Friday, January 28, 2011

திருவள்ளுவரும் திருந்தாத நண்பனும்

”நான் ஏன்டா படிக்கணும்?”
பத்தாண்டுகளுக்கு முன், எங்கள் கல்லூரி முன் வைத்துக் கேட்டான் பொன்ராசு. எனக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. என்னைப் போன்று பஞ்சப் பராரியல்ல அவன். திருச்சியில் பெரிய மில் அதிபரின் மகன் . மறுபடியும் கேட்டான்
“ நீயாவது படிச்சு, வேலைக்குப் போகணும்ங்கிறதுல ஒரு அர்த்தம் இருக்கு. எனக்குத் தேவை என் கல்யாணப் பத்திரிக்கையில் போட ஒரு டிகிரி..இந்த டிகிரியை முடிச்சாலும் முடிக்கலைன்னாலும் நான் போட்டுக்குவேன். அப்புறம் ஏன் நான் படிக்கணும்?”
அருகிலிருந்த ஹிசாம் சையது “ இல்லைடா மச்சி, படிச்சி இஞ்சினீயர் ஆனா கூடுதல் மரியாதை தானே” என்றான். ஹிசாமும் நல்ல வசதியான வீட்டைச் சேர்ந்தவன்தான். ஆனாலும் பொன்ராசு பிடிகொடுக்கவில்லை. “நான் இப்பவே முதலாளிடா..நான் படிச்சு இன்னொரு இடத்துக்கு வேலைக்குப் போகணும்னு எந்த அவசியமும் இல்லை”

அதன்பிறகு நானும் ஹிசாமும் படித்து முடித்து ஆளுக்கொரு வேலையில் செட்டில் ஆனோம். பொன்ராசும் மில் முதலாளியாகிப் போனான். எங்களுடன் எந்தத் தொடர்பும் இல்லை.

போன மாதம் ஹிசாமிடம் இருந்து ஃபோன் வந்தது.
”செங்கோவி, பொன்ராசைப் பார்த்தேன்டா..”
”அப்படியா..எப்படி இருக்கான்?” என்றேன்.
“ரொம்ப மோசம். 2001-ல வந்த ரிசசன்ல டெக்ஸ்டைல் துறை பயங்கர அடிவாங்குச்சே..அப்போ மில்ல ரொம்ப லாஸாம். இவங்களால அப்புறம் எழுந்திரிக்கவே முடியலையாம்..ஏகப்பட்ட கடன் ஆகி, இப்போ சொந்த வீடு நிலம் எல்லாத்தையும் வித்துட்டாங்களாம். வாடகை வீட்டுலதான் இப்போ இருக்காங்களாம். எதுக்கோ சென்னை வந்துருக்கான். எப்படியோ என் ஆஃபீஸ்க்கு வந்துட்டான். பார்க்கவே கஷ்டமாப் போச்சு”

ஏறக்குறைய ஹிசாம் கதையும் அதுதான். பாகப்பிரிவினைத் தகராறில் அவர்களது தொழில் இரண்டாய்ப் பிரிக்கப் பட்டபின் வாப்பாவின் தொழிலில் பெரிதாய் லாபமேதும் இல்லை. நல்லவேளையாய் டிகிரி முடித்திருந்ததால், ஹிசாம் அதே வாழ்க்கைத் தரத்தை   தொடர முடிந்தது.

எனக்கு சட்டென்று வள்ளுவர் நினைவுக்கு வந்தார்.

கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவற்கு
மாடல்ல மற்றை யவை. 

கஷ்டகாலம் வந்துவிட்டதென்றால் வீடு, வாசல், சொத்து, சொந்த பந்தம் எல்லாம் பறந்துவிடுகிறது. ஆனால் எவ்வளவு கெட்ட காலத்திலும் நம்மைவிட்டு நீங்காத செல்வமாய் உடன் வருவது, நாம் கற்ற கல்வி மட்டுமே. ஆகவே கல்வியைத் தவிர மற்ற எதுவும் உண்மையான செல்வம்(மாடு) அல்ல!

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

43 comments:

  1. சிறப்பான பதிவு
    வாழ்க வளமுடன்

    ReplyDelete
  2. @R.: பாராட்டுக்கு நன்றி நண்பரே..

