Saturday, April 28, 2018

HEAT ( 1995) – க்ளாசிக்கல் க்ரைம் மூவி




நல்ல படங்களுக்கும் மோசமான படங்களுக்கும் உள்ள ஒரே ஒற்றுமை என்னவென்றால், படம் பார்த்து இரண்டு, மூன்று நாட்களுக்கு நம்மை தொந்திரவு செய்துகொண்டே இருக்கும். நீண்ட நாட்களுக்குப் பிறகு, மீண்டும் ஹீட்டை பார்த்தேன். மூன்று நாட்கள் கடந்தும் இன்னும் சூடு குறையவில்லை.

அல் பசினோ, ராபர்ட் டி நீரோ எனும் இரண்டு சிங்கங்கள் இணைந்து மிரட்டிய படம். இயக்குநர் மைக்கேல் மேன்னின் பெஸ்ட் மூவியாக இன்றும் முதலிடத்தில் இருக்கும் படம்.
இயக்குநர் மைக்கேல் மேனின் நண்பர், முன்னாள் போலீஸ்கார், இயக்குநரின் கதை ஆலோசகர் ஆடம்சன். அவர் சந்தித்த நீல் எனும் ஒரு தொடர் கொள்ளையனைப் பற்றியும், நீலின் பெர்ஃபெக்சனிசம் பற்றியும் மைக்கேல் மேன் அறிந்தபோது, தொடங்கியது இந்த கிளாசிக்கல் மூவிக்கான விதை. ஏறக்குறைய பத்து வருடங்களுக்கு மேலாக எழுதப்பட்ட திரைக்கதை. இடையில் l.a. takedown (1989) எனும் டிவி பைலட் மூவியாகவும் இந்தக் கதையை மைக்கேல் மேன் எடுத்தார். (ஆரம்பத்தில் இதை டிவி சீரீஸாக செய்வதாக ஐடியா).

கதையின் கிளைமாக்ஸ் சிக்கியபின், இதை அல் பசினோவும் ராபர்ட் டி நீரோவும் இணைந்து நடித்தால், மறக்க முடியாத சினிமாவாக வரும் என்பதை இயக்குநர் உணர்ந்தார். ஹீட் ஆரம்பம் ஆனது.

தனக்கென்று பெர்ஃபெக்ட்டான சிறு குழுவை வைத்துக்கொண்டு, பெரிய அளவிலான கொள்ளைகளை நட த்தி வருபவன் நீல் மெக்காலே (ராபர்ட் டி நீரோ). இதைத் தவிர வாழ்க்கையில் அவனுக்கு வேறு எதுவும் முக்கியம் கிடையாது. தொழில் பக்தாஸ்!

தனது குழுவுடன் நகரின் நடக்கும் குற்றங்களை தடுக்கும், குற்றவாளிகளை விரட்டி விரட்டி வேட்டையாடும் போலீஸ் அதிகாரி வின்சன்ட் ஹன்னா (அல் பசினோ). இரண்டு டைவர்ஸ்களைக் கடந்து, மூன்றாவது டைவர்ஸை நோக்கி போய்க்கொண்டிருக்கும் சின்சியர் ஆபீசர். வேலையைத் தவிர வேறு எதுவும் முக்கியம் கிடையாது.

ஏறக்குறைய சம திறமையுள்ள, தொழில்பக்தி மிக்க ஆனால் எதிரெதிர் துருவங்கள். பட த்தின் முதல் காட்சியிலேயே ஒரு கொள்ளை நடுரோட்டில் நடக்கிறது. டி நீரோவின் குழுவில் புதிதாகச் சேர்ந்த வேய்ங்க்ரோவின் அதிகப்பிரசிங்கித்தனத்தால், முதல் கொள்ளை மூன்று கொலைகளுடன் முடிகிறது. அதை விசாரிக்க அல் பசினோ வந்து சேர்கிறார்.

