Sunday, October 25, 2015

திரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 61


61. எட்டு, எட்டா திரைக்கதையைப் பிரிச்சுக்கோ!

கதைச்சுருக்கத்தில் இருந்து பீட் சீட் எழுதிப் பார்த்துவிட்டீர்கள். ஒரு திரைக்கதைக்குத் தேவையான ஏற்ற, இறக்கங்கள் உங்கள் கதையில் இருக்கிறது என்பதை உறுதிப்படுத்திக்கொண்டீர்கள். இனி திரைக்கதை எழுத ஆரம்பிக்கலாம். அதற்கு முந்தைய கடைசி ஸ்டெப், கதை வரிசை (சீகுவென்ஸ்).

இன்றைய திரைக்கதை வடிவத்தைப் பற்றிய ஒரு தெளிவான புரிதலை உருவாக்கியவர் சிட் ஃபீல்ட்.

ஆக்ட்-1 (ஆரம்பம்) - 30 பக்கங்கள்

ஆக்ட்-2 (பிரச்சினை) - 60 பக்கங்கள்

ஆக்ட்-3 (முடிவு) - 30 பக்கங்கள்

என ஒரு திரைக்கதை மூன்று பாகங்களைக் கொண்டிருக்கும் என்று வடிவமைத்தார். ஆனால் நடைமுறையில் மூன்று ஆக்ட் போதுமானதாக இல்லை என்பதை ஏற்கனவே பீட் ஷீட் பற்றிய விரிவான பகுதியில் பார்த்தோம்.

ப்ளேக் ஸ்னிடர், Pilar Alessandra போன்ற பல திரைக்கதை வல்லுநர்கள் திரைக்கதையை நான்கு ஆக்ட் கொண்டதாக பிரித்தார்கள். உங்கள் பீட் ஷீட்டையும் கீழே உள்ளபடி நான்காக பிரித்துக்கொள்ளுங்கள் :

ACT 1 - SET UP, CATALYST, DEBATE, BREAK INTO TWO (30 பக்கங்கள்)

ACT 2A - B STORY, FUN & GAMES, MID POINT (30 பக்கங்கள்)

ACT 2B - BAD GUYS CLOSE IN, ALL IS LOST, DARK NIGHT OF THE SOUL, BREAK INTO THREE (30 பக்கங்கள்)

ACT 3 - FINALE, FINAL IMAGE (30 பக்கங்கள்)

அடைப்புக்குறிக்குள் உள்ள பக்க எண்ணிக்கை ஒரு வழிகாட்டி மட்டும் தான். அதை இம்மிபிசகாமல் ஃபாலோ செய்ய வேண்டியதில்லை. பிசாசு படம் செட்டப்பே இல்லாமல் கேட்டலிஸ்ட்டில் துவங்கியது பற்றி ஏற்கனவே பார்த்திருக்கிறோம். எனவே கதைக்குத் தேவையானபடி, பக்கங்கள் கூடலாம், குறையலாம். இப்போதெல்லாம் 100-110 பக்கங்களுக்குள் திரைக்கதையை முடித்துவிடுகிறார்கள். திரைக்கதையில் ஒரு பக்கம் என்பது படத்தில் ஒரு நிமிடம் என்று ஒரு கணக்கு உண்டு. 120 பக்க திரைக்கதையில் பாட்டு, சண்டை, பில்டப் ஸ்லோமோசன்(!) எல்லாம் சேர்ந்து இரண்டரை மணி நேரம் வந்துவிடும்.

 
திரைக்கதை என்பது ஒரு கதையை வெவ்வேறு நேரத்தில் சிறுசிறு தகவல்களாகச் சொல்வது தான். ஹிட்ச்காக்கின் பாம் தியரியில் இதைப்பற்றி விரிவாகப் பார்ப்போம். எதை ஆடியன்ஸுக்கு முன்னால் சொல்வது, எதை பின்னர் சொல்வது எனும் ஜட்ஜ்மென்ட் தான் திரைக்கதையில் மிகவும் முக்கியம். கதைக்கு எப்படி க்ரியேட்டிவிட்டியோ, அதே போன்று திரைக்கதைக்கு இந்த ஜட்ஜ்மென்ட். வெற்றி பெற்ற படங்களை ஸ்டடி செய்யுங்கள் என்று நாம் சொல்வதற்கு அர்த்தம், இந்த ஜட்ஜ்மென்ட்டை அவர்கள் எப்படி செய்திருக்கிறார்கள் என்று பார்ப்பது தான்.

ஒவ்வொரு ஆக்ட்டும், ஒவ்வொரு சீகுவென்ஸும், ஒவ்வொரு சீனும் எதையோ ஆடியன்ஸுக்கு தெரியப்படுத்திகொண்டே இருக்கின்றன. ஒரு முழுக்கதையை பார்ட், பார்ட்டாக உடைத்து வைத்துக்கொண்டு, ஒவ்வொரு ஆக்ட்-சீகுவென்ஸ்-சீனிலும் சொருகிப்பார்ப்பது தான் திரைக்கதை எழுதுவதில் உள்ள அதிசுவாரஸ்யமான விஷயம்.

மேலே குறிப்பிட்ட நான்கு ஆக்ட்களும் எதையோ ஆடியன்ஸிற்கு தெரிவிக்கின்றன.உங்கள் கதைக்கு அது என்ன என்பதைக் கண்டுபிடியுங்கள். அதை சுருக்கமான தலைப்பாக மாற்றுங்கள். முழு திரைக்கதையை தவிர்த்து மற்ற குறிப்புகள் உங்களுக்கு மட்டும் புரிந்தால் போதும். துப்பாக்கி படத்திற்கு இப்படி வரும்:

Act-1: Personal life & Bomb blast

Act-2A: Capture of sleeper cell & killing

Act-2B: Villain's Reaction & Finding hero

Act-3: Hero to destroy villain

எப்போதுமே ஒரு வேலைக்கான டார்கெட்டை ஒரு பெரிய விஷயமாக வைக்காமல், சிறு சிறு டார்கெட்களாக வைத்துக்கொள்வது நல்லது. அது வேலையை எளிதாக்குவதோடு, சரியான நேரத்தில் சரியான தரத்துடன் சரியான அளவு வேலை முடிந்திருக்கிறதா என்று சரிபார்க்க உதவும். Project management, Planning போன்றவற்றில் இருப்பவர்களுக்கு இது நன்றாகப் புரியும்.

120 பக்கங்களுக்கு திரைக்கதை எழுத உட்கார்வதை விட, அதை சிறு சிறு பகுதிகளாக பிரித்து எழுத ஆரம்பிப்பது நல்லது. ஒரு குறிப்பிட்ட ஏரியாவில் மட்டும் நம் கவனத்தைக் குவிக்கவும், கடைசியில் ஒரு தெளிவுடன் அனைத்தையும் சரிபார்க்கவும் இது உதவும். எனவே மேலே குறிப்பிட்ட நான்கு ஆக்ட்களை மேலும் உடைத்து, எட்டு வரிசைகளாக (Sequence) ஆக்கிக்கொள்ளுங்கள்.

Act-1 : Title

Sequence-1 : Opening Image, theme Stated, Set-up

Sequence-2 : Catalyst, Debate, Break Into Two

 
Act-2A: Title

Sequence-3 : B-Story, Fun & Games

Sequence-4 : Fun & Games, Mid Point

 
Act-2B: Title

Sequence-5: Bad Guys Close In

Sequence-6 : Fun & Games

 
Act-3: Title

Sequence-7 : All is Lost, Break Into Three

Sequence-8 : Finale, Final Image

உங்களுடைய பீட் ஷீட்டை இப்படி சீகுவென்ஸாக பிரிக்கும்போது தான், சில சீகுவென்ஸுக்கே நம்மிடம் சீன் இல்லை என்பது தெரியும். அதை இப்போதே டெவலப் செய்யுங்கள். எட்டு சீகுவென்ஸிலும் நடக்க, போதுமான சம்பவங்கள் உங்கள் கைவசம் இருக்க வேண்டும். இந்த நிலையில், உங்கள் கதைச்சுருக்கமானது முழுமையான கதையாக ஒரு நாவல் போன்று உங்கள் மனதில் விரிந்திருக்க வேண்டும். மிஸ் ஆகும் சீகுவென்ஸை  ஏ-ஸ்டோரியில் உள்ள எல்லா விஷயங்களையும் எழுதிவிட்டீர்கள். இன்னும் சில சீகுவென்ஸ் உதைக்கிறதென்றால், அதை நிரப்ப, பி-ஸ்டோரி உதவும்.

ஒரு படம் நகரும்போதே, கதையும் நகரவில்லை என்றால் ஆடியன்ஸ் கடுப்பாகிவிடுவார்கள். 'என்னடா நடக்குது இங்கே? சும்மா கூத்தடிக்கிறாங்க' எனும் விமர்சனம் தியேட்டரிலேயே எழுந்துவிடும். அலெக்ஸ்பாண்டியனின் முதல்பாதியும், பில்லா-2 & அஞ்சானின் இரண்டாம்பாதியும் கதையை ஒரு இஞ்ச் கூட நகர்த்தாமல் டைம் பாஸ் செய்தன. விளைவு, உங்களுக்கே தெரியும்.

குறிக்கோள் என்பது ஹீரோவுக்கு எந்த அளவிற்கு முக்கியம் என்று பார்த்தோம். அதே போன்று ஒவ்வொரு சீகுவென்ஸுக்கும் குறிக்கோள் முக்கியம். எதற்காக இந்த சீகுவென்ஸ், இதில் கதை பற்றிய எந்த தகவலை சொல்லப்போகிறோம், என்ன நடக்கப்போகிறது என்று ஒவ்வொரு சீகுவென்ஸுக்கும் ஒரு குறிப்பு ரெடி பண்ணுங்கள்:

ஒரு ஆக்ட்டில் என்ன நடக்க வேண்டும் என்று ஒரு தலைப்பு கொடுத்திருந்தீர்கள். இப்போது அதையும் ப்ளேக் ஸ்னிடரின் பீட்டையும் அடிப்படையாக வைத்து, கீழே உள்ளபடி சீகுனெவ்ஸுக்கு ஒரு குறிப்பு தயார் செய்யுங்கள்.

Act-1 : Title

Sequence-1 : Opening Image, theme Stated, Set-up

 

Goal : ----------------------- (இந்த சீகுவென்ஸின் குறிக்கோள் என்ன?)

Action:-------------------- (இதில் என்ன நடக்கிறது?)

Conflict: ------------------- (இதில் என்ன சிக்கல் வருகிறது)

 
மீண்டும் துப்பாக்கியை கையில் எடுப்போமா?

 
Act-1 : Personal life & Bomb blast

 

Sequence-1 :  (Opening Image, theme Stated, Set-up)

 

Goal : ----------------------- ஹிரோவின் பெர்சனல் (நார்மல்) லைஃபை காட்டுவது

Action:-------------------- பெண் பார்க்கப் போவது, நண்பனுடன் ஊர் உலா.

