Monday, April 28, 2014

நான் சிகப்பு மனிதனும் ஹிட்ச்காக்கும்

நம் மதிப்பிற்குரிய தலைவர் ஹிட்ச்காக்கிடம் என்னால் உடன்பட முடியாத ஒரு விஷயம் உண்டு. அது MacGuffin கான்செப்ட். அது என்னவென்றால்..
ஹிட்ச்காக்கின் North by Northwest படத்தில் ஹீரோவை ’Mr.கப்ளான்’ என நினைத்துக்கொண்டு வில்லன் கும்பல் துரத்துகிறது. ஹீரோ தப்பி ஓடியபடியே கப்ளான் என்ற ஒருவர் இல்லவே இல்லை என்று கண்டுபிடிக்கிறார். ”ஏன்” வில்லன் கோஷ்டி கப்ளானை துரத்துகிறது என்ற ஹீரோவின் கேள்விக்கு ரகசிய போலீஸ் அதிகாரி(?- Spy Master)  சொல்லும் பதில் சுருக்கமாக ஒரே லைனில் ‘You could say he(வில்லன்) is a sort of importer-exporter..Government secrets, perhaps.’

மொத்தப்படத்திலும் ஹீரோவை எதற்காக அப்படித் துரத்தினார்கள் என்பதற்குப் பதில் இந்த ஒற்றை வரி தான். ஹிட்ச்காக்கின் பல படங்களிலும் பரபரப்பாக நடக்கும் பல சம்பவங்களுக்குக் காரணம் என்ன என்பதற்கு பெரிய விளக்கம் இருக்காது. Birds படத்தில் பறவைகள் ஏன் தாக்குகின்றன என்பதற்கு ஒற்றைவரி விளக்கம்கூடக் கிடையாது. அந்த விளக்கத்தை, காரணத்தை, படம் முழுக்க மறைத்து வைக்கப்படும் அந்த சீக்ரெட்டை MacGuffin என்று கேலியாகக் குறிப்பிடுகிறார் ஹிட்ச்காக். அதன்பொருள், அவரைப்பொறுத்தவரை, நத்திங்!

ஒருத்தனோட வாழ்க்கை அல்லது உயிர் பெரும் போராட்டத்தில் இருக்கும்போது, அவன் ”எப்படி” தப்பிக்கிறான் என்பதில்தான் சுவாரஸ்யம் இருக்கிறதேயொழிய, அதன் ”காரணம்” என்ன என்பது அவ்வளவு முக்கியம் இல்லை. படத்தின் ஓட்டத்தில் காரணத்தை விளக்க வேண்டியதில்லை என்பது தான் MacGuffin கான்செப்ட். தமிழ்ப்படங்களைப் பொறுத்தவரை, இந்த கான்செப்ட் செல்லுபடியாகும் என்று நான் நம்பவில்லை. ஜெண்டில்மேனோ இந்தியன் தாத்தாவோ ஒரு ஃப்ளாஷ்பேக் போட்டு ‘நான் ஏன் இப்படி ஆனேன்னா........’ என்று விளக்கினால்தான் நமக்கு பூரண திருப்தி வரும். ஆனால் ஹிட்ச்காக் சொல்வது, அது தேவையில்லை என்று. அவர் அப்படித்தான் படங்களை எடுத்தார், ஜெயித்தார்.
ஒத்துக்கவே முடியாத கான்செப்ட் என்று நான் ஒதுக்கி வைத்ததை மறுபரிசீலனை செய்ய வைத்துள்ளது நான் சிகப்பு மனிதன். நார்கொலாப்ஸியால் அவதிப்படும் விஷால் இருக்கும்போதே, ரவுடிகளால் கற்பழிக்கப்படுகிறார் லட்சுமி மேனன். அவர்களை ”எப்படி” பழிவாங்குகிறார் ஹீரோ என்று பரபரப்பாக படம் நகரும்போது, இயக்குநர் திரு காரணத்தை(MacGuffin) ஒரு ஃப்ளாஷ்பேக் போட்டு விளக்குகிறார் பாருங்கள், என்னடா காரணம் இது என்று எல்லோருமே டரியல் ஆகிவிட்டார்கள். ரவுடிகள் ஒரு பெண்ணைக் கற்பழிக்கிறார்கள் என்பதற்கு காரணமே தேவையில்லை, அவர்கள் ரவுடிகள் என்று முதல் சீனில் காட்டியதே போதும். அதுவே போதுமான MacGuffin. 

அந்த ஃப்ளாஷ்பேக் தான் படத்தைக் கெடுத்தது. படம் பார்க்காதவர்களுக்கு இப்போது அந்த புனிதமான ஃப்ளாஷ்பேக்கைச் சொல்கிறேன். (சாப்பிட்டுக்கொண்டிருந்தால், இதைப் படிக்க வேண்டாம்.)

வில்லன் சுந்தர்-விஷால்-ஜெகன் - இன்னொரு கோடீஸ்வர டகால்ட்டி ஆகிய நான்கு பேரும் நண்பர்கள். சுந்தர் பொண்டாட்டிக்கும் அந்த டகால்ட்டிக்கும் லின்க்கு..அது விஷாலுக்கு தெரியுது. விஷாலுக்கு சுந்தர்+ டகால்ட்டி ரெண்டுபேருமே ஃப்ரெண்டு ஆச்சே..அதனால வில்லன்கிட்டயும்/சுந்தர்கிட்டயும் சொல்ல முடியாம, சுந்தர் பொண்டாட்டி இனியாகிட்ட இப்படில்லாம் பண்ணாதே..சுந்தர் பாவம்ங்கிறார்..அப்போ ஒரு ட்விஸ்ட்..சுந்தர் தான் பொண்டாட்டியை காசுக்காக ஃப்ரெண்டுகூட கள்ளக்காதல்ல இறக்கி விடுறார்ன்னு. டகால்ட்டியை ஏமாற்றி கோடிக்கணக்குல காசை ஆட்டையைப் போடறது தான் இனியா+சுந்தர் ப்ளான். (இனியாவுக்கா? கோடிக்கணக்குலயா?ன்னு லாஜிக் பார்க்கக்கூடாது!)

மேட்டர் தெரிஞ்ச விஷால், அந்த டகால்ட்டிஃப்ரெண்டுகிட்டப் போய் ஏமாறாதே..(ஒர்த் இல்லே)ன்னு சொல்லிடுறாரு. அவர் வந்து கோபத்தில் இனியாவை அடிக்க, இனியா செத்திடுது.சுந்தர் அந்த டகால்ட்டியை கொன்னுடுறாரு..இப்போ எல்லாத்துக்கும் காரணம் விஷால்(???) தான்னு விஷாலைப் பழிவாங்க அடியாள் வச்சு கும்கி மேனனை ரேப் பண்ண வச்சிடுறாரு..கர்ர்ர்....த்த்தூ!

இந்த MacGuffin-ல் இருக்கிற பிரச்சினைகளைப் பார்ப்போம்:

1. இது கேவலமானது
2. இது மிகக்கேவலமானது
3. இது மிகமிகக்............

101. ஃப்ளாஷ்பேக் என்பது பெரும்பாலும் ஹீரோவின் தரப்பிலிருந்தே சொல்லப்பட்டு வந்திருக்கிறது. குறிப்பாக ஹீரோ செய்யும் சட்டப்படி தவறான காரியத்தை(திருட்டு, பழிக்குப்பழி....) நியாயப்படுத்தவே ஃப்ளாஷ்பேக் பயன்படுத்தப்படுகிறது. நமக்கும் நம் சட்டங்கள் பற்றித் தெரியும் என்பதால், ‘கரெக்ட்டுத்தான்பா' எனும் முடிவுக்கு ஃப்ளாஷ்பேக் முடியவும் வந்துவிடுவோம். ஃப்ளாஷ்பேக்கின் முக்கிய நோக்கமே நியாயப்படுத்தல் தான். மேலே சொன்ன ஃப்ளாஷ்பேக் வில்லனுடையது. வில்லன் இந்த ஃப்ளாஷ்பேக் மூலம் தன் செயலை நியாயப்படுத்த முடியுமா? நியாயப்படுத்திவிட்டால் அவன் வில்லனாக இருக்க முடியுமா? எனவே எவ்வளவு விலக்கினாலும், அந்த ஃப்ளாஷ்பேக்கினால் நன்மை ஏதும் இல்லை.

102. ஃப்ளாஷ்பேக்கினால் இன்னொரு நன்மை உண்டு. அது வில்லன் எவ்வளவு கொடூரமானவன் என்று காட்ட உதவலாம். இந்த ஃப்ளாஷ்பேக்கினால் பொண்டாட்டியை கூட்டிக்கொடுக்கிறவன் என்ற தகவல் மூலம் கேவலமானவன் என்ற முடிவுக்கு வரத்தான் முடிகிறதே தவிர, கொடூரமானவன் என்று நினைக்க முடியவில்லை.

103. இந்த ஃப்ளாஷ்பேக்கினால் விளைந்த இன்னொரு கெடுதல், படத்தின் முக்கிய மேட்டரான நார்கொலாப்ஸியையே படம் பார்க்கிறவர்கள் மறந்துபோனது தான். முதல்பாதியை விட ஃப்ளாஷ்பேக்கில் வீரியம்(!) அதிகம். இந்தியன் ஃப்ளாஷ்பேக்கில் பெண்கள் துகிலுரியப்பட்டதாக காட்டியது, ஃப்ளாஷ்பேக் முடிந்தபின்னும் தாத்தா வேகம் எடுக்க உதவியது. நாமும் அவரின் நியாயத்தை உணர்ந்தோம். அதுவரை நடந்த சம்பவங்களையும் அடுத்து வரும் சம்பவங்களையும் நியாயப்படுத்த, அந்த ஃப்ளாஷ்பேக் உதவியது. ஆனால் இங்கே? பார்வையாளனுக்கு அதிர்ச்சியையும் வெறுப்பையும் உண்டாக்கியதைத் தவிர, அந்த ஃப்ளாஷ்பேக்கால் என்ன நன்மை?

’சரிய்யா..ஒரு கள்ளக்காதல் மேட்டருக்கு ஏன்யா ஹிட்ச்காக்கை எல்லாம் இழுக்கறே?’ என்று நீங்கள் டரியல் ஆகலாம். ஏனென்றால் படம் வெளியாகும் முன்பு இயக்குநர் திரு கொடுத்த ஒரு பேட்டியில் ”ஹிட்ச்காக்கை தனக்கு ரொம்ப பிடிக்கும்..அவர் பாணியில் படம் இயக்க விரும்புகிறேன்’ என்ற ரீதியில் சொல்லியிருந்தார். நான் சிகப்பு மனிதனின் முதல்பாதியில் அவர் சொன்னதை நிரூபித்திருந்தார். ஆனால் இரண்டாம்பாதியில், குறிப்பாக MacGuffin மேட்டரில் தவறிவிட்டார். அதைச் சுட்டிக்காட்டவே ஹிட்ச்காக் கையைப் பிடித்து இழுக்கும்படி ஆகிவிட்டது...மன்னிக்கவும்!
மேலும் வாசிக்க... "நான் சிகப்பு மனிதனும் ஹிட்ச்காக்கும்"
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

14 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.

Psycho (1960) - விமர்சனம்

த்ரில்லர் பட மன்னன் ஹிட்ச்காக்கின் படங்களிலேயே பெஸ்ட் என்று உலகம் முழுக்க கொண்டாடப்படும் படம், சைக்கோ. குறைந்த பட்ஜெட்டில் ப்ளாக் & ஒயிட் படமாக வெளிவந்து, மாபெரும் வெற்றி பெற்று த்ரில்லர் படங்களின் மகுடமாக அமைந்தது இந்தப் படம். படம் வெளியாகி பல வருடங்கள் ஆகியிருந்தாலும், இந்தப் படத்தின்மீது பல ஆய்வுகள் செய்யப்பட்டுள்ளன; இன்னும் செய்யப்படுகின்றன. அப்படி என்ன இருக்கிறது இந்தப் படத்தில் என்று பார்ப்போம், வாருங்கள்.
படத்தின் கதைச் சுருக்கத்தைப் பார்ப்போம். மேரியும் சாமும் ஏழைக் காதலர்கள். இருவரும் இணைய மேலும் பணம் தேவைப்படுகிறது. மேரியின் பாஸ், 40,000 டாலர்களை மேரியிடம் கொடுத்து பேங்கில் டெபாசிட் பண்ணச் சொல்ல, அதை டெபாசிட் செய்யாமல், சாம் இருக்கும் ஊரை நோக்கி பணத்துடன் ஓடுகிறாள் மேரி. வழியில் ஒரு மோட்டலில் அவள் தங்க நேரிடுகிறது. அங்கே அவள் மர்மமான முறையில் கொல்லப்படுகிறாள். யார் அந்த கொலையைச் செய்தது, ஏன் அந்தக் கொலை நடந்தது, கொலையாளி கைது செய்யப்பட்டாரா என்பதுவே கதை.