வேய்ங்ரோவை டி நீரோ கொல்ல முயல, அவன் தப்பிச்செல்கிறான். அந்த ஆபத்து டி நீரோவை நோக்கி எப்போதும் திரும்பி வரும் சூழ்நிலை. இன்னொரு பக்கம், அல் பசினோ விரிக்கும் வலை.
ஆபத்து உன்னை நெருங்கும்போது, 30 செகண்டிற்குள் விட்டு விலக முடியாத எதனுடனும் உன்னை பிணைத்துக்கொள்ளாதேஎன்பது டி நீரோவின் தொழில் தர்மம். மனைவி மேல் அட்டாச்மெண்டாக இருக்கும் தம்பிக்கே, டி நீரோ கொடுக்கும் அட்வைஸ் அது தான்.

அல் பசினோ ஸ்கெட்ச் போட்டு, டி நீரோவை நெருங்கும்வேளையில், டி நீரோவுக்கும் ஒரு காதல் வருகிறது.

அல் பசினோ இந்த கொள்ளைக்கூட்டத்தைப் பிடித்தாரா?

டி நீரோ தன் தொழிலை அல் பசினோவை மீறி செய்ய முடிந்ததா?

இரு ஹீரோக்களாலுமே தன்னையும், தன் கூட்ட த்தையும் மற்ற ஹீரோவிடமிருந்து காப்பாற்றிக்கொள்ள முடிந்ததா?

இரண்டு ஹீரோக்களின் பெர்சனல் வாழ்க்கை என்ன ஆகிறது

-    என்பதை அழுத்தமாகச் சொல்கிறது இந்த க்ளாசிக்கல் மூவி.

ஹீட் -ஐ க்ரைம் மூவி என்று சொல்வதைவிட, எமோசனல் டிராமா என்று சொல்லிவிடலாம். திருடன்போலீஸ் விளையாட்டு என்பது ப்லாட்டாக இருந்தாலும், ஒவ்வொரு முக்கிய கேரக்டரின் பெர்சனல் வாழ்க்கை பற்றியும், ஃபீலிங்ஸ் பற்றியுமே படம் அதிகம் பேசுகிறது.

படத்தை மறக்க முடியாத அனுபவமாக ஆக்குபவை நான்கு சீன்கள் :

1.  1.  அல் பசினோவும் டி நீரோவும் சந்திக்கும் ரெஸ்டாரண்ட் காட்சி. சினிமா வரலாற்றில் மிக முக்கியமான காட்சிகளுள் ஒன்றாக இன்றளவும் கொண்டாடப்படும் காட்சி அது. இருவருமே ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ளும் இடம் அது. அதே நேரத்தில் இன்னும் உக்கிரமாக மோதிக்கொள்ளப்போகிறார்கள் என்பதையும் நமக்கு உணர்த்திவிடும் காட்சி. இரண்டு பேரின் உடல்மொழிக்காகவே மீண்டும் மீண்டும் பார்க்க வைக்கும் காட்சி.

2.   2. பேங்க் கொள்ளை. ஒரு அதகள ஆக்சன் பட த்தின் கிளைமாக்ஸ் காட்சி போல், எதிர்பாராத நேரத்தில், எதிர்பாராமல் நிகழும் காட்சி. இருதரப்புமே தன்னை மறந்து களத்தில் குதிக்கும் அழகை, பார்த்துக்கொண்டே இருக்கலாம். இந்த சீனைப் பற்றி படிப்பதைவிட, பட த்தில் பார்த்துக்கொள்ளுங்கள்.