Conflict:  ஹீரோவுக்கு பெண் பிடிக்கவில்லை, ஹீரோயின் கடுப்பாகிறாள்.

ஹீரோ கேஸில் தலையிடுவது போலீஸ் நண்பனுக்குப் பிடிக்கவில்லை, நண்பன் கடுப்பாகிறான்.

 
ஹீரோ பெண் பார்க்கப்போனான், பிடித்திருந்தது, கல்யாண ஏற்பாடு என்பது தான் அனைவரும் எதிர்பார்ப்பாக இருக்க முடியும். பிடிக்கவில்லை எனும் முரண்பாடு தான் அந்த காட்சியை சுவாரஸ்யமாக ஆக்குகிறது. காஜல் அகர்வால் தான் அந்த படத்தின் ஹீரோயின் என்பது தியேட்டருக்குள் வரும் முன்பே ஆடியன்ஸுக்குத் தெரியும். அவரை விஜய் பிடிக்கவில்லை என்று சொல்வது தான் முரண்பாடு /சிக்கல். ஒரு நீண்ட பி-ஸ்டோரிக்கான  முரண்பாடு திறந்துவிடுகிறது.

ஹீரோ போலீஸ் கேஸில் இன்வால்வ் ஆவதை சத்யன் விரும்புவதில்லை. ஹீரோ ஒரு ராணுவவீரன் என்பது ஒரு தடை என்றால், நண்பனும்(போலீஸ்) ஒரு தடையாக இருக்கிறான். இந்த முரண்பாடு தான் ஏ-ஸ்டோரிக்கு அடிப்படை.

ஆக்சன், ஆக்டிவிட்டி இரண்டையும் செயல் என்ற பொருளில் தான் நாம் தமிழில் உபயோகப்படுத்துகிறோம். ஆனால் இரண்டுக்கும் ஒரு அடிப்படை வேறுபாடு உண்டு.

ஒருவன் பைக்கில் போய்க்கொண்டு இருக்கிறான் - என்பது நோக்கம் இல்லாத செயல். இது ஆக்டிவிட்டி.

ஒருவன் பைக்கில் ஹாஸ்பிடலுக்குப் போகிறான் - என்பது நோக்கத்துடன் கூடிய செயல், இது ஆக்சன்.

அதாவது, கதையை கொஞ்சமேனும் நகர்த்தும் செயல் தான் ஆக்சன். அதை சுவாரஸ்யமாக ஆக்குவது முரண்பாடு. ஹீரோ ஆந்திரா போகிறான், அமெரிக்கா போகிறான் என்று கலர்ஃபுல்லாக காட்சிகளை அடுக்கினாலும், அது கதைக்கு உதவவில்லை என்றால் வீண் தான்.

ஒரு சீகுவென்ஸ் எதற்காக நடக்கிறது என்பதை கோல் சொல்லும்.

அதை நிறைவேற்றும் நோக்கத்துடன் என்ன நடக்கிறது என்பதை ஆக்சன் சொல்லும்.

அதில் சுவாரஸ்யம் இருக்கிறதா என்பதை முரண்பாடு/சிக்கல் சொல்லும்.

நீங்கள் திரைக்கதை தான் எழுதப்போகிறீர்களா அல்லது சும்மா கதை விடப்போகிறீர்களா என்று நீங்களே உங்களை செக் செய்துகொள்ள, இது உதவும்.

எனவே உங்கள் கதைக்கு எட்டு சீகுவென்ஸ் குறிப்புகளை கோல், ஆக்சன், முரண்பாட்டுடன் பிடியுங்கள். அதில் உள்ள ஆக்சன் & முரண்பாடு தான் அடுத்து நீங்கள் டெவலப் செய்யப்போகும் சீன்ஸ். 

ஒரு ஒன்லைன்

ஒரு கதை

மூன்று ஆக்ட்

பதினைந்து பீட்ஸ்

எட்டு சீகுவென்ஸ்

- ஆகியவற்றை டெவலப் செய்ததின் மூலம், உங்கள் கதையை நீங்களே அடித்துத் துவைத்து சரிசெய்துவிட்டீர்கள். சரியான கற்பனை வளமும், தெளிவான திட்டமிடலும், நேர்மையான சுயபரிசோதனையும் இருந்தால் திரைக்கதை உங்களுக்கு வசப்படும்.

(தொடரும்)
மேலும் வாசிக்க... "திரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 61"
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

0 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.

Friday, October 23, 2015

குறும்படம் எனும் சோதனை முயற்சி - ஒரு அலசல்

சினிமா என்பது வணிகமாக இருக்கும்நிலையில், அதற்கான மாற்று சினிமாவாக உருவானது தான் குறும்படம் என்பது. வணிக சினிமா பேசாத, கருத்துச்செறிவான விஷயங்களை அலசுவதற்கு குறும்படம் ஒரு சிறந்த வழி. அத்தகைய படங்கள் இப்போதும் வந்துகொண்டிருக்கின்றன. இந்த பதிவில் அப்படிப்பட்ட, சமூக அக்கறை கொண்ட சீரியஸ் குறும்படங்களைத் தவிர்த்துவிட்டு, மற்றவை பற்றிப் பார்ப்போம்.

பிரபல இயக்குநர்களிடம் உதவி இயக்குநர்களாகச் சேர்வதற்கு ஒரு வழியாக மட்டுமே முன்பு (இப்போதும்) 'பொழுதுபோக்கு குறும்படங்கள்' இருந்துவந்தன. நல்ல கதை எழுதும் ஆற்றல் உள்ளவர்களைப் போன்றே, நல்ல ஷார்ட் ஃபிலிம் எடுப்போரையும் சினிமா அரவணைத்தது.

டிஜிட்டல் புரட்சிக்குப் பின் குறும்படம் எடுப்பது என்பது சாம்பார் வைப்பதைவிடவும் சாதாரணமான விஷயமாக ஆகிவிட்டது. சினிமாவிற்கு உள்ளே இருப்பவர்கள் மட்டுமல்லாது, வெளியே இருப்போரும் இதனை கோடம்பாக்க கதவைத் திறக்கும் சாவியாக புரிந்து வைத்திருக்கிறார்கள், அதில் ஜெயிக்கவும் செய்கிறார்கள்.

இந்தப் பதிவில் நான் பேச விரும்புவது, ஷார்ட் ஃபிலிம்களின் தரத்தைப் பற்றியும், அதை எடுப்போரின் மனநிலை பற்றியும் தான்.

ஏன் குறும்படங்கள் எடுக்கப்படுகின்றன?

1. கற்றுக்கொள்வதற்கு!
2. கற்றுத்தேர்ந்து, ஒரு நல்ல குறும்படம் கொடுப்பதற்கு.
3. அதன் மூலமாக, சினிமா வாய்ப்புகளைப் பெறுவதற்கு.

'பொண்ணு பார்க்கப்போவது கல்யாணம் செய்யத்தான்' என்பது மாதிரி ஷார்ட் ஃபிலிமின் அல்டிமேட் குறிக்கோள், சினிமா வாய்ப்பு தான்.

உண்மையிலேயே நம் மக்கள் அக்கறையுடனும் கடும் உழைப்புடனும் குறும்படங்களை எடுக்கிறார்கள். குறும்படமே கற்றுக்கொள்ளத்தான் என்பதால், தரம் பற்றியும் பெரிய பிரச்சினையில்லை. 'நாலஞ்சு ஷார்ட் ஃபிலிம் எடுக்கிறோம். கத்துக்கறோம். குறைகளை எல்லாம் சரிபண்றோம். அடுத்து, ஸ்ட் ரெய்ட்டா சினிமா தான்' என்று தெளிவான திட்டத்துடன் ஆரம்பிக்கிறார்கள். முதல் படம் எடுத்து முடிக்கும்வரை எல்லாம் சரியாகத்தான் போகிறது.

பிரச்சினை, குறும்படத்தின் விமர்சனத்தை எதிர்கொள்வதில் தான் ஆரம்பிக்கிறது. 90% பேருக்கு நெகடிவ் விமர்சனங்களை எப்படி எடுத்துக்கொள்வது/எதிர்கொள்வது என்றே தெரியவில்லை. முதல்கட்ட குறும்படங்களின் நோக்கமே, 'நமக்கு என்ன தெரிகிறது? எங்கே தப்பு செய்கிறோம்?' என்று தெரிந்துகொள்வது தான். நம்முடைய படைப்பில் இருக்கும் எல்லாத் தவறும் நமக்குத் தெரியாது. அதை மற்றவர்கள் பார்த்துவிட்டுச் சொல்லட்டும் என்பது தான் அதை பொதுவில் வைக்கும் நோக்கம். அந்த நோக்கம் சரியாக நிறைவேறும்போது, சொதப்பிவிடுகிறார்கள் இந்த 'குழந்தை' படைப்பாளிகள்.

இந்த வாரம் என்ன படம் ரிலீஸ் ஆகியிருக்கிறது என்று எதிர்ப்பார்ப்பது போல், இந்த வாரம் என்ன குறும்படம் ரிலீஸ் என்று யாரும் எதிர்பார்ப்பதில்லை. உண்மையில் நண்பர்களும் சொந்தங்களும் தாண்டி, யாருக்கும் உங்கள் குறும்படங்கள் பற்றித் தெரிவதும் இல்லை. எனவே உங்கள் நெருங்கிய நட்பு வட்டத்தில் இல்லாத ஒருவர், உங்கள் குறும்படத்தைப் பார்க்கிறார் என்பதே பெரிய விஷயம். அடுத்து அவர் தன் பொன்னான நேரத்தைச் செல்வழித்து 'மொக்கைப் படம்..கொன்னுட்டான்' என்று சொல்கிறார் என்றால், அவரை கோவில்கட்டிக் கும்பிட வேண்டும்!

ஒரு குறும்படம் ரிலீஸ் ஆனதும் நமக்கு வருவது, மூன்றுவகையான விமர்சனங்கள் தான்.

1. நண்பர்களின் 'சூப்பர் மச்சி' விமர்சனம்
2. நெகடிவ் விமர்சனங்கள்
3. காழ்ப்புணர்ச்சி விமர்சனங்கள். (என்ன குறை என்று கேட்டால் சொல்லத்தெரியாது. இத்தகைய நெகடிவ் ஆசாமிகளின் கருத்தை ஒதுக்கித் தள்ளிவிடலாம்.)

