Sunday, March 10, 2013

எல்போ - வகைகள் (குழாயியல்_6)

முன்னுரை:

இன்றைய பதிவில் எல்போ எனப்படும் இணைப்பானைப் பற்றிப் பார்ப்போம். அதற்கு முன்..


பொறியியலின் மொழி வரைபடம் என்பதை நீங்கள் அறிந்திருப்பீர்கள். குழாயியலில் வரைபடங்கள் இரு விதங்களில் வரையப்படுகின்றன. ஒன்று, 12” மற்றும் அதற்குட்பட்ட அளவு குழாயியலை வரைய ஒற்றைவரி வரைபடங்கள்(Single Line Drawings) பயன்படுகின்றன.(ஆனால் நடைமுறையில் 1 1/2” மற்றும் அதற்குட்பட்ட அளவுகளுக்கு மட்டுமே இவை உபயோகப்படுத்தப்படுகின்றன).12”க்கு (நடைமுறையில் 1 1/2”க்கு) மேற்பட்ட அளவு குழாயியலை வரைய இரட்டைவரி வரைபடங்கள் (Double line drawings) பயன்படுகின்றன:


4.1.1 எல்போக்கள்(Elbows):

ஒரு குழாயானது ஒரு இடத்தில் இருந்து மற்றோர் இடத்திற்கு நேர்கோட்டிலேயே செல்வது நடைமுறைச் சாத்தியமானது அல்ல. ஒரு தொழிற்சாலையின் கட்டமைப்பைப் பொறுத்து குழாயானது இடது/வலதாகவோ, மேல்/கீழாகவோ திரும்ப நேரிடும். கீழே உள்ள படத்தில் காட்டியபடி, புதிதாக ஒரு குழாயினை கொண்டு செல்ல வேண்டும் என்று கருதுவோம்:
புதிய குழாயானது, முதலில் கீழ் நோக்கிச் செல்ல வேண்டியுள்ளது. பிறகு வலது பக்கமாகத் திரும்ப வேண்டும். பின்னர் ஏற்கனவே இருக்கும் ஒரு குழாயினை அடுத்து, மேல்நோக்கிப் போக வேண்டும். இப்படி ஒரு சூழ்நிலை அமையும்போது,குழாயின் போக்கினை கீழ்/மேலாகத் திருப்பவோ அல்லது இடது/வலதாகத் திருப்பவோ உதவுபவையே எல்போக்கள் ஆகும்.

ஆங்கில எழுத்தான " L"வடிவத்தில் குழாயின் போக்கினைத் திருப்பப் பயன்படுவதாலேயே இவை எல்-போ என்று அழைக்கப்படுகின்றன.அதாவது "எல்" வடிவத்தில் 'போ' என்று திரவத்திற்கு கட்டளையிடும் குழாயியல் உறுப்பே எல்போ ஆகும்.

எல்போக்கள் 90 பாகை கோணத்தில் மட்டுமல்லாது 45 பாகை கோணத்திலும் கிடைக்கின்றன.அவற்றை முறையே 90 பாகை எல்போ மற்றும் 45 பாகை எல்போ என்று அழைப்பர்.

45 பாகை எல்போ என்பது குழாயை 45 கோணத்தில் கொண்டு செல்லவும், மேலே உள்ள படத்தில் காட்டியபடி இடப்பற்றாக்குறை உள்ள இடங்களில் 90 பாகைக்கு மாற்றாகவும் பயன்படுகின்றன.


எல்போக்களிலும் நான்கு வகைகள் உள்ளன.

4.1.1.1. நீள் ஆர எல்போக்கள் (Long Radius Elbows):

பெட் ரோகெமிக்கல் மற்றும் பெட் ரோலிய சுத்திகரிப்பு நிலையங்களில் அதிகம் பயன்படுத்தப்படுவது இந்த வகை எல்போக்கள் தான்.



4.1.1.2. குறு ஆர எல்போக்கள் (Short Radius Elbows):

இவை பொதுவான பயன்பாட்டில் இல்லை. இருப்பினும், நியமங்களின் அடிப்படையில் தேவைப்பட்டால், பயன்படுத்தப்படும்.


4.1.1.3. குறுகும் எல்போக்கள் (Reducing Elbows):
சில நேரங்களில் ஒரே இடத்தில் குழாயின் போக்கைத் திருப்ப எல்போவையும், அதன் அளவைக் குறைக்க குறைப்பான்களையும் உபயோகிக்க வேண்டியிருக்கும். அங்கே இந்த இரண்டு இணைப்பான்களை இணைக்க இடமில்லையென்றால், இந்த குறுகும் எல்போக்கள் பயன்படுத்தப்படுகின்றன.

4.1.1.4. பொருத்திணைவு எல்போக்கள் (Mitered Elbows):

90 பாகை, 45 பாகை மட்டுமல்லாது சில நேரங்களில் 67 பாகை/33 பாகை என முழு வட்ட எண்களாக இல்லாமல், இடைப்பட்ட பாகையிலும் குழாயினைத் திருப்ப வேண்டி வரலாம். அத்தகைய நேரங்களில் வழக்கமாகக் கிடைக்கும் எல்போக்களை வெட்டி, ஒட்டு வேண்டுமென்கிற கோணத்தில் எல்போக்கள் உருவாக்கப்படும். அவையே பொருத்திணைவு எல்போக்கள் ஆகும்.

முந்தைய பதிவுகளில் சுட்டியபடி,எல்போக்களும் கீழ்க்கண்ட இணைப்பு முறைகளில் கிடைக்கின்றன:

-முட்டுப் பற்றவைப்பு (Butt Welding) இணைப்பான்கள்
-பொருந்து வாய் பற்றவைப்பு (Socket Welding) இணைப்பான்கள்
-மரை இணைப்பு (Threaded Connection) இணைப்பான்கள்

அடுத்த பதிவில் டீ இணைப்பான்களைப் பற்றிப் பார்ப்போம்.

(தொடரும்)

மேலும் வாசிக்க... "எல்போ - வகைகள் (குழாயியல்_6)"
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

14 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.

