Saturday, December 10, 2011

பிராமண நண்பர்களுக்கு..(வர்ணம், ஜாதி, இடஒதுக்கீடு) _ நிறைவுப் பகுதி


அன்பு நண்பர்களுக்கு,

வர்ணம், இடஒதுக்கீடு என்று நாம் பேசிக்கொண்டே போனாலும், ஜாதி/ஜாதிப்பற்று/ஜாதி வெறி பற்றிப் பேசாமல் இந்த விவாதத்தை முடிப்பது முறையாகாது. 

‘ஜாதிகள் இல்லையடி பாப்பா’ என ஆரம்பித்து பல்வேறு விதங்களில் ’ஜாதியே இல்லை’ என்று சொல்லப்பட்டு வந்தாலும், ஜாதி என்பது இன்னும் இருந்துகொண்டே தான் இருக்கிறது. ஜாதியை ஒழிப்பது என்பதன் சாத்தியம் பற்றி இன்னும் சந்தேகம் கொள்ளவே வேண்டியிருக்கிறது. அதற்குக் காரணம், பெரும்பாலான மக்கள் இன்னும் ஜாதியைக் கைவிடத் தயாராக இல்லை என்பதே.

ஜாதி ஏன் நம் மக்களுக்கு முக்கியமான ஒன்றாக இருக்கிறது என்று யோசிக்கிறேன்...

ஜாதி என்பது சமூகத்தை மேல்கீழாக அடுக்கும் அவலமான ஒன்றாக இருக்கும் அதே நேரத்தில், அதே ஜாதி தான் நம் வம்சத்தின் நீட்சியாக இருக்கிறது. ஜாதியைத் தூக்கி எறிதல் என்பது நம் பாட்டனை-பூட்டனை-முன்னோரை தூக்கி எறிவதாய் ஆகிவிடுமோ என்ற எண்ணம் வருவதைத் தவிர்க்க முடியவில்லை.

சிவகங்கை தான் எங்கள் பூர்வீகம்..அந்த வானம் பார்த்த பூமியில் பிழைக்க வழியின்றி தெற்கு நோக்கி நகர்ந்தனர் என் முன்னோர். அவர்களின் அந்த முடிவும், அதன்பிறகான அவர்களின் உழைப்புமே இன்றைய என் நிலைக்கு அடிப்படை. என் தந்தையார் இருந்த ஒரு காட்டையும் விற்றே என்னைப் படிக்க வைத்தார். இவ்வாறு பலரின் தியாகங்களும், கடின உழைப்பும் சேர்ந்ததே என் வம்சம். அதுவே என் ஜாதியில் ஒரு அங்கம். ஜாதியைக் கைவிடு எனும்போது, இவர்களை என்ன செய்வது?

அதே நேரத்தில், படித்த நாகரீக மனிதனாக ஜாதிய ஏற்றத்தாழ்வால் ஏற்பட்ட/படுகின்ற அவலங்களை ஏற்றுக்கொள்வதும் நம்மால் இயலவில்லை. ஏறக்குறைய படித்து, கிராமச் சூழலில் இருந்து வெளியேறும் பலரும் சந்திக்கும் அறச்சிக்கல் இதுவே.
நீங்களும் இதையே வேறுவிதத்தில் உணர்ந்திருப்பீர்கள். பலரும் வெளியில் ஜாதியை ஒழிப்பதாகப் பேசிவிட்டு தனக்கோ தன் குழந்தைகளுக்கோ திருமணம் முடிக்கையில், கவனமாக தன் ஜாதியிலேயே மணம் முடிப்பதைப் பார்க்கிறோம்(நான் உட்பட). இளம்பருவத்தில் ஜாதியை ஒழிப்போம் என்று கோஷமிட்ட பலரும் வயதான காலத்தில் ஜாதிப்பற்றில் மூழ்குவதையும் நாம் பார்க்க்கிறோம்.

என் நண்பர் ஒருவர் தீவிரமான பகுத்தறிவுவாதி. ஆனால் சீமானைக் குறை சொல்லிப் பேசினால்/எழுதினால் மட்டும் டென்சன் ஆகிவிடுவார். ‘சீமானே மாற்றுசக்தி’ என்று தீவிரமாக நம்பினார்/நம்puகிறார். எனக்கு நீண்டநாள் கழித்தே சீமானின் ஜாதியும் நண்பரின் ஜாதியும் ஒன்று என்று தெரிந்தது. இதேபோன்று பிரபலங்களைத் தாங்கிப்பிடிக்கும் ஆட்களில் பெரும்பாலானோரின் ஜாதி, அந்தப் பிரபலங்களின் ஜாதியாகவே இருப்பதைக் காணலாம். ஏதேனும் ஒரு வடிவில் ஜாதியுணர்வு, நம் மக்கள் மறைத்தாலும் வெளிப்பட்டுவிடுகிறது.

ஜாதி என்ற கத்தியின் கைப்பிடியாக வம்ச நீட்சியும், கூர்முனையாக ஏற்றத்தாழ்வும் இருக்கிறது.எனவே ஜாதியை ஒழிப்பது என்பது சிக்கலான ஒன்றாகவே இன்னும் இருக்கிறது. ‘இந்த ஜாதிமுறை இப்படியே நீடிப்பது சரிதானா?’ என்ற நியாயமான கேள்வியும் நம்மை உலுக்குகின்றது.(இதைப்பற்றி ஜெயமோகனும் ஒரு பதிவு எழுதியிருந்தார்..படித்திருப்பீர்கள் என்று நம்புகிறேன்..)

இப்போது ஜாதிய அடையாளங்களை வெளியே காண்பிப்பதில், சொல்வதில்  நாம் தயங்கும் நிலை இப்போது உருவாகியுள்ளது. முன்பெல்லாம் நேரடியாக ‘நீ என்ன ஜாதி’ என்று கேட்பார்கள். இப்போது கேட்பதில்லை அல்லது சுற்றி வளைத்துக் கேட்கின்றனர். பெரியாரால் விளைந்த நன்மைகளுள் ஒன்றாக இதனைக் கொள்ளலாம். 

