Friday, November 25, 2011

மயக்கம் என்ன - திரை விமர்சனம்


ருமை அண்ணன் செல்வராகவனும் தங்கத் தம்பி தனுஷும் இணையும் மூன்றாவது(4வதும்) படம் என்பதாலும், செல்வராகவன் மீண்டும் ’பாலியல் வறட்சி’ மேட்டரை கையில் எடுத்திருப்பதாலும் ஏற்கனவே பாடல்கள் சூப்பர் ஹிட் என்பதாலும் படத்திற்கு ஓரளவு எதிர்பார்ப்பு இருந்தது.ஆனால்....................அவ்வ்!


முதல்ல கதையைச் சொல்ல முயற்சி பண்றேன்..

இது தமிழ்சினிமாவுலேயே வராத கதைன்னு தைரியமாச் சொல்லலாம்..தனுஷும் அவர் தங்கச்சியும் அப்பா-அம்மா இல்லாதவங்க..ஃப்ரெண்ட்ஸ் சப்போர்ட்ல ‘வாழ்றாங்க’..பீர் தான், சிக்கன் பிரியாணி தான்..நல்ல வாழ்வு..சுந்தர்ங்கிற மாக்கான் தான் க்ளோஸ் ஃப்ரெண்டு..அவர் அப்பாவும் ஒன்னா தண்ணி அடிக்கிற அளவுக்கு நல்லா பழகுறாரு..அந்த மாக்கான் ஃப்ரெண்டு ஒரு ஃபிகரை கூட்டிக்கிட்டு வந்து ‘இது நான் லவ் பண்ற பொண்ணு..லவ்வுக்கு ஒத்துக்கலை..டேட்டிங்குக்கு மட்டும் தான் ஒத்துக்கிச்சுன்னு சொல்றாரு..ஃப்ரெண்ட்ஸும் ரொம்ப நல்ல பொண்ணு-னு அதை குரூப்ல சேர்த்துக்கறாங்க.(குரூப்ல பொண்ணுங்களும் உண்டு). 

அப்புறம் பீர், விஸ்கின்னு நல்லா பழகுறாங்க..அந்தப் பொண்ணுக்கும் தனுஷுக்கும் ஒத்துக்கலை..முட்டிக்குது..மோதல் என்ன ஆகும்?..அப்புறம் தான் ஆடியன்சுக்கே தெரியுது, அது தான் ஹீரோயின்னு..ஏன்னா அதுவரைக்கும் மாக்கான் நண்பன் தான் அதை தடவுறாரு..(இதான் கலாச்சார அதிர்ச்சியோ...)

நண்பன் காதலியை லவட்டலாமா? நம்ம கலாச்சாரம் என்ன, பண்பாடு என்ன?-ன்னு தனுஷ்க்கு ஃபீலிங். கூடவே லவ் ஃபீலிங்கும். பொண்ணும் மாக்கான்கிட்ட தெளிவா மேட்டரைச் சொல்லாம அவன் காசுலேயே ஊர் ஊராச் சுத்தி தண்ணி அடிச்சுக்கிட்டே, லுக் விட்டுக்கிட்டே தனுஷை லவ் பண்ணுது..ஒரு 'அரை சீன் படம்' ரேஞ்சுக்கு இந்தக் கதை ஒரு பக்கம் போகும்போதே, மெயின் கதை(?) இன்னொரு பக்கம் ஓடுது..(கதை மட்டும் தான் அப்படி..சீனும் இல்லை!!)

அது என்னன்னா, தனுஷ் ஒரு ஃபோட்டோகிராஃபர்..புகழ்பெற்ற ஃபோட்டோகிராஃபரான ஒரு பெருசை (பேர் மறந்திடுச்சு..) ரோல் மாடலா நினைச்சு அவர் கிட்ட அசிஸ்டெண்டா சேர முயற்சி பண்றாரு..நேஷனல் ஜாக்ரஃபி, டிஸ்கவரில நம்ம ஃபோட்டோவும் வரணும்னு ஆசைப் படுறாரு..அந்த பெருசு ‘போய் பறவைகளை ஃபோட்டோ எடுத்துக் காட்டு..அதைப் பார்த்துட்டு முடிவு சொல்றேன்னு தனுஷ்கிட்டச் சொல்ல, நம்மாளும் சூப்பரா படம் எடுத்துக்கொடுத்தா, அந்தப் பெருசு அதை தன்னோட படம்னு சொல்லி ரிலீஸ் பண்ணிடுது..அந்தப் படம் என்னமோ ஒரு பெரிய பரிசையும் வாங்கிடுது..

என்னென்னமோ நடக்குதே..அப்போ கண்டிப்பா என்னமாவது நடக்கும்னு நாம நிமிர்ந்து உட்காருதோம்..கூடவே ஒரு சந்தோசம், செல்வராகவன் வக்கிரம் இல்லாம படத்தைக் கொண்டு போறாரேன்னு..அப்படில்லாம் விட்டுடுவாரா...

தனுஷும் ஹீரோயின் ரிச்சா கங்கோபாத்தியாயா (என்னா பேரு!)-வும் ஒரு சீன்ல..ச்சே..ச்சே..சீன் இல்லீங்க..ஒரு காட்சில உணர்ச்சி வசப்பட்டு டபக்குன்னு கட்டிப்பிடிக்கிறதை மாக்கான் நண்பன் பார்த்துடுறாரு...சின்ன சண்டை, நீயெல்லாம் நண்பனா டயலாக்ஸ் பேசிட்டு தனுஷ் ரிச்சாவைக் கட்டிக்கிடறாரு..மாக்கான் நண்பன், தனுஷோட தங்கச்சியை கட்டிக்கிடறாரு..(ஆமாம்யா..இதுக்கே அதிர்ச்சியானா எப்படி?)...

இப்போ தனுஷ் ஃபோட்டோவைக் காட்டி பெருசு பெரிய விருது வாங்குச்சா..அதை பேப்பர்ல பார்க்கிற தனுஷ், பால்கனில இருந்து தலைசுத்தி கீழ விழுந்து மண்டை சிதறுது..

மூன்று வருடங்களுக்குப் பிறகு...(அப்படித் தான் போட்டாங்க..)......

தனுஷ் மெண்டல் ஆகிடுதாரு..பொண்டாட்டியை (அதான்யா, ஹீரோயினை) போட்டு அடிக்காரு..(அய்யோ..) கேர்ல் ஃப்ரெண்ட் கல்யாண ரிசப்சன்ல மாப்பிளை மண்டையை உடைக்காரு..(அய்யய்யோ)..

தனுஷ் ஃப்ரெண்ட்ல ஒருத்தர் ஹீரோயினுக்கு ஆறுதல் சொல்றேன்னுட்டு அப்படியே இறுக்கி அணைச்சு உம்மா கொடுத்து ‘உன்னை நான் வச்சிக்கிறேன்’-ங்கிறதை டீசண்டா சொல்றாரு..(இப்போ அய்யய்யோவை வாய் விட்டே சொல்லலாம்..)..அய்யய்யோ...படம் பார்க்க வந்ததுக்கு இன்னும் என்னென்ன கண்றாவியெல்லாம் பார்க்கணுமோன்னு பதறுனோம்..

ஆனா அந்தப் பொண்ணு பத்தினி..”டேய், எவ்னோ டேட்டிங் வான்னு கூப்பிட்டதும் நடுராத்தில அவன் பின்னாடியே வந்தவ தாண்டா நான்..அவன் காசுலேயே பீர் அடிச்சு,அவன் ஃப்ரெண்ட்டையே கரெக்ட் பண்ணவ தாண்டா..அதுக்காக என் புருசனை விட்டுக்கொடுப்பேன்னு நினைச்சுடாதே..”-ன்னு (பயப்படாதீங்க..இது என் டயலாக் தான்..அது இதையே வேற மாதிரி டீசண்டா) சொல்லிடுது. அந்த நல்ல நண்பனும் ‘சாரி’ன்னு சொல்ல இதுவும் ‘ஓகே..இதை நீயும் மறந்திடு, நானும் மறந்திடுவேன்..நீ எப்பவும்போல அடிக்கடி என் வீட்டுக்கு வா(!!)’ன்னு சொல்லிடுது..

அடுத்து.....................மாசமா இருக்கிற ஹீரோயின் வயித்துல மெண்டலா திரியற தனுஷ் ஒரே மிதி..கரு ரத்தமா போகுது...தரையெல்லாம் ரத்தம்..அய்யோ, அம்மா-ன்னு ஹீரோயின்கூடச் சேர்ந்து ஆடியன்சும் கத்துறாங்க.. கதறுதாங்க..அந்தம்மா உடம்பு சரியாகி வீட்டுக்கு வருது..தனுஷ் அந்த ரத்தத்துக்குப் பக்கத்துலேயே படுத்திருக்காரு..அது வாளி நிறைய தண்ணியும், ப்ரெஷும் எடுத்து தேய் தேய்னு தேய்ச்சுக் கழுவிக்கிட்டே 10 நிமிசம் பேசி அழறாங்க..சாப்பிட்டுப் போன நமக்கு குடலைப் புரட்டிடுச்சு..உஸ்ஸ்ஸ்...

இவ்ளோ விஷயம் நடக்குன்னா செல்வராகவன் என்னமோ சொல்ல வர்றாரு...என்னவா இருக்கும்-னு யோசிக்கிட்டே கண்டினியூ பண்ணா..

அடடே..என்ன ஆச்சரியம்..தனுஷ் திடீர்னு தெளிவாகிடுதாரு..அவர் ஃபோட்டோ குமுதம் அட்டைல வந்து, அப்படியே உலகம் பூரா சுத்தி, அந்த பெருசை விட பெரிய ஃபோட்டோகிராஃபர் ஆகி ஆஸ்கார் மாதிரி பெரிய பரிசை ஜெர்மன் போய் வாங்கிடுதாரு..

அப்புறம் தான் நாங்க எதிர்பார்த்த முக்கியமான விஷயமே வந்துச்சு..ஆமாங்க..படம் முடிஞ்சுடுச்சு!

எப்பவும் நான் படத்தோட கதையை விமர்சனத்துல சொல்றதில்லை..ஆனா எவ்வளவு யோசிச்சும், இந்தப் படத்தோட கதை என்ன, என்ன தான் சொல்ல வந்தாங்கன்னு புரியாததால, பார்த்ததை அப்படியே எழுதி இருக்கேன்..உங்களுக்காவது ஏதாவது புரிஞ்சா சொல்லுங்க..

படத்துல நல்ல விஷயம்னா பாடல்கள் தான்..ஜி.வி.பிரகாஷ் அருமையா டியூன் போட்டிருக்கார்..பிண்ணனி இசையும் நல்லா இருந்துச்சு..குறிப்பா ‘வெண்ணிலவே’ பாட்டுக்கு குடிச்சுட்டு மாக்கான் - ரிச்சா - தனுஷ் ஆடி முடிக்கவும் வந்த பிண்ணனி இசை.

அடுத்து ராம்ஜியின் ஒளிப்பதிவு..படமே ஃபோட்டோகிராஃப்ர் பத்தின படம் என்பதால் கேரளா-கர்நாடகான்னு அழகான லொகேசனா தேடி எடுத்திருக்காங்க..

தனுஷ் நல்ல நடிப்பு தான்..அண்ணன் படம் என்பதால் அடக்கியே வாசிச்சிருக்காரு..

ஹீரோயின் ரிச்சா முதல்ல பார்க்கும்போது சாதாரணமா தெரிஞ்சது..போகப்போக ‘நல்ல ஃபிகரா’ தெரிய ஆரம்பிச்சுடுச்சு..நல்லா முகத்துல எக்ஸ்பிரசன்ஸ் காட்டுது..அழகான கண்கள்..அகலமான முதுகுன்னு நல்லவொரு அறிமுகம்.