    ReplyDelete
  3. நன்றாக எழுதியுள்ளீர்கள். பாராட்டுக்கள்.

    ReplyDelete
  4. //எவ்வளவு கெட்ட காலத்திலும் நம்மைவிட்டு நீங்காத செல்வமாய் உடன் வருவது, நாம் கற்ற கல்வி மட்டுமே// >>> சந்தேகம் இல்லை.

    ReplyDelete
  5. கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவற்கு
    மாடல்ல மற்றை யவை.


    நிறைய டிகிரி படிச்சா டவுரி அதிகமா வாங்கலாம் ஹிஹி

    ReplyDelete
  6. வந்தேன், படித்தேன்,வாக்களித்தேன் , சென்றேன்

    ReplyDelete
  7. // ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
    கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவற்கு
    மாடல்ல மற்றை யவை.


    நிறைய டிகிரி படிச்சா டவுரி அதிகமா வாங்கலாம் ஹிஹி

    இதை நான் ஆமெதிக்கிறேன்

    ReplyDelete
  8. வந்தேன், படித்தேன்,வாக்களித்தேன் , சென்றேன்

    ReplyDelete
  9. மிகவும் நல்ல கருத்தை வெளியிட்டுள்ளீர்கள் வாழ்த்துக்கள். மேலும் முன்னேற...........

    ReplyDelete
  10. கல்வியின் அவசியத்தை நன்றாக கூறியிருக்கிறீர்கள் .

    ReplyDelete
  11. Very Nice Incident... Thanks for sharing this.

    http://anubhudhi.blogspot.com/

    ReplyDelete
  12. @middleclassmadhavi: //மாரல் ஸ்டோரி!// அய்யய்யோ...கதை இல்லேக்கா..உண்மையில் என் நண்பருக்கு நடந்தது..

    ReplyDelete
  13. @bandhu: பாராட்டுக்கு நன்றி பந்து..

    ReplyDelete
  14. @! சிவகுமார் !: ஆமாம் சிவா..வருகைக்கு நன்றி..

    ReplyDelete
  15. @ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா):திருக்குறளுக்கு உங்க விளக்க்ம் அருமை போலீஸ்கார்.

    ReplyDelete
  16. @ரஹீம் கஸாலி: அதுசரி, ‘பதிவு அருமை’ன்னு எத்தனை நாளைக்கு பின்னூட்டம் போடுறது..இப்படி புதுசு புதுசா போடுங்க.

    ReplyDelete
  17. @Speed Master: //இதை நான் ஆமெதிக்கிறேன்// அவர்கூட சேர்ந்துட்டீங்களா..விளங்கிடும்!

    ReplyDelete
  18. @wathani Jeyakanth: தங்கள் வாழ்த்துக்கு நன்றி சகோதரி..தொடர்ந்து ஆதரவு தாருங்கள் முன்னேற..

    ReplyDelete
  19. @உமாபதி: திருக்குறள் மாதிரியே ரத்தினச் சுருக்கமா கமெண்ட் போடுறீங்களே உமாபதி..நன்றி.

    ReplyDelete
  20. @Vijay @ இணையத் தமிழன்: //கல்வியின் அவசியத்தை நன்றாக கூறியிருக்கிறீர்கள்// அய்யா, அதைச் சொன்னது நானில்லை, திருவள்ளுவர்!!!!

    ReplyDelete
  21. @சங்கர் குருசாமி:Nice Incident-ஆ....என் நண்பன் இதைப் படிச்சா என்னையும் சேர்த்துல்ல கும்மிடுவான்...

    ReplyDelete
  22. நல்ல பதிவு நன்பரே

    ReplyDelete
  23. @Riyas: கருத்துக்கும் பின் தொடர்வதற்கும் நன்றி ரியாஸ்..

    ReplyDelete
  24. நிகழ்கால உதாரணத்தோடு விளக்கி இருக்கிறீர்கள்.. நல்ல விஷயமே..
    பகிர்வுக்கு நன்றிகள்..

    ReplyDelete
  25. @பாரத்... பாரதி...: வாங்க பாரதி..அப்பப்போ ஏதாவது நல்லதும் எழுதணும்ல!

