Friday, August 31, 2012

முகமூடி - திரை விமர்சனம்

அதாகப்பட்டது... :
ஸ்பைடர்மேன், பேட் மேன் என ஆங்கிலத்தில் பல சூப்பர் ஹீரோக்கள் இருந்தாலும் தமிழில் அத்தகைய சூப்பர் ஹீரோ கேரக்டர்கள் இதுவரை இல்லை எனலாம்..அந்த வகையில் தமிழில் முதல் சூப்பர் ஹீரோப் படம் என்ற பெருமையுடன், தமிழில் குங்பூ கலையை மையமாக வைத்து, யுடிவி தயாரிப்பில் மிஷ்கின் இயக்கத்தில் இன்று வெளியாகும் படம் முகமூடி.

ஸ்டோரி லைன் :
ப்ரூஸ் லீ என்று நண்பர்களால் செல்லமாக அழைக்கப்படும் ஹீரோ குங்பூ மேல் உள்ள மோகத்தால் (கவனிக்க: குஷ்பூ அல்ல குங்பூ) வேலைக்குச் செல்லாமல் வெட்டியாக ஊரைச் சுற்றுவதோடு கமிசனர் நாசரின் பெண்ணான ஹீரோயினையும் சுற்றுகிறார், ஒன் சைடு லவ் தான். அதே நேரத்தில் ஊரில் பல இடங்களில் ஒரு குரூப் கொலை/கொள்ளையில் ஈடுபடுகிறது. அதைப் பிடிக்கும் தீவிர முயற்சியில் நாசர் இறங்குகிறார். ஹீரோயினை ஒன் சைடாக லவ் பண்ணும் ஹீரோ, ஹீரோயினை எப்படி லவ் பண்ணுவது என்று யோசிக்கையில், ‘பேண்ட்டுக்கு மேல் ஜட்டி போட்டுக்கொண்டு போனால் லவ் பீறிட்டுக்கொண்டு கிளம்பும்’ என்ற விபரீத ஐடியா தோன்றுகிறது. எனவே ஸ்பைடர் மேன் கெட்டப்பில் சிவப்புக்கலர் ஜட்டி போட்டுக்கொண்டு ராத்திரி நேரத்தில் போகிறார். (பின்னே, பகல்ல அப்படிப் போனா நாய் கடிச்சுடாது? நமக்கு இருக்கிறதோ ஒரே ஒரு ஹீரோ...!).

அப்போது அந்த ஏரியாவில் திருட வரும் கொள்ளைக்கார கும்பலில் ஒருவனைப் பிடித்து போலீஸிடம் ஒப்படைக்கிறார். யார் நீ என்று போலீஸ் கேட்க, முகமூடி என்று சொல்லி, அதே பெயரில் ஃபேமஸ் ஆகிறார். மீண்டும் ஹீரோயினை பார்க்க சாதா உடையில் (பத்திரமாக!) செல்லும்போது, நாசரை வில்லன் குரூப் சுட்டுவிட, பழி ஹீரோ மேல் விழுகிறது. ஹீரோவும் வில்லன் குரூப் ஆள்  என போலீஸ் தேடுகிறது. ஹீரோ தான் குற்றவாளி அல்ல என்று போலீஸிடம் நிருபித்தாரா? வில்லன் குரூப்பை துவம்சம் செய்தாரா? ஹீரோயினிடம் தான் தான் சிவப்பு ஜட்டி முகமூடி என்று நிரூபித்து காதலில் ஜெயித்தாரா என்பதே கதை.

திரைக்கதை :
படத்தின் ஓப்பனிங் கொள்ளை சீனிலேயே நம்மை நிமிர்ந்து உட்கார வைத்துவிடுகிறார்கள். கொள்ளைக்கார கும்பல் பற்றியும், அதைத் தேடும் போலீஸ் பற்றியும் அறிமுகம் செய்துவிட்டு, ஹீரோ போர்சனுக்கு கதை நகர்கிறது. முதல் ஃபைட் சீனிலேயே குங்பூ வீரனாக ஹீரோவைக் காட்டுவதால், சூப்பர் ஹீரோவாக ஜீவாவை எளிதில் ஏற்றுக்கொள்ள முடிகிறது. ஹீரோவுக்கு ஒரு காதல் என கமிசனர் வீட்டிற்கு அதன் மூலம் லின்க் கொடுத்து, விரைவாகவே ஹீரோவுக்கும் வில்லன் குரூப்புக்கும் இடையே நேரடி மோதலுக்கு படம் வந்துவிடுவதால், முதல் பாதி ஜெட் வேகத்தில் பறக்கிறது.