‘இது அடுத்த தலைமுறைக்கான படம்’னு செல்வராகவன் சொன்னாரு..அப்பவே உஷார் ஆகியிருக்கணும்..அம்பது வருசம் கழிச்சு பார்க்கவேண்டிய படத்தை அவசரப்பட்டு, இப்பவே பார்த்துட்டேன்..

வேற என்ன சொல்ல..........?
மேலும் வாசிக்க... "மயக்கம் என்ன - திரை விமர்சனம்"
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

68 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.

Wednesday, November 23, 2011

பிராமண நண்பர்களுக்கு...(வர்ணம், ஜாதி, இட ஒதுக்கீடு)_6

அன்பு நண்பர்களுக்கு,

சமூகங்களை வரலாற்றுப் பின்புலத்திலும், பொருளாதார அடிப்படையிலும், கல்வி கற்பதில் அவர்களுக்கு உள்ள சிரமத்தின் அடிப்படையிலும் ஆராய்ந்தபின்னரே, இடஒதுக்கீடு தேவை என்ற முடிவு எடுக்கப்பட்டது.

ஆனாலும், எல்லா பிராமண சாதிக்குடும்பங்களும் பொருளாதார ரீதியிலும், கல்வியிலும் நல்ல நிலைமையில் இருந்தவை அல்ல. இழவு வீட்டில் தோசம் கழித்து 50-100 வாங்கி சாப்பிட்டே கடைசிவரை வறுமையில் வாழ்ந்த அய்யரை எனக்குத் தெரியும். கணவன் சரியில்லாத நிலையில் இட்லிக்கடை வைத்துப் பிழைத்த மாமியும் எங்கள் பகுதியில் உண்டு.

பிற்படுத்தப்பட்ட சமூகமாக இருந்தாலும், வசதியில் கல்வியில் முன்பே முன்னேறிவிட்ட குடும்பங்களும் இங்கு உண்டு. பெரிய பிஸினஸ்மேனின் பிள்ளைகூட அரசு வழங்கும் இலவச பாடப்புத்தகத்தை வாங்கிவிட்டு, அதை எடைக்குப்போட்டு காசு வாங்கி சினிமாவுக்குப் போன கதை நான் அறிவேன்.

ஆனால் இவையெல்லாம் சதவீத அடிப்படையில் பார்த்தால், மிகக்குறைவே. 1930களில் 90% பிராமண சமூகம் கல்வி கற்று நல்ல நிலையிலும், 90% பிற சமூகங்கள் கல்வியறிவற்று மோசமான நிலையிலும் இருந்ததால்தானே, இடஒதுக்கீடு கோரிக்கையே எழுந்தது?

ஜனநாய அரசு பெரும்பான்மை மக்களின் நிலையையே கணக்கில் கொள்ளும். அதுவே பல்வேறு சமுதாயங்கள் வாழும், சரியான ஜாதிமுறைக் கணக்கீடுகள் இல்லாத இந்தியாவில் சாத்தியம் ஆன விஷயம்.

அரசும் அத்தகைய வசதி படித்தோரை விலக்க, வருமானச் சான்றிதழ் பெறும் முறையை ஏற்கனவே வைத்துள்ளது. லஞ்சம் காரணமாக அது சரியானமுறையில் நடைமுறைப்படுத்தப்படாவிட்டாலும், தற்போதைய கணிணி உலகில் வரி செலுத்துதல் ஆன் லைன் மயமாகிவிட்ட சூழலில், பெருவாரியான பிற்படுத்தப்பட்டோரை வடிகட்ட முடியும் என்றே நம்புகிறேன்.

அமைப்பு சாரா தொழிலில் உள்ளோரின் உண்மையான வருமானத்தை கணக்கிடுவதும், கண்காணிப்பதுமே இப்போதைய பிரச்சினை.

பெருவாரியான பிற்படுத்தப்பட்ட சமூகங்களை முன்னேற்றும் நோக்கிலேயே இடஒதுக்கீடு கொண்டுவரப்பட்டது. அந்த நோக்கம் சரியாக நிறைவேறிக்கொண்டிருக்கிறது என்பதற்கு அப்துல்கலாம், மயில்சாமி அண்ணாதுரை போன்ற பிற்படுத்தப்பட்ட சமூகத்தில் இருந்து மேலெழுந்துவந்த விஞ்சானிகளே சாட்சி.

உண்மையில் இடஒதுக்கீடு நிரந்தரமான திட்டமாக கொண்டுவரப்படவில்லை. 10 வருடங்களுக்கு மட்டுமே என்று ஞாபகம். அதற்குள் இந்தச் சமூகங்கள் முன்னேறிவிடும் என்று நம்பப்பட்டது. 

ஆனால் அது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. வரலாற்று நோக்கில் 10 வருடம் என்பது சிறுதுளி.

என்னைப்பொறுத்தவரை இரண்டு தலைமுறைகளுக்காவது இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்று நினைக்கின்றேன். அது தெளிவாக அவர்களுக்குச் சொல்லப்பட வேண்டும். 

ஆனாலும் தனிமனித உயர்வு என்பது எவ்வளவு சிக்கலானது என்பதை ஜோதிடம் அறிந்த நீங்கள் உணர்ந்திருப்பீர்கள் என்று நம்புகிறேன். எனவே 100% முன்னேற்றம் என்பது நடைமுறைச் சாத்தியமற்ற ஒன்று. ஆனாலும் பெருவாரியான குடும்பங்களை முன்னேற்ற இடஒதுக்கீடு உதவவே செய்கிறது.

இரண்டு தலைமுறைகளாக இடஒதுக்கீடு போன்ற அரசு சலுகைகளை உபயோகித்து, மேலெழுந்துவிட்ட குடும்பங்கள், தங்களை இடஒதுக்கீட்டில் இருந்து விலக்கிக்கொள்ள வேண்டும். அதுவே அதே ஜாதியில் கீழ்நிலையில் வாழும் மக்களுக்கு, அவர்கள் செய்யும் கைம்மாறு.

நல்ல வேலையிலும், வசதியுடனும் உள்ள ஒருவர், இடஒதுக்கீட்டை உபயோகித்தால், முதலில் அவர் தன் ஜாதிக்கே கெடுதல் செய்கிறார். உண்மையில் அதற்கான எதிர்ப்புக்குரல் அந்த ஜாதிகளில் இருந்தே எழுந்து வரவேண்டும்.

வசதிபடைத்த பிற்படுத்தப்பட்டோரும் இட ஒதுக்கீட்டை உபயோகிப்பதால், இடஒதுக்கீட்டால் தங்களுக்கான வாய்ப்பு பறிக்கப்படுவதாக நீங்கள் புலம்புகிறீர்கள். உண்மையில் அவ்வாறு முதலில் புலம்ப வேண்டியதும் ,போராட வேண்டியதும் அந்த சமூகத்து அடித்தட்டு மக்கள் தான்.

பொருளாதார அடிப்படையில் இடஒதுக்கீடு என்பது சரியான முறை என்று நான் நினைக்கவில்லை. இன்று நல்ல வசதியுடன் இருக்கும் ஒருவர், ஓரிரு வருடங்களில் வீழ்ந்துவிடுவதை நாம் பார்க்க்கின்றோம். மேலும், இட ஒதுக்கீடு என்பதன் அடிப்படையே கல்விச்சூழலுக்குப் பழக்கமில்லாத சமூகங்களை சலுகை மூலம் முன்னேற்றுவதே.

பொருளாதார அடிப்படையில் இடஒதுக்கீடு கோருவோரிடம் பொதுவாக நான் ஒன்று கேட்பது உண்டு.

“நீங்கள் ஒரு வேலைக்கு/காலேஜ் சீட்டிற்கு அப்ளை செய்கிறீர்கள். 100 இடங்கள் அங்கு உள்ளன. உங்கள் ஜாதிக்கு இடஒதுக்கீட்டின்படி 5 இடங்களே ஒதுக்கப்படும். அங்கே உங்கள் ஜாதியைச் சேர்ந்த 50 பேர் வந்திருக்கிறார்கள். வசதியான 45 பேர் (நீங்கள் உட்பட) 90% மார்க்குடன் நிற்கிறீர்கள். வசதி குறைவான, வேலை செய்துகொண்டே படித்த பிராமண வீட்டுப் பிள்ளைகள் 5 பேர் 75% மார்க்குடன் வந்திருக்கிறார்கள்.

இந்தச் சூழ்நிலையில் நீங்கள் பரந்த மனதுடன் அந்த வேலையை ஏழைப் பிராமணர்களுக்கு விட்டுக்கொடுப்பீர்களா?”

உங்கள் சமூகத்துப் பெரியவர்கள் / ஜாதிச் சங்கங்கள் மூலம் ‘இனிமேல் நம்மை விட பொருளாதாரத்தில் தாழ்ந்த பிராமணர் வந்தால், நாம் உடனே போட்டியில் இருந்து விலகி அவர்களுக்கு வழி விடுவோம்’ என்று ஒரு தீர்மானம் நிறைவேற்ற முடியுமா? அதற்கு பெருவாரியான வசதி + படித்த பிராமணக் குடும்பங்கள் என்ன எதிர்வினையாற்றும் என்று புரிகிறதல்லவா?

பொருளாதார அடிப்படையில் இடஒதுக்கீடு வேண்டும் என்று தீவிரமாக பொதுமேடைகளில் பேசும் உங்கள் தலைவர்கள், வசதியானவர்களே. அவர்கள் தற்போதைய சமூகம் சார்ந்த இட ஒதுக்கீட்டுடன் பொருளாதார இடஒதுக்கீட்டையும் சேர்த்து நடைமுறைப்படுத்த குரல் கொடுப்பார்களா? ஏழைப் பிராமணருக்கு நீங்களே இடம் கொடுக்கவில்லையென்றால், பிற ஜாதியினர் எப்படி இடம் கொடுப்பார்கள்?

பொருளாதார இட ஒதுக்கீடு கோருவோரின் நோக்கம் இட ஒதுக்கீட்டை முற்றிலும் ஒழிப்பது தான். அதற்காகவே அவர்கள் பொருளாதார இடஒதுக்கீடு என்று கூக்கிரலிடுகிறார்கள். தற்போதைய நிலையில் பொதுப்பிரிவிலேயே ஏழ்மைநிலையில் உள்ள பிராமணர்களுக்கு இடஒதுக்கீடு கோரலாம்.

உண்மையில் இடஒதுக்கீடுத் திட்டம் மறுபரிசீலனை செய்யப்பட வேண்டிய நேரம் தான் இது. இன்னும் சில வருடங்களில் வசதியான தன் ஜாதியினரை நோக்கி, ஏழை சாதியினர் தங்கள் வாய்ப்பு பறிக்கப்படுவதாக கூக்குரல் எழுப்பலாம். எழுப்ப வேண்டும்.

அதன்மூலமாக ஏற்கனவே இடஒதுக்கீட்டின் மூலம் கல்விச்சூழலுக்குள் வந்துவிட்ட குடும்பங்கள், பிற ஏழைக் குடும்பங்களுக்கு வழி விட வேண்டிய கட்டாயம் உருவாக்கப்படவேண்டும்.

பொருளாதார ரீதியில் மட்டுமே இடஒதுக்கீடு என்றல்லாமல் பொருளாதார ரீதியிலும் இட ஒதுக்கீடு என்பதே இப்போதைய தேவையென்று நினைக்கின்றேன்.

