Wednesday, November 15, 2023

ALP: என் ஜோதிடத் தேடலின் தீர்வு

 

என் மனைவியைப் பெண் பார்க்கப் போயிருந்தபோது. இருவீட்டாருக்கும் பரம திருப்தி. மாப்பிள்ளை-பெண்ணுக்கும் ஒருவரை ஒருவர் பிடித்துப்போன சமயத்தில் ‘இந்தாங்க. பொண்ணு ஜாதகம்’ என்று ஒரு ஜாதகம் நீட்டப்பட்டது.

மற்றவர்கள் கண்ணுக்கு வேண்டுமானால் அது ஜாதகமாகத் தெரிந்திருக்கலாம்; எனக்கு அது அணுகுண்டு போல் தெரிந்தது. ‘நமக்கே முப்பது வயசுல இப்போத்தான் ஒரு பொண்ணு கிடைச்சிருக்கு. அதுக்கும் வேட்டு வைக்க கிளம்பிட்டாங்களா?’ என்று தான் தோன்றியது.

 அப்போது நான் சென்னையில் வேலையில் இருந்தேன். இரவு சென்னை கிளம்பும்போது அந்த ஜாதகத்தையும் எடுத்துக்கொண்டு, கிரேட் எஸ்கேப். ’ஜாதகம் இருந்தாத் தானய்யா குரு மேல நிக்கான், சந்திரன் சைடுல நிக்கான்னு குழப்புவீங்க’ என்று நானா யோசிச்சு எடுத்த முடிவு.

 சென்னை வந்தபின் ‘இங்க நானே பொருத்தம் பார்த்துட்டேன். பத்துக்கு பதினைஞ்சு பொருத்தம் இருக்கு. முதல்ல கல்யாணத்தைப் பண்ணி வைங்க’ என்று அம்மாவிடம் கெஞ்சி..சாரி, சொல்லிவிட்டேன். அப்படி ஜோதிடத்தையே நம்பாத நான் இன்று ALP ஜோதிடத்தில் உயர்நிலை வகுப்பு முடித்த ஜோதிடர். எங்கே நிகழ்ந்தது இந்த மாற்றம்?

 


என் மனைவி முதல் பையனை கருவுற்று இருந்தபோது எனக்கு வேலை போனது. வளைகாப்பு முடிந்து தாய் வீட்டுக்குப் போன மனைவியை குழந்தை பிறந்த பின்பும் திரும்ப அழைக்க முடியவில்லை. பேச்சிலர் ரூமில் நண்பருடன் தங்கிக்கொண்டு வேலை தேடுகிறேன். கிடைத்தபாடில்லை.

 உடன் தங்கியிருந்த நண்பர் ஆன்மீகமான குடும்பத்தைச் சேர்ந்தவர். அனுபவமிக்க  ஃபேமிலி ஜோதிடரே அவர்களுக்கு உண்டு. அந்த நண்பர் தான் ஊருக்குப் போகும்போது ’என்ன தான் பிரச்சினைன்னு பார்த்திடுவோம்’ என்று என் ஜாதகத்தை எடுத்துக்கொண்டு போனார்.

 

அந்த ஜோதிடர் நான் பிறந்ததில் இருந்து இப்போதுவரை நடந்த முக்கிய நிகழ்வுகள், அம்மா-அப்பா – உடன்பிறந்தாருடன் என் உறவுநிலை – எத்தனை உடன் பிறந்தோர் போன்றவற்றை புட்டுப்புட்டு வைத்து எழுதிக்கொடுத்திருந்தார். அப்போது தான் ஜோதிடத்தில் ஏதோ விஷயம் இருக்கிறது என்று புரிந்துகொண்டேன்.

கூடவே அந்த ஜோதிடர் ‘இவருக்கு உள்நாட்டில் வேலை கிடைக்காது. வெளிநாட்டுக்கு முயற்சித்தால் மட்டும் தான் வேலை கிடைக்கும்’ என்று எழுதியிருந்தார். அதுவரை வெளிநாட்டு வேலைக்கு முயற்சிக்காத நான் முயற்சி செய்ய ஆரம்பித்தேன். அதுவரை ’ நாளென் செயும் வினை தானென் செயுமெனை நாடிவந்த கோளென் செயும்?’’ என்று முருகன் மேல் பாரத்தைப் போட்டு வாழ்ந்த எனக்கு, அந்த முருகனே தான் இந்த கோள்களுக்கும் ஏதோ வேலை கொடுத்திருக்கிறான் என்று புரிந்தது.

 ஜோதிடம் மேல் ஆர்வம் வர, நானும் அந்த நண்பரும் பாரம்பரிய ஜோதிடம் படிக்க குருவினைத் தேடி அலைந்தோம். நாங்கள் பார்த்த ஜோதிடர்கள், ஜோதிடம் பார்க்கத் தான் தயாராக இருந்தார்களே ஒழிய நேரடியாக சொல்லித்தர யாரும் தயாராக இல்லை. பிறகு ஜோதிட புத்தகங்களைப் படித்து நாமே கற்றுக்கொள்வோம் எனும் விபரீத விளையாட்டில் இறங்கினோம்.

