Wednesday, June 29, 2011

அன்னிய மொழிக்கு மரியாதை...தாய்மொழிக்கு?


”கான்ஸ்டிபேசன்..சொல்லு”

"கான்ஸ்டிஃபேசன்"

"அப்படி இல்லைப்பா.கொஞ்சம் ஸ்ட்ரெஸ் பண்ணு"

"கான்ஸ்டிஃபே..சார், வரமடேங்குது சார்.."

"கான்ஸ்டிபேசன்னாலே அப்படித்தான்..வராது..நல்லா ஸ்ட்ரெஸ் பண்ணாத் தான் வரும்..நல்லா..ம்..இப்போ சொல்லு"

"கான்ஸ்டிபேசன்"

”வெரி குட்!”
ன்று ஆஃபீஸ் நண்பர்களுடன் பேசிக்கொண்டிருக்கும்போது ஒரு நண்பர் ஃபேன் என்று சொல்ல வந்தவர் ஸ்பேன் என்று சொல்லிவிட்டார். ஏதோ மிகக் கேவலமான ஒரு செயலைச் செய்துவிட்டது போல் அவர் கிண்டல் செய்யப்பட்டார். அவரைப் பார்க்கவே பரிதாபமாக ஆகிவிட்டது.

எனக்கு அது கடும் கோபத்தைக் கிளப்பியது. அவர்களில் பெரும்பாலோனோர் தமிழர்கள். “உங்களில் யாருக்கு ல,ழ,ள சரியாக உச்சரிக்கத் தெரியும்?”என்று கேட்டேன்.

எல்லோரும் அமைதியாக இருந்தனர். “அப்போ தாய்மொழியை சரியாக உச்சரிக்க யாருக்கும் தெரியவில்லை இல்லையா? அது பற்றிய வருத்தமோ அவமானமோ நமகு இல்லை. ஆனால் ஆங்கிலத்தில் ஒரு எழுத்தைத் தவறாகப் பேசிவிட்டலும் முட்டாள் ரேஞ்சிற்கு அவரை ட்ரீட் பண்றோம். ஏன் இப்படி? ஸ்ஃபேன் சொல்லும்போது வர்ற இளக்காரம் வாலைப்பலம்னு சொல்லும்போது ஏன் வரலை? தமிழைச் சரியாப்பேசுன்னு சொல்றதும் பேசுறதும் இண்டீஸண்ட்..இங்க்லீஸ் கரெக்டாப் பேசுடான்னு சொன்னா பெருமை, இல்லையா?’ன்னு கேட்டேன். 

ஒரே ஒரு நண்பர் மட்டும் ‘நீங்க சொல்றது சரிதான்..ஆனால் எல்லாருமே அப்படித் தானே?” என்றார்.

உண்மையில் அங்கு இருந்த யாருக்குமே நான் உட்பட, ழகர உச்சரிப்பு சரியாக வராது.பேசும் வேகத்தில் நாம் கவனிப்பதும் இல்லை.

”உண்மைதான், இங்கு தமிழைச் சரியாக உச்சரித்தல் பிரச்சினை அல்ல. அதைச் செய்யும்போது வராத அவமானம் அன்னிய மொழியைப் பேசும்போது வருவது ஏன்?” என்றேன்.

ஆங்கிலத்தை நாம் பேணிப் பாதுகாக்கும் அளவிற்கு ஆங்கிலேயர்களே செய்வதில்லை. அமெரிக்கர்களின் ஆங்கிலேயம் ஏறக்குறைய சென்னைத் தமிழுக்கு ஈடானது தான். ’எஃப் பாம்’ போடாமல் பேசவே மாட்டர்கள். வார்த்தையைக் கொத்துவதிலும் வல்லவர்கள். நான் அவர்களுடன் பேசும்போதெல்லாம் ஒரு அசமஞ்சம் ரேஞ்சுக்கு நம் ஆங்கிலம் தோன்றும். அந்த உரையாடல் இந்த மாதிரி இருக்கும்:

”ஐயா, தாங்கள் கொடுத்த வரைபடத்தை முடித்துவிட்டேன். அடுத்து நான் என்ன செய்ய வேண்டும் என்று சொல்கிறீர்களா?”

”ஆத்தா..அந்தாண்ட குவாலிட்டி டிபார்ட்மெண்ட்க்காரன் குந்திக்கினு இருப்பான்..அவங்கைல சொல்லு..”

சிங்கப்பூர்க்காரர்கள் தனியாக ஒரு ஆங்கிலத்தை உண்டாக்கி வைத்திருக்கிறார்கள். நான் பார்க்கவில்லை என்பதை ‘ஐ நோ சீ” என்பார்கள். அங்கு இருக்கும் நம் ஆட்கள் அவர்களைத் திருத்த முற்படுவது இல்லை. ஆனால் ஒரு எழுத்தை சக தமிழன் சரியாக உச்சரிக்காவிட்டால், கேலி..கிண்டல்.

நாம் இன்னும் ஆங்கிலேய அடிமை மனப்பான்மையில் இருந்து வெளிவரவில்லையோ என்று தான் தோன்றுகிறது.

மும்பைக்கு ரிக்‌ஷா ஓட்டிப் பிழைக்கச் செல்லும் ஒருவர் ஒரே மாதத்தில் ஹிந்தி பேசுகிறார். அதைக் கற்றுக்கொள்வதில் அவர்களுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. 

ஆனால் கோடி ரூபாய் சம்பளம் வாங்கிக் கொண்டு நடிக்கும் இந்தி இறக்குமதி நடிகைகள், பெரும்பாலும் பேசுவது ஆங்கிலம்..அல்லது டமிங்லீஸ். படிக்காத பாமரன் பொழைப்புக்காக ஒரு மொழியைக் கற்றுக்கொள்ளும்போது, இவர்களுக்கு மட்டும் ஏன் தமிழ் வர மறுக்கிறது.

ஒரு மொழியை அறிந்து நடித்தால் இன்னும் நன்றாக உணர்ச்சியை வெளிப்படுத்தலாமே..இவர்களுக்கு வாய்ப்புக் கொடுக்கும் இயக்குநர்கள் தமிழில் பேசினால் தான் வாய்ப்பு என்று சொல்லலாமே? சீமானைத் தவிர வேறு யாரும் அதைச் செய்வதாகத் தெரியவில்லை.

நமக்குத் தெரிந்து குஷ்பூ போன்ற சிலர் மட்டுமே மார்க்கெட் இருக்கும்போதே தமிழ் பேசியது.(கோபமா இருக்கேன் மக்கா..படம் நாளைக்குப் போடுறேன்!) மற்றவர்கள் நாக்கில் அந்த சரஸ்வதிதேவியின் சூலாயுதத்தால் சூடு போட்டுத் தான் தமிழை வரவைக்கவேண்டும் போலும். 

தாய்மொழியிலும் அதற்கு ஆதரவாகவும் பொதுவில் (குறிப்பாக அலுவலம், வங்கிகளில்) பேசவே தயங்க வெண்டிய நிலை தான் உள்ளது. அப்படிப் பேசுபவர்கள் பழம்பஞ்சாங்கம் ரேஞ்சுக்கு பார்க்கப்படுகிறார்கள். ’தாய்மொழியை எப்படி வேண்டுமானாலும் ரேப் பண்ணு, ஆங்கிலத்தை மட்டும் பொத்திப் பேணு’ என்ற மனநிலைக்கு நம் தாழ்வு மனப்பான்மை தான் காரணமோ?

‘தமிழ் சோறு போடுமா? அப்புறம் ஏன் அதைப் இடித்துத் தொங்க வேண்டும்? தூக்கி எறி’என்பது இன்னும் சிலரின் மனப்பான்மை. ‘எது எல்லாம் பணம் கொடுக்குமோ அதை மட்டுமே பேண வேண்டும். வரவு இல்லையென்றால் அதைக் குப்பையில் போடு’ என்பது ஆரோக்கியமான சிந்தனை தானா? 

