Tuesday, December 11, 2012

சூப்பர் ஸ்டாரிடம் கற்றுக்கொள்ள 5 விஷயங்கள்

1. நல்ல குடும்பத் தலைவன்:

பூமி என்ன தான் தன்னைத் தானே நாளெல்லாம் சுற்றினாலும், சூரியனை மையமாகக் கொண்டு சுற்றி வரும்வரையே அதற்கு வாழ்வு. சூரிய சக்தி இல்லையென்றால் பூமி சிவம் இல்லை. அதே போன்று குடும்பம் இல்லையேல், தான் இல்லை என்று உணர்ந்தவர். இதை சினிமாத்துறையில் இருந்துகொண்டு உணர்பவர்கள் குறைவு. பதிவுலகிலேயே கொஞ்சம் ஹிட்ஸ் வந்தாலே, குடும்பத்தைக் கவனிக்க, நேரம் ஒதுக்க நாம் தடுமாறும்போது, சூப்பர் ஸ்டார் எனும் மாபெரும் ஒளிவட்டமாக இருந்தும் நல்ல குடும்பத் தலைவனாக வாழ்பவர். தான் ராத்திரி-பகல் பாராமல் உழைப்பதெல்லாம் தன் குடும்பத்திற்கே..அவர்கள் இல்லாமல் தான் இல்லை என்று உணர்ந்தவர். தன் சம்பாத்தியத்தை எவ்விதத்திலும் வீணடிக்காமல் குடும்பத்திற்கென்றே உழைத்துக்கொட்டிய உழைப்பாளி.

தற்போதைய இந்திய சமூகம் என்பது முதல் தலைமுறை பட்டதாரிகளால், முதல் தலைமுறை பணக்காரர்களால் ஆனது. அவரது பல ரசிகர்களும் அப்படிப்பட்டவர்களே. ஒவ்வொரு ரசிகனும் தன் குடும்பத்தை எப்படிக் கவனிக்க வேண்டும் என்று வார்த்தையால் சொல்லாமல், வாழ்க்கையாக வாழ்ந்து காட்டியவர்.
2. எளிமையும் பணிவும்:
இப்போதும் பயணம் அம்பாசடர் காரில் தான். வெளியில் வருவது வழுக்கைத் தலையுடன் தான். இமேஜ் என்பது பற்றி எவ்விதக் கவலையுமின்றி, எளிமையைவே தன் இமேஜாக ஆக்கியவர். எவ்வளவு தான் புகழ் இருந்தாலும், அதைத் தன் தலைக்குள் ஏற்றிக்கொள்ளாதவர். திறமைசாலிகளைக் கண்டால், மரியாதை கொடுக்கத் தயங்காதவர்.இப்போதும் பாலச்சந்தருக்கும் மகேந்திரனுக்கும் அன்று கொடுத்த அதே மரியாதையைக் கொடுக்கும் பணிவு கொண்டவர்.

இன்றும் ஷூட்டிங் இடைவேளையில் மரத்தடியில் பெஞ்ச் போட்டு உறங்கும் ஒரே ஹீரோ.’ஆடாத ஆட்டமெல்லாம் போட்டவங்க மண்ணுக்குள்ளே’ என்று உணர்ந்தவர், நமக்கு உணர்த்தியவர்.

3. நேரம் தவறாமை:

அவர் சூப்பர் ஸ்டார் என்று பிரகடனப்படுத்தப்பட்ட பின்னும், தனக்காக யாரும் காத்துக்கொண்டிருக்கக்கூடாது என்று நினைத்தவர்.எந்த ஒரு ஷூட்டிங்கும் தன்னால் தாமதமாகவோ, கேன்சல் செய்யப்படவோகூடாது என்ற அக்கறை கொண்டவர்.நடிகர் திலகம் சிவாஜிக்குப் பிறகு, நேரந்தவறாமையைக் கடைப்பிடிப்பதில் வல்லவர் இவரே.தனக்கு சம்பளம் தரும் முதலாளிகள், தனது நடவடிக்கைகளால் நஷ்டப்படக்கூடாது என்று நினைப்பவர்.

நேரந்தவறாமைக்கு அடிப்படை, மற்றவர்களைவிட நான் உயர்ந்தவன் என்ற தலைக்கனம் இல்லாததே!
 
