சனைக் கொன்ற ராணுவ அயோக்கியன் கைது

சமீபத்தில் சென்னை இராணுவக்குடியிருப்பில் பழம் பறிக்கச் சென்ற சிறுவன் தில்சனை யாரோ ஒரு ராணுவ அதிகாரி கொன்றதாகச் செய்திகள் வந்ததையும் நீங்கள் அறிந்திருப்பீர்கள்.

பொதுவாகவே ராணுவ அதிகாரிகள் சம்பந்தப்பட்ட வழக்குகள் என்றாலே நம் போலீஸாரின் கைகள் கட்டப்படும். ராணுவத்தின் அனுமதியின்றி வழக்கப்பதிய முடியாது என்பதே நடைமுறை. நாட்டைக் காக்கும் பணியில் ஈடுபட்டுள்ளோர் மீது தவறான வழக்குகள் எதுவும் சுயநலமிகளால் தொடுக்கப்பட்டு விடக்கூடாது என்பதே அதன் பின்னால் உள்ள நோக்கம். இந்தியா போன்ற ஜனநாயக நாட்டில், தடி எடுத்தவன் தண்டல்காரன் என்ற நிலையே நிலவுகிறது.

பொதுநல வழக்குகள் என்ற பெயரில் போடப்படும் பல வழக்குகள் தனிப்பட்ட நபர்களைக் குறி வைத்தே போடப்படுகின்றன. இத்தகைய ஜனநாயக நாட்டில் தான் அந்தப் படுகொலை நிகழ்ந்தது. சிறு வயதில் தோப்புக்குள் புகுந்து பழங்கள் திருடுவது என்பது பெரும்பாலும் எல்லாச் சிறுவர்களும் செய்வதே, நான் உட்பட. சிறுவர்களுக்கு சர்வதேச பயங்கரவாதம் பற்றி என்ன தெரியும்? காசு கையில் இருந்தாலும் திருட்டுத்தனமாக பழம் பறிப்பது, ஒரு ஜாலியான, த்ரில்லான விளையாட்டு.

இதை அனைவரும் அறிவர். ஆனால் குடிபோதையில் இருந்த அந்த ராணுவ அயோக்கியனுக்கு போதை கண்ணை மறைக்க, துப்பாக்கி எடுத்து சுட்டுக் கொன்றான். எந்தவொரு அமைப்பைச் சேர்ந்தவர்கள் தவறு செய்தாலும், முதலில் அதை அந்த அமைப்பு மறைக்க முற்படுவதே வாடிக்கை. இங்கும் அதுவே நிகழ்ந்தது.

ஒரு ஜனநாயக நாட்டில் நமக்கிருக்கும் வசதி என்னவென்றால், அப்படி அந்தக் குற்றச்செயல் மறைக்கப்பட்டு விடாமல் மீடியாக்கள் மூலமும் போராட்டங்கள் மூலமும் தடுக்க முடியும் என்பதே. இந்தக் கொலையிலும் அதுவே நிகழ்ந்தது. 


குற்றம் நடந்தது சென்னை என்பதாலும் ஏறக்குறைய அனைத்து மீடியாக்களும் இந்த விஷயத்தை வெளிச்சம் போட்டுக் காட்டின. சீமான், வைகோ, திருமாவளவன் போன்ற அரசியல்வாதிகளும் இந்த விஷயத்தில் அறிக்கை விட்டு, பிரச்சினையை மூடி மறைக்க இயலாதபடி செய்தார்கள். 

ஒரு குற்றம் நடந்தவுடன், சில மணி நேரங்களில் குற்றவாளியைக் கைது செய்வது எல்லா நேரமும் சாத்தியம் அல்ல. அதுவும் ராணுவம் போன்ற வல்லமை மிக்க அமைப்பு சம்பந்தப்படும்போது, பல நடைமுறைச் சிக்கல்களையும் தடைகளையும் தாண்டியே குற்றவாளியை நெருங்க முடியும். 


குற்றம் நடந்த ஒரு வாரத்தில் சிறுவன் தில்சனைக் கொன்ற ராணுவ அயோக்கியன் கந்தசுவாமி ராம்ராஜ் கைது செய்யப்பட்டுள்ளான். தில்ஷனை சுட பயன்படுத்தப்பட்ட யுஎஸ் ஸ்பிரிங்பீல்டு நீள் துப்பாக்கி கூவம் ஆற்றில் இருந்து எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிகின்றது. சுட்டவன் ஓய்வு பெற்ற மதுரையைச் சேர்ந்த லெப்டினண்ட் கர்னல் என்று செய்திகள் தெரிவிக்கின்றன.

