Saturday, December 29, 2018

2018 - எனக்கு ‘மிகவும்’ பிடித்த படங்கள்


சென்ற புத்தாண்டு சபதமாக எழுதியது இது : // இந்த ஆண்டு சபதமாக, ஒரு படம் நல்ல படம் என்று உறுதியாகத் தெரிந்தால் தான் தியேட்டர் பக்கம் போவது என்று முடிவு செய்திருக்கிறேன். சிந்திய ரத்தமெல்லாம் போதும். முடிந்தவரை இந்த புத்தாண்டு சபதத்தை காப்பாற்றுவேன். ஜெய் ஜக்கம்மா! //

90% இந்த சபதத்தை நிறைவேற்றியிருக்கிறேன். சூப்பர் ஸ்டார், சுந்தர்.சி போன்ற எனக்குப் பிடித்தவர்களுக்காக பார்த்தவை மீதி 10%.

இந்த வருடம் சுமாராகவே ஆரம்பித்தது. முதல் நான்கு மாதங்களில் வந்த படங்கள் எதுவும் சொல்லும்படி இல்லை. மே மாதம் வந்த இரும்புத்திரை தான் இந்த வருடத்தின் முதல் ஹிட் மூவி. வருடத்தின் இரண்டாம்பாதியில் தான் நல்ல படங்கள் வரிசையாக வந்து நம்மை அசர வைத்தன.
பார்த்ததில் பெஸ்ட் மூவீஸ் என்று 8 படங்கள் ரிலீஸ் வரிசையில்...

1. இரும்புத்திரை :
டிஜிட்டல் இந்தியாவின் ஆபத்தை கமர்சியலாகச் சொன்ன படம். டெக்னாலஜியை வைத்து படம் செய்யும்போது, புரியா விதத்தில் சொல்லிசொதப்புபவர்களே அதிகம். ஆனால் இயக்குநர் மித்ரன் சாமானியனுக்கும் புரியும்படி எளிமையாகவும் வலிமையாகவும் திரைக்கதையை அமைத்திருந்தார். இதுவொரு விழிப்புணர்வுப் படமாகவும் ஆனது. படம் பார்த்த பலரும் மொபைல் ஃபோனில் இருக்கும் ஆபத்தை புரிந்துகொள்ள முடிந்தது. ரொம்ப வருடங்களுக்கு அப்புறம், விஷாலுக்கும் ஒரு ஹிட்.

2. நடிகையர் திலகம் :
ஜெமினி போர்சனில் சொதப்பினாலும், ஒரு நல்ல பயோபிக் படம். வெறும் புகழ்ச்சிப்படமாக இல்லாமல், ஈகோவும் மதுவும் எப்படி திறமைசாலிகளைக்கூட அழிக்கின்றன என்று விரிவாக பதிவு செய்திருந்தார்கள். கீர்த்தி சுரேஷ் ,வெறும் இமிட்டேசனாக முடிந்து போகாமல், சாவித்திரியாகவே வாழ்ந்து காட்டியிருந்தார். இப்போதும் எந்த சீனை நினைத்தாலும்,சாவித்திரி முகம் தான் நினைவுக்கு வருகிறது. கீர்த்தியின் கரியரில் பெஸ்ட் மூவியாக இது எப்போதும் இருக்கும்.

3. கடைக்குட்டி சிங்கம் :
இன்றைக்கு தமிழ் சினிமாவில் இருக்கும் அத்தனை கத்துக்குட்டி இயக்குநர்களுக்கும் பாடம், இந்தப் படம். ’ஃபேமிலிசெண்டிமெண்ட் எல்லாம் எடுபடாது ,அதெல்லாம் சீரியல் கான்செப்ட்’ என்ற மாயையை உடைத்து, குடும்பம் குடும்பமாக மக்கள் தியேட்டருக்கு வருவார்கள் என்று நிரூபித்த படம். இப்போது எல்லாருமே பெரிதாக ஏதாவது சொல்ல வேண்டும் என்று ‘ஹை-கான்செப்ட்’ தேடி அலைகிறார்கள். இயக்குநர்கள், நடிகர்கள், தயாரிப்பாளர்கள் என்று எல்லாருமே ‘பெருசா, ஆ-ன்னு அசந்து போற மாதிரி’ கதை தேடி அலைகிறார்கள். விளைவு, ஏ செண்டரில் அல்லது ஃபேஸ்புக்/ட்விட்டரில் மட்டுமே வெற்றி அடைகிறார்கள். கொரியன் படங்கள் பாதிப்பில் இந்த மண்ணிலிருந்தும் மக்களிடமிருந்தும் அந்நியப்பட்டு வரும் படங்களே இப்போது அதிகம்.

ஆனால் கடைக்குட்டி சிங்கம் ஒரு எளிமையான, இந்த மண்ணின் கதை. ‘ஹீரோ தன் அக்கா பெண்களை விட்டுவிட்டு, ஹீரோயினை காதலிக்கிறான். குடும்பம்/உறவு பிரிகிறது. அக்காக்களின் சம்மதத்தை வாங்கினானா, குடும்பம் ஒன்று சேர்ந்ததா?’ என்பது தான் கதை. இதை யாராவது புது இயக்க்குநர் வேறு தயாரிப்பாளரிடம் சொல்லியிருந்தால், ‘இதெல்லாம் கதையா?’ என்று அடித்துவிரட்டியிருப்பார்கள். இந்த கதையில் இருந்த செண்டிமெண்ட்டை சூர்யாவும் கார்த்தியும் நம்பியதாலே, மக்களுக்கு நெருக்கமான இந்தப் படம் உருவனாது; எதிர்பார்த்தபடியே ஹிட் ஆனது.

4.மேற்குத் தொடர்ச்சி மலை :
நீண்ட நாட்களுக்குப் பிறகு, தமிழில் ஒரு யதார்த்தப் படம். மலைவாழ் மக்களின் வாழ்க்கையை கொஞ்சமும் சினிமாத்தனம் இல்லாமல், நாம் அருகே இருந்து பார்ப்பது போல், அப்படியே பதிவு செய்திருந்தார்கள்.அதிசயமாக, எல்லா மீடியாக்களும் மக்களும் இந்த படத்தைக் கொண்டாடினார்கள். மேலும் நல்ல படங்கள் வருவதற்கான உத்வேகத்தைக் கொடுத்த படம்.

5. பரியேறும் பெருமாள் :
மக்கள் மீதான அன்பும் அக்கறையும் தான் ஒரு படைப்பாளிக்கான முதன்மைத் தகுதிகள். அப்படிப்பட்ட படைப்பாளியாக மாரி.செல்வராஜ் அறிமுகமான படம். இந்த மண்ணில் நிலவும் சாதிவெறியை அப்பட்டமாக, பக்கச்சார்பின்றி, நேர்மையாக பதிவு செய்த படம். எதிராளியின் மனசாட்சியையும் தட்டி எழுப்பிய கதை சொல்லும் பாணி தான் இந்த வருடத்தின் முக்கியமான படமாக பரியேறும் பெருமாள்(மேல ஒரு கோடு)-ஐ ஆக்கியது.

6.96 :
’ஜானு, ஜாணூ’ என்று மக்களை கிறுக்குப்பிடித்து அலைய வைத்த படம். ஆட்டோகிராஃபின் அப்டேட்டட் வெர்சன். விஜய் சேதுபதி கரியரில் பெரிய ஹிட் மூவி. த்ரிஷா கரியரில் பெஸ்ட் மூவி. ஹீரோ & ஹீரோயினின் நடிப்பால் மட்டுமே இத்தகைய படங்களை வெற்றிபெற வைக்க முடியும். அதை சிறப்பாக இருவரும் செய்திருந்தார்கள். அதிரடியாக எதுவும் இல்லாமல், மெல்லிய மயிலறகால் வருடுவது போன்ற படமாக்கல் மூலமே
ஜெயித்தார்கள்.

சமீபத்தில் ஒரு ஹிந்தி விமர்சகர் யூ-டியூபில் இந்தப் படம் பற்றி பேசியிருந்தார். ‘ காதல் படம் என்ற பெயரில் கண்றாவிப் படம் எடுக்கும் ஹிந்தி இயக்குநர்களுக்கு இந்தப் படம் ஒரு பாடம்.' என்று சொல்லியிருந்தார். கீழே கமெண்ட்டில் ஹிந்திவாலாக்கள் இந்தப் படத்தை தமிழிலேயே பார்த்து, கொண்டாடியிருந்தார்கள். இந்த படத்தில் இருந்த ஃபீல், மொழி தாண்டி அனைவரின் மனதையும் தொட்டிருந்தது.

(இந்தப் படம் ஒரு உதவி இயக்குநரின் கதையைத் திருடி எடுக்கப்பட்டதாக புகார் கிளம்பியது. அதில் உண்மையிருக்க 50% வாய்ப்பு இருப்பதாகவே உணர்கிறேன். பாதிக்கப்பட்டவருக்குச் சொல்வதெல்லாம் ‘இந்த உலகம் இப்படித்தான்..இதிலேயே தேங்கிவிடாமல் மீண்டு வாருங்கள்!’)

7. ராட்சசன் :

தமிழில் ஒரு முழுமையான த்ரில்லர். பதற வைத்த படம். முண்டாசுப்பட்டி போன்ற காமெடிப்படம் கொடுத்த இயக்குநரிடம் இருந்து இவ்வளவு வீரியமான படத்தை எதிர்பார்க்கவில்லை. தமிழில் இருக்கும் முக்கியமான இயக்குநர்களில் ஒருவராக, ராட்சசன் அவருக்கு ஒரு அடையாளத்தைக் கொடுத்தது. முனீஷ்காந்த்தும், விஷ்ணு விசாலும் கிறிஸ்டோபராக நடித்தவரும் குறிப்பிடத்தக்க நடிப்பைக் கொடுத்திருந்தார்கள். எளிதில் மறக்க முடியாத படம், ராட்சசன்.

8. வட சென்னை :
தியேட்டரை விட்டு வரும்போது, மிரண்டு போய் வந்தது இன்னும் நினைவிருக்கிறது. புதுப்பேட்டை படத்திற்குப் பிறகு நம்மை மிரட்டிய ஒரு கேங்ஸ்டர் மூவி. ஒவ்வொரு சீனையும் செதுக்கியிருந்தார்கள்.
தேவையில்லாத கெட்டவார்த்தைப் பிரயோகங்களும் வெற்றிமாறனின் கனவுப்படம் எனும் அதீத எதிர்பார்ப்பும்தான் நெகடிவ்.
அற்புதமான மேக்கிங், ஜிலேபியை பிய்த்துப்போட்டது போல் பிணைந்து பிரியும் திரைக்கதை, தனுஷ், ஆண்ட்ரியா,அமீர், சமுத்திரக்கனி என ஏறக்குறைய எல்லா நடிகர்களின் சிறந்த நடிப்பு என்று பல பிளஸ் பாயிண்ட்கள். மொத்தத்தில் டெக்னிகலாக மிகச் சிறந்த படம் இது. புதுப்பேட்டை மாதிரியே கால ஓட்டத்தில் கல்ட் மூவி ஆகும் வாய்ப்பு உண்டு.
மேலும் வாசிக்க... "2018 - எனக்கு ‘மிகவும்’ பிடித்த படங்கள்"
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

0 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.

2018 - எனக்குப் பிடித்த படங்கள்


சிறந்த படமாக ஆக வாய்ப்பிருந்தும், சில படங்கள் கொஞ்சம் ஸ்லிப் ஆகி நல்ல படங்களாக மட்டுமே முடிந்துவிடும். இந்த வரும் அப்படி வெளியான என்னைக் கவர்ந்த 5 படங்களின் லிஸ்ட், ரிலீஸான ஆர்டரில் :

1. டிக் டிக் டிக் :
விமர்சகர்கள் எல்லாரும் படத்தைக் கழுவி ஊற்றினாலும், பாக்ஸ் ஆபீஸீல் ஹிட் ஆன படம். பெரிதாக எதிர்ப்பார்ப்பு இல்லாவிட்டாலும், போரடிக்காத கதை சொல்லலில் ஜெயித்த படம். படத்தில் நிறைய லாஜிக் மிஸ்டேக்ஸ், யூகிக்க முடிகிற மொக்கை வில்லன் என்றெல்லாம் இருந்தும், தமிழில் புது கான்செப்ட் என்பதால் அசால்ட்டாக ஜெயித்தார்கள்.

2. அசுர வதம் :
புதிய வகை கதை சொல்லலை முயற்சித்த படம். கமர்சியலாக வெற்றி பெறாவிட்டாலும், எனக்குப் பிடித்திருந்தது. சசியும், வசுமித்ரவும் சிறந்த நடிப்பை வழங்கியிருந்தார்கள். ஆனாலும் வில்லன் கேரக்டரில் யாராவது ஹீரோ நடித்திருந்தால், திரைக்கதையில் செய்த புதுமை இன்னும் எடுபட்டிருக்கும்.

3. ப்யார் ப்ரேமம் காதல் :
கலாச்சார அதிர்ச்சி கொடுத்தாலும், இளமை பொங்க ஒரு படம். யுவனின் இசையும் ஹீரோ& ஹீரோயினின் பெர்ஃபார்மன்ஸும் குறிப்பிட்டுப் பாராட்டப்பட வேண்டியவை. மேல்தட்டு முற்போக்குக் காதல்(!) தான் படத்தின் கதைக்களமும் பலவீனமும்.ஹிந்தியில் ரீமேக் ஆகிறது என்று நினைக்கிறேன்.அங்கே ஜெயிக்க வாய்ப்பு அதிகம்.

4. கோலமாவு கோகிலா :
நயந்தாராவின் இன்னொரு சூப்பர்ஹிட் மூவி. ப்ளாக் காமெடியில் பின்னி எடுத்திருந்தார்கள். வித்தியாசமான கேரக்டர்கள், வெவ்வேறு உடல்மொழி என்று ஒவ்வொரு கேரக்டருக்கும் இயக்குநர் கொடுத்திருந்த உழைப்பு பிரம்மிக்க வைத்தது. சேகர், டோனி, சோஃபியா, சோஃபியாவின் லவ்வர், இன்ஸ்பெக்டர் என எல்லா கேரக்டருமே ரசிக்க வைத்தார்கள்.
ப்ளாக் காமெடி என்றாலே தமிழ்ப் படைப்பாளிகள் நியாய தர்மத்தை காற்றில் பறக்கவிட்டு விடுகிறார்கள். அதில் இந்தப் படமும் விதிவிலக்கல்ல!

5. கனா :
எதிர்பாராத ஒரு ஹிட் மூவி. க்ளிஷே காட்சிகளும் திரைக்கதையும் தான் படத்தின் பலவீனம். ஆனாலும், ஒரு கிராமத்துப் பெண்ணின் கனா நிறைவேறுவதை சுவாரஸ்யமாகச் சொல்லியிருந்தார்கள். ஒரு படத்தினை தனியே தாங்கிப்ப் பிடிக்கும் அளவிற்கும் அதை ஹிட் ஆக்கும் அளவிற்கும் ஐஸ்வர்யா வளர்ந்திருப்பது ஆச்சரியம் & மகிழ்ச்சி.

இந்த தலைமுறை டாப் ஸ்டார்களான விஜய் சேதுபதியும் சிவகார்த்திகேயனும் தயாரிப்பாளராகவும் அவதாரம் எடுத்து, நல்ல படங்களைக் கொடுப்பது பாராட்டுக்குறிய விஷயம். பணத்திற்காக கமர்சியல் குப்பைகளை மட்டுமே எடுக்காமல், நட்புக்காக நல்ல படங்களைத் தயாரிக்கும் குணத்தினை எவ்வளவு பாராட்டினாலும் தகும்!