குறும்பட விமர்சனங்களிலேயே மோசமானது, சூப்பர் மச்சி விமர்சனம் தான். நண்பரின் நண்பர் ஒருவர் படு திராபையான குறும்படம் எடுத்திருந்தார். ஃபேஸ்புக்கில் என் நண்பர் ஒருவர் அதற்கு 'அருமையான படம்' என்று கமெண்ட் செய்திருந்தார். என் நண்பரிடம் சாட்டில் போய் 'யோவ், அந்த டைரக்டர்(!)கிட்டே பெர்சனலா பேசும்போதாவது உண்மையைச் சொல்வீரா?' என்று கேட்டேன். அதற்கு அவர் சொன்னது, 'நமக்கு எதுக்குய்யா வம்பு? ஏதோ முயற்சி பண்ரான், பாராட்டி வைப்போம்'.

எல்லாருமே காறித்துப்பினால், அடுத்த படத்தையே எடுக்க மாட்டீர்கள் தான். எனவே உங்களை ஊக்குவிக்கும் காரணியாக, நண்பர்களின் சூப்பர் மச்சி கமென்ட் இருக்கட்டும். ஆனால் அது முழுமையான உண்மை அல்ல. அதை உண்மையென்று நம்பிவிட்டீர்கள் என்றால், அங்கேயே தேங்கிப்போய்விடுவீர்கள்.

இன்னொரு குறும்படம் பார்த்துவிட்டு தற்கொலை மனநிலைக்கே போய்விட்டேன். குறைந்தது பத்து கெட்டவார்த்தைகளால் இயக்குநரை திட்டிவிட்டு, ஃபேஸ்புக்கை ஓப்பன் செய்தால் அவருக்கு ஒரு கமெண்ட் வந்திருந்தது : 'feeling proud to be your friend'. செத்தாண்டா சேகர் என்று நினைத்துக்கொண்டேன்.

அடுத்து கிடைப்பது நெகடிவ் விமர்சனங்கள். குறும்படம் எடுப்பதன் முதல் நோக்கமே, நெகடிவ் விமர்சனங்களை வாங்குவது தான். அதில் தான் தன் குறை என்னவென்று தெரியவரும். அப்படி எதிர்பார்த்தது கிடைக்கும்போது, படைப்பாளிகளுக்கு கடும் கோபம் வந்துவிடுகிறது. 'இத்தனை பேர் சூப்பர் மச்சின்னு சொல்லும்போது, இவன் என்னமோ அறிவுஜீவி மாதிரிப் பேசுறானே' என்று கடுப்பாகிவிடுகிறார்கள். சிலர் சண்டைக்கே வந்துவிடுகிறார்கள். சென்ற வருடம் ஒரு ஈழத்து நண்பரின் பதிவில் பெரும் சண்டை. அவர் ஒரு மொக்கை குறும்படத்தை நன்றாக இல்லை என்று சொல்லிவிட்டது தான் பிரச்சினை.

நெகடிவ் விமர்சனம் வரும்போது வலிக்கும் தான். அவமானமாகவும் இருக்கும். ஆனால் அதையெல்லாம் எதிர்கொண்டு, அதில் உள்ள நியாயமான விஷயங்களை ஏற்றுக்கொண்டால் தான் அடுத்த கட்டத்திற்கு நகர முடியும். பெரும்பாலானோர் உண்மையான/நெகடிவ் விமர்சனங்களைச் சொல்வதில்லை. எனவே உண்மையைச் சொல்கிற சிலரையும் விரட்டிவிட்டு, என்ன செய்யப் போகிறீர்கள்?

பெரும்பாலான குறும்பட இயக்குநர்களுக்கு விஷுவலாக கதை சொல்வது எப்படி என்றே தெரிவதில்லை. ஐந்து நிமிடங்களுக்கு அசையாத கேமிரா, ரியாக்சன் ஷாட்டே இல்லாத எடிட்டிங் என கூச்சப்படாமல் புரட்சி செய்கிறார்கள். நல்ல கதை(?) கிடைத்தால், ஷூட்டிங் கிளம்பிவிடுகிறார்கள். நல்ல கதை என்பது வேறு, நல்ல குறும்படம் என்பது வேறு.


கற்றுக்கொள்வது என்பது, படிப்பதும் படித்ததை அப்ளை செய்து படமாக்கிப் பார்ப்பதும், அதில் செய்த தவறுகளை விமர்சனங்கள் மூலம் தெரிந்து திருத்திக்கொள்வதும் தான். கற்றுக்கொள்ள படமெடுக்கிறேன் என்று சொல்லிவிட்டு, அதே தவறையே திரும்பத் திரும்ப செய்வது சரியான அணுகுமுறை அல்ல. குறைந்தபட்சம் The Five C's of Cinematography -புக்கையாவது ஒருமுறை வாசிக்கலாம்!

ஷார்ட் ஃபிலிம் எடுத்தவுடனே மணிரத்னம் ரேஞ்சுக்கு ஃபீல் பண்ணாமல், கொஞ்சம் நிலத்தில் கால் ஊன்றி விமர்சனங்களைக் கவனியுங்கள். ஒருவர் த்ரில்லர் படம் எடுத்து அனுப்பியிருந்தார். ‘த்ரில்லருக்கான அம்சங்களே இல்லையே’ என்றேன். அதற்கு அவர் சொன்ன பதில் , ‘தெரியும் பாஸ், த்ரில்லர் எல்லோருக்கும் பிடிக்காது.இப்படி நெகடிவ் விமர்சனம் வரும்ன்னு தெரியும்’. என்னத்தச் சொல்ல!!!

இப்போதெல்லாம் நான் குறும்படங்களுக்கு பொதுவில் விமர்சனம் எழுதுவதில்லை, படைப்பாளியின் சாட்டில் போய் சொல்வதோடு சரி. சினிமாவுக்குக்கூட எழுத முடிகிறது. குறும்படங்களுக்கு..அய்யய்யோ! நிலைமை அவ்வளவு மோசமாக இருக்கிறது.
 
மேலும் வாசிக்க... "குறும்படம் எனும் சோதனை முயற்சி - ஒரு அலசல்"
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

0 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.

Thursday, October 22, 2015

10 எண்றதுக்குள்ள - திரை விமர்சனம்

அதாகப்பட்டது..:
கோலி சோடா எனும் சூப்பர் ஹிட் கொடுத்த இயக்குநர் விஜய் மில்டனும் நடிப்புக்காக எந்த எல்லைக்கும் போகத் துணியும் சீயான் விக்ரமும் இணைந்து கொடுத்திருக்கும் படம். கூடவே ஏ.ஆர்.முருகதாஸ் தாயாரிப்பு என்பதும் சேர, அதிக எதிர்பார்ப்பை உருவாக்கிய படம். ஆயிரம் இருந்தும், வசதிகள் இருந்தும்....

ஒரு ஊர்ல :
ஒரு பொருளை, அது என்னவாக இருந்தாலும், சொன்ன இடத்திற்கு சொன்ன நேரத்தில் கொண்டு சென்று சேர்க்கும் ட்ரான்ஸ்போர்ட்டர் விக்ரம். சமந்தாவையும் அப்படி நார்த் இண்டியா வில்லன்களிடம் கொண்டுபோகும் ரோடு மூவி தான் 10 எண்றதுக்குள்ள.

உரிச்சா:
பையா வெற்றிக்குப் பின்னும் அதிக அளவில் ரோடு மூவி தமிழில் வரவில்லை. காரணம், மிகவும் ரிஸ்க்கான ஜெனர் இது. கொஞ்சம் திரைக்கதை சுணங்கினாலும் ’என்னய்யா இது, போய்க்கிட்டே இருக்காங்க’ எனும் சலிப்பு ஈஸியாக ஆடியன்ஸிற்கு வந்துவிடும். விஜய் மில்டன் துணிந்து அந்த ரிஸ்க்கை எடுத்திருக்கிறார்.

வட இந்தியாவில் நடக்கும் ஒரு சாதிப்பிரச்சினையுடன் படம் ஆரம்பம் ஆகிறது. கதையின் மையமே அந்தப் பிரச்சினை தான். படத்திற்கு பிரச்சினையும் அது தான். வட இந்தியா, ஆவோஜி-பாவோஜி டப்பிங் வசனங்களால் அந்தப் பிரச்சினை பெரிய இம்பாக்ட்டை கொடுக்கவில்லை. விக்ரமும் சமந்தாவும் வட இந்தியா நோக்கி நகரும்போதெல்லாம்,இடையிடையே அந்த பிரச்சினையைக் காட்டுகிறார்கள். ஆனாலும் ஒட்டாமல் அது தனித்து நிற்கிறது.

அட்டகாசமான ஓப்பனிங்குடன் விக்ரம் அறிமுகம் ஆகிறார். தியேட்டரில் விசில் பறக்கிறது. பசுபதியுடன் அவர் கூட்டு சேர்வது கலகலப்பு என்றால், சமந்தாவிற்கு டிரைவிங் சொல்லிக்கொடுப்பது அட்டகாசமான காமெடி போர்சன். அதற்கெல்லாம் தியேட்டரில் நல்ல வரவேற்பு.

பாண்டிச்சேரியில் இருந்து ஒரு காரை எடுத்து வா என்றால், அதில் என்ன இருக்கிறது என்றுகூட கேட்காமல் எடுத்துவந்து, கூலியை மட்டும் வாங்கிச்செல்லும் சின்சியர் கேரக்டர் விக்ரம். அதே போன்று காரில் சமந்தா இருப்பதை அறியாமல், வட இந்தியா நோக்கி கடத்துவது நல்ல கான்செப்ட். வழியில் விக்ரமுக்கே தெரியாமல், காரில் இருந்து ஆந்திரா வில்லன்களால் சமந்தா கடத்தப்பட, விக்ரம் அவரைக் காப்பாற்றுகிறார். சமந்தாவையும் அழைத்துக்கொண்டு, உத்தரகாண்ட் நோக்கி நகர்கிறார் விக்ரம். கடத்தப்படுவதே சமந்தா தான் என்று தெரியாமல், விக்ரமும் சமந்தாவும் பயணத்தை ஆரம்பிப்பது சுவாரஸ்யமான விஷயம்.

ஆனால் தெலுங்கானா பாடல் காட்சியில் இருந்தே, படம் நமக்கு அந்நியமாகிவிடுகிறது. ஏறக்குறைய பையா படத்திலும் இதே கதைக்களம் தான். ஆனால் தான் காதலிக்கும் பெண்ணே, ஹீரோவிடம் லிஃப்ட் கேட்க, ஒன்றாக பயணித்தால் அவள் மனதை கொள்ளையடிக்கலாம் எனும் ஹீரோவின் குறிக்கோளுடன் படம் பயணித்தது. இங்கே பிரச்சினை, ஹீரோவுக்கு காரை உத்ரகாண்டில் விட வேண்டும் என்பது தான் குறிக்கோள்..அல்ல, அது வேலை. எனவே எமோசனலாக நாம் இன்வால்வ் ஆக முடிவதில்லை. ஆந்திராவில் இருந்து நார்த் இந்தியா வரை பயணத்தில், விக்ரமும் சமந்தாவும் சண்டியிடுகிறார்கள், காதலிக்கிறார்கள், என்னென்னவோ நடக்கிறது. இண்டர்வெல் ப்ளாக்கில் இன்னொரு வில்லன் கோஷ்டியும் சமந்தாவைத் தேடுவதாக காட்டுகிறார்கள். ஆனாலும் படத்தின் மீதான இண்டரெஸ்ட்டே இல்லாமல் தான் அதைப் பார்க்கிறோம்.