முதலில் நாம் புரிந்து கொள்ள வேண்டியது நடந்தது ஒரு ராணுவ அயோக்கியனின் பாதகச் செயலே ஒழிய இந்திய ராணுவம் தொடுத்த தாக்குதல் அல்ல. இது அனைவருக்குமே தெரியும். ஆனால் நாம் கடந்த சில நாட்களாகச் செய்தது என்ன? கிடைத்தது சாக்கு என்று இந்திய ராணுவத்தையும் இந்தியாவையும் வசை பாட ஆரம்பித்தோம்.

அன்னிய நாட்டின் கைக்கூலிகளான சில சக்திகளும் இந்த விஷயத்தில் களமிறங்கி, ஏதாவது ஆதாயம் கிடைக்குமா என்று சுற்றி வந்தன. இந்த ஜனநாயக அமைப்பிலேயே ஒரு ராணுவ அதிகாரிக்கு இந்தத் துணிச்சல் என்றால், இவர்கள் விரும்பும் சர்வாதிகார ஆட்சி மலர்ந்தால் இதே ராணுவத்தினர் என்னவெல்லாம் செய்வார்கள் என்ற லாஜிக்கலான யோசனையை விட்டு விட்டு, இந்த ஜனநாயக அமைப்பே எல்லாவற்றுக்கும் காரணம் என்று சிலர் தூற்றி வந்தார்கள்.

இப்போது குற்றவாளி கைது செய்யப்பட்டு விட்டார். நமது ராணுவத்தின் பல செயல்பாடுகளில் நமக்கு கடுமையான எதிர்க்க்கருத்துகள் இருந்தாலும், முற்றிலும் ஒதுக்கப்பட வேண்டிய அமைப்பு அல்ல அது. ராணுவத்தில் இருக்கும் எல்லா வீரர்களும் ஈழ, மணிப்பூர்ப் பிரச்சினையில் அரசு ஆதரவுக் கொள்கை உடையவர்கள் அல்ல. எங்கள் உறவினர்களும் ராணுவத்தில் உண்டு. இந்தியாவை ஆளும் கட்சியின் தவறாகவே அவர்களால் வருத்தத்துடன் அந்த விஷயங்கள் பேசப்படுகின்றன.

இந்தப் படுகொலையை மையமா வைத்து நடந்த ஊடக, பதிவுலக செய்திகளைப் பார்க்கையில் ஒன்று புரிந்தது. இந்தியா ஒருங்கிணைந்து இருப்பது பலரின் கண்ணை உறுத்துகின்றது. அதை உடைப்பதற்கான வாய்ப்புகளைத் தேடி பலரும் அலைகின்றனர்.

குற்றம் குறைகள் பல இருந்தாலும், இந்த ஜனநாயக அமைப்புக்குள் இருந்தபடியே நமக்கான தேவைகளை, கால தாமதம் ஆனாலும் ஜனநாயகப் போராட்டங்கள் மூலம் நம்மால் நிறைவேற்றிக் கொள்ள முடியும் என்பதே கடந்த ஒரு வார நிகழ்வுகள் நமக்கு உணர்த்தும் உண்மை.
மேலும் வாசிக்க... "தில்சனைக் கொன்ற ராணுவ அயோக்கியன் கைது"
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

62 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.

Friday, July 8, 2011

வேங்கை - திரை விமர்சனம்

’அருவா டைரக்டர்’ என்று அடைமொழி எடுத்த ஹரியும் அருவா சைஸில் இருக்கும் தனுஷ்+தமன்னாவும் இணைந்து நடித்திருக்கும் மசாலாப் படம். சன்டிவி வாங்கிவிட்டு, பிறகு பின்வாங்கிய படம் இந்த வேங்கை. வேங்கை பாய்ந்ததா ஓய்ந்ததா?

’சிவகங்கைச் சீமையில் வாழும் பெரிய மனிதர் ராஜ்கிரண் ஆதரவை கெஞ்சி வாங்கி எம்.எல்.ஏ ஆகிறார் பிரகாஷ்ராஜ். அதன்பிறகும் தன் இஷ்டப்படி சம்பாதிக்க விடாமல் ராஜ்கிரண் முட்டுக்கட்டை போட்டு அவமானப்படுத்த, பகை வளார்கிறது. அதே நேரத்தில் அவர் மந்திரி ஆகிவிட, ராஜ்கிரணை கொல்ல முடிவு செய்கிறார். அதை ராஜ்கிரணின் மகன் தனுஷ் முறியடிக்கிறார்’ - இவ்வளவு தான் கதை. எப்போதும்போல் இதிலும் கதைக்காக மெனக்கெடவில்லை ஹரி. சிம்பிளான ஒரு தாட்டை வைத்துக்கொண்டு, விறுவிறுவென திரைக்கதையில் சின்ன சின்ன ட்விஸ்ட் வைத்து அசத்துவது ஹரி ஸ்டைல். இதிலும் கரகர காரைக்குடி மசாலாவோடு களமிறங்கி, ஜெயித்திருக்கிறார்.