6. யூ-டர்ன் :

வித்தியாசமான & சிம்பிளான படம். சமந்தாவின் நடிப்பு அட்டகாசமாக இருந்தது. த்ரில்லர் & பேய்ப்படம். பாராட்டப்பட வேண்டிய திரைக்கதை.


மேலும் வாசிக்க... "2018 - எனக்குப் பிடித்த படங்கள் "
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

1 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.

2018 - எதிர்பார்த்து ஏமாந்த படங்கள்


முன்பே சொன்னது போல், நல்ல படம் என்று தெரிந்தால் தான் தியேட்டர் பக்கம் போனேன். ஆனாலும் சில கலைஞர்கள் மேல் இருக்கும் அபிமானத்தினால் போய், இவையெல்லாம் திருப்தி இல்லாமல் திரும்பிய படங்கள் .

இந்த வருடம் வேறு எங்கும் நான் பெரிதாக சிக்கிக்கொள்ளவில்லை என்பதே பெரும் ஆறுதல். 2019-ல் இன்னும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.

1. கலகலப்பு-2 :
காமெடி என்பது கஷ்டமான விஷயம் மட்டுமல்ல, ஒவ்வொரு காலத்திலும் மாறிக்கொண்டே இருப்பது. பெரும்பாலான ப்ளாக்& ஒயிட் காமெடிகளை இன்று பார்க்கச் சகிக்காது. இப்படி மாறிக்கொண்டே இருக்கும் ஒரு விஷயத்தில் இருபது வருடங்களுக்கு மேலாக சக்ஸஸ்ஃபுல் இயக்குநராக நிலைத்திருப்பது சாதாரண விஷயமல்ல.

1995-ல் இருந்த நடிகர்கள், காமெடியன், இசையமைப்பாளர் எல்லாம் ஒதுங்கிவிட்டார்கள். ஆனால் சுந்தர்.சி இன்னும் நின்று விளையாடிக்கொண்டிருக்கிறார்.

சுந்தர்.சி கரியரில் கலகலப்பு ஒரு முக்கியமான படம். பல காட்சிகளை இன்றும் பார்த்தாலும் சிரிக்காமல் இருக்க முடியாது. பார்ட்-2ஐ கலர் கலராக பிரம்மாண்டமாக படத்தை எடுத்திருந்தும், கலகலப்பு-1ல் இருந்த எளிமையும் காமெடியும் மிஸ் ஆகி, நம்மை ரொம்பவே சோதித்தது. அஞ்சலி, ஓவியா இடத்தில் இந்தப் பட ஹீரோயின்ஸை பார்க்கவே சகிக்கவில்லை. மிர்ச்சி சிவாவும் யோகிபாபுவும் மட்டும் கொஞ்சம் காப்பாற்றினார்கள்.

இந்த வருடத்தில் முதல் ‘பார்ட்-2’ படமாக கலகலப்பு-2 வந்தது. நல்ல மாட்டுக்கு ஒரு சூடாக, அதன்பிறகு வந்த எந்தவொரு பார்ட்-2 படத்தையும் பார்க்கவில்லை! (2.0 தவிர்த்து!)

2. காலா / 2.0 :

எந்திரன் இரண்டாம்பாகமாக வந்த 2.0 படத்திற்கு, இந்த வருடத்திற்கான மோசமான திரைக்கதை விருதைக் கொடுக்கலாம். டபுள் ஹீரோ சப்ஜெக்ட் & நியாயம் அக்‌ஷய்குமார் பக்கம் என்று ஆனபின்பு, இறுதியில் சமாதானமாகாமல், பிரம்மாண்டத்திற்காக பெரும் பொருட்செலவில் ஒரு நல்ல மனிதனை அழித்தது போல் ஆகிவிட்டது. ஐ படத்தை அடுத்து ஷங்கருக்கு திரைக்கதையில் இது இன்னொரு பெரும் சறுக்கல்.

நல்லவேளையாக 3டி டெக்னாலஜி படத்தைக் காப்பாற்றியது. ஒரு பேய்ப்படத்தை பாசிடிவ் ஆரா, நெகடிவ் ஆரா என்று உட்டாலக்கடி அடித்துச் சொல்ல முயன்றிருந்தார்கள். ஆனாலும் யுகேஜி படிக்கும் என் பையனைக்கூட அவர்களால் ஏமாற்ற முடியவில்லை. படம் பார்த்தபின் அவன் எனக்குச் சொன்ன கதை இது :

‘ஒருத்தன்..சைண்டிஸ்ட்..ரோபால்லாம் செஞ்சுக்கிட்டு இருக்கான். ஒரு பேய் அவன் உடம்புல பூந்துடுது. ரோபோவை எல்லாம் பிய்ச்சுப் போட்டுட்டுது. பெறகு, சிட்டி 2.0 வும் 3.0ம் வந்து பேயை கொன்னுட்டாங்க.”. - அவ்வளவு தான் இதுக்கு அத்தனை ஃபர்னிச்சரை உடைச்சு, யூடர்ன்லாம் போட்டு....!

அப்புறம் காலா...ராஜ்கிரண் நடிக்க வேண்டிய படம். ‘இதுவரைக்கும் நீ உடைச்சதெல்லாம் பத்தாதா?’ என்று சக ரஜினி ரசிகர்களின் மைண்ட் கதறல் கேட்பதால்...வுடு ஜூட்!

3.இமைக்கா நொடிகள் :
ஒரு நல்ல கதையை ஸ்டார் ஆர்ட்டிஸ்ட்டிற்காக, பிடித்துத் திருக்கி சிக்கலாக்கிச் சொதப்புவது எப்படி என்பதற்கு இந்தப் படம் உதாரணம்.
அண்ணன் - தம்பி. அண்ணன் ஒரு சிபிஐ ஆபீசர்..தம்பி மெடிக்கல் ஸ்டூடண்ட் என்று ஆரம்பித்த படத்தை, நயந்தராவை உள்ளே கொண்டுவந்து, அவருக்காக கதையிலும் கைவைத்து, அவரை ‘உண்மையான’ ருத்ரா ஆக்கி, முறுக்கிக்கொண்ட அதர்வாவை சமாதானப்படுத்த காதல் போர்சன் & கடைசி அரைமணிநேர சைக்கிள் சாகசங்களை வைத்து, ஒரு நல்ல படத்தை மோசமாக பிரசண்ட் செய்திருந்தார்கள்.

ட்விஸ்ட் வைக்கிறேன் பேர்வழி என்று ஒட்டுமொத்த ட்விஸ்ட் மேல் ட்விஸ்ட் வைத்து, அதை கிரகிக்க போதிய இடைவெளியும் நமக்குக் கொடுக்காமல் சிக்கலாக கதை சொல்லியிருந்தார்கள்.

சீரியல் கில்லர் ‘ராட்சசன்’-க்கு கிடைத்த வரவேற்பைp பெற வாய்ப்பிருந்தும் மிஸ் செய்துவிட்டார்கள். எனவே சூப்பர் டூப்பர் ஹிட் ஆகியிருக்க வேண்டிய படம், ஹிட் மூவியாக முடிந்து போனது. ஆனாலும் கதை, நயந்தாரா & அனுராக் காஷ்யப்பின் நடிப்பு, பிண்ணனி இசை ஆகியவை குறிப்பிட்டுப் பாராட்ட வேண்டிய விஷயங்கள்.

4.செக்கச் சிவந்தவானம் :

’படம் நல்லா இருக்குப்பா..மணிரத்னம் படம் மாதிரியே இல்லை..சூப்பர்’ என்பது தான் படத்திற்குக் கிடைத்த பாராட்டு. தொடர் தோல்விகளால் துவண்டிருந்த மணிரத்தினத்தின் கம்பேக் மூவி. ஆனாலும் அவர் இப்படி கம்பேக் ஆகியிருக்க வேண்டாம் என்று தோன்றியது. அவரது மோசமான படங்களில்கூட ‘மணிரத்தினத்தின் டச்’ என்பது இருக்கும். அது மிஸ் ஆனதால், மணி ஃபேனாக ஏமாற்றம்!

5. ஜூங்கா / ஒ.ந.நா.பா.சொல்றேன் / சீதக்காதி :

சில முன்னணி ஹீரோக்களை கவிழ்க்க, எதிர்குரூப் நிறைய வேலை செய்ய வேண்டியிருக்கும். ஆனால்விஜய் சேதுபதி விஷயத்தில் அந்த கஷ்டமே வேண்டாம்.

‘கஷ்டப்பட்டப்போ ஃப்ரீயா டீ கொடுத்த டீ மாஸ்டர், சீனு வீட்டுக்கு வழி சொன்னவர், நட்புக்காக’ என்று அவர் செய்கிற சில படங்களே அவருக்கு வினையாக முடியும். அவரது நல்ல மனதை மிஸ் யூஸ் செய்கிறார்களே என்ற வருத்தம் தான் இத்தகைய படங்களைப் பார்க்கும்போது தோணும். விசே மேல் இருக்கும் அன்பினால், ரம்மி காலத்தில் இருந்து நமக்கு இதே பாடு தான். இந்த வருட கோட்டாவிற்கு, இந்த மூன்று படங்கள்.

முதல் இரண்டு படங்கள் தோற்றதில் பிரச்சினையில்லை. சீதக்காதி ஜெயித்திருக்க வேண்டிய படம். இரண்டு மணி நேரத்தில் கதை சொல்லியிருந்தால் படம் தப்பித்திருக்கும். ஜவ்வாக இழுத்துக் கெடுத்துவிட்டார்கள். ஹிட் மூவியான செ.சி.வானம் & இந்த வருட மெகா ஹிட் 96 என்று இனிமையாக முடிந்திருக்க வேண்டிய வருஷம்......!

6. சீமராஜா :

’விஜய் மார்க்கெட்டைப் பிடித்துவிட்டார். அடுத்த இ.தளபதி இவர் தான்’ என்று சிவகார்த்திகேயனுக்கு வெற்று பில்டப் கொடுப்பதற்காகவே எடுக்கப்பட்ட படம். ஓப்பனிங் சீன் & சாங்கில் ஆரம்பித்து, எவ்வளவு முடியுமோ அவ்வளவு வெறுப்பேற்றி அனுப்பி வைத்தார்கள்.

தேவையே இல்லாத ராஜா ஃப்ளாஷ்பேக், சிரிப்பே வராத சூரியின் காமெடி, மச்சக்கன்னி தவிர தேறாத இமானின் இசை என்று ஒரு படம் தோற்பதற்கான அத்தனை அம்சங்களும் இருந்தன. சுறா, அஞ்சான், விவேகம் வரிசையில் சிவாவிற்கு சீமராஜா.

7. போனஸ் :

இந்த வருடம் எச்சரிக்கையாகவே தியேட்டரை அணுகியதால், சர்க்கார் பார்க்கவில்லை. படம் ரிலீஸ் ஆகும் முன்பே, பார்க்க வேண்டாம் என்று முடிவு செய்த படம் சர்க்கார்.

’ரிசர்வேசனால் தான் இந்தியா முன்னேறலை’என்று வசனம் வைக்கும் ‘சொந்தக்கதை மன்னன்’ முருகதாஸ், இயக்குநர். ’திராவிட இயக்க வரலாற்றை கலைஞர் இல்லாமலேயே எழுதிவிட முடியும். மக்கள்நலத் திட்டங்கள் எதுவும் கலைஞர் கொண்டு வந்ததில்லை’ என்று எழுதி வரும் ஜெயமோகனின் பங்களிப்பு, ரஜினி ஸ்டைலில் போலி அரசியல் செய்யும் ஹீரோ விஜய், ‘ஏடிஎம்கே காரங்க ஏன் டென்சன் ஆகுறாங்க? வில்லன் கேரக்டர் கலைஞரைத் தானே குறிப்பிடுது’என்று விளக்கம் சொன்ன வில்லன் நடிகர் பழ.கருப்பையா, அதைக் கேட்டு புளகாகிதம் அடைந்த அதே கலைஞரின் பேரப்பிள்ளைகளான சன் பிக்சர்ஸ், கூடவே கதைத் திருட்டு - இப்படி ஒரு காம்போ.

இவர்கள் சேர்ந்து நமக்கு அரசியல் பாடம் எடுத்தால், அது எவ்வளவு கண்றாவியாக இருக்கும் என்பதை தியேட்டருக்குப் போய்த்தான் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதில்லை. எனவே சர்க்காரைப் புறக்கணித்தேன்.

இப்போதும் ஜெயமோகன் என் விருப்பத்திற்குரிய இலக்கியவாதி. ஆனாலும் ஒரு இலக்கியவாதி எல்லா விஷயத்திலும் அறிவுடனும் நேர்மையுடனும் இருக்க வேண்டியதில்லை என்பதை இந்த வருடம் அவர் நிரூபித்தார். பெர்சனலாக எனக்கு அதில் பெரும் வருத்தம். ‘எனது இயல்புக்கு ஒத்துவரும் படங்களிலேயே பணி செய்கிறேன்’ என்று சினிமாவில் வேலை செய்ய ஆரம்பித்தவர், ஸ்டார் ஹோட்டல் சுகவாசத்திற்கு சோரம் போனது பெரும் சோகம்.

கதைத் திருட்டு என்பது காலம் காலமாக தமிழ் சினிமாவில் நடைபெறும் விஷயம் தான். ஒரு உதவி இயக்குநரின் தோள்தடவி, ‘என்னப்பா கதை வச்சிருக்கிறே?’ என்று கேட்டு, அதைத் தானே எடுத்த பெரிய ஆட்கள் இங்கே உண்டு. அதை வேறு யாரிடமாவது சொல்லி எடுக்க வைப்பவர்களும் இங்கே உண்டு.

ஏற்கனவே வறுமையில் உழலும் உதவி இயக்குநர்களால் ஒன்றுமே செய்யமுடிந்ததில்லை. இந்த சூழலில் தான் பாக்கியராஜ் அவர்களின் நிலைப்பாடு, பெரும் ஆதரவைப் பெற்றது. அதற்குக் கிடைத்த ஆதரவும் முருகதாஸிற்கு விழுந்த தர்ம அடியும், பல்லாண்டுக் கோபத்தின் வெளிப்பாடு.
ஆனால் அறத்தின் அத்தாரிட்டியான ஜெயமோகனால், ஒரு இடத்தில்கூட இதைக் குறிப்பிடமுடியவில்லை. ’ஜெயிக்க முடியாத கோழைகளின் கூப்பாடு, என் வெற்றியைப் பார்த்து வயித்தெரிச்சல்’ என்றெல்லாம் அருவருப்பாக எழுதிக்கொண்டே போனார்.

நமது சட்டப்படி கதைக்கருவிற்கு காப்பிரைட் கிடையாது.அதனால் தான் இந்த அயோக்கியர்கள் தைரியமாகத் திருடுகிறார்கள். ஜெயமோகன் அதையே ஒரு நியாயமாக வைத்து ‘கதைக்கருவிற்கு காப்பிரைட் கிடையாதே, அப்புறம் ஏன் கூப்பாடு?’ என்று எகத்தாளமாகக் கேட்கும் அளவிற்கு தரமிறங்கினார்.
இந்த வருடத்தின் மோசமான அறவீழ்ச்சி விருதினை ஜெயமோகனுக்குக் கொடுக்கலாம்!
மேலும் வாசிக்க... "2018 - எதிர்பார்த்து ஏமாந்த படங்கள்"
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

0 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.

