Wednesday, June 20, 2018

Revisiting….அபூர்வ சகோதரர்கள் (1989)


தமிழ் சினிமாவில் வந்த நல்ல பொழுதுபோக்குப் படங்கள் என்று ஒரு லிஸ்ட் போட்டால், இன்றும் முதல் பத்து இடங்களுக்குள் அபூர்வ சகோதரர்கள் இடம்பிடிக்கும். ஒரு வழக்கமான பழி வாங்கும் கதையை எப்படி கொஞ்சமும் அலுக்காமல் சொல்வது என்பதற்கு இந்தப் படம் சிறந்த உதாரணம்.

ஏற்கனவே நான் எழுதியடபுள் ஆக்ட்டிங்கும் டமில் சினிமாவும் (லின்க், முதல் கமெண்ட்டில்) பதிவில் இத்தகைய படங்களின் பலம் என்ன என்று விரிவாகப் பேசியிருக்கிறோம். ஒரு குறைபாடுள்ள ஹீரோ (கோழை/அப்பாவி)-வும் அவனைப் போன்றே தோற்றமுள்ள ஒரு முழுமையான ஹீரோ (வீரன் / புத்திசாலி) - வும் இடம் மாறும்போது ஏற்படும் சிக்கல்கள் தான் இத்தகைய டபுள் ஆக்ட்டிங் கதைகளின் அடிப்படை

நிஜ வாழ்க்கையில் சாமானியனாக இருக்கும் ரசிகன், திரையில் தன்னைப் போன்ற ஒருவனின் இத்தில் ஒரு ஹீரோ வந்தமர்ந்து பிரச்சினைகளைத் தீர்ப்பதைப் பார்த்து கொண்டாடித் தீர்த்தான். டபுள் ஆக்ட்டிங் இன்னும் முன்னேறி, ட்ரிபிள் ஆக்ட்டிங் ஆனது. பெரும்பாலும்அப்பாவுக்கு ஒரு சிக்கல்..அதை பிள்ளைகள் தீர்ப்பதுதான் ஒன்லைன். சிக்கல் என்பது அபூர்வ சகோதரர்கள் போன்று மர்கயா-வாக க்கூட இருக்கலாம்!

அபூர்வ சகோதரர்கள் படம் அரதப்பழசான பழிவாங்கும் & இரட்டைப் பிள்ளைகள் கதையை புதுமையாகச் சொன்னது. இந்த மாதிரிப் படங்களில் குறைபாடுள்ள ஹீரோ பிரச்சினையில் சிக்கிக்கொள்வான், ‘ஹீரோவந்து காப்பாற்றுவார். இதை கமல் தனது அற்புதமான திரைக்கதையில் தலைகீழாக ஆக்கினார். (பஞ்சு அருணாச்சலம் அவர்களின் கைவண்ணமும் இதில் உண்டு.)

பொதுவான எதிர்பார்ப்பு, அப்பாவைக் கொன்றவர்களை ராஜா கேரக்டர் கொல்லும் என்பதே. ஆனால் இங்கே அப்பு தான் பழிவாங்குவார்.  ராஜா கேரக்டரை அட்டகாசமாக, அப்பு கதையுடன் பொருத்தியிருப்பார்கள். அப்பு கொலை செய்துகொண்டே போக, கொலைப்பழியுடன் ராஜா கேரக்டர் கதறி ஓடிக்கொண்டே இருக்கும். படத்தை கொஞ்சமும் அலுக்காததாக ஆக்கியது என்னவென்றால் இதை நகைச்சுவையாகச் சொன்னது தான். (நீங்க எங்கயோ போய்ட்டீங்க சார் ஐ மறக்க முடியுமா!)

பழிவாங்குதற்கான காரணமும் புதுமையானதாகவும் செண்டிமெண்ட்டாக நம்மைத் தாக்குவதாகவும் இருந்தது. பொதுவாக, ’சிறுவயதில் அப்பாவைக் கொன்னுட்டாங்க/ஃபேலிமியைபிரிச்சிட்டாங்க அல்லது பாட்டியை 4 பேர் ரேப் பண்ணிட்டாங்கஎன்று தெரிந்ததுமே, ஹீரோ கொதித்து எழுந்து கிளம்பிவிடுவார். ஆனால் இங்கே அப்புரூபினி எபிசோடு வலுவான காரணமாக இருக்கும்

ரெஜிஸ்ட்ரார் ஆபீஸில் ஏமாறுவதில் ஆரம்பித்து, அம்மாவால் அவமானப்படுத்தப்பட்டு, உன்னை நினைச்சேன் என்று பாடிக் கலங்கி, தூக்கில் தொங்குவது வரை வரும் எபிசோடு கதையில் முக்கிய மய்யம்! கமலஹாசன் ஏன் சிறந்த நடிகர் என்பதற்கு இந்த எபிசோடை மட்டும் காட்டினால் போதும். உன்னை நினைச்சேன் பாடலில் முகத்தில் முகமூடி போட்டு அழும்போது, உள்ளே எப்படி அழுவார் என்பதை நம் கற்பனைக்கே விட்டிருப்பார்கள். (சிவாஜியின் ஜிஞ்ஜினுக்கா சின்னக்கிளி பாடல் இன்ஸ்பிரேசனாக இருந்திருக்கலாம்.) திடீரென ஆசை காட்டப்படுதல், அதைக் கொண்டாடுதல், தான் ஏமாந்துவிட்டதை நினைத்துக் கலங்குதல், கூடவே அம்மாவின் வார்த்தைகள் என்று எமோசனின் உச்சத்திற்கு நம்மையும் அழைத்துச் சென்றிருப்பார்கள்.