தனுஷ் ’செல்வம்’ கேரக்டருக்கு அப்படியே பொருந்திப்போகிறார். உடம்பு ஒல்லியாக இருந்தாலும் சண்டைக்காட்சிகளில் அவர் காட்டியிருக்கும் வேகமே ‘வேங்கையை’ காப்பாற்றுகிறது. அப்பா மேல் காட்டும் அன்பாகட்டும், தமன்னாவின் காட்டும் காதலாகட்டும் தனுஷ் பின்னியிருக்கிறார். ஹரியின் ஹீரோக்கள் மட்டும் எப்படி இவ்வளவு சுறுசுறுப்பாக இருக்கிறார்கள் என்று தெரியவில்லை. காதலை விட அப்பா-அம்மாவே முக்கியம் என்று காதலைத் தூக்கிப் போடும்போதும், தமன்னா தன் காதலை வைத்து, தன் குடும்பத்தை ஏமாற்றியதை நினைத்துக் கலங்கும்போதும் தனுஷ்க்கு இன்னும் பழைய நடிப்பு ஞாபகம் இருக்கிறது என்று தெரிகிறது. நீண்டநாட்களாக கமர்சியல் ஹிட்டுக்காக காத்துக்கிடந்த தனுஷ்க்கு இந்தப் படம் சரியான வாய்ப்பு.  
ராஜ்கிரண் கதையின் நாயகனாக வருகிறார். முழுப் படமும் இவரைச் சுற்றியே வருகிறது. இவரது நடிப்பு அந்தக் கேரக்டருக்கு மெருகேற்றுகிறது. படத்தில் ஏமாற்றம் பிரகாஷ்ராஜ் தான். வழக்கமான வில்லன் பாத்திரம், வழக்கமான அங்க சேஷ்டைகள் என்று கொஞ்சம் சலிப்பூட்டினாலும், காமெடி கலந்தே அவரது காட்சிகள் நகர்வதால் படம் தப்பிக்கிறது.

காமெடியனாக கஞ்சா கருப்பு. யாராவது நல்ல காமெடி ரைட்டர் இவருக்கு உடனடித் தேவை. இல்லையென்றால் தேறுவது ரொம்பக்கஷ்டம். சில இடங்களில் சிரிக்க வைத்தாலும், ஹாண்ட்பார் காமெடி எரிச்சல் மூட்டுகிறது. தெரு மாறி வந்து சைக்கிளை விடும் காட்சியில் மட்டும் தியேட்டரே சிரிப்பில் அதிர்ந்தது.

தமன்னா........கதைக்குத் தேவைப்படாத ஹீரோயின் கேரக்டர். ஆனாலும் படத்தை சுவாரஸ்யமாய் நகர்த்துவது தமன்னா வரும் காதல் காட்சிகளும், பின்பகுதி செண்டிமெண்ட்டும் தான். தனுஷை விடவும் ஒல்லியாக இருக்கிறார். பாவம், என்ன கவலையோ. ஆனால் ஒரு நல்ல விஷயம் என்னவென்றால், படவாய்ப்புகள் குறையக் குறைய தமன்னாவின் ட்ரெஸ் அளவும் குறைந்துகொண்டே போவது தான். பாடல் காட்சிகளில் தாராளம்..மற்ற படக்காட்சிகளில் குடும்பக்குத்துவிளக்காக கலக்குகிறார்.
மசாலாப் படத்துக்கு இசையமைக்க தேவிஸ்ரீபிரசாத்-ஐ விட்டால் பொருத்தமான ஆள் வேறு யார்..படத்திற்கு பெரிய பலம் சூப்பர் ஹிட் பாடல்கள். ’என்ன சொல்லப் போறே, புடிக்கலை, ஒரே ஒரு வார்த்தைக்காக’ என்று ஒவ்வொன்றும் ஒவ்வொரு ரகத்தில் மனதைக் கவர்கின்றன. வெற்றியின் கேமராவும், வி.டி.விஜயனின் எடிட்டிங்கும் படத்தின் வேகத்திற்கு பக்கபலம்.

இந்தப் படத்தில் நம்மை ஆச்சரியப்படுத்தும் விசயம் ஹரியின் உழைப்பு. கதை நடக்கும் இடம் சிவகங்கை என்று சொல்ல மட்டும் செய்யாமல் ஒவ்வொரு காட்சியிலும் அவர்களது கலாச்சாரம், ஊர்ப் பெயர்கள், ஆளைத் தூக்க சரியான இடங்கள், வன்முறையை வாழ்க்கையின் அங்கமாக எடுத்துக்கொள்ளும் ஒரு சமூகம் என பிண்ணனியில் நிறையவே ஃபீல்டு ஒர்க் பண்ணியிருக்கிறார். அதுவும் கிளைமாக்ஸில் பூஜை அரையில் இருக்கும் கருப்பசாமியின் படையல் அருவாளை எடுத்து தனுஷிடம் ராஜ்கிரண் கொடுக்கும் காட்சி, அந்த சமூகத்தின் வரலாற்றை தொட்டுச் சொல்கிறது. சிவகங்கைக்காரர்களுக்குத் தெரியும் அவற்றின் அருமையும், முக்கியத்துவமும். 

