Friday, June 29, 2012

முருக வேட்டை_16


முருக வேட்டை_இரண்டாம் பாகம்

உருவாய் அருவாய் உளவாய் இலதாய்
மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்
கருவாய் உயிராய் கதியாய் ஒளியாய்
கருவய் உயிராய் கதியாய் விதியாய்
குருவாய் வருவாய்! அருள்வாய் குகனே! 


- கந்தர் அனுபூதி


பூஜை ரூமிலிருந்து கவிதா வெளியே வந்தாள். சரவணன் லேப்டாபுடன் உட்கார்ந்திருப்பதைப் பார்த்தாள்.

நான்கு நாட்களாக வெளியே எங்கும் செல்லாமல் வீட்டிலேயே சரவணன் முடங்கிக் கிடப்பது கஷ்டமாக இருந்தது. இதற்காகவே அவனை எங்காவது வெளியே கூட்டிப் போக வேண்டும் என்று முடிவு செய்திருந்தாள். எனவே கென்யாவில் இருக்கும் தன் தாய்மாமாவிற்கு மெயிலும் அனுப்பியிருந்தாள்.

”என்னங்க..என்ன செய்றீங்க?’

நாலுநாள் தாடியுடன் அமர்ந்திருந்த சரவணன் திரும்பிப் பார்த்தான். “சும்மா..கூகுள்ல MARS-ன்னு போட்டு தேடிக்கிட்டு இருக்கேன்.”

“ப்ச்..கொஞ்சநாளைக்கு அதை மறந்துட்டு ரிலாக்ஸா இருக்கலாம்ல?”

“நீ இருப்பியா?”

கவிதா சிரித்தாள்.

“சரி. கூகுள் என்ன சொல்லுது?”

“புதுசா ஒன்னும் சொல்லலை..சூரிய மண்டலத்தில் சூரியனிடமிருந்து நான்காவது இருக்கும் கிரகம். ரோமன் கடவுள் ‘மார்ஸ்’ பெயர் தான் இந்த கிரகத்துக்கு சூட்டப்பட்டிருக்கு. அதோட சர்ஃபேஸைச் சுத்தி அயன் ஆக்சைடு ஃபார்ம் ஆகியிருக்கிறதால, பார்க்கிறதுக்கு ரத்தக்கலர்ல சிவப்பா இருக்கும். அதனால ரத்த கிரகம்-ன்னும் இதைச் சொல்றாங்க. பூமியோட அளவுல பாதி தான் செவ்வாய் இருக்கும். செவ்வாய்க்கு இரண்டு நிலாக்கள் உண்டு.”

“முருகர்க்கு இரண்டு பொண்டாட்டி இருக்கிற மாதிரியா?”என்று சிரித்தாள் கவிதா.

“இப்போ ஏன் முருகரை இழுக்கறே?”

“இல்லீங்க..ஒவ்வொரு கிரகத்துக்கும் ஒரு அதிபதி உண்டுன்னு முன்னோர்கள் சொல்லியிருக்காங்க. அந்தவகையில செவ்வாய்க்கு அதிபதி முருகர்”

“அதிபதி-ன்னா?”

“ஓனர்”

“ஓஹோ..அப்போ மனுசன் செவ்வாய்ல குடியேறனும்னா முருகருக்குத் தான் வாடகை கொடுக்கணுமோ? ஏன் இப்படி அதிபதி, ஓனர்னு உளறிக்கிட்டு இருக்கிறே? எவனோ உங்களையெல்லாம் முட்டாளாக்கி, சம்பாதிக்க சொன்ன பொய்களை நம்பி இன்னும் எத்தனை நாளைக்கு வாழப் போறீங்களோ?”

கவிதாவின் முகம் வடிப்போயிற்று. இதற்காகத் தான் சரவணனிடம் அவள் ஆன்மீகம் பற்றிப் பேசுவதேயில்லை. என்ன பேசினாலும் ‘நீங்கள் எல்லோரும் முட்டாள்கள். நான் எல்லாம் அறிந்த புத்திசாலி’ என்ற தொனியிலேயே பதில் வரும். கவிதாவிற்கு சட்டென்று இன்று நடக்க இருக்கும் மீட்டிங் ஞாபகம் வந்தது.

“ஏங்க, இன்னிக்குத் தானே உங்க கட்சிக்காரங்க மீட்டிங்?”

“ஆமா..ஆனால் அது கட்சி இல்லை, இயக்கம். ரெண்டாவது அது ‘என்’ கட்சி இல்லை. நான் அதில் மெம்பர் இல்லை. அவங்க சொல்றது நியாயம் தானேன்னு ஃபாலோ பண்றவன். அவ்ளோ தான்."

“சரி..சரி..மீட்டிங்க்கு நீங்க போகலியா?”

“போகணும்”

சரவணன் மீட்டிங்கிற்குப் போனால், இந்த ‘மார்ஸ்-1024’ தொல்லையில் இருந்து விடுபட்டு, கொஞ்ச நேரம் நிம்மதியாக இருப்பானே என்று தோன்றியது. சஸ்பெண்ட் ஆனபின் வீட்டிற்குள்ளேயே முடங்கிக் கிடப்பதைப் பார்க்கவே கஷ்டமாக இருந்தது.