இவர்கள் தன் பெற்றோர் சம்பாதிப்பதை நிறுத்திய பின் என்ன செய்வார்கள்? இனி வரவு இல்லையென்று வெளியில் விரட்டி விடுவார்களா? கவனிக்காது சோற்றுக்கு வழியின்றி அலைய விட்டு விடுவார்களா? தாய்மொழியாகவே இருந்தாலும் லாபம் இருந்தால்தான் கற்றுக்கொள்வோம் என்பவர்கள், அடுத்து எந்தமாதிரித் தலைமுறையை உண்டாக்குவார்கள் என்பதை நினைக்கவே அச்சமாக உள்ளது.

தாய்ப்பாசம் போன்ற பணத்தால் எடை போட முடியாத, எடை போடக்கூடாத விஷயங்கள் இன்னும் இந்த உலகில் இருக்கவே செய்கின்றன.தாய்மொழியும் அவற்றில் ஒன்று. எந்த மொழியைத் தாய்மொழியாகக் கொண்டவராக இருந்தாலும் அதைப் பேணுங்கள். 

அதில் தான் மறைந்துள்ளது நம் வரலாறும் அடையாளமும்!



மேலும் வாசிக்க... "அன்னிய மொழிக்கு மரியாதை...தாய்மொழிக்கு?"
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

47 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.

Tuesday, June 28, 2011

பிரபுதேவா - நம்மை ஏமாற்றிய பிரபலம்

டிஸ்கோ நடனம் என்றால் என்ன?

சுற்றிலும் கலர் கலராய் லைட்டுகள் மின்னும். அதைவிடக் கலராய் வழுக்கும் தரை. அங்கும் லைட்கள் மின்னும். அரை டவுசருடன் கலர் கலராய் பெண்கள் ஜிகினா ட்ரெஸ்ஸில் வரிசை கட்டி நிற்பார்கள். அவர்களுக்கு நடுவே ஜிகுஜிகு ட்ரஸ்ஸில் ஒரு ஆண். பாடல் ஆரம்பித்ததும் காலை விரித்து விரித்து மூடுவார்கள். பிறகு லெஃப்ட்டில் முகத்தைத் திருப்பி வா என்பது போல் ஒரு தலையசைப்பு. பிறகு ரைட்டிலும் அதே. பிறகு கராத்தே மாஸ்டர் போல் காலைத் தூக்கி முன்னால் ஒரு உதை. ’யா..ஊ’ என்ற சத்தம் மிகமிக முக்கியம். ஜிகினா அலங்காரம் இல்லாமல் இதை ரோட்டில் செய்யவே முடியாது. - இதுவே தமிழ்சினிமாவில் 1990வரை இருந்த நிலை.
பிரபுதேவா என்ற ஒரு அற்புதமான கலைஞனின் வருகை எல்லாவற்றையும் தலைகீழாகப் புரட்டிப் போட்டது. அன்று அவர் ஆரம்பித்து வைத்த நடன ஸ்டைலே இன்றுவரை தொடர்கிறது. மரத்தைச் சுற்றியே ஒப்பேற்றும் தொப்பை பெருத்த நடிகர்கள்கூட உடம்பை வருத்தி ஆடியே ஆக வேண்டும் என்ற கட்டாயத்தை பிரபுதேவாவின் வருகை சினிமாத் துறையில் உண்டாக்கியது.

’லாலாக்கு டோல் டப்பிம்மா’ என்று சூரியனில் ஆடியபிறகே பிரபுதேவாவின் வேகமான நடனம் கவனிக்கப்பட்டது. அதற்கு முன்பே இதயத்தில் தனியாக ஆடியிருந்தாலும், சூரியன் படம் நல்ல பெயரைப் பெற்றித் தந்தது. தொடர்ந்து சூப்பர் டூப்பர் ஹிட்டான ஜெண்டில்மேனில் வந்த சிக்குபுக்கு பாடல் இந்திய மைக்கேல் ஜாக்சனாக அவரை அடையாளம் காட்டியது. பாடல்களுக்காகவே அந்தப் படம் பலமுறை பார்க்கப்பட்டது. சிக்குபுக்கு பாடல் முடிந்ததும் இளைஞர்கூட்டம் திரையரங்கை விட்டு வெளியேறுவது நான் பார்த்த நான்குமுறையும் நடந்தது.

அடுத்து ஹீரோவாக ‘இந்து’வில் களமிறங்கினார் பிரபுதேவா. முகம் சுளிக்கவைக்கும் படமாக அது அமைந்தபோதிலும் அடுத்து வந்த ‘காதலன்’ டாப் ஹீரோக்களில் ஒருவராக அவரை உயர்த்தியது. முக்காலா முக்காபுலா இந்தியாவையே கலக்கியது. அது ஜாக்சனின் ஸ்மூத் க்ரிமினலை ஞாபகப்படுத்தினாலும் பிரபுதேவாவின் தனிமுத்திரை அந்தப் பாடலில் இருந்தது. 
மேற்கத்திய நடனத்தில் பரதத்தைப் புகுத்துவதும், சட் சட்டென்று மேற்கத்திய நடனத்தில் இருந்து பரதம் போன்ற இந்திய நடனங்களுக்கு மாறுவதும், மீண்டும் தாளம் தப்பாமல் மேற்கத்திய நடனத்தைத் தொடருவதும் பிரபுதேவாவின் சிறப்பு. பாடலின் இடையே சிறு கான்செப்ட் வைப்பதிலும் வல்லவர் பிரபுதேவா. 

நடனத்தில் சிறந்தவராய் இருந்தும் அடுத்து வந்த ராசையா படம் சரியாகப் போகவில்லை. ’அடுத்த சூப்பர் ஸ்டார்?’ என்று குமுதம் அட்டைப்படக் கட்டுரை வெளியிட்ட நேரம் அது. லவ் பேர்ட்ஸ் படத்தில் நடிக்க ஒரு கோடி சம்பளம் வாங்கியதாகத் தகவல் வந்தது. சிறு பட்ஜெட் படங்களையே எடுத்து வந்த ஆர்.பி.சௌத்ரியே இவரை வைத்து பிரம்மாண்டமாக மிஸ்டர்.ரோமியோ எடுத்தார். அந்த அளவிற்கு அவர்மேல் நம்பிக்கை இருந்தது. ஆனால் துரதிர்ஷ்டவசமாக அந்த இரு பிரம்மாண்டப் படங்களும் தோல்வியைத் தழுவின.

ஏ.வி.எம்மே பொன்விழாப் படத்தை இவரை வைத்து எடுத்தது. அதுவும் ஊத்திக்கொண்டது. ஆனாலும் அவர்து நடனம் படத்துக்குப் படம் மெருகேறிக்கொண்டே போனது. மின்சாரக் கனவின் வெண்ணிலவே பாடலின் நடன அமைப்பு பரவலாகப் பாராட்டுப் பெற்றது. தேசிய விருதையும் வாங்கித் தந்தது.

அதன்பிறகு ஆவரேஜ் ஹிட் நடிகர் லிஸ்ட்டில் சேர்ந்தவ்ர், தொடர்ந்து ஜேம்ஸ் பாண்டு, டபுள்ஸ் என வீழ்ந்து ஒரு நடிகராக தோல்வி அடைந்தார். அவரது நடனத் திறமையை ஒப்பிடும்போது, ஒரு நடிகராக பெரிய இடத்தைப் பிடிப்பார் என்றே எல்லோரும் நம்பினர். ஆனாலும் ஒரு ஹீரோவாக நடிப்பதில் அவர் எடுபடவில்லை. 
ஹி..ஹி
கடும் எதிர்ப்புக்கு நடுவே ரமலத்தைக் கைபிடித்த போது அவர் மேல் மரியாதையே வந்தது. லவ் பேர்ட்ஸ் படத்தில் நடித்துக் கொண்டிருந்த நேரம் அது. புகழின் உச்சத்தில் இருந்தபோது, தான் காதலித்த பெண்ணையே மணந்தார். ஆனால் அவரது தற்போதைய நடவடிக்கைகள், அவருக்கு இருந்த அந்தவொரு நல்ல பெயரையும் இல்லாமல் ஆக்கிவிட்டது.

ஒரு இயக்குநராக சம்திங்..சம்திங்(தெலுங்கு), போக்கிரி போன்ற படங்களில் பரிணமித்தவர், தற்போது கவனம் வேறு பக்கம் திரும்பியதாலோ என்னவோ இப்போது வில்லு, எங்கேயும் காதல் என சொதப்புகின்றார். 