தன்னை ஒரு கமர்சியல் டைரக்டர் என்று அறிவித்துக்கொண்ட ஹரியிடம் உலகச் சினிமா எதிர்பார்ப்பது நம் தவறு. சொன்னபடி கமர்சியல் படம் கொடுத்திருக்கிறாரா என்று பார்த்தால், சொல்லி அடித்திருக்கிறார். வழக்கமான ஹரியின் க்ளிஷேக்கள் இருந்தாலும், நல்ல பொழுதுபோக்குப் படம் பார்க்க விரும்புவோர்க்கு செம மசாலா விருந்து.

வேங்கை - பாயும் மசாலாப் புலி

மேலும் வாசிக்க... "வேங்கை - திரை விமர்சனம்"
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

46 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.

Thursday, July 7, 2011

நண்பேன்டா - தொடர்பதிவு

நண்பர் ரஹீம் கஸாலி சும்மா இருக்காமல் நண்பேன்டா - தொடர்பதிவு எழுத அழைத்துவிட்டார். நமக்கோ எதையும் பாக்கி வைப்பது பிடிக்காது. எனவே அவரது அன்புக்குக் கட்டுப்பட்டு, என் நெருங்கிய நண்பர்கள் பற்றிய சிறு விவரணை இங்கே:

1. ஹிசாம் சையது : 

என் இனிய நண்பர். என்னைப்பற்றிய எல்லா சரி-தவறுகளும் அறிந்தவர். கல்லூரியில் ஒன்றாகப் படித்தவர். எந்த சீன் பட சிடி கிடைத்தாலும் என்னை விட்டுவிட்டுப் பார்க்காதவர். பொதுவாக உறவைப் பேணுவதில் நான் எக்ஸ்பெர்ட் அல்ல. ஒரு இடத்தை விட்டு நகர்ந்தால், சோம்பேறித்தனத்தால் அந்த உறவை அப்படியே விட்டுவிடுவேன். ஆனாலும் கடந்த பத்து வருடங்களாக எங்கள் உறவு தொடர்வதற்கு அவர் என் மேல் கொண்டிருக்கும் அன்பே காரணம்.

யாராவது ஏதாவது தவறு செய்தால், உடனே பொங்கி எழுவது அன்னாரது தனிச்சிறப்பு. ஒருநாள் காலேஜ் ஹாஸ்டலில் இருந்து கல்லூரி வரும்வழியில் ஒரு காதல் ஜோடியைக் க்ராஸ் செய்தார். அப்போது துரதிர்ஷ்டவசமாக அவர்கள் பேசியது அவர்காதில் விழுந்தது:

“குமார், அந்த நாயைப்பாரேன்..பாவம்பா..அது சாப்பாட்டுக்கு என்ன செய்யுதோ பாவம்..எப்படி மெலிஞ்சிருக்கு பாரேன்”
“ஆமா லீலா..புவர் அனிமல்”

இதைக் கேட்டுட்டு, கடுப்பின் உச்சத்துக்கே போய்ட்டார்.

“டேய், உனக்கே இன்னும் ஒரு வருசம் தாண்டா உன் வீட்ல கஞ்சி ஊத்தப்போறாங்க..அதுக்குள்ளயாவது அரியர்சைக் க்ளியர் பண்ணப்பாருடா வெண்ணை”-ன்னு அவனை லெஃப்ட் ரைட் வாங்கிட்டார்.

2. சாத்தப்பன்:

எங்க செட்லயே ரொம்ப ரொம்ப நல்ல புள்ளை. எந்தளவுக்கு நல்லபுள்ளைன்னா நான் ப்ளாக் எழுதுறது தெரிஞ்சும், இந்தப் பக்கமே வராதவர். கே.பாக்கியராஜ், எஸ்.ஜே.சூர்யால்லாம் பூமியை அழிக்கன்னே பிறந்த ராட்சசங்கன்னு உறுதியா நம்புறவர். ஆனாலும் ஆச்சரியமா எங்கூட நட்பில் இருப்பவர். நம்ம எழுத்து அவருக்கு ஒத்துவராது. வகுப்பறை தான் அவருக்குச் சரி. எந்த உதவின்னாலும் எப்பவும் கேட்கலாம்ங்கிற அளவுக்கு சாஃப்ட் டைப்+ நல்ல மனசு.