“போய்ட்டு வாங்க”

“ஹே..நீயே ஒரு முருகர் பைத்தியம். ஆனாலும் அந்த நாத்திக பர்ட்டி வந்தாலும், சகஜமாப் பேசுறே..நான் மீட்டிங் போனாலும் ஒன்னும் சொல்றதில்லை, ஏன்?”

“அவங்க மேல நான் கோபப்பட என்ன இருக்கு? இந்து மதத்தில் விமர்சனத்துக்கு இடம் உண்டு. உங்களுக்குத் தெரியாததில்லை. இந்து மதத்துக்குன்னு, அதை நிர்வகிக்கன்னு தனி தலைமைப்பீடம் கிடையாது. இது ஒட்டு மொத்த மக்களால், அவங்களோட நம்பிக்கைகளால் நடத்தப்படும் ஒரு வாழ்க்கை முறை. இதுல மாற்றம் எப்படி வரும்? மக்களோட சிந்தனைகள்ல மாற்றம் வந்தாத் தான் மத ஆச்சாரங்கள் மாறும். அந்த மாற்றத்துக்கான குரல், மதத்துக்கு உள்ளே இருக்கிறவங்ககிட்ட இருந்து வரணும். அப்படி வராத பட்சத்தில் வெளில இருக்கிறவங்க அதுக்காக குரல் கொடுக்கிறது தப்புன்னு நான் நினைக்கலை. அவங்க அதைச் சொல்றமுறை ஹார்ஷா இருந்தாலும், இந்த ஒட்டு மொத்த மக்களோட சிந்தனைகளை கலைச்சுக்கிட்டே இருக்கிறது நல்லது தான். புத்தர் சொல்லலியா? காலப்போக்கில் அவர் சொன்னதில் பலவும் இந்து மத ஆச்சாரங்களுள் ஒன்னா ஆகலியா என்ன?”

”அப்போ அவங்க பேசறது சரி தான்னு ஒத்துக்கறீங்களா?”

”அவங்க சொல்றது சரியாயிருந்தா, காலப்போக்கில் இந்து மதம் அதை ஏத்துக்கும். தப்பா இருந்தா, வெட்டிக் கூச்சலா அதை ஒதுக்கித் தள்ளும். எவ்வளவோ எதிர்ப்புகளை இந்து மதம் தாண்டி வந்திருக்கு. இவங்க விமர்சனத்தால மட்டுமே ஒன்னும் ஆகிடப் போறதில்லை. இப்படி கூட்டம் இருக்கக்கூடாதுன்னு நான் நினைக்கலை. இந்தக் கூட்டத்துல ஒரு ஆளா நான் இருந்திடக்கூடாதுன்னு தான் நான் நினைக்கிறேன்”

”ஏன்..அந்தக் கூட்டத்துல ஒரு ஆளா இருக்கிறதுல என்ன தப்பு?”

“தப்புன்னு ஒன்னுமில்லை..எதிர்மறைச் சிந்தனை மட்டுமே வாழ்க்கை முறையா ஆகிடும் அபாயம் அங்கே உண்டு. அதுல போன பலரும் அப்படித் தான் ஆகியிருக்காங்க...சரி, நேரம் ஆகுது..விட்டா, நான் பேசிக்கிட்டே இருப்பேன். நீங்க போய்ட்டு வாங்க”

சரவணன் அந்த மீட்டிங்கிற்கு கிளம்பினான்.

(தொடரும்)

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

10 comments:

  1. இரவு வணக்கம்,செங்கோவி!///இந்து மதத்துக்குன்னு,அதை நிர்வகிக்கன்னு தனி தலைமைப் பீடம் கிடையாது!///அதால தான் எல்லாருமே ஏறி மிதிக்கிறாங்க போல?

    ReplyDelete
  2. இரவு வணக்கம்,செங்கோவி!///இந்து மதத்துக்குன்னு,அதை நிர்வாகிக்கன்னு தனி தலைமைப் பீடம் கிடையாது!///அதால தான் எல்லாருமே ஏறி மிதிக்கிறாங்க போல?

    ReplyDelete
  3. வெள்ளிக்கிழமை முருகனின் கந்தன் அனுபூதி ரசித்தேன்!

    ReplyDelete
  4. வெள்ளிக்கிழமை முருகனின் கந்தன் அனுபூதி ரசித்தேன்!

    ReplyDelete
  5. யார் யார் இந்துமதத்தை  அழிக்க நினைத்தாலும் அழிக்க முடியாத ஒன்று மாற்றங்கள் உள்வாங்குவதில் பின் நிற்காத மதம்!ம்ம் தொடருங்க வேட்டையை !

    ReplyDelete
  6. மாம்ஸ்.... இப்போ தான் தலைப்புக்கு ஏற்ற பகுதிக்கு வந்திருக்கிங்க..

    தொடருங்கள்.

    ReplyDelete
  7. அடுத்த பாகம் தொடங்கிருச்சு, தலைப்புக்கு பக்கத்துல வந்துட்டீங்க......!

    ReplyDelete
  8. நல்லா இருக்கு! இந்துமதம் பற்றிய விளக்கம் சூப்பர்!

    ReplyDelete

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.