    ReplyDelete
  26. நல்ல பார்வை . கல்வி மிகவும் அவசியம் .

    ReplyDelete
  27. உண்மை! உண்மை!
    அப்புறம் பாஸ், கப்பல் தொழில்நுட்பம் பற்றி எழுதுங்களேன் பேசிக்ல இருந்து!

    ReplyDelete
  28. @பார்வையாளன்: உண்மைதான் பார்வையாளன்..கல்வியே என்னைக் கரை சேர்த்தது..

    ReplyDelete
  29. @ஜீ...: ஜீ..நீங்க சொன்னீங்கன்னு The Prestige பார்த்துட்டு தலையைப் பிச்சுட்டு இருக்கேன்..அதுக்குள்ள அடுத்த குண்டைப் போடுறீங்களே..கப்பல் தொழில் நுட்பமா..அது உண்மையிலேயே கடல் பாஸ்..Structural, Piping, Electrical ஆகிய மூன்று பிரம்மாண்ட அறிவியலின் கூட்டுமுயற்சி அது..நான் இருப்பது piping Design-ல்..Piping இந்தியாவில் புனே தவிர வேறு எங்கும் கல்லூரிப் பாடமாக சொல்லித்தரப்படுவதில்லை..நாங்கள் எல்லாம் கம்பெனி காசில் ஒரு கப்பலையே Scrap ஆக்கிக் கற்றுக்கொண்டோம். எனவே அதைப்பற்றி விரிவாக ஒரு தொடர் எழுத உள்ளேன்..அது மெக்கானிகல் எஞ்சினியரிங் படிப்போருக்கு நல்ல ஃபீல்ட் இது..கொஞ்சம் பிரபலம் ஆகிக்கொள்வோம் என்றுதான் வெயிட் ப்ண்றேன்..(ஒரு ரகசியம் சொல்லட்டுமா..நான் பதிவுலகிற்கு வந்ததே அந்த ஒரு தொடர் எழுதத்தான்)..இப்போது வேலைப்பளு அதிகம்..சில மாதங்கள் போகட்டும்..தங்கள் வேண்டுகோள் மிகவும் மகிழ்ச்சியளித்தது..நன்றி.

    ReplyDelete
  30. //ஒரு ரகசியம் சொல்லட்டுமா..நான் பதிவுலகிற்கு வந்ததே அந்த ஒரு தொடர் எழுதத்தான்//

    ஆகா! பிளான் பண்ணித்தான் வந்திருக்கீங்க! மகிழ்ச்சி!!
    நேரம் வரும்வரை காத்திருப்போம்!:-)
    அப்புறம் ஒரு முக்கியமான விஷயம். நீங்க எப்பவோ பிரபலமாயிட்டீங்க நீங்க பதிவெழுத வந்த டிசம்பர் மாதமே ஒரு பாத்து நாட்களிலேயே நானும், ஜனாவும் (கொழும்பில்) உங்களைப்பற்றிக் கதைத்தோம்!

    ReplyDelete
  31. @ஜீ... //அப்புறம் ஒரு முக்கியமான விஷயம். நீங்க எப்பவோ பிரபலமாயிட்டீங்க நீங்க பதிவெழுத வந்த டிசம்பர் மாதமே ஒரு பாத்து நாட்களிலேயே நானும், ஜனாவும் (கொழும்பில்) உங்களைப்பற்றிக் கதைத்தோம்!// உண்மையாகவா...சந்தோசம்..சந்தோசம்..உங்களுக்கு என்ன கைமாறு செய்யலாம்?..பிடிங்க தி ப்ரஸ்டீஜ் விமர்சனத்தை!