இண்டர்வெல்லுக்கு அப்புறமும் பயணம் நீண்டு, ஒரு வழியாய் சமந்தாவைக் கேட்ட வில்லனை விக்ரம் அடித்துத் துவைக்கிறார். ‘நான் மெயின் வில்லன் இல்லை..இன்னொருத்தன் இருக்கிறான். படம், இன்னும் இருக்கிறது’ என்று அந்த வில்லன் ஒரு குண்டைத் தூக்கிப் போடுகிறான். இன்னுமா என்று நாம் அதிர்ச்சியாகும்போது, சாதிப்பிரச்சினை சமந்தாவுடன் லின்க் ஆகிறது. அதற்குப் பிறகு, படம் கொஞ்சம் சுவாரஸ்யம் ஆவது தான் ஆச்சரியம். அதில் இருந்து கிளைமாக்ஸ்வரை, பல சர்ப்ரைஸ்களை கொடுத்துக்கொண்டே இருக்கிறார்கள்.

மொத்தத்தில் முதல் அரைமணி நேரமும், கடைசி அரைமணி நேரமும் கலக்கல். இடையில் எமோசன் இல்லாத நெடும் பயணம்.

விக்ரம்:
ஜாலியான, கேஷுவல் கேரக்டரில் விக்ரமை ரசிக்க முடிகிறது. பயணம் ஆரம்பம் ஆகும்வரை செம ரவுசு. பசுபதியை இவர் டீல் செய்யும் விதமே அழகு. வயது முகத்தில் எட்டிப்பார்த்தாலும், ஆக்டிவ்வாக இருக்கிறார். கார் சேஸிங்கில் ரிஸ்க் எடுத்து கலக்கியிருக்கிறார்.

சமந்தா:
டிரைவிங் கற்றுக்கொள்வதாகக்கூறி அவர் அடிக்கும் லூட்டிகள் செம காமெடி. க்யூட், மக்குப் பெண்ணாக மனதைக் கொள்ளை கொள்கிறார். ஆனால் இரண்டாம்பாதியில் ஆக்ரோசமாக அவர் வருவதைப் பார்த்தால் சிரிப்பு தான் வருகிறது. பக்கவாதம் வந்தவர் போல், ஒரு பக்கம் வாயை இழுத்துக்கொள்வது தான் ஆக்சன்ன்ன் என்று யார் சொன்னார்களோ! அனுஷ்கா அளவிற்கு இல்லாவிட்டாலும், பாகுபலி தமன்னா அளவிற்காவது ஆக்ரோசம் காட்டியிருக்கலாம். ஒரு பாதியில் கலக்கி, மறுபாதியில் சொதப்பிவிட்டார்.

பசுபதி:
படத்தைக் காப்பாற்றும் இன்னொரு ஜீவன். தனது அக்மார்க் நடிப்பால், எப்போதும் போல் இப்போதும் நம்மைக் கவர்கிறார். அவரது ஓப்பனிங் சீனும், விக்ரமுடன் அவர் வரும் காட்சிகளும் சுவாரஸ்யம்.
 
நெகடிவ் பாயிண்ட்ஸ்:
- ரோடு மூவி. பையா தவிர்த்து, அன்பே சிவம்-நந்தலாலா-மதுரை டூ தேனி என பெரும்பாலான ரோடு மூவீஸ் கமர்சியலாக ஃப்ளாப் தான். ரோடு மூவி பார்க்க, கதையை அதிகம் எதிர்பார்க்காத மனநிலை வேண்டும். பயணத்தில் நடக்கும் சம்பவங்கள் தான் இங்கே முக்கியம். அது தமிழ் கமர்சியல் சினிமாவில் இன்னும் ரிஸ்க்கான விஷயமாகவே இருக்கிறது.
- கொட்டாவி வர வைக்கும், கதையை கொஞ்சமும் நகர்த்தாத நீண்ட பயணக்காட்சிகள். ஆந்திரா பாடலில் தூங்கி உத்ரகாண்டில் நாம் முழித்துப் பார்த்தால், கண்டினியூட்டி பக்காவாக இருக்கும்.
- ஹிந்தி டப்பிங் சீரியல் எஃபக்ட்டைக் கொடுக்கும் வட இந்தியா காட்சிகள்
- எதற்காக இந்த கடத்தல் என்பதை மிக லேட்டாக சொன்னது. அது தெரிந்தபின் தான் படத்துடன் இன்வால்வ் ஆகிறோம்.
- ’இரண்டாம்பாதி’ சமந்தா
- மோசமான கிராஃபிக்ஸ்


 பாசிடிவ் பாயிண்ட்ஸ்:
- ஒளிப்பதிவும் எடிட்டிங்கும் தான் படத்தின் உண்மையான ஹிரோக்கள். ஆரம்பத்தில் விக்ரமை பசுபதி டீம் விரட்டும் சேஸிங்கில், ஒளிப்பதிவாளர் பாஸ்கரனும் எடிட்டர் ஸ்ரீகர் பிரசாத்தும் போட்டி போட்டு உழைத்திருக்கிறார்கள்.
- விக்ரம்...என்ன ஒரு எனர்ஜி!
- முதல்பாதி சமந்தாவின் காமெடி சேட்டைகள்
- இமானின் துள்ளலான பாடல்கள்
- முதல் மற்றும் கடைசி அரைமணி நேரம்

பார்க்கலாமா?
 
ரோடு மூவி பிரியர்கள் மட்டும்............பார்க்கலாம்!

மேலும் வாசிக்க... "10 எண்றதுக்குள்ள - திரை விமர்சனம்"
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

0 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.

Tuesday, October 20, 2015

திரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 60

60. Beat It..Beat It.

ஒன்லைனில் ஆரம்பித்து, ஒரு கதைச்சுருக்கத்தை எழுதிவிட்டீர்கள். எல்லாக் கதைகளும் சுவாரஸ்யமான சினிமாவாக ஆகிவிடாது. சில கதைகள் இலக்கியத்திற்கு மட்டுமே சரிவரும், சில கதைகள் டிவி சீரியலுக்கு மட்டுமே பொருந்தும். வணிக சினிமாவிற்கு இந்தக் கதை பொருத்தமாக இருக்குமா என்று சரிபார்க்க உதவுவது, ப்ளேக் ஸ்னிடரின் இந்த பீட் ஷீட்.

'படம் சுவாரஸ்யமாகவே இல்லை, ரொம்ப ஃப்ளாட்டா மூவ் ஆகுது,முதல்பாதி சுமார்' என்றெல்லாம் ஒரு படத்தைப் பார்க்கும்போது ஆடியன்ஸிற்குத் தோன்றுகிறது. ஏனென்றால், ஒரு படம் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று ஒரு எதிர்பார்ப்பு ஆடியன்ஸ் மனதில் இருக்கிறது. அது என்ன என்று கேட்டால் 'நல்லா இருக்கணும்' என்பதைத் தாண்டி அவர்களால் சொல்ல முடியாது.

அதைத்தான் ப்ளேக் ஸ்னிடர் வெற்றி பெற்ற படங்களை வைத்து, ஆராய்ந்தார். ஆடியன்ஸின் உள்மனது, திரைக்கதை வடிவத்தில் ஒரு தாள லயத்தை எதிர்பார்ப்பதைக் கண்டுணர்ந்தார். இதை 'வடிவ க்ளிஷே' என்று சொல்லலாம். 'செட்டப்பில் இருந்து ஆக்ட்-2வுக்கு ஒரு கதை நகர வேண்டும் என்றால், அதற்கு ஒரு கேடலிஸ்ட் சம்பவம் தேவை. அந்த சீன் வந்தால்தான் ஆடியன்ஸ் திருப்தியாகி, ஆக்ட்-2விற்கு தயாராவார்கள். ஆக்ட்-2 முடிந்து,  ஆல் இஸ் லாஸ்ட் சீனில் ஹீரோ கீழே விழுந்து எழுந்தால் தான் ஆக்ட்-3 விறுவிறுப்பாகவும் நம்பகத்தன்மையுடனும் இருக்கும்.' போன்றவற்றை சிட் ஃபீல்டை அடியொற்றி அவர் டெவலப் செய்தார். இதைப் பற்றி விரிவாக நாம் ஏற்கனவே பார்த்திருக்கிறோம்.

ஒரு உதாரணத்திற்காக, கதைச்சுருக்க நிலையில் துப்பாக்கி படத்தின் பீ ஷீட் எப்படி இருந்திருக்கும் என்று பார்ப்போம். ஏற்கனவே துப்பாக்கி படத்தில் வந்த சீன்களுக்கு பீட் ஷீட் நான் எழுதியிருக்கிறேன். அந்த சீன்களை டெவலப் செய்யும் முன், பீட் ஷீட் கீழே வருவது போல் இருந்திருக்கலாம் :



துப்பாக்கி - Beat Sheet

1. Opening Scene :

படத்தின் டொன், மூடு, ஜெனர் என்னவகையாக இருக்கலாம் என்று ஒரு குறிப்பை ஆடியன்ஸிற்குத் தருவது ஓப்பனிங் சீன். படத்தின் கான்செப்ட் என்ன என்றும் சில படங்கள் சொல்லும்.

// ஹீரோ ஒரு ராணுவ வீரன். லீவில் ஊருக்கு வந்துகொண்டிருக்கிறான். ரயில்வே ஸ்டேசனில் அவன் குடும்பம் அவனுக்காக காத்திருக்கிறது//


2. Theme stated:

படத்தின் தீம் அல்லது கான்செப்ட் பற்றி ஒரு வசனமோ அல்லது கேள்வியோ ஏதோ ஒரு கேரக்டரால் பேசப்படும்.

//லீவில் வரும்போதெல்லாம் நியாயத்தை நிலைநாட்டுகிறேன் என்று ஏதாவது வம்பில் மாட்டுகிறாய். இந்தமுறையாவது ஒழுங்காக இரு - இப்படி ஒரு வசனத்தை

அம்மா/அப்பா/நண்பன் யாராவது சொல்லட்டும்//

3. Set-Up:

படத்தின் முக்கிய கேரக்டர்களும், ஹீரோவைப் பற்றிய விபரங்களும் இதில் சொல்லப்படும்.