சமூக ஜாதிய அடுக்கில் நடுவில் உள்ளவன் என்ற முறையில் இருபக்கத்தையும் நான் உணர்ந்தே இருக்கின்றேன். பிராமணர்களின் ஜாதி வெறி எங்கள் மேல் காட்டப்பட்டதையும் அனுபவித்துள்ளேன். என் சுய ஜாதியினர் தன் ஜாதிவெறியை தாழ்த்தப்பட்டோர் மேல் காட்டுவதையும் கண்டுள்ளேன். அதுவே இந்த ஜாதி முறைகள் பற்றிய மறுபரிசீலனையை நாம் செய்வது அவசியம் என்று எண்ண வைத்தது.நம்மை ஒருவன் தன் ஜாதியைக் காரணமாகக் காட்டி அவமானப்படுத்தும்போது ஏற்படும் அவமானமும் கோபமுமே, நாம் பிறரிடம் நம் ஜாதியைப் பற்றிக் காட்டும்போது ஏற்படும் என்ற ‘அறிவு’, நமக்கு இருக்க வேண்டியது அவசியம்.

நிலப்புரபுத்துவக் காலகட்டத்தில் சரியாக இருந்த பல விஷயங்கள், இந்த நவீன ஜனநாயகக் காலகட்டத்தில் தவறானதாக ஆகிவிட்டதை நாம் ஒத்துக்கொள்ள வேண்டும். அவர்கள் செய்தது சரி தான் என்றால் ‘ஜாதிகள் இரண்டொழிய வேறில்லை’ என்று ஒளவையார் தான் பாட வேண்டிய அவசியம் என்ன? ஜாதிகள் இல்லையடி பாப்பா என்று பாடிய பாரதி அக்ரகாரத்தை விட்டே துரத்தப்பட்டது ஏன்? நம் முன்னோர்கள் செய்தது சரி தான் என்று இன்னும் பிடிவாதமாகச் சாதிப்பது, நம்மிடையே எவ்வித நல்லுறவையும் ஏற்படுத்தாது. நம் முன்னோர் அவர்கள் காலகட்டத்தில் கூறப்பட்ட சமூக ஒழுங்கின்படி, சில விஷயங்களைக் கடைப்பிடித்தனர். அதனை இனியும் தொடர்வது இக்காலகட்டத்திற்கு ஒவ்வாத ஒன்று என்பதை நாம் முதலில் மனதார ஒத்துக்கொள்ள வேண்டும்.

இன்று கல்வியும் பணமுமே ஒருவரது வாழ்நிலையை தீர்மானிக்கிறது. இனியும் ஜாதிய ஏற்றத்தாழ்வை நாம் தொடர முடியாது, தொடரவும் கூடாது என்பதை நாம் அனைவரும் ஏற்றுக்கொண்டால் மட்டுமே, ஜாதிகளுக்கிடையிலான உறவு என்பது சர்ச்சைகளற்ற இயல்பான ஒன்றாக ஆக முடியும்.பிற்படுத்தப்பட்ட ஜாதிகள் தங்களுக்கிடையே உறவை/நட்பைப் பேணுவதில் பெரிய சிக்கல் இல்லை. அதே எண்ணத்துடன் பிற பிரிவுகளில் உள்ள ஜாதிகளுடனும் பழகுவது அவசியம் ஆகிறது.அதற்குத் தடையாக இருப்பது நம் ஜாதியினர்/முன்னோர் செய்ததெல்லாம் சரி தான் என்று நாம் நம்புவதும், அதே முறையை தொடர விரும்புவதுமே.

பிற ஜாதிகளுடனான உறவைப் பற்றிப் பேசும்போதெல்லாம் வாசந்தி எழுதிய ஒரு கதை ஞாபகத்திற்கு வரும்..

ஒரு தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த கதாநாயகன், ஆதிக்க ஜாதி பண்ணையாரை அவர் வீட்டில் சந்திப்பான். அவர் ‘உட்காருங்க தம்பி..நான் ஜாதியெல்லாம் பார்ப்பதில்லை’ என்று உபசரிப்பார். பிறகு கிளம்பி வெளியே வரும்போது, அங்கே கிணற்றடியில் இருக்கும் பாத்திரத்தை கதாநயாகன் ’பண்ணையார் அனுமதியின்றி’ தொட்டுவிடுவான். ‘யாரைக் கேட்டடா தொட்டாய்?’ என்று பண்ணையார் அடிக்கப் பாய்ந்துவிடுவார்.

அதாவது, சம உரிமை என்பது நாங்களாக மனமிரங்கிப் போடும் பிச்சை என்ற ஆதிக்க சாதி மனோபாவத்தை தெளிவாகக் காட்டிய கதை அது. (கதைப் பெயரோ, முழுக்கதையோ ஞாபகம் இல்லை..சாரி). முற்போக்கு வாதிகளாக காட்டிக்கொள்ளும் ஆதிக்க சாதியினர் செய்வதும் ஏறக்குறைய இதையே..’நான்லாம் ஜாதி பார்க்கறதில்லைப்பா..தயங்காம என் வீட்டுக்கு வா..கூச்சப்படாம உட்கார்ந்து சாப்பிடு’ என்பது போன்ற பேச்சுகள், மனதில் இன்னும் படிந்திருக்கும் ஜாதிய அழுக்கை காட்டுபவையே.

எனவே நாம் இத்தைய போலி முற்போக்கு வாதியாக ஆகிவிடாமல் தவிர்ப்பது அவசியம். அதற்கான உண்மையான வழி ‘நாம் ஒரு ஜாதியில் பிறந்தாலேயே உயர்ந்தவர் ஆகிவிட மாட்டோம். அது நம் நடத்தையால், எண்ணத்தால் வருவது. உள்ளே நாம் யாரோ அதுவே நம் ஜாதி’ என்று உளமார நாம் உணர்வதே ஆகும். உங்களுடன் இத்தனை நாள் விவாதித்ததில் நாம் அத்தகைய எண்ணவோட்டத்தில் தான் இருக்கிறோம் என்று உணர்ந்துகொண்டேன். அது எனக்கு மிக்க மகிழ்ச்சியளிக்கிறது.