    ReplyDelete
  32. \\“ நீயாவது படிச்சு, வேலைக்குப் போகணும்ங்கிறதுல ஒரு அர்த்தம் இருக்கு. எனக்குத் தேவை என் கல்யாணப் பத்திரிக்கையில் போட ஒரு டிகிரி..இந்த டிகிரியை முடிச்சாலும் முடிக்கலைன்னாலும் நான் போட்டுக்குவேன். அப்புறம் ஏன் நான் படிக்கணும்?”\\படிப்பதனால் என்ன பயனா? தமிழ் நாட்டில் இப்படித்தான் கேட்டுகிட்டு இருக்கணும். பக்கத்துல ஆந்திராவுக்கு போய்ப் பாருங்க. மாப்பிள்ளை டிகிரி முடிச்சிருந்தா 25 லட்சம், மாஸ்டர்ஸ் பண்ணியிருந்தா 50 லட்சம், அமெரிக்க மாப்பிள்ளைக்கு கோடிக்கும் மேல் என்று படிச்ச படிப்புக்கு ஏற்ற மரியாதை உண்டு!!

    ReplyDelete
  33. \\ஆனால் எவ்வளவு கெட்ட காலத்திலும் நம்மைவிட்டு நீங்காத செல்வமாய் உடன் வருவது, நாம் கற்ற கல்வி மட்டுமே. ஆகவே கல்வியைத் தவிர மற்ற எதுவும் உண்மையான செல்வம்(மாடு) அல்ல!\\திருவள்ளுவர் சொன்னது உண்மையான கல்வியை. நம்ம படிக்கிறது கல்வியே இல்லை. நம்மை நல்ல மனிதனாகுவது, நமது தன்னம்பிக்கை, அறிவை வளர்ப்பது, நமக்குள் இருக்கும் திறனை வெளிக்கொணர்வது என்று எந்த பயனையும் தராத கல்வி இது. கஷ்டம் என்று சொன்னால் படித்து வேலையில் இருப்பவனுக்கும் வருகிறது, உதாரணம் recession நேரத்தில் மென் பொருள் துறையினர் வேலை வேட்டி இல்லாமல் தவித்தார்களே??

    ReplyDelete
  34. @Jayadev Das//நம்ம படிக்கிறது கல்வியே இல்லை. நம்மை நல்ல மனிதனாகுவது, நமது தன்னம்பிக்கை, அறிவை வளர்ப்பது, நமக்குள் இருக்கும் திறனை வெளிக்கொணர்வது என்று எந்த பயனையும் தராத கல்வி இது// ஐயா, நீங்கள் பேசுவது தத்துவம்..நான் பேசுவது யதார்த்தம். இந்த குப்பைக் கல்வி மூலமே நான் மேலெழுந்து வந்தேன்..இல்லையென்றால் நானும் எங்கோ கொத்துவேலை செய்துகொண்டு இருந்திருப்பேன்..ந்ம் மக்களுக்கு முதல் தேவை இந்த குப்பைக்கல்வியே..நீங்கள் சொல்கிற விஷயங்களைத் தானே பிறகு கண்டடைவார்கள், நான் அடைந்த மாதிரி. எழுதப் படிக்கவே வராதவன் புதுமைப்பித்தனையும் ஜெயகாந்தனையும் எப்படி அடைவான்..சரி தானே சார்?

    ReplyDelete
  35. @Jayadev Das//கஷ்டம் என்று சொன்னால் படித்து வேலையில் இருப்பவனுக்கும் வருகிறது, உதாரணம் recession நேரத்தில் மென் பொருள் துறையினர் வேலை வேட்டி இல்லாமல் தவித்தார்களே??// அதனால படிக்காம இப்ப இருக்குற மாதிரியே ஏதோவொரு குக்கிராமத்தில் கூலி வேலை பார்த்து வறுமையில் தொடர்ந்து உழலுங்கள்-அப்படீன்னு அர்த்தம் வருதே சார்..என்னாச்சு?