//ஹீரோ ஒரு ராணுவ வீரன். அம்மா-அப்பா-தங்கை என அழகான குடும்பம். ஹீரோவுக்கு கல்யாண ஏற்பாடு. ஹீரோயினைப் பெண் பார்க்கிறார்கள்.//

4. Catalyst:

Call for Adventure..இயல்பாகப் போய்க்கொண்டிருக்கும் ஹீரோ வாழ்வில், ஒரு கீ இன்சிடென்ட் நடக்கிறது. அது ஹீரோவின் இயல்பு வாழ்க்கையை கலைத்துப் போடுகிறது.

// ஒரு பஸ்ஸில் பாம் ப்ளாஸ்ட் நடக்கிறது. ஹீரோ, பாம் வைத்த தீவிரவாதியைப் பிடிக்கிறான்.//

5. Debate:

'நாங்கள்லாம் பிரச்சினையைப் போர்த்திக்கிட்டு தூங்குறவங்க' என வலிய பொதுப் பிரச்சினையைத் தேடிப் போகும் ஹீரோக்களை மக்கள் ரசிப்பதில்லை. கொஞ்சம் அறிவுள்ள மனிதனாக(!), ஹீரோ அதில் இறங்க தயக்கம் காட்ட வேண்டும். சொந்தப் பிரச்சினையாக இருந்தாலும், ஹீரோ அதில் இறங்க ஒரு நிமிடமாவது யோசிக்க வேண்டும்.

// ஹீரோ தீவிரவாதியை போலீஸில் ஒப்படைக்கிறான். ஆனாலும் ஹீரோ போலீஸை முழுக்க நம்பவில்லை. //

6. Break Inti Act-2 (ப்ளாட் பாயிண்ட்):

இயல்பான பழைய உலகத்தை விட்டு, புது உலகத்திற்குள் ஹீரோ நுழையும் நேரம் இது. அந்த முடிவை ஹீரோவே எடுப்பது தான் நன்றாக எடுபடும். (எச்சரிக்கை: சில கதைகளில் மிட் பாயிண்ட்டில் தான் இந்த ப்ளாட் பாயிண்ட் வரும். அதுவரை ஹீரோவை பிரச்சினைக்கு உள்ளே இழுக்கும் விஷயங்கள் தான் நடக்கும்.)

//தீவிரவாதி தப்பிக்கிறான். ஹீரோ அவனைக் கடத்தி தன் கஸ்டடியில் வைக்கிறான்.//

7. பி ஸ்டோரி:

பெரும்பாலும் காதல் கதை. 4,5,6வது பீட்ஸ் கொஞ்சம் டென்சனாகவே போய்விட்டதால் ஆடியன்ஸைக் கொஞ்சம் ரிலாக்ஸ் செய்யும் இடம் இது. (தமிழில் இந்த பி ஸ்டோரி படம் முழுக்க விரவி வரும்!)

//ஹீரோயினைப் பெண் பார்க்க ஹீரோ போனான். அதில் ஏதோ பிரச்சினை. ஹீரோயின் பின்னால் ஹீரோ அலைகிறான் அல்லது தலைகீழாகவும் இருக்கலாம்//


8. Fun & Games:

ஹீரோவுக்கும் வில்லனுக்கும் இடையே நடக்கும் மோதல். இதை ஏன் கேம் என்கிறோம் என்றால், ஹீரோ நினைத்தால் இதிலிருந்து பின்வாங்கிவிட முடியும்; இன்னும் நிலைமை மோசம் ஆகிவிடவில்லை. மேலும், இதில் காமெடி சீன்களையும் வைக்கலாம்.

// ஹீரோ 12 ஸ்லீப்பர் செல்களை ஒரே நேரத்தில் போட்டுத்தள்ளும் ஹை-கான்செப்ட் //

9. Mid Point:

ஹீரோ வில்லனுக்கு எதிராக ஏதோ செய்து தற்காலிக வெற்றி அடைந்திருக்கிறான். இப்போது வில்லன் ஹீரோ மேல் கடும் கோபத்தில் இருப்பான். எனவே ஹீரோ இனி ஒதுங்கினாலும், வில்லன் விட மாட்டான். சமாதானத்திற்கான எல்லா வழிகளும் அடையும் இடம் இது.

// ஹீரோவும் வில்லனும் சவால் விட்டு பேசிக்கொள்ளுதல்...ஐ ஆம் வெயிட்டிங்! //

10. Bad Guys Close In:
Bad Guys என்பது கெட்ட ஆட்களாக மட்டுமின்றி கெட்ட சம்பவமாகவும் இருக்கலாம். வில்லன் அல்லது விதி தன் பதிலடியை ஆரம்பிக்கும் இடம் இது. பெரும்பாலும் ஹீரோவைச் சுற்றி இருப்போருக்கு ஏற்படும் பாதிப்பு இங்கே காட்டப்படும். அது ஹீரோவுக்கு ஒரு வார்னிங்காக அமையும். ஆனாலும் ஹீரோவை ஆல் இஸ் லாஸ்ட்டை நோக்கி, இதில் வரும் சம்பவங்கள் தள்ளும்.

// வில்லன் ஏதோ ஒரு க்ளூ மூலம், ஹீரோவின் நண்பர்களை கண்டுபிடித்தல்..ஹீரோ அதைத் தடுக்க முடியாமல் திணறுதல். //

11. All is Lost:

ஹீரோவுக்கு சாதகமான எல்லா அம்சங்களும் கைநழுவிப் போன சுழ்நிலை. மிட் பாயிண்ட்டிற்கு நேரெதிரான இடம் இது. இங்கே வில்லனுக்கு வெற்றி. இது ஒரு நிமிடமாகக்கூட இருக்கலாம்.

// வில்லன் ஹீரோவின் ஒரு நண்பனைக் கொல்கிறான். தான் சொல்வதைக் கேட்கவில்லை என்றால் அனைவரையும் கொல்வேன் என்கிறான். ஹீரோ அடிபணிதல் //

12. Dark Night of the Soul:
All is Lost ஹீரோவுக்கு கொடுத்த விளைவு & ஃபீலிங் என்ன என்று காட்டும் இடம். மிகவும் மோசமான நிலையில் ஹீரோ இருக்க வேண்டும், இனி என்ன செய்வான் என்று ஆடியன்ஸும் சேர்ந்து ஃபீல் செய்தால், வெற்றி நமதே!

// ஹீரோ வில்லன் சொல்லும் இடத்திற்கு வர ஒப்புக்கொள்கிறான்.//

13. Break Into Act-3:

ஹீரோவுக்கு ஒரு ஐடியா கிடைக்கிறது. அது ஏற்கனவே வந்த ஆக்ட்-1 & ஆக்ட்-2 சம்பவங்களில் இருந்து வந்தால் நம்பும்படியாகவும் எஃபக்ட்டாகவும் நட்டு வச்ச ரோஜாச் செடியாகவும் இருக்கும். 

// ஹீரோ ஆர்மியில் இருக்கும் ஏதோ ஒரு குரூப்பின் உதவியை நாடுகிறான். அவர்கள் ஹீரோவைவிட பவர்ஃபுல்லாக இருந்தால், ஹீரோ கேரக்டர் அடிவாங்கி விடும். எனவே.........யோசிக்க வேண்டும்! //

14. Finale:
ஹீரோ தன் பதிலடியை புத்திசாலித்தனமாகத் தரும் இடம் இது. இனியும் வில்லனை விட்டுவைக்காமல், ஹீரோ ஒழித்துக்கட்டும் நேரம் இது. வில்லன் இல்லாத படங்களில் ஈகோ போன்ற மோசமான குணம் அல்லது கெட்ட சூழ்நிலையை விட்டு ஒழிப்பது நடக்கும்.

//ஹீரோ புதிதாகக் கிடைத்த ஐடியாவின்படியும் கதைச்சுருக்கத்தில் முடிவு செய்திருந்தபடியும் தன்னையே தியாகம் செய்ய தயாராகிறான். ஆனாலும் அட்வென்ச்சர் ஹீரோ என்பதால், ஜெயிக்க வேண்டும். தன் புத்திசாலித்தனத்தால் ஜெயிக்கிறான். (ஜெனரின் உபயோகம் இது தான்!!) //

15. Final Image:
முதல் ஓப்பனிங் சீனிற்கு நேரெதிர் சீன். குணச்சித்திர வளைவு கொண்ட கதை என்றால், ஹீரோவின் மனமாற்றத்தை இந்த சீன் காட்ட வேண்டும்.

//அதே ரயில்வே ஸ்டேசன்...ஹீரோ லீவ் முடிந்து ஊருக்கு கிளம்புகிறான்.//

-----------------------------------------------------------------------------------------------------------------------------------

மேலே உள்ள பீட் ஷீட்டைக் கவனித்தால், சில பீட்களுக்கு சீனே உருவாகவில்லை என்று தெரியும். அவற்றை எல்லாம் இனிமேல் தான் உருவாக்க வேண்டும். சத்யன் கேரக்டரோ, ஜெயராம் கேரக்டரோ மேலே உருவாகவே இல்லை என்பதைக் கவனியுங்கள். ஹீரோயின் கேரக்டரும் அவர்களுக்கு இடையே என்ன பிரச்சினை என்பதும் இன்னும் தெளிவாகவில்லை. ஆனாலும் கதைச்சுருக்கம், பெரும்பாலான பீட்ஸை சரியாகத் தொட்டு நிற்கிறது.

உங்கள் கதையையும் இப்படி பீட் ஷீட்டில் போட்டுப்பாருங்கள். ஒரு திரைக்கதை வடிவத்திற்குத் தேவையான ஏற்ற, இறக்கங்களுடன் ப்ளேக் ஸ்னிடர் சொன்ன தாள லயத்துடன் இருக்கிறதா என்று பாருங்கள். எல்லா பீட்ஸும் இல்லாவிட்டாலும், பெரும்பாலும் இருக்க வேண்டியது அவசியம். ஒன்றிரண்டு மிஸ் ஆகலாம். ஆனாலும் அதையும் சேர்க்க முடியுமா என்று பாருங்கள். அதையும் சேர்த்துவிட்டீர்கள் என்றால், இதில் இருந்து குறைந்தது 30 சீன்களாவது உருவாக்க முடியும்.

அப்படியென்றால் மீதி?

சீன்கள் எழுதுவது எப்படி என்பதை அடுத்த பகுதியில் பார்ப்போம்.

(தொடரும்)



மேலும் வாசிக்க... "திரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 60"
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

0 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.

Wednesday, October 14, 2015

திரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 59


59. திரைக்கதை எழுதாமல் இருப்பது எப்படி?


கதைச் சுருக்கம் எனும் சினாப்ஸிஸ் எழுதிவிட்டீர்கள். இப்போது திரைக்கதை எழுத கை பரபரக்கும். " FADE IN....SCENE 1: INT.BEDROOM-NIGHT (!) " என்று எழுதிவிடலாமா? என்று மனது ஆசையைத் தூண்டும்..பலரும் செய்யும் அதே தவறைச் செய்யாதீர்கள்..கண்ட்ரோல்!