Monday, December 17, 2018

விஜய் சேதுபதி-25 : ’என்ன ஆச்சு?’ - மலரும் நினைவுகள்


2010-ல் தென்மேற்குப் பருவக்காற்று மூலம் ஹீரோவாக அவதாரமெடுத்த விஜய் சேதுபதி, வெற்றிகரமாக 25ஆம் படமாக சீதக்காதியை இந்த வாரம் ரிலீஸ் செய்கிறார். எவ்விதப் பின்புலமும் இல்லாமல், சிறுசிறு வேடங்களில் ஆரம்பித்து,இன்றைக்கு மக்கள் செல்வனாக வெற்றிவாகை சூடியிருக்கும் விஜய் சேதுபதியின் பயணத்தை கொஞ்சம் திரும்பிப்பார்ப்போம்.

புதுப்பேட்டை, நான் மகான் அல்ல போன்ற ஆரம்ப காலப் படங்களில் துணைநடிகராக ஒரு ஓரத்தில் நிற்பதில் ஆரம்பித்தது அவரின் திரைப்பட வாழ்க்கை. 2004 முதல் 2010வரை சினிமாவில் கொட்டிக்கிடக்கும் உதிரிகளில் ஒன்றாகவே அவரது காலம் கடந்தது. ஆனாலும் அந்த காலகட்டத்தில் ஷார்ட் ஃபிலிம்களிலும் நடித்துக்கொண்ட்டிருந்தார்.

அதன்மூலம் தன்னை கூர்தீட்டிக்கொண்டதோடு, குறும்பட அலையில் ஒரு அங்கமாகவும் ஆனார். குறும்பட வட்டாரங்களில் தெரிந்த முகமாகவும் ஆனார். விளைவு, தென்மேற்குப் பருவக்காற்று படத்திற்கு ஹீரோவாக பரிந்துரைக்கப்பட்டார்.

சீனு.ராமசாமியும் இவருக்குள் இருக்கும் கலைஞனைக் கண்டுகொள்ள, ஹீரோவாக நமக்கு அறிமுகமானார் விஜய் சேதுபதி. ஆனாலும் இப்படி ஒரு படம் ரிலீஸ் ஆனதே பெரும்பாலானோர்க்குத் தெரியாது. படம் தேசியவிருது பெற்றபோது தான், படம் பற்றிய சிறிய பேச்சு எழுந்தது. ஹீரோவாக நடித்த படம் கமர்சியலாக ஊத்திக்கொள்ள, சுந்தரபாண்டியனில் வில்லன் வேடம்,வர்ணத்தில் முத்து கேரடர் என்று மீண்டும் போராட்ட வாழ்க்கை.

2012-ல் தமிழ் சினிமாவில் எழுந்தது, குறும்பட கலைஞர்களின் புதிய அலை. பீட்சா எனும் அணுகுண்டு, தமிழ்சினிமாவின் மத்தியில் விழுந்தது. ஏதோ சாதாரணப் படம் என்று உள்ளே நுழைந்தவர்களை உண்மையிலேயே மிரட்டித் துவைத்தது படம். கார்த்திக் சுப்புராஜ், சி.வி.குமார், சந்தோஷ் நாராயணன் போன்றோருடன் விஜய் சேதுபதி எனும் ‘நடிகனை’யும் பீட்சா எல்லாப்பக்கமும் கொண்டுசேர்த்தது.

அதே ஆண்டில் அடுத்து வந்த நடுவுல கொஞ்சம் பக்கத்தைக் காணோம் & சூதுகவ்வும் படமும் சூப்பர்ஹிட் ஆக, ஹாட்ரிக் நாயகனாக ஆனார் விஜய் சேதுபதி. மூன்று வெற்றிப்படங்கள், மூன்றிலும் வெவ்வேறு கதாபாத்திரங்கள். ‘என்ன ஆச்சு?’ எனும் ஒரே கேள்வியை முக்கால்வாசிப்படம்வரை திரும்பத் திரும்பக் கேட்டுகொண்டே இருப்பது ரிஸ்க்கான விஷயம்.அதற்கு விசே கொடுத்த மாடுலேசனும், கைவிரல்களின் நடனமும் அந்த வசனம் வரும்போதெல்லாம் கைதட்ட வைத்தன.

சூதுகவ்வும் படம் இன்னொரு வகையான அதகள அனுபவம். எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத, தமிழில் அரிதாக வெல்லும் ப்ளாக் ஹ்யூமர் மூவி. இன்றைய விஜய் சேதுபதியின் ஆரம்பம், அந்த தாஸ் கேரக்டர் என்று சொல்லலாம். அதை முழுமை செய்த படம், இதற்குத் தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா.

அமைதியானவன், சாமானியன், கூச்சசுபாவம் கொண்டவன் போன்ற சொந்த இயல்புகளைக் கொண்ட கேரக்டர்களையே செய்துவந்த விஜய் சேதுபதியை உடைத்து, இன்றைய கலகலப்பான, ‘நாட்டி பாய்’விஜய் சேதுபதியாக மாற்றிய படங்கள் என்று சூதுகவ்வும் & இ.ஆ.பாலகுமாராவைச் சொல்லலாம்.

ஆனாலும் இதை விஜய் சேதுபதி அப்போதே புரிந்துகொண்டார் என்று சொல்ல முடியாது. ஏனென்றால் அடுத்து 2014 & 2015-ல் வந்த படங்களில் இந்த மேஜிக் தொலைந்து போயிருந்தது. ரம்மி, பண்ணையாரும் பத்மினியும், வன்மம் (அய்யகோ!!) போன்ற படங்களில் எல்லாம் மீண்டும் பழைய விஜய் சேதுபதியே இருந்தார். இடையில் புறம்போக்கு, ஆரஞ்சுமிட்டாய் போன்ற சீரியஸ் படங்களும் நல்ல நடிகர் என்ற பெயரைக் கொடுத்தாலும் கமர்சியலாக எல்லாமே தோல்விப்படங்கள் தான்.

2012-ல் கிடைத்த ஹாட்ரிக் வெற்றி வெறுமனே அதிர்ஷ்டத்தில் கிடைத்த வெற்றி என்று பேச்சு எழுந்தது. இந்த மோசமான காலட்டத்தில் இருந்து, அவர் மீண்டது நானும் ரவுடி தான் மூலம். மீண்டும் ‘வெட்கங் கெட்ட நாட்டி பாய்’ அவதாரம். ரசிகர்கள் தன்னிடம் என்ன எதிர்பார்க்கிறார்கள் என்று அவரும், அவரிடம் என்ன எதிர்பார்க்கலாம் என்று ரசிகர்களும் புரிந்துகொண்ட டர்னிங் பாயிண்ட் என்று நானும் ரவுடி தானைச் சொல்லலாம். மீண்டும் வெற்றிப்பட நாயகனாக அவரை அது ஆக்கியது.

அதன்பிறகு, எத்தனை நடிகர்கள் இருந்தாலும் ஒரு சீனை தனதாக ஆக்கிக்கொள்ளும் வித்தை மேஜிக் அதன்பிறகு எளிதாக அவருக்கு கைகூடி வந்தது. சின்ன ஒன்லைனில் தியேட்டரை தெறிக்கவிடுவது, சட்டென்று எதிர்பாராத ஒன்றை செய்துவிடுவது, ஆக்சனில் மட்டுமல்லாமல் ரியாக்சனிலும் சரியான பீட்டில் எக்ஸ்பிரசன்ஸ் கொடுப்பது, ஒரு கேரக்டர் அந்த இடத்தில் என்ன செய்யும் என்பதை மனநிலை முதல் பாடி லாங்குவேஜ்வரை கணிப்பது போன்றவை விஜய் சேதுபதி மேஜிக்கின் அங்கங்கள்.

முறைக்காத, சிரிப்பு வருது - சேதுபதி
‘அவளும் இருந்தா..நானும் இருந்தேன்’ - கா.க.போ
எஸ்.ஜே.சூர்யா துப்பாக்கியை எடுத்ததும், கையில் இருப்பதை கீழே போட்டு, தளரும் கிளைமாக்ஸ் - இறைவி
ஒரே ஒரு ஓட்டை வடையுடன், முகம் காட்டாமலேயே தெறிக்க விட்ட ஓப்பனிங் - விக்ரம் வேதா
என நான் ரசித்த விசே மொமெண்ட்ஸை சொல்லிக்கொண்டே போகலாம்.

செக்கச் சிவந்த வானத்தில் அத்தனை ஸ்டார்ஸ் இருந்தும், தியேட்டரில் கைதட்டல்களை அள்ளியது விஜய் சேதுபதி தான். இத்தனைக்கும் எல்லாப் பக்கமும் ஆமாம் போட்டுக்கொண்டே போகிற கேரக்டர். அடுத்து வந்த 96 பற்றிச் சொல்லவே வேண்டாம். முழுக்க முழுக்க, நடிப்பாலேயே வெற்றி பெற்ற படம் அது. அந்த படத்தை ரீமேக் செய்யலாம்.ஆனால் விசே-த்ரிஷா பெர்ஃபார்மஸில் இருந்த கெமிஸ்ட்ரியை ரீமேக் செய்வது அவ்வளவு எளிது கிடையாது.

விஜய் சேதுபதி இன்றைக்கு மக்களால் மட்டுமல்லாமல் இண்டஸ்ட்ரியிலும் கொண்டாடப்படுவதற்குக் காரணம், நடிப்புத் திறமை மட்டுமே கிடையாது. அலட்டல் இல்லாத நேர்மையான பேச்சு, இன்னும் பழசை மறக்காத தன்மை, சேரன் போன்ற சம்பந்தமில்லாத மனிதருக்கும் தோள்கொடுக்கும் நட்புணர்வு என்று நிறையச் சொல்லலாம்.

நடிப்பையும் தாண்டி, எனக்கு பெர்சனலாக விஜய் சேதுபதியைப் பிடிக்க இரண்டு காரணங்கள் தான்.

1. அதிக படங்களில் நடிப்பது :

2016-ல் ஆறு படங்கள், 2017-ல் 4 படங்கள், 2018-ல் 6 படங்கள். என்னைப் பொறுத்தவரை இதுவே குறைவு தான். சென்ற தலைமுறையில் 10 படம், 18 படமெல்லாம் நடித்திருக்கிறார்கள். இன்றைய தலைமுறை, எல்லாத் துறையிலும், கொஞ்சம் உழைப்பு-நிறையப் பணம் என்று சொகுசாக வாழ விரும்புகிறது. 40 வயதில் இப்படி விஜய் சேதுபதி ஓடி, ஓடி உழைக்கவேண்டிய அவசியம் இல்லை. வெற்று பில்டப்பில் சம்பளத்தை ஏற்றிவிட்டு, வருடம் இரண்டு படம்செய்தால் போதும். அது அவரால் முடியும். ஆனாலும் அவர் அதைச் செய்வதில்லை.

ஒரு ஹீரோ படங்களைக் குறைக்கும்போது வரும் சிக்கல் என்னவென்றால், புதிய இயக்குநர்கள் அறிமுகமாவது கடினமான விஷயமாக ஆகும். அது தமிழ் சினிமாவை தேக்கத்தில் கொண்டுபோய் நிறுத்தும். மேலும், ஹீரோவுக்கு டிமாண்ட் அதிகரிக்கும்போது,ஒரு கதையை ஹீரோவை மட்டுமே திருப்தி செய்ய உருவாக்க வேண்டியதாகிறது. கடந்த மூன்று வருடத்தில் எந்தவொரு வெற்றியும் கொடுக்காத ஹீரோகூட ‘படத்தில் எல்லா சீனிலும் நான் இருக்கணும். முக்கியமான எல்லாவற்றையும் நானே செய்யணும்’ என்று சொல்லும் அவலம் இன்னும் நிலவுகிறது. அதனால் ஹீரோ கால்ஷீட்டிற்காக கதையை வளைத்து அட்ஜஸ்ட் செய்து தோற்கும் புதியவர்கள் இப்போது அநேகம்.

ஒரு ஹீரோ நான்கு படங்கள் செய்கிறார் என்றால், இரண்டு படங்களை புதியவர்களுக்கு கொடுக்க முடியும். ஆறுபடங்கள் செய்தால், இரண்டு ’நல்ல’ படங்களை கமர்சியல் வெற்றி எதிர்பாராமல் நடிக்க முடியும். அதனால் தான், விஜய் சேதுபதி ஓடி, ஓடி உழைப்பது ஒருவகையில் தமிழ் சினிமா வளர்ச்சிக்கு அவரின் சேவை என்கிறேன். (ஆனால், அவர் தனது படங்களின் ரிலீஸை கொஞ்சம் முறைப்படுத்த வேண்டும்.)

2. ஹீரோ இமேஜை உடைத்தது :

ஹீரோ இமேஜை விட ஒரு நல்ல படத்தில் தான் இருப்பது தான் முக்கியம் என்ற விஜய் சேதுபதியின் புரிதல் தான், அவரது வேகமான வளர்ச்சிக்கு முக்கியக் காரணம். முன்பெல்லாம் கதை விவாதத்தில் ஹீரோ என்றாலே 25 வயது வாலிபன் தான். அதற்கு மேலே போய்விட முடியாது, ஹீரோ கால்ஷீட் கிடைக்காது.

ஒரு ஹீரோ நரைத்தமுடியுடன் நடித்தால், தமிழ்சினிமாவே ‘பார்த்தீரா பராக்கிரமத்தை!’ என்று காணாததைக் கண்டதாக அலறும். ஆனால் இன்றைக்கு நாற்பது வயது மனிதனின் கதையையும் சொல்ல முடிகிறது, எழுபது வயது மனிதனின் கதையையும் சொல்ல முடிகிறது. நல்ல கதையும் சுவாரஸ்யமான திரைக்கதையுமே முக்கியம் எனும் தெளிவு பெரும்பாலான ஹீரோக்களுக்கு வந்திருக்கிறது.

மக்கள் இதை ஏற்றுக்கொள்வார்கள் என்று ஹீரோக்களும், தயாரிப்பாளர்களும், விநியோகஸ்தர்களும் இப்போது நம்புகிறார்கள். இன்னும் சொல்லப்போனால் ‘நான் நாற்பது வயது ஆளாக நடித்திருக்கிறேன்’என்பது பெருமையான விஷயமாக ஆகியிருக்கிறது. டாப் மசாலா ஸ்டார்ஸ் கூட, ஒரு குழந்தைக்கு அப்பாவாக நடிப்பது சகஜமாகியிருக்கிறது. இவையெல்லாம் 2010க்குப் பின் வந்த மாற்றங்கள். இந்த மாற்றத்திற்கு விஜய் சேதுபதியின் வெற்றியும் முக்கியக்காரணம்.

அஞ்சு பாட்டு, நாலு ஃபைட் என்று மசாலாவிற்குள் சிக்காமலேயே, முண்ணனி நட்சத்திரமாக உருவாவது சாதாரணம் அல்ல. அதை விஜய் சேதுபதி சாதித்துக்காட்டியிருக்கிறார். சீதக்காதியை அடுத்து, சூப்பர் டீலக்ஸும், பேட்டயும் வரிசையில் இருக்கின்றன. அந்த மனிதர் இப்போதும் நல்ல படங்களைத் தர, ஓடிக்கொண்டே இருக்கிறார்.


மேலும் வாசிக்க... "விஜய் சேதுபதி-25 : ’என்ன ஆச்சு?’ - மலரும் நினைவுகள்"
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

1 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.

Friday, October 5, 2018

96 - என்னா படம்யா!



தமிழ்சினிமா பொதுவாகவே புறநோக்கு தன்மை கொண்டது. மனதில் நிகழும் நுண்ணுணர்வுகளைப் பதியும் அகநோக்கு சில காட்சிகளில் மட்டும் அரிதாக நிகழும். எதையும் செயல்களாகக் காட்டினால் தான் திருப்தி. மலையாளப் படங்கள் நம்மை முந்துவது இந்த விஷயத்தில் தான். அந்தவகையில்  96 படம், தமிழ் சினிமாவில் முக்கியமானதாக ஆகிறது.