ஜாதியை தற்போதைய சூழலில் ஒழிக்க முடியாவிட்டாலும் (ஏன் ஒழிக்கவேண்டும் என்று இன்னும் நமக்கு முழுதாக புரியாவிட்டாலும்), ஜாதிய ஏற்றத்தாழ்வை நம் மனதில் இருந்து அகற்றுவது அவசியம் ஆகிறது. ஏறக்குறைய 17 வருடங்களாக என் பிறந்த மண்ணை விட்டு வெளியே நான் இருக்கின்றேன். இங்கே ஜாதிய அடையாளம் தேவைப்படவேயில்லை. இத்தனை வருடங்களில் என் ஜாதி என்ன என்பதை நான் வெளிப்படுத்திக்கொண்டதும் இல்லை. இவ்வளவு விவாதித்தும் நீங்களும் என் ஜாதி என்ன என்று கேட்கவில்லை, நானும் சொல்லவில்லை. இதுவே ஜாதியின், ஜாதிய அடையாளத்தின் தேவை சமூகத்தில் தீர்ந்துகொண்டிருக்கிறது என்பதற்குச் சான்றாகும்.

தற்போதைய நிலையில் நான் கோவில்பட்டிக்காரன் என்பதை என்ன உணர்வோடு நான் நினைக்கின்றோனே அதே உணர்வோடே ’ நான் *** ஜாதிக்காரன்’ என்றும் நினைக்கின்றேன். கோவில்பட்டியிலும், அந்த ஜாதியிலும் பிறந்தது இயல்பாக நடந்துவிட்ட ஒன்று. கோவில்பட்டிக்காரன் மட்டுமே புத்திசாலி-நல்லவன்-உயர்ந்தவன் என்று நினைப்பது எவ்வளவு அறியாமையோ, அதேயளவு அறியாமை ‘இந்த ஜாதி மட்டுமே உயர்ந்தது’ என்று நம்புவதும்.

இந்த விவாதத்தில் இருக்கும் நாம், சமூகத்தை தலைகீழாகப் புரட்டிப்போட முயலும் புரட்சியாளர்கள் அல்ல..சாமானியர்களே என்பதாலேயே வெளிப்படையாக இவற்றைப் பேசுகின்றேன்..நம் மனசாட்சிக்கு உட்பட்டு, நியாய-தர்மத்துடன் கூடிய வாழ்வை வாழ்வதற்கான முயற்சியில் இருக்கும் மனிதர்கள் தானே நாம்..அத்தகைய நியாய வாழ்விற்கு ஒத்துவரும்வரையே ஜாதிக்கு நம் வாழ்வில் இடம் உண்டு.

நீங்கள் தொடர்ந்து இந்த விவாதத்தைப் பொதுவில் வைக்கச் சொல்கிறீர்கள்..நாம் பேசுகின்ற பாஷை எந்த அளவிற்கு படிப்போர்க்குப் புரியும் என்று தெரியவில்லை..’ஜாதிக்கான இடம் நம் வாழ்வில் என்ன? அது சார்ந்த விஷயங்களால் ஏற்படும் விளைவுகள் என்ன?’ என்று மதநம்பிக்கையுள்ள - ஜாதி வட்டத்திற்குள்ளும் உள்ள சாரசரி மனிதர்கள் பேசிக்கொண்டதன் தொகுப்பு என்று இதைச் சொல்லலாமா? இதைப் பொதுவில் வைப்பதன்மூலம், இதேபோன்ற வசைகளற்ற விவாதம் படிப்போரிடையே நடைபெறும் என்று நம்புகிறீர்களா என்ன..!

’என் முன்னோர்கள் செய்தது அனைத்தும் சரி தான்’ என்று பேசுவதோ, ’உன் முன்னோர் கெட்டவர்கள்..அதனால் நீயும் கெட்டவனாகத்தான் இருப்பாய்’ என்று நம்புவதோ இருசமூகங்களுக்கிடையில் நல்ல உறவை ஒருபோதும் ஏற்படுத்திவிடாது.

முடிவாக நாம் வெளிப்படையாக ஒத்துக்கொள்ள வேண்டிய விஷயம், நம் முன்னோர்கள் நவீன ஜனநாயகத்தை புரிந்துகொள்ளாமல் பழைய நினைவுகளுடன் பல தவறுகளைச் செய்தார்கள் என்பதையே. அடுத்து நாம் கவனத்தில் கொள்ள வேண்டியது அந்தப் பழைய தவறுகளையும் அதனால் விளைந்த வெறுப்பையும் இனியும் நாம் அடுத்த தலைமுறைக்குக் கொடுத்துவிடக்கூடாது.

அதுவே நாம் அனைவரும் இதைப் படிப்போர்க்குச் சொல்லும் செய்தியாக இருக்கட்டும்.

அனைவருக்கும் நன்றி.

அன்புடன்
செங்கோவி

மேலும் வாசிக்க... "பிராமண நண்பர்களுக்கு..(வர்ணம், ஜாதி, இடஒதுக்கீடு) _ நிறைவுப் பகுதி"
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

14 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.

Wednesday, December 7, 2011

பிரசாந்த் கல்யாணமும் சில பிற்போக்குச் சிந்தனைகளும்...


பத்திரிக்கைகளில் எட்டாம் பக்கச் செய்தியாக ’பிரசாந்த் திருமணம் செல்லாது - கோர்ட் அறிவிப்பு’ சென்ற வாரம் வெளியானது. பல வருடப் போராட்டம், அவமானத்திற்குப் பின் ஒருவழியாக பிரசாந்த் நல்ல தீர்ப்பைப் பெற்றிருக்கிறார். 2005ல் அப்போதைய தமிழக முதல்வர் ஜெயலலிதா தலைமையில், அனைத்துத் தரப்பினரின் வாழ்த்துகளுடன் நடந்த பிரசாந்த்-கிரகலட்சுமி திருமணம், இப்படி ஒரு கொடுமையான முடிவைச் சந்திக்கும் என்று யாரும் எதிர்பார்த்திருக்க முடியாது.