Saturday, March 9, 2013

மத குருட்டுத்தனமும் குரு-மலையாளப்படமும்_நிறைவுப் பகுதி

டிஸ்கி: இந்த அற்புதமான படத்தைப் பார்க்கும் ஆவல் உள்ளவர்கள், இந்தப் பதிவை படம் பார்க்குமுன் படிக்க வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன். "குரு" படம் யூடியூப்பில் இந்த லின்க்கில் கிடைக்கிறது:

னிதன் முதன்முதலாக எப்போது கனவு காண ஆரம்பிக்கின்றான்? ஆட்களை அடையாளம் காணும் வயதிலா அல்லது வார்த்தைகளைக் கற்றுக்கொண்டு பேச ஆரம்பிக்கும் வயதிலா?

இல்லை. மனிதன் தாயின் கருவறையில் இருக்கும்போதே கனவு காண ஆரம்பித்துவிடுவதாக அறிவியல் சொல்கிறது. கனவு என்பது ஆழ்மன நினைவுகளின் நடனம் என்று சொல்லலாம். எனவே ஆழ்மனம் என்ற ஒன்று கருவிலேயே உருவாகியிருக்க வேண்டும். அந்தக் கனவு ஒருவேளை முந்தைய ஜென்ம நினைவுகளின் சலனமாகக்கூட இருக்கலாம்.


இந்த விஞ்ஞான யுகத்திலும் ஒரு ஆச்சரியமான விஷயமாக இருக்கும் கனவிற்குள் நம் கதாநாயகன் ரகுராமன் மூழ்கடிக்கப்படுகிறான். இந்த உலகத்திலிருந்து நழுவி, முற்றிலும் புதிய உலகிற்குள் நுழைகிறான். அது அறியாமையின் உலகம். பார்வையற்ற மனிதர்களின் உலகம். ஆம், அந்த உலகத்தில் வாழும் யாருக்கும் பார்வையில்லை.

அவர்களை ஆட்சி செய்ய ஒரு குருட்டு ராஜா இருக்கிறார். மந்திரிகள், ஆன்மீக குருக்கள், போர் வீரர்கள், மக்கள் என அனைவரும் குருடர்களே.
அந்த ராஜா முந்தைய (ஒரிஜினல்) ராஜாவையும் அவர் குடும்பத்தையும் சிறையில் அடைத்துவிட்டு ஆட்சி புரிந்து வருகிறார். அந்த நாட்டில் வாழும் ஒரு ஏழைக்குடிமகனுக்கு சிறையில் இருக்கும் இளவரசியுடன் காதல். அந்த ஏழையை ரகுராமன், பார்வையற்ற படைவீரர்களிடம் இருந்து காப்பாற்றுகிறான்.

தனக்கு பார்வையுண்டு என்று அவனுக்கு எடுத்துச் சொல்கிறான். அப்போது தான் அவனுக்கு அந்த உலகம் பற்றிச் சொல்லப்படுகிறது. அங்கே யாருக்கும் பார்வை கிடையாது என்பது மட்டுமல்ல, மனிதனால் பார்க்க முடியும் என்று நம்புவதே பாவம்.

அப்படிச் சொன்ன, பலரும் அரசாங்கத்தால் கொல்லப்பட்டிருக்கிறார்கள். அவர்களது மதநூல்களும் 'பார்வை என்பது சாத்தியமானது அல்ல. அது சாத்தான்ளுக்கு உரித்தானது' என்று தெளிவாக(!)ச் சொல்லியிருக்கின்றன. மதநூல்களே சொன்னபின், அது எவ்வளவு முட்டாள்தனமானதாக இருந்தாலும், எப்படிப் பொய்யாக இருக்க முடியும்???? அது கடவுளின் வார்த்தையல்லவா? எனவே 'எனக்கு பார்வை இருக்கிறது.' என்று சொல்வதே பாவம், மத விரோதம்.

ஆனால் ரகுராமனை அந்த காதல் ஜோடிகள் நம்புகிறார்கள். 'பார்வையுள்ள சாத்தான் ஒருவன்' தன் உலகிற்குள் வந்திருப்பது ராஜாவிற்கும் தெரியவருகிறது. அவனைப் பிடித்து மரணதண்டனை கொடுக்க வேண்டும் என்று முடிவு செய்யப்படுகிறது. இந்த சாத்தானின் வருகைக்கான பரிகாரமாக, யாரையாவது நரபலை கொடுக்க வேண்டும் என்றும் முடிவு செய்யப்படுகிறது.

நரபலிக்காக அந்த காதலன் தேர்வு செய்யப்பட, அவனையும் அவன் குடும்பத்தாரையும் ரகுராமன் காப்பாற்றி, வேறிடம் அழைத்துச் செல்கிறான். அங்கே அவன் 'இளா பழம்' என்ற ஒன்றைக் காண்கிறான்.

அது ஒரு புனிதமான பழம். அந்த பழத்தின் கொட்டை விஷமானது, ஆனால் பழமோ சுவையானது, உடலுக்கு நல்லது. அங்கே பிறக்கும் அனைத்துக்குழந்தைகளுக்கும் அந்த பழத்தின் சாறானது ஊட்டப்படுகிறது.

ரகுராமனுக்கும் அந்த பழத்தை உண்ணும் ஆசை எழுகிறது. பழத்தின் சுவையில் மயங்கி, பல பழங்களை உண்ண, உடனே பார்வை பறிபோகிறது. அப்போது தான் அவனுக்கே தெரிகிறது, அங்கே அனைவரும் குருடர்களாய் இருப்பதற்குக் காரணம் அந்த பழத்தின் சாறை உண்பது தான் என்று.

ஆனால் பார்வையிழந்த ரகுராமன், ராஜாவிடம் பிடிபடுகிறான். அவன் சொல்லும் சமூக/மத நம்பிக்கைக்கு எதிரான விஷயத்தை நம்ப யாரும் தயாராக இல்லை. அவனுக்கு அந்த இளா பழத்தின் கொட்டையின் சாறை ஊட்டி கொல்லும்படி ராஜா உத்தரவிடுகிறான்.

அவ்வாறே செய்யப்படுகிறது. ஆச்சரியமாக ரகுராமன் பார்வையைத் திரும்பப் பெறுகிறான். இந்த மக்கள் முட்டாள்தனமாக பழத்தின் கொட்டையை உண்ணாமல், பழத்தை உண்பது தான் பிரச்சினைக்குக் காரணம் என்று ரகுராமன் புரிந்து அனைவரையும் குருட்டு உலகத்தில் இருந்து மீட்கிறான்.

கனவில் இருந்து மீழும் ரகுராமன், தன் அறியாமையை உணர்ந்து மத வெறியை உதறுகிறான்.