அனைத்து ஜாதிகளாலும், பிராமண ஜாதி உட்பட, இட ஒதுக்கீட்டில் பொருளாதாரத்தையும் முக்கியக் காரணியாக சேர்க்க போராட்டங்கள் முன்னெடுக்கப்பட வேண்டும்.

அது நடைமுறைப்படுத்தப்பட்டால், தானாகவே பல குடும்பங்கள் இடஒதுக்கீட்டில் இருந்து விலக்கப்படும். அதன்மூலமாகவே இடஒதுக்கீட்டுப் பயனாளர்களைக் குறைக்க முடியும்.

அதுவே இடஒதுக்கீட்டு விகிதத்தை குறைக்கவும் வழிசெய்யும். அதுவே கொஞ்சம் கொஞ்சமாக உயர்வு தாழ்வற்ற சமுதாயமாக நம்மை மாற்றும்.

அன்புடன்
செங்கோவி


(தொடரும்)

மேலும் வாசிக்க... "பிராமண நண்பர்களுக்கு...(வர்ணம், ஜாதி, இட ஒதுக்கீடு)_6"
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

21 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.

மழலை உலகம் மகத்தானது...(தொடர் பதிவு)

இந்த தொடர்பதிவிற்கு என்னை அழைத்த இளம்பதிவர்(!) கிஸ்ராஜா (K.S.S.Rajh)-க்கு நன்றியைச் சொல்லிக்கொண்டு...


மழலை உலகம் மகத்தானது_பகுதி-1














சாரி...18+.....!!!









மழலை உலகம் மகத்தானது_பகுதி-2:
மழலைகளைப் பற்றிய பதிவென்றால், அவர்களை எப்படி வளர்ப்பது, எப்படிக் கவனிப்பது என்று எழுதவே தோன்றுகிறது. அதைவிடவும் சுவாரஸ்யமாய் இருப்பது, தற்கால குழந்தைகளின் கவனிப்புத்திறன் தான்..

எனது ஒன்றரை வயது மகனைப் பார்த்து எனக்கு ஆச்சரியமாக உள்ளது. ஒரு பீரோவைத் திறப்பதை ஒருமுறை பார்த்துவிட்டால், அடுத்து அவனே அதைச் செய்துவிடுகிறான். எங்கள் வீட்டு டிவி ஸ்டேண்டில் கீழே புத்தக செல்ஃபும் உண்டு.அதை கண்ணாடிக் கதவால் பூட்டிக்கொள்ள முடியும். அதைப் பூட்ட சாவி கிடையாது. கொஞ்சம் நுணுக்கமான ப்ளாஸ்டிக் லாக் தான். அதை தெரியாமல் ஒருமுறை அவன்முன் திறந்து மூடி விட்டேன். முடிந்தது கதை. அடுத்த 5 நிமிடங்கள் போராடி, அதைத் திறந்துவிட்டான்.

இதை என் நண்பரிடம் சொன்னபோது அவர் “அதாவது பரவாயில்லைங்க..ஒருதடவை என் மொபைல் கீழே விழுந்து மூடி,பேட்டரி, மொபைல் என மூன்றாகப் பிரிந்துவிட்டது. அதை என் பையன் முன்னாடி ஃபிக்ஸ் பண்ணிட்டேன்.பிடிச்சது வினை..இப்போ கொஞ்சம் அசந்தா, என் மொபைலை எடுத்து தரயில ஒரே போடு..மூணாப் பிரிஞ்சதும் அவனாவே ஃபிக்ஸ் பண்ணிட்டு ‘அப்பா..இந்தா’-ன்னு பெருமையாத் தர்றான்..” என்றார்.

இந்தத் தலைமுறைக் குழந்தைகள் நம்மைவிடவும் புத்திசாலியாக இருப்பதாகவே தோன்றுகிறது..தொழில்நுட்பப் புரட்சியைப் புரிந்துகொள்ளும் வயதில்லை இப்போது..இப்போதே இப்படி என்றால், வரும்காலத்தில் நமக்கே பாடம் சொல்லித் தந்து ‘அப்பனுக்கே பாடம் சொன்ன சுப்பையா’ போல் ஆவது நிச்சயம் தான்..
எனது மகன் ஒரு வயது வரை இந்தியாவில் இருந்தான்..அங்கே அவனுடன் விளையாட குழந்தைகள் கூட்டம் அதிகம். கூட்டாஞ்சோறு சாப்பிடும் ஆசையில் அப்போதே தானே சாப்பிடவும் பழகிக்கொண்டான்..எப்போதும் விளையாட்டு, சுறுசுறுப்பு..அவனை இங்கே அழைத்து வரும்போது, எங்களுக்கே கவலையாக இருந்தது. ‘இங்கே வந்து அப்பார்ட்மெண்ட் வாழ்க்கையில் என்ன செய்யப் போகிறானோ’ என்று.

ஏனென்றால் இங்கே வளரும் குழந்தைகள், தாயின் இடுப்பை விட்டு இறங்குவதே இல்லை. 2 வயது தாண்டியபின்னும் சொந்தமாக எதையுமே செய்ய முடியாத் சவலைப்பிள்ளைகளாகவே இந்த வெளிநாட்டு தமிழ்க்குழந்தைகள் வளர்கின்றன. அதற்கான முக்கியக் காரணம் உடன் விளையாட யாரும் அற்ற நிலைமை தான்..ஒரு அப்பார்ட்மெண்ட்டில் எப்படியும் 3-4 குழந்தைகள் உள்ளன. அவர்களை ஒன்றாக விளையாட விட்டாலே போதுமானது. அதைக்கூட அவர்கள் செய்வதில்லை என்பது தான் சோகம்.

இதுபற்றி ஒருவரிடம் கேட்டபோது ‘எங்க ஃப்ளோரில் இருக்கிறவங்க ரொம்ப டீசண்டானவங்க. அமைதியா இருப்பாங்க..நம்ம குழந்தைங்க கத்துனா நியூசென்ஸா இருக்கும்..இதென்ன நம்ம ஊரா? அதான் பையனை கண்டிச்சு வளர்க்கிறோம்..சத்தம் போடவே மாட்டான்..வெரி காம்..டீசண்டா இருக்கணும், இல்லியா?’ என்றார். ‘டீசண்டா; இருக்கிறோம்ங்கிற பேரில் குழந்தைகளை அடக்குவது சரியா? குழந்தைகள் என்றால் சத்தம் போட்டு விளையாடத்தானே செய்யும்? அப்படியென்றால் எல்லாக் குழந்தைகளுமே இண்டீசண்ட் தானா?’ என மனதில் கேள்விகள் எழுந்த வண்ணமே இருந்தன.

விளையாடுவதற்கு குழந்தைகள் இல்லாத நிலையில், குழந்தையை குழந்தையாகவே வைத்திருக்க பெற்றோரும் குழந்தை போல் விளையாடுவது அவசியம் ஆகிறது. தினமும் ஆஃபீசில் இருந்து வந்தபின் குறைந்தது ஒரு மணிநேரமாவது மகனுடன் விளையாட வேண்டியுள்ளது. சினிமா பாட்டுக்கு மகனும் நானும் டான்ஸ் ஆடுவதில் ஆரம்பித்து விளையாட்டுச் சாமன்களை வைத்து விளையாடி முடிப்போம். 
எங்கள் குழந்தை விளையாடுவதைப் பார்த்து, மற்றொரு தாயும் ‘மனமிரங்கி’ தன் மகனை என் மகனுடன் விளையாட அனுமதித்திருக்கிறார். ஆனாலும் பிற குழந்தைகளின் உலகம், அம்மாவின் இடுப்பிலும், அப்பாவின் தோளிலுமே முடிந்து போகிறது. ‘இண்டீசண்ட்’ பேச்சு வாங்கியபின், யாரிடமும் ‘குழந்தையை விளையாட விடுங்க’ என்று சொல்லவே தயக்கமாக உள்ளது.

’சம்பாதிக்க வேண்டும், நம் லைஃப் ஸடைல் மாற வேண்டும், வாழ்க்கையை நன்றாக வாழ வேண்டும்’ என பெரிய பெரிய குறிக்கோள்களுடன் வெளிநாட்டிலும் சிட்டிகளிலும் வாழ்கிறோம். அந்த குறிக்கோள்கள் நியாயமானவை தான். அதற்காக மழலைகள் உலகத்தை ஒரு அறைக்குள் சுருக்குவது சரிதானா? நாம் ஓடி விளையாடி, மண்ணில் புரண்டு அனுபவித்த சந்தோசத்தை நம் குழந்தைகளும் அனுபவிக்க வேண்டாமா?’ என்ற கேள்வியே நாம் கேட்டுக்கொள்ள வேண்டியது. 


----------------------------------------------------------------------------------------------------------------------------


இந்தப் பதிவைத் தொடரும்படி குழந்தைகள் மேல் பிரியம் உள்ள அனைத்துப் பதிவர்களையும் அழைக்கிறேன்.

மேலும் வாசிக்க... "மழலை உலகம் மகத்தானது...(தொடர் பதிவு)"
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

26 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.

Monday, November 21, 2011

அதிமுக ஆட்சியில் சந்தோசமாய் இருப்பது எப்படி?

உஸ்ஸ்ஸ்...அப்பப்பா..மறுபடியும் ஆரம்பிச்சுட்டாங்கப்பா..’இந்தம்மா வந்தாலே இப்படித்தான்..ஏன் தான் இப்படிப் பண்ணுதோ?’ அப்படீங்கிற மாதிரி டயலாக்ஸ் திரும்பவும், திரும்பின பக்கமெல்லாம் கேட்க ஆரம்பிச்சுடுச்சு. ‘அம்மா திருந்திட்டாங்க’ன்னு சந்தோசமா சர்ட்டிஃபிகேட் கொடுத்த பலரும், திருதிருன்னு முழிக்க வேண்டிய நிலைமை..

உண்மையில் ஜெ.ஆட்சியில் சந்தோசமாய் வாழ முடியாதா?...முடியும்..நிச்சயம் முடியும்..அம்மையார் மாறப்போவதே இல்லை என்று ஆனபின், நாம் அம்மைக்கு ஏற்றபடி மாறிக்கொள்வது தானே முறை? அதற்கான வழிமுறைகளை ஆராய்வோம், வாருங்கள்.

நம்பிக்கை :
மனுசனுக்கு தும்பிக்கையைக் கொடுக்காத ஆண்டவன், நம்பிக்கையைக் கொடுத்தான். ஏன்..ஏன்..ஏன்? நம்பிக்கை தான் வாழ்க்கைக்கு அடிப்படை. வேப்பங்காய் எப்படி இனிக்கும்? இந்தம்மா எப்படி நல்லது செய்யும்?-னு நினைக்கிறது தான் உங்களோட அடிப்படைப் பிரச்சினை. முதல்ல நீங்க அம்மையை நம்பணும். அதிமுககாரங்க மாதிரி அவங்க என்ன பண்ணாலும் அது சரியாத் தான் இருக்கும்னு நினைக்கணும்.

‘இவங்களுக்கு நம்ம கஷ்டம் புரியப்பொறதும் இல்லை..திருந்தப்போறதும் இல்லை’ன்னு ஒரேயடியா முடிவு பண்ணிடக்கூடாது.

ஜென் ல ஒரு தியான வழிமுறை உண்டு..என்னன்னா ஈரச்சட்டையைப் போட்டுக்கிட்டு, இமயமலைல நின்னுக்கணும். மனசுல ’சுத்திலும் ஹீட்டா இருக்கு’-ன்னு தீவிரமா நினைக்கணும். அப்படி நினைக்கிறது மூலமா, பாடி அதாவது உடம்பு ஹீட்டாகி சட்டையே காஞ்சிடணும்..அப்படிச் செய்றவன் தான் நல்ல சீடன்.