கதையை யோசித்தபோதே பல நல்ல சீன்கள் தோன்றியிருக்கும். உலக சினிமாவிலேயே வராத ஒரு கிளைமாக்ஸ்கூட சிக்கியிருக்கலாம்..செட்டப்பில் ஹாலிவுட்டிற்கு சவால் விடும் ரேஸ் சீன் வேறு. ’இதை எழுதாமல் இருப்பதா? உடனே எழுத ஆரம்பி’ என்று உள்மனது சொல்லும். ஆனாலும் நீங்கள் திரைக்கதை எழுத ஆரம்பிக்ககூடாது.

'Notes' என்ற பெயரில் ஒரு வேர்டு ஃபைல் ஓப்பன் செய்து, அதில் இந்த சீன்களை ஒரு வரி குறிப்பாக எழுதி வையுங்கள். உதாரணமாக 'ஹீரோயின் குதவளையை ஹீரோ கடிக்கிறான்' என்றோ 'மாமியார் தலையில் கல்லைப்போட்ட மருமகன்' என்றோ எழுதிக்கொள்ளுங்கள். அதன் டீடெய்ல் கண்றாவி நமக்கு மட்டும் புரிந்தால் போதும். ஒரு நினைவுக்குக் குறிப்பாக இவை இருக்கட்டும். இந்த சீன்கள் தானாகவே உங்கள் மனதில் பலமுறை ஓடும். இப்படி எழுதி வைத்தால், ஓட்டம் கொஞ்சம் மட்டுப்படும்!

ஏன் திரைக்கதை எழுதக்கூடாது?

நான் என் வலைப்பூவிற்காக சென்ற வாரம் ஒரு பதிவு எழுதினேன், 'வருமானவரியும் அயோக்கியர்களும்' என்று. வருமானவரி என்பதே எப்படிப்பட்ட அயோக்கியத்தனம், அது மிடில் கிளாஸ் மக்களை எப்படியெல்லாம் ஏமாற்றி, நசுக்கிறது என்பது கான்செப்ட். பொருளாதாரப் போராளியாக ஆறு பக்கங்களுக்கு மேல் பொங்கியபோது, புஸ்ஸ்க்! லேப்டாப் ஆஃப் ஆகிவிட்டது. லேப்டாப்பில் பவர் குறைந்ததைக்கூட கவனிக்காமல், பொங்கிக்கொண்டிருந்திருக்கிறேன். அய்யகோ, எழுதியதை 'சேவ்' பண்ணவும் இல்லை!

கோபம், ஏமாற்றம், ஆத்திரம், ரௌத்திரம், கவலை, கண்ணீர் என எல்லாமும் ஒருசேரத் தாக்க, ஓ!!!! அத்தனையும் மறுபடியும் எழுத வேண்டும் என்றால், ரொம்ப ரொம்பக் கஷ்டம். அதே போன்ற வாக்கியங்கள் அமையும் என்று கூடச் சொல்ல முடியாது. கதை, கட்டுரை எழுதும் எல்லோருமே இந்த அசம்பாவிதத்தை அனுபவித்திருப்பீர்கள். 'திரும்ப எழுதுவது' என்பதைவிடக் கொடுமையான விஷயம் வேறு இல்லை. அதே போன்ற இன்னொரு கொடுமையான விஷயம், திருத்தி எழுதுவது.

எழுதி முடித்ததில் ஒரு எழுத்தை மாற்ற வேண்டும் என்றாலும், உள்ளே இருக்கும் இலக்கியவாதிக்கு கடும் கோபமும் ஆற்றாமையும் வந்துவிடும். எழுதியதின் மேல் ஒரு பிடிப்பு நமக்கு வந்துவிடுகிறது. அதனால் தான் 'Rewrite is pain' என்று எல்லா திரைக்கதைப் புத்தகங்களும் சொல்கின்றன. 'நல்லாத் தானே இருக்கு? ஏன் மாற்றி எழுதணும்?' எனும் கேள்வி உள்ளிருந்து எழுந்து, நம்மை சோர்வடைய வைக்கும். முதன் முதலாக திரைக்கதை எழுதுவோர், தாண்டியாக வேண்டிய தடை இது. சில திரைக்கதைகள் எழுதியபின்பே, இந்த பிடிப்பு போகும்.

திரும்ப எழுதுதல் மட்டும் பிரச்சினை அல்ல. திரைக்கதை என்பது ஹீரோ கேரக்டர், கேடலிஸ்ட், ஹை கான்செப்ட் என பல செங்கற்கள் கொண்டு கட்டப்படும் கட்டடம். இரண்டாவது சீனில் வருகின்ற ஒரு விஷயம், 52வது சீனில் பாதிப்பை ஏற்படுத்தலாம். ஹீரோயினுக்கு இருக்கும் ஒரு குறை அல்லது திறமை, கிளைமாக்ஸிற்குக் காரணம் ஆகலாம். இந்த வகையான 'நட்டு வச்ச ரோஜாச்செடிகள்' பற்றிய தெளிவான ஐடியா நமக்கு இருக்க வேண்டும். இல்லையென்றால், முக்கியமான ஒரே ஒரு செங்கலை திரும்ப எழுதும்போது உருவினால், திரைக்கதை மொத்தமும் விழுந்துவிடும்.

தயாரிப்பாளர் திடீரென 'அந்த 52வது சீன் வேண்டாம்ப்பா' என்று சொன்னால், 'அது இரண்டாவது சீனின் பே-ஆஃப்' என்று சொல்லி அவரை கன்வின்ஸ் செய்ய வேண்டிருக்கும். அல்லது 52 மட்டுமல்லாது 2வது சீனையும் மாற்ற வேண்டும். அதில் கோட்டை விட்டால், படம் பார்க்கும் ஆடியன்ஸ் எளிதில் கண்டுபிடித்துவிடுவார்கள். 'லாஜிக் இல்லாத அரைவேக்காட்டுப் படம்' என்று மொத்த படத்தையும் அவர்கள் ஒதுக்கிவிடலாம்.

எனவே மனம் போன போக்கில், முதலிலேயே திரைக்கதையை எழுதிக்கொண்டு போனால் பெரும் சுழலில் சிக்கியது போல் ஆகும். ஏதாவது ஒரு மாறுதல் செய்ய வேண்டும் என்றால் பெரும் தலைவலியாகப் போய்விடும். "ஆக்ட்-2 மட்டும் சரியில்லாமல் இருக்கு. அதை மட்டும் மாத்திட்டேன்னா...' என்று சொல்லிக்கொண்டு, வருடக்கணக்கில் அதே ஸ்க்ரிப்ட்டுடன் மல்லுக்கட்ட வேண்டியிருக்கும்.

கதைச்சுருக்கம் மற்றும் ஆக்ட் ப்ரேக்கில் தெளிவு தான் முதல் தேவை. அடுத்து குறைந்தது 40 சீன்கள் பற்றிய தெளிவான ஐடியா கிடைக்க வேண்டும். அதுவரை பொறுமை!

எனவே, இப்போது திரைக்கதை எழுதாதீர்கள். நீங்கள் கண்டிப்பாக பின்பற்ற வேண்டிய ஆர்டர் இது:

  • ஒன்லைன் /ஹை கான்செப்ட்
  • கதைச்சுருக்கம்
  • பீட் ஷீட்
  • சீன் போர்டு
  • ஒன்லைன் ஆர்டர் / சீன் ஆர்டர்
  • திரைக்கதை - Rough Draft
  • திரைக்கதை - First Draft
  • திரைக்கதை - Rewrite (!)
  • திரைக்கதை - ஃபைனல்

இந்த ஒவ்வொரு ஸ்டெப்களிலும் போதுமான நேரம் எடுத்துக்கொள்ளுங்கள். கதைச் சுருக்கம் எழுதிவிட்டீர்கள், இல்லையா? அதை மீண்டும் கையில் எடுங்கள்.

இந்த தொடரின் முதல் பாகத்தில் பல அடிப்படை விஷயங்களைப் பார்த்தோம். கதை நாயகன், குறிக்கோள், வில்லன், லாஜிக், குணச்சித்திர வளைவு என எல்லாவற்றையும் உங்கள் கதைச் சுருக்கத்துடன் ஒப்பிட்டுப் பாருங்கள். புதிதாகத் தோன்றும் விஷயங்களை குறித்து வைக்கவும். அதற்கேற்ப மீண்டும் கதைச்சுருக்கத்தை திருத்தி எழுதுங்கள். அடிப்படையில் கதை வலுவாக இருக்கிறது எனும் நம்பிக்கை வந்த பின்பு அடுத்த ஸ்டெப்பிற்கு நகரலாம்.
-----------------------------

சினாப்ஸிஸ் என்ன ஃபார்மேட்டில் இருக்க வேண்டும் என்று நண்பர் ஒருவர் கேட்டிருந்தார். அது பற்றி...

சினாப்ஸிஸ் என்பது வேலைக்காக நீங்கள் அனுப்பும் ரெசியூம் போன்றது. அது நன்றாக இருந்தால் தான் இண்டர்வியூவிற்கு அழைப்பு வருவது போல், ‘ஸ்க்ரிப்ட் அனுப்புங்க’ எனும் செய்தி வரும். இப்போதெல்லாம் பெரும்பாலான கம்பெனிகள் இதைக் கேட்க ஆரம்பித்துவிட்டார்கள். முழு திரைக்கதை கேட்டு நேரத்தை வீணாக்குவதைவிட, இது பெட்டர் என்று நினைக்கிறார்கள். எனவே புரடியூசரைக் கவர்வது எப்படி எனும் நோக்கத்துடன் சினாப்ஸிஸ் எழுதப்பட வேண்டியது அவசியம்.

அதில் கீழ்க்கண்ட விஷயங்கள் இருப்பது அவசியம்:

1. தலைப்பு : படத்தின் தலைப்பையும் Synopsis By என்று உங்கள் பெயரையும் போட்டுக்கொள்ளுங்கள்.

2. அறிமுகம் : இது என்ன வகை ஜெனர், என்ன மாதிரியான கதை என்று ஓரிரு வரிகளில் சொல்லுங்கள்.

3. லாக் லைன் / ஒன் லைனர் : உங்கள் கதையின் ஒன் லைனை முடிந்தவரை சுருக்கமாக, நான்கு வரிகளுக்குள் இங்கே எழுதுங்கள். அடுத்து என்ன எனும் ஆர்வத்தை இது தூண்ட வேண்டியது அவசியம். http://sengovi.blogspot.com/2014/06/4.html (இந்த பகுதியில் இது பற்றி விரிவாக எழுதியிருக்கிறேன்.)