இதில் இளா பழம் என்பது அருமையான குறியீடாக உள்ளது. அது மதத்திற்கு உவமையாக காட்டப்படுகிறது. ஒரு மதத்தின் அடிப்படையான ஆன்மீகக் கருத்துக்களை மட்டும் எடுத்துக்கொள்ளாமல், என்ன உடை உடுத்த வேண்டும், என்ன மாதிரி முடி வளர்க்கவேண்டும்/மொட்டை அடிக்க வேண்டும், என்ன கிழமை விரதம் இருக்க வேண்டும் என சமூக ஒழுங்கை மட்டுமே அடிப்படையாகக்கொண்ட மேலோட்ட கருத்துக்களையே நாம் எடுத்துக்கொண்டு குருடர்களாய் வாழ்ந்து வருவதை, இளா பழ உவமை முகத்தில் அறைந்தாற்போன்று சொல்கிறது.

எல்லா மதங்களுக்கும் அடிப்படைக் கருத்தான அன்பை விட்டுவிட்டு, வழிபாட்டுத் தலங்களுக்காகவும் வழிபாட்டு செயல்முறைகளுக்காகவுமே அடிதடி-கலவரம்-குண்டு வெடிப்பு என அழிவுப்பாதையில் இறங்குவோரின் அகக்கண்ணைத் திறக்கும் பாடம், இந்தப் படம்.

இந்த உலகத்தையும் மதத்தையும் காக்க வேண்டியது கடவுளின் வேலை தானேயொழிய, அந்த கடவுளின் மதத்தைக் காப்பது நம்முடைய வேலையல்ல. சொந்த மத்த்தையே காக்க வக்கற்றவனா கடவுள் என்ற எளிய கேள்வியையும் இந்தப் படம் எழுப்பிச் செல்கிறது.

ராஜீவ் அஞ்சால்
இயக்குநர் ராஜீவ் அஞ்சாலின் கச்சிதமான இயக்கத்தில், எஸ்.குமாரின் உறுத்தாத ஒளிப்பதிவில், இளையராஜாவின் மயக்க வைக்கும் சிம்பொனி பிண்ணனி இசையுடன் 1997ல் வெளிவந்த இந்தப் படம், இந்திய அரசால் ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப்பட்டது.

நல்ல சினிமாக்களைப் பார்க்கும் ஆர்வம் உள்ளவர்கள், தவற விடக்கூடாத நல்ல படம் "குரு".

டிஸ்கி: எனக்கு மலையாளம் முழுமையாகத் தெரியாது. எனவே ஏதேனும் சொற்குற்றம் இருந்தால், பொறுத்தருள்க.
மேலும் வாசிக்க... "மத குருட்டுத்தனமும் குரு-மலையாளப்படமும்_நிறைவுப் பகுதி"
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

8 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.

Monday, March 4, 2013

பழிக்குப் பழியும் குரு-மலையாளத் திரைப்படமும்_2


குரு திரைப்படம் குறியீடுகளால் நிரம்பியது. மேல்மட்டத்தில் வழக்கமான சினிமாக்களமாகவும், உள்மட்டத்தில் சிம்பலிக்காக வேறொன்றைக் குறிக்கும் விதமாகவே இந்தப் படத்தின் திரைக்கதையானது சி.ஜி.ராஜேந்திர பாபுவால் உருவாக்கப்பட்டுள்ளது.

குரு திரைப்படத்தின் கதைக்களனாக ஒரு இந்தியக் கிராமம் காட்டப்படுகிறது. இந்துக்களும், இஸ்லாமியர்களும், கிறிஸ்தவர்களும் இணைந்து வாழ்கின்ற அமைதியான கிராமம் அது. ஆரம்பத்தில் காட்டப்படும் பஞ்சாயத்துக்காட்சியிலேயே அந்த கிராம மக்கள் மத வேறுபாடின்றி இணைந்து வாழ்வதாகவும், அதே நேரத்தில் அவரவர் மதநம்பிக்கைகளில் உறுதியாக உள்ளவர்களாகவும் நமக்கு உணர்த்தப்படுகிறது.

அந்த ஊரில் உள்ள ஒரு பெரிய கோவிலில் அர்ச்சகராகப் பணிபுரியும் சாருஹாசன், ஆச்சாரப்பிடிப்பு உள்ளவர். அவரது ஒரு மகனோ மனநிலை தவறியவர். இன்னொரு மகனே, மோகன்லால்.

குடும்பச் சூழ்நிலையிலேயே ஆன்மீகத்திற்கும்  வாழ்க்கைத் தளத்திற்குமான முரண்பாடு யதார்த்தமாக உணர்த்தப்படுகிறது. ஆச்சாரமான, இறைத்தொழிலிலேயே தன்னை அர்ப்பணித்துக்கொண்ட தந்தைக்கு, மனநிலை தவறிய ஒரு மகன். கதாநாயகன் ரகுராமனுக்கு கடவுள் நம்பிக்கை இல்லாமல் போக, இதுவே போதுமானது. சாஸ்திரிகள் அவனிடம் ஆன்மீக வாழ்வு பற்றி போதிக்க முற்படுகையில், தனது சகோதரனைக்காட்டி ஆன்மீகத்தில் உள்ள அபத்தத்தை சுட்டுகிறான் ரகுராமன். இந்தக் காட்சியானது தவ்ஸ்தாவெஸ்கியின் காரமசோவ் சகோதரர்கள் எழுப்பிய விவாதத்தை ஒரு நிமிடத்தில் தொட்டுச் செல்கிறது.
குடிப்பது, கேரளாவிற்கு வரும் வெளிநாட்டு யாத்ரீகர்களுக்கு கைடாக இருப்பது, பொலிடிக்கல் சைன்ஸ் படித்ததால் இருக்கும் அரசியல் தெளிவு, கடவுள் நம்பிக்கையற்றவன் என்று ஒரு சராசரி இளைஞனாக, திரைக்கதையின் பின்பகுதியில் நடக்கப்போகும் அற்புதச்சம்பவங்களை உணரும் ஆற்றல் பெற்றவனாக, ரகுராமன் நம் மனதில் ஆரம்பக் காட்சிகளிலேயே பதிய வைக்கப்படுகிறான்.

