Friday, January 22, 2016

ரஜினி முருகன் - திரை விமர்சனம்

அதாகப்பட்டது..:
பொங்கலுக்கு தாரை தப்பட்டையை இறக்கி கதிகலங்க வைத்தவர்கள், நிதானமாக இன்று, இங்கே ரஜினி முருகனை ரிலீஸ் செய்திருக்கிறார்கள். படம் இந்தியாவில் வெளியாகி ஒரு வாரம் ஆகிவிட்டது, இண்டர்நெட்டில் வந்து ஐந்து நாட்கள் ஆகிவிட்டன. இருந்தும், குடும்பம் குடும்பமாக தியேட்டரை நோக்கி படையெடுக்கிறார்கள் நம் மக்கள். இவ்வளவு எதிர்பார்ப்பு இருந்துமா ரிலீஸ் ஆக முடியாமல் கிடந்தது எனும் ஆச்சரியத்தை தவிர்க்க முடியவில்லை. ஒருவழியாக ரஜினி முருகன் பார்த்தாகிவிட்டது.
ஒரு ஊர்ல :
கதை..அது வந்து..சிவ கார்த்திகேயன் சார், சூரி சார்..அப்புறம் கீர்த்தி மேடம்..ராஜ்கிரண் சார்கூட இருந்தார்..கதை...ஆங், தாத்தா ராஜ்கிரண் சாருக்கு ஒரு பங்களா வீடு இருக்கு. அதை வித்து பேரன் சிவா சாருக்கு ஒரு நல்ல வாழ்க்கையை அமைத்து தருவோம்ன்னு நினைக்கிறார். அதில் வரும் சிக்கல்களும், அதை பேரனும் தாத்தாவும் தீர்ப்பதே கதைன்னு வைத்துக்கொள்ளலாம்.


உரிச்சா:

ஒரே வரியில் ‘வ.வா.சங்கம்’ ரிட்டர்ன்ஸ்-ன்னு சொல்லி முடிச்சிடலாம். ஜாலியான, ரகளையான, ரொம்ப சீரியஸாகப் போய்விடாத திரைக்கதை. கொண்டாட்டம் தான் முக்கியம், நம்பி வர்றவங்க, சந்தோசமாக திரும்பிப் போக வேண்டும் என்பது தான் ஒரே குறிக்கோள். அந்த வகையில் கலக்கியிருக்கிறார்கள்.

சிவா சார், சூரி சார் நட்பை விளக்கும் காமெடிக் காட்சிகள், தொடர்ந்து சிவா சார் கீர்த்தி மேடத்தைக் காதலிக்கும் காமெடிக் காட்சிகள், தாத்தா ராஜ்கிரண் சார் செத்துப்போகும்(!) காமெடிக் காட்சிகள் என எல்லாவற்றையும் காமெடியாகவே நகர்த்திப் போகிறார்கள். ஒரு சீன் சீரியஸ் ஆனாலும், அடுத்த சீனிலே முந்தைய சீனின் சீரியஸ்னெஸ்ஸையும் காலி செய்கிறார்கள். குருநாதர் ‘டாஸ்மாக் புகழ்’ ராஜேஸ் சார் வழியில் திரைக்கதையை அமைத்திருக்கிறார் பொன்ராம் சார். கொஞ்சம் நல்ல கருத்துக்களையும் சொல்வதால், குருவை மிஞ்சிய சிஷ்யன் ஆகிறார். (வரி விலக்கிற்காக(!) குடிக்கிற சீன் வைப்பதைத் தவிர்த்தால், இன்னும் நன்றாக இருக்கும்.)

காமெடி எனும் இனிப்பு நல்ல விஷயம் தான். ஆனால் இரண்டு மணி நேரம் திகட்டத் திகட்ட அதையே திணிக்கும்போது, கொஞ்சம் அலுப்பு வந்துவிடுகிறது. பொன்ராம் சார் அடுத்த படத்தில் நல்ல வலுவான கதையுடன் இறங்கவில்லையென்றால், குருநாதர் போன்று ஆகிவிடலாம்.