படத்தில் வரும் முக்கிய சம்பவங்கள் எல்லாம் சினிமாத்தனம் இல்லாமல் இயல்பாக இருப்பதாலேயே நம்மால் படத்துடன் ஒட்டிக்கொள்ள முடிகிறது. காதல் மலர்வதற்கு சாகச காட்சிகள் ஏதுமில்லை.நான்குநாட்கள் பார்க்க முடியாத ஜானு, காய்ச்சலுடன் ஸ்கூலுக்குத் திரும்பி வருகிறாள். பின்னால் அமர்ந்திருக்கும் ராமை மெதுவாகத் திரும்பிப் பார்க்கிறாள். பூ மலர்வதை படம் பிடிக்கமுடியாது என்பார்கள். இந்தக் காட்சியில் அதை இயக்குநர் செய்துகாட்டியிருக்கிறார்.

வாழ்க்கையில் நம்மைப் புரட்டிப் போட்ட விஷயங்களுக்கு காரணம் தேடினால், சாதாரணமாக இருக்கும். படத்தில் ராம் ஊரைவிட்டுப் போவது, ஜானுவைப் பார்க்க காலேஜிற்கு வருவது, ஜானுவின் கல்யாணத்தன்று ராம் என மிக இயல்பான விஷயங்களே அவர்களின் வாழ்க்கையை தலைகீழாக ஆக்கியிருக்கின்றன.

படத்தின் இரண்டாம்பாதி பெரும்பாலும் ராம்-ஜானு இருவர் மட்டும் பேசிக்கொள்ளும் காட்சிகள் தான். வலுவான கதையும் வசனங்களும் மட்டும் இதற்குப் போதாது. அதைவிட வலுவான நடிகர்கள் இதற்கு வேண்டும். விஜய் சேதுபதி - த்ரிஷா ஜோடி அதை சாத்தியமாக்கியிருக்கிறார்கள்.

விஜய் சேதுபதி நடிப்பில் 96 உச்சம் என்பேன். மிக மெல்லிய உணர்வுகளைக்கூட மனிதர் எளிதாக கொண்டுவந்துவிடுகிறார். அவரது எல்லாப் படங்களைப் போல இதிலும் படத்தை தாங்கும் தூணாக நிற்கிறார். பல வருடங்கள் கழித்து ஜானுவை சந்திக்கும் பதட்டம், ஜானுவின் கல்யாணநாள் பற்றிப் பேசும் சீன், வெர்ஜின் வெட்கம் என்று கிடைக்கிற வாய்ப்பில் எல்லாம் சிக்ஸர் அடிக்கிறார்.

விஜய் சேதுபதியை இயக்குநர் நம்பியதில் ஆச்சரியம் இல்லை. த்ரிஷாவை நம்பி, இந்த கேரக்டரை கொடுத்தது தான் ஆச்சரியம். விண்ணைத் தாண்டி வருவாயா தவிர்த்து எந்தப் படத்திலும் நடிக்காதவர் அவர். கொடி போன்று கிடைத்த நல்ல வாய்ப்புகளையும் சொதப்பியவர். நுணுக்கமான நடிப்பைக் கோரும் இந்த கேரக்டருக்கு அவரை தேர்ந்தெடுத்ததே பெரிய ரிஸ்க் தான்.

ஆனால் இயக்குநரின் நம்பிக்கையை காப்பாற்றியிருக்கிறார் த்ரிஷா. இத்தனை வருடங்களுக்கும் சேர்த்து, ஆர்ப்பாட்டமே இல்லாமல் நடித்து, தானும் ஒரு நல்ல நடிகை தான் என்று நிரூபித்திருக்கிறார். கல்யாண நாள் பற்றிப் பேசுவது, ராம் ஒதுங்குவது கண்டு கோபப்படுவது, உரிமையுடன் அவனை கலாய்ப்பது என்று ஜானுவாகவே வாழ்ந்து காட்டியிருக்கிறார். ஆண்களை விட பெண்கள் வாழ்க்கையை (வேறு வழியின்றியும்) எப்படி பிராக்டிகலாக எதிர்கொள்கிறார்கள் என்பதை த்ரிஷா கண்முன் கொண்டுவருகிறார்.

‘நான் உன்னைப் பார்க்கலைடா’ எனும் சீனும் கிளைமாக்ஸ் சீனும் த்ரிஷா நடிப்பில் உச்சம். நம்மை உலுக்கிவிடும் நடிப்பு. எல்லாவற்றுக்கும் மேல் தேவதையாக ஜொலிக்கிறார். இதுவரை கமலா காமேஷாகவே இருந்தவர், இந்த படத்தில் தான் த்ரிஷா ஆகியிருக்கிறார்!

இளம் வயது கேரக்டராக வரும் எல்லோருமே நடிப்பிலும் அசத்துவது ஆச்சரியம். முதல்பாதியில் அவர்களின் காட்சிகள் போடும் அஸ்திவாரம் தான், உணர்வுப்பூர்வமான இரண்டாம்பாதியை வலுவாக தாங்குகின்றன.

இதுவொரு ஃபீல் குட் மூவி. எனவே பரபரப்பான திருப்பங்கள் என்று ஏதும் கிடையாது. இரண்டாம்பாதி முழுக்க, 22 வருடப் பிரிவை ராம் & ஜானு ஒரு இரவில் பேசித்தீர்க்கிறார்கள். எனவே சற்று நீளமான படமாக தோன்றலாம். ஆனாலும் ஜானு இன்னும் கொஞ்ச நேரம் இருக்கட்டுமே என்று ராமிற்காக நாமும் ஃபீல் பண்ணுவது தான் படத்தின் வெற்றி.

இயக்குநர் பிரேம்குமார் முக்கியமான படைப்பாளியாக ஆவார் எனும் நம்பிக்கையை படத்தின் பல காட்சிகள் உறுதிசெய்கின்றன. படத்தில் பல அற்புதமான ஷாட்ஸ் இருக்கின்றன. கண்கொட்டாமல் பார்க்க வைக்கிறது சண்முக சுந்தரத்தின் ஒளிப்பதிவு. ஜானுவின் கல்யாணம் பற்றி ராம் பேசும் காட்சியில் வரும் பிண்ணனி இசை, அந்த காட்சியின் உணர்வுகளை அடுத்த தளத்திற்குக் கொண்டு செல்கிறது. ’காதலே..காதலே’பாடல் தவிர மற்ற பாடல்கள் பெரிதாக சோபிக்கவில்லை என்றாலும், பிண்ணனி இசையில் கோவிந்த் பிரமாதப்படுத்தியிருக்கிறார். இளையராஜாவிற்கும் நன்றி சொல்ல வேண்டும்.

’ஒரு பள்ளிப்பருவக் காதல்..பிரிவு..மீண்டும் சந்திப்பு ‘ எனும் அழகி-ஆட்டோகிராஃப் பாணியிலான கதை தான். ஆனால் அந்தப் படங்கள் ஆணின் உணர்வுகளை மட்டுமே பதிவு செய்தவை. அந்த காதலை பெண் எப்படி உணர்ந்தாள், அந்த பிரிவை பெண் எப்படிக் கடந்தாள் என்று சொல்வதில்லை. அதை எதிர்கொள்ளும் அளவிற்கு அன்றைய ஆடியன்ஸிற்கு முதிர்ச்சி இருந்ததா என்பதும் கேள்விக்குறி தான். இந்தப் படம், இருவரின் உணர்வுகளையும் துல்லியமாகப் பதிவு செய்கிறது....அது, இன்றைய ஆடியன்ஸிற்கு இயக்குநர் செய்யும் மரியாதை.
மேலும் வாசிக்க... "96 - என்னா படம்யா!"
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

0 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.

Saturday, September 29, 2018

செக்கச் சிவந்த வானம் - விமர்சனம் & New World (2013)


’பெரியவரைக் கொன்றது யார்? பெரியவருக்குப் பின் அந்த இடத்தில் யார்?’ என்ற இரு கேள்விகள் தான் படம்.

கடந்த மூன்று படங்களாக தடுமாறிக்கொண்டிருந்த மணிரத்னம், இதில் சொல்லியடித்திருக்கிறார். இவ்வளவு பரபரப்பான படத்தினை நிச்சயம் அவரிடம் எதிர்பார்க்கவில்லை.

பெரியவராக வரும் பிரகாஷ்ராஜ் கரியரில் இந்தப் படம் முக்கியமான ஒன்றாக இருக்கும். அலட்டல் இல்லாத நடிப்பில் மிரட்டுகிறார் மனுசன். முரட்டுத்தனமான மகனாக அரவிந்த்சாமி. என்ன தான் உயிரைக் கொடுத்து நடித்தாலும், கார்போரேட் ஆபீசர் லுக்கை மறைக்க முடியவில்லை. ‘எல்லாருமே சைஃபர் தான்’ என்று சொல்லும் இடத்தில் தான் 100% ஸ்கோர் செய்கிறார்.

சிம்புவிற்கு நல்ல கம்பேக் மூவி. அருண்விஜய்யை விட மூத்தவராக சிம்பு தெரிவது தான் சோகம். எதையும் கேர் பண்ணாத, எதையும் செய்யத் துணியும் கேரக்டர் சிம்புவிற்கு எளிதாக பொருந்திப் போகிறது.

அருண் விஜய்யை தியேட்டருக்குள் நுழையும்வரை யாரும் கண்டுகொள்ளவில்லை. அதனாலேயே அவரது கேரக்டரும் நடிப்பும் நம்மை எளிதில் வசீகரிக்கின்றன. இரண்டாம் பாதியில் அரவிந்த்சாமியைத் தேடி வீட்டிற்குள் வரும் சீன் அதகளம்.

ஜோதிகா முதல்பாதியில் வீணடிக்கப்பட்டாலும், ‘முடிவில்’ ஒரு நல்ல இம்பாக்ட்டை கொடுத்துவிட்டுப் போகிறார்.

இப்படி இத்தனை பேர் இருந்தாலும், கை தட்டல்களை அள்ளிச்செல்வது விஜய் சேதுபதி தான். மற்ற மூன்று ஹீரோக்களின் கேரக்டர்களுடன் நாம் ஐடெண்டிஃபை ஆக முடியாமல் கஷ்டப்படும்போது, சிம்பிளான ஒன்லைனர்களால் நம்மை கொள்ளை கொண்டுவிடுகிறார். யாருக்கும் பயப்படாமல், யாரையும் பயமுறுத்தாமல், படத்தில் அதிரடியாக ஒன்றுமே செய்யாமல், மொத்த அப்ளாஸையும் விஜய் சேதுபதி அள்ளிச்செல்கிறார். சான்ஸே இல்லை.

வசனங்கள் புதிதாக இருந்தன. நிறைய இடங்களில் புன்னகைக்க முடிந்தது.
படத்தில் இரண்டு ட்விஸ்ட்கள். கடைசி ட்விஸ்ட்டை மட்டும் யூகிக்க முடிந்தது.

மணிரத்தினத்தின் முந்தைய மூன்று படங்களை ஒப்பிடுவதாலேயே, இந்தப் படத்தை கொண்டாடுகிறோம். தனியே இந்தப் படத்தைப் பார்த்தால்...
மணிரத்னம் டச் மிஸ்ஸிங்..மனதில் நிற்கிற ஷாட், லைட்டிங் மேஜிக் என்று எதுவுமே மனதில் நிற்கவில்லை.

மூன்று கேரக்டர்களுக்கும் முக்கியத்துவம் தர சில சீன்கள்..அவை நன்றாகவே இருந்தாலும், யாருடனும் நாம் கனெக்ட் ஆக முடியாமல் வெறுமனே வேடிக்கை பார்க்கும் மனநிலை தான் நமக்கு. எனவே யார் செத்தாலும் பெரிதாக ஃபீல் பண்ண முடியவில்லை.

முதல்பாதி வேகமும் கலகலப்புமாக போய்விடுகிறது. இரண்டாம் பாதியை சகோதரச் சண்டையை வைத்தே ஓட்ட வேண்டிய கட்டாயம். எனவே கொஞ்சம் ஸ்லோவாகவும் காதைச் சுற்றி மூக்கைத்தொடுவதாகவும் படம் நகர்கிறது. கடைசி இருபது நிமிடங்களில் தான் படத்தில் கதை நகர்கிறது.
சோக சீனா? ’போடு பூமி..பூமி’ பாடலை..ஆக்சன் சீனா? போடு ’சிவந்து போச்சு நெஞ்ச’ - என்று பிஜிஎம்மில் கொடுமை செய்திருக்கிறார்கள். சோக சீனில் கிக்கான வாய்ஸில் பூமி..பூமி ஒலிக்கும்போது ஜென் நிலைக்குப் போகிறோம்.
ஹிந்தி-தெலுகு-தமிழ் என எல்லா ரசிகரையும் திருப்திப்படுத்த முனையாமல், திருந்திய மணிரத்தினத்திற்கு ஒரு கோடி நன்றிகள். அதற்காகவே இந்தப் படத்தை பார்க்கலாம்!!



New World(2013) Vs CCV (2018)

பொதுவாக இணையத்தில் எழுப்பப்படும் ’காப்பி..காப்பி’ கூச்சலுக்கு எதிரானவன் நான். இதுபற்றி விரிவாக பலமுறை எழுதியிருக்கிறேன். டேக்கன் படம் முதலில் வந்து மகநாதி பிறகு வந்திருந்தால், மகாநதியை காப்பி என்று சொல்லியிருப்பார்கள். அந்தளவிற்கு மண்வாரித் தூற்றும் போக்கு இங்கே உண்டு.

நாயகன் படம் வரதராஜ முதலியாரின் உண்மைக்கதை. அதை காட் ஃபாதர் படத்தின் மேக்கிங் ஸ்டைலை எடுத்தாண்டு சொன்னார்கள். டைம் மேகசின் உலகின் சிறந்த 100 படங்களில் ஒன்றாக நாயகன் படத்தினை லிஸ்ட் செய்திருக்கிறது. அந்த லிஸ்ட்டில் காட் ஃபாதரும் உண்டு. இது தெரிந்தும், காட் ஃபாதர் காப்பி தான் நாயகன் என்று இன்றுவரை சொல்வோர் உண்டு.

தேவர் மகன் கதையில் காட் ஃபாதரின் தாக்கம் அதிகம் உண்டு. ஆனாலும் அது வேறு கதை தான். கட் ஃபாதருக்கும் மைக்கேலுக்கும் வன்முறை மேல் வெறுப்பு கிடையாது, இதை விட்டு வெளியேற வேண்டும் என்ற எண்ணமும் கிடையாது. ஆனால் பெரிய தேவரும் சக்திவேலும் அடிப்படையிலேயே வன்முறைக்கு எதிரானவர்கள்.

ஒரு வன்முறைச் சூழலில் இருக்கும் இனத்தை, அதிலிருந்து மீட்காமல், அப்படியே வைத்திருந்து காப்பாற்றுபவர்கள் காட் ஃபாதர்& சன்ஸ்; ஒரு வன்முறைச் சுழலில் சிக்கிக்கொண்ட இனத்தை மீட்டு, வெளியே கூட்டிட்டுப் போக முயல்பவர்கள் பெரிய தேவரும் மகனும். எனவே இங்கே கதையே வேறு ஒன்றாக பரிமாணம் பெற்றுவிடுகிறது. மேக்கிங்கும் காட் ஃபாதரில் இருந்து வேறுபட்டது என்பதால், தேவர் மகன் தனித்துவமான படமாக ஆகிறது.

ஆங்கிலத்திலும் இத்தகைய படங்கள் உண்டு. Bitter Moon & Gone Girl படங்கள் ஒரு உதாரணம். இரண்டுமே ஒரே கதைக்களம் தான். ஆனால் இரண்டு படங்களின் பேசுபொருள் வேறு;எனவே கதையும் வேறு ஆகிறது. யாரும் அங்கே Gone Girl படத்தை காப்பி என்று சொல்வதில்லை, அதையும் கொண்டாடவே செய்கிறார்கள்.