3. பூப்பன்:
என் ஃப்ரண்ட்ஸ் லிஸ்ட்லயே செம ஜாலியான ஆளு..எப்பவும் ‘நானா யோசிச்சேன்’ ஸ்டைல்லயே பேசுறவர். டிசிஎஸ்ல இருக்கார். அவருக்கு ஒரே ஒரு வருத்தம் தான். அவர் பேரு பூ...ப..தி..ரா..ஜ..ன். ஆனா நான் அவரை பூப்பன்னு கூப்புடறதுல ரொம்ப வருத்தம். இன்னும் நான் ப்ளாக் எழுதறேன்னு தெரியாது. 

முன்னாடி வேறொரு கம்பெனில வேலை பார்த்தப்போ, ஏதோவொரு புராஜக்ட்ல போட வுமன் படம் வேணும்னு புதுசா ஆஃபீஸ்ல ஜாயின் பண்ண பொண்ணு கேட்டுச்சு. இவரும் ஸ்டைலா “இண்டர்னெட் எக்ஸ்ப்லோரர் ஓப்பன் பண்ணு..கூகுள் இமேஜ் போ..வுமன்ன்னு டைப் பண்ணு..எண்டர்..அவ்வளவு தான் சிம்பிள்’னு சொல்லி முடிக்கவும், வந்துநின்ன படங்களைப் பார்த்துட்டு, அந்தப் பொண்ணு பதறிப்போய் மானிட்டரை ஆஃப் பண்ணிடுச்சு. திரும்பிப் பார்த்தா, நம்மாளு எஸ்கேப்!

4. சேது:
என் மாமா மகன். என் தளபதின்னு சொல்லலாம். அந்தளவுக்கு நான் ஊருக்கு வர்றேன்னாலே எல்லார்கிட்டயும் என் மச்சான் வர்றான், மச்சான் வர்றான்னு பெருமையா சொல்றவன். சில குடும்ப மனஸ்தாபத்தால கொஞ்சநாள் பேசாம இருந்தப்போ தான் ஒருத்தர் இன்னொருத்தர் மேல வச்சிருக்கிற அன்பு தெரிஞ்சது. சொந்த ஊர்ல நட்புன்னு சொல்லிக்க இருக்குற ஒரே ஆள்.

5. ஜவஹர்:

பொதுவாக அலுவலக நட்பு எனக்கு நெடுநாள் நீடிப்பதில்லை. அது உண்மையாகவும் இருப்பதில்லை. ஆனால் ஜவஹர் வித்தியாசமான நண்பர் தான். என் வளர்ச்சி கண்டு சந்தோசப்படும் நண்பர்களுள் ஒருவர். எனது மெக்கானிகல் எஞ்சினியர்களுக்கு-தொடரை முடித்ததும் இவருக்கு அதை அனுப்பி கருத்து கேட்டேன்.

அதன்பிறகே நான் ப்ளாக் எழுதும் விசயம் அவருக்குத் தெரிந்தது. மகிழ்ந்தார். இவரும் மிஸ்டர்.பெர்ஃபெக்ட். நான் பதிவில் போடும் படங்களைப் பார்த்துவிட்டு, நறநறவென பல்லைக் கடிப்பவர். பதிவுக்கு எப்படி கமெண்ட் போடுவது என்று இன்னும் கண்டுபிடிக்க முயற்சிப்பவர்.

6. மன்மதன் : இவர் என் ’முன்னாள்’ நண்பர். ஆமாம், மன்மதன் லீலைகள்ல வர்ற அதே மதன் தான்.

7. பதிவர் வினையூக்கி:
 என் கல்லூரி நண்பர். பல வருடங்களுக்குப் பிறகு பதிவுலகில் கண்டுபிடித்தேன். என்னை ட்விட்டர், ஃபேஸ்புக், பஸ் என கட்டாயப்படுத்தி அழைத்துச் சென்று, என் ப்ளாக்கைப் பிரபலமாக்க ஆசைப்படுபவர்.

8. மணிகண்டன்:
பள்ளிக்காலத்தில் என் நெருங்கிய நண்பராய் இருந்தவர். கால ஓட்டத்தில் பிரிந்தோம். என் கல்லூரிக் காலத்தில் லெட்டர் என்ற பெயரில் பெரிய பெரிய கட்டுரைகளை இருவரும் எழுதிக்கொள்வோம். அறை நண்பர்களே ஆச்சரியப்படுவார்கள். அப்படி என்ன தான் எழுதுறாங்கன்னு.