அதே மாதிரி தான் நீங்களும் செய்யணும்..நேரா பால்கனிக்குப் போங்க..உள்பக்கமா காலைப் போட்டுட்டு, வெளிப்பக்கமா உடம்பைப் போட்டு தலைகீழாத் தொங்குங்க.(பெண்கள் இதைத் தவிர்க்கவும்) இப்போ மனசுல ‘அம்மா நல்லவங்க..நல்லது தான்

செய்வாங்க’ன்னு திரும்பத் திரும்ப தீவிரமா நினைங்க..அது உங்க ஆழ்மனசுல பதிஞ்சிருச்சுன்னா, நீங்க தான் நல்ல தமிழ்க் குடிமகன்.

மீடியா:
உங்க சந்தோசத்தைப் பறிக்கிறதுல முக்கியப் பங்கு வகிக்கிறது இந்த மீடியாக்கள் தான்..ஜெ.ஆட்சி வந்தாச்சுன்னா சண்டிவி, கலைஞர் டிவி, முரசொலி போன்ற எதிர்க்கட்சி ஊடகங்களை பார்க்கவே பார்க்காதீங்க. ஜெயா டிவி மட்டும் பாருங்க..’தமிழ்நாட்டுல பாலாறும் தேனாறும் ஓடுது’ன்னு சொல்வாங்க. கேட்கவே சந்தோசமா இருக்கும். என்ன ஒன்னு, தமிழ்நாட்டுல பூகம்பமே வந்தாலும் அசராம முதல்ல அம்மா அறிக்கையைத் தான் படிப்பாங்க..அதை மட்டும் கொஞ்சம் சகிச்சுக்கணும்.

அப்புறம் விகடன், துக்ளக் மாதிரி அம்மாவுக்கு சொம்படிக்கிற பத்திரிக்கைகளைப் படிங்க..இப்போக்கூடப் பாருங்க..பால்விலை-மின்கட்டணம்-பஸ் கட்டணம் மூணையும் உயர்த்த முன்னாடி அவ்ளோ யோசிச்சாங்களாம்..’இப்படி ஏத்துறமே, மக்கள் கஷ்டப்படுவாங்களே’ன்னு அம்மைக்கு ஒரே கவலை. அதிகாரிங்க, மந்திரிங்கல்லாம் ’வேற வழியே இல்லைம்மா..கடும் நிதிநெருக்கடி’ன்னு எடுத்துச் சொன்னாங்களாம்..விகடன்ல போட்டிருக்காங்க..அறிவிச்சப்புறம் அம்மை மூணுநாளா சரியாச் சாப்பிட்டிருக்க மாட்டாங்க போல..இப்படி எந்த முதல்வர் இருப்பாங்க சொல்லுங்க..கேட்கவே பெருமையா இல்லை?

அதைவிட்டுட்டு, முரசொலி மாதிரி பத்திரிக்கைகளைப் படிச்சீங்க, தொலைஞ்சீங்க.’கடும் நிதிநெருக்கடியா? அப்போ ஏன் இந்தா இருக்கிற பெங்களூருக்கு ஹெலிகாப்டர்ல போனாரு? ட்ரெய்ன்ல போக வேண்டியது தானே?”-ன்னு ஆரம்பிச்சு நாறக்கேள்வி கேட்பாங்க..நீங்களும் படிச்சுட்டு ‘அதானே’-ன்னு டென்சன் ஆகிடுவீங்க..இது தேவையா?

அதனால அடுத்த நாலரை வருசத்துக்கு ஜெயா டிவியும் நமது எம்ஜிஆரும் போதும் நமக்கு!

துணிச்சல் :
அம்மையாரோட மற்ற குணநலன்களை அப்பப்போ நினைச்சுக்கிறதும், அவங்களைப் பத்தி நல்லபடியா நினைக்க உதவும். உதாரணமா அவங்களோட துணிச்சலை நினைச்சுக்கோங்க..’தைரியலட்சுமி’ன்னு சூப்பர் ஸ்டாரே பாராட்டுனதையும் ஞாபகத்துல

வைங்க. இந்த மாதிரி துணிச்சலான முதல்வர் ஆட்சியில் வாழறதை நினைச்சு, உங்க உள்மனசு பெருமைப்படும்.

கலைஞர் ‘அய்யோ..கொல்றாங்களே’ன்னு கத்துனமாதிரி அம்மையாயர் ஏன் அப்பப்போ ‘அய்யோ...புலிகள் கொல்லப்போறாங்களே’ன்னு கத்துறாங்க?...தைரியலட்சுமி ஏன் இந்தியால இருக்கிற பெங்களூருக்குப் போக பல அடுக்குப் பாதுகாப்பு கேட்டாங்க? ஏன் கோர்ட்டுக்குப் போக பயந்துக்கிட்டு 108(?) வாய்தா வாங்கி வாய்தா ராணி-ன்னு ஏன் பேர் வாங்குனாங்க? - இப்படியெல்லாம் யோசிச்சீங்கன்னா நல்லாவே இருக்க மாட்டீங்க..திரும்பவும் போங்க பால்கனிக்கு!

அறிவுஜீவி :
பொதுவா வெள்ளையா இருக்கிறவன் புத்திசாலின்னு ஒரு நம்பிக்கை நமக்கு உண்டு. அதைத் தீவிரமா நம்ப வேண்டிய நேரம் இது. கலைஞர் மாதிரி அம்மையார் தற்குறி இல்லே..கலைஞர் மூணாப்பு தான் படிச்சிருக்காரு (9ஆம் வகுப்புன்னும் சொல்வாங்க..SSLC ஃபெயில்னும் சொல்வாங்க).ஆனால் அம்மையார் கான்வெண்ட் படிப்பை முடிச்சவர்..அதனால இவர் தானே பெரிய புத்திசாலி.

’அப்போ டிகிரி படிச்ச வைகோ - ராமதாஸ் மாதிரி ஆட்கள் அம்மையாரைவிட புத்திசாலியா?.ஹே..ஹே’-ன்னு சிரிக்கக்கூடாது. ’ஏட்டுச்சுரைக்காய் கறிக்குதவாது, அனுபவமே நல்ல ஆசான்’-ன்னு கேள்விப்பட்டதில்லையா நீங்க?
சோ, இப்படி ஒரே நேரத்தில் படிப்பின் பெருமையை பறைசாற்றுபவராகவும், கல்வியின் கையாலாகாத்தனத்தை உணர்த்துபவராகவும் இருக்கும் ஒரே முதல்வர் நம் அம்மையார் தான்..அவர் காலத்தில் நாம் வாழ்வதே நமக்குப் பெருமை.(இப்படீல்லாம் யோசிக்கணும்..அப்போத் தான் மனசு ஆறுதல் ஆகி கெக்கேபிக்கே-ன்னு நாலரை வருசத்தை ஓட்டமுடியும்.)

தாயுள்ளமும் கருணையுள்ளமும் கொண்ட அம்மையார் ஏதாவது செய்கிறார் என்றால், அதில் ஒரு ஆழ்ந்த பொருள் இருக்கும் என்று இப்போதாவது கொஞ்சமாவது நம்புகிறீர்களா? அந்த நம்பிக்கையை இப்போ அப்ளை பண்ணுவோம்...

பால்விலை :
ஏன் அம்மையார் பால்விலையைக் கூட்டியிருப்பார்?..ம்.....

ஒரு பாட்டில் தண்ணி விலை பன்னெண்டு ரூபாய்..(எங்க..எங்க-ன்னு பறக்க்க்கூடாது..நான் சொன்னது டாஸ்மாக் தண்ணியை இல்லை..மினரல் வாட்டர்)..தண்ணி இந்த ரேட்ல வித்தா, பால்ல தண்ணி கலக்குற பால்காரங்களுக்கு எப்படிக் கட்டுபடியாகும்?..அதனால் தான் கூட்டிட்டாங்களோ?

அப்புறம், அழகு கெட்டுப்போகும்னு சில பெண்கள் தாய்ப்பால் தர்றதில்லை..ஆவின் பால் தான்..அவங்களை திருத்தறதுக்காகத் தான் அம்மையார் தாயுள்ளத்தோட பால்விலையைக் கூட்டியிருப்பாங்களோ?

காபி, டீ குடிச்சு பலபேரு உடம்பைக் கெடுத்துக்கறாங்க..அதை நிறுத்தறதுக்காக, பால் விலையை உயர்த்தி இருக்கலாம், இல்லியா?

பஸ் கட்டணம் :
நாட்டுல சின்னப் பசங்களுக்குக் கூட சர்க்கரை வியாதி மாதிரி பல பிரச்சினைகள்..காரணம் சரியான உடற்பயிற்சி இல்லை..காலையில் நடந்தாலே போதும்னு டாக்டர் சொன்னாலும் யாரும் கேட்கறதில்லை..அதான் டாக்டர்.ஜெயலலிதா தீவிரமா யோசிச்சு பஸ் டிக்கெட்டை கூட்டிட்டாங்க..

நாம நடக்கணும்..நல்லா இருக்கணும்-னு நினைக்கிற ஒரு நல்ல உள்ளத்தை பழிக்கிறது சரியான்னு உங்க மனசாட்சிகிட்டயே கேட்டுக்கோங்க..

‘பஸ் கட்டணத்தை சாயந்திரம் அறிவிச்சுட்டு, நடுராத்திரியே அமுல்படுத்திட்டாங்களே..செய்தி மக்களை சென்றடையவாவது டைம் கொடுக்க வேண்டாமா? முதல்நாள் மக்கள் பட்டபாடு கொஞ்சமா நஞ்சமா?’-ன்னு சில பொறாமைபிடிச்ச எதிர்க்கட்சிக்காரங்க கேட்கிறாங்க..என்ன அநியாயம்யா..ஒரு முதல்வர் விரைந்து செயல்படுவதைப் பாராட்ட மனசில்லைன்னாலும், திட்டாமலாவது இருக்கலாமில்ல? பிரதமர் மாதிரியே செயல்படாத முதல்வரா அம்மையாரை ஆக்கிடலாம்னு பார்க்கிறீங்களா?

மக்கள் நலப் பணியாளர்கள் :
அடுத்து, மக்கள் நலப்பணியாளர்களை வேலையை விட்டு தூக்கிட்டாங்கன்னு ஒரே ரகளை. இந்தப் பதிவை இதுவரைக்கும் படிச்ச உங்களுக்கு, மண்டைல பல்பு எரிஞ்சு, ஏன் தூக்குனாங்கன்னு புரிஞ்சிருக்கும்..புரியாத ஆட்கள் மட்டும் அடுத்த பத்தியைப் படிங்க..

திமுக ஆட்சில மக்கள் நலமா இல்லை..அதனால அவங்களை நலமானவர்களா ஆக்கறதுக்கு பணியாளர்கள் தேவைப்பட்டாங்க. இப்போ அதிமுக ஆட்சில மக்கள் நலமாத் தானே இருக்காங்க? அப்புறம் எதுக்கு வேஸ்ட்டா மக்கள் நலப் பணியாளர்கள்?

மேலும் வாசிக்க... "அதிமுக ஆட்சியில் சந்தோசமாய் இருப்பது எப்படி?"
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

54 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.

Thursday, November 17, 2011

பிராமண நண்பருக்கு...(வர்ணம், ஜாதி, இட ஒதுக்கீடு)_5

வணக்கம் செங்கோவி!