ஈவிரக்கமற்ற கொள்ளைக்கும்பல் - பிடிக்க முடியாமல் திணறும் போலீஸ் - களமிறங்கும் சூப்பர் ஹீரோ  என படம் சூடாகும் நேஅத்தில் இண்டர்வெல் வருகிறது. அதன்பிறகு ஹீரோ, ஏதோ செய்யப்போகிறார் என்று பார்த்தால், ஏமாற்றமே மிஞ்சுகிறது. மொத்த கொள்ளைக்கூட்டமும் யார் என போலீஸே கண்டுபிடித்துவிடுகிறது. அதற்கு உடந்தையான போலீஸ் அதிகாரி மூலம் எல்லா உண்மைகளும் போலீஸே தெரிந்துகொள்கிறது..ஹீரோ ஒன்றும் செய்யாமலேயே எல்லாம் சுபமாக முடியப்போகும் நேரத்தில், வில்லன் நரேன் ஹீரோயின் உட்பட சில குழந்தைகளை கடத்தி வைத்துக்கொண்டு, ’முகமூடி எங்கள் தங்கக்கட்டிகளோடு நேரில் வந்தால் தான் பணயக்கைதிகளை விடுவிப்போம்’ என்று அந்தக்கால நம்பியார்த்தனமான கோரிக்கையை வைப்பதிலேயே படம் புஸ்ஸாகிவிடுகிறது. ’யூ டூ மிஷ்கின்?’ என்று கேட்பதைத் தவிர வேறு வழியில்லை.

ஆனால் படத்தின் ஒவ்வொரு ஷாட்டும் அட்டகாசம். முதல் சீன் முதல் இண்டர்வெல் வரை படம் பிசிறு தட்டாமல், நிச்சயம் ஹிட் தான் என்று நினைக்க வைக்கிறது. மிஷ்கினின் வழக்கமான ‘கால் க்ளோசப்’களை இங்கே குங்பூவுக்கு பயன்படுத்தியிருப்பதால், ரசிக்க முடிகிறது. ஏற்கனவே இதே மாதிரி சூப்பர்ஹீரோப் படங்கள் ஆங்கிலத்தில் வந்துவிட்டாலும், படத்தில் குங்பூ கான்செப்ட்டைக் கலந்ததன் மூலம் தனித்துத் தெரிகிறது முகமூடி. யுத்தம் செய் படத்தை விட, முகமூடி ஸ்பீடு தான்

 ஜீவா :
இந்த படத்திற்காக ஆறுமாதம் ஜீவாவும் நரேனும் குங்பூ கத்துக்கிட்டதாக செய்தி வெளியானது. அது உண்மை தான் என்று படம் பார்க்கையில் புரிகிறது. சூப்பர் ஹீரோ கேரக்டருக்குப் பொருந்தும் வண்ணம் உடம்பில் முறுக்கேற்றி, ஃபைட் சீன்களில் நிறையவே ரிஸ்க் எடுத்து கலக்குகிறார் ஜீவா. காதல் காட்சிகளிலும் வழக்கமான குறும்புக்கு பஞ்சமில்லை. ஒரே நேரத்தில் வீட்டுக்கு தண்டச் சோறாகவும், ஊருக்கு சூப்பர்மேனாகவும் மாறும் கேரக்டருக்கு நன்றாகவே பொருந்திப் போகிறார் ஜீவா.