மைக்கேல் ஜாக்சன் போன்றே நடனத்தில் மட்டுமல்லாது சர்ச்சையிலும் பிரபுதேவா திகழ்வது ஆச்சரியம் தான்.

நடிகைகளுடன் கிசுகிசு, தயாரிப்பளர்களைப் போண்டி ஆக்கியவர், மனைவி/குழந்தைகளை கைவிட்டவர் என்று பல குற்றச்சாடுகளைச் சந்தித்துக் கொண்டிருக்கிறார். ஆனாலும் தனிப்பட்டக் காரணங்களை ஒதுக்கி விட்டுப் பார்த்தால், அவரது நடனத் திறமை மேல் குறை சொல்ல யாராலும் முடியாது என்பதே உண்மை.
நீதானா அவ?
நல்ல நடன இயக்குநராக, பொழுதுபோக்குப் படங்களைத் தருவதில் வல்லவராக விளங்கும் திறமை பிரபுதேவாவிற்கு உண்டு. மனதை ஒருமுகப்படுத்தி வேலையில் கவனம் செலுத்தினார் என்றால், இழந்த பெயரை அவரால் மீட்க முடியும். எங்கேயும் காதலின் ‘நங்கை’ பாடலின் நடன அமைப்பே அவர் இன்னும் நடனத்தில் கிங் என்பதற்கு உதாரணம்.

ஆயிரம் சர்ச்சைகள் இருந்தாலும் தமிழ்சினிமாவின் நடனத்தை பிரபுதேவாவிற்கு முன், பிரபுதேவாவிற்குப் பின் என்று தான் வரலாறு பிரித்து எழுதும்.


பிரபுதேவாவின் Youtube வீடியோக்களுக்கு:


1. மாஸ்டர் பீஸ் - புகார்(இந்தி)
2. முக்காலா முக்காபுலா
3. சுக்கலோ சந்த்ருடு(தெலுகு)

மேலும் வாசிக்க... "பிரபுதேவா - நம்மை ஏமாற்றிய பிரபலம்"
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

41 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.

Monday, June 27, 2011

விஜயகாந்த் மகனுக்கே சீட் இல்லையா - லயோலாவில் ரணகளம்

‘அடாவடிச் செயல்களில் ஈடுபடும் முன் கடந்த காலங்களில் ஆடியவர்களின் தற்போதைய நிலைமையை விஜயகாந்தின் தேமுதிகவினர்...’-ன்னு சீரியசாத் தான் இதை எழுத நினைச்சேன். அப்புறம் நானா யோசிச்சப்போ தான் அங்க உண்மையில் என்ன நடந்துச்சுன்னு தெரிஞ்சுச்சு..சொல்றேன் கேளுங்க..

அடடா..பழக்கதோசத்துல படம் மாறிடுச்சுப்பா..இப்போப் பாருங்க..

தமிழ்நாட்டு மக்களுக்கு நல்லதைத் தவிர வேறெதுவுமே சிந்திக்கத் தெரியாத விஜயகாந்துகிட்ட அவர் மகன் போய் நின்னாரு..

‘நைனா, என்னை சினிமால ஹீரோ ஆக்கு நைனா’ங்கவும் நைனாவே பயந்துட்டாரு. ’தம்பி, இப்போ தான் நான் கொஞ்சம் அரசியல்ல தலை எடுக்கேன்..நடிச்சு அதையும் கெடுத்து மூடிடாதப்பா’ன்னு நைனா கெஞ்சவும் மகன் கொஞ்சம் இறங்கி வந்தாரு. ’அப்போ எனக்கு நம்ம இஞ்சினியரிங் காலேஜ்ல சீட்டு குடு’-ன்னு அடுத்த குண்டைப் போட்டாரு மகன்.

‘அய்யய்யோ..அது என்ன அரசியல்ல சம்பாதிச்சுக் கெட்டுனதா..போனாப்போவுதுன்னு உனக்கு சீட் கொடுக்க. பலவருசம் நடிச்சு கஷ்டப்பட்டு கட்டுன காலேஜுப்பா..வேணும்னா இன்னும் ஒரு வருசம் பொறு..நைனா உனக்கு புதுசா ஒரு காலேஜ் கட்டித் தர்றேன்’னு சொன்னதும் மவனுக்குக் கோவம் வந்துடுச்சு. ‘யாரை நம்பி நான் பிறந்தேன்’ன்னு பாடிக்கிட்டே லயோலா காலேஜ்க்குப் போய் சீட்டு கேட்டாரு.

ஒரு புள்ளை படிக்க ஆசைப்படறது ஒரு தப்பாய்யா..அங்க இருந்த அருட்தந்தை போனிபஸ் ஜெயராஜ் அவர்கள், பட்டுக்குஞ்சத்தோட மார்க் சீட்டைப் பார்த்துட்டு “உனக்கு எப்படிப்பா சீட்டு கொடுக்குறது? 1200க்கு 585 தான் எடுத்திருக்கே?’ன்னு ஈவிரக்கமே இல்லாம கேட்டிருக்காரு. அதுக்கு புள்ளையாண்டான் ‘மீதி 615 மார்க்கையும் நானே எடுத்துக்கிட்டா, கூடப்படிச்சவங்கள்லாம் என்ன சார் செய்வாங்க?’ன்னு கேட்டிருக்காரு.

பயபுள்ளை கேட்டதும் நியாயம் தானே..ஃபாதர் தான் டரியல் ஆகிட்டாரு. ‘இந்த மார்க்குக்கு எங்க காலேஜ்ல சீட் தர முடியாது’ன்னு சொன்னதுமே பட்டுக்குஞ்சத்துக்கு கோவம் வந்திருச்சு.

“எனக்கு சீட் கிடையாதுன்னு சொல்ல நீரு யாருய்யா?”ன்னு ஆக்ரோசமாக் கேட்க,

ஃபாதரும் “நாந்தான் தம்பி ஃபாதர்”னு சொல்லி இருக்காரு. உடனே தம்பிக்கு கோவம் இறங்கிடுச்சு.

“அப்படியா..நீங்க தான் ஃபாதரா..அப்போ எங்க வீட்டுல ஒருத்தர் இருக்காரே..அவர் யாருய்யா?”ன்னு கேட்டதுமே ஃபாதர் மனசு சுக்குநூறா உடைஞ்சு போச்சு.

“என்னோட பேக்ரவுண்ட் தெரியாம விளையாடுறீங்க..போகப் போகத் தெரியும்’னு பட்டு சொல்லிட்டு, திரும்பி நடந்தாரு. அப்போ தான் தம்பி பெரிய பேக்ரவுண்ட் உள்ளவர்னு ஃபாதருக்கும் புரிஞ்சது.

வீட்டுக்கு அழுதுக்கிட்டே வர்ற புள்ளையைப் பார்த்த அல்லக்கைகள்லாம் ‘சின்ன கேப்டன், என்ன ஆச்சு?”ன்னு கேட்டிருக்காங்க. தம்பி விஷயத்தைச் சொல்லவும் இரண்டு கார் நிறைய ஆளுங்கள்லாம் லயோலாக்கு வந்தாங்க. ஒரு கார்ல இருந்து தம்பி இறங்குச்சு. இடமில்லாததால இன்னொரு கார்ல இருந்து தொண்டர்கள்லாம் இறங்கியிருக்காங்க.

உள்ளபோய் திரும்பவும் ஃபாதர் மனசைப் புண்ணாக்கி இருக்காங்க. ‘எங்க கேப்டனுக்கு ஃபோன் பண்ணி விளக்கம் சொல்லு’ன்னு மிரட்டி இருக்காங்க. ஃபாதர் ’புள்ளை பேசுனதை நைனாகிட்ட சொன்னா அவரும் நொந்து போவாரே’ன்னு யோசிச்சு, போலீஸ்க்கு ஃபோன் பண்ணிட்டாரு. அப்புறம் என்ன, பதறியடிச்சுக்கிட்டு, அல்லக்கைகளும் தம்பியும் வெளில ஓடி வந்துட்டாங்க.