இங்கே காப்பி என்ற ஒன்று கிடையாதா என்றால் நிச்சயம் உண்டு. அப்படியே ஒரு டிவிடியைப் பார்த்து,நம் சூழலுக்கு ஏற்பவும் மாட்டிக்கொள்ளாமல் இருக்கவும் சில மாற்றங்களைச் செய்து ஒரு கதையைத் தேற்றிவிடுவார்கள். கதையையும் நானே எழுதுவேன் என்று அடம்பிடிக்கும் கதையறிவற்ற ஜந்துக்கள் இதைச் செய்வது இங்கே வழக்கம்.

New World படத்தினை இன்று பார்த்தபோது, உண்மையிலேயே பெரிய அதிர்ச்சிக்கு ஆளானேன். ’இப்படி அப்பட்டமாக ஒரு கதையை உருவ வேண்டிய அவசியம் மணி சார் என்ற மகானுக்கு ஏன் வந்தது? தமிழ் மண்ணின் கதைகளையெல்லாம் தமிழ் சினிமா பேசி முடித்துவிட்டதா?’ என்று குழம்பிப் போனேன்.

New World படத்தின் கதை : ஒரு தலைமை கொல்லப்பட, தலைமைப் பதவிக்காக முட்டிமோதும் மூன்று பேர்..தலைமையைக் கொன்றது யார், அடுத்த தலைமை யார்? என்பது தான் கதை. கூடவே ஒரு கேஷுவலான ’அண்டர்கவர் ஆபரேசன்’ போலீஸ்கார்..அய்யகோ!

திரைக்கதை, மேக்கிங் என்று எல்லாவற்றிலும் வேறு பாதையில் செக்கச் சிவந்த வானம் பயணித்தாலும், கதை என்பது அடிப்படையில் அங்கே இருந்து உருவப்பட்டது தான். மாட்டிக்கொள்ளாமல் இருக்க, ஒரு முக்கியமான ட்விஸ்ட்டை மாற்றி, பதவிக்கு மோதும் முன்று பேரை அண்ணன் தம்பிகளாக்கி, கைமா பண்ணியிருக்கிறார்கள், நமது ஜந்துக்கள் ஸ்டைலில்.

முடிவில் சப்டைட்டில் இல்லாமல் New World படத்தைப் பார்த்து எழுதிய கதை போல் இருக்கிறது செக்கச் சிவந்த வானம். தமிழ்சினிமாவின் ஐகான்களில் ஒருவரான மணிரத்னம் இதைச் செய்திருக்கக்கூடாது.

அவர் சொந்தமாக யோசித்த படங்களே காப்பி என்று குற்றம் சாட்டப்படும் சூழலில், இணையம் உலகத்தில் உள்ள சினிமாக்களை உள்ளங்கையில் கொண்டு வந்துவிட்ட காலத்தில், மணிரத்னம் இதைச் செய்திருக்கவே கூடாது!

மேலும் வாசிக்க... "செக்கச் சிவந்த வானம் - விமர்சனம் & New World (2013)"
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

0 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.

Wednesday, September 19, 2018

சிறந்த 15 மாஸ்டர்களின் சிறந்த 15 படங்கள்


’சினிமா டிஸ்கசனில் திடீர் திடீர் என்று ஏதாவது இங்கிலிபீசு டைரக்டர் பெயரையோ, படத்தின் பெயரையோ சொல்லி விவாதிக்கிறார்கள். இதுகூட தெரியாதா என்று சிரிக்கிறார்கள்.’ என்று உதவி இயக்குநராக இருக்கும் நண்பர் ஒருவர் ஒருமுறை வருத்தப்பட்டார். ஏறக்குறைய இதே லிஸ்ட்டை அவருக்குச் சொன்னேன்.

நண்பர் பிடித்த பத்து படங்களை பகிரச் சொன்னபோது, அதையே பகிர்ந்துகொண்டேன். இவர்கள் தான் என் திரைமொழியை வடிவமைக்கும் குருநாதர்கள். இவர்களில் ஒருவரின் தோளில் ஏறிக்கொண்டாலும் போதும், உருப்பட்டு விடலாம்!


Master # 1 - Alfred Hitchcock (Movie # 1 - Psycho)


Master # 2 - Stanley Kubric (The shining)


Master # 3 - Akira Kurosawa (Seven Samurai)


Master # 4 - Roman Polanski (Bitter Moon)


Master # 5 - David Lynch (Mulholland Drive)


Master # 6 - Steven  Spielperg (Jurassic Park)


Master # 7 - Krzysztof Kieślowski (The Double Life of Veronique)


Master # 8 - Sergio Leone (Once Upon A Time In The West)


Master # 9 - Christopher Nolan (The Prestige)


Master # 10 - Paul Thomas Anderson (Boogie Nights)


Master # 11 - David Fincher (Seven)


Master # 12 - Coen Brothers (Fargo)


Master # 13 - Quentin Tarantino (pulp fiction)


Master # 14 - James Cameron (Terminator 2 : Judgment Day )


Master # 15 - Francis Ford Coppola (The Godfather)

Master # 16 - Martin Scorsese (Taxi Driver)

ஒவ்வொரு மாஸ்டர்களின் சிறந்த 5 படங்களின் லிஸ்ட்டை சீக்கிரம் கொடுக்க முயற்சிக்கிறேன்.
மேலும் வாசிக்க... "சிறந்த 15 மாஸ்டர்களின் சிறந்த 15 படங்கள்"
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

0 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.

Saturday, September 15, 2018

மேற்குத் தொடர்ச்சி மலை – தமிழில் ஒரு உலக சினிமா


ஒரு படத்தின் கதாநாயகன் என்பவன் எதிலும் ஜெயிக்கும் அசகாய சூரன், படத்தின் காட்சிகள் என்பவை கதாநாயகனின் சாகசங்களின் தொகுப்பு என்பதே வழக்கமான மைய நீரோட்டப் படங்களின் அம்சங்களாக இருக்கும். ஆனால் இயல்பு வாழ்க்கையில் சின்னச்சின்ன ஆசைகளுடன், எவ்வித சாகசங்க நிகழ்வுகளிமின்றி முடியும் மனிதர்களே அதிகம்.

காட்சி இலக்கியமான சினிமாவுக்கு அத்தகைய மனிதர்களைப் பதிவுசெய்யும் கடமை உண்டு. அந்தவகையில் உருவாகியிருக்கும் படம் தான் மேற்குத் தொடர்ச்சி மலை.

பொழுதுபோக்கு சினிமாக்களுக்கென்று ஒரு திரைமொழி உண்டு. அதே போன்றே திரைக்கதை/ஒளிப்பதிவு/எடிட்டிங் போன்ற தொழில்நுட்ப விஷயங்களை வைத்து புத்திசாலித்தனமாக விளையாடும் சினிமாக்களுக்கென்று ஒரு திரைமொழி உண்டு. இந்த மாதிரியான ஜிம்மிக்ஸ் வேலைகள் இல்லாமல் உள்ளதை உள்ளபடி பதிவு செய்வதை மட்டுமே செய்யும் சத்யஜித் ரே வகைப் படங்களுக்கென்று ஒரு டாகுமெண்டரி ஸ்டைல் திரைமொழி உண்டு.

மேற்குத் தொடர்ச்சி மலை அந்தவகைப் படம். எனவே அந்த திரைமொழியை கிரகித்துக்கொள்ளும் மனநிலையுடன் இந்தப் படத்தை அணுக வேண்டியது அவசியம்.

ரங்கசாமி எனும் மனிதனின் கதையைப் பேசிக்கொண்டே, அங்கே வாழும் எளிய மனிதர்களின் கதையை போகிற போக்கில் பதிவு செய்கிறது படம். அந்தவகையில் படத்தில் ரங்கசாமி மட்டுமே கதாநாயகன் என்று சொல்லிவிடமுடியாது.

படத்தின் முதல் நாற்பது நிமிடம், ரங்கசாமி காலையில் குளித்துக் கிளம்பி மலையுச்சியை அடையும் பயணத்தை மட்டுமே பதிவு செய்கிறது. பத்திரிக்கை கொடுக்க வரும் கேரக்டர் வாயிலாக,அதில் உள்ள சிரமங்களும் அவர்களின் பழக்க வழக்கங்களும் இயல்பாகப் பதிவு செய்யப்படுகின்றன.

அந்த மனிதர்கள் ஒருவருக்கொருவர் உதவிக்கொள்வதும், மெலிதாக கேலிசெய்துகொள்வதும் அவர்களின் வீம்பும் எவ்வித ஜோடனையும் இன்றி காட்சிகளாக விரிகின்றன. ரங்கசாமி நிலம் வாங்கப் போகிறான் என்பது அமைதியான நதியாக இந்த காட்சிகளுக்கு இடையே ஓடிக்கொண்டிருக்கிறது.

ரங்கசாமி ஏன் நிலம் வாங்க வேண்டும் என்பதை வசனங்களோ, கதாநாயகனின் தேவைகள் மூலமோ சொல்லப்படுவதில்லை. அதை நாம் புரிந்துகொள்ள, வனகாளி கேரக்டரின் வாழ்க்கையே போதுமானதாக இருக்கிறது. இளவட்டங்களுடன் போட்டிபோட்டு மூட்டை தூக்கி, வயோதிகத்தால் ரத்தம் கக்கிச் சாகும் வனகாளி, ரங்கசாமி பாத்திரத்தின் வருங்கால வடிவம். மலை மத்தியில் மரணித்த எத்தனையோ வனகாளிகளுள் ஒருவனாக ரங்கசாமியும் ஆகிவிடும் ஆபத்தை,நம் மனதில் ஆர்ப்பாட்டமில்லாமல் படம் பதியச் செய்கிறது.

கல்யாணம் என்பதைக்கூட கதாநாயகனால் ரொமாண்டிக்காக அணுக முடிவதில்லை. அதையும் கூடுதல் பொறுப்பு என்பதாகவே அணுகி யோசனையில் ஆழ்கிறான். ஹீரோயின் வெட்கச்சிரிப்புடன் நிற்க, ரங்கசாமி யோசனையில் ஆழ்கின்ற அந்தக் காட்சி இந்தப் படத்தில் குறிப்பிடத்தக்க ஒன்று.

இயக்குநர் லெனின் பாரதி, ஒளிப்பதிவாளர் தேனி ஈஸ்வர், படத்தொகுப்பாளர் காசி விஸ்வநாதன் மூவரும் இணைந்து உருவாக்கியிருக்கும் இந்த திரைமொழி, எளிதில் நம் தமிழ்சினிமாவில் காணக்கிடைப்பது அல்ல.

இளையராஜாவின் இசை இயக்குநரின் கூப்பிட்ட குரலுக்கு மட்டும் வந்து கூவுகிறது. பிண்ணனி இசை என்பது கதை சொல்ல கை கொடுக்கும் தோழன் மட்டுமே என்ற தெளிவு இயக்குநருக்கும் இசைஞானிக்கும் இருந்திருக்கிறது.

படத்தில் சினிமாத்தனமான வசனங்கள் என்று ஏதுமில்லை. அந்த சூழலில் அந்த மக்கள் என்ன பேசுவார்களோ, அவை மட்டுமே வசனங்களாக வருகின்றன. வழக்கமான சினிமாவுக்கு வசனம் எழுதுவதைவிட, இது கஷ்டம். அதை வசனகர்த்தா ராசீ.தங்கதுரை சிறப்பாகச் செய்திருக்கிறார்.

கங்காணி, கடைக்கார பாக்கியம்மாள், கழுதைக்கார கிழவர், கிறுக்குக்கிழவி, கணக்கு, ஹீரோவின் தோழன், பாய், ஏலக்காய் முதலாளி என ஒவ்வொரு கதாபாத்திரமும் தனித்துவத்துடன் நம் நெஞ்சில் நிறைகிறார்கள். எல்லோருக்கும் ஒரு வாழ்க்கை இருக்கிறது. ஒரே காட்சியில்கூட அவை உணர்த்தப்பட்டுவிடுகின்றன.

கதாநாயகனாக நடித்திருக்கும் ஆண்டனி மற்றும் படக்குழுவினரின் கடின உழைப்பை எவ்வளவு பாராட்டினாலும் தகும். ‘துபாயை என் மொட்டை மாடிக்கு கொண்டு வாங்க’ என்று சொல்லும் ஜிகினா ஹீரோக்களுக்கிடையே, உண்மையான ஹீரோக்களாக இவர்கள் உயர்ந்து நிற்கிறார்கள். சினிமாவை இவ்வளவு சின்சியராக அணுகிய தன்மைக்கே தனி பாராட்டுவிழா நடத்த வேண்டும்.படத்தை தயாரித்த விஜய் சேதுபதியும் நம் நன்றிக்கு உரியவர்.

குறைகளற்ற படைப்பென்று எதுவுமில்லை. அங்கிருக்கும் மனிதர்களையே நடிக்க வைத்திருப்பதால், சில காட்சிகளில் நாடகத்தனமான வசன ஒப்புவித்தல் நடந்திருக்கிறது. அது காட்சிகளின் வீரியத்தைக் குறைக்கிறது.

ரங்கசாமி நிலம் வாங்கும் போராட்டத்தில் ஏலக்காய் மூட்டை விழுந்து சிதறும் காட்சி நம்மைப் பதற வைக்கிறது. அது விழுவதற்கான காரணம், தற்செயலானது. வாழ்க்கையில் இப்படியான சிறிய தற்செயல் நிகழ்வுகள் பெரும் பாதிப்பை ஏற்படுத்துவதைக் காணலாம். எனவே அந்தக் காட்சியை உளப்பூர்வமாக வலியுடன் ஏற்றுக்கொள்கிறோம்.

ஆனால் ரங்கசாமி கொலைசெய்யப் போகும் காட்சி படத்தின் ஆகப்பெரிய குறை. அதுவரை கட்டிக்காத்து வந்த யதார்த்தத்தை ஏலக்காய் மூட்டையாக இயக்குநர் போட்டு உடைக்கும் இடம் அது.

கல்யாணம் செய்வதற்கே யோசிப்பவன் கதாநாயகன். சகாவு கூப்பிட்டவுடன் அரிவாளுடன் கிளம்புவான் என்பது அபத்தம். கம்யூனிஸ்ட் தோழரின் துரோகத்தால் பாதிக்கப்படுவது கூலித்தொழிலாளிகள். நில முதலாளி ஆகிவிட்ட கதாநாயகனுக்கு அதனால் பாதிப்பில்லை. ரோடு வருவதும் கதாநாயகனின் நிலத்தைப் பிடுங்குவதாக இல்லை.

பின்னே, எதற்காக கதாநாயகன் கொலைசெய்யப் போகிறான்? அப்படிப் போனால் தான் ஜெயிலுக்குப் போக முடியும், நிலத்தை இழக்க முடியும்’ என்பதாலா? இந்த இடத்தில் இறுதிக்காட்சிவரை வரும் எல்லாமே வலிந்து திணிக்கப்பட்டவை ஆகின்றன.

ஆனாலும்…

’காணி நிலம் வேண்டும்’ எனும் பாரதியின் ஆசை தான் ரங்கசாமியின் ஆசையும். அதை லட்சியம் என்று சொல்லிவிட முடியாது. அதற்காக பெரிய சாகசங்களில் ரங்கசாமி ஈடுபடுவதில்லை. வருகிற வாய்ப்பை பயன்படுத்த முனைகிறான். தோற்றால், மெல்லிய வருத்ததுடன் அதைக் கடந்து செல்கிறான். உட்கார்ந்து அழவோ,திட்டங்கள் தீட்டவோ முடியாத அளவிற்கு, விடியற்காலையில் இருந்து மாலை வரை வாழ்க்கை அவனை ஓட வைத்துக்கொண்டே இருக்கிறது.