 ‘நட்பு, பகை, நீசம், உச்சம், மாரகாதிபதி, பாதகாதிபதியை மிக்ஸியில் அரைத்து குரு பார்வை பெற்றவரை மட்டும் வெளியே எடுத்தால் கிடைப்பது தான் பலன்’ என்று சுற்றிச் சுற்றி புத்தகங்கள் சொல்லித்தந்தன. எங்களுக்கு அரைக்கவும் தெரியவில்லை; அரைத்தபின் தனியே எடுக்கவும் தெரியவில்லை.

 இதற்கிடையில் எனக்கு வெளிநாட்டில் வேலை கிடைத்தது. ‘நமக்கு ஜோதிடம் வராது போல’ என்று நினைத்து, லக்ன, மாரக, பாதக அதிபதிகள் எல்லாரையும் தூக்கிப் போட்டுவிட்டு வெளிநாடு போய்விட்டேன். ஆனாலும் இருளில் வழி தெரியாமல் தவிப்போர்க்கு தடம் காட்டும் ஜோதி தான் ஜோதிடம் என்று மட்டும் புரிந்துகொண்டேன்.

 

 அதே நேரத்தில் நண்பருக்கு பெண் பார்க்க ஆரம்பித்தார்கள். ஏறக்குறைய ஐம்பது ஜாதகங்களுக்கு மேல் கழித்து, ஒரு பெண்ணின் ஜாதகத்தை தேர்ந்தெடுத்தார் அந்த அனுபவமிக்க ஜோதிடர். நண்பருக்கு திருமணம் ஆனது. திருமணம் ஆன ஒரு வருடத்திற்குள் கணவன் மனைவி பிரிந்தார்கள். டைவர்ஸ் ஆனது.

 

முப்பது வருட அனுபவமிக்க ஜோதிடரின் கணிப்பு எங்கே தவறியது எனும் கேள்வி என்னை உறுத்த ஆரம்பித்த து. ஜோதிடம் உண்மை என்று தெரிகிறது; ஆனால் நட்சத்திரம், கட்டம், தசாபுக்திக்கெல்லாம் பொருத்தம் பார்த்துச் செய்துவைத்த திருமணம் தோல்வி ஆகிறது! இது எதனால் என்று கண்டுபிடிப்போம் என்றால் நமக்கு ஜோதிடம் சொல்லித்தர ஆளில்லை.

பாரம்பரிய ஜோதிடத்தில் ஏதோ ஒரு போதாமை இருக்கிறது என்பது மட்டும் புரிந்தது. பன்னிரெண்டு வருடங்கள் இந்தக் கேள்வியை சுமந்து திரிந்தேன். ராசி பலன், கிரக பெயர்ச்சி பலன் வீடியோக்களை பார்க்கும்போதெல்லாம் கிட்டாக் காதலியைப் பார்ப்பது போல் வருத்தத்துடன் கடந்துவிடுவேன்.

 பன்னிரெண்டு வருடம் கழித்து பதிவர் KRP செந்தில் அண்ணன் தான் ALP எனும் நவீன ஜோதிடமுறை பற்றிச் சொன்னார். எங்களின் மதிப்புக்குரிய நண்பரான அன்பழகன் வீரப்பனும் ALP ஜோதிடம் படித்திருக்கிறார் என்று தெரிந்தபோது இன்னும் நம்பிக்கை வந்தது. அன்பு சாரின் நண்பரான வேலாயுதம் எனும் பாலாறு ஸ்வாமிகளிடம் ஜோதிடம் பார்க்க அழைத்துச் சென்றார் செந்தில் அண்ணன். அங்கே தான் ஜோதிடம் கற்றுக்கொள்ள ஆர்வம் பிறந்தது.

 திரு.பொதுவுடை மூர்த்தி ஐயாவின் ALP குடும்பத்தில் மாணவராக ஐக்கியம் ஆனேன். அடிப்படை நிலை ஜோதிட வகுப்பு முடிந்ததும் நான் செய்த முதல் வேலை, நண்பரின் ஜாதகத்தை எடுத்து ஆய்வு செய்தது தான். ALP முறையில் லக்னத்தை நகர்த்தி பலன் பார்த்தபோது, துல்லியமாக கணவன் – மனைவி திருமணமான அதே வருடத்திலேயே பிரிவார்கள் என்று தெரிந்தது.

 அந்த அனுபவமிக்க பாரம்பரிய ஜோதிடர் செய்த தவறு, பிறப்பு லக்னத்திற்கு பலன் பார்த்தது. அங்கே எல்லாமே சரியாக இருந்தது. ஆனால் தற்போது செல்லும் ALP லக்னத்திற்கு பலன் பார்த்திருந்தால், இன்னும் ஒரு வருடம் கழித்து திருமணம் செய்யச் சொல்லியிருப்பார். கசப்பான நிகழ்வுகளை தவிர்த்திருக்கலாம்.