    ReplyDelete
  36. குஜராத்தி, ராஜஸ்தானி காரங்க எல்லாம் பாருங்க, எழுதப் படிக்கும் அளவு வரைதான் படிக்க வைப்பாங்க, அதுக்கப்புறம் தங்கள் தொழிலில் இறக்கி விட்டுடுவாங்க. இவங்க சிலர் வட்டிக்கு விடும் தொழில் செய்யுறாங்க, இல்லை என்று சொல்லவில்லை, ஆனா இப்ப அவங்க Hardware கடை, பாத்திரக் கடை, நகைக் கடை என்று பல்வேறு தொழில் செய்கிறார்கள். மேலும் இவர்கள் சம்பாத்தியம் எந்த படித்தவனையும் விட நூறு மடங்கு அதிகம். தமிழகத்தில் நாடார் சமுதாய மக்கள் மளிகைக் கடைகளை தமிழகம் முழுவதும் நடத்துகிறார்கள், அவர்களும் ஆஹா ஓஹோ என்று படித்தவர்கள் அல்ல. இருந்த போதிலும் தொழிலை வளமாகச் செய்கிறார்கள். [இவர்களில் நிறைய பேர் படித்து வேலைக்கும் செல்கிறார்கள், இல்லைஎன்று சொல்லவில்லை, HCL நிறுவனமே இவர்களுடையதுதானே]. படித்தவனுக்கும், மேற்சொன்னவர்களுக்கும் என்ன வேறுபாடு? படித்தவன் ஒரு கூட்டுக்குள் அடங்கி விடுவான், எங்கேயாவது அடிமையாகவே இருப்பான், வேலை போச்சுன்னா பிழைக்கத் தெரியாது செத்தான், மேற்சொன்னவர்களுக்கு வானமே எல்லை, எந்த சூழ்நிலையிலும் தன்னம்பிக்கை இழக்க மாட்டார்கள். அந்த மாதிரி திறனை நமது கல்வி கொடுப்பதில்லை. [என்ன சார், நானும் உங்களை மாதிரி இந்த கல்வி மூலமா பயனடைந்தவந்தான், ஆனாலும் சமுதாயத்தை ஏமாற்றி வாழ்கிறேனா என்று அவ்வப்போது மனசாட்சி உறுத்துது,கஷ்ட்டப் பட்டு உழைப்பவன் பட்டினி கிடக்கும் போது, சும்மா கணினி முன் உட்கார்ந்து கொண்டு அவர்கள் உழைப்பில் வரும் சுகத்தை அனுபவிக்கிறோமே என்று!!]

    ReplyDelete
  37. @Jayadev Das //மேலும் இவர்கள் சம்பாத்தியம் எந்த படித்தவனையும் விட நூறு மடங்கு அதிகம். தமிழகத்தில் நாடார் சமுதாய மக்கள் மளிகைக் கடைகளை தமிழகம் முழுவதும் நடத்துகிறார்கள், அவர்களும் ஆஹா ஓஹோ என்று படித்தவர்கள் அல்ல. இருந்த போதிலும் தொழிலை வளமாகச் செய்கிறார்கள்.// இவ்வளவு தெரிஞ்ச நீங்க இன்னும் ஒரு ஆஃபீஸ்ல அடிமத் தொழில் பாக்குறதை நினைச்சா எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு சார். எப்படியோ, படிப்பு தேவையில்லைன்னு தெரிஞ்சுக்கிட்டீங்க..நல்லது, அப்போ உங்க பிள்ளைகளையும் படிக்க வைக்க மாட்டீங்க இல்லையா..சேட்-நாடார் கதையெல்லாம் எடுத்துச் சொல்லி, இன்னொரு அம்பானியை உருவாக்குவீங்களா?

    //வேலை போச்சுன்னா பிழைக்கத்தெரியாது செத்தான், மேற்சொன்னவர்களுக்கு வானமே எல்லை, எந்த சூழ்நிலையிலும் தன்னம்பிக்கை இழக்க மாட்டார்கள்.// பாஸ், போன ரிசஷன்ல எங்க கம்பெனியே புட்டுக்கிச்சு. 6 மாசத்துக்கு மேல சும்மா தான் இருந்தோம். மொத்தம் 40 பேரு..யாரும் சாகலை..லோக்கல்ல ட்ரை பண்ணவன் 2 மாசத்துல வேலைக்குப் போயிட்டான்..என்னை மாதிரி வெளில ட்ரை பண்ணவன் 6 மாசத்துல விசாவும் கைக்கு வந்து வெளியேறிட்டோம்...தன்னம்பிக்கை-ன்னு ஒன்னு இருக்கப்போய்த் தான் ஜெயித்தோம்..