ஹாலிவுட் சினிமாக்களில் வந்ததிலேயே த்ரில்லான சீன் என போற்றப்படுவது, இந்தப் படத்தில் வந்த ஷவர் சீன் தான். 45 செகண்டுகளில் கொலை நடப்பதைக் காட்டும் இந்த சீன், ஏழு நாட்கள் படமாக்கப்பட்டது, 70 கேமிரா செட்டப்புகளுடன்! இன்றளவும் இந்த சீன் உண்டாக்கிய தாக்கத்தை வேறெந்த சீனும் உண்டாக்கவில்லை. அந்த சீன் கீழே தரப்படுகிறது. நம்மூர் போன்று போர்வையை கழுத்துவரை கட்டிக்கொண்டு குளிக்கும்(!) நல்ல பழக்கம் அங்கே கிடையாது என்பதால், 18+ ஜாக்கிரதை!
  

இந்த சீனை மட்டும் பார்ப்பவர்களுக்கு ‘அப்படி ஒன்னும் பயங்கரமா இல்லியே?’ என்று தோன்றலாம், அது நியாயம் தான். ஏன் இந்த சீன் பயங்கரமானதாகப் போற்றப்படுகிறது என்பதற்கான விடை, படத்தின் திரைக்கதையில் இருக்கிறது. அது என்ன என்று நமக்குப் புரியவேண்டும் என்றால், நாம் எப்படி ஒரு படத்தைப் பார்க்கிறோம் என்று தெரிந்து கொள்வோம். இதில் தெரிந்துகொள்ள என்ன இருக்கிறது என்று யோசிக்கிறீர்களா? இருக்கிறது. 

பொதுவாக ஒரு படம் ஆரம்பித்த கொஞ்ச நேரத்தில் படத்தின் மெயின் கேரக்டரை ஃபாலோ செய்ய ஆரம்பிக்கிறோம். படங்களின் கதை அமைப்பு பொதுவாக, ஒரு ஹீரோ/ஹீரோயின் - அவருக்கு ஒரு பிரச்சினை-அதில் இருந்து வெளிவருதல் என்ற மூன்று விஷயங்களிலேயே இயங்கும். மெயின் கேரக்டருக்கு ஒரு பிரச்சினை என்றால் நாமும் கவலையடைகிறோம், அந்த கேரக்டர் ஜெயித்தால் நாம் சந்தோசம் அடைகிறோம். சுருக்கமாகச் சொல்வதென்றால், கேரக்டர் ஐடெண்டிஃபிகேசன்! அந்த கேரக்டருடன் நம்மை அடையாளப்படுத்திக்கொண்டு, மெய்மறந்து போகிறோம். 

சைக்கோ படமும் மேரியை மையப்படுத்தியே ஆரம்பிக்கிறது. முதல் காட்சியிலேயே பணம் அவர்களுக்குப் பிரச்சினையாக இருக்கிறது, அதனாலேயே திருமணமும் தள்ளிப்போகிறது என்பது நமக்குப் புரிகிறது.அடுத்து ஒரு பெரும்பணக்காரன் அலட்சியமாகக் கொடுக்கும் பிஸினஸ் பணம், மேரி கைக்கு வரவும் அதை எடுத்துக்கொண்டு மேரி ஓட ஆரம்பிக்கிறாள்.
பொருளாதாரத் தேவை என்பதும் இருப்பவனிடம் பிடுங்கும் ராபின்ஹூட் தியரியும் வேலை செய்ய, நாம் மேரியுடன் ஐக்கியமாகிறோம். வழியில் ஒரு போலீஸ்காரன் அவள்மேல் சந்தேகம் கொண்டு ஃபாலோ பண்ண, நாமும் பதறுகிறோம். அடுத்து ஒரு கார் விற்பனை செய்யும் நிலையத்தில் தன் காரை விற்றுவிட்டு புதிய கார் வாங்கும்போது, பிடிபட்டுவிடக்கூடாதே என்று நாமும் நெர்வஸ் ஆகிறோம். மிகவும் நுணுக்கமான டீடெய்லான காட்சியமைப்பால், நாமும் அங்கே இருப்பது போன்ற ஒரு ஃபீலிங்கை ஹிட்ச்காக் கொண்டுவருகிறார்.

இப்போது நாம் வேறு மேரி வேறு அல்ல எனும் அளவிற்கு நாம் கதையுடன் ஒன்றிப்போகும்போது, அந்த மோட்டலில் அவள் தங்க நேரிடுகிறது. அந்த லாட்ஜ் ஓனருடன் பேசும்போது, தான் செய்வது தவறு என்று உணர்கிறாள். அடுத்து திரும்பச் சென்று பணத்தைக் கொடுத்துவிடுவது என்றும் நினைக்கிறாள். அப்போது தான் அந்தக் கொலை நடக்கிறது. நாம் அதிர்ச்சியாகிறோம். ஏன்?

ஏனென்றால் மெயின் கேரக்டர் கொல்லப்படும் என்று நாம் எதிர்பார்ப்பதே இல்லை. மெயின் கேரக்டர் எப்படி பிரச்சினைகளை எதிர்கொண்டு இறுதியில் ஜெயிக்கிறது(டிராஜடி என்றால் தோற்கிறது) என்று பார்த்தே பழக்கப்பட்டது நம் மனம். திட்டமிட்டு நம்மை மெயின் கேரக்டருடன் அடையாளப்படுத்தவைத்து, அந்த மோட்டலுக்குள் கூட்டிச்சென்று திடீரென கொல்லும்போது அதிர்ச்சியாகிறோம். அங்கே கொல்லப்படுவது மேரி மட்டும் அல்ல, நம் கனவு, நம் நம்பிக்கை, நம் இன்னொரு பிம்பம்.

திரைக்கதையில் இது மிகவும் ரிஸ்க்கான வேலை. மெயின் கேரக்டரை பாதியிலேயே காலி செய்தால், மனதளவில் பார்வையாளர்களும் வெக்ஸ் ஆகி கதையை விட்டு வெளியே வந்துவிடுவார்கள். ஆனால் ஹிட்ச்காக் அதைத் திட்டமிட்டே செய்தார்.அந்த சீன் முடிந்தவுடன் நம் மனநிலையைக் கவனியுங்கள். யாரோ நம்மைக் கைபிடித்து அழைத்து வந்து, அந்த மர்மம் நிறைந்த மோட்டலில் விட்டுவிட்டது போன்ற ஒரு ஃபீலிங் வரும். தனியே...அந்த லாட்ஜ் ஓனருடன். அவனோ நிதானமாக மேரியின் ரத்தத்தை துடைத்துக்கொண்டு இருக்கிறான். ஓ மை காட்.........அது தான் ஹிட்ச்காக் எதிர்பார்த்தது. அவர் பேட்டியில் சொன்னார், “இந்தப் படத்தின் நடிகர்களை மட்டும் நான் டைரக்ட் செய்யவில்லை, படம் பார்ப்போரையும் சேர்த்தே டைரக்ட் செய்திருக்கிறேன்” என்று!  
ஏன் அந்தக் கொலை நடந்தது என்பதற்கு கிளைமாக்ஸில் சொல்லும் காரணமும் விளக்கமும் இன்னொரு அதிர்ச்சியான விஷயம். அந்த மேட்டர் கையில் இருந்ததாலேயே, தைரியமாக மெயின் கேரக்டரைக் கொன்றார் என்றும் சொல்லலாம். இந்தப் படத்தில் ஹிட்ச்காக் முயற்சித்த இன்னொரு விஷயம், Peeping Tom கான்செப்ட். அது வேறொன்றும் இல்லை, அடுத்தவர் அந்தரங்கத்தை எட்டிப்பார்க்கும் ஆவல் தான். 

உலகம் முழுக்க உள்ள சினிமா மேதைகள் எல்லாம் சினிமா என்பது அடையாளப்படுத்தல் என்பதை மட்டுமே மையமாக வைத்து இயங்குவது என்று நம்பி வந்தபோது, அப்படி இல்லை.அடையாளப்படுத்திக்கொள்ள முடியாத கேரக்டர்களையும் மக்கள் ரசிப்பார்கள், அடுத்தவர் அந்தரங்கத்தை எட்டிப்பார்க்கும் மனநிலையிலேயே படத்தையும் பார்ப்பார்கள் எனும் புதிய தியரியைக் கண்டுபிடித்து, நிரூபித்தும் காட்டினார் ஹிட்ச்காக். முதலில் Dial M for Marder-ல் இதை முயற்சித்து வெற்றி பெற்றார். அதில் வரும் எந்தவொரு கேரக்டருடனும் நம்மால் அடையாளப்படுத்திக்கொள்ள முடியாது. அதே தியரியைத்தான் சைக்கோவின் இரண்டாம்பாதியிலும் அப்ளை செய்ததாக பின்னர் கொடுத்த பேட்டியில் சொன்னார் ஹிட்ச்காக்.

இரண்டாம்பாதி முழுக்க அந்த லாட்ஜ் ஓனரும் அந்த மதர் கேரக்டரும் நடந்துகொள்ளும்விதம், அங்கே நடக்கும் சர்ப்ரைஸான சம்பவங்கள் என நாம் கொஞ்சமும் எதிர்பார்க்காத கிளைமாக்ஸை நோக்கி இந்தப் படம் நகர்கிறது.  லாட்ஜ் ஓனராக வந்த அந்தோணி பெர்க்கின்ஸின் அலட்டல் இல்லாத நடிப்பு, வில்லத்தனத்தில் புதுவிதம். அதே போன்றே முதல்பாதியில் வந்த நடிகை Janet Leigh-ன் நடிப்பும் அந்த பதட்டத்தை நமக்குள் கடத்துவதாக இருக்கும்.

இந்தப் படத்தின் பாதிப்பிலும் இதற்கு மரியாதை செய்யும்விதமாகவும் பல படங்கள் உலகம் முழுக்க பல மொழிகளில் எடுக்கப்பட்டுள்ளன. தமிழிலும் கௌதம் மேனன் நடுநிசி நாய்கள் என்று ஒரு படத்தை எடுத்தார். கேவலமாக வந்தது. அதைவிட மூடுபனி/சிகப்பு ரோஜாக்கள் படத்தை இந்தப் படத்திற்கு சமர்ப்பிக்கலாம்!

 இதுவரை நான்கு முறைக்கு மேல் இந்தப் படத்தைப் பார்த்திருக்கிறேன். ஒவ்வொரு முறை பார்க்கும்போதும், புதுப்புது விஷயங்கள், டெக்னிக்குகள் கிடைத்துக்கொண்டே இருக்கின்றன. அதனால்தான் பல திரைப்படக்கல்லூரிகளில் ஒரு பாடமாக இடம்பெற்றிருக்கிறது, இந்த த்ரில்லர் காவியம்!

மேலும் வாசிக்க... "Psycho (1960) - விமர்சனம்"
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

11 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.

Sunday, April 20, 2014

திமுக: இளவரசர் பட்டம் வெல்வாரா?

 தமிழர் நலன் பற்றியோ, ஈழத்தமிழர் உயிர் பற்றியோ கொஞ்சமும் கவனத்தில் கொள்ளாத காங்கிரசை ஒழிக்க வேண்டும் என்பதே நம்மைப் போன்ற சாமானியர்களின் ஆசையாக இருந்தது. அது இந்தத் தேர்தலில் நடந்தேறி இருக்கிறது. அதற்கு முழுமுதற் காரணம், ஸ்டாலின் தான். கலைஞர்-அழகிரி-கனிமொழி கொடுத்த நெருக்கடியையும் தாண்டி ஸ்டாலின் எடுத்த உறுதியான நிலைப்பாடுதான்,  காங்கிரஸை அரசியல் அநாதைகளாக இந்தத் தேர்தலில் ஆகியிருக்கிறது. அதற்காக ஸ்டாலினுக்கு நாம் நன்றி சொல்லியே ஆக வேண்டும்.
ஆனால் இதை நாம் கத்திக் கதறிய 2009ல் செய்திருந்தால், திமுக தமிழர் வரலாற்றில் தவிர்க்க முடியாத சக்தியாக நிலைபெற்றிருக்கும். . காலம் கடந்த ஞானமாக, இப்போது தான் திமுக விழித்துக்கொண்டுள்ளது. நாம் என்ன தான் காங்கிரஸை கழுவி ஊற்றினாலும், காங்கிரஸ்க்கு என்று குறிப்பிட்ட வாக்குவங்கி இன்னும் இருப்பது நிதர்சனம். அதையும் மீறி ஸ்டாலின் இந்த முடிவை எடுத்திருப்பது பாராட்டப்பட வேண்டிய விஷயம் தான்.