சாஸ்திரிகளின் நெருங்கிய குடும்ப நண்பர் அப்துல்லா சாஹிப். ரகுராமனுக்கு ஒரு திருமணம் செய்துவைத்துவிட்டால், அவன் பொறுப்புள்ள மனிதனாக ஆகிவிடுவான் என்று நம்புகிறார். ரகுராமன் மேல் ஆசையுள்ள அவனின் முறைப்பெண்ணையே பேசி முடிக்கிறார்.

அந்தச் சூழ்நிலையில் நடக்கும் ஒரு சம்பவம் மதப்பிரச்சினைக்கு வித்திடுகிறது. சாஹிப் புதிதாக வாங்கிய ஒரு குல்லாவை, பள்ளிக்குச் செல்லும் தன் குழந்தைக்கு கொடுத்தனுப்புகிறார். அதை அந்தக் குழந்தையின் நெருங்கிய நண்பனான மற்றொரு இந்துக்குழந்தை கேட்க, சாஹிப்பின் மகன் கொடுக்கின்றான். அந்தக் குல்லாவுடன், வழியில் இருக்கும் கோவிலுக்குள் நுழைந்து அந்த இந்துப் பையன் சாமி கும்பிட்டுவிட்டு வெளியேற, அதைப் பார்த்த சாஸ்திரிகளும் ஏனையோரும் கோவில் தீட்டுப்பட்டுவிட்டதாக பதறுகிறார்கள்.
அதற்காக கூட்டப்படும் பஞ்சாயத்தில் 'குழந்தைகளும் தெய்வம் தானே?' என்று ரகுராமன் வைக்கும் வாதங்கள் அனைத்தும் புறந்தள்ளப்படுகிறது. அந்த சமயத்தில் பிரச்சினையின் உள்ளே புகும் அரசியல்வாதிகள், மெஜாரிட்டிகளான இந்து ஓட்டுக்களை நோக்கமாக வைத்து, மதக்கலவரத்தைச் செய்கிறார்கள். இந்துக்களும், இஸ்லாமியர்களும் கொல்லப்படுகின்றனர். ரகுராமனின் மொத்தக்குடும்பமும் கொல்லப்பட, அவன் தீவிரவாதியாக உருவெடுக்கிறான். பழிக்குப்பழி வாங்கத் துடிக்கிறான்.

இங்கே கதாசிரியர் செய்யும் நுணுக்கமான வேலைகள் கவனிக்கத்தக்கது. உண்மையான உலகில் கலவரத்தை ஏற்படுத்தும் மனிதர்கள் குழந்தைகள் அல்ல. ஆனாலும் அறிவின் அடிப்படையில், அறியாமையில் அடிப்படையில் அவர்கள் குழந்தைகளே. மேலும், படத்தில் வரும் அரசியல்வாதி பாத்திரமானது ஒட்டுமொத்த இந்திய அரசியலைக் குறிப்பதாக உள்ளது.

குடும்பத்தை இழந்த வெறுப்பில், ரகுராமன் இந்துத்வா பிடியில் சிக்குகிறான். நாம் முந்தைய பதிவில் பார்த்தபடி, 'நம் மக்களுக்குப் பாதுகாப்பில்லை. நாம் இரண்டாம்தரக் குடிமக்களாய் ஆகிவிட்டோம்' போன்ற வழக்கமான பிரச்சாரங்களின் அடிப்படையில் ரகுராமன் வெறுப்புக்குள் சிக்குகிறான். பழிக்குப் பழி வாங்க முடிவெடுக்கிறான்.

நவீன உலகில், ஜனநாயகம் முன்னிறுத்தப்படும் சூழலில் பழிக்குப் பழி என்பது காலாவதியாகிவிட்ட கொள்கை. அதனால் விளையும் நன்மை என்று இருதரப்புக்குமே ஏதுமில்லை என்பதை உணர்ந்து உலகமே ஒதுக்கிவிட்ட கொள்கை அது. ஏனென்றால், பழிக்குப் பழி என்பது முடிவற்ற அழிவுப்பயணம். பாபர் மசூதி இடிப்புக்கு பழிவாங்கலாக கோத்ரா ரயில் எரிப்பு, கோத்ராக்கு பழிவாங்கலாக குஜராத் கலவரங்கள் என அழிவானது பல மடங்காக ஆகுமேயொழிய, மனிதகுலத்துக்கு அதனால் நன்மையேதும் கிடையாது.

'பாபர் மசூதி இடிப்புக்கும் கோவை காவலர் கொலைக் கலவரத்திற்கும் பழிவாங்கலாக கோவை குண்டுவெடிப்பு' எனும்போது, கோவை குண்டுவெடிப்புக்கு எதிராக இன்னொரு குண்டுவெடிப்பு, அதற்கு எதிராக இன்னொரு குண்டுவெடிப்பு என்று போனால், அழிவு மட்டுமே மிஞ்சும். 'கண்ணுக்குக் கண் என்று போனால் உலகமே குருடாகிவிடும்' என்று சான்றோர் எச்சரிப்பது அதனால் தான்.

மேலும், பழிக்குப் பழி என்பது ஒரு அபத்தமான வழிமுறை. எனென்றால் பெரும்பாலான குற்றங்களில் குற்றவாளி யார் என்பது உடனே நமக்குத் தெரிவதில்லை. சில நேரங்களில் குற்றவாளிகள் கண்டுகொள்ளப்பட்டாலும், குற்றம் செய்யக் காரணமானவர் யாரென்றே நமக்குப் புரிவதில்லை.கோபத்தின் உச்சியில், தவறுதலாக சாமானியமக்களே தண்டிக்கப்படுகிறார்கள்.

மேலும், பழிக்குப் பழியில் ஒரு அடிப்படையான தவறு உண்டு. ஒரு குற்றம் நடைபெறும்போது பாதிக்கப்பட்டவன் - பாதிப்பை ஏற்படுத்தியவன் என்று இரு தரப்பு ஏற்படுகிறது. பழிக்குப் பழியின் நம்பிக்கை என்னவென்றால் பாதிக்கப்பட்டவன் குற்றத்திற்கு எவ்வகையிலும் பொறுப்பானவன் அல்ல என்பது தான். ஆனால் உண்மை வேறு மாதிரி.
எனக்குத் தெரிந்து நடந்த ஒரு சம்வத்தை எடுத்துக்கொள்வோம். ஒரு ஏழைக்குடும்பம் தன் வீட்டுப் பெண்பிள்ளையை படிக்க வைக்க முடியாமல் கஷ்டப்பட்டது. அதே நேரத்தில் ஒரு படிப்பறிவற்ற இளைஞன், அந்தப் பெண்ணைப் படிக்க வைக்க முன்வந்தான். குடும்பத்தின் செலவுகளையும் பார்த்துக்கொண்டான், ஒரே ஒரு எதிர்பார்ப்பின் அடிப்படையில். அந்தப் பெண்ணை அவன் காதலித்தான். அவளைத் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்ற ஆவலிலேயே இந்த உதவிகளைச் செய்தான். அந்த குடும்பமும் அதை உணர்ந்தே, உதவிகளை ஏற்றுக்கொண்டது.