    //என்ன சார், நானும் உங்களை மாதிரி இந்த கல்வி மூலமா பயனடைந்தவந்தான்// ஆஹா..இது நல்லாயிருக்கே..அப்போ நீங்க மட்டும் படிச்சு, ஒரு ஆஃபீஸ்ல ஏ.சி.ல வேலை செய்யணும்..ஆனா மத்தவங்க தொழில் அதிபர் கனவுலயே வாழ்க்கையை ஓட்டணுமா...

    //கஷ்ட்டப் பட்டு உழைப்பவன் பட்டினி கிடக்கும் போது, சும்மா கணினி முன் உட்கார்ந்து கொண்டு அவர்கள் உழைப்பில் வரும் சுகத்தை அனுபவிக்கிறோமே என்று!// அப்போ அவங்களையும் சுகத்தை அனுபவிக்க படிச்சு வாங்க-ன்னு சொல்றது தான நியாயம்..

    ReplyDelete
  38. @Jayadev Das உஙக்ளுக்கு இன்னும் விளக்கமாச் சொல்றேன்..என் அப்பா 40 வருஷம் கடை வித்தாரு..ஆனாலும் அம்பானி ஆகலை..’மவனே..இந்த டிகிரி ஒன்னுதாண்டா உனக்கு நான் தர்ற சொத்து’ன்னு சொல்லி என்னை படிக்க வச்சாரு. இப்போ நான்

    சம்பாதிச்சிருக்கிறதை, அப்பா தொழில் மூலமா சம்பாதிக்கணும்னா இன்னும் 40 வருஷம் ஆகும்! என் சித்தப்பா பையன் படிப்புல சுமார்..வீட்ல ரொம்ப கஷ்டம்..ஒரு ரூபா ரேஷன் அரிசி தான்..அதனால அவன் வீட்ல அவனை கொத்தனார்

    வேலைக்கு அனுப்பலாம்னு முடிவு பண்ணிட்டாங்க..அவனுக்கோ படிக்கணுனு ஆசை..எங்கிட்ட வந்து நின்னான்..நான் அவன் வீட்ல பேசி, ஒருவழியா படிக்க வச்சோம்..இப்போ அவனும் ஒரு என்சினியர்..நீங்க சொல்றபடை ‘சேட் பையங்களைப் பார்..அம்பானியைப் பார்..’னு கதை சொல்லி இருந்தா, அவன் அப்பாவும் ‘அண்ணனே சொல்லிட்டான்..சொன்ன பேச்சைக் கேளு’ன்னு அவனை வேகாத வெயில்ல போட்டு கொன்னுருப்பாங்க..அது மாதிரி வாழ்க்கையைத் தொலைச்சவங்க பலபேரை எனக்குத் தெரியும்..எப்பவாவது நாம சந்திக்க நேர்ந்தால், எங்க ஊருக்கு கூட்டிப்போய் காட்டுறேன்..அப்படியும் ஒரு உலகம் இருக்குன்னு அப்பவாவது உங்களுக்குப் புரியும்...//அந்த மாதிரி திறனை நமது கல்வி கொடுப்பதில்லை// அப்படியா..பரவாயில்லை சார், எங்களோட வறுமையும் இந்த குப்பைக்கல்வியும் சேரும்போது எங்களுக்கு அந்தத் திறன் தானாக் கிடைக்கும் சார்!