குஜிலி :
இதிலும் பூஜா ஹெக்டே என்ற தேறாத கேஸ் ஒன்று தான் ஹீரோயின். நல்லவேளையாக அதிக காட்சிகள் இல்லை. தமிழ் சினிமாவிற்கு சீக்கிரமே நல்ல ஹீரோயின்கள் கிடைக்க பிரார்த்திப்போம்.
நரேன்/செல்வா :
நரேன் இதில் வில்லனாக நடித்திருக்கிறார். ஆரம்பக்காட்சிகளில் பயங்கர வில்லனாக தோன்றும் அவர், பெண்மை கலந்த நடையாலும்/பேச்சாலும் டம்மியாகத் தெரிகிறார். ஜீவாவின் மாஸ்டராக வரும் செல்வா, அந்த கேரக்டருக்கு ஒத்துவரவில்லை. புரோட்டா மாஸ்டரைவிடவும் பலவீனமானவராக அவர் இருப்பதால், மாஸ்டர் கேரக்டருக்கு வேறு ஸ்ட்ராங்கான ஆளைப் போட்டிருக்கலாம்.

வசனம் :

’புரூஸ்லி யார் மாதிரியும் ஆகணும்னு நினைக்கலை..தான் என்னவா ஆக நினைச்சாரோ அப்படியே ஆனார். அதனால நீயும் அவர் மாதிரி வரணும்னு நினைக்காதே..உனக்கு என்ன ஆகத் தோணுதோ அப்படி ஆகு’ என்பது போன்ற பல நல்ல வசனங்கள் நம்மைக் கவர்கின்றன. ஹீரோ தான் ஒரு ஐ.டி.டீம் லீடர் என ஹீரோயின் தோழியிடம் அளந்துவிடும்போது, ஹீரோவின் அப்பா வந்து பேசும் டயலாக் அட்டகாசம். சிரிப்பில் தியேட்டரே அதிர்கிறது.

பாஸிடிவ் பாயிண்ட்ஸ்:

- மிஷ்கினின் ஃபேவரைட் கேமிரா ஆங்கிள்ஸும், தனித்துவமான காட்சியமைப்பும்

- குங்ஃபூ ஸ்டைல் சண்டைக்காட்சிகள்

- ஜீவா

- ஸ்டைலிஷான மேக்கிங். நச்சென்ற ஒளிப்பதிவு (சத்யா)

- சண்டைக்காட்சிகளில் வில்லன் ஹீரோ/மாஸ்டரை உணர்ச்சிவசப்பட வைத்து, அடித்து வீழ்த்துவது.

நெகடிவ் பாயிண்ட்ஸ் :

- இண்டர்வெல் வரை பெப்பை ஏற்றிவிட்டு, கடைசியில் சொதப்பியது

- நரேன் தான் வில்லன் என்ற சஸ்பென்ஸை உடனே, சப்பென்று உடைத்தது

-  9 மாதத்திற்கு ஒரு மாநிலம் என திட்டம் போட்டு, திருடும் கும்பல் என்று சொல்லிவிட்டு, அவர்கள் பெரிய குங்பூ ஸ்கூலை நடத்துவதாகவும், பப்ளிக் முன்னிலையில்  போட்டி நடத்துவதாக காட்டியிருப்பது.

-  கிளைமாக்ஸ் சண்டையில் ஹீரோவின் தாத்தா கோஷ்டி செய்யும் நகேஷ்காலத்து காமெடி..என்ன கொடுமை சார் அது!

- படத்தின் தரத்துடன் ஒட்டாத கிளைமாக்ஸ் காட்சியும், அதற்கான லீடும்

- மிஷ்கின் யதார்த்ததையும் விட முடியாமல், சூப்பர் ஹீரோயிசத்துக்குள்ளும் முழுக்க போக முடியாமல் ரெண்டும் கெட்டானாய் தவித்திருக்கிறார். நம்பக்கூடியவகையில் காட்சிகளை அமைப்பதற்கான கதை இதுவல்ல. ஹீரோ கடைசிவரை சாதாரண மனிதனாகவே போராடுவதால், ஜட்டி வித்தியாசத்தைத் தவிர இதுவும் வழக்கமான படம் தானோ என்று எண்ணவைக்கிறது.

அப்புறம்....:

- கே-யின் இசையில் பார் ஆந்தம் பாட்டு நன்றாக இருக்கிறது. பாடல்களைவிட பிண்ணனி இசையில் அதிக உழைப்பு தெரிகிறது.

- தனித்தனிக் காட்சிகளாகப் பார்த்தால், நீட்டாக இருக்கிறது. மிஷ்கினும் இன்னொரு பார்த்திபன் ஆகிவிடுவாரோ?