ஆனால் அந்தப் பெண் படித்துமுடித்து வேலைக்குச் சென்றபின், அவளின் மனம் மாறியது. தன்னால் படிக்காத ஒருவனுடன் வாழ முடியாது எனும் யதார்த்ததிற்கு வந்தாள். அவனை உதறினாள். அந்த படிக்காத முட்டாள், அவளைக் கொலை செய்தான்.

இப்போது அவனைத் தூக்கில் போட வேண்டும் என்று அந்தப் பெண்ணின் குடும்பமும் சமூகமும் கோரியது. அது நியாயமான கோரிக்கை தான். சமூகத்தைப் பொறுத்தவரை அந்தக் குடும்பம் பெண்ணையை இழந்தவர், பாதிக்கப்பட்டவர். ஆனால் இந்தக் கொலையில் அவர்களுக்கு எந்தப் பங்குமே இல்லையா? அந்தப் பையனைத் தண்டிக்க சட்டத்திற்கு அதிகாரம் உண்டு. ஆனால் அந்தப் பெண்ணின் குடும்பத்திற்கு அருகதை உண்டா?

இதுவே பழிக்குப் பழி வாங்குதலில் உள்ள சிக்கல். பாதிக்கப்பட்டவன் எப்போதுமே குற்றத்திற்கு அப்பாற்பட்டவன் இல்லை. அதனாலேயே தண்டனையைத் தீர்மானிப்பது பாதிக்கப்பட்டவனாக இருப்பது அபத்தமாக ஆகிவிடுகிறது.
கண்மூடித்தனமாக, வெறுப்பின் அடிப்படையில் பழிவாங்குதலில் இறங்கும்போது, மனிதமும் நியாயமும் செத்துவிடுகிறது. மதங்களும், சான்றோர்களும் வன்முறைக்கு, பழிவாங்கலுக்கு எதிராக இருப்பது அதனாலேயே!

ரகுராமனும் கலவரத்தால் பாதிக்கப்பட்ட இஸ்லாமியர்கள் அடைக்கலமாகியிருக்கும் ஒரு இந்து ஆஸ்ரமத்தை குண்டு வைத்துத் தகர்க்க ஆயத்தமாகிறான். அந்த முயற்சியில் தோல்வியடைந்து, அந்த ஆஸ்ரமவாசிகளாலேயே காப்பாற்றப்படுகிறான். ஆனாலும் உள்ளே இருந்துகொண்டே, பழிவாங்குவது எனும் முடிவுடன், தன் பெயர் அப்துல்லா என்று சொல்லி அங்கே தங்குகிறான். (அது அவன் பிரியத்திற்குரிய அப்துல்லா சாஹிப்பின் பெயர்!).

அடுத்த தாக்குதலுக்குத் தயாராகும்போது, அந்த ஆஸ்ரமத்தில் ஆன்மீக சக்தியாக இருக்கும் 'குரு'வால் ஒரு கனவுக்குள் மூழ்கடிக்கப்படுகிறான். அவன் காணும் கனவே இந்தப் படத்தை பேஃன்டஸி வகைப்படமாக ஆக்குகிறது. அதுவே இதுவரை வழக்கமான படமாகச் செல்லும் படத்தை, வேறொரு உயர்ந்த தளத்தில் பயணிக்கச் செய்கிறது.

அது என்ன கனவு?

(தொடரும்)
மேலும் வாசிக்க... "பழிக்குப் பழியும் குரு-மலையாளத் திரைப்படமும்_2"
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

4 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.

Sunday, March 3, 2013

மதவெறியும், குரு-மலையாளத்திரைப்படமும்_1

டிஸ்கி: 1997ல் வெளியாகி ஆஸ்கர் விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்ட மலையாளத் திரைப்படமான குரு பற்றிய விரிவான திரை விமர்சனமே இந்தப் பதிவுகள்.

தமிழக தென்மாவட்டங்கள் 1990களில் ஜாதிக்கலவரத்திற்குப் பெயர் பெற்றிருந்தன. திடீரென ஏதாவது ஒரு ஜாதித்தலைவரின் சிலை உடைக்கப்படுவதும், உடனே வதந்திகள் மூலம் பலமாவட்டங்களுக்கும் கலவரம் பரவுவதும் வாடிக்கையான நிழக்வாகவே இருந்தது.
சாமானிய மக்கள் கலவரத்தில் இறங்க, எப்போதுமே கீழ்க்கண்ட காரணங்கள் தான் சொல்லப்படும் :
-எதிர் குரூப் ஒன்னுகூடிட்டாங்க, நாம கூடலேன்னா ஆபத்து தான்.
- நமது ஜாதிப் பெண் பிள்ளைகளிடம் தகராறு செய்திருக்கிறார்கள்.
- அந்த ஜாதிக்காரர்கள் நம் ஜாதிக்காரன் வீட்டுக்குப்போய் பெண் கேட்டு தகராறு செய்திருக்கிறார்கள்.

-நமது ஜாதித்தலைவரின் சிலைகள் உடைக்கப்படுகின்றன.

-அவர்கள் மெஜாரிட்டியாக வாழும் ஊர்களில் இருந்த நம் மக்களின் வீடுகள் அடித்து நொறுக்கப்பட்டுவிட்டன.

இந்த வதந்திகளுக்கெல்லாம் ஒரே நோக்கம், பாதுப்பற்ற மனநிலைக்கு மக்களைக் கொண்டு செல்வதும், அங்கிருந்து வெறுப்பு-வன்மத்துக்குள் அவர்களை தள்ளுவதும் தான். அதன்பின் கலவரத்தில் தானாகவே அந்த எளிய மக்கள் இறங்கிவிடுவார்கள்.