ஆனாலும் ஆரம்ப உறி அடிக்கும் காட்சி முதல், காதல் காட்சிகள், ராஜ்கிரண் சார் செய்யும் மெல்லிய காமெடிகள், பஞ்சாயத்து சீன், கத்தி சீன், கிளைமாக்ஸில் ராஜ்கிரண் சாரும் சமுத்திரக்கனி சாரும் செய்யும் ரகளை, சிவா சாருடன் சேரும்போது மட்டும் கலக்கும் சூரி சார் என படத்தில் ரசிக்க வைக்கும் அம்சங்கள் ஏராளம். கூடவே இமான் சாரின் அருமையான பாடல்களும் சேர, பொங்கல் கொண்டாட்டம் உத்தரவாதம்!

வ.வா.சங்கம், நாட்டாமை சார், கரகாட்டக்காரன் சார் போன்ற படங்களைப் போல் நம்மை ரிலாக்ஸ் மூடிலேயே வைப்பது தான் படத்தின் பெரும் பலம்!

சிவ கார்த்திகேயன் சார்:

ரொம்ப கேஷுவலான நடிப்பு, அளவான ஸ்டைல், சூரி சாருடன் அளப்பறை என சிவ கார்த்திகேயன் சார் தன் ட்ரேட் மார்க்ஸில் முத்திரை பதிக்கிறார். இன்னும் சீரியஸான சீன்களில் நடிக்க ஏன் தயங்குகிறார் என்று தெரியவில்லை. இப்படியே எஸ்.வி.சேகர் சார் மாதிரி எத்தனை நாளைக்கு காமெடி ஹீரோவாகவே தொடர்வது? அடுத்த கட்டத்திற்கு அவர் நகர வேண்டிய நேரம் இது. அவரது அடுத்த படங்கள் பற்றிய அறிவுப்புகள் நம்பிக்கை தருகின்றன. வ.வா.சங்கத்து சிவா சார், அப்படியே திரும்பி வந்திருப்பது படத்திற்கு நல்லது; சிவா சாரின் வளர்ச்சிக்கு நல்லதல்ல.

கீர்த்தி மேடம் சுரேஷ் சார்:

‘பத்து ஜோதிகா மேடத்திற்குச் சமம்’ என்று ப்ரியதர்சன் சாரால் பாராட்டப்பட்டவர் கீர்த்தி மேடம். அந்த அளவிற்கு நடிக்க ஸ்கோப் இல்லையென்றாலும், க்யூட்டாக வந்து, சின்னச் சின்ன எக்ஸ்பிரசன்களில் நல்ல நடிப்புத்திறமையுள்ள நடிகை என்று நிரூபிக்கிறார். அடுத்த சில வருடங்களுக்கு இவரது ஆட்சி தான் என்று நினைக்கிறேன். இது என்ன மாயம் கவிழ்த்தினாலும், ரஜினி முருகன் காப்பாற்றியது நமக்கு சந்தோசம்.

சூரி சார்:
பொன்ராம் சார் + சிவ கார்த்திகேயன் சார் உடன் சேரும்போது மட்டும் சூரி சாருக்கு காமெடி பிச்சுக்கிட்டு வருவது என்ன மாயம் என்று தெரியவில்லை. டீக்கடை நடத்தும் காட்சிகள், வெளிநாட்டுப் பெண்ணை உஷார் செய்வது என மனிதரின் அட்டகாசம் படம் முழுக்க தொடர்கிறது. ‘ராஜ்கிரண் சாரின் இன்னொரு பேரன் சூரி சார் தான்’ என்று சொல்வார்களோ என்று நினைத்தேன்!