இதில் சிக்கல் என்னவென்றால், வாக்காளர்கள் நாம் நினைப்பதுபோல் முழுமாங்காய் மடையர்களாக இல்லாமல் இருப்பது தான். கடைசிவரை மத்திய அரசில் திமுகவும் ஒரு அங்கம் என்பதை எல்லோரும் உணர்ந்தே இருக்கிறார்கள். எனவே காங்கிரஸ் அரசை விமர்சிப்பது தன் தலையில் விடியும் என்பதால், திமுக அதைப் பற்றிப் பேசுவதைத் தவிர்த்தே ஆக வேண்டிய கட்டாயம். எனவே மிஞ்சுவது பாஜகவும் அதிமுகவும் தான். பாஜகவை விமர்சிக்க அதிகம் யோசிக்க வேண்டாம், இருக்கவே இருக்கிறது போலி மதச்சார்பின்மை. இஸ்லாமியர்களுக்கும் இப்போது வேறு வழி இல்லாததால், திமுக காட்டில் இஸ்லாமிய ஓட்டு மழை தான்.
பாஜகவை அடுத்து ஜெயலலிதாவை விமர்ப்பதில் இரு சிக்கல்களை திமுக எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. மின்வெட்டு, சட்டம் ஒழுங்கு போன்ற பிரச்சினைகளைப் பேசும்போது, கிராமத்தானுக்குக்கூட ’மின்வெட்டின் ஆதிகாரணம் திமுக அரசு..நிலமோசடி உள்ளிட்ட சட்டம் ஒழுங்கு பிரச்சினைகளுக்குக் காரணம், மாவட்டம் தோறும் உருவாகிய முதிர்ச்சியற்ற வாரிசு அரசியல்’ என்பது தெரிந்திருக்கிறது. எனவே நன்றாக அறுவடையாகக்கூடிய மின்வெட்டு பிரச்சினையைப் பற்றிப் பேசுவதும் தனக்கே ஆப்பாகும் நிலை. திமுகவின் இன்னொரு சிக்கல், இப்படி அதிமுக மாநில அரசின் அவலங்களைச் சொல்லி ஓட்டுக்கேட்கும்போது, ;இவர்கள் நாடாளுமன்றத் தேர்தலுக்கு ஓட்டுக்கேட்கிறார்களா? இல்லை, சட்டமன்றத் தேர்தலுக்கா? என்ற நக்கலான கேள்வியும் குழப்பமும் வாக்காளர் மனதில் உருவாவது.

ஸ்டாலினுக்கு இந்தத் தேர்தல் மானப்பிரச்சினை என்றே சொல்லலாம். இந்த தேர்தலில் நிற்பது கலைஞரின் திமுக அல்ல, இது ஸ்டாலினின் திமுக என்று அனைவரும் அறிந்தேயிருக்கிறார்கள். எனவே இந்தத் தேர்தலில் திமுக பெறப்போகும் வெற்றி/தோல்வி தான் ஸ்டாலின் ஆளுமைக்கு சான்றாக இருக்கும். குறைந்தது பத்து தொகுதிகளாவது வென்றால்தான் மரியாதையாக இருக்கும். ஆனால் அதற்கு கடுமையாகப் போராட வேண்டிய நிலையிலேயே ஸ்டாலின் இருக்கிறார். அழகிரியின் கலகம், தென்மாவட்டங்களில் கழகத்தை பாதிக்கவே செய்யும். (நான் சுற்றித்திரிந்த விருதுநகர் மற்றும் தென்காசி தொகுதிகளில் திமுக மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டிருப்பது ஒரு உதாரணம்.)

திமுக தொண்டர்கள் ஸ்டாலினின் தலைமையை ஏற்க முடிவுசெய்துவிட்டார்கள் என்பதே நிதர்சனம். ஆனால் அழகிரியின் அலப்பறைகள் பொதுமக்கள் மத்தியில் கட்சிப்பெயரைக் கெடுக்கின்றன. கடைசி நேரத்தில் யாருக்கு ஓட்டுப்போடுவது என்று முடிவு எடுக்கும் மக்களிடம் திமுகவின் பெயர் அடிவாங்கியிருக்கிறது. உண்மையில் அழகிரிக்கு ஆதரவு இருக்கிறதோ இல்லையோ, கட்சி பலவீனமாக இருப்பது போன்ற தோற்றத்தைத் தருவதில் அழகிரி ஜெயிக்கிறார் என்றே சொல்ல வேண்டும்.

ஸ்டாலினிடம் இருக்கும் இன்னொரு குறை, தேர்தல் நேரத்தில் உள்கட்சிக்குள் அவரே குழப்பத்தை விளைவிப்பது. துரைமுருகனோடு இப்போது மனஸ்தாபம் என்று சொல்கிறார்கள். கலைஞர் கூட்டணிக்கட்சிகளிடம்கூட தேர்தல் நேரத்தில் உரச மாட்டார். ஆனால் ஸ்டாலின் உள்கட்சிக்குள் அவராகவே எதிர்ப்புகளை உருவாக்குவதன் விளைவு, தேர்தல் முடிவுகளில் தெரியும். ஈரோடு போன்ற தொகுதிகளில் வேட்பாளர் தேர்விலும் சொதப்பியிருப்பதாகத் தெரிகிறது. ஒட்டுமொத்தத்தில் அதிக சீட்களை வெல்லுவதைவிட, இந்தத் தேர்தலில் இரண்டாம் இடத்திற்கு வருவதே திமுகவின் பெரும் சாதனையாக இருக்கும்.

நெகடிவ் பாயிண்ட்ஸ்:
1. மின் வெட்டு : அம்மையாராவது இந்த பிரச்சினையை தீர்த்திருக்கலாம். அவரும் மகா தியானத்தில் ஆழ்ந்துவிட்டதால், இன்னும் மின்வெட்டுப் பிரச்சினைக்கு திமுக திட்டு வாங்க வேண்டியுள்ளது.
2. பிரதம வேட்பாளர் யார் என்று சொல்லாமல் ஓட்டுக்கேட்பது பெரும் பலவீனம்.
3. காங்கிரஸ் அரசின் விலைவாசி உயர்வு, தமிழர்களிடம் மாற்றாந்தாய் மனப்பான்மை போன்ற தவறுகளைக்கூட சொல்ல முடியாமல், கூட்டுக்களவாணியாக மாட்டிக்கொண்டது (மீத்தேன் திட்டம் ஒரு உதாரணம்)
4. வயோதிகத்தால் கலைஞரின் பிரச்சாரம் குறைந்து போனது
5. பல தொகுதிகளில் கடும் போட்டியைக் கொடுக்கும் பாஜக அணி
6. அழகிரி + உள்கட்சிப்பூசல்
7.கனிமொழி+ ராசா+ 2ஜி ஊழல்
8. மக்கள் இன்னும் முந்தைய திமுக (மாநில) அரசு மீதான கோபத்தில் இருந்து மீளாமல் இருப்பது.
பாசிடிவ் பாயிண்ட்ஸ்:
1. கலைஞர் 
2. தி கிரேட் மதச்சார்பின்மை
3. மோடிப் பூச்சாண்டி
4. முஸ்லிம் ஓட்டுகள் 
5. சில தொகுதிகளில் கிடைக்கப்போகும் காங்கிரஸ் ஓட்டுகள்
6. என்ன நடந்தாலும் கட்சியை விட்டுக்கொடுக்காத உண்மையான தொண்டர்கள்
7. அதிமுகவை விட்டால் வேறு வலுவான கட்சியின்றி தமிழன் இருக்கும் இழிநிலை


மேலும் வாசிக்க... "திமுக: இளவரசர் பட்டம் வெல்வாரா?"
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

17 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.

Friday, April 18, 2014

தெனாலிராமன் - திரை விமர்சனம்

அதாகப்பட்டது... :
மூன்று ஆண்டு வனவாசத்திற்குப் பிறகு, வைகைப்புயல் வடிவேலு நடிப்பில் இன்று வெளியாகியிருக்கும் படம் தெனாலிராமன். ஏற்கனவே ட்ரெய்லரும், பாடல்களும் நம் மனதைக் கவர்ந்துவிட்டன. படமும் நம் எதிர்பார்ப்பை ஈடு செய்ததா என்று பார்ப்போமா!!
ஒரு ஊர்ல..:
மன்னராக ஒரு வடிவேலு. அவரது நவரத்தின அமைச்சர்களான ஒன்பது பேரும் வில்லன் ராதாரவியுடன் இணைந்துகொண்டு, நாட்டையே குட்டிச்சுவராக்குகிறார்கள். இது ஏதும் அறியாத மன்னன் அந்தப்புரத்தில் மனைவிகளோட லயித்து இருக்கும்போது, தெனாலிராமனான இன்னொரு வடிவேலு மந்திரியாக வருகிறார். பிறகு அவர் எப்படி மன்னனைத் திருத்தி மந்திரிகளிடம் இருந்து காத்து, இளவரசியை லபக்குகிறார் என்பதே கதை.

உரிச்சா....:
ஒன்பது மந்திரிகளும் சீன அரசிடம் நமது நாட்டை வியாபாரத்துக்கு திறந்துவிட ஒப்புக்கொள்வதுடன் படம் ஆரம்பிக்கிறது. மன்னர் ஒரு மக்கு என்பதையும் நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது. அப்பாவியான மன்னர் நாடு நலமாக இருப்பதாக மந்திரிகள் சொல்வதை நம்பிக்கொண்டு அந்தப்புரத்தில் 36 மனைவிகளுடன் ஜாலியாக இருக்கிறார். சீனப்பயணத்தில் ஒரு நல்ல மந்திரி சீன வில்லனால் கொல்லப்பட, அந்த பதவிக்கு யாரைப் போடுவது என போட்டி நடக்கிறது. தெனாலிராமன் ஜெயித்து மந்திரியாக உள்ளே நுழைகிறார். அவரை ஜெயிக்க விடாமல் தடுக்க, மந்திரிகள் போராடுவதும் வடிவேலு அதையும் மீறி ஜெயிப்பதும் கலகலப்பான காட்சிகள்.
தொடர்ந்து தெனாலிராமனின் புத்திசாலித்தனத்தில் மன்னரும் இளவரசியும் மயங்குகிறார்கள். மன்னர் ஏதாவது டெஸ்ட் வைப்பதும் தெனாலிராமன் ஜெயிப்பதுமாக கலகலப்பூட்டும் காட்சிகளுக்கு இடையே, மன்னரைத் திருத்தும் வேலைகளும் நடக்கின்றன. ஆனாலும் மந்திரிகள் தெனாலிராமன் மேல் பழி சுமத்தி, அரண்மனையை விட்டே விரட்டுகிறார்கள். மீண்டும் மன்னரும் தெனாலிராமனும் இணைந்தார்களா, மன்னர் திருந்தினாரா என்பதை சுவையாக ஆனால் ஸ்லோவாகச் சொல்லி இருக்கிறார்கள்.

தெனாலிராமன் கதைகளை ஏற்கனவே படித்தவர்களுக்கு வடிவேலு எப்படி சமாளிப்பார் என்பதை எளிதாக யூகிக்க முடியும் என்பது தான் படத்தின் பலவீனம். ஆனாலும் வடிவேலு தனது மேனரிசத்தாலும் டயலாக் டெலிவரியாலும் சமாளிக்கிறார். புலிகேசி பாணியில் மக்களைக் கவனிக்காத மன்னர் + போராளி கான்செப்ட்டையே தெனாலிராமன் எனும் தேன் தடவி சொல்லியிருக்கிறார்கள். புலிகேசி அளவிற்கு சிரிக்க வைக்கும் காட்சிகள் அதிகம் இல்லை.(இருக்கின்றன, ஆனாலும் அந்த அளவிற்கு சிரிப்பு வரவில்லை). இந்திரலோகத்தில் அழகப்பன் அளவிற்கு மோசம் இல்லை, புலிகேசி அளவிற்கு டாப்பும் இல்லை.