- இது எந்தப் படத்தின் காப்பி என்று அடுத்து விவாதம் ஆரம்பிக்கும் என்று நம்புகிறேன்..இருந்தாலும், ஸ்பைடர்மேன் - பேட் மேன் - அயன்மேன் எல்லாம் கான்செப்ட் படி ஒன்றுதான் என்றாலும், அவை முந்தையதன் காப்பி என்று நாம் சொல்வதில்லை..எனவே இந்தப் படத்தையும் விட்டுவிடலாமே!

- நந்தலாலா படம் தோற்றதுக்குக் காரணமே பதிவர்கள்தான் என்று குற்றம் சாட்டினார் மிஷ்கின். சித்திரம் பேசுதடி-அஞ்சாதே மாதிரி படம் கொடுத்தால், நாங்கள் ஏன் குறை சொல்லப் போறோம்?

பார்க்கலாமா? :

-  முக்கால்வாசிப் படம் வரை பார்க்கலாம் (மிஷ்கின் / ஜீவாவுக்காக!)

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

11 comments:

  1. ரைட்டு. இப்படி இந்தியாவுக்கு முன்னாடி பாத்துட்டு விமர்சனம் போடும் பழைய செங்கோவி தான் எங்களுக்கு தேவை

    ReplyDelete
  2. மிஸ்கீன் ஸ்டைலுக்கும் சூப்பர் ஹீரோவுக்கும் ஒத்து வராதுன்னு நினைச்சிக்கிட்டு இருந்தேன், நீங்க படம் முதல் பாதி ஸ்பீடா இருக்குன்னு சொல்றீங்க, அப்போ பார்க்கலாம்.

    ReplyDelete
  3. நல்லதொரு விமர்சனம்.

    ஆளுக்கு முன்னாடி எப்படித்தான் பார்த்துட்டு வறீங்களோ..

    ReplyDelete
  4. வழக்கம் போல பிரித்து மேய்ந்திருக்கிறார்!

    ReplyDelete
  5. ///பார்க்கலாமா? :

    - முக்கால்வாசிப் படம் வரை பார்க்கலாம்///

    அடப்ப்ப்போங்க சார்...


    எனக்கொரு டவுட்டு? இந்த வேலாயுதம் படத்துக்கும் இதுக்கும் என்ன வித்தியாசம்?

    ReplyDelete
  6. கமர்சியல் படம் கொடுக்கவே மிஸ்கின் திணறுகிறார்..பழைய ஹாலிவுட் படக்காப்பியை கொடுத்துவிட்டு ப்ரூஸ்லீ மாதிரி ஆகணும்னு நினைக்காதேன்னு வசனம் வெச்சா எப்படி..?

    ReplyDelete
  7. ///இதிலும் பூஜா ஹெக்டே என்ற தேறாத கேஸ் ஒன்று தான் ஹீரோயின். /////

    அப்படி எத வெச்சித்தான் இந்த மாதிரி ஹீரோயின்களை செலக்ட் பண்றானுங்களோ தெரியலையே?

    ReplyDelete
  8. ///ஹீரோ கடைசிவரை சாதாரண மனிதனாகவே போராடுவதால், ஜட்டி வித்தியாசத்தைத் தவிர இதுவும் வழக்கமான படம் தானோ என்று எண்ணவைக்கிறது.////

    அப்படின்னா ஹீரோ பேண்ட்டுக்கு மேல ஜட்டி போட்டிருக்காரா? நல்ல திங்கிங், மிஸ்கினுக்கு வாழ்த்துகள்!

    ReplyDelete
  9. செங்கோவி, I sometimes, drop in your blog and read some articles. நீங்கள், வேறு ஏதாவது இணையதளத்தில் எழுதுகிறீர்களா?.. ஏனெனில், உங்கள் இந்த முகமூடி - திரை விமர்சனத்தை, இதே format-ல் வேறொரு தளத்தில் படித்தேன். உங்கள் பெயரோ அல்லது தள முகவரியோ அங்கு குறிப்பிடபடவில்லை...

    ReplyDelete
  10. @செல்வன்

    இல்லை நண்பரே..எனது பதிவுகள் திருடப்படுவது புதிதல்ல...விட்டுத்தள்ளுங்கள்.

    ReplyDelete

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.