4.  கதை : ஹீரோ யார் என்பது பற்றிய சுருக்கத்துடன் ஆரம்பியுங்கள். அதில் இருந்து செட்டப் பற்றி சுருக்கமான விவரிப்பைக் கொடுத்து, கேட்டலிஸ்ட்/கீ இன்சிடெண்ட்டில் முடியுங்கள். கீ இன்சிடெண்ட்டைக் கொஞ்சம் விவரமாகச் சொல்லலாம். (ஆக்ட்-1)

சென்ற பகுதியில் பார்த்தது போல் பிரச்சினையையும் அதன் விளைவையும் சொல்லுங்கள். (ஆக்ட்-2)

ஹீரோ ஏன் அதைத் தீர்த்தே ஆக வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகிறான் என்று சொல்லுங்கள். (மிட் பாயிண்ட்)

எப்படி ஹீரோ அந்த பிரச்சினையைத் தீர்த்து வெளியே வருகிறான் என்று கூடுதல் விவரங்களுடன் சொல்லுங்கள். (ஆக்ட்-3)

இதில் ஹை-கான்செப்ட்டையும் சொல்ல வேண்டியது அவசியம். அது தான் உங்கள் கதையை புதுமையாக காட்டும்.
மிகவும் தேவைப்பட்டால் ஒழிய, வ்சனங்களை இதில் சொல்லாதீர்கள்.

கதையை படர்க்கை-ஒருமை (அதாங்க..Third Person Singular!)-ல் சொல்லுங்கள்.

இதைப் படித்தால், ‘நல்ல கான்செப்ட்..ஸ்க்ரிப்ட்டில் எப்படி எழுதியிருப்பார்’ என்று படிப்பவர் யோசிக்க வேண்டும். அப்படி இது இருக்கிறதா என்று பார்த்துக்கொள்ளுங்கள். ஏற்கனவே சொன்னபடி, திரைக்கதை எழுதி முடித்தபின் தான் கதைச் சுருக்கத்தை சரியாக எழுத முடியும். எனவே இப்போது ஒரு ஆரம்ப நிலை கதைச் சுருக்கமாக வைத்துக்கொள்ளுங்கள்.

(தொடரும்)


மேலும் வாசிக்க... "திரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 59"
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

0 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.

Sunday, October 11, 2015

திரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 58


பகுதி 58 : திரைக்கதைக்காக ஒரு கதை

’புக் படிச்சா, திரைக்கதை எழுதிடலாமா? ஏன்யா இப்படி ஊரை ஏமாத்துறீங்க?’
- உலகத்தில் யார் திரைக்கதை பற்றி எழுதினாலும், இப்படி ஒரு புத்திசாலித்தனமான கேள்வியை எதிர்கொள்ளாமல் தப்பிக்க முடியாது; நான் உட்பட. அறியாமையால் எழுகிற, நியாயமான கேள்வி அது.


அந்தக் கேள்வியின் பொருள், கதை எழுதுவதை எப்படி சொல்லித் தர முடியும் என்பதே! கதை எழுதுவது என்பது முழுக்க, முழுக்க படைப்புத்திறன் சார்ந்த, கற்பனையும் சிந்தனையும் கலந்த ஒரு காரியம். ஒரு சூழ்நிலையில் எப்படி சிந்தித்து, கதையை எந்தத் திசையில் திருப்ப வேண்டும் என்று எப்படி சொல்லித் தருவது இயலாத காரியம்.

தமிழில் சுஜாதா, ஜெயமோகன் போன்றோர் இதுபற்றி கொஞ்சம் எழுதியிருக்கிறார்கள். ஆங்கிலத்தில் நூல்களே கிடைக்கின்றன. எல்லோரும் கதை வடிவம் என்பதைத் தான் விவரிப்பார்களே ஒழிய, கதையை ‘எழுதுவது’ என்பதற்குள் ஓரளவுக்கு மேல் போக மாட்டார்கள்.
ஒரு தற்கொலை நிகழ்கிறது. இந்த ஒரு சம்பவத்தை நீங்கள் எப்படி வேண்டுமானாலும் வளர்த்தெடுக்கலாம். தற்கொலையின் காரணம் பற்றிய த்ரில்லராக கொண்டு செல்லலாம். அல்லது, தற்கொலையால் ஏற்படும் இழப்பு பற்றிய செண்டிமெண்ட் டிராமாவாக கொண்டு செல்லலாம். அல்லது, மரணம் என்றால் என்ன என்று தத்துவத்தில் மூழ்கலாம். இது எல்லாமே உங்களில் சிந்திக்கும் திறன் சார்ந்த விஷயம். 

சிந்திக்கும் திறன் என்பது நீங்கள் வளர்ந்த சூழல், வாழ்க்கை அனுபவங்கள், கல்வி(பள்ளி/கல்லூரிக்கல்வி அல்ல!) போன்ற விஷயங்களால் உருவாகி வருவது. எனவே நீங்கள் யோசிப்பது போல் நானும், என்னைப் போல் நீங்களும் யோசித்துவிட முடியாது.
எனவே தான் ஒரே ஒன்லைனைக் கொண்டு பல படங்கள் வருகின்றன. சென்ற கட்டுரையில் சொன்னபடி, நீங்களும் சில ஒன்லைன்களை எழுதியிருப்பீர்கள். அவை போன்ற கதைகள் ஏற்கனவே வந்திருக்கும். கவலை வேண்டாம், யாரும் சொல்லாத கதை என்று இங்கே ஏதுமில்லை. யாரும் சொல்லாத முறை தான் இன்னும் இங்கே உண்டு,அது தான் திரைக்கதை!
ஒரு கதையை சிறுகதையாகவோ, குறுநாவலாகவோ அல்லது நாவலாகவோ எழுதும் சுதந்திரம் கதாசிரியருக்கு உண்டு. ஹீரோவின் பிறப்பு முதல் இன்றைய நிலைவரை நூறு பக்கங்களுக்கு விவரித்துவிட்டு, பிறகு நிதானமாக மேட்டருக்கு வரலாம். நாவல் நன்றாக இருந்தால், இருநூறு பேர் படிப்பார்கள். இல்லையென்றால், நூறு பேர் படிப்பார்கள். பெரிய நட்டமில்லை! எனவே நம் இஷ்டம் தான். 

பக்கங்களை மாற்றி, மாற்றி வைத்து பைண்டிங் செய்து வெளியிட்டால், பின்நவீனத்துவம் என்று நம்பிவிடுவார்கள். ’கிறுக்குப்பய’ என்று சொல்லவே அஞ்சுவார்கள், தானும் அறிவுஜீவி முகமூடியுடன் ‘இதெல்லாம் ஈஸியா புரியாது. மறுபடி படிங்க, புது உலகம் விரியும்’ என்று மிரட்டுவார்கள். கதை எனும் வடிவத்தில் இப்படி பல அனுகூலங்கள் உண்டு. வணிக சினிமாவில் அதற்கு இடமே கிடையாது, குப்பை என்றால் குப்பை தான். 


’கதை எழுதுவதெல்லாம் தவம் மாதிரி’ என்று கேள்விப்பட்டே வளர்ந்த மனிதர்களுக்கு, ’திடீரென திரைக்கதை எழுதுவது எப்படி?’ எனும் தலைப்பே அதிர்ச்சியைக் கொடுக்கும். 

திரைக்கதை என்பது திரைவடிவத்திற்கு கதையை மாற்றுவது. எனவே திரைக்கதை எழுதுவது எப்படி என்பது கதையை எப்படி திரைவடிவத்திற்குள் கொண்டு வரலாம் என்று தான் சொல்கிறதே ஒழிய, கதை எழுதுவது எப்படி என்று அல்ல! உங்களுக்கு கதை எழுதுவதற்கான கற்பனாசக்தி இல்லையென்றால், இந்தத் தொடர் படித்து நீங்கள் கதை எழுத முடியாது. ஆனால் நல்ல ஒரு கதையை வாங்கி, அதை திரைக்கதையாக மாற்ற இத்தகைய தொடர்களும் புத்தகங்களும் உதவும்.
ஒரு கதையை 600 பக்கங்களுக்குக்கூட நீங்கள் எழுதலாம். ஆனால் திரைக்கதை 120 பக்கங்களுக்கு மேல் போனால், தயாரிப்பாளர் யோசிப்பார். திரைக்கதை பேப்பரிலேயே இருக்க வேண்டியது தான். எனவே ஒன்லைனுக்கு அடுத்த நிலையான, கதை எழுதுவது எப்படி என்று எதுவும் இங்கே சொல்லப்போவது இல்லை. ஆனால் நீங்கள் எழுதிய கதை, திரைக்கதைக்கு ஏற்றதா என்று தெரிந்துகொள்ள, இதில் வந்த/வருகின்ற விஷயங்கள் உதவும்.


சென்ற பகுதியில் பார்த்த ஒன்லைன்கள் உங்கள் மனதிற்குள் சில காலம் ஓடிக்கொண்டே இருக்கட்டும். அதில் சில மட்டும், கதையாக உருப்பெறும். ஒருவேளை உங்களிடம் ஒன்லைனுக்குப் பதிலாக, ஒரு கதையே திடீரென தோன்றியிருக்கலாம். அந்தக் கதையில் நான்கு விஷயங்கள் இருக்கிறதா என்று மட்டும் பாருங்கள்:
1. ஹீரோ அல்லது ஹீரோயின் : சுருக்கமாக கதையின் நாயகர். ’யார் அவன், என்ன வேலை செய்கிறான், எப்படிப்பட்டவன், குடும்பச் சூழல் என்ன?’ போன்ற அடிப்படை
விஷயங்கள் உங்கள் கதையில் இருக்கிறதா என்று பார்த்துக்கொள்ளுங்கள்.
2. பிரச்சினை: அப்படி இயல்பாக இருக்கும் அவன் வாழ்வில், ஏதோவொரு பிரச்சினை வருகிறது. அது என்ன?

3. விளைவு: அந்தப் பிரச்சினை ஹீரோவை எப்படிப் பாதிக்கிறது? அதற்கு அவனது ரியாக்சன் என்ன?

4. ஆபத்து : அந்த பிரச்சினையை தீர்க்கவில்லையென்றால், என்ன ஆகும்?

5. முடிவு : பிரச்சினை எப்படித் தீர்கிறது? கதையின் முடிவு என்ன?


உங்கள் கதை நான்கு பக்கமாகவும் இருக்கலாம் அல்லது நானூறு பக்கங்களாகவும் இருக்கலாம்.அதில் இந்த ஐந்து விஷயங்கள் இல்லையன்றால், கதையை மாற்றுங்கள். கதையே உங்களிடம் இல்லை, ஒன்லைன் தான் இருக்கிறது என்றால் இன்னும் நல்லது.