அவரது சொந்த ஊர் கோவில்பட்டி பக்கம் விஜயாபுரி. இப்போது அவர் இருக்கும் இடம் தெரியவில்லை. கோயம்புத்தூரில் வசிக்கிறார் என்று மட்டும் தெரிகிறது. ‘தங்க ஆசாரி’வேலை பார்ப்பவர். முன்பு இடையர் வீதி என்ற பகுதியில் இருந்தாராம். அதன்பிறகு கோவையில் எந்தப் பகுதிக்குப் போனார் என்று தகவல் இல்லை. என்றாவது சந்திப்போம் என்று நம்புகின்றேன். 


---------------------------------------

நட்பைப் பற்றிப் பேசுவதே சந்தோசமான விசயம் தான். அந்த சந்தோசமான காரியத்தைச் செய்ய அடுத்து நான் அழைப்பது:

வினையூக்கி

மேலும் வாசிக்க... "நண்பேன்டா - தொடர்பதிவு"
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

34 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.

Tuesday, July 5, 2011

எஸ்.ஜே.சூர்யா - நம்மை ஏமாற்றிய பிரபலங்கள் வரிசை

டிஸ்கி: ஒரு லட்சம் ஹிட்ஸ் - ஸ்பெஷல் பதிவு. தொடர்ந்து ஆதரவளிக்கும் அன்பு உள்ளங்களுக்கு நன்றி.

’100 செக்யூரிட்டியை இறக்கு. மீடியாக்காரன் உட்பட எவனையும் உள்ள விடாத..படத்தோட ஒரு ஸ்டில்லு கூட வெளில போயிடக்கூடாது’என்று நிறைய டைரக்டர்ஸ் ஏகப்பட்ட பந்தா செய்வது கோடம்பாக்க வழக்கம். இதெல்லாம் எதற்காக என்றால் படத்தின் கதை வெளியே தெரிந்து விடாமல் காப்பாற்ற! (படம் ரிலீஸ் ஆன பின், இந்தக் கதைக்கா அப்படி பந்தா பண்ணாங்கன்னு நாம நொந்து போவோம்!)
அந்த மாதிரி டைரக்டர்களுக்கு மத்தியில தான் ஆர்ப்பாட்டமா நுழைந்தார் எஸ்.ஜே.சூர்யா. தன்னோட படங்களின் கதையை பூஜையன்றே வெளியில் சொல்லி விடுவது அவர் வழக்கம். ‘முடிஞ்சா அவங்க இந்தக் கதையை சுட்டுக்கட்டும்’ என்று ஒரு பேட்டியில் சொன்னார். யாரும் தன் கதையில் கை வைக்க மாட்டார்கள் என்ற நம்பிக்கைக்கு இரண்டு காரணங்கள் உண்டு. ஒன்று, அவர் எடுத்துக் கொள்ளும் சர்ச்சைக்குரிய கதை. இரண்டாவது அவரது தனித்துவமான சுவாரஸ்யமான திரைக்கதை.

’வாலி’ என்ற ரணகளமான படத்தின் மூலமே தன் கலையுலக வாழ்வைத் தொடங்கினார் சூர்யா. படத்தின் ஷூட்டிங்கின்போது தினமும் அஜித்-சிம்ரன் காம்பினேசனிலேயே காட்சிகள் எடுக்கப்பட்டன. உடன் பணியாற்றிய அனைவருக்குமே ஆச்சரியம் இது என்னடா படம் என்று. ‘அஜித் தெரியாமல் வந்து மாட்டிவிட்டார்’ என்றே பலரும் நினைத்தனர். படத்தின் பெரும்பாலான காட்சிகளில் அண்ணன் அஜித்-சிம்ரன் - தம்பி அஜித்தே வருவார்கள். தனது வேகமான திரைக்கதையாலும் சுவாரஸ்யமான கேரக்டர்களாலும் அது நம்மை உறுத்தாமல் மறைத்தார் சூர்யா. ஜோதிகாவின் அறிமுகக்காட்சி போன்றவற்றில் வித்தியாசங்களைப் புகுத்தினார். படம் சூப்பர் ஹிட் ஆகியது.