4. தன்னம்பிக்கை:

சூப்பர் ஸ்டார்,

கமலஹாசன் போல் டான்ஸில்/நடிப்பில் சிறந்தவர் இல்லை.
விஜயகாந்த்/அர்ஜூன் போல் ஃபைட் செய்பவரும் இல்லை.
பிரபு போல் சிவப்பழகன் இல்லை.

ஆனாலும் அவர் சூப்பர் ஸ்டார்!

நமது துறையில் சில விஷயங்களில் நம்மை விடவும் சிறந்தவர்கள் இருப்பார்கள். ஆனாலும் இறைவன் நமக்குக் கொடுத்திருக்கும் (ஸ்டைல் போன்ற) திறமைகளைகளை தன்னம்பிக்கையுடன் செயல்படுத்தினால், உச்சத்தைத் தொடலாம் என்று நமக்கு உணர்த்தியவர் சூப்பர் ஸ்டார்.
5. ஆன்மீகம்:

வேலை, பணம், புகழ் எல்லாம் இந்த வாழ்க்கைக்கு மட்டுமே பயனளிக்கக்கூடியது.நாம் போகும்போது எடுத்துக்கொண்டு போகக்க்ப்போவது நம் பாவ-புண்ணியத்தையும் அந்தரங்க ஆன்மீக வாழ்க்கையை மட்டுமே. எனவே தான் வாழ்க்கையில் எல்லாவித வசதிகளையும், பேர்-புகழையும் சம்பாதித்து/அனுபவித்து முடித்துவிட்டாலும் ஒரு நல்ல மனிதனுக்கு அது மட்டுமே போதாது என்று தன் ஆன்மீக ஆர்வத்தால் நமக்கு உணர்த்தியவர்.

ஆன்மீகரீதியாக தன்னை ஒரு மாணவனாகவே கருதிக்கொள்பவர்.ஆன்மீகப் பயணம் நீண்டது, பல ஜென்மங்களுக்கும் தொடர்வது என்ற புரிதல் கொண்டவர். ஆன்மீக ஈடுபாடு இருந்தாலும், பிற மதத்தை/மதத்தினரை இழிவாகப் பார்க்காத பண்பாளர்.

சூப்பர் ஸ்டாருக்கு இனிய பிறந்த தின நல்வாழ்த்துகள்!
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

14 comments:

  1. சூப்பர் ஸ்டாரின் சிறந்த குணங்களை வெளிப்படுத்தி சிறப்பித்த தங்களின் பதிவும் சிறப்பு! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  2. விகடனில் போட்டதை சுட்டுட்டா மாதிரி இருக்கே............

    ReplyDelete
  3. @Harry Rushanth

    //ரெண்டாவது //

    அப்போ, நான் மூணாவதா?

    ReplyDelete
  4. //Jayadev Das said... [Reply]

    விகடனில் போட்டதை சுட்டுட்டா மாதிரி இருக்கே........//

    ஒரு ரஜினி ரசிகனுக்குத் தெரியாத விஷயங்களையா சார் அதில் போட்டிருந்தாங்க?

    ReplyDelete
  5. பகிர்தலுக்கு நன்றி சகோ

    ReplyDelete
  6. வணக்கம் செங்கோவி ஐயா நலமா?
    உண்மையில் ரஜனி ஒரு சகலதும் பொருந்திய தலைமகன் தான் அருமையான விடயங்களைத் தொட்டுச் செல்லும் பதிவு!உங்களுடன் நானும் பிறந்தநாள் நல்வாழ்த்தினை பகிர்ந்து கொள்கின்றேன்!

    ReplyDelete
  7. சூப்பர்ண்ணே, சூப்பர் ஸ்டார் என்னைக்கும் சூப்பர் ஸ்டார் தான். தலைவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  8. வணக்கம்,செங்கோவி!அருமையாக அந்த ஐந்து விஷயங்களையும்,எளிமையாக சொல்லியிருக்கிறீர்கள்.ரஜனி சாருக்கு வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  9. ///பிரபு போல் சிவப்பழகன் இல்லை./////

    க்கும்........

    ReplyDelete
  10. செங்கோவி...இனிய கிறிஸ்துமஸ் + புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்... மீண்டும் 2013 இல் சந்திப்போம்...MERRY CHRISTMAS AND A HAPPY NEW YEAR...

    ReplyDelete

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.