//எனவே இனி உடலால் உழைக்கும் அனைவரும் சூத்திரர்களே.  அதுவே இன்றைய யதார்த்தம். கீழ்மட்டத் தொழில்களாக கருதப்பட்ட கழிவறையை சுத்தம் செய்வது, சவரம் செய்வது போன்ற வேலைகளை இன்று எல்லா சாதியினரும் தன் வீட்டில் செய்துகொண்டிருக்கிறார்கள். //

இது முழுக்க முழுக்க உண்மை.  தனது வேலைகளை தானே செய்துகொள்வது வரவேற்கத்தக்கதே.

 பிராமணர்கள் மற்ற ஜாதியினருக்கு இழைத்த கொடுமைகளை நானும் நிறைய கேள்விப்பட்டிருக்கிறேன்.  அவர்கள் மேல் தவறில்லை என்று கண்டிப்பாக நான் சொல்லமாட்டேன்.  நான் தஞ்சையில் மூன்றாவது - நான்காவது படித்துக்கொண்டிருந்தபோது சுவரெங்கும் 'பாப்பான் குடுமியை / பூணலை பிடுங்கி எறி' போன்ற வாசகங்கள் எழுதப்பட்டிருக்கும்.  

அதற்கு ஒருமுறை என் தாத்தா (கோயிலில் குருக்களாக இருந்தவர்) சொன்னது இன்னும் என் நினைவில் உள்ளது.  'எப்போதும் தலைகால் புரியாமல் ஆடக்கூடாது.  அடுத்தவனைத் துச்சமாக நினைப்பதும் / நாம் எதோ சிறந்த பிறவிகள் என்ற நினைப்பு கூடாது.  

பிராமணர்கள் முன்னர் செய்த வினை, எதுவுமே நிலையில்லை என்பதை உணராமல் ஆட்டம் போட்டதற்கு இப்போது இதையும் பொறுமையாக அனுபவித்துதான் தீரவேண்டும்' என்று.  மேலும் அவர் சொன்னது ' அவன் மேல என்ன தப்பு இருக்கு, இத்தனை நாளாக மனதில் இருந்த வெறுப்பு இப்போது வெளியேறுகிறது' என்றார். 

//இங்கே திறமைக்கும் தகுதிக்கும் மதிப்பில்லை. அதிக மார்க எடுத்த எனக்குத் தானே முன்னுரிமை கொடுக்கப்பட வேண்டும்? - இந்த வாதம் பலவிதங்களில் திரும்பத் திரும்ப உங்களால் வைக்கப்படுகின்றது. //

இங்கே நான் மாறுபடுகிறேன் செங்கோவி!  நானும் மார்க் அடிப்படையில் முன்னுரிமை கொடுப்பதை ஆதரிக்கவில்லை.  என்னோடு படித்த நிறைய பெண்கள் மனப்பாடம் செய்தே (சில சமயம் கணிதத்தைக்கூட) நிறைய மார்க் வாங்கிவிடுவார்கள் (இது எல்லா ஜாதியினருக்கும் பொருந்தும்). 

ஆனால் ஏதாவது நுணுக்கமான கேள்வி ஆசிரியர்கள் கேட்டால் பதில் சொல்லத் திணறுவார்கள்.  முதலில் இந்த மனப்பாடம் செய்து பாஸ் ஆகும் முறையை ஒழித்துக்கட்டவேண்டும்.  (என் கனவுகளில் ஒன்று ஒரு பள்ளி ஆரம்பிப்பது, கண்டிப்பாக வியாபார நோக்குடன் அல்ல, அதில் என்னென்ன செய்யவேண்டும் என்று கூட நிறைய யோசித்து வைத்திருக்கிறேன்.  அதை ஆரம்பிக்க பணம் தேவை, மேலும் வேலையை விடவேண்டும்.  இப்போது அந்த ரிஸ்க் எடுக்கும் நிலையில் நான் இல்லாததால் பொறுமையாக இருக்கிறேன், ஆனால் எப்படியும் இன்னும் சில வருடங்கள் கழித்தாவது நடக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது).

நான் சொல்வது ஒருவருக்கு எதில் விருப்பம் இருக்கிறதோ, அதை ஜாதி/மத வித்தியாசம் பார்க்காமல் செய்யவிடலாமே?  நான் மற்ற ஜாதியினருக்கு வழங்கப்படும் இட ஒதுக்கீட்டை கண்டிப்பாக எதிர்க்கவில்லை.  அவர்களுக்கு இது நீங்கள் எழுதியது போல் அவசியம் தேவை என்ற புரிதல் எனக்கு இருக்கிறது.  

உதாரணமாக எனக்கு கணிதம் நன்றாக வரும்.  ஆசிரியை ஒரு கணக்கு போட்டு புரிய வைத்தவுடனேயே, மீதி எல்லாம் நானே போட்டு விடுவேன்.  (இதை பெருமைக்காக நான் சொல்லவில்லை).  ஒருவருக்கு எதில் திறமை இருக்கிறதோ அதில் மேலே வளர இடம் கொடுக்கலாமே என்பதுதான் என் வாதம்.  ஒருவருக்கு படிப்பில் சுத்தமாக ஆர்வம் இல்லாமல் ஓவியம் வரைவதில் இருக்கலாம்.  அவரை அதில் ஊக்குவிக்கலாமே?  வரலாற்று வகுப்பு என்றாலே தூங்கி வழியும் எனக்கு அதைக்கொடுத்தது எந்த விதத்தில் நியாயம்?  

நான் இட ஒதுக்கீட்டை தவறு என்று சொல்லவில்லை.  அதில் உள்ள அபத்தங்களைத்தான் தவறு என்கிறேன்.  என் சக தோழிகள் college முதல்வரை சந்தித்து வேண்டுகோள் விடுக்குமாறு சொன்னார்கள்.  நானும் தைரியத்தை வரவழைத்துக்கொண்டு உள்ளே போனேன். 

பிரின்சிபால் என்னிடம் சொன்னது 'என்னம்மா பண்ண முடியும்?  வாழ்க்கையில் நிறைய விஷயங்கள் இப்படித்தான் நாம் நினைப்பது போல் நடக்காது.  எது நமக்கு கிடைத்திருக்கிறதோ அதிலேயே ஆர்வத்துடன் ஈடுபடு.  நானும்தான் law படித்தேன். ஆனால் இங்கே கல்லூரி முதல்வராக அமர்ந்திருக்கிறேன்' என்றார்.  இன்னொரு விஷயமும் சொல்லவேண்டும்.  

இந்த விஷயத்தில் எனக்கு ஒரு மறக்க முடியாத வாழ்க்கைப்பாடம் கிடைத்தது.  அப்போது அந்த வயதில் ரொம்ப பீல் செய்தாலும் போகப்போக இந்த விதி/ஜோதிடம் பற்றி படிக்க ஆரம்பித்ததும் 'எல்லாம் நல்லதிற்கே' என்ற ஒரு மனோபாவம் இப்போதெல்லாம் வந்துவிட்டது.  அதன்பின் அதே வரலாறைப்படித்து பி ஏ முழுமைக்கும் முதல் மாணவியாகத் தேர்ச்சி பெற்றது எல்லாம் தனிக்கதை. 

முன்பே சொன்னதுபோல் தனியார் கல்லூரியில் (அ) அஞ்சல்வழியிலோ நினைத்ததைப்படிக்க முடியாத குடும்ப சூழல்.  அப்படி எல்லாருடைய ஆவலையும் ஒரு கல்லூரியில் நிறைவேற்ற நடைமுறை சாத்தியம் இல்லை என்றால் அதற்கான மாற்று ஏற்பாடுகளை செய்யவேண்டியது யார்?  அரசாங்கம்தானே?  இன்னொரு கல்லூரியை நிறுவலாமே?  

என்னுடன் முதல் க்ரூப்பில் படித்த அனைத்து மாணவிகளும் அதே தொடர்புடைய படிப்பைத் தொடர்ந்தபோது (மருத்துவம், பொறியியல், இயற்பியல் என) நானும் இன்னும் சில மாணவிகளும் வேறு வழியில்லாம வரலாறு, பூகோளம், எகோநோமிக்ஸ் எனப்படித்தோம். 

இங்கே கல்வியை வியாபாரமாக்க வழி அமைத்ததும் இந்த அரசாங்கம்தானே?

//அவர்களின் வழிகாட்டலால் அந்த குரூப் வேணும், இந்த குரூப் வேணும் என்று கேட்கும் அளவிற்கு உனக்கு அறிவிருக்கிறது. எங்களுக்கு என்னென்னெ குரூப் இருக்கிறதென்று சொல்லவே ஆள் இல்லை.//

இதை ஒத்துக்கொள்ளலாம்.  ஆனால் எல்லா பிராமணரது குடும்ப நிலையும் நீங்கள் சொல்வது போல் இல்லை என்பதையும் கருத்தில் கொள்ளவேண்டும்.  எனது பெற்றோர்களும் அதிகம் படிக்கவில்லை.  எனது மாமா இரண்டு பேர்கள் படித்து நல்ல வேலையில் இருந்தனர்.  

சித்தப்பா கல்லூரி பேராசிரியராக இருந்தார்.  ஆனாலும் எனக்கு வழிகாட்ட யாரும் இல்லை என்பதுதான் உண்மை.  சம்பந்தா சம்பந்தம் இல்லாமல் எதெதற்கோ apply செய்தேன்.  அதில் ஒன்று polytechnic .  அதில் எனக்கு சீட்டும் கிடைத்து வந்து சேருமாறு அழைப்பு வந்தது.  அப்போது என்னவென்றே தெரியாது.  உறவினர்களைக்கேட்டபோதும் அவர்களுக்கும் அதைப்படித்தால் என்ன வேலைக்குப்போகலாம் என்று தெரியவில்லை.  

ஆனால் எல்லாரும் ஒருமித்த குரலில் ஒன்று சொன்னார்கள்.  பெண்களுக்கு அது சரிப்பட்டுவராது என்று.  அதைக்கேட்ட நானும் அதே முடிவுக்கு வந்துவிட்டேன்.  பிறகு வேலைக்கெல்லாம் போனபிறகுதான் அதைப்பற்றி புரிந்தது.  என் கணவரின் அனுபவம் வேறுவிதமானது.  அவருக்கு போலிசாக வேண்டும் என்ற ஆசையில் CRPF ல் (அவர் இருந்தது டெல்லியில்) தேர்வு பெற்றுவிட்டார்.  

ஆனால் அவர்கள் லஞ்சமாக பத்தாயிரம் ரூபாய் கேட்டதால் (அப்போதைய அவரின் பொருளாதார நிலையில் இதெல்லாம் நடக்காத விஷயம்) வந்த வாய்ப்பை விட்டுவிட்டார்.  நீங்கள் சொல்லும் அதே டயலாக் என் வீட்டிலும் கேட்கும் வேறுவிதமாக.  டிகிரி படிச்சு என்ன பண்ணப்போறா, பேசாம கல்யாணம் செய்துவை.  (யாரையாவது இழுத்துக்கொண்டு ஓடிவிட்டால் என்பது போன்ற கீழ்த்தரமான டயலாக் வரை).

//அவர்களின் வழிகாட்டலால் அந்த குரூப் வேணும், இந்த குரூப் வேணும் என்று கேட்கும் அளவிற்கு உனக்கு அறிவிருக்கிறது. எங்களுக்கு என்னென்னெ குரூப் இருக்கிறதென்று சொல்லவே ஆள் இல்லை.//

நீங்கள் இங்கே குறிப்பிட்டிருப்பதை நான் முழுமையாக மறுக்கவில்லை என்பதையும் சொல்ல விரும்புகிறேன். 