பரமக்குடி கலவரத்தில்...

பலவருட அவதானிப்பில் நான் கண்டுகொண்ட விஷயம், நம் மக்கள் நல்ல காரியத்திற்கு ஒன்றுகூடுவதில்லை. பாதுகாப்பற்ற மனநிலைக்கு தைரியம் தேடியும், அடுத்தவனைக் கெடுக்கவுமே ஒன்றுகூடுவார்கள்.

இன்னும் சொல்வதென்றால், அன்பு நம் மக்களை இணைப்பதில்லை. வெறுப்பே நம் மக்களை இணைக்கிறது. அன்பின்வழியே மக்களை இணைப்பது எப்படி என்று தெரிந்த தலைவர்களும் இங்கில்லை. 'நமக்குள் ஒற்றுமை வந்துவிட்டது' என்று யாராவது பெருமைப்படும் இடத்தில், அதற்கான காரணமாக இருப்பது வெறுப்பே! வெறுப்பின் மூலமாக மக்களைத் திரட்டுவது எளிது என்பதும் இதற்கான காரணமாக இருக்கலாம். இது ஹிட்லர் காலம் முதல் வெற்றிகரமாகச் செயல்படும் உத்தி!

ஒற்றுமை என்பது பாசிடிவ்வான விஷயம். அங்கே வெறுப்பிற்கு இடமிருக்காது. வெறுப்பின் காரணமாக, வெறுப்பைக் கக்குவதற்காக கூடுவதற்குப் பெயர் ஒற்றுமை அல்ல, அது வெறும் கும்பல் கூடுகையே.

சாதாரணமாக அன்பு நிறைந்த மனிதன்கூட, வெறுப்புப் பிரச்சாரத்தில் பலியாகி ஜாதிக்கலவரத்தில் முனைப்புடன் பங்கேற்பதைப் பார்த்திருக்கிறேன்.

பள்ளிக்காலங்களில் ஜாதிவெறியைக் கவனித்து வந்ததால், பின்னர் மதவெறியைப் புரிந்துகொள்வது எளிதாக இருந்தது. நான் டெல்லியில் பணிபுரிந்த காலங்களில் ஆர்.எஸ்.எஸ்ஸில் ஈடுபாடுள்ள நண்பர்கள் இருந்தார்கள். அவர்களும் சாமானியர்கள் தான். நேரடியாக ஆர்.எஸ்.எஸுடன் தொடர்பு கொண்டவர்கள் அல்ல.

அப்போது அவர்கள் எடுத்து வைக்கின்ற வாதங்கள் கீழ்க்கண்டவறு இருக்கும்:
- இந்த நாடு மதச்சார்பின்மை பேசியே நாசமாகப் போய்விட்டது.

-மதச்சார்பின்மையின் பெயரால் சிறுபான்மையினருக்கு, குறிப்பாக இஸ்லாமியருக்கு அதிக சலுகை வழங்கப்படுகிறது.

-பாகிஸ்தான் போன்ற இஸ்லாமிய நாடுகளில் இந்துக்கள் இப்படி வாழ முடிகிறதா?

- முஸ்லிம் இளைஞர்கள் திட்டமிட்டே, இந்துப்பெண்களை காதலித்து மணமுடித்து முஸ்லிமாக மாற்றுகிறார்கள். லவ் ஜிகாத் என்ற பெயரில் இந்த மோசடி நடக்கிறது.
- இந்த அரசு ஓட்டுக்காக, முஸ்லிம்களிடம் அடிபணிந்துவிட்டது.
-எங்கு குண்டு வெடித்தாலும், அதற்குக் காரணம் இஸ்லாமியர்களே.
- அவர்களின் மக்கள்தொகை பெருகிக்கொண்டே போகும் ரகசியம் தெரியுமா? நாம் சிறுபான்மை ஆகிவிடுவோம்.

- மொத்தத்தில் இந்துக்களுக்கும், இந்துப் பெண்களுக்கும் பாதுகாப்பில்லை.

- முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ள இடங்களில் நம்மால் வியாபாரம் செய்ய முடிவதில்லை. அவ்வளவு ஏன், அங்கே நம்மால் வசிக்கக்கூட அவர்கள் விடுவதில்லை.

- மொத்தத்தில் இந்த நாடு வாழத்தகுதியற்ற நாடாகிவிட்டது. இதை இந்துத்வ நாடாக ஆக்குவதே இதற்கான தீர்வு.


குஜராத் கலவரத்தில்...

சுற்றிவளைத்துச் சொன்னாலும், அவற்றின் நோக்கம் சாமானிய மனிதர்களை பாதுகாப்பற்ற மனநிலைக்குக் கொண்டு செல்வதும், அதிலிருந்து வெறுப்பை நோக்கி அவர்களை நகர்த்துவதுமே.

தமிழகச் சூழலில் துக்ளக், தினமலர் போன்ற இதழ்கள் மென்மையாக இந்த வேலையைச் செய்துவருகின்றன என்பதையும் நான் உணர்ந்துகொண்டுள்ளேன்.

அதற்கு எதிர்ப்பார்ட்டியாக உள்ள இஸ்லாமிய அடிப்படைவாதிகளின் செயல்முறைகளும் இதே வழியிலேயே இருக்கின்றன. பாரதீய ஜனதா இந்தியாவிற்குச் செய்த மிகப்பெரிய கெடுதல், பாபர் மசூதியை இடித்தது. வெறுப்பைத் திரட்டியே அதைச் செய்தார்கள். அதுவே இந்தியாவில் இஸ்லாமிய அடிப்படைவாதம் வேகமாகப் பரவ வழிவகுத்தது.

இணைய இஸ்லாமிஸ்ட்களும்,  இஸ்லாமிய அடிப்படைவாதிகளும் தம் மக்களைத் திரட்ட கீழ்க்கண்ட பரப்புரைகளைச் செய்கிறார்கள்.

- இந்த நாடு இந்து மதச்சார்புடனே இயங்குகிறது. இந்துத்வா குரூப், எல்லா அதிகார மட்டத்திலும் இருந்துகொண்டு நம்மை அழிப்பதையே முழு வேலையாகச் செய்கிறார்கள்.

-மதத்தின் பெயரால் இந்துக்களுக்கு அதிக சலுகை வழங்கப்படுகிறது.