லயோல கேட்டைத் தாண்டுனதும் தம்பி சோகமா காலேஜைத் திரும்பிப் பார்த்துட்டு, ‘ஏண்ணே, என் தம்பி +2 முடிக்கறதுக்கு முன்னாடியாவது நைனா சி.எம். ஆயிடுவாரா?’ன்னு கேட்டதும் கூட வந்த அல்லகைகள்லாம் ‘ஓ’ன்னு அழுதுட்டாங்க. 

வேகமா வந்த வண்டி சோகமா திரும்பிப் போச்சு.


மேலும் வாசிக்க... "விஜயகாந்த் மகனுக்கே சீட் இல்லையா - லயோலாவில் ரணகளம்"
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

56 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.

Friday, June 24, 2011

ஆரண்ய காண்டம் - அற்புதமான படம்

பொதுவாக ஒரு படம் ரிலீஸாகி ஒரு வாரம் ஆகிவிட்டாலே, நான் விமர்சனம் எழுதுவதில்லை. ஆனாலும் இந்தப் படத்தைப் பார்த்தபின் இதை வரவேற்று எழுதுவது ஒரு சினிமா ரசிகனின் கடமை என்று தோன்றியதால்....
என்னென்னவோ பெயரில் சிறு பட்ஜெட் படங்கள் வ்ந்து கொண்டிருக்கின்ற நேரத்தில் பத்தோடு பதினொன்றாக வந்த ஆரண்ய காண்டத்தை நான் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. நல்ல படம் தான் பார்ப்பேன் என அடம்பிடித்து அவன் இவன் பார்த்து நொந்தேன். சக பதிவர்களால் பாராட்டப்பட்ட படம் என்பதால் ஆரண்ய காண்டம் பார்ப்பது என்று முடிவு செய்து அசுவாரஸ்யமாய் உட்கார்ந்தால், முதல் காட்சியிலேயே இது சாதாரணப் படம் அல்ல என்று உணர்த்தி விடுகிறார்கள்.

ராமாயணத்தில் ஆட்சிப்பொறுப்பை பரதனிடம் விட்டு விட்டு, ராமன் வனவாசம் புகும்போது ஆரம்பிப்பது ஆரண்ய காண்டம், தமிழில் வன அத்தியாயம் எனச் சொல்லலாம். தொடர்ந்து சூர்ப்பனகையால் சீண்டப் படுவதும், ராம-லட்சுமணர்கள் சூர்ப்பனகையின் மூக்கு+மார்பை அறுத்து அவமானப்படுத்துவதும் நிகழ்வது ஆரண்ய காண்டத்தில் தான். அதுவரை சமூகநெறியைக் கட்டிக்காத்துச் செல்லும் கதை, ஆரண்ய காண்டத்தில் மேற்சொன்ன அதிரடி நிகழ்வுகளுடன் சீதை கடத்தப்படுவதில் முடிகிறது.

எல்லா தர்ம நெறிகளும் தூக்கி எறியப்பட்ட தாதாக் கோஷ்டிகளின் காட்டுத்தனமான வாழ்வை, உலகத் தரத்தில் சொல்கிறது இந்த ஆரண்ய காண்டம், திரைப்படம்.

வயதானதால் தொழிலில் பலவீனமான சிங்கப்பெருமாள்(ஜாக்கி செராப்) கோஷ்டியில் பசுபதியும்(சம்பத்) ஒரு அடியாள். வலுவான எதிர்க்கோஷ்டியான கஜேந்திரன்(ராம்போ ராஜ்குமார்) குரூப்பிற்கு போதை மருந்து கடத்தி வரும் ஆள், தானே அதை விற்று செட்டில் ஆக முயற்சிக்கிறான். ஜாக்கியை மீறி சம்பத் அதை வாங்க முற்பட, இரு கோஷ்டிகளின் கோபத்திற்கு ஆளாகின்றான். தொடர்ந்து சம்பத்தின் மனைவியும் ஜாக்கி கோஷ்டியால் கடத்தப்படுகிறார். சம்பத் இரு கோஷ்டிகளிடம் இருந்து தப்பித்தாரா, போதை மருந்து என்ன ஆனது, மனைவியை மீட்டாரா என்பதை விறுவிறுப்பாகச் சொல்லி இருக்கிறார்கள்.
படத்தின் ஸ்பெஷலே, ஒரு காட்சிகூட நாம் ஏற்கனவே எந்த்வொரு தமிழ்படத்திலும் பார்க்காதவை. கதாபாத்திரங்கள் ஒவ்வொன்றும் அந்தப் பாத்திரத்திற்கென பிறந்தவர்கள் போன்ற தேர்வு, மிக இயல்பான வசனங்கள் என இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா கலக்கி எடுத்துள்ளார். 

தான் சேர்த்து வைத்த பெண்ணிடம் முடியாத, வெளியில் தாதாவாகத் திரியும் பெரியவர் பாத்திரத்தில் ஜாக்கி செராப். மனிதர் கலக்கி இருக்கிறார். கடைசியாக அவரை ரங்கீலாவில் பார்த்தது.(அவரை எங்கே பார்த்தோம்..) ஈ என இளிப்பதும், ஒவ்வொரு மூடுக்கும் ஏற்ற மாதிரி நடையை மாற்றுவதும் பாடி லாங்வேஜும் அட்டகாசம். இந்தியில்கூட இவருக்கு இப்படி ஒரு நல்ல பாத்திரம் இதுவரை கிடைத்ததாகத் தெரியவில்லை.

அடுத்து சப்பையாக வரும் ரவிகிருஷ்ணாவும் படத்தின் ஹீரோவாகவே வரும் சம்பத்தும் கிடைத்த வாய்ப்பை நன்றாகவே பயன்படுத்தி உள்ளனர். சுப்புவாக நடித்திருக்கும் யாஷ்மின், பல அதிரடிகளை அரங்கேற்றிக் கலக்குகிறார்.

படத்தின் முக்கியமான பாத்திரம் வழ்ந்து கெட்ட ஜமீனாக வரும் சோமசுந்தரம். ஒரு கிராமத்து அப்பாவிக் கதாபாத்திரத்தை கண்முன் நிறுத்துகிறார். நகரத்து தாதாக்கள் எல்லாம் ஒருவித இறுக்கத்திலேயே வலம்வருவதும், அவர் எளிமையான அப்பாவியாக வருவதும் நம் மனதைத் தொடுகிறது. ‘நீயும் அப்படிச் சொல்லாதய்யா’ என மகனிடம் சொல்லும்போது கலங்க வைக்கிறார். ஹூம், அவன் இவனிலும் ஒரு ஜமீன் கேரக்டரைப் பார்த்தோமே என்று நொந்து கொண்டேன்.

படத்திற்கு மிகப்பெரிய பலம் யுவன் சங்கர் ராஜாவின் இசையும், வினோத்தின் ஒளிப்பதிவும் பி.எல்.ஸ்ரீகாந்தின் எடிட்டிங்கும். படம் நெடுக புன்னகைக்க வைக்கும் வசனங்கள், பல நேரங்களில் ப்ளாக் ஹ்யூமர். ‘உனக்கு உன் அப்பாவை ரொம்பப் பிடிக்குமா’ என்ற கேள்விக்கு ஜமீனின் மகன் ;இல்லே, ஆனா அவர் என் அப்பா’ என்பது நல்ல உதாரணம்.

வறுமையும் வாழ்க்கைச்சூழலும் துரத்தும்போது, சிறுவயதிலேயே தர்மநெறிகள் முடிக்குச் சமானமாக தூக்கி எறியப்படும் யதார்த்ததை அந்தச் சிறுவன்(மாஸ்டர் வசந்த்) கேரக்டரில் அற்புதமாகக் காட்டியுள்ளார்கள்.

கெட்ட வார்த்தைகள் படத்தில் சில இருந்தாலும், முகம் சுளிக்க வைக்கவில்லை, ஏனென்றால் அவை தவிர்க்க முடியாத யதார்த்தமாகவும்,   வலிந்து திணிக்கப்படாததாக இருப்பதால் தான்.