நம்மை பெரும் அளவில் தொந்தரவு செய்வது இது தான். கொஞ்சம் கண் திறந்து சுற்றுமுற்றும் பார்த்தால், விதிக்கப்பட்ட வாழ்க்கையை நொந்தபடி வாழ்ந்து மடியும் லட்சக்கணக்கான ரங்கசாமிகளைப் பார்க்கலாம்.

பெருவாரியான சினிமாக்கள் நம்மை மயக்கத்தில் ஆழ்த்தி அனுப்பும்போது,முகத்தில் அறைந்து சபிக்கப்பட்டவர்களைப் பார்க்கச் சொல்கிறது.நமது சென்ற தலைமுறைகளில் ஒன்று இப்படித்தான் தடயமே இல்லாமல் வாழ்ந்து மறைந்ததும் நினைவுக்கு வந்து தைக்கிறது.

சமையல் கட்டில் ஓரத்தில் கிடக்கும் ஏலக்காய் என்பதை இனி நாம் இயல்பாகப் பார்க்க முடியாது. கடுகும் சீரகமும்கூட ரங்கசாமிகளின் முதுகில் ஏறி நம்மை வந்தடைந்திருக்கலாம்.

சக மனிதர்களை மட்டுமல்லாமல், அன்றாடம் நாம் பயன்படுத்தும் பொருட்களைக்கூட கனிவுடன் பார்க்க வைப்பதால் தான் இது உலக சினிமா ஆகிறது.
மேலும் வாசிக்க... "மேற்குத் தொடர்ச்சி மலை – தமிழில் ஒரு உலக சினிமா"
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

0 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.

Friday, September 14, 2018

சீமராஜா - ஒரு பார்வை


கலாய்த்தும் கலாய்க்கப்பட்டும் மக்களை ரசிக்க வைத்த சிவகார்த்திகேயன். காமெடிக்கு உத்தரவாதம்  தரும் இயக்குநர் பொன்ராம். இருவருக்குமே ‘எத்தனை நாளைக்குத் தான் விளையாட்டுப் பிள்ளையாவே இருக்கிறது?’ எனும் கவலை. அடுத்தகட்ட வளர்ச்சியை விரும்பும் எவருக்கும் வரும் நியாயமான கவலை தான். ’காமெடியாகவே எடுத்துக்கொண்டிருந்தால் வளர முடியாது, காமெடியை விட்டால் ஜெயிக்க முடியாது..என்னா பண்றது?’ என்று புலிவால் பிடித்த கதையாக சிக்கிக்கொண்ட இருவரும், கொஞ்சம் விட்டுத்தான் பார்ப்போமே என்று லைட்டா புலிவாலை லூஸ்ல விட்டிருக்கிறார்கள், சீமராஜாவில்.

ஒரு நல்ல கதையை எடுத்துக்கொண்டு இதைச் செய்திருக்கலாம். முன்னொரு காலத்தில் இதுவும் நல்ல கதை தான்..

ஒரு கோயிலால் இரண்டு ஊர்களுக்கு இடையே பிரச்சினை. அரசாங்கத்தால் கோயில் பூட்டப்படுகிறது. ஹீரோவின் லவ்வருக்கு கோயிலைப் பார்க்க ஆசை. ஹீரோ பூட்டை உடைக்க, ஊர் கலவரம் ஆகிறது. பஞ்சாயத்தில் ஊர்ப் பெரியவரான ஹீரோவின் அப்பா அவமானப்படுத்தப்பட, அப்படியே ஷாக் ஆகி, பெரிசு அவுட். லாலே...லால..லாலா....ஆ!

கோயில் - சந்தை
கமல் - சிவா
சிவாஜி - நெப்போலியன்
கௌதமி-சமந்தா

அப்பா அவமானப்பட்டுச் சாவதே ஹீரோ திருந்த போதுமானதாக இருக்கிறது. ஆனால் படத்தை பெரிய பட்ஜெட்டில் எடுத்தே தீருவோம் என்று முடிவுசெய்தபிறகு, சீமராஜா அப்படி சட்டென்று திருந்திவிட முடியுமா? 90ஸ் கதையை லேட்டஸ்ட்டாகவும் மாற்ற வேண்டும்.  எனவே பாகுபலி காளகேயர் சீனை எடுத்து ஒரு ஃப்ளாஷ்பேக். கூடவே, இண்டர்வெல்லில் ஒரு பயங்கர ட்விஸ்ட்..வில்லனின் மகள் தான் ஹீரோயின்..அடேங்கப்பா

பொன்ராம் -சிவா கூட்டணியின் முந்தைய படங்களிலும் பெரிதாக கதை என்று ஒன்றும் இருக்காது.ஆனாலும் அவை மன்னிக்கப்பட்டு, கொண்டாடப்பட்டதற்குக் காரணம் அவையெல்லாம் வெறும் காமெடிப்படங்கள் என்பதாலேயே! சீரியஸாக படம் எடுக்க வேண்டும் என்று ஆசைப்பட்டபின், அதற்குரிய உழைப்பைத் தருவது தானே நியாயம்?

போர்க்கள காட்சியில் வில்லனுக்கும் ஹீரோவுக்கும் கடும் வாக்குவாதம். சிரிப்பை அடக்க முடியாமல் பார்க்கவேண்டியிருக்கிறது.ஏனென்றால், வில்லன் ஹிந்தியில் அத்தாம்பெரிய டயலாக் பேச, சிவா அதைவிடவும்பெரிய டயலாக்கை தமிழில் பேசுகிறார். வில்லனே அசந்துபோய், ஆளை விடுடா சாமி என்று சரண்டர் ஆகிறான். எவனாவது என்னிடம் ஹிந்தியில் பேசினால், வம்புக்கென்றே தமிழில் பேசுவேன். ஆனால்  14ஆம் நூற்றாண்டில் இருந்தே இந்த வழக்கம் இருந்திருக்கும் போல!

இது சிறு உதாரணம் தான். இப்படி ஒரு காமெடிப்படத்திற்கு உரிய ’அக்கறை’யுடன் தான் நிறைய சீரியஸ் சீன்கள் எடுக்கப்பட்டிருக்கின்றன.

அரதப்பழசான கதைக்கு அடுத்தபடியாக, நம்மை அதிகம் எரிச்சல் அடைய வைப்பது வில்லி சிம்ரனின் கேரக்டரும் ஆக்ட்டிங்கும். ஒரு வில்லன் கேரக்டர் நம்மை கோபப்படவைக்கலாம்,பயப்பட வைக்கலாம். ஆனால் இப்படி எரிச்சல்பட வைக்கக்கூடாது. இந்த மாதிரி கத்திப்பேசுவது சிம்ரனின் கம்ஃபோர்ட் ஜோன் கிடையாது. கூடவே அந்த இம்சையான பிண்ணனிக் குரலும் சேர்ந்துகொள்ள, அப்பப்பா. சிம்ரன் ரசிகன் அல்லாத என்னாலேயே தாங்க முடியவில்லை..பாவம் இடுப்பழகி ஃபேன்ஸ்!

ஹீரோ இமேஜுக்கு பில்டப் ஏற்ற வேண்டும் என்றால், ஸ்ட்ராங்கான வில்லன் கேரக்டர் இருந்தால் தான் எடுபடும். அதிலேயே கோட்டைவிட்டுவிட்டு, சூரியையும் பனானா பவுன்ராஜையும் வைத்து வசனத்திலேயே சிவாவிற்கு பில்டப் ஏற்றுகிறார்கள். அது ஆங்ரி மேக்கிங் காமெடி ஆகிறது!

காமெடியில் கலக்கி எடுத்த ஒரு வெற்றிக்கூட்டணி மூன்றாவது முறையாகச் சேரும்போது எதிர்பார்ப்பு எகிறிவிடும். அதை பூர்த்தி செய்யவில்லை என்றால், அந்த எதிர்பார்ப்பே படத்திற்கு ஆப்பாக ஆகிவிடும். இங்கே சிவா-சூரி காமெடியில் அது தான் நடந்திருக்கிறது. ராமர் சீன், சிறுத்தை சீன் தவிர்த்து மற்ற இடங்களில் எல்லாம் சிரிப்பே வரவில்லை. கடைசி முக்கால் மணி நேரம் முழுக்க சீரியஸாகவே படம் நகர்கிறது. காமெடியை எதிர்பார்த்து வந்தவர்களுக்கு பெரிய ஏமாற்றத்தையே இது கொடுக்கிறது.

படத்தில் ப்ளஸ் பாயிண்ட்ஸ் என்றால்..

- சிவா இதிலும் ஆக்டிவ்வாக, கலகலப்பாக இருக்கிறார்.அந்த ராஜா கெட்டப்கூட நன்றாகவே செட் ஆகியிருக்கிறது.

- சமந்தா..படத்தில் ஆகப்பெரிய ப்ளஸ் பாயிண்ட் இவர்தான்.

- இமானின் இரண்டு மெலோடிகள்

- போர்க்காட்சிகள் தேவையில்லாத ஆணி என்றாலும் மேக்கிங் நன்றாகவே இருந்தது.

- டபுள் மீனிங்கோ, ஆபாசமோ இல்லாமல் பொன்ராம் மூன்றாவது படத்தையும் நீட்டாக கொடுத்திருப்பது!


விடுமுறை நாட்களைக் குறி வைத்து, அதிக தியேட்டர்களில் ரிலீஸ் செய்வதால் எப்படியும் முதல் மூன்று நாட்களுக்கு ஹவுஸ்ஃபுல் ஆகிவிடும். கடைசி இரண்டு படங்களுமே இப்படி ரிலீஸ் ஆகி தப்பித்தவை தான். ஆனால் இந்த ட்ரிக் எத்தனை நாட்களுக்கு கை கொடுக்கும் என்று சிவா யோசிக்க வேண்டும்.
மேலும் வாசிக்க... "சீமராஜா - ஒரு பார்வை"
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

0 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.

Wednesday, August 8, 2018

கலைஞரின் சாதனைகள் - 2



நன்றி : இதை எழுதிய உடன்பிறப்புக்கு...!