3.  3.  ‘Sun rises with her & sets with her’ என்று சொல்லும் தம்பி வால் கில்மர்க்கும் அவரது சீட்டிங் மனைவிக்கும் இடையிலான கடைசி ஷாட், அந்த கை அசைப்பு.
4.     
4. மைக்கேல் மேன் கேரக்டர்களை வடிவமைத்த விதத்தினால், இரு ஹீரோக்களுமே ஜெயிக்க வேண்டும் என்று நாம் நினைக்கிறோம். திருடன் என்பதால் டி நீரோ தோற்றுப்போக வாய்ப்பு இருப்பதையும் நாம் உணர்கிறோம். இங்கே எதுவும் நடக்கலாம் என்பதால், ஆர்வத்துடன் காத்திருக்கிறோம். இந்த அளவிற்கு டச்சிங்கான கிளைமாக்ஸ் காட்சியை, ஒரு க்ரைம் மூவியில் யாரும் எதிர்பார்த்திருக்க முடியாது. டி நீரோவின் காதலி திகைத்து நிற்கும் ஷாட், இறுதில் இரு ஹீரோக்களும் கை பிடித்து நிற்கும் அந்த ஷாட், கூடவே அந்த முடிவு….அசந்து போய் உட்கார்ந்திருப்பதைத் தவிர வேறு வழியில்லை.

ஒவ்வொரு கேரக்டர்களும் எடுக்கும் கடைசி முடிவுகளும், அதன் விளைவுகளும் தான் நம்மை உணர்ச்சிகரமாக ஆக்குகின்றன. திருந்தி வாழும் ஒருவன் மீண்டும் ட்ரைவராக திருடக் கிளம்புவது, அல் பசினோவை எப்போதும் தடுக்கும் அவன் மனைவி கிளைமாக்ஸில் தடுக்காமல் விடுவது, தம்பி மனைவியின் கடைசி முடிவு, டி நீரோ காதலி பற்றி எடுக்கும் கடைசி முடிவு, வேய்ங்ரோ பற்றி எடுக்கும் முடிவுஎன்று எல்லாமே, யோசித்துப்பார்த்தால், இவை வேறுவிதமாக நடந்திருக்கலாமே என்று நம்மை ஃபீலிங்கில் ஆழ்த்துவது தான் இந்த திரைக்கதையின் பெரும் பலம்.

இது பார்த்து ரசிக்க வேண்டிய படம் என்பதால், முடிந்தவரை ஸ்பாய்லர்களை தவிர்த்து எழுதியிருக்கிறேன். நல்ல சினிமா விரும்பிகள், கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம்.
மேலும் வாசிக்க... "HEAT ( 1995) – க்ளாசிக்கல் க்ரைம் மூவி"
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

0 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.

Saturday, April 21, 2018

நாணுடைமை (2018) – குறும்படம்




அற்புதம்!
இந்த ஒரு வார்த்தையுடன் விமர்சனத்தை முடித்துவிடலாம்.  

ஷார்ட் ஃபிலிமைப் பற்றிப் பேசும் முன்பு, சிறுவன் அஜய்யைப் பற்றி சொல்லியே ஆக வேண்டும். என்னவொரு இயல்பான உடல்மொழி. காற்றில் மிதக்கும் சிறகு போன்ற ஒரு கேரக்டர். அதை மிக கேஷுவலாக கண்முன் கொண்டுவந்திருக்கிறான். இவ்வளவு இயல்பானை பெர்ஃபார்மன்ஸை, நடிப்பு என்று சொல்ல முடியவில்லை, பெர்ஃபாமன்ஸை வாங்கிய இயக்குநர்உலக சினிமா ரசிகன்பாஸ்கரனை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.