திருமணம் முடிந்து ஹனிமூன் எங்கு போவது என்பதிலேயே பிரச்சினை ஆரம்பித்துவிட்டது. சிங்கப்பூர் தான் போக வேண்டும் என்று அடம்பிடித்த கிரகலட்சுமி, அங்கு சென்ற பின் போனில் யாருடனோ மணிக்கணக்கில் பேசிக்கொண்டிருக்க, பிரசாந்த் அதைக் கண்டித்ததில் ஆரம்பித்தது பிரச்சினை. பிரபல நடிகர்-காதல் இளவரசன் என்ற இமேஜ் அப்போது பிரசாந்திற்கு இருந்ததால், பிரச்சினையை வெளியே வாய் விட்டுச் சொல்ல முடியாத நிலைமை.

தொடர்ந்து அவரது நடவடிக்கைகள் சந்தேகம் அளிப்பதாய் இருக்கவே, பிரசாந்த் அவரைக் கண்டிக்க வேண்டியதாய்ப் போய்விட்டது. அதற்கான பிரதிபலனாய் ‘வரதட்சணைக் கொடுமை’ என பிரசாந்த் மேல் மட்டுமல்லாமல் அவரது தாய், தங்கை, தந்தை ஆகியோர் மேலும் புகார் கொடுத்தார் கிரகலட்சுமி. நிம்மதியாய் நடிப்பில் கவனம் செலுத்த முடியாமல், வழக்குக்காக அலைய வேண்டியதானது. அப்போது பத்திரிக்கைகளும் கண்டபடி எழுதித் தள்ளின. அதைப் படித்த பலரும் ‘அப்பவும் நடிகர்-இவரும் நடிகர்..ஆனாலும் பணத்தாசையால் இப்படி வரதட்சணை கேட்டு கொடுமை செய்திருக்கிறார்களே’ என்றே நினைத்தனர்.கொடுமையான ஆணாதிக்கவாதியாக பிரசாந்தும் தியாகராஜனும் சித்தரிக்கப்பட்டனர்.

அதன்பிறகும் பிரசாந்த் தரப்பில் இருந்து சமாதான முயற்சி மேற்கொள்ளப்பட்டது. ஆனாலும் பயன் இல்லை. அதன்பிறகு தீர விசாரித்தபிறகே ‘கிரகலட்சுமி ஏற்கனவே திருமணம் ஆனவர்’ என்ற அதிர்ச்சிகரமான உண்மை வெளியே வந்தது. ஏற்கனவே பதிவுத் திருமணம் செய்திருப்பதால், பிரசாந்துடன் நடந்த திருமணம் சட்டப்படி செல்லாது. ஆனாலும் கிரகலட்சுமி உயர்நீதி மன்றம் முதல் சுப்ரீம்கோர்ட் வரை இழுத்தடித்ததில் இப்போது தான் கோர்ட்டே மனமிரங்கி பிரசாந்த்தை அந்தப் பெண்ணிடம் இருந்து விடுதலை செய்துள்ளது.

பிரசாந்த்தின் (முன்னாள்) மனைவி(?) யின் துணிச்சல் நம்மை ஆச்சரியப்பட வைக்கிறது. ஒரு மாநில முதல்வரின் தலைமையில் நடக்கும் திருமணத்தில், தைரியமாக ஏற்கனவே திருமணம் ஆகியிருந்தும், அதை மறைத்து மணமேடையில் உட்கார்ந்தார் என்றால்.........உண்மையிலேயே தைரியலட்சுமி தான்.

செய்யாத தவறுக்காக கடந்த 5 வருடங்களுக்கும் மேலாக கோர்ட் கேஸ் என்று அலைந்த பிரசாந்த்தை, மேலும் புண்படுத்தும்விதமாக மீடியாக்களும் அவரைக் குற்றவாளி போல் விரட்டி விரட்டி போட்டொ/ வீடியோ எடுத்து அவமானப்படுத்தின. இப்போது அவர் நிரபராதி என்று கோர்ட் சொல்லிவிட்டாலும், இத்தனை நாள் பிரசாந்த்தின் குடும்பம் பட்ட அவமானத்திற்கும், அதனால் அவர்கள் அடைந்த வேதனைக்கும் என்ன பதில்? இத்தனை நாள் பெரும்பாலான மக்களும் அவரை தவறான மனிதராக நினைத்தற்குக் காரணம் தான் என்ன?

ஒரு பெண் அழுதுகொண்டே ஏதாவது கூறினால், அது உண்மையாகத்தான் இருக்கும் என்ற அறியாமை கலந்த அறிவுஜீவித்தனமே அதற்கான காரணம். பிரசாந்த் வழக்கு விசாரணை பற்றிய செய்திகளை நான் தொடர்ந்து கவனித்து வருகிறேன். அதற்குக் காரணம் என் சொந்த வாழ்வில் நான் பார்த்த ஒரு மனிதரின் கதை தான்...

என் சின்னம்மா இரு குழந்தைகளை தவிக்கவிட்டு, திடீரென இறந்தததால், சித்தப்பா பலரின் வற்புறுத்தலுக்குப் பின் குழந்தைகளைப் பார்த்துக்கொள்ள என்று ஒரு பெண்ணை மணந்துகொண்டார். அது பெண் அல்ல பேய் என்று மணந்த கொஞ்சநாளிலேயே தெரிந்து போனது. ‘நான் ஏன் இந்தச் சனியன்களைப் பார்க்க வேண்டும்?’ என்று அவர் குழந்தைகளைக் காட்டிக் கேட்க, அவர் கோபப்பட ரசாபாசம் ஆனது. இரண்டு வருடப் போராட்ட வாழ்க்கைக்குப் பின் அவர் அந்தப் பெண்ணை முறைப்படி கோர்ட்டில் விவாகரத்து செய்தார். அந்தப் பெண்ணும் மனமொத்து விவாகரத்தும், பணமும் வாங்கிக்கொண்டார்.