நல்ல தரமான உலகப் படங்களைப் பார்க்கும் சினிமா ஆர்வலர்களுக்கு, நம் ஊரிலேயே உலகத் தரத்தில் ஒரு படம் வந்திருப்பது மகிழ்ச்சியளிக்கும். இந்த அற்புதமான படத்தைக் கொடுத்த இயக்குநர் தியாகராஜன் குமாரராஜாவுக்கும், தயாரிப்பாளர் எஸ்.பி.பி.சரணுக்கும் ஒரு ராயல் சல்யூட்.
தமிழ் சினிமாவின் முக்கியமான படங்களில் ஒன்றாக நிற்கும் இந்த ஆரண்ய காண்டம்!
மேலும் வாசிக்க... "ஆரண்ய காண்டம் - அற்புதமான படம்"
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

41 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.

Wednesday, June 22, 2011

மங்காத்தா - வேலாயுதம்-ஏழாம் அறிவு : ஒரு பார்வை


இன்று டாப் 3 இளம் ஸ்டார்களின் அடுத்த படம் பற்றி ஒரு பார்வை பார்ப்போம்..

மங்காத்தா:

தல அஜித் நீண்ட இடைவெளிக்கு அப்புறம் நடித்து வெளி வர்ற படம் ‘மங்காத்தா’. அஜித்தின் ஐம்பதாவது படம் என்ற எதிர்பார்ப்பு வேறு. சென்னை28  பேரை வைத்தே இன்னும் வண்டி ஓட்டிக் கொண்டு இருக்கிற வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் த்ரிஷா, அர்ஜூன் மற்றும் வெங்கட் பிரபுவின் ஆஸ்தான நடிகர்கள் நடிக்கிற படமா வளர்ந்துக்கிட்டு இருக்கிறது. 
படத்தோட ஸ்டில் எல்லாம் ஓசியன் லெவலை ஞாபகப்படுத்துறதா தம்பி ஜீ ஏற்கனவே இங்கே புலம்பி இருந்தார். எப்படியும் இந்தப் படம் ஏதோவொரு ஆங்கிலப்படத்தோட தழுவலாத்தான் இருக்கும்கிறதுல நமக்குச் சந்தேகம் இல்லை. அதைக் கொஞ்சம் நம்மூருக்கு ஏற்ற மாதிரி மாற்றி, ரசிக்கும்படியாத் தழுவுனாப் பிரச்சினை இல்லை.

ஃப்ரெஷ்னெஸ் இல்லாத த்ரிஷா அம்மையாரும் ஃபிட்னெஷ் இல்லாத வெங்கட் பிரபுவும் தான் படத்தோட எதிர்பார்ப்பைக் குறைக்கிற விஷயங்கள்.  அஞ்சலியும், லட்சுமி ராயும் இருப்பதால் ஃப்ரெஷ்னெஸ்க்குப் பிரச்சினை இல்லை. 
ஏற்கனவே சுமாரான சரோஜாவும் கோவாவும் கொடுத்த வெங்கட், இதுலயாவது ஜெயிக்காரான்னு பார்ப்போம். அசல் தோல்விகளை அசராமக் கொடுக்கிற அண்ணன் அஜித்தும் இதுல ஜெயிச்சாக வேண்டிய கட்டாயம். 

வேலாயுதம்:

காவலன், நண்பன்னு நல்ல ரூட் கிடைச்சாலும், பழசை மறக்காம குருவி, சுறா ஸ்டைல்ல டாக்டர் விஜய் நடிக்கிற படம். இதுவரை ரீமேக் மட்டுமே பண்ணிக்கிட்டு இருந்த ஜெயம் ராஜா, முதல்முறையா சொந்தமாக் கதை எழுதி இயக்குற படம். பழைய ஜெனிலியா, புது ஹன்சிகா என விஜய்க்கு இரண்டு ஜோடிகள். நாட்டு மக்களுக்கு நல்லது செய்ற ஆக்சன் ஹீரோ கதைன்னு கோடம்பாக்கம் கிசுகிசுக்கிறது. திருப்பாச்சி, கில்லி மாதிரி நல்ல ஆக்சன் படமா இருந்தா நமக்கும் நல்லது, டாகுடருக்கும் நல்லது.
எதையும் தாங்கும் ஆஸ்கார் ரவிச்சந்திரன் தான் தயாரிப்பாளர். அதனால் ஒன்னும் பிரச்சினை இல்லை. ஓப்பனிங் சாங்குக்கே 2 கோடி செலவழிச்சாங்களாம். விஜய்யோட படங்கள்லயே பிரம்மாண்டப் படமா வரணும்னு உழைச்சுக்கிட்டு இருக்காங்க. கதையும் திரைக்கதையும் பிரம்மாண்டமா இருந்தாலே போதும்னு ஆடியன்சான நாம நினைச்சாலும் சினிமாக்காரங்க அப்படி நினைக்கத் தயாரா இல்லை.

ஏழாம் அறிவு:

மேலே சொன்ன இரண்டு படங்களை விடவும் அதிக எதிர்பார்ப்பு இந்தப் படத்துக்குத் தான். ஏன்னா, கஜினி-ங்கிற மெகா ஹிட் கொடுத்த ஏ.ஆர்.முருகதாஸும் சூர்யாவும் மீண்டும் இணையும் படம். இந்தப் படமும் கிறிஸ்டோஃபர் நோலனின் ‘இன்செப்சன் + பிரஸ்டீஜ்’ படங்களின் கலவையா இருக்கும்போல் தெரிகிறது.அதை கஜினி மாதிரி பக்காக் கமெர்சியலா எடுத்தா, நல்லாத் தான் இருக்கும்.

படத்துல நமக்குக் குறையாத் தெரியறது ஸ்ருதி ஹாசன் ஹீரோயினா நடிக்கிறது தான். இந்தில அது நடிச்ச படத்தைப் பார்த்தப்போ நடிப்பு இன்னும் தேறணும், ஆளு இன்னும் இன்னும் தேறணும்னு தோன்றியது. இதிலாவது முருகதாஸ் புண்ணியத்தில் தேறுகிறாரான்னு பார்ப்போம்.


மேலும் வாசிக்க... "மங்காத்தா - வேலாயுதம்-ஏழாம் அறிவு : ஒரு பார்வை"
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

33 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.

Tuesday, June 21, 2011

பொம்பளைகளுக்கு ஏன்யா இம்புட்டு ஞாபக சக்தி?

"பாலாக்குட்டிக்கு இந்த ட்ரெஸ் சூப்பரா இருக்கே. யாரு எடுத்தது இந்த ட்ரெஸை?” என்றேன்.

தங்கமணி முறைத்தார். 

சூப்பரா இருக்குன்னு தானே சொன்னோம், ஆனாலும் சுனாமிக்கான அறிகுறி தெரியுதே ஏன்ன்னு குழம்பிப்போய், “என்ன?”  ன்னு கேட்டென். கிணத்துக்குள்ள இருந்து வர்ற சத்தம் மாதிரி ’என்ன’ வந்துச்சு.

“அது 3 மாசம் முன்ன உங்க பிள்ளைக்கு முதல் முதலா நீங்க எடுத்துக் கொடுத்த ட்ரெஸ்.”ன்னு சொல்லுச்சு. நமக்கு 3 நாள் முன்னே என்ன சாப்பிட்டோம்னே ஞாபகம் இருக்காதே..வழக்கம்பொல ஙேன்னு முழிச்சேன்.

இது ஒன்னும் நமக்குப் புதுசில்லை. அப்படித்தான் நாங்க டெல்லில இருக்கும்போது திடீர்னு “போன ஜுலை மாசம் என்ன சொன்னிங்க?’ன்னு கேட்டுச்சு. 

ஒரு மாசத்துல ஒரு மனுசன் என்னென்னமோ சொல்லி இருப்பான், இதெல்லாம் என்ன கேள்வின்னு யோசிசுக்கிட்டே”என்ன சொன்னேன்?”ன்னு கேட்டேன்.

பதிலுக்கு “உங்க பேச்சை தண்ணில தான் எழுதி வைக்கணும்’னு சொல்லுச்சு.

நமக்குக் கோவம் வந்துடுச்சு.இருந்தாலும் இது ஆஃபீஸ் இல்லை, வீடுங்கிறதுனால பொறுத்துக்கிட்டே ‘அப்படி என்ன தான் சொன்னேன்’ன்னு கேட்டேன்.