பட த்தில் மிகக் குறைவான வசனங்கள். அவையும் பெரும்பாலும் கதையை நேரடியாகச் சுட்டுவன அல்ல. திரைமொழி மூலமாகவே, காட்சிச்சட்டகங்கள் & படத்தொகுப்பு மூலமே, ஒரு மேஜிக்கை கண் முன் நிகழ்த்திக்காட்டியிருக்கிறார்.
ஆடியன்ஸுடன் இயக்குநர் விளையாடியிருக்கும் விளையாட்டை நான் ரசித்தேன். சிறுவனின் சீட்டு விளையாட்டு மீதான மோகமும் திருந்துவதும் யதார்த்தம். ஆனால் அவனைச் சுற்றிலும் வரும் பள்ளிச்சூழல் முழுக்க கற்பனாவாதம். ஒரு கற்பனையாக உலகிற்குள் ஒரு யதார்த்தமான கதையைப் புகுத்தியிருக்கிறார்.
இதை சரியாகப் பிரித்துப் பார்க்காதவர்களுக்கு, கொஞ்சம் கிர்ரென்று தான் இருக்கும். பள்ளியில் தமிழ், வகுப்பில் திருக்குறள், திருவள்ளுவர் பற்றிய வீட்டுப்பாடம் என்று சர்ரியலிஸ ஸ்கூல். அதில் ஒரு தவறு செய்யும் மாணவனைத் திருத்தும் நாணுடைமைக் குறள்.
குழந்தைகளுடன் பள்ளி வேன் போகும் ஷாட்டை அடுத்து வரும் செங்கல் லாரி, பிள்ளைகளை ஸ்கூல் வேனில் ஏற்றிவிட வரும் பெற்றோருக்கு முன்பு வரும் கன்னுக்குட்டியை ஒரு பெண் ஓட்டிப்போகும் காட்சி, திருக்குறள் பற்றி வேரில் அமர்ந்து கற்றுக்கொள்ளும் குழந்தைகள் என்று இயக்குநரின் குறியீட்டுக் குறும்புகளுக்கு பஞ்சம் இல்லை.
எதையும் டிராமடிக் ஆக்காமல், தெளிவான ஆற்றொழுக்கம் போல் காட்சிகள் நகர்கின்றன. அவர் ஆரம்பத்தில் போடும் மூன்று குருமார்களுக்கு நியாயம் செய்திருக்கிறார். இயக்குநரின்உசிர (உலக சினிமா ரசிகன்)’ என்ற தனது பெயருக்கும் நியாயம் செய்திருக்கிறார்.
தமிழ் வழிக் கல்வியில் ஏறக்குறைய இப்படித்தான் நான் படித்தேன். ஒன்பதாம் வகுப்பு வரை மரத்தடி வகுப்பு தான். படிப்பு என்றும் சுமையாகத் தெரிந்ததில்லை. படிப்பை கட்டாயமாக பள்ளியிலும் வீட்டிலும் எனக்கு ஊட்டியதில்லை. அது தானே நிகழ்ந்த து. அந்த வசந்த காலத்தை இந்த ஷார்ட் ஃபிலிம் மீட்டுக்கொண்டுவந்துவிட்டது.
உசிர நம் உசிரை எடுத்துவிட்டார்!
இந்த ஷார்ட் ஃபிலிமை பார்க்க விரும்புபவர்கள், ப்ளேபட்டன் ஆப்-ஐ உங்கள் மொபைலில் டவுன்லோடு செய்தால் பார்க்கலாம். பிடித்திருந்தால், வாக்களித்து வெற்றிபெறச் செய்யுங்கள்.
மேலும் வாசிக்க... "நாணுடைமை (2018) – குறும்படம்"
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

0 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.

Wednesday, April 18, 2018

Revisiting…… சின்னத்தம்பி (1991)


அபூர்வ சகோதரர்கள், சின்னக்கவுண்டர் போன்ற பழைய, நல்ல கமர்சியல் சினிமாக்கள் பற்றி எழுதும்படி அவ்வப்போது நண்பர்கள் கேட்டுக்கொண்டு இருந்தார்கள். புத்தாண்டு சபதமாக, அவற்றைப் பற்றி எழுதுவது என்று முடிவு செய்திருக்கிறேன். புத்தாண்டு சபதம் என்பதால், எப்படியும் இரண்டு மாதத்திற்காவது சபதம் தாக்குப்பிடிக்கும் என்று நினைக்கிறேன். பார்ப்போம்!

செங்கோவி வலைப்பூ தூசு தட்டப்பட்டு இங்கேயும் பதிவேற்றப்படும்!