அதன்பிறகு தான் கொடுமை ஆரம்பித்தது. நினைத்தால் ஏதாவது போலீஸ் ஸ்டேசனுக்குப் போவார் அந்தப் பெண். ‘என் புருசனும் அவன் அம்மா-அக்காக்கள்-அய்யா எல்லாரும் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தறாங்க’ என்று கம்ப்ளைண்ட் செய்வார். போலீஸும் உடபே வந்து மொத்தக்குடும்பத்தையும் ஸ்டேசனுக்குக் கொண்டுபோய் விடும். லேடி போலீஸ் ஸ்டேசன் என்றால் சித்தப்பாவிற்கும், அவர் குடும்பத்திற்கும் அடி உறுதி. 

.’வரதட்சனையா கேட்கிறீங்க..காசு வேணும்னா அக்கா-தங்கச்சிகளை வச்சு **** பண்ணுலே..” என்ற ரேஞ்சில் சொல்ல முடியாத வார்த்தைகளால் திட்டித் தீர்ப்பார்கள். பின்னாலேயே நாங்கள் யாராவது விவாகரத்துத் தீர்ப்பை எடுத்துக்கொண்டு ஓடுவோம்.

அதைப் பார்க்கக்கூட போலீசார் விரும்ப மாட்டார்கள். கெஞ்சிக்கூத்தாடி, அவர்களிடம் விவரம் சொன்னபின் ‘அப்படியா..ஏன்மா இப்படிக் கம்ப்ளைண்ட் பண்ணே?” என்றால் ‘கோர்ட் சொன்னாலும் அவர் தான் என் புருசன்’ என்பார் அந்தப் பெண்மணி. ‘அப்போ சேர்ந்து வாழறியா’ என்றால் ‘முடியாது’ என்பார். முடிவில் போலீசார் ‘மறை கழன்ற கேஸ்’ என்று நினைத்து அந்தப் பெண்ணை அனுப்பி வைத்து விடுவார்கள்.

ஒருமுறை இருக்கன்குடிக்கு குடும்பத்தோடு சாமி அவர் சாமி கும்பிடப் போக, பின்னாலேயே இந்தப் பெண்மணி போய் ‘என்னை என் புருசனும், அவர் குடும்பமும் அடித்துவிட்டார்கள்’ என்று கம்ப்ளைண்ட் கொடுத்துவிட்டார். போலீசாரும் இவர்களைப் பிடித்து, அடித்து உள்ளே உட்கார வைத்துவிட்டார்கள். பிறகு கோவில்பட்டியில் இருந்து தீர்ப்பு நகலைக் கொண்டு சென்ற பிறகே, அவர்களை ரிலீஸ் செய்தார்கள்.

வெவ்வேறு போலீஸ் ஸ்டேசன்களில், வெவ்வேறு காரணம் சொல்லி கம்ப்ளைண்ட் கொடுப்பார். 

இது ஒரு வருடம், இரண்டு வருடம் அல்ல..17 வருடங்களாக நடந்தது. அவரும் அந்தக் குடும்பமும் பட்டபாடு கொஞ்சநஞ்சமல்ல. சித்தப்பா இறந்தபிறகே இந்தத் தொல்லை தீர்ந்தது.

’வரதட்சணைப் புகார்களில் 80% பொய்ப்புகார்கள் தான்’ என்பதை நம் சுப்ரீம் கோர்ட்டே ஒத்துக்கொண்டது. எனவே வரதட்சணைப் புகார் வந்தால், மணமகன் குடும்பத்தாரை கைது செய்யக்கூடாது என்று சமீபத்தில் சட்டத்திருத்தம் செய்யப்பட்டது.

வாசகர்களில் ஆரம்பித்து போலீசார் வரை பெண் என்றால் யோசிக்காமல் ‘இரங்குவதற்கு’ என்ன காரணம் என்று பார்த்தால்....

ஏழைங்க எல்லாம் நல்லவங்க..பணக்காரங்க எல்லாம் கெட்டவங்க.

கிராமத்து மக்கள் எல்லாரும் நல்லவங்க..பட்டணத்து ஆட்கள் எல்லாம் கெட்டவங்க..

- என்பது போன்ற கெட்டிப்பட்ட சிந்தனைகள் தான் காரணம் என்று தோன்றுகிறது. அத்தகைய முன்முடிவுகள் எத்தனை அபத்தமானவை என்று பலமுறை நம் கண் முன்னே நிரூபிக்கப்பட்டாலும், அத்தகைய சிந்தனைகளை நாம் மாற்றிக்கொள்வதே இல்லை.

பிரசாந்த் மேல் தொடுக்கப்பட்ட வழக்கு பொய்யானது என்று அவரது தங்கை பெயரையும் வழக்கில் சேர்த்தபோதே புரிந்துவிட்டது. அப்போது கோவையில் வேலை பார்த்துக்கொண்டிருந்தேன்.

மேலே எழுதியிருக்கும் எல்லாவற்றையும் உடன் வேலை பார்க்கும் ஒரு பெண்ணிடம் சொன்னபோது, ‘இது பிற்போக்குச் சிந்தனை..பெண்கள் நல்லவர்கள்..ஆண்கள் அயோக்கியர்கள்..ஆ..ஊ’ என்று ஒரு பெண் குதித்தார். கூடவே சில பெண்ணியவாதிகளான ஆண்களும் குதித்தார்கள். புகாரால் பாதிக்கப்படும் மணமகன் வீட்டுப் பெண்கள் பற்றி, கொஞ்சமும் இவர்கள் கவலைப்படுவதே இல்லை..அந்த பெண்ணியவாத ரகசியமும் நமக்குப் புரிவதே இல்லை.

ஆதிக்கம் என்பது இனத்தின் பெயரால், ஜாதியின் பெயரால், பணத்தின் பெயரால் மட்டுமல்ல பால்(செக்ஸ்)-ன் பெயராலோ நடத்தப்படும்போதும், அதைத் தயங்காமல் கண்டிக்க வேண்டும் என்பதே நம் கொள்கை. ஏன் கண்டிக்கப்பட வேண்டும் என்பதற்கு மேலே சொன்ன உதாரணங்களே போதுமானவை.