“தாஜ்மஹாலுக்குக் கூட்டிட்டுப் போறேன்’ன்னு சொன்னீங்கள்ல”ன்னாங்க.

நான் “அப்படியா?’ன்னு கேட்டேன். கடுப்பாகிட்டாங்க. நான் எப்ப அப்பிடிச் சொன்னேன்னு எனக்கே ஞாபகம் இல்லை. ஆனா அவங்க சொன்னாங்க பாருங்க பதிலு..

“அன்னிக்கு வெள்ளிக்கிழமை, காலைல..நீங்க ஆஃபீஸ் கிளம்பிக்கிட்டு இருந்தீங்க. இட்லி அவிச்சுக்கொடுத்தேன். சாப்பிட்டுட்டு கிளம்பினீங்க. வொயிட் கலர், ப்ளூ கோடு ப்போட்ட சட்டை போட்டிருந்தீங்க. ஆஃபீஸ்ல சுட்ட பேனா நாலு நம்ம வீட்ல வச்சிருப்பீங்கள்ல..அதுல ஒன்னை எடுத்து அந்தச் சட்டைல சொருகி இருந்தீங்க. ஜீன்ஸ் பேண்ட் வேற. சேர்ல கிடந்த சிவப்புக்கலர் துண்டை எடுத்துக் கையைத் துடைச்சுக்கிட்டே..”

”ஆமா நான் சொன்னேன்..சொன்னேன்..போதும் தாயி உன் டீடெய்லு”ன்னு சரணடைஞ்ச அப்புறம் தான் விட்டாங்க.

கல்யாணம் ஆன புதுசுல ஒரு மனுசன் என்னத்தியாவது சொல்லத் தான் செய்வான். ‘தாஜ்மஹாலை வாங்கித் தாறேன்’ன்னு கூடத்தான் சொல்வான். அதுக்காக, அதை இவ்வளவு டீடெய்லாவா ஞாபகம் வச்சுக்கிறது? 


அது மட்டுமில்லாம அவங்க வீட்டு ஆட்களைப் பத்தி ஏதாவது கமெண்ட் அடிச்சோம்னாத் தொலைஞ்சோம். ஜென்மத்துக்கும் மறக்காம ஞாபகம் வச்சிருக்காங்க. (ஹனிமூனில் வாங்கிய தர்மபத்தினி அடி படிச்சாச்சா?). 

நான் நம்ம வீடு தான் இப்படியோன்னு பார்த்தா, என்கூட வேலை செய்யுற நண்பரும் நேத்து தர்மபத்தினி அடி வாங்கிட்டு ஆஃபீஸ் வந்தாரு. ‘எப்படிங்க இவங்க நாம எப்பவோ சொன்னதை எல்லாம் இவ்வளவு துல்லியமா ஞாபகம் வச்சிருக்காங்க’ன்னு புலம்பித் தள்ளிட்டாரு. அவர் பெருசா ஒன்னும் சொல்லிடலை. 

கல்யாணம் ஆன புதுசுல ‘நான் அழகா இருக்கனா?’ன்னு கேட்டிருக்கு. ’ஆமா, உன் அக்காவை விட நீ சூப்பரா இருக்க’ன்னு நல்லாத் தான் சொல்லி இருக்காரு. அன்னைக்கு விட்டிடுச்சு. இப்போ ‘ அவளை எதுக்கு அவ்வளவு டீப்பா பாத்தீங்க?’ன்னு குத்து விழுது.

என் ஃப்ரெண்டு ஒருத்தன் சின்ன வயசுல நாலோ அஞ்சோ படிக்கும்போது குப்புற விழுந்து நாக்குல பல்லு வெட்டிடுச்சு. இப்பவும் அந்த வெட்டு, நாக்குல தெரியும். விழுந்தது மட்டும் தான் எங்களுக்க்கு ஞாபகம் இருக்கு. அப்போ எங்ககூடப் படிச்ச புள்ளை (ஃபிகருன்னு சொல்லலாமா? வேணாம்..அப்புறம் வலிக்கும், எனக்கு) கொஞ்ச மாசம் முன்ன நாங்க பார்த்தோம். 

அது அவனைப் பார்த்துமே அன்னிக்கு என்ன நடந்துச்சுன்னு அம்புட்டுத் துல்லியமா சொல்லுச்சு.”அன்னிக்கு வாயெல்லாம் ரத்தமா நாக்கை வெளில நீட்டிக்கிட்டு பத்ரகாளி மாதிரி நீ நின்னே. அப்போ செங்கோவி ’பேச்சு வருதான்னு பார்ப்போம். ஏதாவது பேசுலே’ன்னு சொன்னான். நீயும் ‘அம்மா அப்பா’ன்னு சொன்னே. ’இப்படிச் சொன்னா எப்பிடிலே தெரியும்..ஆட்டுப் புழுக்கை அரைக்கிலோ’ன்னு சொல்லுலேன்னு செங்கோவி சொன்னான். நீயும் ‘ஆத்துப் புதுக்கை அதைக்கிதோ’ன்னே..அய்யய்யோ, மொட்டை நாக்கனா ஆயிட்டமேன்னு நினைச்சு அழுதே. ஆனா கொஞ்சநாள்லே சரி ஆயிடுச்சு’ன்னு சொல்லுச்சு. எங்களுக்கு இவ்வளவு தெளிவால்லாம் ஞாபகமே இல்லை.

பொம்பளைப் பிள்ளைங்க ஸ்கூல் ஃபர்ஸ்ட் வரும்போதெல்லாம் ‘அவங்க வெளில ரொம்பச் சுத்த மாட்டாங்க. அதான் இப்படி மார்க் எடுக்காங்க’ன்னு நினைச்சுக்கிட்டேன். ஆனா இப்போ தான் தெரியுது. அவங்களுக்கு ஆண்டவன் ரொம்ப பவர்ஃபுல் மெமரியைக் கொடுத்திருக்கான் போல.(குமரி பெற்ற மெமரி-ன்னு தலைப்பை மாத்திடலாமா..)

’பெண் என்பவள் சக்தியின் சொரூபம்..பெண்ணே சக்தி’-ன்னு என்னென்னமோ கவிஞர்கள்லாம் சொல்வாங்களே..ஒருவேளை அவங்க சொன்ன சக்தி ‘ஞாபக சக்தி’ தானோ என்னமோ?

ஆனா அதை ஆக்கப்பூர்வமாப் பயன்படுத்தாம, இப்படி அப்பாவிக் கணவரை ஆட்டி வைக்கப் பயன்படுத்துறது எந்த விதத்துல சரின்னு தங்கமணிகள்லாம்..(ச்சே ச்சே..எனக்கு இருக்கிறது ஒரு தங்கமணி தாங்க..பொதுவாச் சொல்றேன்..) தங்கமணிகள்லாம் தயவு செஞ்சு யோசிக்கணும். நன்றி. 

டிஸ்கி: ‘அய்யய்யோ..பெண்களை கேவலப்படுத்திட்டான்’ன்னு யாரும் பின்னூட்டத்துல பத்த வச்சு ’பதிவர் சந்திப்பு’ ஏற்பாடு பண்ணிடாதீங்கய்யா..அந்த ‘ஆயி மகமாயி..அங்காள பரமேஸ்வரி’ மேல சத்தியமாச் சொல்றேன். அந்தளவுக்கெல்லாம் நான் ஒர்த் இல்லைய்யா!

மேலும் வாசிக்க... "பொம்பளைகளுக்கு ஏன்யா இம்புட்டு ஞாபக சக்தி?"
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

70 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.

Saturday, June 18, 2011

அவன் - இவன் விமர்சனம்

இரு பிரபல ஹீரோக்கள் இருந்தும், தமிழ் சினிமாவின் முக்கியமான படைப்பளிகளுள் ஒருவராகக் கொண்டாடப் படும் 'பாலாவின் படம்' என்ற பெயரைத் தாங்கியே வெளிவந்துள்ள படம் அவன் இவன். அதனாலயே தியேட்டரில் நல்ல கூட்டம். எதிர்பார்ப்பை பாலா பூர்த்தி செய்தாரா?
படத்தின் கதை தான் என்ன?... 'பெண்சாயல் மற்றும் மாறுகண் பார்வை கொண்ட' விஷாலும் ஆர்யாவும் அண்ணன் தம்பிகள். திருடர்கள். ஆனாலும் ஒரே தந்தைக்கும் வெவ்வேறு தாய்க்கும் பிறந்த விளிம்பு நிலை மனிதர்கள். அதே ஊரில் வசிக்கும் வாழ்ந்து கெட்ட ஜமீன்தார் ஜி.எம்.குமார் இருவரையும் தன் சொந்தப் பிள்ளைகளாகவே நடத்துகிறார். ஆர்யாவுக்கும் கல்லூரிப் பெண் மது ஷாலினிக்கும் காதல். இன்னொரு பக்கம் விஷாலுக்கும் பெண் கான்ஸ்டபிள்(!) ஜனனி ஐயருக்கும் காதல்.