 ALP ஜோதிடம் கற்றதால் நான் அடைந்த முதல் பயன், என் மனதை பன்னிரெண்டு ஆண்டுகளாக உறுத்திக்கொண்டிருந்த கேள்விக்கு விடை கிடைத்தது தான்.

மேலும் வாசிக்க... "ALP: என் ஜோதிடத் தேடலின் தீர்வு"

Tuesday, February 28, 2023

நண்பகல் நேரத்து - மயக்கம் ஏன்?

 

சினிமா என்பது 24 கலைகளின் தொகுப்பு. அதில் ஒன்று தான், கதை சொல்லுதல். வணிக சினிமா என்பது முழுக்கவும் கதை சொல்வதையே மையமாக வைத்துச் சுழல்வது. 
 
’முழுப்படமும் கதை சொல்ல வேண்டும். ஒவ்வொரு காட்சியும் அந்தக் கதையை நகர்த்த வேண்டும். ஒவ்வொரு ஷாட்டுக்கு ஒரு அர்த்தம் இருக்க வேண்டும்’ என்பது பாலபாடம்.
 
மக்கள் கதை கேட்கவே படம் பார்க்க வருகிறார்கள். விசு, ராம.நாராயணன் போன்றோரின் படங்கள் டெக்னிகலாக சுமாராக இருந்தாலும் பெரும் வெற்றியடையக் காரணம், கதை சொன்ன விதம்.
 
எப்படி பிண்ணனி இசையோ, வசனமோ இல்லாமல் படம் எடுக்க முடியுமோ, அதே போன்றே கதையை பெரிதாக கணக்கில் கொள்ளாமலும் படம் செய்ய இயலும். ஒரு வாழ்க்கையையோ, ஒரு உணர்வையோ, ஒரேயொரு நிகழ்வையோ மட்டும் பதிவு செய்யும் சுதந்திரம் படைப்பாளிகளுக்கு உண்டு.
கலைப்படங்கள், Experimental, Avant-garde என்று பல பெயர்கள் இவ்வகைப்படங்களுக்கு உண்டு. Bergman, David Lynch, Tarkovski, Antonioni, Fellini என்று இவ்வகைப் படைப்பாளிகளை பட்டியல் இட முடியும். 
 
கதை சொல்வதோ, ஆடியன்ஸை திருப்திப்படுத்துவதோ அவர்களின் நோக்கம் அல்ல. சினிமா எனும் கலையை வெறும் சினிமாவாகவே எடுத்துப் பார்க்கும் முயற்சி அது. 
 
தமிழ் சினிமாவில் கதை கேட்டே வளர்ந்த நம் மக்களுக்கு, கதை சொல்லாத படங்களைப் பார்க்கும்போது கோபம் வருகிறது. ‘நான் இரண்டு மணி நேரம் செலவழிக்கிறேன். ஒன்னுமே சொல்லல?’ என்று கோபமாகக் கேட்கிறார்கள்.
கடந்த சில நாட்களாக ‘நண்பகல் நேரத்து மயக்கம்’ அப்படி ஒரு அதிர்வலையை சோசியல் மூடியாவில் கிளப்பிவிட்டிருக்கிறது. 
 
கதை சொல்ல ‘ஸ்ரீதர், பாரதிராஜா, மகேந்திரன், மணிரத்தினம், மிஷ்கின்’ என்று பெரும் பாராம்பரியமே இருக்கும்போது, மலையாள இயக்குநர் லிஜோ ஜோஸின் சட்டையைப் பிடித்து ’கதையை எங்க மோனே?’ என்று சண்டை போட்டுக்கொண்டு இருக்கிறார்கள். 
 
‘அவன் நடப்பான்..நடப்பான்...மெதுவாய்த்தான் வருவான்..பெருசா கதையும் சொல்ல மாட்டான்’ என்ற பொறுமையுடன் தான் இவ்வகைப் படங்களை அணுக வேண்டும்.
 
இந்த படத்தின் பிண்ணனியில் தமிழ்ப்பட வசனங்களை ஓடவிட்டது பெரும் குறையாகவே எனக்குப் பட்டது. இரண்டாம் முறை ம்யூட் செய்து பார்த்தபோது, பேரனுபமாக இருந்தது.
 
பொதுவாக ஒரு ஆவி ஒருவரின் உடம்பில் நுழையும்போது, ஆவிக்கு அது தெரியும்; பாதிக்கப்பட்டவருக்குத் தெரியாது. இங்கே அது தலைகீழாக திருப்பிப் போடப்பட்டிருக்கிறது.
 
உடலையும் வாழ்க்கையையும் இழந்துவிட்ட ஒரு தமிழ் ஆன்மா, விளக்கப்படாத ஒரு அதிசயத்தால் ஒரு மலையாள உடம்பில் வந்து அமர்ந்துவிடுகிறது. பழைய வாழ்க்கையைத் தொடர நினைக்கிறது. அது நடைமுறையில் இயலாத காரியம் என்று உணர்ந்து, பெருவலியுடன் திரும்பிச் செல்கிறது. 
 