    ReplyDelete
  39. உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் மற்றெல்லாம்
    தொழுதுண்டு பின் செல்பவர்.
    அப்படின்னு வள்ளுவர் தானே சொல்லியிருக்காரு. தொழில்களுக்கெல்லாம் தலையாயது உழவுத் தொழில். முன்பு செல்வம் என்றால் எவ்வளவு நிலம், பசுக்கள் இருக்கு என்றுதான் பார்ப்பார்கள். ஆனா இன்னைக்கு நீங்களே சொல்லிட்டீங்க, படிக்காம போயிருந்தா எங்கேயாவது நிலத்தில் உழுதுகிட்டு மாடு மேய்ச்சுகிட்டு இருந்திருப்பேன்-ன்னு. படிச்ச ஒருத்தர் விவசாயத்தை கேவலமா பார்க்கும் படி இருக்குன்னா இந்த கல்வி எப்படி பட்டதாக இருக்கும்னு நீங்களே சொல்லுங்க. எந்த தொழில் இல்லையென்றாலும் வாழ் முடியும், ஆனா விவசாயம் இல்லாமல் யாரும் வாழ முடியாது. யார் எப்படி எவ்வளவு சம்பாதித்து, எவ்வளவு ஆடம்பரமாக வேண்டுமானாலும் வாழட்டும், ஆனால் அந்த ஆடம்பரம் எல்லாம் எங்கேயிருந்து வருகிறது என்று மூலத்தை தேடிக் கொண்டே போனால் கடைசியில் ஏதே ஒரு வயலில் உழைக்கும் விவசாயியின் வியர்வையாகத்தான் இருக்கும். அந்த உழைப்பு மட்டுமே உண்மை மற்றவை அத்தனையும் அவன் முதுகில் சவாரி செய்பவர்கள் மட்டுமே. விவசாயியின் மகன் படித்து வெளிநாடு செல்லட்டும், அதே சமயம் விவசாயத் தொழில் போற்றி காக்கப் பட வேண்டும், அதை மறந்த சமூகம் பின்னால் ரொம்ப கஷ்டப் படும்.

    ReplyDelete
  40. //படிச்ச ஒருத்தர் விவசாயத்தை கேவலமா பார்க்கும் படி இருக்குன்னா இந்த கல்வி எப்படி பட்டதாக இருக்கும்னு நீங்களே சொல்லுங்க// விவசாயத்தை நான் கேவலமா எப்ப பார்த்தேன்?..நான் சொல்றது என்னன்னா, நாங்க வம்ச வம்சமா விவசாயம் பாத்தவங்க..(கிராமத்தில் கடை+விவசாயம்)..அதனால நாங்க இத்தனை நாள் பாடுபட்டு உலகத்துக்கு சோறு போட்டும் எதுவும் மிஞ்சவில்லை..அதனால தான் உலகத்துக்கு பாடுபட்டது போதும், என் சந்ததிக்கு பாடு படுவோம்னு கிளம்பிட்டேன்..இதுவரை விவசாயம் பண்ணாத குடும்பங்கள் போய் அந்த விவசாயத்தை கண்டினியூ பண்ணட்டும்..நாங்களே எவ்வளவு நாளைக்கு சேவை செய்யுறது..நீங்களும் கொஞ்சம் செய்யுங்களேன்! (விவசாயம் அடுத்த தலைமுறையில் காஸ்ட்லியான கார்ப்போரேட் பிசினஸாக மாறும் என்பது என் அனுமானம்!)

    ReplyDelete
  41. சமுதாயத்துக்கு ஆணி வேர், அஸ்திவாரம் எல்லாம் விவசாயமும் பால் வளமும் தான். இன்றைக்கு விவசாயம் செய்பவன் விஷம் குடிக்கும் கேவலமான நிலை, விளைநிலங்கள் எல்லாம் பிளாட்டுகளாக மாற்றப் பட்டு ஏக்கர் கோடிக்கணக்கில் விற்கப் படுகின்றன. மீறி விவசாயம் செய்தால் போட்ட பணம் கூடத் தேறாது. இதையெல்லாம் பார்த்துக் கொண்டு தடுத்து நிறுத்த எந்த நடவடிக்கையும் எடுக்காதாத மைய மாநில அரசுகள். விளைவு, கோணிப்பை நிறைய பணத்தை கொண்டு போய் கைப் பை நிறைய பொருள் வாங்கி வரும் நிலை, எங்கே வெளிநாட்டில் நடக்கிறதென்று ஒரு இடுக்கையில் படித்தேன், அது இங்கும் நடக்கலாம்.

    ReplyDelete
  42. @Jayadev Das //விஷம் குடிக்கும் கேவலமான நிலை, விளைநிலங்கள் எல்லாம் பிளாட்டுகளாக மாற்றப் பட்டு ஏக்கர் கோடிக்கணக்கில் விற்கப் படுகின்றன. மீறி விவசாயம் செய்தால் போட்ட பணம் கூடத் தேறாது.// இதைத் தானே நானும் சொல்றேன்!

    ReplyDelete

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.