//இந்தச் சூழ்நிலையில் படித்து 70% மார்க் வாங்குபவன் புத்திசாலியா? அனைத்து வசதிகளோடும், படிக்க தனியறை, வழிகாட்ட சொந்தபந்தங்கள், சுற்றிலும் படிப்பில் போட்டி போடும் சொந்தங்கள், டியூசன்கள் -//

இந்த பொருளாதார வசதிகள் எல்லா குடும்பத்திலும் இல்லை என்பதையும் குறிப்பிடவேண்டும். 

இன்னொரு விஷயம், பிராமணர்கள் என்றாலே நல்ல குடும்ப சூழல் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்.  என் வீட்டிலேயே சாராயத்துக்கு அடிமையாகி உயிரை இழந்த இரண்டு சித்தப்பாக்கள் (அம்மா/அப்பா வழியில்) உண்டு.  அதில் ஒரு சித்தப்பா இறந்தபோது பையனும் / பெண்ணும் குழந்தைகள்.  அவர்களை வளர்க்க என் சித்திதான் மிகவும் சிரமப்பட்டார். அவரது முப்பதாவது வயதிலிருந்து இன்னமும்.  

அப்படி இருக்க எல்லா பிராமணர்களுமே நல்ல நிலையில் இருக்கிறார்கள் என்று சொல்லமுடியாது.  என் அப்பாவுக்கும் குடிப்பழக்கம் உண்டு, ஆனால் அது எங்களைப்பாதிக்காத வரையில் வெளியோடு நின்றது.  என் தாத்தா (அப்பா வழி) ஏகப்பட்ட தனது சொத்துகளை சீட்டாட்டம்/சூதாட்டத்திற்கு அடிமையாகி இழந்தவர். 

//எனவே தான் மார்க் மட்டுமே பார்க்கப்படாமல், அவனது பின்புலமும் பார்க்கப்படவேண்டிய அவசியம். அதைச் செய்வதே இட ஒதுக்கீடு.//

இதை நான் முன்பே குறிப்பிட்டபடி எதிர்க்கவில்லை.  ஆனாலும் இப்போதுள்ள முறையில் மாறுதல்கள் தேவை.  எல்லா சாதியினரது பொருளாதார நிலையையும் கணக்கில் கொள்ளவேண்டும்.

----------------------- நேற்று பஞ்சாங்கத்தை எடுத்து மாமியார் திவசம் எப்போது வருகிறது என பார்த்துக்கொண்டிருந்தேன்.  அதன்மேலே ஒரு வரி (இத்தனை நாளாக கவனிக்கவில்லை) 'இந்த உலகத்தில் பிராமணனாக பிறக்க செய்ததற்கு கடவுளே உனக்கு நன்றி' அப்படின்னு.  

படிச்சதும் சிரிப்பு வந்தது.  சும்மா இதை பகிர்ந்துக்கதான் எழுதினேன்.

அன்புடன்
********

---------------------------------------------------------------------------------------------------

 sengovi blog to *****:

அன்பு நண்பர்களுக்கு,


//இங்கே நான் மாறுபடுகிறேன் செங்கோவி!  //

இடையில் நீங்கள் மாறுபட்டுச் சொல்லியுள்ள விஷயம் கல்விச் சீர்திருத்தத்தின் கீழ் வருவது இல்லையா? அது ஜாதி சம்பந்தப்பட்ட பிரச்சினையல்ல..அனைத்து சாதிகளுக்கும் உள்ள பிரச்சினை தானே அது.

மற்றபடி நீங்கள் சொல்லிய அனைத்து உண்மைகளையும் நான் உணர்ந்தே இருக்கின்றேன்...

--செங்கோவி

-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

அன்புச் சகோதரிக்கு,

நண்பர் செங்கோவி சொன்னது போல்... பிராமணர்கள் கல்வியால் ஓரளவு தப்பிக்க முடிந்தது... வைசியர்கள் அவர்களும் தங்களிடம் இருந்த சொத்துக்களை கொண்டும்.. வர்த்தகத்தைக் கொண்டும் தப்பித்தார்கள்... அதிலே சத்திரியர்கள் தாம் பாவம்.. இதிலே நண்பர் சொல்லக் கூச்சப் பட்டுக் கொண்டும் ஒரு விஷயத்தை விட்டுவிட்டார் என்று நினைக்கிறேன்.. 

அது தென் மாவட்டங்களிலே குறிப்பாக மதுரை மாவட்டத்திலே பரமலைக் கள்ளர்கள் என்று ஒருப் பிரிவினர் இருக்கிறார்கள் அவர்களின் நிலை தான் மிகவும் கொடுமை.. உண்மையில் அவர்கள் வேறு வழயில்லாமல் அதிலும் வானமும் பொய்த்துப் போக கரிசல் நிலங்களிலே வருமானமும் இல்லாமல்.. திருடவே செய்து (குடும்பமே திருடும்) ஜீவனம் செய்தார்கள்.. வீரத்திற்கு பேர் போன பரம்பரை அவர்கள் உண்மையில் பாவம்... 

அவர்களை சுதந்திரத்திற்கு பின்பும் பல அடக்கு முறையிலே அரசாங்கமே கட்டிப் போட்டிருந்தது என்றும் அறிகிறேன்... யாரும் அவர்களை நம்புவதில்லை.... ஊரைவிட்டு வெழியே சென்றால் போலீசிடம் சொல்லிவிட்டுத் தான் போக வேண்டும் என்று இன்னும் பல அடக்கு முறைகள்.. 

இவைகள் யாவும் சரி தான் அதனாலே தான்.. பொருளாதார ரீதியில் சமூகத்தை அரசாங்கம் அணுக வேண்டும்.. சாதி தேவையில்லை.. என்று காலகாலமாக சமுதாய அக்கறை கொண்டவர்கள் சொல்லி வருகிறார்கள்... யார் கேட்பா? 

அது தான் இன்றைய அரசியலின் ஆணி வேர் அது போனால் அவர்கள் பிழைப்பில் மண் விழும்...

நன்றி. 

அன்புடன்
*********
மேலும் வாசிக்க... "பிராமண நண்பருக்கு...(வர்ணம், ஜாதி, இட ஒதுக்கீடு)_5"
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

49 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.

Tuesday, November 15, 2011

பல்பு வாங்கலியோ பல்பு....


அதென்னமோ தெரியலை, சில விஷயங்களை...அது எவ்வளவு கேவலமானதா இருந்தாலும்...உங்ககிட்டச் சொன்னாத் தான் என் மனசு ஆறுது..அதனால இன்னிக்கு நான் பல்பு வாங்குன சொந்தக் கதை, சோகக்கதை..

போன மாசம் ஒரு புராஜக்ட்டை வெற்றிகரமா முடிச்சோம். கிளையயண்டுக்கும் ரொம்ப சந்தோசம். 

ஒருநாள் *** மேடத்துகிட்ட இருந்து ஃபோன். அவங்க யாருன்னா, எங்க கிளியண்ட் புராஜக்ட் மேனேஜரோட பி.ஏ. நம்ம கேரளா தான்..மேனேஜர் ஆந்திரா..

“ஹலோ செங்கோவி, நலமா?”

(ஹி..ஹி..ஹி) நலம்..தாங்கள் நலமா மேம்?

“ஓ..அந்த புரோஜக்ட்டை இவ்வளவு சீக்கிரமா முடிப்பீங்கன்னு நாங்க நினைக்கவேயில்லை. சாருக்கு ரொம்ப சந்தோசம்.”

(அதுக்கு எவ்ளோ கோல்மால் பண்ணியிருக்கோம்..அது உங்களுக்குத் தெரியாதவரைக்கும் எங்களுக்கும் சந்தோசம் தான்)..ஹி..ஹி..நாங்க எங்க கடமையைத் தானே செஞ்சோம்.

“யா..யா..அப்புறம் நாளைக்கு நைட் நீங்க ஃப்ரீயா?”

(ஆ............! ) ”ஓ..ஃப்ரீ தான்..ஃப்ரீ தான்”

“நைட் 9 மணிக்கு?”

(அது பதிவு போடற நேரமாச்சே..ஓகே, பதிவை அடுத்த நாள் போடுவோம். நாளைக்கு...மேடம் சொல்றதைக் கேட்போம்) “நோ பிராப்ளம்”

“கோஹினூர் தெரியுமா?”

(என்னடா இது..ஆண்ட்டி கோஹினூர் காண்டம் பத்தில்லாம் கேட்குது..) “தெரியும்..ஏன்?”

“டூ யு லைக் இட்?”

(அடடா..அவசரப்பட்டு ஃபேமிலியைக் கூட்டிட்டு வந்துட்டமோ....)“ம்..ஏன் திடீர்னு இதெல்லாம் கேட்கிறீங்க?”

“புராஜக்ட்டை ஃபாஸ்ட்டா முடிச்சீங்கள்ல..அதுக்காக..”

(ஆஹா..எவ்வளவு நல்ல கிளையண்ட்..இந்த மாதிரி கிளையண்ட்டுக்கு வாரம் ஒரு புராஜக்ட் முடிக்கலாமே..) “ஓ..ரியல்லி?”

“யா..அப்புறம் உங்க மேனேஜரையும் கூப்பிட்டிருக்கேன்”

(அவரு எதுக்கு..என்னடா இது..உங்களுக்கு வேணா பரந்த மனசு இருக்கலாம் மேம்..ஆனால் ஓசி பினாயில்லா இருந்தாலும் யாருக்கும் கொடுத்து எனக்குப் பழக்கம் இல்லியே..) “அவருமா?”

“ஆமா..அப்புறம் உங்க ஜூனியர் எஞ்சினியர்ஸை எனக்குத் தெரியாது. நீங்களே அவங்களையும் கூட்டிட்டு வந்திடுங்க”

(அவங்களுமா..சம்திங் டெரிப்ளி ராங்..) “எங்க வரணும்?”

“அதான் சொன்னேனே..கோஹினூர் ஹோட்டல்”

(என்னது கோஹினூர்ங்கிறது ஹோட்டலா..அடங்கொக்கமக்கா..) “யா..யா..ஓகே, நாங்க வந்திடறோம்..நன்றி.(அவ்வ்வ்வ்வ்)

அழுதுக்கிட்டே ஃபோனை வைக்கவும் டேமேஜர் கூப்பிட்டாரு. “*** மேம் கூப்பிட்டாங்களா?”

“கூப்பிட்டாங்க...(ஆனா கூப்பிடலை) சார்”

“ஓகே..நாளைக்கு ஷார்ப்பா 9 மணிக்கு வந்திடுங்க”

(இனிமே ஷார்ப்பா வந்தா என்ன.....) “ஓகே சார்”

அடுத்த நாள் போனோம். அந்த மேடம் வரலை..நல்லவேளை தப்பிச்சுச்சு..

கொஞ்ச நேரம் மாத்தி மாத்திப் பாராட்டுனாங்க. அப்புறமா சாப்பிடப் போகலாம்னு சொன்னாங்க..அப்பாடி, புண்பட்ட மனசை தின்னுபோட்டு ஆத்துவோம்னு போனேன்.