மொழி, மதம் என்று நாம் பிடித்து வைத்திருக்கும் அடையாளங்கள் ஒரு பொருட்டே அல்ல என்றும் குறியீடாகப் பேசுகிறது இப்படம்.
’ஒரு ஆவி இன்னொரு கேரக்டரில் புகுந்தால், அந்த ஆவியைக் கொன்ற நாலுபேரை போட்டுத் தள்ளவே வரும்’ என்று கதை கேட்ட நமக்கு, ‘வந்துச்சு..அப்புறம் போய்டுச்சு’ என்று கதை சொல்வது போதாது தான். 

 
ஆனாலும், இவ்வகைப் படங்கள் ஒரு அனுபவம். உங்களின் கதை அறிவையெல்லாம் தூக்கி ஓரமாய் வைத்துவிட்டு, எளிய பிள்ளையாய் அமர்ந்தால் சில திறப்புகள் நிகழும்.

மேலும் வாசிக்க... "நண்பகல் நேரத்து - மயக்கம் ஏன்?"

Friday, June 12, 2020

திரைக்கதை சூத்திரங்கள் - அமேசான் கிண்டில் நூல் வெளியீடு

 

என் வலைப்பக்கத்தில் வெளியான மன்மதன் லீலைகள் தொடருக்குப் பின், எனக்கு அதிக மின்னஞ்சல்களைப் பெற்றுத் தந்தது திரைக்கதை சூத்திரங்கள் தான். 
 
 
 
எளிய நடையில் முழுக்க முழுக்க தமிழ் சினிமா உதாரணங்களை மட்டுமே பயன்படுத்தி எழுதியதால், பலருக்கும் உபயோகமாக இருந்தது.
சினிமா மாணவர்களிடமிருந்தும் உதவி இயக்குநர்களிடமிருந்தும் அன்றிலிருந்து சென்ற வாரம்வரை கூட பாராட்டும் நன்றி தெரிவித்தலும் வரும். கூடவே இதை புத்தகமாக வெளியிடுங்கள் என்று வேண்டுகோளும்.
எனது சோம்பேறித்தனத்தால் கடுப்பாகி, அவர்களே காப்பி செய்து ப்ரிண்ட் போட்டு படித்துக்கொண்ட உதவி இயக்குநர்களும் உண்டு. மகிழ்ச்சியுடன் நானும் அதை வரவேற்றிருக்கிறேன். நம் எழுத்து பிறருக்கு உதவுவதே சந்தோசம் தானே!
 
இப்போது ஒருவழியாக புத்தகத்தை தயார் செய்துவிட்டேன்.
தொடர்ந்து ‘தமிழில் உலக சினிமா’ தொடரும் ‘மன்மதன் லீலைகளும் கிண்டிலில் வெளிவரும்.
 
 
எனது பல வருட உழைப்பின் தொகுப்பான ’திரைக்கதை சூத்திரங்கள்’ அமேசான் கிண்டில் நூல் இன்று முதல் இந்த லின்க்க்கில் கிடைக்கும்:
 
 
 
நண்பர்கள் ஆதரவை வேண்டி...
 
அன்புடன்
செங்கோவி
 
டிஸ்கி: குவைத்தில் இருக்கும்போதே இதைச் செய்தால் தான் உண்டு. எனவே தான் இந்த கொரானா ரணகளத்திலும் இந்த சோலியை பார்த்துக்கொண்டிருக்கிறேன்!
மேலும் வாசிக்க... "திரைக்கதை சூத்திரங்கள் - அமேசான் கிண்டில் நூல் வெளியீடு"

Sunday, April 19, 2020

மௌனராகம் ‘சந்திரமௌலி’ சீன் - செங்கோவியின் அலசல்

இயக்குநர் மணிரத்தினத்தின் சிறந்த படங்களில் ஒன்றான மௌனராகம் படத்தினை, ஹிந்தியிலும் kasak என்ற பெயரில் ரீமேக் செய்திருக்கிறார்கள். தமிழ் மற்றும் ஹிந்தியில் உள்ள ’சந்திரமௌலி’ சீன்களை ஒப்பிட்டு, குறிப்பாக நடிப்பு பற்றி நண்பர் கீதப்ரியன் எழுதியிருந்தார். (லின்க் https://www.facebook.com/Geethappriyan/posts/10158425070166340?__cft__[0]=AZUnyfNNlgjMBoaCkNjAeTigJCVnK23TG4uTE3C0siAfO-7ejsFhXfK3ROohL2YbZjYZrnaSSwQuHxWTuXlzUIGfAV6pMx93Vd7_iZw-Zj9mpHs3A9N55fUnA7cZHMn2KyM&__tn__=%2CO%2CP-R .

ஒருமுறை இரண்டு சீன்களையும் பார்த்துவிடுங்கள்). அவரின் பதிவின் தொடர்ச்சியாக, மேலும் கொஞ்சம் அலசுவோம்.