-நமது வழிபாட்டு முறைகளும், பர்தா போன்ற வாழ்க்கை முறைகளையும் அழிக்க இந்த இந்துத்வ அதிகார வர்க்கம் முனைகிறது.

- இந்து இளைஞர்கள் திட்டமிட்டே, இஸ்லாமியப்பெண்களை காதலித்து மணமுடித்து இந்துவாக மாற்றுகிறார்கள்.

- இந்த அரசு ஓட்டுக்காக, இந்துச் சார்புடன் நடக்கிறது.

-எங்கு குண்டு வெடித்தாலும், அதற்குக் காரணம் இந்துத்வா சதி வேலையே!
- நாம் சிறுபான்மையாய் இருப்பதாலேயே இந்த அவல நிலை.
- -இஸ்லாமியர் என்பதாலெயே வீடு வாடகைக்கு கிடைப்பதில்லை.

- மொத்தத்தில் இந்தியா வாழத்தகுதியற்ற நாடாகிவிட்டது. இதற்கான ஒரே தீர்வு இதை இஸ்லாமிய நாடாக ஆக்குவதே!

 
கோவை குண்டுவெடிப்பில்...
இதில் சிக்கலான விஷயம் என்னவென்றால், இந்த மூன்று(ஜாதிவெறி/இந்துவெறி/முஸ்லிம்வெறி) தரப்பும் சொல்லும் கருத்துக்கள் அனைத்துமே முழுக்க பொய்யல்ல என்பது தான். மிகைப்படுத்தப்பட்ட உண்மையும், பரவலாகக் கலக்கப்பட்ட பொய்யும் சாதாரண மனிதனை குழப்பத்தில் ஆழ்த்திவிடுகிறது.

உண்மையையும் பொய்யையும் பிரித்தறிவதை விட, பாதுகாப்புணர்வே சாமானியர்களுக்கு முக்கியமாகப் போய்விடுகிறது. கலவரச் சூழலில் உள்ள சாமானியர்களிடமும், எப்போதும் மதவெறி தலைக்கேறித் திரியும் அடிப்படைவாதிகளிடமும் எவ்வளவு எடுத்துச் சொன்னாலும், தங்கள் மனநிலையின் அபத்தத்தை அவர்கள் உணரவே மாட்டார்கள். (தமிழ்ப்பதிவுலகில் இத்தகைய சுவரில் முட்டும் விவாதங்களை நிறையப் பார்க்கலாம்.)

ஒரு அடிப்படைவாதத் தரப்பு உருவாக்கும் வெறுப்பை, எதிர்த்தரப்பு ஊதிப்பெரிதாக்கும். அவர்கள் ஒன்றையொன்று உண்டு வளரும் விஷக்கிருமிகள்.

இந்தியாவைக் காக்கும் நல்ல விஷயம், பெரும்பாலான மக்கள் வாழ விரும்புவர்கள். அடிப்படைவாதத்தில் அழிவதைவிட, இணக்கத்துடன் வாழ்வதே முக்கியம் என்ற நிதர்சனத்தைப் புரிந்தவர்கள். பெரும்பாலான இந்துக்களும், இஸ்லாமியர்களும், பல்வேறு ஜாதி மக்களும் அடிப்படைவாதத்தில் சிக்காதவர்கள் என்பதே இந்தியாவின் வரம்.

ஆனாலும் அத்தகைய சாமானிய மனிதர்களும், அடிப்படைவாத அமைப்புகளின் வெறுப்புவாதத்தில் மயங்கி வாழ்வில் இடறி விழுவதுண்டு. அவ்வாறான ஒரு சாமானியனே ரகுராமன்(மோகன்லால்) எனும் குரு திரைப்பட நாயகன்.

(தொடரும்)
மேலும் வாசிக்க... "மதவெறியும், குரு-மலையாளத்திரைப்படமும்_1"
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

7 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.

Saturday, March 2, 2013

டாஸ்மாக்கை எதிர்க்கும் ஐயா.சசிபெருமாளை ஆதரிப்போம்!

தமிழக அரசு மதுக்கடைகளை தானே ஏற்று நடத்துவதாக முன்பு அறிவித்தபோது, என்ன நடக்கும் என்று நாம் அஞ்சினோமோ அவையெல்லாம் இப்போது ஏறக்குறைய நடந்தேறி விட்டன.


தமிழக பள்ளி மாணவர்களில் 45% பேருக்கு குடிப்பழக்கம் இருப்பதாக சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. நமது குழந்தைகளுக்கும் நாளை இதே நிலைதான் வரும் என்று அனைவரும் அஞ்ச வேண்டிய நிலை வந்துவிட்டது.

சமீபத்தில் வந்த செய்திகள் சில :
- குடித்துவிட்டு பள்ளி மாணவியை பலாத்காரம் செய்தவன் கைது.
- ஆறாம் வகுப்பு மாணவர்களிடம் குடிப்பதற்கு காசு கேட்டு மிரட்டிய பதினோறாம் வகுப்பு மாணவர்கள்
- குடிக்க பணம் தர மறுத்த மனைவியைக் கொன்ற குடிகாரக் கிழவர்
- ஊனமுற்ற மகனின் சம்பளத்தை குடித்தே அழித்த தந்தை கொலை
- டாஸ்மாக்கில் சரக்கு வாங்கிவிட்டு, சைக்கிளில் சென்ற பள்ளி மாணவன் கீழே விழுந்து பாட்டில் குத்தி பலி.

................இப்படி நெஞ்சைப் பதற வைக்கும் சம்பவங்கள் தினசரிச் செய்தியாகின்றன. ஒரு சில குடும்பங்களைப் பாதிக்கும் விஷயமாக இருந்த குடி, இப்போது பல குடும்பங்களையும் தெருவுக்குக் கொண்டு வந்துள்ளது.

சில குடும்பங்களின் பிரச்சினையாக இருந்த குடி, இப்போது சமூகப்பிரச்சினையாக மாறியுள்ளது. ஆங்காங்கே மக்களே போரட்டம் நடத்தி/டாஸ்மாக்கை அடித்து நொறுக்கி தங்கள் எதிர்ப்பைக் காட்டுகிறார்கள். காந்திய மக்கள் இயக்கம், மனித நேயக்கட்சி உள்ளிட்ட பல அமைப்புகளும் பல்வேறு போரட்டங்களை நடத்தியுள்ளன.