மேலும் வாசிக்க... "பிரசாந்த் கல்யாணமும் சில பிற்போக்குச் சிந்தனைகளும்..."
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

42 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.

Tuesday, December 6, 2011

பிராமண நண்பர்களுக்கு...(வர்ணம், ஜாதி, இட ஒதுக்கீடு)_7

செங்கோவி,

//அரசும் அத்தகைய வசதி படித்தோரை விலக்க, வருமானச் சான்றிதழ் பெறும் முறையை ஏற்கனவே வைத்துள்ளது. //

நீங்கள் சொல்வது வேலைவாய்ப்பில் உள்ள இட ஒதுக்கீட்டிலா?  பள்ளியிலோ / கல்லூரியிலோ இது நடைமுறையில் இருப்பது போல் தெரியவில்லை. 

//உங்கள் சமூகத்துப் பெரியவர்கள் / ஜாதிச் சங்கங்கள் மூலம் ‘இனிமேல் நம்மை விட பொருளாதாரத்தில் தாழ்ந்த பிராமணர் வந்தால், நாம் உடனே போட்டியில் இருந்து விலகி அவர்களுக்கு வழி விடுவோம்’ என்று ஒரு தீர்மானம் நிறைவேற்ற முடியுமா? அதற்கு பெருவாரியான வசதி + படித்த பிராணக் குடும்பங்கள் என்ன எதிர்வினையாற்றும் என்று சொல்ல முடியுமா?//

இது எல்லா சமூகங்களிலுமே அவசியமாக ஏற்படவேண்டிய மாற்றம். இதெல்லாம் நடக்கும் என்று நம்புவோம்.  இந்த சிந்தனையைப்பரப்ப நம்மால் ஆன முயற்சிகளை செய்யலாம்.

இங்கே நீங்கள் எழுதிய அனைத்துமே மாற்றுக்கருத்து இல்லாமல் ஏற்கவேண்டியதே.  வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீட்டை விட்டுத்தள்ளுங்கள்.  அதை நான் எதிர்க்கவில்லை.  படிப்பு என்பது ஒருவரின் அடிப்படை உரிமை இல்லையா?  அதிலேயே விரும்பிய படிப்பை படிக்க முடியாது என்பது ஏற்றுக்கொள்ளக்கூடிய விஷயமா?

ஒருவருக்கு விருப்பம் இல்லாததை வலியத் திணிப்பது எந்த விதத்தில் நியாயம்?  ஒரு ஊரில் ஒரே ஒரு அரசு கல்லூரியும் மற்றும் நிறைய தனியார் கல்லூரிகளும் இருப்பது ஏன்?  எல்லாருமே வேலைக்குப்போக வேண்டும் என்ற நோக்கத்தில் படிப்பதில்லை.  

என்கூட படித்த நிறைய தோழிகள் படிப்பு முடிந்ததும் கல்யாணம் செய்துகொண்டு செட்டிலாவது என்பதில் தெளிவாக இருந்தனர்.  வேலைக்குப்போக வேண்டும் என்ற குறிக்கோள் எல்லாரிடமும் இல்லை.  அப்படி இருக்க வேலைவாய்ப்பில் எல்லாருமே போட்டிக்கு வரப்போவதில்லை.  ஆனால் படிப்பு அப்படியா?  ஒவ்வொருவரும் ஒரு டிகிரியாவது முடிக்கவேண்டும் என்று நினைக்கிறார்கள்தானே?  இப்போது அது அவசிய தேவையாகவும் ஆகிவிட்டதுதானே?

மேலும் எனக்கு அடிக்கடி தோன்றும் ஒரு விஷயம் (இதை நான் வாதத்திற்காக எழுதவில்லை, உங்கள் கருத்தை அறியவே எழுதுகிறேன்), இப்படி தமிழ்நாட்டில் வாய்ப்பு மறுக்கப்பட்ட / சாத்தியப்படாத திறமையுள்ள அநேகம் பேர் (இதில் என் சமூகத்தை குறிப்பிடவில்லை, பொதுவாகவே சொல்கிறேன்) வெளி மாநிலங்களுக்கோ / நாடுகளுக்கோ வேலை தேடி ஓடிவிடுகிறார்களே?

இது தமிழ்நாட்டுக்கு இழப்பு இல்லையா?

அன்புடன்
*******
 -----------------------------------------------------------------------------------------------------------------------------

அன்பு நண்பருக்கு,

 //நீங்கள் சொல்வது வேலைவாய்ப்பில் உள்ள இட ஒதுக்கீட்டிலா?  பள்ளியிலோ / கல்லூரியிலோ இது நடைமுறையில் இருப்பது போல் தெரியவில்லை.  //

பள்ளி / கல்லூரிக்கும் அது உண்டு. நான் படித்தபோது (நியாயமான) வருமானச் சான்றிதழ் பெற 30 ரூபாய் லஞ்சம் கேட்டார்கள். இப்போது எவ்வளவோ?

//படிப்பு என்பது ஒருவரின் அடிப்படை உரிமை இல்லையா?  அதிலேயே விரும்பிய படிப்பை படிக்க முடியாது என்பது ஏற்றுக்கொள்ளக்கூடிய விஷயமா?  ஒருவருக்கு விருப்பம் இல்லாததை வலியத் திணிப்பது எந்த விதத்தில் நியாயம்? //

உங்கள் கேள்வி நியாயமானது தான். முதலிலேயே சொன்னபடி10% மக்கள் இத்தகைய பாதிப்புக்கு ஆளாவது ஜனநாயகத்தில் தவிர்க்க முடியாததாக உள்ளது. நாம் மேலே விவாதித்தபடி, படிப்படியாக இடஒதுக்கீட்டு பயனாளர்கள் குறைக்கப்படுவதே இதற்கான தீர்வு.அதை கட்டாயமாக மாற்ற முடியாது. இயல்பாகவே அந்த மாற்றம் நடக்க வேண்டும்.