ஒவ்வொரு எழுத்தாளருக்கும் வாக்கிய அமைப்பு மாறுவது போல், ஒவ்வொரு இயக்குநருக்கும் ஷாட் செலக்சன் என்பதும் மாறும். ஒரு சீனை புரிந்துகொள்ளும் விதம், அவர்கள் ஹைலைட் செய்ய விரும்பும் விஷயம், தேவையான நடிப்பின் அளவு, எடிட்டிங், ஷாட் காம்போசிசன் என எல்லாமே மாறுபடும். எனவே, ஹிந்திப்பட இயக்குநர் பாப்பையா-வை மட்டையடி அடிக்காமல் இதை அணுகுவோம்.

காட்சி:

ஹீரோவும் ஹீரோயினும் காஃபி ஷாப்பில் சந்திக்கிறார்கள். அங்கே, எதிர்பாராதவிதமாக ஹீரோயினின் அப்பா சந்திரமௌலி வந்துவிடுகிறார். ஹீரோயின் பயந்து ஒளிய, குறும்புக்கார ஹீரோ மிஸ்டர்.சந்திரமௌலி(!)யை காஃபி சாப்பிட அழைக்கிறான். ஹீரோயின் பதறித் தவிக்க, சந்திரமௌலி குழம்பி நிற்க, ஹீரோ அவரைத் தொடர்ந்து அழைக்கிறான். ஆனாலும் அவர் மறுத்துவிட்டுக் கிளம்புகிறார். செல்லக்கோபத்துடன், ஹீரோயின் ஹீரோ மேல் தண்ணீரை ஊற்றுகிறாள். (மொத்த சீனில், இந்த பிட்-ஐ மட்டும் தான் எடுத்துக்கொள்கிறேன்.)

காட்சியின் உள்ளடக்கம்:

இந்த சீனை புரிந்துகொண்டதில், இரு இயக்குநர்களுமே மாறுபடுகிறார்கள்.

மணிரத்தினத்தைப் பொறுத்தவரை, இந்த சீனின் முக்கிய அம்சமே ஹீரோயினின் தவிப்பு தான். ஆடியன்ஸ் உணர வேண்டியது ஹீரோயின் பதறித் துடிப்பதைத் தான். ஆடியன்ஸும் அதே மனநிலைக்கு வருவது தான் சரியாக இருக்கும். சுருக்கமாகச் சொல்வதென்றால், இந்த சீன், ஹீரோயினின் சீன். ’ஹீரோ அழைக்கிறான், சந்திரமௌலி மறுக்கிறார்’என்பது இரண்டாம் பட்சம் தான்.

ஹிந்திப்பட இயக்குநர், இதை ஹீரோவின் சீனாக அணுகுகிறார். ஒரு குறும்புக்கார இளைஞன், ஹீரோயினை தவிக்க விடுகிறான் & ஹீரோயினின் அப்பாவை குழம்ப விடுகிறான். ‘எப்படி கதற விட்டோம், பார்த்தியா!’ என்பது போல், ஹீரோ இரண்டு பக்கமும் என்ன பேசுகிறான் & செய்கிறான் என்பதே ஹிந்தி சீனின் முக்கிய அம்சம். ஆடியன்ஸை ஹீரோவின் பாயிண்ட் ஆஃப் வியூ-வில் நிறுத்த முயற்சிக்கிறார்.

நடிப்பு:

கார்த்திக்கும் ரேவதியும் தனித் தனியே நடித்தாலே தூள் கிளப்புவார்கள். இருவரும் இணைந்த, அத்தனை படங்களிலுமே கெமிஸ்ட்ரி வேறு லெவலில் தான் இருக்கும். இந்த லெஜண்ட்ஸுடன், ஹிந்தியில் நடித்த குழந்தைகளை ஒப்பிடுவது முறையல்ல. பாவம், விட்டுவிடுவோம்.

அப்பா கேரக்டரில் நடித்த இருவருமே ஓகே தான். ஆனாலும் தமிழில் நடித்த சங்கரனின் முகத்தில் இயல்பாகவே இருக்கும் அப்பாவிக்களை ஒரு ப்ளஸ் பாயிண்ட் தான்.




 ஷாட்ஸ்:
இரு படங்களிலும் வந்த ஷாட்ஸை இணைத்துள்ளேன். (1T-First shot Tamil, 1H-First shot Hindi, etc).

தமிழில் மாஸ்டர் ஷாட்டில், கேமிரா பொசிசனும் ப்ளாக்கிங்கும் ஹீரோ & ஹீரோயின் முகத்தை நாம் தெளிவாகப் பார்க்கும்படி டிசைன் செய்திருக்கிறார்கள். குறிப்பாக, ஹீரோயின் முகம். மேலும், பெரும்பாலான ஷாட்ஸ், ஹீரோயினை உள்ளடக்கியதாகவே இருக்கிறது.