தொடர்ந்து தோல்விகளால் சுருண்டு கிடந்த விஜய்யை வைத்து குஷி எடுத்தார். தமிழ்சினிமாவில் முதல்முறையாக ‘இவங்க ரெண்டு பேரும் லவ் பண்ணப்போறாங்க. கடைசில சேரப் போறாங்க’ என்ற அரதப்பழசான கதையை முதல் காட்சியிலேயே சொல்லிவிட்டு படத்தைக் கொண்டு சென்றார். கதையை கவட்டைக்குள் ஒளித்துவைத்துக்கொண்டு பலரும் திரிந்த நேரத்தில் தைரியமாக தியேட்டரில் உட்கார்ந்திருந்த ஆடியன்ஸ்க்கு ‘இதான் கதை’யென்று சொல்லி திரைக்கதையில் அடித்தார் எஸ்.ஜே.சூர்யா. 
எஸ்.ஜே.சூர்யாவிடம் இருந்த முக்கியமான திறமை ரொமாண்டிக் & செக்‌ஷூவல் காமெடி. கே.பாக்கியராஜ் தவிர்த்து வேறு யாருமே தொடத் தயங்கிய, தொட்டு ஜெயிக்கமுடியாத விஷயம் செக்‌ஷூவல் காமெடி. அங்கங்கே இரட்டை அர்த்த வசனங்களை வைத்துக்கொண்டு, காமத்தைப் பிண்ணனியாக வைத்து குடும்பக் கதை சொல்வதில் வல்லவராய் திகழ்ந்தவர் பாக்கியராஜ். அதிர்ஷ்டவசமாக எதற்கெடுத்தாலும் கோர்ட்டில் கேஸ் போடும் கெட்ட பழக்கம் அவர் காலத்தில் இல்லாததால் தொடர்ந்து ஜெயித்தார் பாக்கியராஜ். அவரை விட செக்‌ஷுவல் காமெடியில் பல அடி பாய்ந்தார் எஸ்.ஜே.சூர்யா.

உண்மையில் செக்‌ஷுவல் காமெடி என்பது கம்பி மேல் நடப்பது போன்று கடினமான விஷயம். கொஞ்சம் பிசகினாலும் அருவறுப்பாகி விடும். ஹாலிவுட்டில் செக்‌ஷுவல் காமெடி வரிசையில் பல படங்கள் வந்துள்ளன. ’அமெரிக்கன் பைஸ்’ வரிசைப் படங்கள் அதில் குறிப்பிடத் தக்கன. அதிலும் அமெரிக்கன் பைஸ்-1,2,3 மட்டுமே பார்க்கும்படி இருந்தன. அத்ன்பிறகு வந்த 4.5 ஓவர்டோஸ் ஆகி மக்களால் புறக்கணிக்கப்பட்டன.

தமிழில் அத்தகைய முயற்சியைச் செய்யக்கூடிய திறமையும் தைரியமும் சூர்யாவிடம் இருந்தது. அதற்கான நிரூபணமாக ‘நியூ’ எடுத்தார். அடஹி ஒரு சயின்ஸ் ஃபிக்சனாக எடுத்தார். முதலில் அஜித்-ஜோதிகா நடிப்பதாக இருந்து, பயந்து போய் பின்வாங்கிய படம் நியூ. அதன்பிறகு அவரே கதாநாயகனாக ஆனார். அவரது தோழியான சிம்ரன் கதாநாயகியாக நடித்து அவருக்கு கை(வாயும்) கொடுத்தார். 
’காமம் என்பது பெண்களை இழிவுபடுத்தும் விசயம். காமத்தைப் பற்றிப் பேசுபவன் பெண்ணிய விரோதி’ என்ற முடிவுக்கு நாம் வந்துவிட்ட காலகட்டம் இது. ஆனால் செக்‌ஷுவல் காமெடி என்பது நமக்குப் புதிய விஷயம் அல்ல. நமது பண்டைய கலைகளான கரகாட்டம், குறவன் -குறத்தி ஆட்டம் போன்றவை காமத்தை அடிப்படையாகக் கொண்டவையே. 

இரட்டை அர்த்த வசனங்களும் செக்‌ஷுவல் காமெடியும் நிறைந்த கலைகளையே எளிய மனிதர்கள் வாழும் கிராமங்கள், தங்கள் திருவிழாக்களில் கண்டு மகிழ்ந்தனர். இன்றும் அது தொடரவே செய்கின்றது. கிராமங்கள் பாலியல் கல்வி கற்றுக்கொள்வது அத்தகைய, காமத்தை எளிமைப்படுத்திய, நகைச்சுவை நிகழ்ச்சிகள் மூலமே. ஆனால் நாகரீக மனிதர்களான நமக்கு காமத்தைக் கண்டால் வெறுப்பே வருகின்றது! நமது நாட்டுப்புறக்கலைகள், எதையுமே விமர்சனத்திற்கும் கேலிக்கும் அப்பாற்பட்ட விஷயமாகப் பார்க்கவில்லை.

எஸ்.ஜே.சூர்யா தமிழ்ச்சமுதாயத்தின் கலைகளும், ஹாலிவுட் படங்களும் சொன்ன அதே விசயத்தை தமிழ் சினிமாவில் சொல்ல முயன்றார். அதனாலேயே கடும் எதிர்ப்பையும் வெறுப்பையும் சந்தித்தார். அநேகமாக இந்திய சினிமா வரலாற்றில் சென்சார் சர்ட்டிஃபிகேட் ரத்து செய்யப்பட்ட ஒரே படம் எஸ்.ஜே.சூர்யாவின் ‘நியூ’ தான்.  ஆனால் தமிழ்சினிமாவில் வெளிவந்த முழுநீள செக்‌ஷுவல் காமெடிப் படமான நியூ, ஒட்டுமொத்த சமுதாயத்தையும் கெடுப்பதாக கூக்குரல் எழுந்தது. நீதிமன்றதிற்கும் வீட்டிற்கும் அலைக்கழிக்கப்பட்டார் எஸ்.ஜே.சூர்யா. 