கொலை செய்யும் முறைகளையும் புதுமையாகப் படைத்திருப்பார்கள். கோலி குண்டு, புலி, சர்க்கஸ் துப்பாக்கி என்று விளையாடியிருப்பார்கள்

அநேகமாக அப்பு கேரக்டரை முடிவு செய்துவிட்டு, அதில் இருந்து தான் பின்னோக்கிப் போய் கதை பண்ணியிருப்பார்கள் என்று நினைக்கிறேன். ஒருவன் குள்ளன்..அதனால் அவமானம்..குள்ளமானதற்கு காரணமான வில்லன்கள்..அவர்களை குள்ளனே பழி வாங்குவது என்று அதை செமயாக டெவலப் செய்திருக்கிறார்கள்.

படம் வெளியானபோது, அப்பு கேரக்டர் பற்றியே எங்கும் பேசப்பட்டது. அப்பு கேரக்டர் ரகசியம் பலவருடங்களாக கட்டிக்காக்கப்பட்டது. பட வெற்றிவிழாவில் அப்பு கெட்டப்பில் வந்து, கலைஞர் கையால் கமல் விருது வாங்கினார்.  சிவாஜியே செய்யாத கேரக்டரைச் செய்துவிட்டார் என்று கமல் கொண்டாடப்பட்டார்.

சர்க்கஸ், யானை, புலி, சிங்கம், அப்பு என்று குழந்தைகளை கவர்வதற்கான ஐட்டங்கள் பட த்தில் இருந்த தால், குடும்பம் குடும்பமாக தியேட்டருக்குப் படை எடுத்தார்கள். உலக சினிமாக் கிறுக்கு கமலுக்கு முற்றாத காலம் அது. எனவே கமர்சியல் நாயகனாகவும் அவர் ஜொலித்துக்கொண்டிருந்தார். இந்தப் படம் குழந்தைகளையும் கமல் பக்கம் கொண்டுவந்தது. (இதைப் பார்த்து எங்க தலைவரும் ராஜா சின்ன ரோஜா நடித்தது தனிக்கதை!)

கௌதமிகமலில் காதல் போர்சனும் செம ரகளையாக இருக்கும். கிரேஸி மோகனின் வார்த்தை விளையாட்டு வசங்கள் இதில் அருமையாக ஒர்க்அவுட் ஆகியிருக்கும். ’இவர் கூடப் படிச்சவர்..அப்போ நீ குறையப் படிச்சியா?...நான் எப்படி நீட்ட்டா வர்றது?’ என்று கிடைத்த கேப்பில் எல்லாம் புகுந்து விளையாடிருப்பார்கள்.

நாகேஷ் இதில் வில்லன் என்பது இன்னொரு புதுமை. ‘சார், ஃபோன் வந்திருக்குஎன்று சொன்னால் பதிலுக்குயார் வந்தால் என்ன, இருந்து நல்லா சாப்பிட்டு போகச் சொல்லுஎன்று லந்து கொடுப்பது, ‘என்னடா பாதி ஆளைக் கொண்டு வந்திருக்கிறே?’ என்று கேட்பது என வில்லத்தனத்துக்குள்ளும் தனது ட்ரேட் மார்க் நகைச்சுவையைப் புகுத்தியிருப்பார்.

அடுத்து இசைஞானியின் பாடல்களும் பிண்ணனி இசையும். ஒவ்வொரு பாட்டையும் லட்டு மாதிரி போட்டுக்கொடுத்திருந்தார். ஒன்றுகூட சோடை போகாதவை. சிறு வயதில் பப்பப்பா பப்பரேபாடலும் டீன் ஏஜில் வாழ வைக்கும் காதலுக்கு ஜே..ம்க்கும்..க்கும்க்கும்பாடலும் இப்போதெல்லாம் உன்னை நினைச்சேன்பாடலும் என் ஃபேவரிட் என்பதையும் இங்கே பதிவு செய்துகொள்கிறேன்.

கொலை செய்யும் குறைபாடுள்ள ஹீரோ, அதற்கான காரணம், கொலை செய்யும் முறை, கொலைப்பழி இன்னொரு ஹீரோ மேல் விழுவது, ஒட்டுமொத்தப் படமுமே ஜாலி மூடிலேயே நகர்வது போன்றவற்றால் ஒரு க்ளிஷே கதையை சுவாரஸ்யமாக்கி, பார்க்கவே அப்போது (இப்போதும்) ஃப்ரெஷாக, தமிழில் இப்படி ஒரு கமர்சியல் படமா என்று வியக்கும்படி கலக்கிய படம், அபூர்வ சகோதரர்கள்.

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

0 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.