முதல் ஷாட்டில், ஹீரோவுடன் அமர்ந்திருக்கும் ஹீரோயின் எழுந்து போவதும், திரும்ப ஓடுவந்து அமர்வதும், ‘என் அப்பா’ என்று ஹீரோவிடம் சொல்வதும் வருகிறது. அதன்பிறகு வரும் ஷாட்ஸில் அப்பாவின்  5 சிங்கிள் ஷாட்ஸ் & ஹீரோவின் 2 சிங்கிள் ஷாட்ஸ் தவிர்த்து, மீதி எல்லா ஷாட்டிலும் ஹீரோயின் இருக்கிறார். அவர் இல்லாத ஷாட்ஸிலும் ஹீரோயின் வாய்ஸ் இருக்கிறது. எனவே தான் ஹீரோயினுடன் சேர்ந்து, நாமும் ‘அய்யய்யோ’ என்று ஃபீல் ஆகிறோம்.

மேலும், ஹீரோயினுக்கு க்ளோசப் வைக்கவில்லை. பொதுவாக இந்த மாதிரி சீன்களில், யாருடைய பாயிண்ட் ஆஃப் வியூ முக்கியமோ, அவருக்கு க்ளோசப் வைப்பது வழக்கம். க்ளோசப் எடுத்துவிட்டு, எடிட்டிங்கில் தூக்கியிருப்பார்கள் என்று நினைக்கிறேன். ஏனென்றால்....

ஒரு சீனை மாஸ்டர் ஷாட் உடன் எஸ்டாபிள் செய்தபிறகு, அதுவும் மாஸ்டர் ஷாட் என்பது 2-ஷாட் அல்லது 3 ஷாட் ஆக இருக்கும்போது, கட் செய்து இன்னொரு ஷாட்டிற்குப் போவது ரொம்ப சிக்கலான விஷயம். ஹிட்ச்காக் இதைப் பற்றி விரிவாகப் பேசியிருக்கிறார். மாஸ்டர் ஷாட்டில் கேரக்டர்களுக்கு இடையே உருவாகியிருக்கும் எமோசன், கட் செய்யும்போது அடிபடும். அந்த எமோசன் கண்டினியூ ஆகும் அளவிற்கு, அடுத்த ஷாட் இருந்தே ஆக வேண்டும்.

இங்கே ஹீரோவும் ஹீரோயினும் அமர்ந்திருக்கும் ஷாட்டிலேயே, சீனின் சஸ்பென்ஸ் உருவாக்கப்பட்டுவிட்டது. தமிழில் இதை முடிந்தவரை உடைக்காமல், ஹீரோயினின் கை, வாய்ஸ் போன்றவற்றை எல்லாம் எல்லா ஷாட்டிலும் கொண்டுவந்து, மெயிண்டெய்ன் செய்கிறார்கள். சந்திரமௌலி தனியே நிற்பது லாஜிக்கலி கரெக்ட் என்பதால், அது உறுத்தவில்லை.

ஹிந்தியில் ‘ஹீரோவின் குறும்பு’ என்பது தான் சீனின் கான்செப்ட் என்பதால், மாஸ்டர் ஷாட்டை உடைத்து, தனித்தனி க்ளோசப் போக, இயக்குநர் தயங்கவே இல்லை. தமிழில் 12 ஷாட்களில் (பெரும்பாலும் மாஸ்டர் ஷாட்ஸ்) சொன்ன விஷயத்தை, ஹிந்தியில் 18 ஷாட்களில் சொல்கிறார்கள்.

ஹீரோயினின் அப்பாவை ஹீரோ அழைப்பது, ஹீரோயினிடம் திரும்பிப் பேசுவது, மீண்டும் அப்பாவிடம் பேசுவது என எல்லாவற்றையுமே சிங்கிள் ஷாட் (1-ஷாட்)-ல் ஹீரோவை தனியே உடைத்து எடுத்திருக்கிறார்கள். ஹீரோயினையும் க்ளோசப்பில் தனியே எடுத்திருக்கிறார்கள். ஏற்கனவே ஹீரோயினின் அப்பா தனியாகத் தான் நிற்கிறார். 18 ஷாட்களில், ஹீரோயின் 8 ஷாட்களில் தான் இருக்கிறார்.  ஹீரோவுக்கு 12 ஷாட்ஸ். ஹீரோ டூ அப்பா, ஹீரோ டூ ஹீரோயின், ஹீரோ டூ அப்பா என்பதாகவே கதை சொல்லுதல் இருக்கிறது.

ஹீரோயினுக்கு தனியே இரண்டு க்ளோசப் வைத்துமே, தமிழில் ஹீரோயின் கேரக்டர் உருவாக்கிய தாக்கத்தை உருவாக்க முடியவில்லை. காரணம், முன்னும் பின்னும் வந்த உடைக்கப்பட்ட ஷாட்ஸ். மூன்று கேரக்டர்களுமே தனித்தீவாக நிற்கிறார்கள். டிவி சீரியல் எஃபக்ட் வந்துவிடுகிறது.