தமிழ் சினிமாவில் சூப்பர் டூப்பர் ஹிட் படங்களை லிஸ்ட் போட்டால், சின்னத்தம்பியை தவிர்க்க முடியாது. திருவிழா போன்று கூட்டம் கூட்டமாக, குடும்பம் குடும்பமாக மக்கள் தியேட்டரை நோக்கி ஓடினார்கள். பேசிப் பேசி மாய்ந்தார்கள். இளையராஜாவின் இசையும் பாடல்களும் பாமர மக்களையும் பைத்தியம் ஆக்கின. இயக்குனர் பி.வாசு & ஹீரோ பிரபுவின் சினிமா வாழ்வில் உச்சமாக சின்னத்தம்பி அமைந்தது.

நம்ப முடியாத கதையை நம்பக்கூடியவகையில் சொல்வது எப்படி என்பதற்கு சின்னத்தம்பியை விட சிறந்த உதாரணம் இருக்க முடியாது.

ஜோதிடர் ‘ஹீரோயின் காதல் திருமணம் தான் செய்வாள்’ என்று சொன்னதால், அண்ணன்களின் அன்புச்சிறையில் வீட்டுக்குள்ளேயே வைத்து வளர்க்கப்படும் ஹீரோயின். யாரும் தங்கையை நிமிர்ந்து பார்த்தால்கூட, அடித்து துவைக்கும் அண்ணன்கள். அப்படிப்பட்ட ஹீரோயினுக்கு, கல்யாணம் என்றால் என்னவென்றே தெரியாத ஹீரோ மேல் காதல் வந்தால்?..யாருக்கும் தெரியாமல் (ஹீரோவுக்கே தெரியாமல்!) அவள் ஹீரோவைத் திருமணம் செய்தால் என்ன ஆகும்?

கிராமத்து பெரிய வீட்டுக்கதை என்றாலே சினிமாவில் பெரும் கூட்ட த்தைக் கூட்டிவிடுவார்கள். ஆனால் த்ரில்லர் படங்களில் வருவது போல், கச்சிதமாக குறைவான முக்கிய கேரக்டர்களைக் கொண்டு எழுதப்பட்ட து சின்னத்தம்பி திரைக்கதை. ஹீரோயின் வீட்டில் பத்துப் பேர், வெளியே பத்துப்பேர் என்று கதைக்குத் தேவையான, அதிலும் தேவையான நேரத்தில் மட்டுமே வந்துவிட்டுப் போகும் கேரக்டர்கள்.

முதல் காட்சியே ஹீரோயின் பிறப்பதில் ஆரம்பிக்கிறது. ‘ஐயாவுக்கு பெண் குழந்தை பிறந்திருக்கு’என்று ஒரு வேலையாள் சொல்கிறார். அய்யாவும் காட்டப்படுவதில்லை; அம்மாவும் காட்டப்படுவதில்லை. மூன்று அண்ணன்கள் மட்டுமே காட்டப்படுகிறார்கள். பட த்தின் அடிநாதம், அண்ணன்களின் அளவுக்கு மீறிய பாசமே எப்படி வேலியாகிறது என்பது தான். ஆகவே அண்ணன் X தங்கை என்பதிலேயே நம் கவனம் நிலைநிறுத்தப்படுகிறது.

வருவதை முன்கூட்டியே சொல்வது என்பது சினிமாவில் முக்கியமான உத்தி. அது நடக்குமா, எப்படி நடக்கும், அப்படி நடந்தால் என்ன ஆகும் என்று ஆடியன்ஸ் மனதில் 
ஆர்வத்தை தூண்ட இது பயன்படும்.