கதை கொஞ்சம் சீரியஸ் ஆனாலே ஃப்ளாஷ்பேக் போட்டு, மன்னர்-தெனாலி விளையாட்டுக்குப் போய் நம்மை ரிலாக்ஸ் பண்ணிவிடுகிறார்கள். நல்ல உத்தி.
வடிவேலு:
பொதுவாகவே நடிகர்கள் கொஞ்சம் கேப் விட்டு நடிக்க வந்தால், பழைய ஈர்ப்பு போய்விடும். ஆனால் இதில் வடிவேலு அப்படியே திரும்பி வந்திருக்கிறார். மன்னராகவும் தெனாலிராமனாகவும் நடிப்பு+நகைச்சுவையில் நன்றாகவே வித்தியாசம் காட்டி கலக்குகிறார். ஹீரோயினுக்கு அப்பாவாகவும் ஜோடியாகவும் நடிக்க அதிக துணிச்சல் வேண்டும்! தோற்றத்தில் பெரிய வித்தியாசம் இல்லாவிட்டாலும், மேனரிசங்களால் சமாளித்துவிடுகிறார். இரு கேரக்டர்களில், குழந்தைகளுடன் ஒளிந்து விளையாடுகின்ற, ஒவ்வொரு முறையும் வெவ்வேறு மனைவியுடன் வரும் மன்னரே நம்மை அதிகம் கவர்கிறார்.

மீனாட்சி தீட்சித்:
வடிவேலுவுக்கு ஜோடியாக நடிக்க ஒத்துக்கொண்டதே பெரிய விஷயம். இதில் அவரை குறை சொல்வது பாவம்.....எப்போதும் கலகலப்பாக இருக்கும், மந்திரி மேல் மையல் கொள்ளும் இளவரசி வேடத்திற்கு கச்சிதமாகப் பொருந்துகிறார். இது குழந்தைகள் படம் என்ற தோற்றம் வந்துவிடக்கூடாது என்பதால் படம் முழுக்க தொப்புளுடன் கிளிவேஜ் தரிசனம். அத்தான் என்று கட்டிப்பிடித்தாலும் அப்பா என்று கட்டிப்பிடித்தாலும் கிளி தரிசனம் தவறாமல் கிட்டுகிறது!
சொந்தபந்தங்கள்:
மந்திரிகளில் மனோபாலா தான் டாப். வழக்கம்போல் அதிராமல் பேசி சிரிக்க வைக்கிறார். காமெடி வில்லன்களாகவே ஒன்பது பேரும் வருகிறார்கள். குறுநில மன்னராக வரும் ராதாரவி பொருத்தமான தேர்வு. இவரை விட்டால் நாசர் தான். தேவதர்ஷிணி நல்ல நகைச்சுவை நடிகையாக் ஃபார்ம் ஆகிவிட்டார். டயலாக் டெலிவரி அட்டகாசம். ஹீரோயினின் அம்மாவாக ஒரு காட்சியில் வரும் அந்த ஆண்ட்டி, செம எக்ஸ்பிரசன்.

டெக்னிக்கல் டீம்:
வடிவேலு புறாவை பறக்கவிட்டு நடந்துவரும் ஒரு ஷாட் இருக்கிறது பாருங்கள்..பின்னிவிட்டார்கள். ஒரு மாஸ் ஹீரோவுக்கு ஓப்பனிங் சீனாக வைக்கலாம். அவ்வளவு அழகு அந்த ஷாட். (படத்தில் இடையில் வருகிறது.) ராம்நாத் ஷெட்டியின் ஒளிப்பதிவு அருமையிலும் அருமை. தியேட்டரில் வசனங்கள் அற்ற அந்த ஒரு நிமிட ஷாட்டுக்கு கைதட்டல் கிடைத்தது. படத்தில் கலர்ஃபுல்லான ஆர்ட் டைரக்சன். புலிகேசி போல் இல்லாமல் இதில் அரண்மனையை வண்ணமயமாக உருவாக்கியிருக்கிறார்கள். பார்க்க நன்றாக இருக்கிறது.

நெகடிவ் பாயிண்ட்ஸ் :
- ஸ்லோவான முதல்பாதி
- பழகிய தெனாலிராமன் ஜோக்ஸ், வேறு நகைச்சுவை பெரிதாக இல்லாதது
- ஆரம்பம் முதல் இறுதிவரை யூகிக்க வைக்கும் திரைக்கதை. பெரிய ட்விஸ்ட் எதுவும் இல்லாமல் இருப்பது ஒரு குறை.
பாஸிடிவ் பாயிண்ட்ஸ்:
- வடிவேலு...வடிவேலு..வடிவேலு
- ஆரூர்தாஸின் அற்புதமான வசனங்கள் 
- மன்னருக்கும் தெனாலிராமனுக்கும் உருவாகும் நட்பை அழகாக திரையில் கொண்டு வந்தது
- மன்னரின் குழந்தைத்தனத்தை ரசிக்கும்படி சொன்னது
- எதிர்பாராமல் வந்து விழும் ‘நார்மல்’ தமிழ் நகைச்சுவை வசனங்கள். 
- ஃபைட் சீன் இல்லாமல் படத்தை எடுத்தது
- இமானின் பாடல்கள். ‘ஆணழகு’ பாடலும் நெஞ்சே பாடலும் கேட்கவும் பார்க்கவும் நன்றாக இருக்கின்றன.

பார்க்கலாமா? :
குடும்பத்துடன் ஒருமுறை பார்க்கலாம். அதிகம் எதிர்பார்க்காமல் சென்றால், மூன்று வருடங்கள் கழித்து வந்திருக்கும் வடிவேலுவை ரசிக்கலாம்.

மேலும் வாசிக்க... "தெனாலிராமன் - திரை விமர்சனம்"
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

17 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.

Saturday, April 12, 2014

அதிமுக: பறந்து அடிக்கும் பெண் சிங்கம்

 இந்தத் தேர்தலில் முன்னிலையில் இருப்பது யார் என்றால் அதிமுக தான். எல்லாருக்கும் முன்பே வேட்பாளர்களை அறிவித்துவிட்டு, பிரச்சார வண்டியை முதல் ஆளாகக் கிளப்பியவர் ஜெயலலிதா. வண்டி புறப்பட்ட வேகத்தில் கம்யூனிஸ்கள் முகத்தில் வண்டிப்புகை கரி பூசியது தனிக்காமெடி. 

மற்ற கட்சிகள் எல்லாம் கூட்டணிப் பேச்சுவார்த்தை என்ற பெயரில் மக்களைக் குழப்பிக்கொண்டிருந்தபோது, தெளிவான முடிவுடன் பிரச்சாரத்தை ஆரம்பித்தார். அதற்கு முன் அவர் உறுதிப்படுத்திக்கொண்டது ஒன்றே ஒன்று தான், அது திமுக-காங்கிரஸ் கூட்டு வந்துவிடக்கூடாது என்பது. அதற்கு தூக்குதண்டனை விவகாரம் உதவியது. காங்கிரஸுடன் கூட்டணி என்பதை கனவிலும் யாரும் நினைக்காதபடி, அந்த விவாகரத்தில் சிக்ஸர் அடித்தார்.(மூன்று பேர் வாழ்க்கையில் இப்படி விளையாடலாமா என்றால்...........அவர் அப்படித்தான்!).
தேர்தல் வேலையை ஆரம்பிக்கலாமா, வேண்டாமா? ஆரம்பிச்சா கூட்டணின்னு யார் பேரைப் போடறதுன்னு மற்ற கட்சித் தொண்டர்கள் யோசிக்கும்போதே, ‘அம்மா தான் பிரதமர். போடுங்க ஓட்டை!’ என்று ரத்தத்தின் ரத்தங்கள் சுறுசுறுப்பாக வேலையை ஆரம்பித்துவிட்டார்கள். மற்ற கட்சிகளின் பிரச்சார ஸ்டைலுக்கும் ஜெயலலிதாவின் பிரச்சார ஸ்டைலுக்கும் பெரிய வித்தியாசம். முதலில் மக்களுடன் மக்களாக என்பதே கிடையாது, மகாராணியார் தரிசனம் ஸ்டைல் தான். அடுத்து ;எனக்கு ஓட்டுப் போடுங்கள்’ என்ற வேண்டுகோள் கிடையாது, கட்டளை தான். போடுவீர்களா?....செய்வீர்களா? தான்!

கட்சிக்கென இருக்கும் பெரும் வாக்குவங்கி என்பது தான் பலம். ஆனால் வாக்குவங்கி கணக்கிடும் முறையைக் கவனித்தால், அதில் கூட்டணிக்கட்சிகளின் வாக்கும் அடக்கம். இதுவரை அதிமுக, அதிக தொகுதிகளில் நின்று வந்திருக்கிறது. அதிக உறுப்பினர்களைக் கொண்ட கட்சி என்றாலும், அது தனித்து நின்று ஜெயிக்கும் அளவுக்கு வாக்குவங்கி கொண்டதா என்றால் சந்தேகம் தான். ஆனால் திமுகவும் ஏறக்குறைய தனித்து நிற்பதாலும் உள்கட்சிப்பூசலில் சிக்கி இருப்பதாலும், அதிமுக முன்னிலை பெறுகிறது. 

இப்படியே பதிவைத் தொடர்ந்து இந்த தேர்தலில் யார் ஜெயிப்பார்கள், எத்தனை சீட் ஜெயிப்பார்கள் என்று கணிப்பதை விட, கட்சிகளின் பாசிடிவ் & நெகடிவ் பாயின்ட்ஸை மட்டும் சொல்லிவிட்டு, க்ளோஸ் செய்வது நமக்கு மரியாதை!
நெகடிவ் பாயிண்ட்ஸ்:
1. மின் வெட்டு : கோடையில் தேர்தலை வைப்பது யாருக்கு கெடுதலோ இல்லியோ, ஆளும்கட்சிக்கு ரொம்பக் கெடுதல்.

2. அதிமுக எம்.எல்.ஏ/மந்திரிகள் மேல் இருக்கும் அதிருப்தி. பல இடங்களில் அவர்களை விரட்டி அடிக்கும் அவலம்

3. காசுக்கு வரும் கூட்டம் : மற்ற கட்சிகளை விட அதிமுக இந்த விஷயத்தில் வெளிப்படையாகவே கெட்ட பெயர் வாங்கியுள்ளது. கிராமப்புறங்களில் இருந்து 100 ரூபாய் முதல் 250 ரூபாய்வரை கொடுத்து (கூடவே பிரியாணி+குவாட்டர்), ஆட்களைக் கூட்டி வருகிறார்கள் (அந்த நற்காரியத்தை என் மாமனாரும் செய்ததாக வதந்தி!). அப்படி அழைத்து வரப்படும் அனைத்து மக்களும், ஓட்டுப்போடுவார்களா என்பது சந்தேகமே!

4. நேரங்கெட்ட நேரத்தில் உயிரையெடுக்கும் பெங்களூர் வழக்கு.

5. பிரச்சார ஸ்டைல் : இருப்பதிலேயே மோசமான பிரச்சாரம் அம்மையாருடையது தான். நியூஸில்கூட அதைப் பார்க்க பெரும்பாலானோர் தயாராக இல்லை என்பதே உண்மை. செய்வீர்களா என்ற வார்த்தையைச் சொல்லவே பயமாக இருக்கிறது!

6. அடிமை மந்திரிகள் நடந்துகொள்ளும்/நடத்தப்படும் விதம். பார்ப்பவர் அருவெறுக்கும் வண்ணம், மிகக்கேவலமாக இருப்பது.
பாசிடிவ் பாயிண்ட்ஸ்:

1. இரட்டை இலை 

2. மேலே சொன்னபடி, தெளிவான முடிவு (சரியான முடிவா என்பதை மக்கள் தான் சொல்லணும்)

3. எதிரியாக வலுவான கூட்டணி இல்லை. திமுகவும் அழகிரியுடன் மல்லுக்கட்டிக்கொண்டிருப்பது..பாஜக கூட்டணிப் பேச்சுவார்த்தையிலேயே எனர்ஜியை வேஸ்ட் செய்தது.

4. இன்னும் திமுக ஆட்சி மேல் மறையாத வெறுப்பு. அதிமுகவைப் பாதிக்கும் ‘மின் வெட்டு பிரச்சினையினை அறுவடை செய்யும் யோக்கியதௌ திமுகவுக்கு இல்லாமல் இருப்பது.