பாமக நிறுவனர் ராமதாஸ் பல வருடங்களாக மதுவுக்கு எதிராக குரல் கொடுத்துவருகிறார். அவரைத் தொடர்ந்து மதிமுகவும் இப்போது மதுவுக்கு எதிரான போராட்டத்தில் குதித்துள்ளது. மேலும்  பாமக, மதிமுக போன்ற கட்சிகள் களத்தில் இறங்குவது, சமூகத்தில் இது பற்றிய ஒரு விவாதத்தை துவக்க வழிவகுக்கும் என்ற வகையில், அவர்களின் பங்களிப்பு முக்கியமாகிறது.

இப்படி பல்வேறு தரப்புகள் தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்த போதிலும், இவர்களிடையே ஒற்றுமை இல்லாததால் வெறும் பத்திரிக்கைச் செய்திகளாகவே இவை நின்றுவிட்டன.

 இத்தகைய சோகமான சூழலில் தான் ஐயா.சசிப்பெருமாள் எனும் காந்தியவாதி சென்னை மெரீனாவில் மதுவிலக்குக் கோரி சென்ற மாதம் உண்ணாவிரதம் இருக்க ஆரம்பித்தார். உடனே கொதித்தெழுந்த அரசு, அவரைக் கைது செய்து புழல் சிறையில் அடைத்ததோடு இந்திய அரசியல் வரலாற்றில் இல்லாத அசிங்கமாக அவர்மீது தற்கொலை முயற்சி வழக்குப் போட்டது.

ஆனாலும் அவர் தனது போராட்டத்தை நிறுத்திகொள்ளாமல், உண்ணாவிரத்ததைத் தொடர்ந்தார். இப்போது சிறையில் இருந்து வெளியாகி, மீண்டும் சென்னை மெரீனாவில் காந்தி சிலை அருகே 32ம் நாளாக உண்ணாவிரத்தை மேற்கொண்டுள்ளார்.

அவரை பாமக, மதிமுக,மநேக, கம்யூனிஸ்ட்கள் மற்றும் பல அமைப்புகள் நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்திருப்பதோடு, மதுவிலக்கு வேண்டும் என அரசுக்கும் வேண்டுகோள் வைத்திருக்கிறார்கள்.

'உடனே மதுவிலக்கு வேண்டும்' என பிடிவாதப்போக்குடன் ஐயா.சசிப்பெருமாள் அவர்கள் போராடவில்லை. அவர்களின் கோரிக்கைகள் யதார்த்தமானவையாக உள்ளன. அவை:

- கடைகளின் எண்ணிக்கையை முதலில் குறையுங்கள்

- கடைகளின் நேரத்தைக் குறையுங்கள்

- 21 வயதுக்குட்பட்டோருக்கு மது விற்பனைசெய்வதை உடனே நிறுத்துங்கள்

- வழிபாட்டுத்தலங்கள், கல்விக்கூடங்கள், பேருந்து நிலையங்கள் அருகே இருக்கும் மதுக்கடைகளை அகற்றுங்கள்

- மதுவினால் வரும் வருமானத்திற்கு ஈடாக மாற்று வழிகளைச் செயல்படுத்துங்கள்

- பின்னர் படிப்படியாக பூரண மதுவிலக்கைக் கொண்டு வாருங்கள்.

உண்ணாவிரதப் பந்தலில்...

இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், தமிழருவி மணியன் அங்கம் வகிக்கும் காந்திய மக்கள் இயக்கமானது ஏற்கனவே மதுவினால் வரும் வருமானத்தை எப்படி வேறுவழியில் ஈடுகட்டுவது என்று தெளிவான செயல்திட்டத்தை அரசிடம் சமர்ப்பித்துள்ளது.(22000 கோடி ரூபாய் வருமானமீட்ட, வழிவகைகள் அரசுக்கு சொல்லப்பட்டுவிட்டது.)

எனவே தமிழக அரசு இன்னும் காலம் தாழ்த்தாமல், உடனே நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.

பல்வேறு சிறு எதிர்ப்பலைகளாய் இருந்த மது அரக்கனுக்கு எதிரான போராட்டத்தை ஒன்று குவிக்கும் வாய்ப்பாக ஐயா.சசி பெருமாளின் போராட்டம் அமைந்துள்ளது.

அவரின் வேண்டுகோள், லட்சக்கணக்கான பெண்களின் வேண்டுகோள். இந்த சமூகத்தின்மீது அக்கறையுள்ள லட்சக்கணக்கான சமூக ஆர்வலர்களின் வேண்டுகோள். இந்த அரசு, மக்கள் டாஸ்மாக்கிற்கு எதிராக திரள ஆரம்பித்துவ்பிட்டதைப் புரிந்துகொண்டு, இப்போதாவது செயலில் இறங்க வேண்டியது அவசியம்.

நாளை(ஞாயிறு) மாலை, சென்னை மெரீனாவில் ஐயா,சசிப்பெருமாள் போராடும் இடத்தருகே மனித சங்கிலி நடத்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. சென்னைவாசிகளும், சென்னைப்பதிவர்களும், மே17 இயக்கம் போன்ற தன்னலமற்ற இயக்கத் தோழர்களும் இந்தப் போராட்டத்தில் பங்கேற்க வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

மேலும், புதிய தலைமுறை தவிர்த்து பிற ஊடகங்கள் இந்தச் செய்தியை வெளிக்கொண்டுவர ஆர்வமின்றி இருக்கின்றன. சமூக அக்கறையுள்ள பதிவர்கள், தொடர்ச்சியாக இதுபற்றிப் பதிவிட்டு, இந்தப் போராட்டம் வெற்றிபெற உதவ வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன்.


நீங்கள் குடிப்பவர்களாகவே இருந்தாலும், உங்கள் குழந்தைகள் குடிகாரர்கள் ஆவதை விரும்ப மாட்டீர்கள் தானே? தமிழகப் பள்ளிக்குழந்தைகளையும் உங்கள் குழந்தைகளாக நினைத்து, குடிப்பழக்கம் உள்ள பதிவர்களும் இந்தப் போராட்டத்தில் இணைய வேண்டும் என்று வேண்டுகிறேன்.

தொடர்புடைய முந்தைய பதிவு : டாஸ்மாக்கும் திருட்டும் விபச்சாரமும்
மேலும் வாசிக்க... "டாஸ்மாக்கை எதிர்க்கும் ஐயா.சசிபெருமாளை ஆதரிப்போம்!"
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

16 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.