சிக்கன் சூப், ரெண்டே ரெண்டு பட்டர் நாண், கொஞ்சம் சிக்கன் மசாலாவோட முதல் ரவுண்டு ஆரம்பிச்சுச்சு. அப்புறம் புரோட்டா ரெண்டும் மட்டன் கறியும் எடுத்துக்கிட்டொம். அப்புறம் மட்டன் பிரியாணியும் சிக்கன் பட்டர் மசாலாவும் சாப்பிட்டேன். அப்பவும் மனசு ஆறலை. கடைசீல சிக்கன் ஃப்ரைடு ரைஸும் கொஞ்சம் சிக்கன் மசாலாவும் சாப்பிடவும் பர்வாயில்லைங்கிற ரேஞ்சுல இருந்துச்சு. இடைஇடையில கூல்ட்ரிங்ஸ் சாப்பிட்டதும் ஆறுதலா இருந்துச்சு. அப்புறம் கடைசீயா குலாப் ஜாமூன் எடுத்துக்கிட்டோம்.(எல்லாரும் முதல்ல ஸ்வீட் எடுத்துக்கிட்டாங்க. ஆனால் நாங்க எடுக்கலை.ஏன்னா முதல்ல இனிப்பு சாப்பிட்டா, அதிகமா சாப்பிட முடியாது. அவங்க தர்றதே அதுக்காகத் தான்..நாம யாரு?..)

அப்புறம் எல்லாருக்கும் வணக்கம் சொல்லிட்டு, வெளில வந்து லிஃப்ட்டுல நுழைஞ்சோம்.

‘சாப்பாடு இன்னிக்கு சூப்பர்ல?”ன்னு கேட்டுக்கிட்டே கிரவுண்ட் ஃப்ளோர் பட்டனை அமுக்குனேன். அதுக்கு என் ஜூனியர் ”ஆமா சார்..அதுவும் அந்த ஐஸ் க்ரீம்..அடடா..சூப்பர். என்னா டேஸ்ட்டு’ன்னான்.

ஐஸ் க்ரீமா? அடப்பாவிகளா..அதுவும் இருந்துச்சா..அய்யய்யோ..அதைச் சாப்பிடாம விட்டுட்டமே..திரும்ப லிஃப்ட்டை மேல ஏத்திப் போகலாமான்னு யோசனை. பசங்க கேவலமாப் பார்ப்பாங்களே, க்ளையண்ட்டும் ஏன் திரும்ப வந்தேன்னு கேட்பாங்களேன்னு ஒரே குழப்பம்.

ஏதோ இப்பத்தான் பல்பு வாங்குன சோகத்தை ஆத்துனோம், அதுக்குள்ள ஐஸ் க்ரீம் வாங்காத சோகம் வந்திடுச்சே..நமக்கு ஏன் இப்படி நடக்குதுன்னு யோசிச்சுக்கிட்டே வீட்டுக்குப் போனேன்.

அங்க என் தங்கமணி கேட்ட கேள்வில தான் கண்ணீரே வந்திடுச்சு.

“ஏங்க டல்லா வர்றீங்க? சரியாச் சாப்பிடலியா?”

மேலும் வாசிக்க... "பல்பு வாங்கலியோ பல்பு...."
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

85 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.

Monday, November 14, 2011

பிராமண நண்பருக்கு...(வர்ணம், ஜாதி, இட ஒதுக்கீடு)_4

அன்பு நண்பர்களுக்கு,

நாங்கள் எப்படியெல்லாம் வாழ்ந்தோம், சமூகத்தில் எவ்வளவு மரியாதையுடன் இருந்தோம், மக்களும்தான் அப்போது எவ்வளவு நல்லவர்களாக இருந்தார்கள்..- என்பது போன்ற புலம்பல்களை அதன்பிறகே பிராமணர்களாகிய நீங்கள் ஆரம்பித்தீர்கள். ஆனால் உண்மையில் இழப்பு உங்களுக்கு மட்டும் தானா?

சமூகத்தின் மேல்மட்டத்தில் இருந்த நீங்கள், ஜனநாயகத்தில் வலுவான ஆயுதமான கல்வியைப் பிடித்தும் உடனே மேலேறினீர்கள். ஆனால் மற்ற ஜாதிகளுக்கு நடந்தது என்ன?

மன்னர்களாக வாழ்ந்த பரம்பரை, அரசு மானியம் பெற்று வாழவேண்டிய நிலை பல இடங்களில் ஏற்பட்டது. எந்த மக்கள் மத்தியில் உயர்ந்த இடத்தில் வாழ்ந்தார்களோ, அந்த மக்களை விட தாழ்ந்த நிலையில் வாழும் துர்ப்பாக்கிய நிலை அவர்களுக்கு ஏற்பட்டது.

மன்னர்களும் பாளையக்காரர்களும் ஆங்கிலேயருடன் போரிட்டபோது, அந்தப் போரில் செத்து மடிந்த போர் வீரர்கள் ஏராளம். அவர்களில் பெரும்பான்மையானோர் வன்னியர், தேவர், நாயக்கர் போன்ற இனத்தைச் சேர்ந்தோர்களே. நாட்டுப்பற்றும், விசுவாசமுமே அவர்களை அவ்வாரு போரிட வைத்தது. போரில்லா சமயங்களில் நாட்டின் காவல் பொறுப்பும் அவர்களிடமே இருந்தது. 

நிலப்பிரபுத்துவ காலகட்ட முடிவில், ஆங்கிலேயர்களால் பழைய காவல்முறை தூக்கியெறியப்பட்டு, தற்போதைய காவல்துறை கொண்டுவரப்பட்டது. ஜனநாயகத்தில் பழைய சாதி அடிப்படையிலான காவல்முறைக்கு இடம் இல்லை.

அதனால் நேர்ந்த அவலம் உங்களுக்குத் தெரியுமா? போர்த் தொழில் தவிர வேறெதையுமே அறியாத அந்த சமூகங்கள், ஒரே நாளில் தங்கள் வேலையையும் மரியாதையையும் இழந்து நின்றன. 

அதற்கு அவர்கள் தெரிவித்த எதிர்ப்பும். போராட்டங்களும் ‘திருநெல்வேலி வரலாறு -கால்டுவெல்’ நூலில் பதிவு செய்யப்பட்டுள்ளன. அந்தச் சமூகங்கள் விவசாயத்திலும், வணிகத்திலும் அனுபவமே யில்லாமல் இறங்கி, மேலும் சீரழிவுக்கு ஆளாகின. அவர்களுக்கு மாற்றுவழி ஏதும் காட்டப்படவில்லை. 

‘போரிட ராணுவம் - காவலுக்கு போலீஸ். உனக்கு வேலையில்லை, போகலாம். விரும்பினால் ராணுவத்தில்/போலீஸில் சேர முயற்சி செய்’ - என்பதே அந்த மக்களுக்கு சொல்லப்பட்து. அதுவே சமூக ஒழுங்கை அதிக அளவில் பாதித்தது. இப்போதும் வட-தென் மாவட்டங்களி தறிகெட்ட, வழிதெரியாத ஆட்களாக அவர்களை ஆக்கிவைத்துள்ளது. தங்களுக்குள்ளேயே அவர்களை போரிட வைத்து, தங்களைத் தாங்களே அழித்துக்கொள்ள வைப்பதும் அதுவே.

ஆனால் உங்களுக்கு நடந்தது என்ன? ஆன்மீகம் சம்பந்தப்பட்ட வேலைகளும், கற்றதனால் வந்த வாய்ப்புகளும் சமூகத்தில் உங்கள் நிலை தாழாமல் காப்பாற்றின. பிற ஆதிக்க சமூகங்கள் இழந்ததை ஒப்பிடுகையில் உங்களது இழப்பு பெரிதல்ல. அவர்கள் திரும்ப பூஜ்யத்தில் இருந்து ஆரம்பிக்கவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. 

இதில் இருந்து தான் நாம் இடஒதுக்கீடு பற்றிப் பேசவேண்டும்....

பிற்படுத்தப்பட்ட ஜாதிகளின் தொழிலான காவல் தொழிலை ஆங்கிலேயர் உடனடியாகக்ப் பிடிங்கியதற்குக் காரணம் அவர்கள் ம்ல் இருந்த பயமே. நம் இந்திய சுதந்திரப் போராட்டத்தை இருகட்டங்களாகப் பிரிக்கலாம். 

இரண்டாவது கட்டம் காந்தியால் முன்னெடுக்கப்பட்டு, அனைத்து ஜாதிகளின் பங்கெடுப்புடன் 1920களில் ஆரம்பித்து நடந்த சத்யாக்கிரக போராட்டம். முதல் கட்டத்தில் ஆங்கிலேயரை உள்ளே நுழையவிடக்கூடாது என்ற நோக்கில் சுதந்திரப் போராட்டம் வெடித்தது. தமிழகத்தில் பூலித்தேவன், கட்டபொம்மன், வெள்ளையத் தேவன், வீரன் சுந்தரலிங்கம், ஒண்டிவீரன் போன்ற ஷத்ரிய ‘வர்ணத்தார்’ போராடியது அந்தக் காலகட்டதிலேயே. 

ஒட்டுநோக்க, அந்தப் போராட்டம் தோல்வியில் முடிந்தது. அந்தப் போராட்டங்கள் போர்களாகவே நடத்தப்பட்டன. எனவே ஷத்ரியர்களே அதில் பங்கேற்றார்கள். அதில் வெற்றி பெற்று ஆங்கிலேயர் ஆட்சியைப் பிடித்தபின்னர், அந்த ஷத்ரிய குலத்தின் கட்டுப்பாட்டில், நாட்டின் காவல் பொறுப்பை விடுவது ஆபத்து என்பதை உணர்ந்தனர். இன்னும் அவர்களை ஆயுதங்களுடன் நடமாட விடுவது தமக்கு எப்போதும் நல்லதல்ல என்ற முடிவுடன், அதுவரை இருந்த காவல் கட்டமைப்பு விலக்கப்பட்டது. 

ஏற்கனவே பாளையக்காரர்களின் தோல்வியால் படைவீரன் என்ற பெருமையும் போயிருந்தது. மிஞ்சியிருந்த காவல் பொறுப்பும் பிடிங்கப்பட்டபின், அந்த மக்களிடம் எஞ்சியது வறுமையும் வன்முறையுமே. அந்த மாற்றம் நாட்டை ஜனநாயகப்படுத்த நிச்சயம் அவசியமான ஒன்று. ஆனால் அது அவசர அவசரமாக எவ்வித மாற்று வழியும் தராமல் நடைமுறைப்படுத்தப்பட்டதால், சமூகத்தில் பெரும் குழப்பத்தை அது ஏற்படுத்தியது.

விவசாயக்கூலிகளாகவும் தோட்டத்திற்கு காவல்காரர்களாகவும் திருடர்களாகவும் அவர்களை அது ஆக்கியது. சமூக அளவில் பெரும் மரியாதைக் குறைவை அது ஏற்படுத்தியது. பாரதியின் வரிகளில் சொல்வதென்றால்...

மண்வெட்டிக் கூலிதின லாச்சே;-எங்கள் 
வாள்வலியும் வேல்வலியும் போச்சே! 
விண்முட்டிச் சென்றபுகழ் போச்சே-இந்த 
மேதினியில் கெட்டபெய ராச்சே!

( முழுப்பாடலுக்கு : http://bharathiarsongs.blogspot.com/2009/06/blog-post_7225.html ) 

அந்த மரியாதையைப் பெற வன்முறையை கையில் எடுத்தன சில சமூகங்கள். அந்த வன்முறை சகஜாதியினர் மீதே பிரயோகிக்கப்பட்டது. திருட்டும் வன்முறையும் கட்டுக்கடங்காமல் போக, கைரேகைச் சட்டம் போன்ற கடும் அடக்குமுறைச்சட்டங்கள் ஆங்கிலேயரால் கொண்டுவரப்பட்டன. 