//இப்படி தமிழ்நாட்டில் வாய்ப்பு மறுக்கப்பட்ட / சாத்தியப்படாத திறமையுள்ள அநேகம் பேர் (இதில் என் சமூகத்தை குறிப்பிடவில்லை, பொதுவாகவே சொல்கிறேன்) வெளி மாநிலங்களுக்கோ நாடுகளுக்கோ வேலை தேடி ஓடிவிடுகிறார்களே?  இது தமிழ்நாட்டுக்கு இழப்பு இல்லையா? //

தமிழ்நாட்டில் பிரபல ஐ.டி.கம்பெனியில் என் நண்பன் ஒரு அமெரிக்க மருத்துவமனையை மேம்படுத்த புராஜக்ட் செய்துகொண்டிருக்கிறான். நான் சிங்கப்பூரில் ஒரு கப்பல் கட்டுமான நிறுவனத்தில் வேலை பார்த்தேன். நாங்கள் கட்டிய கப்பல், நம் ரிலையன்ஸ் நிறுவனத்திற்காக, நம் கோதாவரி படுகையில் பெட்ரோல் எடுக்கிறது. இது தான் தாராளமயமாக்கலுக்குப் பின்னான இன்றைய நிலை. ஒருவன் இங்கேயே இருப்பதால், இந்தியாவை முன்னேற்றுகிறான் என்று அர்த்தம் இல்லை. வெளிநாட்டில் இருப்பதால், இந்தியாவிற்கு பயனில்லை என்றும் அர்த்தம் இல்லை. 

மேலும் இந்தியாவிற்கு அந்நிய முதலீட்டை அளிப்பதில் வெளிநாட்டுக்கு ஓடிப்போன மக்களின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கது.

மேலும், எல்லோருக்கும் இங்கேயே வேலை செய்யும் அளவிற்கு இங்கே வேலை வாய்ப்புகளும் இல்லையே..அது திரும்ப நம்மை 1980க்குத் தானே கொண்டு செல்லும்? அப்படிப் பல திறமைசாலிகள் ஓடியபின்னும் ‘இந்தியா - சீனா’ தான் அடுத்த பொருளாதார சக்திகள் என்றுதானே அந்த ஓடிப்போன திறமையாளர்களுக்கு அடைக்கலம் கொடுத்த நாடுகளே சொல்கின்றன?

நான் வேலை பார்த்த வெளிநாடுகளில் என்னுடன் சீனாக்காரன், ஃபிலிப்பைன்ஸ்காரன், இங்கிலாந்துக்காரன் என பல்வேறு நாட்டுக்காரனும் ‘ஓடி வந்து’ வேலை செய்தார்கள்/செய்கிறார்கள். 

அதற்கு என்ன காரணம் சொல்வீர்கள்? அவர்களால் சீனா/ஃபிலிப்பைன்ஸ்/இங்கிலாந்து முன்னேற்றம் தடைபட்டுவிட்டது என்றா? அவர்கள் திறமையை வெளிப்படுத்த அங்கே வாய்ப்பில்லை என்றா?

இந்த ‘ஓட்டத்திற்கு’ அடிப்படைக் காரணம் துட்டு தானெயொழிய ‘திறமையை வெளிப்படுத்தும் அவா’ அல்ல. இங்கேயே மாதம் 2 லட்சம் சம்பளம்..ஒரு வேலையும் செய்ய வேண்டாம்..ப்ளாக் படித்தால் போதும் என்றால், ‘அதெல்லாம் முடியாது..நான் திறமையை வெளிப்படுத்தணும்’ என்று யாராவது ஓடுவார்களா என்ன?

அத்தகைய ஓட்டங்கள் எங்கும் நடப்பது, தவிர்க்க முடியாதது..திரைகடல் ஓடியும் திரவியம் தேடுதல் முற்காலத்தில் இருந்தே நடைபெறும் விஷயம்.

எனவே ஓட விரும்புவோர் ஓடட்டும். அதை அனுமதிப்பதும் ஜனநாயகம் தான்.

அன்புடன்
செங்கோவி

----------------------------------------------------------------------------------------------------------------------------------

வணக்கம் செங்கோவி!

//வேலை தேடி ஓடிவிடுகிறார்களே?//

இந்த ஓடிவிடுகிறார்கள் என்பதை நான் சாதாரண அர்த்தத்திலேயே சொன்னேன், நீங்கள் எதுவும் தவறாகப்புரிந்துகொள்ளவில்லையே?  நானும் வெளிநாட்டில் தான் வெளியிலேயே இருக்கிறேன்.  நான் சொன்னது எனக்கும் சேர்த்தே.

உண்மையிலேயே நான் இதை ஒரு கருத்துப் பரிமாறுதலாகத்தான் நினைக்கிறேன்.  முதலிலேயே சொன்னதுபோல் இதை இன்னும் ஆழமாகப்புரிந்து கொள்ளும் முயற்சிதான் இது.

//வெளிநாட்டில் இருப்பதால், இந்தியாவிற்கு பயனில்லை என்றும் அர்த்தம் இல்லை. மேலும் இந்தியாவிற்கு அந்நிய முதலீட்டை அளிப்பதில் வெளிநாட்டுக்கு ஓடிப்போன மக்களின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கது. //

இது எனக்கும் புரிகிறது.  நான் இழப்பு என்றே குறிப்பிட்டிருந்தேன்.  அவர்களால் பயனில்லை என்று சொல்லவில்லையே.  வெறும் பணம் அதாவது அந்நிய முதலீடு மட்டும் வந்தால் போதுமா?  

உதாரணமாக இப்போது நாசாவில் வேலை பார்ப்பவர்களில் நிறைய இந்தியர்கள் இருக்கிறார்கள்.  அதனால் அமெரிக்காதானே அதிக பலன் பெறுகிறது?  எந்த ஒரு துறையிலும் ஆராய்ச்சியாளர்களை ஊக்குவிக்க இந்திய அரசாங்கம் முயற்சி எடுக்க வேண்டாமா?  ஐ.டி. துறை நல்ல வளர்ச்சியை அடைந்திருக்கிறது, உண்மைதான்.  ஆனால் மற்ற துறைகள்? 