5. மக்கள் தங்கள் ஓட்டு வீணாகிவிடக்கூடாதே எனும் கவனம் உள்ளவர்கள். எனவே பாஜக கூட்டணி வீக்காக இருக்கும் தொகுதிகளில், மோடி ஆதரவு ஓட்டுகள் அம்மையாருக்கே!

6. ஆளும் கட்சியாக இருப்பது. சிலர் அப்பாவியாக ‘எப்படியும் ஆளும்கட்சி தானுங்களே வரும்?’ என்று இதை இடைத்தேர்தல் ரேஞ்சுக்கு நினைத்துக்கொண்டு அப்பாவித்தனமாக என்னிடமே கேட்டனர்.

7. பெண்களுக்கு அம்மையார் மேல் இருக்கும் சாஃப்ட் கார்னர்

8. நடிகர் ராமராஜன், சீமான், விந்தியா போன்ற சினிமாக்காரர்களின் பிரச்சாரம்

8. கூட்டத்திற்கு வர 200 ரூபாய் கொடுத்தால் வேகாத வெயிலில் 5 மணி நேரம் அசையாமல் உட்கார்ந்திருக்கும் முட்டாள் ஜனங்கள், கூட 300 ரூபாய் கொடுத்தால் ஒரு மணி நேரம் க்யூவில் நின்று ஓட்டும் போட மாட்டார்களா எனும் நம்பிக்கை!


மேலும் வாசிக்க... "அதிமுக: பறந்து அடிக்கும் பெண் சிங்கம்"
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

6 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.

Friday, April 11, 2014

நான் சிகப்பு மனிதன் - திரை விமர்சனம்

அதாகப்பட்டது... :
சமர் படத்திற்குப் பிறகு இயக்குநர் திருவின் இயக்கத்திலும், பாண்டிய நாடு வெற்றிக்குப் பின் விஷாலின் நடிப்பில் இன்று வெளியாகி இருக்கும் படம், நான் சிகப்பு மனிதன். தீராத விளையாட்டுப்பிள்ளையாக இருந்த விஷால் திருந்தி, பாண்டியநாட்டில் வெற்றிக்கொடி நாட்டியபின் வரும் படம் என்பதாலும், லிப் டூ லிப் கிஸ் இருக்கிறது என்பதாலும் படத்துக்கு நல்ல எதிர்பார்ப்பு. எப்படி இருந்தது கிஸ்..ச்சே..படம் என்று பார்ப்போம், வாருங்கள்.
ஒரு ஊர்ல..:
’நார்கொலாப்ஸி’ எனும் நோயினால் அவதிப்படும் மனிதர் விஷால். அப்படீன்னா என்னன்னா, ஏதாவது அதிர்ச்சியான செய்தியை/சத்தத்தை கேட்டாலோ, ஷகீலா படம் பார்த்தாலோ, உணர்ச்சிவசப்பட்டாலோ(ரெண்டும் ஒன்னுதாங்கிறீங்களா?..!) பொசுக்குன்னு தூங்கிடுவார் மனுசன். இதெல்லாம் ஒரு மேட்டரான்னு நினைக்காதீங்க. அந்த பிரச்சினையால மேட்டர்கூட கஷ்டம்ங்கிறது தான் சிக்கலே..இப்போப் புரியுதா, எம்மாம் பெரிய வியாதின்னு. சரி..அப்படிப்பட்ட மனுசனையும் புரிஞ்சுக்கிட்டு, லவ் பண்ணுதாரு லட்சுமி மேனன். ஆனால் ஒரு இக்கட்டான சூழ்நிலையில, இந்த வியாதியால லட்சுமியை விஷால் காப்பாத்த முடியாம போயிடுது. அதனால லட்சுமி கோமா ஸ்டேஜ்க்கு போயிடுறாங்க..அதுக்குக் காரணமானவங்களை கண்டுபிடிச்சு, இந்த நோயையும் மீறி எப்படி பழி வாங்குகிறார் என்பது தான் கதை.

உரிச்சா....:
விஷால் நண்பர்களுடன் அலைந்து திரிந்து ஒரு துப்பாக்கி விலைக்கு வாங்குவதில் ஆரம்பிக்கிறது படம். அடுத்து நார்கொலாப்ஸின்னா என்னன்னு விவரிச்சுட்டு, சட்டுபுட்டுன்னு கதைக்குள்ளே நுழையறாங்க. Bucket List மாதிரி விஷாலுக்கும் சில விஷயங்கள் வாழ்க்கையில் நடக்கணும்ன்னு ஆசை. ரோட்ல தனியாப் போகணும்..ஒருநாள் ஃபுல்லா முழிச்சிருக்கணும்..தேவதையைப் பார்க்கணும்..லவ் பண்ணனும்..கிஸ் பண்ணனும்..தப்பு செய்றவங்களை தட்டிக்கேட்கணும்ன்னு பத்து விஷயங்களை லிஸ்ட் போட்டு வச்சிருக்காரு..அடடா, விட்டுட்டனே..ஷகீலா படத்தை முதல்நாள் முதல் ஷோ பார்க்கணும் என்பதும் ஒரு ஆசை!

அந்த ஆசைகள் நிறைவேறுவதை தனியாச் சொல்லாம, அவரோட வாழ்க்கையில் நடக்கும் ஒரு சம்பவம் அடுத்த சம்பவத்துக்கு(ஆசைக்கு) இட்டுச் செல்ற மாதிரி காட்டியிருப்பது நல்ல திரைக்கதை உத்தி. சமர் திரைக்கதை மாதிரியே இதிலும் முதல்பாதியில் பின்னியிருக்கார் திரு. லட்சுமியை ‘அந்த’ சூழ்நிலையில காப்பாத்த முடியாம, அதிர்ச்சியாகி விஷால் தூங்கறது பதற வைக்குது. அப்போ விடறாங்க இண்டர்வெல்.
இண்டர்வெல் வரைக்குமே படம் பட்டையைக் கிளப்புது. லட்சுமியை கோமாக்கு அனுப்புன ரவுடிகளை எப்படி பழிவாங்கப்போறார்ன்னு ஆவலையும் தூண்டும்படியா, இண்டர்வெல் ப்ளாக். ரவுடிகளில் ஒருத்தன் பேர் மட்டும் விஷாலுக்கு தெரியுது. அதை வச்சு, அவங்களைத் தேடி அவர் அலையறாரு. அந்த ரவுடியைக் கண்டுபிடிக்கும்போது, அவங்களை அனுப்புன வில்லன் யாருன்னு நமக்குத் தெரியுது. அந்த வில்லன் ஏன் அப்படி விஷாலுக்குப் பண்ணான்னு ஒரு ஃப்ளாஷ்பேக் வைக்கிறாங்க பாருங்க, அங்கே தான் படம் டொக் ஆகிடுது.

ஒரு நீளமான, கேவலமான ஃப்ளாஷ்பேக். ஒருத்தன் விஷால் மாதிரி அப்பாவிக்கு இப்படி ஒரு காரியம் பண்ணி இருக்கான்னா, அதுக்கான காரணம் எப்படி இருக்கணும்? (அல்லது நான் மகான் அல்ல மாதிரி காரணமே இல்லாம தப்பு பண்ணும் ரவுடிகள்ன்னு விட்டிருக்கலாம்). ஆனால் இதில் சீன் படக்கதை மாதிரிப் போகுது அந்த ஃப்ளாஷ்பேக். படத்துக்கு யூ/ஏ சர்ட்ட்ஃபிகேட் கிஸ்க்காக கொடுத்திருக்க மாட்டாங்க. இந்த ஃப்ளாஷ்பேக்கிற்க்காத்தான் கொடுத்திருப்பாங்க. இனியா எனும் நல்ல நடிகையை சென்னையில் ஒருநாளுக்கு அப்புறம் அதே கேரக்டர்ல பார்க்க கொடுமையா இருக்கு. ஆனால் அவருக்கு நல்ல நடிப்பு. 

வில்லன்.அவனுக்கு துரோகம் பண்ணும் மனைவி..பொண்டாட்டியை இன்னொருத்தன்கிட்ட அனுப்பி காசு வாங்கும் புருசன்னு அய்யய்யோ..சகிக்கலை. இந்த மாதிரிப் படத்தில் அந்த மாதிரியான கேரக்டர்களையோ, சீன்களையோ யாரும் எதிர்பார்க்கலை. முதல்பாதியில் கிஸ்+ஜலக்கிரீடை இருந்தாலும் ஆபாசமாத் தெரியலை. ஆனால் அந்த டீசண்ட்டா முன்பாதி செட் பண்ண மனநிலைக்கு நேரெதிரா சீன்கள் வரும்போது, ரசிக்க முடியலை. சர்ப்ரைஸ் கொடுக்கணும்ன்னு டைரக்டர் நினைச்சிருக்காரு, ஆனால் அது ‘அதிர்ச்சி’ ஆகிடுச்சு!

அந்த வில்லனோ, ஃப்ளாஷ்பேக்கோ இல்லாமலேயே (இப்போ கட் பண்ணாலும்) படம் நல்லாத்தான் இருந்திருக்கும். இந்த நோயோட அவர் எப்படி ஜெயிக்கிறார்ன்னு கதை சொல்ல வந்துட்டு, அவருக்கு ஏன் அப்படிப் பண்ணாங்கன்னு விளக்குறதுக்கு அதிக நேரம் எடுத்து, ஆபாசமா விளக்கிட்டதால இரண்டாம்பாதியில் பாதி அவுட் ஆகிடுது. அப்புறமா விஷால் பழி வாங்குறதைக் காட்டினாலும் ‘அட..போங்கப்பா’ எனும் மனநிலைக்கு நாம வந்திடறோம்.

சமர் பட திரைக்கதை டெம்ப்ளேட்டில் இதையும் சொல்லி இருக்கிறார்கள். சமர் படத்திலும் முதல் பாதியில் வலுவான முடிச்சை திரு போட்டிருப்பார். ஆனால் அந்த முடிச்சை அவிழ்ப்பதில் கோட்டை விட்டிருப்பார். இதிலும் அப்படியே!
விஷால்:
பஞ்ச் டயலாக், ஹீரோயிசம் இல்லாம விஷாலைப் பார்க்க நல்லா இருக்கு. இதே ரூட்டில் போறது அவருக்கும் நமக்கும் நல்லது. நார்கொலாப்ஸி நோயால் பாதிக்கப்பட்டவரா  தத்ரூபமா நடிச்சிருக்கார். தூங்கறதுல என்னய்யா தத்ரூபம்ங்கிறீங்களா? அதைச் சொல்லலை..அந்த நோயால் வேலை கிடைக்காமல் ஃபீல் பண்றது, லட்சுமி மேனனை லவ் பண்ணும் சீன்ஸ், லட்சுமியுடன் வரும் அந்த பாத்ரூம் சீன்(நல்ல சீன் தான்.)..என பல காட்சிகளில் நடிப்பில் கலக்கி இருக்கிறார். ஒரு நடிகரா ஜெயிச்சிட்டார், விஷால்.

லட்சுமி மேனன்:
நடிக்கத் தெரிந்த சில நடிகைகளில் ஒருவர். இதில் சிட்டி பொண்ணா வர்றார். இண்டவ்ர்ல்ல கோமாக்கு போயிடறதால, இரண்டாம்பாதியில் நடிக்க ஸ்கோப் இல்லை. ஆனால் முதல் பாதியில் சின்ன சின்ன எக்ஸ்பிரசன்ஸில்கூட அசத்துகிறார். அந்த கண்களே, அவர் நினைப்பதைச் சொல்லிவிடுகின்றன. அட்டகாசம்! பெண்ணே..பெண்ணே பாடல் காட்சியில் அவர் ரொமாண்டிக்காக ஆடுவதைத் தான் பார்க்க முடியவில்லை. ‘கதைக்குத் தேவைப்பட்டதால முத்தம் கொடுத்தேன்’ன்னு சொன்னார். அது உண்மை தான்!

சுந்தர்:
யார் இவரு? இவருக்கெல்லாம் எப்படி சான்ஸ் தர்றாங்கன்னு தெரியலை. மூணு படத்தில் தனுஷ் நண்பனா வந்தவர். மயக்கம் என்ன, மூணு, கதிர்வேலன் காதலின்னு இவரோட அற்புதமான நடிப்பால் ஊத்தி மூடுன படங்கள் ஏற்கனவே பல உண்டு. அப்படி இருக்கும்போது, மெயின் வில்லன் கேரக்டருக்கு..அதிலும் நடிக்க நல்ல ஸ்கோப் உள்ள அந்த கேரக்டருக்கு இவரை எப்படிப் போட்டார்கள் என்று தெரியவில்லை..முடியலை. அவரோட ‘வெற்றி’ப்பட வரிசையில் இதையும் சேர்த்த பெருமை அவருக்கே!