சொந்த பந்தங்கள்:

பெரும் கூட்டமே நடித்திருந்தாலும் ராஜ்கிரண் சார் - சமுத்திரக்கனி சார் -அச்யுத் குமார் சார் ஆகிய மூவர் தான் கலக்கியிருக்கிறார்கள். ராஜ்கிரண் சாரை புதிதாகப் பாராட்ட ஒன்றுமில்லை. மாஸ் & பாயும்புலியில் சமுத்திரக்கனி சாரை வில்லனாக ஏற்றுக்கொள்ள மனம் மறுத்தது. சார்மேல் இருக்கும் நல்ல எண்ணமும் ஒரு காரணம். ஆனால் இதில் தான் ஒரு நடிகராக ஜெயித்திருக்கிறார். ஒரு கிராமத்தானுக்குரிய உடல்மொழி கொண்டவர் சமுத்திரக்கனி சார். அது, இந்த வில்லன் கேரக்டருக்குத் தான் சரியாகப் பொருந்தியிருக்கிறது எனலாம்.

கன்னட லூசியாவில் நம்மை அசத்திய அச்யுத் குமார் சார், இதில் கீர்த்தி மேடத்தின் அப்பாவாக, ரஜினி சார் ரசிகனாக நடித்திருக்கிறார். மூவரில் இவருக்கே அதிக கைதட்டல்கள். ரஜினி சார் மேனரிசம், ரஜினி சார் வீடியோக்களை வைத்து புத்திமதி சொல்வது என அருமையான கேரக்டர் ஸ்கெட்ச்.

 நெகடிவ் பாயிண்ட்ஸ்:

- காமெடி தான் முக்கியம், கதையல்ல என்று கும்மியடித்திருப்பது!

- கே.எஸ்.ரவிகுமார் சார் & ஹரி சார் படங்களில் பெரிய குடும்பத்து ஆட்கள் என்று டஜன் கணக்கில் கேரக்டர்கள் வந்தாலும், அவர்கள் யார் என்பதும் என்ன உறவுமுறை என்பதும் ஆடியன்ஸுக்குத் தெளிவாகச் சொல்லப்படும். இங்கே பெரும் கூட்டம் வருகிறது, யார் மாமா, யார் சித்தப்பா என்று கடைசிவரை புரிவதே இல்லை.

- திகட்டும் காமெடி


 பாசிடிவ் பாயிண்ட்ஸ்:
- அசராமல் அடிக்கும் காமெடி வசனங்கள்
- சிவகார்த்திகேயன் சார் & கீர்த்தி மேடத்தின் ஸ்க்ரீன் ப்ரசன்ஸ்
- அனைத்து காமெடிக் காட்சிகளும்
- இமான் சாரின் அட்டகாசமான பாடல்கள்
- பாலசுப்பிரமணியன் சாரின் கலர்ஃபுல் ஒளிப்பதிவு (ஹீரோ, ஹீரோயினுக்கு பெரும்பாலும் பஞ்சுமிட்டாய் கலர் ட்ரஸ் தான்!)

பார்க்கலாமா?

‘ரஜினி சார் படங்களை ரசிக்க வேண்டுமென்றால், மூளையை கழட்டி வைத்துவிட்டுப் போக வேண்டும்’ என்று முன்பு சொல்வோம். அது, ரஜினி முருகனுக்கும் பொருந்தும். எம்ப்டியா போங்க, சந்தோசமாத் திரும்பி வாங்க!

முக்கியக் குறிப்பு: விமர்சனம் எழுதும்போது ‘சார்’ போட வேண்டும் என்று ஒரு பின்நவீனத்துவ ஜில்ஜங்ஜக் மரபு உருவாகியிருப்பதாகச் சொன்னார்கள். எனவே முன் ஜாக்ரதையாக சாருடன், மேடத்தையும் சேர்த்துப் போட்டுவிட்டேன். ஒன்னும் தப்பு இல்லீங்களே? :)
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

1 comment:

  1. Unga vimarasanathuku than kaathukitu irunthaen. Intha Sunday padathuku poida vendiyathu than

    ReplyDelete

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.