மாடுகளை அடிமாடுகளாக விற்கும் வில்லன் ஆர்.கேவை ஜமீந்தார் புளூ கிராஸ் + போலீஸில் காட்டிக் கொடுக்க, பதிலுக்கு ஆர்.கே ஜமீந்தாரை கொடூரமாக(பாலா படம்னு தெரியணும்ல!) கொல்கிறார். பதிலுக்கு விஷாலும் ஆர்யாவும் வில்லனைக் கொல்கிறார்கள். அப்புறம்...அப்புறம் என்னய்யா அப்புறம் கதை அவ்ளோதான். 

இது என்ன கதை என்று நாம் யோசிக்கும்போதே, வேந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் தறிகெட்டுப் பாய்கிறது திரைக்கதை. படம் ஆரம்பித்த அரை மணி நேரத்திலேயே ஏறக்குறைய முக்கியப் பாத்திரங்கள் அனைவரின் கேரக்டரும் தெளிவாக நமக்கு விளங்கி விடுகிறது. ஆனாலும் தொடர்ந்து தண்ணியடிப்பது, காதல் செய்வது என்று திரும்பத் திரும்ப ஒரே மாதிரிக் காட்சிகள் எதற்கு என்று தான் புரியவில்லை. நாமும் பாலா படம், ஏதோவொரு காரணத்தோடு தான் இந்தக் காட்சி இருக்கும் என்று உன்னிப்பாகக் கவனிக்கிறோம், கவனிக்கிறோம், கவனித்துக் கொண்டே இருக்கிறோம். ஆனால் ஒன்றுமே நடக்கவில்லை.

ஒருகோடி ரூபாய் மதிப்புள்ள சந்தனக் கட்டைகளை விஷால் கடத்திவிட, கூடச் சென்ற ஆர்யாவும் ஓவராகப் பேசும் பையனும் மாட்டிக் கொண்டுவிட இண்டெர்வல் விடுகிறார்கள். நாமும் இது தான் கதையோ என்று நினைத்தால், அடுத்து வரும் காட்சியிலேயே ஆர்யா வெளியே வந்து விடுகிறார். ஒருகோடி ரூபாய் சந்தனக்கட்டை என்னாச்சு என்றே தெரியவில்லை.

படத்தின் முக்கியப் பாத்திரம் ஜமீந்தாராக வரும் ஜி.எம்.குமார். நல்ல நடிப்பு. ஆனால் அவரையும் காமெடி என்ற பெயரில் கோமாளியாகக் காட்டி விட்டு திடீரென படத்தை அந்தக் கேரக்டரின் தோளில் தாங்க வைக்கும்போது, மொத்தப் படமே விழுந்து விடுகிறது. 

அதன்பிறகு அவர் நிர்வாணமாக(உண்மையிலேயே மக்கா!) ஓட ஓட விரட்டி அடிக்கப்பட்டு சாகும்போது வலிந்து திணிக்கப்பட்ட வன்முறையாகவே படுகிறது. பாலாவின் படம் என்பதற்கு அத்தாட்சியாக அந்தக் காட்சி நிற்கிறது. ஆடுகளம் வாத்தியார் கேரக்டர் போல் தெளிவாக, பலமாக வரையறை செய்யப்பட்டிருக்க வேண்டிய கேரக்டரை காமெடிப் பீஸ் ஆக்கியது தான் இந்தப் படத்தின் ஆகப்பெரிய குறை.

விளிம்பு நிலை மனிதர்கள் என்பதால் பாலாவிற்கே உரிய எண்ணெய் தேய்க்கப்படாத தலைகள், பீடி, குடி போன்ற சகல அலங்காரங்களுடன் பாத்திரங்கள் உலவுகின்றன. ஆனால் இங்கு மேக்கப்பிலும் லோக்கல் டயலாக்கிலும்(உதாரணம் பீ..!) தெரிகின்ற யதார்த்தம், திரைக்கதையில் இல்லை.

லாஜிக் இல்லாத் திரைக்கதையில் காமெடி என்று எதையோ செய்கிறார்கள். வழக்கமாக விளிம்பிநிலை மனிதர்களின் வலியைச் சொல்லும் பாலா, இதில் அவர்களை வெறும் வேடிக்கைப் பொருளாகவே காட்டுகிறார். பெண் சாயல் கொண்ட ஆண்களின் பிரச்சினைகூட இங்கு அழுத்தமாகச் சொல்லப்படவில்லை. 

படத்தில் பாராட்ட வேண்டிய விஷயம் விஷாலின் நடிப்பு. அவர் அரவாணி அல்ல. ஆனாலும் அதிக பெண் சாயல் கொண்டவர். படத்தில் அவர் காட்டும் நளினமும் ஆக்ரோசமும் அறிமுகக் காட்சியில் போடும் குத்தாட்டமும் சபாஷ்! மாறுகண் காதாபாத்திரத்தை கஷ்டப்பட்டுச் செய்திருக்கிறார். ஆனால் இந்தக் கதைக்கும் மாறுகண்ணிற்கும் என்ன சம்பந்தம் என்று தான் தெரியவில்லை. 

ஆர்யா இதிலும் பெரிதாக நடிக்க வாய்ப்பின்றி காதல்+காமெடி போன்ற ஏதோவொன்றைச் செய்கிறார். சூர்யா கௌரவ வேடத்தில் ஒரு காட்சியில் தோன்றுகிறார். பிதாமகன் சிம்ரன் அளவிர்கு ஏதோ செய்யப்போகிறார் என்று பார்த்தால், விஷாலின் நடிப்பைப் பாராட்டுவதைத் தவிர வேறொன்றும் செய்ய வில்லை. அந்தக் காட்சிக்கு சூர்யா எதற்கு என்றும் புரியவில்லை.

யுவனின் முதல் குத்தும், ராசாத்தி பாடலும் அருமை. பிண்ணனி இசையும் ஆர்தர் வில்சனின் கேமிராவும் பாலாவுக்கு பக்க பலம் தான். ஆனாலும் ஓட்டையான திரக்கதையால் எதுவுமே மனதில் ஒட்ட மறுக்கிறது. 

விளிம்பு நிலை மனிதர்களின் கதை என்றாலும், அவர்களது உணர்ச்சியை நமக்குள் ஏற்றி அவர்களோடு நம்மையும் மூன்று மணிநேரம் வாழ வைக்கும் வல்லமை படைத்த பாலா, இதில் சறுக்கி விட்டார் என்றே சொல்ல வேண்டும். 

ஒருவேளை படத்தில் ஏதேனும் குறியீடுகள் ஒளிந்திருக்கிறதோ என்னவோ? நம்ம மரமண்டைக்குப் புரியவில்லை. அதை யாராவது குறியீடுகள் ஸ்பெஷலிஸ்ட்களோ அல்லது சுவாமி குறியானந்தாவோ தான் சொல்ல வேண்டும்.

அவன் இவன் - அவனும் இருக்கான், இவனும் இருக்கான். கதையை எங்கேய்யா?

மேலும் வாசிக்க... "அவன் - இவன் விமர்சனம்"
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

23 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.

Wednesday, June 15, 2011

எட்டாம் வகுப்பு வரை ஆல் பாஸ் - கல்வி மட்டும் ஃபெயில்?