ஒன்லைனில் ஒரு கேரக்டர்(#1) உங்களுக்கு தோன்றியிருக்கலாம். அதற்கு ஒரு பிரச்சினையை உண்டாக்குங்கள். அல்லது, ஒரு பிரச்சினை சிக்கியிருக்கலாம். அதற்கு ஏற்ற ஒரு கேரக்டரை உண்டாக்குங்கள். சிலர் அதிசயமாக கிளைமாக்ஸில் இருந்து, ரிவர்ஸில் கதையை உண்டாக்குவர். இந்த ஐந்து புள்ளிகளில், ஒன்றில் இருந்து மற்றவற்றை யோசித்துப் பிடித்துவிடலாம்.


ஒன்லைனுக்கு அடுத்த படியாக, நீங்கள் எழுதிவைக்க வேண்டிய அடுத்த விஷயம் : கதைச் சுருக்கம் எனப்படும் சினாப்ஸிஸ்.
ஒரு பக்கம் முதல் நான்கு பக்கங்களுக்குள் இது எழுதப்பட வேண்டும். சீன்களோ, வசனங்களோ அவசியமில்லை. மேலே குறிப்பிட்ட ஐந்து விஷயங்களை சற்று விவரித்து எழுதினாலே போதும். இது மறைமுகமாக திரைக்கதை வடிவத்தைச் சொல்லும். அதாவது,
ஆக்ட்-1 - செட்டப் : ஹீரோவும் அவன் சுற்றுச்சூழலும் (#1)

கேட்டலிஸ்ட்/கீ இன்சிடெண்ட்: ஹீரோவின் இயல்பு வாழ்வைக் கலைத்துப்போடும் ஒரு சம்பவமும், வில்லனும் (#2)

ஆக்ட்-2: அந்த சம்பவம், ஹீரோவையும் சுற்றி இருப்போரையும் எப்படிப் பாதிக்கிறது?

மிட் பாயிண்ட் : ’பிரச்சினையைத் தீர்த்தே ஆகவேண்டும். வேறு வழியே இல்லை, இனி அதைத் தீர்க்காமல் பழைய வாழ்க்கைக்கு திரும்பிப்போக முடியாது’ எனும் நிலை ஏற்படுவது. (#4)

ஆக்ட்-3: முடிவு : பிரச்சினை எப்படி தீர்க்கப்படுகிறது? கிளைமாக்ஸ். (#5)
ஐந்து புள்ளிகளை வைத்து, கதை எனும் அழகான ஒரு கோலத்தைப் போடுங்கள்.

இந்த ஐந்து விஷயங்களில் எப்போது வேண்டுமானாலும் மாற்றம் செய்துகொள்ளலாம். திரைக்கதையில் சுவாரஸ்யத்தைக் கூட்டும் விஷயம், முரண்பாடு தான்.

ஒரு பிரச்சினையில் ஹீரோ சிக்குகிறான் என்றால், அந்தப் பிரச்சினையும் ஹீரோ யார் என்பதும் முரண்பாட்டையும் சிக்கலையும் கூட்டுவதாக இருக்க வேண்டும். போலீஸ் உடன் ஒரு பிரச்சினையில் சிக்கும் இளைஞன், போலீஸ் வேலையில் சேர வேண்டும் எனும் கனவுடன் இருப்பவன் (தில்) - எனும் உதாரணத்தை முன்பே பார்த்திருக்கிறோம்.

மேலே உள்ள ஐந்து அடிப்படை விஷயங்களும், முடிந்தவரை ஒன்றுடன் ஒன்று முரண்பட்டு நிற்க வேண்டும். அது தான் அடுத்து என்ன எனும் சுவாரஸ்யத்தைக் கொடுக்கும்.

ஒரு அழகான, வசதியான ஹீரோவுக்கு அழகான, வசதியான ஹீரோ மேல் காதல் என்பதில் என்ன சுவாரஸ்யம் வந்துவிட முடியும்? ஒரு கிராமத்து அப்பாவி அல்லது இருவருக்கும் குணநலன் வெவ்வேறு என்று ஆக்கும்போது தான், கதை சுவராஸ்யம் ஆகும். 'மோதல்..பிறகு காதல் - என்னய்யா இது, இதே கதை தானா?' என்று படங்களுக்கு வரும் விமர்சனத்தை நம்பாதீர்கள். மோதல்/முரண்பாடு இல்லாமல் ஒரு கதையை அவர்களிடம் சொன்னால், அவர்களே 'ஒன்னும் சுவாரஸ்யமா இல்லையே!' என்பார்கள்.


இப்போது ஒரு ஒன்லைனை எடுத்துக்கொள்வோம்:

'தீவிரவாதிகள் நாட்டில் குண்டுவைக்கிறார்கள். ஹீரோ அதை தடுத்து நிறுத்தி, அவர்களை அழிக்கிறான்.'



விஜயகாந்த், அர்ஜூன் என பலரும் அடித்துத் துவைத்த ஒன்லைன் தான். பரவாயில்லை, இருக்கட்டும்.

1. ஹீரோ : சாமானியன் அல்லது போலீஸ். எது சரியாக இருக்கும்? நாம் அட்வென்ச்சர் கதையையே எடுத்துக்கொள்வோம். எனவே, ஹீரோ ஒரு போலீஸ்.

2. தீவிரவாதிகள் குண்டு வைக்கிறார்கள். வைக்கிறார்களா? வைக்கப் போகிறார்களா? முதலில் சிறியதாக ஒன்று வைக்கிறார்கள். ஹீரோவுக்கு தெரிய வருகிறது. பெரிய அளவில் குண்டுகள் வைக்கும் முன் தடுக்க வேண்டும். ம்ஹூம்..எதற்கு சிறியதாக வைக்க வேண்டும்? டெஸ்ட் பண்ணிப் பார்க்கவா? அப்படிப் பார்த்தால், போலீஸிற்கு தெரிந்துவிடாதா?..ஓகே, தவறுதலாக குண்டு வெடிக்கிறது. அது ஹீரோவின் கவனத்திற்கு வருகிறது. பெரிய அளவில் குண்டு வெடிக்கும் முன், ஹீரோ தடுத்து நிறுத்த வேண்டும். அந்த கும்பலையும் பிடிக்க வேண்டும். குறிக்கோள் சிக்கிவிட்டது.

ஹீரோ ஒரு போலீஸ். குண்டுவெடிப்பைத் தடுப்பது அவன் கடமை. இதில் என்ன முரண்பாடு? போலீஸ் உயரதிகாரிகளும் அரசியல்வாதிகளும் குண்டுவெடிப்பில் உடந்தை? ம்ஹூம்..ரொம்பப் பழசு. ஹீரோ கேரக்டரை சாமானியன்னு வைக்கலாமா? ரொம்ப சப்பையா இருக்கே? (இப்போது டேபிளில் ஓங்கிக் குத்துவது, சுவரில் நங்கு நங்கென்று முட்டுவது போன்ற செயல்களைச் செய்யவும்!!) ஆங், ஆர்மி.



போலீஸ்க்குப் பதிலாக, ராணுவ வீரன். 'தீவிரவாதிகளை அழிக்கும் ராணுவ வீரன்'. அய்யய்யோ, இது ரஜினி நடித்த ராணுவ வீரன் படத்தின் ஒன்லைன் ஆச்சே...ஙே!



ரஜினி அதில் வீ.ஆர்.எஸ்ஸில் வருவார் என்று ஞாபகம். இதில் ஹீரோ லீவில் வருவதாக வைப்போம். அதில் என்ன சுவாரஸ்யம்?

நாட்டிற்குள் ஒரு தவறு நடந்தால், அதைத் தடுத்து தண்டிக்கும் அதிகாரம் ஆர்மிமேனுக்கு கிடையாது. அவன் தப்பு செய்பவர்களைப் பிடித்து, போலீஸில் தான் ஒப்படைக்க வேண்டும். போலீஸ் அவர்களை பிரியாணி போட்டு, வழியனுப்பி வைக்கும்.



எனவே போலீஸ் உதவி இல்லாமல் ஹீரோ போராட வேண்டும். அதே சமயத்தில், இது ஒரு இல்லீகல் நடவடிக்கை. ஜெயித்தால்கூட, வெளியில் சொல்ல முடியாது. அமைதியாக இருந்தாக வேண்டும். விஷயம் வெளியில் தெரிந்தால், வேலையும் உயிரும் போகலாம். ஹீரோ உயிரைப் பணயம் வைத்து, ஒரு பிரச்சினையைத் தீர்த்து மக்களைக் காப்பாற்றுகிறான். ஆனால் அது மக்களுக்குக்கூட தெரியாது..தியாகம்..செம பாயின்ட்.

இப்போது #1.ஹீரோ பகுதியை அப்டேட் செய்துகொள்ளலாம். இனி, லீவில் வரும் மிலிட்டரி ஹீரோ - அவனுக்கு காதல் அல்லது கல்யாணம் - தீவிரவாதிகளின் திட்டம் என கதையை டெவலப் செய்துவிடலாம். ஒரு ஹை-கான்செப்ட் (ஸ்லீப்பர் செல்) மட்டும் சிக்கிவிட்டால், "துப்பாக்கி"யைப் பிடித்துவிடலாம்!

அம்புட்டுத்தேன்!

நீங்கள் என்ன ஜெனரில் திரைக்கதை எழுதப்போகிறீர்களோ, அதே போன்ற ஐந்து வெற்றிப் படங்களை எடுத்துக்கொள்ளுங்கள். மேலே சொன்ன ஐந்து விஷயங்களும் அதில் எப்படி சொல்லப்பட்டுள்ளது என்று பாருங்கள். இம்மாதிரி ஸ்டடி செய்வது, உங்கள் கதையை கூர்மையாக்க உதவும்.  (உணர்ச்சிவசப்பட்டு, அப்படியே சுட்டுவிடாதீர்கள்.!!) அந்தக் கதையில் வரும் ஐந்து அடிப்படை விஷயங்கள், ஆடியன்ஸை எப்படி ரசிக்க வைத்தது என்பதே இங்கே நீங்கள் கவனிக்க வேண்டிய விஷயம்.

இங்கே, கதை என்பது திரைக்கதை முடியும்வரை மாறிக்கொண்டே இருக்கும். பாதி திரைக்கதையை யோசித்த பின் தான், ஹீரோ ஒரு போலீஸ் என்று வைத்தது தவறு என்று தெரிய வரலாம். முதல் விஷயத்தை மாற்ற வேண்டியிருக்கும். நாம் ஏற்கனவே சொன்னபடி, திரைக்கதை எழுதுவதில் எல்லாமே டிரையல் & எரர் மெத்தட் தான். ஒரு தேர்ந்த மெக்கானிக் மாதிரி, ஐந்து பாகங்களில் எதையும் கழற்றி வீசவும், புதியதைப் பொருத்தவும் தயாராக இருங்கள்.


இப்போது நீங்கள் உடனே எழுத வேண்டியது, நான்கு பக்கங்களுக்குள் ஒரு கதைச் சுருக்கம். 
(தொடரும்)

மேலும் வாசிக்க... "திரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 58"
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

0 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.