அதனை அடுத்து அவர் எடுத்த ‘அன்பே ஆருயிரே’வில் அவரது ஃபிட்னெஸ் கொஞ்சம் குறைந்தது. அதிலும் வித்தியாசமான திரைக்கதையை எடுத்தார், வழக்கம்போல் கதையைச் சொல்லிவிட்டு. 

எஸ்.ஜே.சூர்யா என்ற சிறந்த இயக்குநர், திரைக்கதையாசிரியர் செய்த ஒரே தவறு, ஹீரோவாக தொடர்ந்து நடித்தது தான். அதனால் அற்புதமான இயக்குநரை இழந்தோம் நாம். கள்வனுன் காதலி, வியாபாரி, திருமகன், நியூட்டனின் மூன்றாம் விதி; போன்ற படங்களில் ஹீரோவாக நடித்தாலும், ஒரு நடிகராக அவர் பரிணமிக்கவில்லை என்பதே உண்மை. கடைசியாக ‘புலி’ என்ற தெலுங்குத் தோல்விப்படத்தைக் கொடுத்துவிட்டு, ஒதுங்கி நிற்கின்றது இந்த திரைக்கதைப் புலி.

ஷங்கரின் ‘நண்பன்(த்ரீ இடியட்ஸ்)’ படத்தில் கெஸ்ட் ரோலில் எஸ்.ஜே.சூர்யா நடிப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அடுத்து அவரே நடித்து ஒரு படம் இயக்கப் போவதாகச் செய்திகள் வந்தன. இடையே விஜய்யை வைத்து அடுத்த படம் செய்யப் போவதாகவும் செய்திகள் வந்தன. ஆனால் அதுவும் உறுதியாக, தெளிவாகத் தெரியவில்லை.
ஹீரோவாக நடிக்காமல், வெறும் இயக்குநராக மட்டும் களம் இறங்கினால் பல வித்தியாசமான படங்களைத் தர எஸ்.ஜே.சூர்யாவால் முடியும். எஸ்.ஜே.சூர்யாவின் மற்றொரு திறமை இசை பற்றிய நுண்ணறிவு.(அவருக்கு வயலின் தெரியும் என்று ஞாபகம்!). அவரது படங்களின் பாடல்களில் இது நன்றாக வெளிப்படும். ஏ.ஆர்.ரஹ்மான் இசைக்காக பலரும் காத்துக்கிடந்த நேரத்தில், தானே வலியப் போய் நியூ படத்தில் இசையமைக்கும் வாய்ப்பைப் பெற்றார் ஏ.ஆர்.ரஹ்மான். 

திரைப்படம் என்பது ’தாத்தா-பாட்டி-அப்பா-அம்மா-சித்தப்பா-சித்தி-பெரியப்பா-பெரியம்மா-மகன்-மகள்-அண்ணன் -தம்பி-அக்கா-தங்கச்சி-வீட்டு நாய்க்குட்டி’ என குடும்பம் சகிதம் மட்டுமே பார்க்கப்பட வேண்டிய ஒரு விஷயம் என்று இன்னும் நம்பும் ஒரு முன்னேறிய சமுதாயத்தால் எஸ்.ஜே.சூர்யாவை சகித்துக்கொள்ள முடியவில்லை. அதனால் இழப்பு தமிழ்சினிமாவிற்கே.இன்னும் பல எக்ஸ்பரிமெண்ட்களை எஸ்.ஜே.சூர்யா செய்திருப்பார். அதற்கு முன் அவரது படைப்புணர்வு காயடிக்கப் பட்டது.

தமிழ் சினிமாவிற்கு எஸ்.ஜே.சூர்யாவின் பங்களிப்பு என்னவென்றால் ஒரு கமர்சியல் படத்துக்குக் கதை முக்கியம் அல்ல, திரைக்கதையே உயிர்நாடி என்று பொட்டில் அடித்தாற்போல் தன் படங்களின் மூலம் நிரூபித்ததும், ஹாலிவுட் படங்களுக்கு இணையாக ஒரு செக்‌ஷுவல் காமெடிப் படத்தை நமக்குக் கொடுத்ததுமே!
மேலும் வாசிக்க... "எஸ்.ஜே.சூர்யா - நம்மை ஏமாற்றிய பிரபலங்கள் வரிசை"
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

64 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.