1900களில் மிஷனரிகள் அந்த ஜாதிகளுக்கு கல்வி தர முன்வந்தன. ஆனாலும் அதுவும் இந்த சமூகங்களால் புறக்கணிக்கப்பட்டன. அதிலும் பெண்கள் யாரும் கல்விகற்க முன்வரவில்லை. ‘தாசிக்கும் அரசிக்குமே படிப்பு தேவை. எங்களுக்கு எதற்கு?’ என்ற கேள்வி அவர்களால் கேட்கப்பட்டது.(திருநெல்வேலி சரித்திரம்-கால்டுவெல்). நிலப்பிரபுத்துவ மனநிலையை விட்டு வெளிவராததால் அறியாமையுடன் அந்த மக்கள் கல்வியை புறக்கணித்தனர். அதே நேரத்தில் பிராமண சாதி 90%க்கு மேல் கல்வி கற்று 90% வேலைகளில் உட்கார்ந்திருந்தது.

அது நிலப்பிரபுத்துவ காலகட்டத்தில் பிராமணர்களுக்கு கொடுக்கப்பட்ட ‘இட ஒதுக்கீட்டாலேயே’ சாத்தியம் ஆனது.  அவ்வாறு பெரும் பதவிகளில் அமர்ந்த பின்னர், தங்களுடைய இடங்களை தக்கவைக்க பல பிராமணர்களும் முனைந்தார்கள். காங்கிரஸ் போன்ற இயக்கங்களில்கூட பிராமணர்களின் ஆதிக்கமே அதிகம் இருந்தது.

அதே நேரத்தில் பிற்படுத்தப்பட்ட ஜாதிகள், தாழ்த்தப்பட்டோரிடம் அதே ஆதிக்கத்தைச் செலுத்தி தங்கள் இருப்பை நிலைநாட்டின. 

1930களுக்குப் பின்னரே கல்வி கற்றால் ஆங்குலேய அரசில் வேலை உள்ளிட்ட பல வாய்ப்புகள் இருப்பதை பிற ஜாதிகள் புரிந்துகொண்டன. எனவே கல்வியை நோக்கி அவை வந்தன. 

இறுக்கமான அமைப்பாக ஆகிவிட்டிருந்த பிராமணீயம், அவ்வளவு எளிதில் அதை அனுமதிக்கவில்லை. படிக்கும் இடங்களில் தனிக்குவளை என்பதில் ஆரம்பித்து சமஸ்கிருத நுழைவுத்தேர்வில் வென்றால் தான் மருத்துவப்படிப்பில் சேர முடியும் என்ற நிபந்தனை வரை பல இன்னல்களை பிற ஜாதிகள் சந்திக்கவேண்டியிருந்தது.

அதே நேரத்தில் பாரதி போன்றோரே அனைவருக்கும் கல்விக்கான அவசியத்தை உணர்ந்து, தம் மக்களுக்கு அதை விளக்கிக்கொண்டிருந்தார்கள். அந்த நேரத்திலேயே தந்தை பெரியாரின் எழுச்சியும் நடந்தது.

வெறுப்பின் அடிப்படையில் கட்டப்பட்ட இயக்கம் என்பதைத் தவிர்த்துப் பார்த்தால், பிற்படுத்தப்பட்ட ஜாதிகளுக்கு பெரியார் செய்த பங்களிப்பு என்றும் அவர்களால் போற்றப்பட வேண்டியது. 

கடும் வெறுப்புடனே அவர் பிராமணீயத்தை எதிர்கொண்டார். எல்லா மட்டத்திலும் இட ஒதுக்கீடு அவசியம் என்று போராடினார். முடிவில் வென்றார். ஏன் இட ஒதுக்கீடு தேவையென்பதை அரசுகள் ஏற்றுக்கொண்டன? வெறும் ஓட்டுக்காகவா? ஜனநாயகத்தில் வெறும் ஓட்டுக்காக மட்டுமே ஒரு விஷயத்தைச் செய்து நிலைநாட்டிவிட முடியாது.

கல்வி கற்க ஆரம்பித்த பின்னரும் பிற்படுத்தப்பட்ட ஜாதிகளுக்கு சரியான வழிகாட்டல்கள் இல்லை. இதுவரை கலைகளின் மூலமாக மட்டுமே பல விஷயங்களை அறிந்துகொண்டிருந்த மகக்ளுக்கு, எழுத்தின் மூலம் கற்றுக்கொள்தல் என்பது மிகவும் சிரமானதாக இருந்தது. இதைப் புரிந்துகொள்ள 1930களுக்கு போக வேண்டியதில்லை. இப்போதும் நிலைமை அது தான்...

1990களில் நான் +2 முடித்து 77% மார்க் வாங்கினேன். அடுத்து என்ன செய்வது என்று என் பெற்றோருக்கு எதுவும் தெரியவில்லை. என் அப்பா 3ம் வகுப்பு வரை படித்தவர். அம்மா அதுவும் கிடையாது. 

எங்கள் ஊரில் வாழ்ந்த ஒரு குடும்பம், பல வருடங்களுக்கு முன் டவுனுக்கு குடிபெயர்ந்திருந்தது. அவர்களின் மகன் மெக்கானிகல் இஞ்சினியரிங் முடித்திருந்தார். எனவே +2 முடித்தால், மெக்கானிகல் எஞ்சினியர் ஆகலாம் என்று நான் ‘அறிந்து’ கொண்டேன். கவுன்சலிங் போனபோது, என்ன குரூப் வேண்டும் என்று கேட்க எல்லாவற்றையும் விட்டுவிட்டு மெக்கானிகலை எடுத்தேன். 

எங்கள் கிராமத்தில் இருந்து படித்து இஞ்சினியர் ஆன முதல் ஆள் நானே. இதை பெருமைக்காக சொல்லவில்லை. 1990களில் ஒரு பிறபடுத்தப்பட்ட ஜாதியின் நிலைக்காக சொல்கிறேன். 

அதன்பிறகு கல்லூரியில் உங்களப் போன்ற பிராமண நண்பர்கள் இந்த இடஒதுக்கீடு விஷயமாக பலமுறை என்னுடன் விவாதத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள். அவர்களுக்குச் சொன்னதையே உங்களுக்கும் சொல்கிறேன்:

’நான் 87% மார்க் எடுத்தும், எனக்கு நினைத்த குரூப் கிடைக்கவில்லை. ஆனால் 70-80% மார்க் எடுத்தவன் எல்லாம் என்னை விட நல்ல குரூப்பிற்குப் போய்விட்டான். இங்கே திறமைக்கும் தகுதிக்கும் மதிப்பில்லை. அதிக மார்க எடுத்த எனக்குத் தானே முன்னுரிமை கொடுக்கப்பட வேண்டும்? ’- இந்த வாதம் பலவிதங்களில் திரும்பத் திரும்ப உங்களால் வைக்கப்படுகின்றது. 

90% எடுத்த உன் அப்பா யார்? - பேங்கில் பெரிய ஆஃபீசர்

அம்மா யார்? - ஆசிரியை / இல்லத்தரசி..ஆனால் பட்டதாரி

உன் மாமா/சித்தப்பா/பெரியப்பா எல்லாம் யார்? - ஏதேனும் அரசு வேலையிலோ, சாஃப்ட்வேர் கம்பெனியிலோ நல்ல வேலையில் இருப்பவர்கள்.

அவர்களின் வழிகாட்டலால் அந்த குரூப் வேணும், இந்த குரூப் வேணும் என்று கேட்கும் அளவிற்கு உனக்கு அறிவிருக்கிறது. எங்களுக்கு என்னென்னெ குரூப் இருக்கிறதென்று சொல்லவே ஆள் இல்லை.

படிக்காத அப்பா-அம்மா, எங்கே நல்ல சாரயம் கிடைக்கும் என்று மட்டுமே தெரிந்த மாமா/சித்தப்பா, ஏன் இப்படி கஷ்டப்பட்டு படிக்க வைக்கணும், ஏதாவது கொத்து வேலைக்கு அனுப்பினால் நல்ல காசு கிடக்குமே- என்று அறிவுரை சொல்லும் சொந்தங்கள், பள்ளி விட்டு வந்தபின்னும், சனி-ஞாயிறுகளில் தீப்பெட்டி ஆஃபீஸ்/கடையில் வேலை செய்ய வைக்கும் வறுமை --------இந்தச் 
சூழ்நிலையில் படித்து 70% மார்க் வாங்குபவன் புத்திசாலியா?

அனைத்து வசதிகளோடும், படிக்க தனியறை, வழிகாட்ட சொந்தபந்தங்கள், சுற்றிலும் படிப்பில் போட்டி போடும் சொந்தங்கள், டியூசன்கள் ---- இந்தச் சூழ்நிலையில் 87% எடுப்பவன் புத்திசாலியா? இவ்வளவு வசதியிருந்தும் 87% என்றால், மேலே சொன்ன சூழ்நிலையில் படித்தால் உன் மார்க் என்னவாக இருக்கும்?

இட ஒதுக்கீடு என்பது இதனால் தான் தேவையாகியது. ஒரு பந்தயம் நடக்கிறதென்றால் இருவருக்கும் ஒரே மாதிரியான பயிற்சி அதற்கு முன் வழங்கப்பட்டிருக்கவேண்டும். பலநூறு 

பல வருடங்களாக/வம்சங்களாக கல்வியிலேயே உழலும் சமூகத்துடன், இப்போது தான் தட்டுத்தடுமாறி மேலெழுந்து வரும் சமூகத்தை மார்க் அடிப்படையில் மட்டுமே போட்டியிடச் சொல்வது எந்த வகையில் நியாயம்?

இப்போதும் எந்தத் துறை நன்றாகப் போகிறது, அதில் எந்தப் பிரிவு நன்றாக இன்னும் மேலே செல்லும், அதற்கு எதைப் படித்தால் நல்லது------போன்ற அனைத்து விஷயங்களும் பிற ஜாதிகளை விட பிராமண ஜாதிக்கே முதலில் தெரிகிறது. அதற்குக் காரணம் முன்பே கல்வி கற்று அனைத்துத் துறைகளின் உயர்மட்டத்தில் அவர்கள் இருப்பதால் தான். அதுவே இவ்வளவு வெறுப்பு+எதிர்ப்புக்கு இடையிலும் உங்களை கிழே விழாமல் காக்கிறது.

மார்க் என்பது மட்டுமே ஒருவரின் தகுதியை நிர்ணயிப்பது என்று நீங்கள் நம்ப மாட்டீர்கள் என்று நினைக்கின்றேன். இங்கே மனப்பாடம் செய்து, நன்றாக ஒப்பிப்பவனே அதிக மார்க் எடுப்பவனாகவும், புத்திசாலியாகவும் பார்க்கப்படுகிறான். ஆனால் அது சரியான மதிப்பீடு தானா?

எனவே தான் மார்க் மட்டுமே பார்க்கப்படாமல், அவனது பின்புலமும் பார்க்கப்படவேண்டிய அவசியம். அதைச் செய்வதே இட ஒதுக்கீடு.

ஆனால் இட ஒதுக்கீடு முறையிலும் குறைகள் உண்டு.

அதுபற்றியும் பேசுவோம்....

(அனுமார் வால் மாதிரி போய்க்கிட்டே இருக்கே..இதுக்குத் தான் நான் வாயே திறக்கற்தில்லை!...உங்க நண்பர்களுக்கும் இதை பகிரலாம். மாற்றுக்கருத்தைப் பெறுவோம்..தொடர்ந்து பேசுவோம்..பிராமண சமூகமும் பிற சமூகங்களும் ’பேசுவதே’ இல்லை..வசை/திட்டு,பொருமல் தான்...........நாமாவது பேசுவோம்...)

அன்புடன்
செங்கோவி

(தொடரும்)
மேலும் வாசிக்க... "பிராமண நண்பருக்கு...(வர்ணம், ஜாதி, இட ஒதுக்கீடு)_4"
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

39 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.