உதாரணமாக அமெரிக்கன் பியூட்டி(1999)யில் முதல் காட்சியிலேயே ஹீரோவின் டீனேஜ் மகள், ஹீரோவைக் கொல்வது பற்றி தன் பாய் ஃப்ரெண்டிடம் பேசுகிறாள். அடுத்து வாய்ஸ் ஓவர் வசனம் ‘ I'm forty-two years old. In less than a year, I'll be dead.’ என்று வரும். ஹீரோ சாகப்போகிறானா, மகள் தான் கொல்லப்போகிறாளா? ஏன்? என்று அடுக்கடுக்கான கேள்விகளையும் ஆர்வத்தையும் இது தூண்டிவிடும். இந்த முதல் சீனை கட் செய்துவிட்டால், படமே டல் ஆகிவிடும். அந்தளவுக்கு இந்த உத்தி முக்கியமானது.
சின்னத்தம்பியிலும் இந்த உத்தியை ஜோதிடர் கேரக்டர் மூலம் பயன்படுத்தியிருக்கிறார்கள். ‘அரண்மனையில் எவ்வளவு பாசம் காட்டி வளர்த்தாலும், உங்க தங்கச்சி காதல் திருமணம் தான் செய்வாள்’ என்று ஜோதிடர் சொல்லிவிடுகிறார். இதைத் தடுப்பதற்கான எல்லா வேலைகளிலும் அண்ணன்கள் இறங்கிவிடுகிறார்கள். ஆடியன்ஸான நாமும் ஆர்வமாகிவிடுகிறோம்.

‘இவ்வளவு டெரரான அண்ணன்கள்..அடியாட்கள்..வீட்டுச்சிறை..ஏறக்குறைய சிண்ட்ரெல்லா நிலை. இதை மீறி எந்த ராஜகுமாரன் வந்து ஹீரோயினை காதலித்துக் காப்பாற்றுவான்?’ என்றே நாமும் யோசிக்கிறோம். ஒரு அப்பாவியை ஹீரோவாக களமிறக்குகிறார்கள். இது இன்னும் ஆர்வத்தைத் தூண்டுகிறது. ‘இவன் எப்படி லவ் பண்ணுவான்? இவனை எப்படி அந்த ராஜகுமாரி லவ் பண்ணுவாள்?’ என்ற கேள்விக்கு முதல்பாதி அழகாக, ஸ்டெப் பை ஸ்டெப் ஆக பதில் சொல்கிறது.

’நடக்குமா, நடக்காதா?’ எனும் உத்தியை இடைவேளைவரை வெற்றிகரமாக க் கொண்டுபோய், இடைவேளையில் சம்பவத்தை நட த்திவிடுகிறார்கள். ‘அய்யய்யோ…இது அண்ணன்களுக்குத் தெரிந்தால் கொன்னுடுவாங்களே’ எனும் பதட்டம் தான் இரண்டாம்பாதியை இன்னும் ஆர்வமாகப் பார்க்க வைக்கிறது.
சமீபகாலமாக வரும் படங்கள் எல்லாம் இந்த மண்ணுக்கு மிகவும் அந்நியமானதாக இருக்கின்றன. சமூகவலைத் தளங்களில் பேசப்படும் அளவிற்கு வெளியே பேசப்படுவதில்லை. காரணம், ஆங்கிலப்படங்களில் வருவது போல் செண்டிமெண்ட்டை ஊறுகாயாக தொட்டுக்கொள்வது. இதனால் பி & சி செண்டர் மக்களுக்கு இன்றைய சினிமா அந்நியமான ஒன்றாக ஆகிவருகிறது.

தமிழ் சினிமாவில் இன்றளவும் மாபெரும் வெற்றி பெரும் படங்களைப் பார்த்தால் செண்டிமெண்ட்டை டச் பண்ணிய படங்களாகத் தான் இருக்கும். (செண்டிமெண்ட்களிலேயே அலுக்காத பெஸ்ட் செண்டிமெண்ட், காதல் தான்!)
சின்னத்தம்பி எல்லாவகை செண்டிமெண்ட்டையும் ரவுண்டு கட்டி அடித்த படம். அண்ணன் – தங்கை பாசம், அம்மா – மகன் பாசம், காதல், மனைவி – கணவன் பாசம், கிளைமாக்ஸ் விதவை செண்டிமெண்ட் என்று எல்லா முக்கிய கேரக்டர்களுமே செண்டிமெண்ட்டால் பிணைக்கப்பட்டவர்கள். பொய்யான ‘ஹாய்..ஹலோ’ ரிலேசன்ஷிப்பே அங்கே கிடையாது. எல்லோரும் உணர்வுப்பூர்வமான கேரக்டர்கள். ஆகவே தான் நம்பமுடியாத கதை கூட, நம்பி கொண்டாடப்பட்டது.