எடிட்டிங்:


மேலேயே எடிட்டிங்கையும் சேர்த்தே பார்த்தோம். இன்னொரு குறிப்பிடத்தகுந்த விஷயம், அப்பா கேரக்டர் முதலில் காட்டப்படுவது.

தமிழில் ஹீரோயின் எழுந்து போவார், எதையோ பார்த்துவிட்டு ஓடுவந்து அமர்வார். ஹீரோ என்னவென்று கேட்டபிறகு, அப்பா வந்திருப்பதைச் சொல்வார், ஹீரோ எழுந்து பார்ப்பார். இவை அனைத்தும் ஒரே ஷாட்டில் (1T) சொல்லப்பட்ட பிறகு தான், மிஸ்டர்.சந்திரமௌலி வந்திருக்கும் விஷயமே நமக்கு காட்டப்படும்.

ஹிந்தியில் ஹீரோயின் எழுந்து போகும்போதே, அப்பா கேரக்டர் வந்திருப்பதை நமக்கு காட்டிவிடுவார்கள். ஹீரோவின் பாயிண்ட் ஆஃப் வியூவில் சொன்னாலுமே, இது சரியான முடிவு என்று எனக்குத் தோன்றவில்லை.
மாஸ்டர் ஷாட் (1H)-ஐ முழுக்க எடுத்திருக்கிறார்கள். ஆனாலும் இடையில் க்ளோசப் ஷாட்களாக வைத்தது, ஒர்க்-அவுட் ஆகவில்லை. அதைப் பார்த்தபிறகாவது, ஒரிஜினலை ஃபாலோ செய்திருக்கலாம்.

இயக்குநர் மணிரத்தினம் - ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம் - எடிட்டர்கள் லெனின் & விஜயன் ஆகிய ஜாம்பவான்களின் கூட்டணி உருவாக்கிய மேஜிக், இந்த சந்திரமௌலி சீன். எத்தனை முறை பார்த்தாலும், கார்த்திக்கும் துள்ளலான நடிப்பும் ரேவதியின் ரியாக்சனும் சலித்ததே இல்லை.

நான் எடுத்துக்கொண்ட இந்த துணுக்கில் (1T to 15T) பிண்ணனி இசை கிடையாது. ரேவதியின் வாய்ஸ் தான் பிண்ணனி இசை. எனவே இசைஞானி பற்றி இதில் குறிப்பிடவில்லை. மிகச்சரியாக, இந்த இடத்தில் பிண்ணனி இசையை நிறுத்தியிருப்பார்.

ப்ளாக்கிங், ஷாட் காம்போசிசன், ஷாட் செலக்சன்/எடிட்டிங் எல்லாமே உள்ளுணர்வு சார்ந்த விஷயங்கள். சமயங்களில் எதனால் இந்த ஷாட்டை இப்படி வைத்தோம் என்று படைப்பாளிகளால் சொல்ல முடியாது. ‘அது தான் சரின்னு தோணுச்சு, வச்சேன்’ என்பதே பெரும்பாலும் பதிலாக இருக்கும்.


ஒரு சீனை, ஷாட்டை புரிந்துகொள்வதும் அப்படியே. நீங்கள் இன்னும் ஆராய்ந்தால், மேலும் பல விஷயங்கள் பிடிபடலாம்!

- செங்கோவி
மேலும் வாசிக்க... "மௌனராகம் ‘சந்திரமௌலி’ சீன் - செங்கோவியின் அலசல்"

Saturday, August 24, 2019

ஆடை - அமலாபால்


மெயின் கேரக்டரை குறைகள் உள்ள கேரக்டராக படைப்பது என்பது திரைக்கதை உத்திகளில் ஒன்று. அந்த குறையில் இருந்து எப்படி அந்த கேரக்டர் மீண்டு வந்தது என்பது கிளைக்கதையாகவும் இருக்கலாம் அல்லது மெயின் கதையே அதுவாக இருக்கலாம்.

ஜுராசிக் பார்க்கில் ஹீரோவிற்கு குழந்தைகள் என்றாலே பிடிக்காது. கதையின் போக்கில், ஒரு ஆபத்தில் சிக்கும்போது, ஹீரோ கேரக்டர் எப்படி மாறுகிறது என்பது கிளைக்கதையாகச் சொல்லப்பட்டிருக்கும்.

தேவர்மகனில் வன்முறைக்கு ஊரே பலியாகும்போது, ஹீரோ வெளியூருக்குப் போய் ஹோட்டல் வைத்து பிழைப்பதைப் பற்றி திட்டமிட்டுக் கொண்டிருக்கும். அந்த மக்களைப் பற்றி எவ்வித அக்கறையும் ஹீரோவிற்கு இருக்காது. இந்த குறையில் இருந்து ஹீரோ எப்படி மீண்டு, மக்களுக்காக வாழ்கிறான் என்பது படத்தின் மெயின் கதை.