தற்போதைய கல்வி சீர்திருத்தத்தில் சமச்சீர் கல்வி அளவிற்கு முக்கியத்துவம் வாய்ந்த மற்றொரு பிரச்சினை எட்டாம் வகுப்பு வரை அனைவருக்கும் தேர்ச்சி என்ற சட்டம். மேற்பார்வைக்கு இது குழந்தைகளின் மேல் அக்கறை கொண்டு, அவர்களது கல்விச்சுமையைக் குறைக்க வந்த திட்டம் என்று தோன்றினாலும், உண்மையில் அவர்களுக்கு பெரும் கெடுதலையே இந்தச் சட்டம் செய்கிறது.

இந்தச் சட்டப்படி, ஒரு மாணவன் படித்தாலும் படிக்காவிட்டாலும் எட்டாம் வகுப்பு வரை ஃபெயில் ஆக்க முடியாது. படிப்பறிவு பெறாத பெற்றோர் விழிப்புணர்வு பெற்று ’நாங்க தான் படிக்கவில்லை. எங்கள் பிள்ளைகளாவது படிக்கட்டும்’ என்று பள்ளிக்கு அனுப்பும் காலம் இது. நானும் அப்படிப் படித்து வந்தவனே. இந்தச் சட்டத்தைப் பற்றி சிந்திக்கும்போது என் நினைவுக்கு வருவது இரு நபர்கள்..
முதலாவது என்னுடன் படித்த நண்பன் ராமன். அவனது அப்பாவும் அம்மாவும் படிக்காத கூலித் தொழிலாளிகள். ஐந்தாம் வகுப்பு வரை எங்கள் கிராம அரசுப் பள்ளியில் படித்த ராமன் ஆறாவது படிக்க டவுனில் உள்ள அரசுப் பள்ளியில் சேர்க்கப்பட்டான். ஐந்தாம் வகுப்பு வரை படித்திருந்தாலும் தமிழ் ததிங்கிணத்தோம் தான். இங்கிலீஸ் சுத்தமாகத் தெரியாது. எனவே ஆறாம் வகுப்பில் ஃபெயில் ஆனான். அவன் அப்பாவும் ‘ஒழுங்கா படிக்கலேன்னா, சாந்துச்சட்டி தாம்லே’ என்று தெளிவாகச் சொல்லி விட்டார்.  அது அவனை மிகவும் யோசிக்க வைத்தது. சாந்துச்சட்டி என்பது கொத்து வேலைக்கு பயன்படுவது. எனவே ராமன் பயந்து போய் படிக்க ஆரம்பித்தான். இன்று அவன் ஒரு ஐ.டி.கம்பெனியில் வேலை செய்கிறான்.

அடுத்தவர் என் அண்ணி. என் அண்ணனின் மகன் எட்டாம் வகுப்பு தேர்ச்சிக் கார்டு தபாலில் வந்தது. அன்று நானும் இருந்தேன். பிரித்துப் பார்த்தால் மகன் ஃபெயில்! அண்ணியார் தேம்பித் தேம்பி அழ ஆரம்பித்தார். ”நீயாவது உங்கப்பா மாதிரி இல்லாம படிச்சு முன்னேறுவேன்னு பார்த்தா, இப்படி ஃபெயிலாகி நிக்குறியே..நம்ம தலையெழுத்தே அவ்வளவு தானா?” என்று அழுது தீர்த்தார். அது அவனைப் பாதித்தது. அதன் பிறகு அவன் ஒழுங்காகப் படிக்க ஆரம்பித்தான்..

முதல் தலைமுறை மாணவர்கள் நிலை இது தான். படிப்பு என்பது வேப்பங்காயை விடவும் கசப்பான விஷயம். பெரும்பாலான மாணவர்கள் படிப்பது ஆசிரியரின் கண்டிப்புக்குப் பயந்தும், ஃபெயிலாகி விடுவோம் என்ற அவமானத்திற்குப் பயந்தும் தான். 

ஆனால் தற்போதைய சூழ்நிலையில் ஒரு மாணவனுக்கு ஆனா ஆவன்னா தெரியாவிட்டாலும், அவன் எட்டாம் வகுப்பு வரை வந்துவிட முடியும். அப்ப்டி வந்த ஒருவன், 14 வயதிற்குப் பின் திடீரென படித்தால் தான் பாஸ் என்றால் அவன் என்ன செய்வான்? டீன் ஏஜில் நுழைந்த பிறகா ஒருவன் படிப்பில் திடீர் அக்கறை கொள்வான்?

சம்பளம் வாங்கி வேலை செய்யும் ஒரு ஆசிரியரின் திறமை மதிப்பிடப் படுவது மாணவர்களின் தேர்ச்சி விகிதத்தை வைத்துத் தான். எட்டாம் வகுப்பு வ்ரை ஆல் பாஸ் என்றால், அவர்கள் சரியாகத் தான் பாடம் நடத்துகிறார்கள் என்பதற்கு என்ன உத்தரவாதம்? எப்படியும் ஆல் பாஸ் எனும்போது எதற்காக அவர்கள் அக்கறையோடு பாடம் நடத்த வேண்டும்? அப்படியென்றால் ஒன்றாம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை பாடம் நடத்தும் ஆசிரியர்கள் பெறப்போகும் சம்பளம் வீண் தானா? 

இந்தப் பதிவிற்காக இப்படி எல்லாம் சிந்தித்த வேளையில், ஒரு அரசுப்பள்ளியில் ஆசிரியராக வேலை செய்யும் என் சித்தப்பா ஒருவரைத் தொடர்பு கொண்டேன். மேலே உள்ள கேள்விகளைக் கேட்டேன். 

அதற்கு அவர் சொன்னது:”நீ கேக்குறது சரி தான்பா..பாடத்தை ஏண்டா கவனிக்கலேன்னே ’எப்படியும் பாஸ் தானே போடப்போறீங்க சார்..அப்புறம் ஏன் படி படின்னு இம்சை பண்றீங்க’ன்னு கேட்குறானுக. என்னை மாதிரி மனசாட்சிக்குப் பயந்தவங்க தான் சிலபஸ் முடிக்கிறோம்..மத்தவங்க ‘எப்படியும் இவனுக கவனிச்சுப் படிக்கப் போறதில்லை. அப்புறம் ஏன் தொண்டை வத்த நாம கத்தணும்’னு நினைக்கிறாங்க. கிராமத்து மாணவங்க வாழ்க்கையே வீணாப் போகுது”
தனியார் பள்ளிகளாவது 10ம் வகுப்பு தேர்ச்சி விகிதம் காட்ட, இந்தச் சட்டத்தை மதிக்காமல் ஆரம்பத்தில் இருந்தே கண்டிப்புடன் பாடம் நடத்தலாம். ஆனால் அரசுப்பள்ளிகளின் நிலை என்ன ஆகும்? ஒருவேளை இந்தச் சட்டமே ஏற்கனவே தடுமாறிக் கொண்டிருக்கும் அரசுப் பள்ளிகளை அழிக்க, தனியார்+அரசால் செய்யப்பட்ட சூழ்ச்சியோ?

மாணவர்களின் புத்தகச் சுமையையும் பாடச்சுமையையும் குறைக்க முனையாத அரசு இதில் மட்டும் தீவிரம் காட்டுவது ஏன்? மாணவர்கள் படிக்காவிட்டாலும் பாஸ் என்பதை விட தேர்ச்சி மதிப்பெண்ணான 35ஐ 20-25ஆகக் குறைக்கலாமே?

மேலும் வாசிக்க... "எட்டாம் வகுப்பு வரை ஆல் பாஸ் - கல்வி மட்டும் ஃபெயில்?"
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

30 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.

Wednesday, June 1, 2011

விடுமுறை அறிவிப்பு

அன்பு நண்பர்களே,

சற்று நேரத்தில், அலுவல் காரணமாக பாஸ் உடன் வெளிநாடு பயணம். அவரை வைத்துக்கொண்டு பதிவிடுவது தனக்குத் தானே சூனியம் வைத்துக் கொள்வது போல!

எனவே ஒரு வாரத்திற்கு பதிவுகள் இட இயலாத நிலையில் இருக்கின்றேன். அன்பர்கள் பொறுத்துக் கொள்ளவும்.

டிஸ்கி : மேலும் ஒரு கெட்ட செய்தி - எனது பாஸ் லேடி அல்ல!
மேலும் வாசிக்க... "விடுமுறை அறிவிப்பு"
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

24 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.