அவையத்து முந்தி யிருப்பச் செயல் என்றும்இவன்தந்தை
என்னோற்றான் கொல்
என்றும் சபையில் தன் உறவு பெரும் மரியாதையைக் கண்டு மற்ற உறவுகள் பெருமைப்படுவதை இலக்கியங்களும் சினிமாவும் பல இடங்களில் பதிவு செய்திருக்கின்றன. ஆனால் கணவனை நினைத்து, மனைவி பெருமைப்படுகின்ற, அவையில் முந்தியிருக்க மனைவி எடுக்கும் சிரத்தை பற்றி அதிகம் பேசப்பட்ட தில்லை.
மனைவி வீட்டிலும் மனைவி சொந்தங்களிடமும் கணவன் நல்லபடியாக நடந்து, தான் பெருமைப்படும்படி சபையில் நிற்கின்றானா எனும் பதைபதைப்பு புதிதாக கல்யாணம் ஆன புதிதில் பெண்களுக்கு இருக்கும். சில நேரங்களில் ஸ்பெஷல் டியூசன் எடுக்கப்படுவதும் உண்டு! பெண்களுக்கே உரிய, அந்தரங்கமான மகிழ்ச்சித் தருணங்கள் அவை. ஆனால் பெரும்பாலான பெண்களின் கனவு பொய்த்துப்போவது தான் சாபக்கேடு.

சின்னத்தம்பியின் மாபெரும் வெற்றிக்குக் காரணமாக நான் நினைப்பது, ஹீரோயின் தன் புருசனான ஹீரோவை சபையில் முந்தியிருக்க நட த்தும் போராட்டத்த்தில் நம் தாய்க்குலங்கள் தன்னையே கண்டுகொண்டது தான். பரம்பரைப் பணக்காரர்களான, சமூகத்தில் அந்தஸ்து உள்ள அண்ணன்களுக்குச் சமமாக, ஒரு அப்பாவி கணவனை நிறுத்துவதற்கு ஹீரோயின் படும் பாடு தான் இரண்டாம் பாதிக் கதையாக சொல்லப்படுகிறது.

மேலும், கணவனே மனைவிக்கு மாப்பிள்ளை பார்க்கக் கிளம்புவது, தான் பெண் பார்த்த கதையை மனைவியிடமே சொல்வது என்று பி.வாசு செண்டிமெண்ட்டைப் போட்டுத் தாக்கியதில் மொத்த தமிழ்நாடும் ஃப்ளாட் ஆனது.

அப்போது கிளாமர் ஹீரோயின் என்பதே குஷ்புவின் அடையாளமாக இருந்தாலும், இவ்வளவு கனமான கேரக்டரை திறமையாக வெளிக்கொண்டு வந்திருந்தார். அண்ணன்களுடன் பிரபு சம மாக அமர்ந்து சாப்பிடும்போது காட்டும் மகிழ்ச்சி க்ளோசப் ஒரு உதாரணம்.

இளைய திலகம் என்ற பெயருக்கு ஒருவழியாக பிரபு நியாயம் செய்த படம். ராதாரவி, மனோரமா என பெர்ஃபார்மன்ஸில் பின்னியெடுக்கும் நடிகர்களும் சேர, எத்தனை முறை பார்த்தாலும் அலுக்காத படமாக ஆனது சின்னத்தம்பி.

இளையராஜாவின் சூப்பர்ஹிட் பாடல்களும் நல்ல காமெடியும் இருந்தாலே படங்கள் ஹிட் ஆகிவிடும். கூடவே மேலே சொன்ன அம்சங்களும் சேர்ந்துகொள்ள, சின்னத்தம்பி தமிழ் கமர்சியல் சினிமாவில் முக்கிய இடம் பிடித் த து.
மேலும் வாசிக்க... " Revisiting…… சின்னத்தம்பி (1991)"
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

0 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.