டெக்னிக்கல் டீம்:
படம் முழுக்க நம்மை அசத்துவது ரிச்சர்ட் நாதனின் ஒளிப்பதிவும், ரூபனின் எடிட்டிங்கும். த்ரில்லர் எஃபக்ட்டைக் கொடுப்பதில் இருவரும் போட்டி போட்டு உழைத்திருக்கிறார்கள். ஜீ.வி. பிரகாஷ் இசையில் பெண்ணே பாடல் ஓகே..வசனங்களில் நல்ல ஷார்ப்னெஸ் தெரிகிறது.

நெகடிவ் பாயிண்ட்ஸ் :
- அலைபாயும் இரண்டாம்பாதி
- வில்லனின் ஃப்ளாஷ்பேக்..(ஃபேமிலி ஆடியன்ஸைக் கவராது)
- சூப்பர் வில்லன் சுந்தர்

பாஸிடிவ் பாயிண்ட்ஸ்:

- விறுவிறுப்பான முதல்பாதி திரைக்கதை
- வசனம் 
- விஷால் & லட்சுமி மேனனின் மெச்சூரிடீயான நடிப்பு + கெமிஸ்ட்ரி.
- அவ்வப்போது ரிலாக்ஸ் செய்யும் ஜெகனின் காமெடி டயலாக்ஸ்
- இனியாவின் நடிப்பு

பார்க்கலாமா? :

முதல்பாதிக்காக..........................பார்க்கலாம்!

மேலும் வாசிக்க... "நான் சிகப்பு மனிதன் - திரை விமர்சனம்"
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

16 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.

Wednesday, April 9, 2014

உங்கள் ஓட்டு யாருக்கு? (தேர்தல் ஸ்பெஷல்)

ஈழப்போர் உச்சத்தில் இருந்த 2009ல் டெல்லியில் வேலை பார்த்துக்கொண்டிருந்தேன். ஈழத்தில் கொத்துக் கொத்தாக மக்கள் மடிந்து கொண்டிருந்த நேரம், முத்துக்குமார் தீக்குளித்திருந்த நேரம் அது. டெல்லியில் அது பற்றிச் சிறு சலனம்கூட இல்லை. நாடாளுமன்றமும் வழக்கம்போல் இயங்கிக்கொண்டிருந்தது. தமிழர்களின் உணர்வுக்கு மதிப்பளிக்காத, இந்திய தேசியம் எனும் கருத்தின்மீதே வெறுப்பு வந்திருந்த நேரம் அது. 

தேசியம் பேசியே தமிழர்களை ஏமாற்றுகிறார்கள் என்று என் வட இந்திய மேனேஜரிடம் புலம்பியபோது, அவர் நிதானமாக ’இந்திய தேசியம் உங்களை ஏமாற்றவில்லை. உங்களை நீங்களே ஏமாற்றிக்கொள்கிறீர்கள்’ என்றார். புரியாமல் விழித்தபோது, கூகுளிட்டு அப்போதைய மத்திய அமைச்சர்கள் லிஸ்ட்டை எடுத்தார். ‘மத்திய அரசில் வலுவான மாநிலம் எது தெரியுமா? உங்க தமிழ்நாடு தான் பாரு’ என்று லிஸ்ட்டைக் காட்டினார் ஏழு கேபினெட் அமைச்சர்கள் தமிழகத்தில் இருந்து! அதற்கு இணையாக மகாராஷ்டிராவுக்கும் ஏழு கேபினட் அமைச்சர்கள். ‘இன்னைக்கு நிலைமைக்கு மகாராஷ்ட்ரா மற்றும் தமிழகத்தின் கோரிக்கையை இந்த மத்திய அரசு ஈஸீயா புறக்கணிக்க முடியாது’ என்றார் அவர்.
  ‘அப்புறம் ஏன் காங்கிரஸ் அரசு எம்மைக் கண்டுகொள்ளவில்லை’ என்று நான் கேட்கவில்லை. எனக்குப் புரிந்த அதையே அவரும் சொன்னார். ‘40 எம்.பிக்கள் என்பது எவ்வளவு பெரிய பலம். உங்க குரலை யாரும் மதிக்காம இருக்க முடியாது. ஆனால் ஈழப்பிரச்சினையிலோ, வேறு பொதுப்பிரச்சினையிலோ மத்திய அரசுக்கு எதிராக கேபினட் அமைச்சர்களோ, எம்.பிக்களோ உரத்து குரல் கொடுக்கவே இல்லியே? கேட்டால்தானே தம்பி கிடைக்கும்?’ என்றார். தொடர்ந்து விவாதித்ததில் கிழக்கு மாநிலங்கள் புறக்கணிக்கப்படுவதன் உண்மையான காரணம், அங்கே குறைவான எம்.பிக்கள் இருப்பது தான்..ஆனால் அதிக எம்.பிக்களைக் கொண்ட தமிழகமும் புறக்கணிக்கக் காரணம் என்ன என்பது விளங்கியது.

2ஜி ஊழல் காரணமாக திமுக காங்கிரஸை எதிர்க்க முடியாமல், கனிமொழியைக் காப்பாற்ற போராடிக்கொண்டிருந்தது. அதிமுகவோ காங்கிரஸ் ஆதரவில் அமைந்திருந்த சிறுபான்மை திமுக அரசைக் கலைக்க முடியுமா என்று முயன்றுகொண்டிருந்தது. ஒருவேளை அதிமுக, திமுக இடத்தில் இருந்திருந்தால் தன் மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து விடுபட போராடிக்கொண்டு இருந்திருக்கும். இது தான் யதார்த்தம். 

எனவே யார் நமக்காக குரல் கொடுப்பார்கள் என்று நம்பி டெல்லிக்கு அனுப்பினோமோ, அவர்கள் கட்சித் தலைமையின் நலனுக்கு மட்டுமே குரல் கொடுத்துக்கொண்டு இருந்தார்கள். மத்திய அரசை எதிர்க்க முதுகெலும்பு இல்லாதவர்களாக இருந்தார்கள், இருக்கிறார்கள். நாம் இரு பெரும் கட்சிகளாக ஆக்கி வைத்திருக்கும் அதிமுகவும், திமுகவும் நமக்காக குரல் கொடுக்கும் நிலையில் இல்லை என்பதே தற்போதைய நிலை. ஊழல் வழக்குகளில் இருந்து விடுபடுவதைத் தவிர, வேறு லட்சியம் ஏதும் அவர்களுக்கு தற்பொழுது இல்லை. அதற்கு ஆதாரம் தான் மோடியைப் பற்றி திமுக, அதிமுக இரண்டுமே விமர்சிக்காமல் அடக்கி வாசிப்பதும், ‘ஹி..ஹி..மோடி என் நண்பர் தான்’ என்று இருதரப்புமே கூச்சமில்லாமல் காட்டிக்கொள்வதும்!
ஊழல் வழக்குகளை நீதிமன்றத்தில் எதிர்கொண்டு, வெளிவராதவரை (அல்லது உள்ளே போகாதவரை!) அதிமுகவையும் திமுகவையும் டெல்லி விஷயத்தில் நம்புவது வீண். இருகட்சிகளின் நோக்கமும், அதிக எம்.பிக்களைப் பெற்று, அதன்மூலம் அடுத்து அமைய இருக்கும் மத்திய அரசின் காலில் விழுவது தான். அது மீண்டும் 2009 சூழலுக்கே நம்மை தள்ளும். எனவே சுதந்திரமாகச் செயல்படக்கூடிய, தமிழ் உணர்வுள்ள வேட்பாளர்களை டெல்லிக்கு நாம் அனுப்ப வேண்டியது அவசியம்.

அந்தவகையில் எனது முன்னாள் தொகுதியான விருதுநகரில்(சிவகாசி) நிற்கும் வைகோ அவர்களையும், இந்நாள் தொகுதியான தூத்துக்குடியில் நிற்கும் ஜோயல் அவர்களையும் வெற்றி பெற வைப்பது, தமிழர் நலனுக்கு நல்லது என்று நம்புகிறேன். இவர்களை மட்டுமல்ல, மதிமுக சார்பில் போட்டியிடும் கீழ்க்கண்ட அனைத்து வேட்பாளர்களையும் வெற்றி பெறச்செய்வது நமக்கு நல்லது :

விருதுநகர் - வைகோ

காஞ்சிபுரம் - மல்லை சத்யா

ஈரோடு - கணேசன் மூர்த்தி

தேனி - அழகு சுந்தரம்

ஸ்ரீபெரும்புதூர் - மாசிலாமணி

தூத்துக்குடி - ஜோயல்

தென்காசி - சதன் திருமலைக்குமார்

இவர்களை நான் ஆதரிப்பதற்கு மற்றுமொரு காரணம், அவர்கள் மக்களுக்காகப் போராடும் நபர்களாக, நாகரீகமான மனிதர்களாக இருப்பது தான். தூத்துக்குடியில் போட்டியிடும் ஜோயல் மீது மக்களுக்கு நல்ல மதிப்பு இருக்கிறது. அதே போன்றே எனது மாமனார் இருக்கும் தொகுதியான தென்காசியில் போட்டியிடும் சதன் திருமலைக்குமார் பற்றியும் மிக உயர்வாகச் சொல்கிறார்கள். (வைகோ பற்றிச் சொல்லணுமா?) இத்தகைய நல்ல மனிதர்களை ஆதரிக்காமல், ஜாதி பார்த்து, கட்சி பார்த்து ஓட்டுப் போட்டு இன்னும் எத்தனை காலத்திற்கு நம்மை நாமே தாழ்த்திக்கொள்ளப் போகிறோம்? 

மற்ற தொகுதிகளில் யாருக்கும் ஓட்டுப்போட்டு நாசமாகப் போங்கள், எனக்குக் கவலையில்லை. மதிமுக போட்டியிடும் தொகுதியைச் சேர்ந்தவராக இருந்தால், தயவு செய்து பம்பரம் சின்னத்திற்கு வாக்களியுங்கள். முல்லைப்பெரியாறு அணைப் பிரச்சினையானாலும் ஸ்டெர்லைட் பிரச்சினையானாலும் தன்னலம் பற்றி யோசிக்காமல், மக்களுக்காகப் போராடும் இந்த இயக்கத்தை வெற்றியடைய வைப்பது அவசியம். 

மற்ற கட்சிகளைப் பற்றி ’நடுநிலையாக’ எழுதுவதற்கு முன், யாருக்கு நான் ஓட்டுப் போடப்போகிறேன் என்று தெளிவுபடுத்துவது நல்லது என்பதாலேயே இந்தப் பதிவு. நடுநிலைவாதி என்று பேசி படிப்போரை ஏமாற்றுவதைவிட, இது பெட்டர் என்று நம்புகிறேன். நமக்கு முன்னே இருப்பது இரண்டே சாய்ஸ் தான்.

மத்திய அரசிடம் மண்டியிடப் போகும் ஊழல் அடிமைகளா? 

மக்களுக்காகப் போராடும் மதிமுகவா?

யாரைத் தேர்வு செய்யப் போகிறீர்கள். கட்சி அபிமானத்தைத் தாண்டி, ஜாதி/மத வெறியைத் தாண்டி மனசாட்சியுடன் யோசித்துச் சொல்லுங்கள். உங்கள் ஓட்டு யாருக்கு?

ஊழல் அடிமைகளுக்கா?  சுதந்திரமான போராளிகளுக்கா?


டிஸ்கி-1: அரசியல் ஆராய்ச்சியாளர்கள் கவனத்திற்கு : நான் மதிமுக உறுப்பினன் அல்ல. தேர்தல் நேரத்தில் யாருக்கு ஓட்டு என முடிவெடுக்கும் சாமானியன். எனது குடும்பம், தீவிர திமுக குடும்பம்..தங்கமணி குடும்பம் தீவிர அதிமுக குடும்பம்!

டிஸ்கி-2: ”விந்தணு” ஆராய்ச்சியாளர்கள் கவனத்திற்கு : எனக்கு தெலுகு தெலுசலேது!


மேலும் வாசிக்க... "உங்கள் ஓட்டு யாருக்கு? (தேர்தல் ஸ்பெஷல்)"
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

12 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.