இப்படி ஒரு குறையை மெயின்கேரக்டருக்கு வைக்கும்போது, ‘நல்லவன்...ஆனாலும் இப்படி ஒரு குறை..அவனும் மனிதன் தானே!’ என்று ஆடியன்ஸ் அட்ஜஸ்ட் செய்துகொள்ளும் அளவிற்குள் தான் அந்த நெகடிவ் பாயிண்ட் இருக்க வேண்டும். மெயின் கேரக்டருடன் ஆடியன்ஸ் ஐடெண்டிஃபை ஆகும் அளவிற்குள் தான் அந்தக் குறையை படைக்க வேண்டும். இல்லையென்றால், கடைசிக் காட்சியில் திருந்தும் நம்பியார் போல் வில்லன் ரோலாக ஆகிவிடும் அபாயம் இந்த டெக்னிக்கில் உண்டு.

ஆடை படத்தின் மிகப்பெரிய குறை, அமலாபால் கேரக்டர் வில்லன் ரோலாக ஆகிவிட்டது தான். இடைவேளை வரை, ஒரு காட்சியில்கூட, அவர் செய்யும் ஒரு செயல்கூட நமக்குப் பிடித்ததாக இல்லை. ஒவ்வொரு காட்சியும், நம்மை எரிச்சலின் உச்சத்திற்கே கொண்டு செல்கின்றன.

(வில்லன் கேரக்டரையே ஹீரோ கேரக்டர் என்று நம்பி, எழுதி பல்பு வாங்கிய இன்னொரு படம், மிஸ்டர். லோக்கல். விருப்பமில்லாப் பெண்ணை விரட்டி, விரட்டி தொந்தரவு செய்பவன் வில்லன், ஹீரோ அல்ல.

2013ஆம் ஆண்டு சட்ட திருத்தத்தின்படி, stalking என்பது தண்டனைக்குரிய குற்றம் என்று இபிகோ 354D சொல்கிறது. இதையெல்லாம் திரைக்கதை விவாதத்தில் யாராவது சொல்லியிருக்க வேண்டும்.)

ஏற்கனவே எனக்கு ப்ரான்க் ஷோ பிடிக்காது. இதில் வடை போச்சே ப்ரான்க் ஷோ செய்தவரே நடித்திருப்பது, எரிகிற தீயில் பெட்ரோலை ஊற்றியபடி ஆகிவிட்டது.

எனவே, இண்டர்வெல்லில் அமலாபால் ஆடையின்றி பிரச்சினையில் சிக்கும்போது, 1%கூட அனுதாபம் வரவில்லை. அவர் அங்குமிங்கும் ஓடும்போது, எட்டிஎட்டிப் பார்ப்பதைத் தவிர வேறு ஒன்றும் செய்யத் தோன்றவில்லை.

மைனா படத்திற்குப் பிறகு, அமலா பாலின் நடிப்பு மிகவும் பிடித்திருந்தது. அவர் இந்த கேரக்டரை ஒத்துக்கொண்டது, மிகவும் போல்டான முடிவு. இந்த படத்தில் அவரின் பெர்ஃபார்மன்ஸைப் பார்த்தபோது, தமிழ் சினிமா வீணடித்த நல்ல நடிகை என்று தோன்றியது. (அதற்கு அவரும் ஒரு முக்கியக் காரணம்.) ஒரு ஆபாச நடிகையாகத் தோன்றிவிடும் அபாயம் இருந்தும், அத்தகைய தோற்றம் வராமல் மேனேஜ் செய்திருப்பதைப் பாராட்டியே ஆகவேண்டும்.

மேயாத மான் மூலம் கவனம் ஈர்த்த ரத்னகுமார், டெக்னிகலாகவும் பெர்ஃபார்மன்ஸிலும் பெட்டரான படத்தையே கொடுத்திருக்கிறார். கதையும், திரைக்கதையும் இவ்வளவு பெரிய கான்செப்ட்டிற்கு நியாயம் செய்வதாக இல்லை என்பதே நம் வருத்தம். ’ப்ரான்க் ஷோ செய்யாதீர்கள்’ எனும் மெசேஜ் போதுமானதாக இல்லை.

ஒளிப்பதிவாளர் விஜய் கார்த்திக் கண்ணன், சிந்துபாத்திற்குப் பிறகு இதிலும் தன் முத்திரையைப் பதித்திருக்கிறார். நிறைய ரசிக்கும்படியாக ஃப்ரேம்கள். ஆபாசத்தத்தை தவிர்க்கும் புத்திசாலித்தனமான ஷாட்ஸ். கூடவே, எடிட்டர் சபீக் முகமது அலியும் இசையமைப்பாளர் பிரதீப் குமாரும் படத்திற்கு பெரும் பலம்.

நடிப்பு+இயக்கம்+ஒளிப்பதிவு+எடிட்டிங்+இசை எல்லாம் இடைவேளைக்குப் பின் அட்டகாசமாக இருந்தும், முதல்பாதியால் முதலுக்கே மோசமாகிவிட்டது.

ஒரு நல்ல டீம், ஜெயித்திருக்க வேண்டும். ஜஸ்ட் மிஸ்!
மேலும் வாசிக்க... "ஆடை - அமலாபால்"