கட்டுமானத்துறையில் சிறந்த பலர் வெளிநாட்டில்தானே வேலை செய்கின்றனர்?  அவர்களை வைத்து இந்தியாவை மேம்படுத்த முடியாதா?  இந்தியா குடிசைகளால் நிரம்பியிருக்கக் காரணம் என்ன?  மருத்துவத்துறையை எடுத்துக்கொண்டால் இப்போது சோனியாவுக்கு மருத்துவம் பார்த்தவர் கூட ஒரு இந்தியர் என்று படித்தேன்.  புற்றுநோய் சிகிச்சையில் நிபுணத்துவம் பெற்றவர் என்பதாக.  

ஆனால் இந்தியாவில் ஒரு அரசாங்க ஆஸ்பத்திரியில் வேலை பார்க்கும் டாக்டரின் தரம் உங்களுக்குத் தெரிந்ததுதானே?  நிறைய சிறந்த மருத்துவர்களும் இருக்கிறார்கள்.  நான் எல்லோரையும் சொல்லவில்லை.  ஆனால் பெரும்பான்மையானவர்கள்?  

இந்த அரசாங்க ஆஸ்பத்திரியில் போய்விட்டு ஒருமுறை அவதிப்பட்ட அனுபவத்தை வைத்தே இதை சொல்கிறேன். 

இதற்கெல்லாம் உங்கள் பதில் என்ன?

அன்புடன்,
********
----------------------------------------------------------------------------------------------------------------------------

அன்பு சகோ,

//வெறும் பணம் அதாவது அந்நிய முதலீடு மட்டும் வந்தால் போதுமா?  உதாரணமாக இப்போது நாசாவில் வேலை பார்ப்பவர்களில் நிறைய இந்தியர்கள் இருக்கிறார்கள்.  அதனால் அமெரிக்காதானே அதிக பலன் பெறுகிறது?  எந்த ஒரு துறையிலும் ஆராய்ச்சியாளர்களை ஊக்குவிக்க இந்திய அரசாங்கம் முயற்சி எடுக்க வேண்டாமா?  //

வேண்டும் தான்..ஆனால் அமெரிக்கா அளவிற்கு விஞ்சானத்திற்கு செலவளிக்க நாம் இன்னும் தயாராகவில்லை. நமது மக்களின் அடிப்படைத் தேவைகளே தீர்க்கப்படாத நிலையில் அதிக நிதியை விஞ்சானத்திற்கு ஒதுக்குவது சாத்தியமும் அல்ல.

அவ்வாறு இருக்கும்போது, குறைந்த சம்பளத்திற்கு வேலை செய்யுங்கள் என்று கட்டாயப்படுத்தவும் முடியாது. திறமையை வெளிப்படுத்த வாய்ப்பில்லாததால் மட்டுமே ஓடுவதாக உங்கள் கருத்து தொனித்தது. அதனாலேயே பணம் இந்த விஷயத்தில் முக்கிய காரணி என்று சொன்னேன்.

அப்துல் கலாம் போன்றோர் இங்கிருந்தே தன் திறமையை வெளிப்படுத்திய்வர்கள் தானே..

அவர்கள் ஓடுவதற்குக் காரணம் ஜாதி-இட ஒதுக்கீடு போன்றவற்றை விட அதிக சம்பளம் தர முடியாத, ஆராய்ச்சிகளுக்கு அதிக நிதி ஒதுக்க முடியாத நம் அரசின் நிதிநிலைமையே முக்கியக் காரணம். விண்வெளி ஆராய்ச்சியை விடவும் அடிப்படைக் கட்டமைப்பை மேலும் வலுப்படுத்திக்கொள்வது நம் வளர்ச்சிக்கு அவசியம்.

எனவே தான் சொன்னேன்..ஒடுவதும் தவறல்ல..அரசின் நிலையும் அப்படியே.

இருப்பினும், இவ்வாறு இங்கு படித்தோர் வேறு யாருக்கோ வேலை செய்வது அடிப்படையில் நமக்கு இழப்பு தான்.

நான் ஏற்கனவே சொன்னபடி, நாசா போன்ற இடங்களில் எல்லா நாட்டவருமே வேலை செய்கிறார்கள். எனவே இது இட ஒதுக்கீடு மட்டுமே சம்பந்தப்பட்ட பிரச்சினை அல்ல. முழுக்க இட ஒதுக்கீட்டை நீக்கிவிட்டாலும், ஓடுவதற்கு வேறு காரணங்கள் கண்டுபிடித்துச் சொல்லப்படும்.

மேலும், என்ன தான் ஒருவர் 50 வருடம் நாசாவில் இருந்தாலும் அவரை இந்தியன் என்று தானே நாமும் சொல்கிறோம், அமெரிக்கர்களும் சொல்கிறார்கள்.

நம்மால் என்ன சம்பளம்/நிதி ஒதுக்க முடியுமோ, அதைக்கொண்டு முன்னேற வழிவகைகளைப் பார்ப்பதே நல்லது. அதில் வரும்/வந்து கொண்டிருக்கும் முன்னேற்றமே போதுமானது. அமெரிக்கா போல் பொருளாதாரப் பிரச்சினையில் மாட்டிக்கொள்ளாமல் நாம் தப்பிக்க அதுவே உதவும்.

//இந்த அரசாங்க ஆஸ்பத்திரியில் போய்விட்டு ஒருமுறை அவதிப்பட்ட அனுபவத்தை வைத்தே இதை சொல்கிறேன். //

அரசு அலுவலகங்கள், அரசு ஆஸ்பத்திரிகள் போன்றவை சீர்திருத்தப்பட வேண்டியது அவசியம். ஆனால் அதற்கும் நம் விவாதப்பொருளான ‘ஜாதி-வர்ணம்-இட ஒதுக்கீட்டிற்கும்’ நேரடிச் சம்பந்தம் இல்லையே...அது எல்லா ஜாதிகளும் உணரும் பிரச்சினை தானே..

அன்புடன்
செங்கோவி


(தொடரும்)
மேலும் வாசிக்க... "பிராமண நண்பர்களுக்கு...(வர்ணம், ஜாதி, இட ஒதுக்கீடு)_7"
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

21 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.