Sunday, April 6, 2014

ஒரு பிள்ளை பெற்றால் போதுமா?

தாத்தா பாட்டி காலத்தில் வீட்டுக்கு 12 பிள்ளைகள் என்பதுகூட சகஜமான விஷயமாக இருந்தது. சென்ற தலைமுறையில் நான்கு முதல் இரண்டு குழந்தைகளாக குறைந்துவிட்டது. இப்போது இரண்டு என்பதே அதிகம் எனும் எண்ணம் பலருக்கும் வந்துவிட்டது. ஒரு குழந்தையுடன் நிறுத்திக்கொள்பவர்கள் அதிகமாகிவிட்டார்கள். இன்றைய பொருளாதாரச் சூழலில் ஒன்றை வளர்ப்பதே பெரிய விஷயம் என்று பலரும் நினைக்கிறார்கள். எனது நண்பர்களிடம் நான் எப்போதும் ஒற்றைப் பிள்ளையுடன் நிறுத்தாதீர்கள் என்றே சொல்லி வந்திருக்கிறேன். 

நான் ஒற்றைப்பிள்ளையாக, தனியாக வளர்ந்ததை நண்பர்கள் அறிவீர்கள். அதனால் இண்ட்ரோவெர்ட்டாக ஆனதும், புதுநபர்களுடன் பேசவேண்டும் என்றால் கூச்சத்தால் திருவுதிருவென விழிப்பதையும் நெருங்கிய நண்பர்கள் நன்றாகவே அறிவார்கள். அந்த ஸ்டார்ட்டிங் ட்ரபுளை என்ன செய்தும், இன்னும் மாற்ற முடியவில்லை. ஆனால் அதையும் தாண்டி, வேறு சில அனுபவங்களே ஒரு பிள்ளை போதாது எனும் முடிவுக்கு என்னைக் கொண்டு சென்றன.
நான் ஸ்கூலில் படிக்கும்போதே எனது (வளர்ப்பு)அப்பாவிற்கு 60 வயது தாண்டிவிட்டது. பொதுவாகவே எப்போதெல்லாம் எனக்கு காலாண்டு,அரையாண்டு, முழுப்பரிட்சை நடக்கிறதோ, அப்போதெல்லாம் அவருக்கு உடம்புக்கு முடியாமல் போய்விடும். அது எதனால் என்று எங்களுக்குப் புரிவதே இல்லை. ‘பிள்ளையை படிக்க விடுதாரா இந்த மனுசன்?’என்ற அம்மாவின் புலம்பலுடனே ஆஸ்பத்திரியில் அட்மிட் ஆவார். கிராமத்தில் கடை வைத்திருந்தோம். அதை நாலைந்து நாள் பூட்டினால் சோத்துக்கு சிங்கி அடிப்பதோடு, கஸ்டமர்களையும் இழக்க வேண்டிவரும்.

எனவே அம்மா கடையில் தான் இருக்க வேண்டி வரும். நான் பரிட்சைக்குப் போயே ஆக வேண்டும். கடைக்கு டவுனில் இருந்து சரக்கும் வாங்கி வரவேண்டும். அப்போது கிராமத்துக்கு பஸ் வசதியும் கிடையாது. எனவே காலையில் கிளம்பி, பலசரக்கு-மிட்டாய்-காய்கறிக் கடைகளில் சரக்கு லிஸ்ட்டையும் காசையும் கொடுத்துவிட்டு, ஆஸ்பத்திரி போய் அப்பாவைப் பார்த்து சாப்பாடு கொடுத்துவிட்டு, பள்ளிக்குப் போய் பரிட்சை எழுதுவேன். அப்பாவும் வேறு வழியின்றி தனியே மேனேஜ் பண்ணுவார். தெரிந்த டாக்டர் என்பதால், நர்ஸ்களும் பார்த்துக்கொள்வார்கள். கணக்குப் பரிட்சை எழுதும்போதே கறிவேப்பிலைக்கு காசு கொடுத்தோமா, அப்பாவுக்கு பக்கத்து ரூம் ஆட்கள் டீ வாங்கிக் கொடுத்திருப்பார்களா என்ற சிந்தனை ஓடும். 

இதில் கொடுமை என்னவென்றால், அந்த ஆஸ்பத்திரி தெருவிற்கு அடுத்த தெருவில் தான் நான் பிறந்த வீட்டார் இருந்தார்கள். பெற்றவரோ, அண்ணனோ, அக்காக்களோ எட்டிக்கூடப் பார்க்க மாட்டார்கள். (என் அப்பா, என்னைப் பெற்றவருக்கு சித்தப்பா தான்!) பரிட்சை முடிந்ததும், மார்க்கெட்டுக்குப் போய் சரக்கு வாங்கி, சைக்கிளில் வைத்துக்கொண்டு கிராமத்துக்குப் போவேன். வீட்டுக்குப் போய் சாப்பிட்டுவிட்டு, அப்பாவுக்கு சாப்பாடும் அடுத்த பரிட்சைக்கான புத்தகத்தையும் எடுத்துக்கொண்டு ஆஸ்பத்திரிக்கு ஓட வேண்டும். மாலை வரை இருந்துவிட்டு, இரவு வீடு வருவேன். முன்பின் அறியாத பக்கத்து ரூம் ஆட்களிடமும் இரவில் அப்பாவையும் பார்த்துக்கொள்ளுமாறு சொல்லிவிட்டு வருவேன்.
அந்த நேரங்களில் தனியே ஓடுவது மிகவும் கஷ்டமாக இருக்கும். இன்னொரு பிள்ளையையும் தத்தெடுத்திருக்கலாமே என்று நினைத்துக்கொள்வேன். சுமையை கொஞ்ச நேரம் கைமாற்றக்கூட ஆள் இருக்காது. நான் காலேஜ் படிக்க மதுரை ஹாஸ்டலில் தங்க வேண்டி வந்தபோது தான், ரொம்பக் கவலையாக இருந்தது. இனியும் தொந்தரவு தர வேண்டாம் என்பதாலோ என்னவோ, அப்பா நான் மூன்றாம் ஆண்டு படிக்கும்போதே காலமானார். ஒருவேளை இன்னொரு தம்பி இருந்திருந்தால், இன்னும் கொஞ்சகாலம் ஆஸ்பத்திரிக்கும் வீட்டிற்கும் அவர் அலைந்தே வாழ்ந்திருக்கலாம். 

கெட்டதற்கு மட்டுமல்ல, நல்லதற்கும் இன்னொரு ஆள் தேவை என்று பின்னாளில் காலம் புரிய வைத்தது. கல்யாணம் என்றால் ஆயிரத்தெட்டு சடங்கு, சாத்திரங்களை வைத்திருக்கிறார்கள், நம் மக்கள். பத்திரிக்கை கொடுப்பதில் ஆரம்பித்து திருமணத்திற்கு முந்தைய நாள் ஊர் அழைப்பு, மூன்றாவது முடிச்சை சகோதரி போடுவது, தாய் மாமன் முக்கியத்துவம் என்று பல சாத்திரங்கள். ‘கல்யாணம் கட்டிப்பார்’ என்ற பழமொழிக்கு என்ன அர்த்தம் என்பதை சொந்த, பந்தங்கள் தங்களது வீம்பு, வெட்டி பந்தா மூலம் நன்றாகவே புரிய வைப்பார்கள். தூரத்து சொந்தமாக இருந்தாலும் மாப்பிள்ளையோ, மாப்பிள்ளையின் உடன்பிறப்போ அல்லது அப்பாவொ தான் நேரில் வந்து அழைக்க வேண்டும். இல்லையென்றால் ‘என்னை மதிக்கலை’ என்று பெரிய ரகளை நடக்கும். எனவே ஒவ்வொரு வீட்டிற்கும் நானே போக வேண்டிய நிலை.

மண்டபம் புக் பண்ணுவதில் ஆரம்பித்து சமையலுக்கு சாமான் வாங்குவதுவரை வேலைகள் இன்னொரு பக்கம் குவிந்து கிடக்கும். இதற்கெல்லாம் பங்காளிகளைத் தான் நாட வேண்டும். எனக்கு நான்கு பங்காளிகள் குடும்பம் உண்டு. மூத்தவருக்கு மட்டும் மூன்று ஆண்பிள்ளைகள். மற்றவர்களுக்கு ஒரு பிள்ளை தான். அதனால் மூத்தவர் காட்டும் பந்தா இருக்கிறதே..அப்பப்பா. 

மீதி மூன்று குடும்பங்களும் அருகில் இருக்கும் டவுனுக்குப் போவதென்றால்கூட மூத்தாரிடம் சொல்லிவிட்டுத் தான் செல்ல வேண்டும். இல்லையென்றால், பேச்சு வார்த்தையே நின்றுவிடும். பிறகு கெஞ்சி கூத்தாடி சமாதானப்படுத்துவார்கள். அதே சமயத்தில் திடீரென மூத்தார் குடும்பம் எங்கேயோ கிளம்பிப் போய்விடும். மறுநாள் வந்தவுடன் கேட்டால், ‘அதுவா..திருச்செந்தூர் போய்ட்டு வந்தோம்’ என்பார்கள் கேஷுவலாக. நீ சொல்லாமப் போறியேன்னு கேட்க முடியாது. ஏனென்றால் நல்லது, பொல்லதுக்கு அலைய மூன்று ஆண்பிள்ளைகள் அங்கே உண்டு! கூடப்பிறந்த அவர்களுக்கே அப்படி என்றால், பங்காளியான, ஒற்றை ஆளாக நிற்கும் என் நிலைமையை நீங்களே யோசித்துக்கொள்ளலாம்.

கல்யாணம் முடியும் முன் எவ்வளவு முடியுமோ அவ்வளவு பட்டேன். கல்யாணத்துக்கு முதல்நாள், தங்கமணி ஊரில் ரிசப்சன் வைத்திருந்தார்கள். அதற்குக்கூட நான் போகவில்லை. நான் இல்லையென்றால், ஒருவேலையும் நடக்காது என்று தெரியும். ரிசப்சனுக்கு வரவில்லையே என தங்கமணிக்கு சென்ற வருடம்வரை என்மேல் கோபம் உண்டு. சென்ற வருடம், பையனுக்கு மொட்டை போட்டு, காது குத்தும் பங்சனில் தான் அவர் பங்காளிகளின் அருமை, பெருமையை நன்றாக உணர்ந்தார். 

அப்போது என் குடும்பம் மூன்று பேராக ஆகியிருந்ததால், நானே பஸ் புக் செய்து, சமையலுக்கு ஆள் பிடித்து, திருச்செந்தூரில் மண்டபமும் புக் செய்தேன். பங்காளிகளை சும்மா வந்தால் போதும் என்று அழைப்பு மட்டுமே கொடுத்தேன். என்ன செய்தார்கள் தெரியுமா? ‘அதெப்படி எங்களைக் கேட்காம எல்லா வேலையையும் அவனே செய்யலாம்?’ என சண்டை போட்டுவிட்டு ஒருத்தரும் வரவில்லை. பையன் வந்த தைரியத்தில் நான் பெரிதாக அலட்டிக்கொள்ளவும் இல்லை.

இப்படி எல்லா வகையிலும் தனியே அவஸ்தைப் பட்டுவிட்டதால், இன்னொரு குழந்தையும் அவசியம் தேவை என்றே முடிவு செய்திருந்தேன். அது ஆணோ, பெண்ணோ எதுவாக இருந்தாலும் பரவாயில்லை. மூத்தவனை தனியே விட்டுவிடக்கூடாது..நாம் பட்ட கஷ்டத்தை அவன் பட்டுவிடக்கூடாது. குறைந்த பட்சம் அவர்களுக்கு திருமணம் ஆகும்வரையாவது ஒருவருக்கொருவர் துணையாக இருப்பார்கள் என்று நினைத்தோம். ஆண்டவன் அருளால் சென்ற வாரம் இரண்டாவதும் ஆண் குழந்தையாக பிறந்தது. இனிமே நானோ, மூத்தவன் பாலாவோ தனி ஆள் இல்லை என்பதே சந்தோசமாக இருக்கிறது. 
இன்னும்கூட இரண்டு குழந்தை பெற்றுக்கொள்ள ஆசையாகவே இருக்கிறது. ஆனால் பிரசவத்தின் மீது எனக்கு இருக்கும் பயத்தினாலும், ஒரு வருடத்திற்கு தங்கமணி படும் அவஸ்தையாலும் போதும் என்று முடிவு செய்துவிட்டேன். இரண்டாவது குழந்தை பிறந்த செய்தியறிந்து ஃபேஸ்புக்கிலும், மெயிலிலும், போனிலும் வாழ்த்துச் சொன்ன நண்பர்களுக்கு நன்றி. 