கலைஞர் என்ன கிழித்துவிட்டார்?தெரிந்து கொள்ளுங்கள்.இந்த சாதனையெல்லாம் வேறு ஒரு அரசியல் தலைவரால் நினைத்துப் பார்க்கவேணும் முடியுமா?
விடைபெறுகிறேன் உடன்பிறப்புகளே....
1967-1969
1. மெட்ராஸ் மாகாணம் தமிழ்நாடு என்று மாற்றப்பட்டது.
2. சுயமரியாதை திருமணத்திற்கு சட்ட அங்கீகாரம்.
3. தமிழ் மற்றும் ஆங்கிலத்திற்கு இருமொழி அங்கீகாரம்
4. அரசாங்க ஊழியர்கள் பயன்படுத்தாத விடுமுறைக்கு சம்பளம்.
1969 - 1971
1. போக்குவரத்து துறை தேசியமயமாக்கப்பட்டது.
2. போக்குவரத்து கழகம் துவங்கப்பட்டது.
3. அனைத்து கிராமங்களுக்கும் மின்சாரம் வசதி
4. 1500 மக்களுக்கு மேல் வசிக்கும் கிராமங்கள் அனைத்திற்கும் சாலை வசதி கொடுக்கப்பட்டது.
5. குடிசை மாற்று வாரியம் துவக்கம்
6. குடிநீர் விநியோகம் மற்றும் வடிகாலுக்கு தனி வாரியம் அமைக்கப்பட்டது.
7. இலவச கண் மருத்துவ முகாம்.
8. பிச்சைகாரர்கள் மறுவாழ்வுத் திட்டம் துவங்கப்பட்டது.
9. கைரிக்ஷாக்களை ஒழித்து அந்த தொழிலாளர்களுக்கு சைக்கிள் ரிக்ஷா வழங்கும் திட்டம்.
10. எஸ்.சி,எஸ்.டி மக்களுக்கு இலவச கான்க்ரீட் வீடு கட்டி கொடுக்கும் திட்டம்.
11. விவசாயிகளுக்கு என்று நியாயமான ஊதியம் நிர்ணயிக்கப்பட்டது.
12. வழங்கப்பட்ட வீடுகளுக்கு பயனாளிகளே உரிமை கொள்ளும் திட்டம் கொண்டு வரப்பட்டது.
13. இந்தியாவிலேயே முதன்முதலாக போலீஸ் கமிஷன் துவங்கப்பட்டது.
14. பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் மக்களுக்கு தனி அமைச்சகம் துவங்கப்பட்டது.
15. பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீடு 25 சதவீதத்திலிருந்து 31 சதவீதமாகவும் சிறுபான்மையினருக்கு 16 சதவீதத்திலிருந்து 18 சதவீதம் உயர்த்தப்பட்டது.
16. பியுசி வரை இலவசக் கல்வி
17. உழைப்பாளர் தினமான மே முதல் நாள் சம்பளத்துடன் கூடிய விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டது.
18. நபிகள் நாயகத்தின் பிறந்த நாள் விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டது.
1971 - 1976
1. கோவையில் முதல் வேளாண் பல்கலைக்கழகம் துவங்கப்பட்டது.
2. அரசாங்க ஊழியர்களின் குடும்பத்தாருக்கும் பயன்தரும் வகையிலான நிதித் திட்டங்கள் துவங்கப்பட்டது.
3. அரசாங்க ஊழியர்களிடத்தில் செயல்பட்ட ரகசிய அறிக்கை முறை ஒழிக்கப்பட்டது.
4. மீனவர்களுக்கு இலவச வீடு வழங்கும் திட்டம்.
5. கோவில்களில் கொண்டு வந்து விடப்படும் குழந்தைகளுக்காக குறிப்பாக பெண் குழந்தைகளுக்காக கருணை இல்லம் துவங்கப்பட்டது.
6. சேலம் எஃகு ஆலை துவங்கப்பட்டது.
7. நில உச்சவரம்பு திட்டத்தின்படி தனிநபர் வைத்திருக்கும் நில உடைமைகளுக்கு உச்சவரம்பு நிர்ணயிக்கப்பட்டது.
8. நெய்வேலியில் இரண்டாவதாக சுரங்கம் வெட்டும் திட்டம்.
9. தூத்துக்குடியில் பெட்ரோலியம் மற்றும் தொழிற்சாலைகளுக்கு பயன்படும் கெமிக்கல்கள் தயாரிக்கும் திட்டம்.
10. தமிழ்நாடு சிறுதொழில் வளர்ச்சி கழகமான சிட்கோ துவங்கப்பட்டது.
11. தமிழ் பேசும் முஸ்லீம்களைப் போலவே உருது பேசும் முஸ்லீம்களும் பின்தங்கியோர் பட்டியலில் சேர்க்கப்பட்டனர்.
12. வறண்ட நிலங்களுக்கு நிலவரியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டது.
13. ஆட்சியர்களிடம் மக்கள் நேரடியாக மனு அளிக்கும் விதமாக மனுநீதி திட்டம் துவங்கப்பட்டது.
14. பூம்புகார் கப்பல் கழகம் துவங்கப்பட்டது.
15. கொங்கு வேளாளர் பின்தங்கிய வகுப்பு பட்டியலில் சேர்க்கப்பட்டனர்.
16. பசுமை புரட்சி கொண்டு வரப்பட்டது.
1989 - 1991
1. வன்னியர் மற்றும் சீர்மரபினருக்கு 20 சதவீத இடஒதுக்கீடு கொண்டு வரப்பட்டது.
2. மிகவும் பிற்படுத்தப்பட்டோர் வகுப்பிலிருந்து வரும் குழந்தைகள் மற்றும் பிற்படுத்தபட்டோர் வகுப்பிலிருந்து வருமான உச்சவரம்புக்கு உட்பட்ட குடும்பத்தின் குழந்தைகளுக்கு டிகிரி வரையில் இலவச கல்வி.
3. சிறுபான்மையினருக்கு இலவசக் கல்வி. பட்டப்படிப்பு வரையில் பெண்களுக்கு வருமான உச்சவரம்பு.
4. நாட்டிலேயே முதன் முதலாக விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கப்பட்டது.
5. பெண்களுக்கும் சமமான சொத்துரிமை வழங்கும் திட்டம்.
6. அரசு பணிகளில் பெண்களுக்கு 30 சதவீத இடஒதுக்கீடு.
7. ஆசியாவிலேயே முதன்முதலாக தமிழ்நாடு கால்நடை மற்றும் விலங்கு அறிவியல் பல்கலைக்கழகம் துவங்கப்பட்டது.
8. ஏழைப் பெண்களுக்கு திருமண உதவித்தொகை வழங்கும் திட்டம்.
9. கைம்பெண் மறுமண உதவித்தொகை திட்டம்.
10. சாதி மாறி திருமணம் செய்து கொள்பவர்களுக்கு உதவித்தொகை திட்டம்.
11. நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் துவங்கப்பட்டன.
12. விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யும் பொருட்களுக்கு வண்டி வாடகைக்கு ஊக்கத்தொகை வழங்கும் திட்டம்.
13. ரேசன் கடை ஆரம்பிக்கப்பட்டது.
14. கர்பிணி பெண்களுக்கு உதவித்தொகை.
15. தமிழக அரசு ஊழியர்களுக்கு மத்திய அரசுக்கு இணையான ஊதிய உயர்வு.
16. மகளிர் சுய உதவிக்குழுக்கள் மூலமாக பத்து லட்சம் பெண்களுக்கு நிதி உதவி.
17. மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் துவங்கப்பட்டது.
18. பாவேந்தர் பாரதிதாசன் பல்கலைக்கழகம் துவங்கப்பட்டது.
19. டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலைக்கழகம் துவங்கப்பட்டது.
20. காவேரி தீர்ப்பாயத்திற்கு முயற்சிகள் எடுக்கப்பட்டன.
1996 - 2001
1. ஆட்சி பொறுப்பேற்ற ஆறுமாதத்திற்கு உள்ளாக தடைப்பட்ட இடங்களுக்கு தேர்தல் நடத்தி முடிவு அறிவிக்க வேண்டும் என்ற முறை கொண்டு வரப்பட்டது.
2. சட்டப்பேரவையில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு. இவர்களில் இரண்டு பெண் மேயர்கள் சிறுபான்மையினராக இருக்க வேண்டும் என்ற விதியும் கொண்டு வரப்பட்டது.
3. மெட்ராஸ் சென்னை என்று பெயர் மாற்றப்பட்டது.
4. மருத்துவம் மற்றும் பொறியியல் கல்லூரிகளில் சேர்க்கைக்கு ஒற்றை சாளர முறை கொண்டுவரப்பட்டது.
5. புதிய தொழில்துறை கொள்கைகள் வெளிப்படையாக கொண்டுவரப்பட்டது.
6. புதிய தொழில் துவங்குவதற்கான உரிமங்களை பெற ஒற்றை சாளர முறை கொண்டு வரப்பட்டது.
7. சாலை மற்றும் புதிய மேம்பாலங்கள் கட்டப்பட்டது.
8. கிராமங்களில் கான்க்ரீட் சாலை அமைக்கப்பட்டது.
9. ஆறுகள்,கால்வாய் போன்றவை தூர்வாரும் திட்டம்.
10. இந்தியாவிலேயே முதன் முதலாக சுகாதார மையம் 24 மணி நேரமும் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டது.
11. எம்.எல்.ஏ தொகுதியின் மேம்பாட்டு நிதி என்று தனியாக நிதி ஒதுக்கப்பட்டது.
12. அனைத்து கிராமங்களுக்கும் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கும் திட்டம்.
13. கிராமங்களில் படித்து வரும் மாணவர்கள் தொழில்முறை படிப்புகளில் சேரும் போது 15 சதவீத இடஓதுக்கீடு வழங்கும் திட்டம்.
14. சமத்துவபுரம் துவங்கப்பட்டது.
15. சாதி பாகுபாட்டினை ஒழிக்க திட்டங்கள் கொண்டுவரப்பட்டது.
16. அனைத்து கிராமங்களுக்கும் போக்குவரத்து வசதி ஏற்படுத்தும் வகையில் மினிபஸ் திட்டம் கொண்டுவரப்பட்டது.
17. இந்தியாவிலேயே முதன்முதலாக டாக்டர் அம்பேத்கர் சட்டப்பல்கலைக்கழகம் துவங்கப்பட்டது.
18. சேலத்தில் பெரியார் பல்கலைக்கழகம் துவங்கப்பட்டது.
19. உலக தமிழர்களுக்கு உதவும் வகையில் மெய்நிகர் பல்கலைக்கழகம் துவங்கப்பட்டது.
20. உருது அகாதெமி ஆரம்பிக்கப்பட்டது.
21. சிறுபான்மையினரின் பொருளாதரத்தை மேம்படுத்த திட்டம் கொண்டுவரப்பட்டது.
22. உழவர் சந்தை கொண்டு வரப்பட்டது.
23. ஏழை மக்களுக்கு இலவச மருத்துவ உதவி வழங்கும் வருமுன் காப்போம் திட்டம் கொண்டு வரப்பட்டது.
24. கால்நடை பராமரிப்பு திட்டம் கொண்டு வரப்பட்டது.
25. பள்ளிகளில் வாழ்வெளித் திட்டம் கொண்டு வரப்பட்டது.
26. கன்னியாகுமாரியில் 133 அடி திருவள்ளுவர் சிலை நிறுவப்பட்டது.
27. சென்னையில் டைட்டல் பார்க் அமைக்கப்பட்டது.
28. அரசு கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கு கம்ப்யூட்டர் பயிற்சி வகுப்பு.
29. புறம்போக்கு நிலங்களில் வசித்த இரண்டு லட்சத்திற்கும் அதிகமான குடும்பத்தினருக்கு வீடு வழங்கும் திட்டம்.
30. 1996 ஆம் ஆண்டு முதல் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வுகளில் மாவட்ட அளவில் மற்றும் மாநில அளவில் முதல் மூன்று இடங்களை பிடிக்கும் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டம்.
31 ஆசியாவிலேயே மிகப்பெரிய பேருந்து நிலையமாக கோயம்பேடு பேருந்து நிலையம் மாற்றப்பட்டது.
32. தென்மாநிலங்கள் பொருளாதார வளர்ச்சிக்கு தனித்திட்டங்கள் கொண்டு வரப்பட்டது.
33. பெண்களுக்கான சிறுவணிக கடன் திட்டம்.
34. வேளாண் ஊழியர்களுக்கு தனிநபர் நல வாரியம் அமைக்கப்பட்டது.
35 .ஒழுங்குபடுத்தப்படாத ஊழியர்களுக்கு தனி நல வாரியம் ஏற்படுத்தப்பட்டது.
36. தமிழ் அறிஞர்கள் மற்றும் தியாகிகளுக்கு மணிமண்டபம் கட்டும் திட்டும்.
37. சத்துணவில் முட்டை வழங்கும் திட்டம்.
38. இருபது அணைகள் வரை கட்டப்பட்டது.
39. ஒன்பது மாவட்டங்களின் ஆட்சியர் அலுவலகம் புதிதாக கட்டப்பட்டது.
40. மதுரையில் உயர்நீதிமன்ற கிளை அமைப்பு.
41. மாணவர்களுக்கு இலவச பஸ்பாஸ் வழங்கும் திட்டம்.
42. அண்ணா மறுமலர்ச்சி திட்டம் துவங்கப்பட்டது.
43. நமக்கு நாமே திட்டம் துவங்கப்பட்டது.
44. குடும்ப நலத்திட்டம் கொண்டு வரப்பட்டது.
45. 104 கோடி ரூபாய் செலவில் சென்னை பொது மருத்துவமனைக்கு புதிய கட்டிடம் கட்டப்பட்டது.
46. 13 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்களுக்கு மறுவாழ்வு திட்டம்.
47. முதன்முதலாக பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட சாலை போடும் தொழிலாளர்கள் நியமிக்கப்பட்டார்கள்.
48. தமிழ் அறிஞர்களின் படைப்புகள் தேசியமயமாக்கப்பட்டது.
49. 500 கோடி செலவில் 350 மின்சார துணை நிலையங்கள் ஆரம்பிக்கப்பட்டன.
50. ஒப்பந்த தொழிலாளர்களுக்கு பென்சன் வழங்கும் திட்டம்.
51. போக்குவரத்து ஊழியர்களுக்கு பென்சன் வழங்கும் திட்டம்.
52. தூத்துக்குடி,கன்னியாகுமாரி ஆகிய மாவட்டங்களில் புதிய மருத்துவ கல்லூரி துவங்கப்பட்டது.
2006 - 2011
1. 1 கிலோ அரிசி ஒரு ரூபாய்க்கு வழங்கும் திட்டம்.
2. ஐம்பது ரூபாய்க்கு பத்து பொருட்கள் வீதம் ரேசன் கடைகளில் எண்ணெய்,பருப்பு,கோதுமை போன்றவை மாநிய விலையில் வழங்கும் திட்டம்.
3. 22 லட்சத்திற்கும் மேற்பட்ட விவசாய குடும்பங்கள் பயன்பெறும் வகையில் 7000 கோடி வரையில் கடனுதவி வழங்கும் திட்டம்.
4. உரிய காலத்தில் வங்கிக் கடனை திருப்பி செலுத்தும் விவசாயிகளுக்கு வட்டி இல்லை என்ற முறையும் கொண்டு வரப்பட்டது.
5. நெல் மற்றும் அரிசி வகைகளுக்கு கொள்முதல் விலை நிர்ணயிக்கப்பட்டது.
6. கரும்பு விவசாயிகளுக்கு உதவி செய்யும் வகையில் ஊக்கத்தொகை வழங்கும் திட்டம்.
7. 189 கோடி செலவில் காவிரி மற்றும் குண்டாறு இணைப்புத் திட்டம்.
8. 369 கோடி செலவில் தாமிரபரணி-கருமேனியாரு-நம்பியாரு இணைக்கும் திட்டம்.
9. ஒழுங்குப்படுத்தப்படாத ஊழியர்களுக்கு என்றே தனி வாரியம் அமைக்கப்பட்டது.
10. ஒரு கோடிக்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு இலவச வீடு வழங்கும் திட்டம்.
11. காமராசர் பிறந்த நாள் கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாட சிறப்பு சட்டம் இயற்றப்பட்டது.
12. மதிய உணவு திட்டத்தின் கீழ் முட்டை மற்றும் வாழைப்பழம் வாரத்தில் ஒரு நாள் வழங்கும் திட்டம்.
13. பொது நுழைவுத் தேர்வு முறை ரத்து செய்யப்பட்டது.
14. அனைத்து பள்ளிகளிலும் பத்தாம் வகுப்பு வரை தமிழ் மொழி கட்டாயமாக்கப்பட்டது.
15. செம்மொழி தமிழ் மையம் மைசூரிலிருந்து சென்னைக்கு மாற்றப்பட்டது.
16. கும்பாபிஷேகம் மற்றும் கோவில் மாரமத்து பணிகளுக்கு 523 கோடி ஒதுக்கீடு.
17. அர்ச்சகர்கள் மற்றும் பூசாரிகளுக்கு 277 லட்சம் செலவில் பத்தாயிரம் சைக்கிள்கள் இலவசமாக வழங்கும் திட்டம்.
18. மூவலூர் ரமாமிர்தம் அம்மையார் நிதி உதவித்திட்டத்தின் கீழ் ஏழைப்பெண்களின் திருமணத்திற்கு உதவித் தொகை பத்தாயிரத்திலிருந்து இருபத்தைந்தாயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டது.
19. அரசு ஊழியர்களுக்கு புதிய மெடிக்கல் இன்ஸூரன்ஸ் திட்டம்.
20. நலமான தமிழகம் திட்டம் என்ற பெயரில் இதயம், சர்க்கரை நோய் மற்றும் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துவது மற்றும் இலவச மருத்துவ முகாம் நடத்து திட்டம்.
21. கலைஞர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் ஏழை மக்கள் இலவசமாக மருத்துவ அறுவை சிகிச்சை மேற்கொள்ளும் திட்டம்.
22. மத்திய அரசின் ஒத்துழைப்புடன் 108 இலவச ஆம்புலன்ஸ் வசதி.
23. 37 புதிய தொழிற்சாலைகள் ஆரம்பிக்க கையெழுத்து இட்டு 46 ஆயிரம் கோடி முதலீடுகள் பெறப்பட்டது. இதன் மூலமாக இரண்டு லட்சத்திற்கும் அதிகமான மக்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தப்பட்டது.
24. கல்வி கற்று வேலை வாய்ப்பு இல்லாத இளைஞர்களுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டம்.
25. கோவை,திருச்சி,மதுரை மற்றும் திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் டைட்டல் பார்க் ஆரம்பிக்கப்பட்டது.
26. மாற்றுத்திறனாளிகளுக்கு மாத உதவித்தொகை உயர்த்தப்பட்டது.
27. அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் படி பத்தாயிரம் கிராமங்களுக்கு அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகள் மேற்கொள்ளப்பட்டன.
28. 57 ஆயிரம் கிலோமீட்டருக்கும் அதிகமான சாலையில் பன்னிரெண்டாயிரம் கோடி செலவில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
29. 4,945 கிலோமீட்டர் நீளமான சாலை இருவழிச் சாலையாக மாற்றப்பட்டது.
30. வறண்ட நிலங்கள் மற்றும் சதுப்பு நிலத்திற்கு ஏற்ப நியாயமான வரி நிர்ணயிக்கப்பட்டது.
31. பேருந்துகளுக்கு கட்டணம் உயர்த்தாமல் புதிதாக 300 பேருந்துகள் கூடுதலாக இயக்கப்பட்டன.
32. அருந்ததியர் மக்களுக்கு மூன்று சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட்டது.
33. அனைத்து சமூகத்தினரும் அர்ச்சகராகும் திட்டம்.
34. சாதி பாகுபாடு இல்லாத சமூகத்தை உருவாக்கும் வகையில் பெரியார் நினைவு சமுத்துவபுரம் கூடுதலாக உருவாக்கப்பட்டது.
35. சென்னை கோட்டூர்புரத்தில் 171 கோடி செலவில் உலகத்தரத்தில் அண்ணா நினைவு நூலகம் கட்டப்பட்டது.
36. ஓமந்தூரார் அரசு எஸ்டேட்டில் புதிய சட்டமன்ற வளாகம் 1200 கோடி செலவில் கட்டப்பட்டது.
37. 100 கோடி செலவில் அடையார் சுற்றுச்சூழல் ஆராய்ச்சி பூங்கா கட்டப்பட்டது.
38. சென்னையில் செம்மொழி பூங்கா கட்டப்பட்டது.
39. மிஞ்சூர்,நிமிலியில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டம்.
40. ஜப்பான் வங்கி உதவியுடன் 14,600 கோடி செலவில் மெட்ரோ ரயில் திட்டம்.
41. ஓகேனேக்கல் கூட்டு குடிநீர் திட்டம்.
42. ராமநாதபுரம்-பரமக்குடி கூட்டு குடிநீர் திட்டம் 630 கோடி செலவில் நிறைவேற்றப்பட்டது.
43. அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்ட சலுகைகள் திரும்பி வழங்கப்பட்டன. TESMA மற்றும் ESMA போன்றவை நிறுத்தப்பட்டன.
44. ஆறாவது ஊதியக் குழுவின் பரிந்துரைகள் நடைமுறைபடுத்தப்பட்டன.
45. கலைஞர் வீட்டமைப்பு திட்டத்தின்படி 21 லட்சம் குடிசை வீடுகள் கான்க்ரீட் வீடுகளாக மாற்றப்பட்டன.
46. பத்திரிகையாளர்களுக்கு வழங்கப்படும் பென்ஷன் ஐந்தாயிரமாக உயர்த்தப்பட்டது.
47. கோவையில் முதல் உலக செம்மொழி மாநாடு நடத்தப்பட்டது.
48. 119 புதிய நீதிமன்றங்கள் திறக்கப்பட்டன. 302 கோடி செலவில் நீதிமன்றங்களில் உள்கட்டமைப்பு வசதிகள் மேற்கொள்ளப்பட்டன.
49. 13வது நிதி ஆணையத்தின் பரிந்துரைப்படி நிலுவையில் இருக்கிற வழக்குகளை விசாரிக்க மாலை நேரம் மற்றும் விடுமுறை நாட்களில் நீதிமன்றம் செயல்பட வைத்தது.
50. அண்ணா தொழில்நுட்ப பல்கலைக்கழகம் திருச்சி, மதுரை, கோவை, திருநெல்வேலியில் துவங்கப்பட்டது.
51. அரசு உதவி பெறும் பள்ளிகளில் 11 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்காக 331 கோடி நிதி ஒதுக்கப்பட்டது.
52. சமச்சீர் கல்வித்திட்டம் கொண்டு வரப்பட்டது.
53. அனைத்து தனியார் பள்ளிகளிலும் கட்டணம் நிர்ணயம் செய்ய தனி கமிஷன் அமைக்கப்பட்டது.
மேலும் வாசிக்க... "கலைஞரின் சாதனைகள் - 2 "
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

0 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.