முந்தைய டெலிவரிப் பதிவு(!) : பிரசவ நேரத்தில் கணவன் தேவையா? 

மேலும் வாசிக்க... "ஒரு பிள்ளை பெற்றால் போதுமா?"
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

24 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.

Friday, April 4, 2014

மான் கராத்தே - திரை விமர்சனம்

அதாகப்பட்டது... :
இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் கதை மற்றும் தயாரிப்பில், சமீப கால வெற்றி நாயகன் சிவ கார்த்திகேயன் நடிப்பில் அதிக எதிர்பார்ப்புடன் வெளியாகி இருக்கும் படம் மான் கராத்தே. இங்கே தியேட்டர் ஹவுஸ் ஃபுல். விஜய், அஜித், சூர்யாவிற்கு அடுத்த இடத்தை சிவ கார்த்திகேயன் பிடித்துவிட்டார் என்பதற்கு அதுவே சாட்சி.(ஏற்கனவே அந்த இடத்தைப் பிடித்து, இழந்தவர் கார்த்தி!). சிவகார்த்திகேயன் அந்த இடத்தை தக்க வைத்தாரா என்று பார்ப்போம், வாங்கோ!
ஒரு ஊர்ல..:
ஐந்து நண்பர்களுக்கு ஒரு சித்தர் மூலமாக, அடுத்து நான்கு மாதங்கள் கழித்து வெளியாகப்போகும் தினத்தந்தி பேப்பர் கிடைக்கிறது. அதில் பீட்டர், பாக்ஸிங்கில் இவர்களின் துணையுடன் வெல்லும் நியூஸ் வந்திருக்கிறது. பரிசு இரண்டு கோடி ரூபாய். அந்த பீட்டரை(சிவ கார்த்திகேயன்) தேடிப்பிடித்தால், அண்ணாத்த ராயபுரம் பீட்டருக்கு பாக்ஸிங் என்றால் என்னவென்றே தெரியாத பூச்சியாக இருக்கிறார். அவரை எப்படி கெஞ்சிக் கூத்தாடி வழிக்குக் கொண்டுவந்து, இரண்டு கோடி ரூபாயை வெல்கிறார்கள் என்பதே கதை. ஏ.ஆர்.முருகதாஸின் சிம்பிளான, சுவாரஸ்யமான கதை. (சுட்ட கதையா இருக்கக்கூடாதுன்னு வேண்டிக்கிறேன், சாமியோவ்!)

உரிச்சா....:
முதல் சீனிலேயே கதைக்குள் நுழையும் ஒரு சில நல்ல படங்களில் இதுவும் ஒன்று. காட்டுக்குள் போகும் சதீஸ் அன் கோ, சித்தரை நக்கல்விட்டு, ஆயுதபூஜைக்கு அடுத்த நாள் வெளியாகும் தினத்தந்தியை வரவழைக்க முடியுமா என்று கேட்கிறார்கள். வழக்கமாக ஆயுத பூஜைக்கு லீவு என்பதால், அடுத்த நாள் பேப்பர் வராது. சித்தர் சிக்கினார் என்று பார்த்தால், பேப்பரை வரழைக்கிறார். அதில் சொல்லப்பட்டிருக்கும் விஷயங்கள் ஒவ்வொன்றாய் நடக்க, கூடவே இவர்களின் பெயரும் பீட்டரின் வெற்றிப் பேட்டியில் இருக்க, படம் பார்க்கும் நாமும் கதையுடன் ஒன்றி விடுகிறோம்.

ஓப்பனிங் சாங்குடன் ’சுறா’ எஃபக்ட்டில் அறிமுகம் ஆகிறார் சிவ கார்த்திகேயன்.நல்லவேளையாக பாடல் முடிந்ததுமே, அவரது ஃபேவரிட் அப்பாவி கேரக்டருக்குள் வந்துவிடுகிறார். சதீஸ் இவரை பாக்ஸிங்கில் கலந்துகொள்ள வைக்கவும் ட்ரெய்னிங் எடுக்க வைக்கவும் போராட, இவரோ ’என் லவ்வுக்கு ஐடியா கொடு..வீட்டுக்கு வெள்ளை அடிச்சுக்கொடு..ஃப்ரிட்ஜ் வாங்கிக்கொடு’ என்று அவர்களை பாடாய் படுத்தி எடுக்க, படம் முழுக்க ரகளையாய் போகிறது. 
போட்டியில் எதிராளியை அடித்தே கொல்லும் வில்லன் வம்சி கிருஷ்ணாவும் கலந்துகொள்ள, படம் பட்டாசாய் வெடிக்கிறது. இறுதியில் நீளமாக வரும் பாக்ஸிங் காட்சிகளைத் தவிர்த்துவிட்டுப் பார்த்தால், படம் செம ஸ்பீடு. படத்தின் பெரிய பலம், படத்தை முழுக்க காமெடியாகவே கொண்டு சென்றிருப்பது. சதீஸின் ஒன்லைன் பஞ்ச்களும் அட்டகாசம். சிவாவை அவர் ஓட்ட, சிவா பதிலுக்கு கவுண்டர் பஞ்ச் விட, கூடவே இரண்டு ஃபிகர்களும் இருக்க, பொழுதுபோக்கிற்கு முழு கேரண்டி!

ஹன்சிகா-சிவா லவ் போர்சனைக்கூட காமெடியாகவே சொல்லி இருக்கிறார்கள். லிஃப்ட்டில் இருவருக்கும் ஒரு காமெடி சீன் வருகிறது. தியேட்டரில் அத்தனை பேரும் சிரிக்கிறார்கள். நமக்கு சிரித்தே வயிறு வலித்துவிட்டது.

பாக்ஸிங் போட்டி ஆரம்பித்து படம் சீரியஸ் ஆகும்போது, ரெஃப்ரியாக சூரியை களமிறக்குகிறார்கள். பாக்ஸிங் தெரியாத சிவா, சூரியை கதறவிடுகிறார். ஜாலியாக படம் நகர வேண்டும் என திட்டமிட்டு எடுத்திருக்கிறார்கள், அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார்கள்.

சிவ கார்த்திகேயன்:
அடுத்த சூப்பர் ஸ்டார் என்று சிலர் பில்டப்பை ஏற்றியபோது, இவரும் ஒழிந்தார் என்றே நினைத்தேன். ஏற்கனவே பிரபுதேவா, அஜித், கார்த்தி என பலரும் அந்த வார்த்தையைச் சொன்ன கொஞ்ச காலத்தில் செம அடி வாங்கி இருக்கிறார்கள். ஆனால் இந்தப் படத்தில் சிவா தப்பியிருக்கிறார்கள். முந்தைய படங்களைப் போன்றே வெகுளித்தனம், நக்கல், ஹீரோ பில்டப் இல்லாமல் சாமானியனாகவே வருகிறார்.
ஆனால் இந்த கெட்டப் தான், பாபா ரஜினி மாதிரி கேவலமாக இருக்கிறது. மீசை இல்லாமல், முள்ளம்பன்றித் தலையுடன் பல காட்சிகளில் நம்மை கஷ்டப்படுத்துகிறார். முந்தைய படங்களில் இருந்த பாந்தமான அழகு, இதில் மிஸ்ஸிங். தங்கத்தலைவி ஹன்சிகாகூட வரும்போது எப்படி இருக்கணும், கெடுத்திட்டாங்களே! பாடல் காட்சிகளில் டான்ஸ் நன்றாகவே ஆடுகிறார். தொடர்ந்து இதே போன்று அடக்கி வாசித்தால், சிவாவை யாராலும் அடிச்சுக்க முடியாது.

ஹ..ஹ..ஹன்சிகா:
இதுவரை நடிக்கத் தெரியாத மெழுகுபொம்மையாக வந்துபோன ஹன்சிகாவை, இதில் நடிக்க வைத்துவிட்டார்கள். நல்ல நடிப்பு. முன்னாடி மாதிரி கண்ணீரை பிதுக்கிவிடும் வேலையெல்லாம் இல்லை, சிம்பு புண்ணியத்தில் நன்றாகவே அழுகிறார். வழக்கம்போல் ஃப்ரெஷ்ஷாக வருகிறார். ஏற்கனவே பலவாறு வர்ணித்துவிட்டதால், இதில் ‘நெய்க்குழந்தை’ என்ற புது செல்லப்பெயரில் கூப்பிடுகிறார்கள். டார்லிங் டம்பக்கு பாடலில் ஏற்கனவே முட்டிக்கு மேல் இருக்கும் பாவாடை(?)யை இன்னும் ஏத்திவிட்டு குத்தாட்டம் போடும்போது, செத்தான் தமிழன்!

சொந்த பந்தங்கள்:
சதீஸ் அடுத்த சந்தானமாக வரலாம். செம நக்கலான டயலாக்குகளை படம் முழுக்க சொல்லிக்கொண்டே இருக்கிறார். சிவ கார்த்திகேயனின் டைமிங் காமெடிக்கு சரியான ஜோடி இவர். இதிலும் கொஞ்ச நேரமே வந்தாலும் சூரி, அளவாக நடித்து நம் மனதைக் கவர்கிறார். ’இவன் வேற மாதிரி’க்கு அப்புறம் இதில் வம்சி கிருஷ்ணாவுக்கு நல்ல கேரக்டர். வில்லனாக அசத்தி இருக்கிறார்.

டெக்னிக்கல் டீம்:
படத்தின் முதல் ஷாட்டிலே ஒளிப்பதிவாளர் சுகுமார் நம்மை அசத்திவிடுகிறார். ஆரம்ப சித்தர், அருவி காட்சிகள். ஸ்டேடியத்தை டாப் ஆங்கிளில் காட்டுவது, மாஞ்சா பாடலில் சூரியனை பிண்ணனியில் வைத்து எடுத்திருப்பது என முழுப்படமுமே நல்ல ஒளிப்பதிவு. அடுத்து, அனிருத்தின் அருமையான இசை. அனிருத் பெரிய ரவுண்டு வருவார் என்று நினைக்கிறேன். தேவாவின் குரலில் கானா பாடல் ஆகட்டும், மாஞ்சா போன்ற ஸ்டைலிஷ் படாலாகட்டும் பின்னி இருக்கிறார். ஆரம்பத்தில் சித்தருக்கு போட்ட மியூசிக்கை, சிவா கிளைமாக்ஸில் வெற்றியை நெருங்கும்போது போட்டு, பிண்ணனி இசையிலும் அசத்தியிருக்கிறார்.

நெகடிவ் பாயிண்ட்ஸ் :
- சிவ கார்த்திகேயன் கெட்டப்
- வில்லன் நல்லவரோ என்று டவுட் ஆகும்படி வரும், அவரின் மனைவியும் அவரும் பேசிக்கொள்ளும் காட்சி. அது ஆடியன்சைக் குழப்புகிறது
- கேப்டன் பிரபாகரன் - புலன் விசாரணை காலங்களில் வில்லன் ஹீரோவை அடித்து நொறுக்கிவிடுவார். பிறகு ஹீரோ செத்துப்போன ஹீரோயின்/தங்கை/பாட்டியை நினைத்து வீறுகொண்டு எழுந்து அடி பிரிப்பார். அதே ஓல்டு டெக்னிக் இங்கேயும்.
- பாக்ஸிங் போட்டிகள் ரொம்ப நேரம் நடப்பது போல் இருக்கிறது.
பாஸிடிவ் பாயிண்ட்ஸ்:

- கொஞ்சம்கூட போரடிக்காத திரைக்கதை ( இயக்குநர் திருக்குமரன்)
- வசனம் (செந்தில் குமார் என்று ஞாபகம்)
- படத்தை காமெடியாகவே கொண்டு சென்றிருப்பது
- அருமையான சூப்பர் ஹிட் பாடல்கள்
- ஹன்சிகா (ஹி..ஹி)
- நண்பர்கள் குழுவில் வரும் ப்ரீத்தி சங்கர்..நல்ல அழகு!!
- படத்திற்கு ரிச்சான லுக் கொடுத்தது

பார்க்கலாமா? :

நல்ல பொழுதுபோக்குப் படம்..தாரளமாகப் பார்க்கலாம்.

மேலும் வாசிக்க... "மான் கராத்தே - திரை விமர்சனம்"
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

37 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.