Wednesday, July 4, 2018

சுப்ரமணியபுரம் : தமிழில் ஒரு உலக சினிமா




உலகம் முழுக்க பல்வேறு மொழிகளில் பல்லாயிரம் சினிமாக்கள் படைக்கப்பட்டுக்கொண்டே இருக்கின்றன. அவற்றில் சில முத்துக்கள் மட்டுமே உலக சினிமா என்று கொண்டாடப்படுகின்றன. உலக சினிமா என்பதற்கான வரையறை சிக்கலானதாக இருந்தாலும், எளிமையாகப் பின்வருமாறு சொல்லலாம். தன் சொந்த மக்களின் வாழ்க்கையை யதார்த்தமாக முன்வைக்கின்ற, அதே நேரத்தில் மனித வாழ்வின் அபத்தத்தை/மேன்மையை நமக்கு உறைக்கின்றாற் போன்று சொல்கின்ற, இதுவரை நாம் தரிசிக்காத கோணத்தில் வாழ்வைப் பேசுகின்ற சினிமாவே உலக சினிமா ஆகின்றது. அந்த வகையில் இந்த தலைமுறை இயக்குநர்களின் படைப்பில் முக்கியமான உலக சினிமாவாக நிற்கின்றது சுப்ரமணியபுரம்.

படத்தின் கதை நீங்கள் அறிந்ததே என்றாலும் சுருக்கமாக அதைப் பார்த்துவிட்டே முன்னகர்வோம். 1980ல் வாழ்ந்த அழகர், பரமன், டும்க்கான், காசி, டோப்பன் ஆகிய 5 நண்பர்களின் கதை இது. அழகருக்கு முன்னாள் கவுன்சிலர் பெண் துளசிடன் காதல். வேலையில்லாமல், ஊரில் சண்டியர்த்தனம் செய்யும் இவர்களை போலீஸ் தொல்லையில் இருந்து காப்பது அந்த அரசியல்வாதியே. எனவே அழகரும் நண்பர்களும் அந்த அரசியல்வாதியின் நலனுக்காக ஒரு அரசியல் கொலையைச் செய்துவிட்டு, ஜெயிலுக்குப் போகிறார்கள். அரசியல்வாதி தங்களைக் காப்பார் எனும் நம்பிக்கை பொய்த்துப்போகையில், சிறையில் இருக்கும் இன்னொரு தாதா உதவுகிறார். அவருக்காக இன்னொரு கொலை செய்ய, வன்முறைச் சுழலுக்குள் வாழ்க்கை சிக்குகின்றது. அரசியல்வாதியைப் பழி வாங்க இவர்கள் முயல, காதலியின் துரோகத்தால் அழகர் கொல்லப்படுகிறான். அதற்கு பரமன் பழி வாங்க, காசியின் துரோகத்தால் பரமன் கொல்லப்படுகிறான். சிறைத்தண்டனை முடிந்து திரும்பும் காசியை, டும்க்கான் காத்திருந்து பழி வாங்குகிறான்

இதில் சுவாரசியமான விஷயம் என்னவென்றால் கிளைமாக்ஸ் காட்சி ஷூட்டிங்வரை, சசிக்குமார் தவிர யாருக்குமே படத்தின் கிளைமாக்ஸ் தெரியாது. எனவே தான் கண்கள் இரண்டால் பாடலிலும் படத்திலும் காதல் உயிர்ப்புடன் இருந்தது

மனிதர்களின் வாழ்க்கையின் பெரும் அபத்தமே, அது நம்பிக்கை எனும் பலவீனமான கண்ணியால் இணைக்கப்பட்டிருப்பது தான்.  அந்த நம்பிக்கைக்கண்ணி அறுந்தால், ஒரு நண்பருடன் அறையைப் பகிர்வதில் ஆரம்பித்து, பிறருடன் நம் சொந்த விஷயங்களைப் பகிர்வது வரை எல்லாமே நின்று விடும். சமூக வாழ்க்கையே சிக்கலாகி விடும். சமூக வாழ்க்கையின் அச்சாணியே அந்த நம்பிக்கையில் தான் இருக்கிறது.

எனவே தான் எல்லாக் கலைகளும் வாழ்க்கையின் மேன்மையை முன்வைக்கின்றன. வாழ்க்கையின் மற்றும் உறவுகளின் நேர்மறைத்தன்மையைப் பேசுகின்றன. ’பியூட்டிபுல் மைண்ட்படம் போன்று வாழ்க்கையை நேர்மறையாய் எதிர்கொள்வது பற்றிப் பேசுகின்றன. ஆனாலும் வரலாறு முழுக்க, துரோகத்தின் ரத்தத்தடம் விரவிக்கிடக்கின்றது. வாழ்க்கையில் ஏதேனும் ஒரு கட்டத்தில் ஏதேனும் ஒரு துரோகத்தை எதிர்கொள்ளாமல் தப்பிப்பவர் வெகு சிலரே

ஆனாலும் தமிழ்சினிமா போன்ற கமர்சியல் ஊடகத்தில், துரோகம் போன்ற வாழ்வின் அபத்தங்களை முன்வைப்பது கடினமான் காரியம். அதை முன்வைத்து வெற்றி பெறுவது மிகவும் கடினமான காரியம். அந்த வகையில் தான் சுப்பிரமணியபுரம் தமிழ்சினிமாவின் மகுடங்களில் ஒன்றாக இருக்கிறது

உண்மையில் காதலின் துரோகம் சினிமாவுக்குப் புதிதல்ல. ஒரு கதாநாயகி ஏமாற்றுவதும், இன்னொரு கதாநாயகிரோசாப்பூ சின்ன ரோசாப்பூஎன்று எண்ட்ரி கொடுப்பதும் நம் சினிமாக்களில் சகஜம் தான். ஆனாலும் அவற்றை துரோகம் என்பதை விட ஏமாற்றுதல்/கழட்டி விடுதல் என்றே நாம் புரிந்து கொள்கிறோம். ஏனென்றால் அது திரும்பிப் போக முடியாத ஒற்றை வழிப்பாதை அல்ல. ஆனால் துரோகம் என்பது நம்மை முழுமையாக ஆன்மரீதியாகவோ, உடல்ரீதியாகவோ அழித்து விடுவது

சுப்பிரமணியபுரத்தில் துளசியின் துரோகம், முற்றாக அழகரை அழித்து விடுகிறது. அதனால் தான் இந்தப்படம் பார்வையாளனுக்கு பேரதிர்ச்சியைக் கொடுத்தது. அதுவும் வாழ்க்கைக்கு மிக நெருக்கமான, யதார்த்தமான ஒரு கதையில், இத்தகைய முடிவு தந்த வலி பெரியது

அது போன்றதே காசியின் துரோகமும். துளசியின் துரோகத்திற்காவது லீடு காட்சிகள் உண்டு. காசியின் துரோகம், முகத்தில் அறைவது. ஒரு நிமிடம், நாம் கொண்டிருக்கும் எல்லா நம்பிக்கைகளையும் சிதற வைப்பது. அவ்வாறு சொல்ல வந்த விஷயத்தை, நேரடியாக தெளிவாகச் சொன்னதாலேயே இந்தப் படம் உயர்ந்த இடத்தினைப் பெற்றது. ஆனாலும் காசியின் கேரக்டர், காசு இல்லாமல் சந்திக்கும் அவமானங்கள் படம் முழுக்க சொல்லப்பட்டிருக்கும். ஒரு பீடிக்குக்கூட கெஞ்சும் நிலைமை, எச்சில் டீ முகத்தில் பட்டாலும் ஒன்றும் சொல்ல முடியாத சூழ்நிலை என பணம்-மரியாதை இல்லாமல் வாழும் ஒரு கேரக்டராகவே அது சித்தரிக்கப்பட்டிருக்கும். அதனாலேயே அவனது துரோகம், அதிர்ச்சி என்றாலும் யதார்த்தமே என்று உறைத்தது.

சுப்பிரமணியபுரம் படத்தின் சிறப்பே, சினிமாவில் யாரும் சொல்லாத புதிய விஷயங்களைக் கொண்டிருந்ததே. அதே நேரத்தில் அந்த புதிய விஷயங்கள், நாம் வாழ்வில் சந்திக்கும் உண்மையாகவும் அமைந்தது தான் படத்தின் தரத்தைக் கூட்டியது. படத்தில் வில்லன் என காசியையோ, துளசியையோ, காசியின் சித்தப்பா கனகுவையோ நாம் நினைத்தாலும், படத்தில் முக்கிய வில்லன் கேரக்டர், கவுன்சிலரின் மனைவி தான்! அவள் பேசும் ஒரு வசனம் தான் பலரின் வாழ்வைப் புரட்டிப்போடுகிறது. முன்னாள் கவுன்சிலர் ஆகி, பதவி-அதிகாரம் இழந்து நிற்கும் கணவனைப் பார்த்து அவள் சொல்லும்திருவிழாக்குக்கூட மூஞ்சியைக் காட்ட முடியாம, மாடில போய் உட்கார்ந்துக்கிட்டாரு பொட்டச்சி மாதிரிஎனும் வசனம் தான் பலரின் வாழ்வை அழிக்கும் நெருப்புப் பொறி.

வாழ்க்கையில் யாரும் முழு வில்லனாகவோ முழு கதாநாயகனாகவோ இருப்பதில்லை. சூழ்நிலைக்கேற்ப, உறவுக்கேற்ப ஏதேனும் ஒரு வேடத்தை அணிந்து கொள்கிறோம். அதை சசி இந்தப் படத்தில் நன்றாகவே காட்டியிருப்பார். கேரக்டரைசேசனில் அத்தகைய நுணுக்கமான வேலைப்பாடுகளில் தான் சசிக்குமாரின் திறமை தெரிகின்றது. கவுன்சிலரின் மனைவிக்குதன் கணவன் நிரந்தர வேலையிலோ, மதிப்பு தரும் பதவியிலோ இல்லையேஎனும் சராசரிப் பெண்ணின் கவலை. கவுன்சிலருக்கு முன்பு மாதிரி கௌரவமாக வாழ பதவி வேண்டுமே எனும் கவலை, இதனால் எழும் கணவன் - மனைவி பிரச்சினையில் குடும்ப அமைதி குலையுதே எனும் கவலை கனகுவுக்கு, துளசிக்கோ காலில் விழும் குடும்பத்தை எப்படி உதறுவது எனும் கவலை, காசிக்கு பணம்-மரியாதை இல்லையே எனும் கவலை. இப்படி படத்தில் எல்லாருமே அவரவர்க்குரிய நியாயங்களுடன் தான் நிற்கின்றார்கள். நீங்கள் எந்த பாத்திரத்தின் சார்புநிலை எடுத்தாலும், அந்த பாத்திரத்தை நியாயப்படுத்திவிட முடியும். தமிழ்சினிமாவில் சமீபகாலத்தில், இத்தகைய கேரக்டரைசேசனுடன் எந்தவொரு படமும் வந்ததில்லை என்று சொல்லலாம்.

இயல்பு வாழ்க்கைக்கும், ரவுடியிசம் போன்ற வன்முறை வாழ்க்கைக்கும் இடையில் இருப்பது உணர்ச்சிகளால் ஆன ஒரு மெல்லிய திரை தான். எந்த நிமிடமும் சிறு உணர்ச்சிவசப்படலும் அந்த மெல்லிய திரையைக் கிழித்து, நம்மை வேறு உலகத்திற்குள் தள்ளி விடும். உணர்ச்சிவசப்பட்டு கையை/தலையை வெட்டிவிட்டு, சிறைத்தண்டனை பெற்று, ஒரு நிமிட தவறுக்காக வாழ்நாளெல்லாம் நரகமாக்கிக்கொண்டோர் ஏராளம். சிறையிலிருந்து மீண்டும் வெளியே வந்தாலும்,சமூகத்தில் மீண்டும் இணக்கமாக வாழ்வது பெரும் சவாலான விஷயம். சுப்பிரமணியபுரம் படத்தின் சிறப்பம்சம், வன்முறையில் இறங்குவதில் உள்ள அபாயத்தை ஜோடனையின்றி நேரடியாகக் காட்டியது தான். பழக்கத்துக்காக கொலை செய்வது எனும் மதுரைப்பகுதி வாழ்வியலைச் சொன்னதுடன், அதில் இறங்கியவர்கள் எப்படி தன் மொத்த வாழ்க்கையைத் தொலைக்கின்றார்கள் என்றும் பேசியது இந்தப் படம்.

இந்த படத்தை ஒவ்வொரு முறை பார்க்கும்போதும், புதிய புதிய விஷயங்களை நாம் கண்டுகொள்ள முடிகிறது. இந்தப் படத்தின் உண்மையான ஹீரோ, கால் ஊனமான டும்க்கான் தான் என்பது முதல்முறை பார்க்கும்போது நமக்குத் தெரிவதில்லை. அழகர்-துளசி போன்றே இன்னொரு காதல் ஜோடியும் படத்தில் பேக்ரவுண்ட்டில் தோன்றிக்கொண்டே இருக்கும். போலீஸ் ஸ்டேசனுக்கு அழகர் குரூப் பற்றி போன் செய்து தகவல் சொல்வது கனகு தான், 1980 எனும் எம்.ஜி.ஆரின் முதல் ஆட்சிக்கால அரசியல் என பல விஷயங்களை அங்காங்கே புதையல் போன்று மறைத்து வைத்திருக்கிறார் சசிக்குமார்.

மொத்தத்தில் இந்த கலைப்படைப்பைப் புரிந்துகொள்ள, நம் வாழ்க்கையை ஒப்பிட்டுப் புரிந்துகொள்ள மீண்டும் ஒருமுறை சுப்பிரமணியபுரம் பாருங்கள்








மேலும் வாசிக்க... "சுப்ரமணியபுரம் : தமிழில் ஒரு உலக சினிமா"
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

1 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.