Sunday, April 20, 2014

திமுக: இளவரசர் பட்டம் வெல்வாரா?

 தமிழர் நலன் பற்றியோ, ஈழத்தமிழர் உயிர் பற்றியோ கொஞ்சமும் கவனத்தில் கொள்ளாத காங்கிரசை ஒழிக்க வேண்டும் என்பதே நம்மைப் போன்ற சாமானியர்களின் ஆசையாக இருந்தது. அது இந்தத் தேர்தலில் நடந்தேறி இருக்கிறது. அதற்கு முழுமுதற் காரணம், ஸ்டாலின் தான். கலைஞர்-அழகிரி-கனிமொழி கொடுத்த நெருக்கடியையும் தாண்டி ஸ்டாலின் எடுத்த உறுதியான நிலைப்பாடுதான்,  காங்கிரஸை அரசியல் அநாதைகளாக இந்தத் தேர்தலில் ஆகியிருக்கிறது. அதற்காக ஸ்டாலினுக்கு நாம் நன்றி சொல்லியே ஆக வேண்டும்.
ஆனால் இதை நாம் கத்திக் கதறிய 2009ல் செய்திருந்தால், திமுக தமிழர் வரலாற்றில் தவிர்க்க முடியாத சக்தியாக நிலைபெற்றிருக்கும். . காலம் கடந்த ஞானமாக, இப்போது தான் திமுக விழித்துக்கொண்டுள்ளது. நாம் என்ன தான் காங்கிரஸை கழுவி ஊற்றினாலும், காங்கிரஸ்க்கு என்று குறிப்பிட்ட வாக்குவங்கி இன்னும் இருப்பது நிதர்சனம். அதையும் மீறி ஸ்டாலின் இந்த முடிவை எடுத்திருப்பது பாராட்டப்பட வேண்டிய விஷயம் தான்.

இதில் சிக்கல் என்னவென்றால், வாக்காளர்கள் நாம் நினைப்பதுபோல் முழுமாங்காய் மடையர்களாக இல்லாமல் இருப்பது தான். கடைசிவரை மத்திய அரசில் திமுகவும் ஒரு அங்கம் என்பதை எல்லோரும் உணர்ந்தே இருக்கிறார்கள். எனவே காங்கிரஸ் அரசை விமர்சிப்பது தன் தலையில் விடியும் என்பதால், திமுக அதைப் பற்றிப் பேசுவதைத் தவிர்த்தே ஆக வேண்டிய கட்டாயம். எனவே மிஞ்சுவது பாஜகவும் அதிமுகவும் தான். பாஜகவை விமர்சிக்க அதிகம் யோசிக்க வேண்டாம், இருக்கவே இருக்கிறது போலி மதச்சார்பின்மை. இஸ்லாமியர்களுக்கும் இப்போது வேறு வழி இல்லாததால், திமுக காட்டில் இஸ்லாமிய ஓட்டு மழை தான்.
பாஜகவை அடுத்து ஜெயலலிதாவை விமர்ப்பதில் இரு சிக்கல்களை திமுக எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. மின்வெட்டு, சட்டம் ஒழுங்கு போன்ற பிரச்சினைகளைப் பேசும்போது, கிராமத்தானுக்குக்கூட ’மின்வெட்டின் ஆதிகாரணம் திமுக அரசு..நிலமோசடி உள்ளிட்ட சட்டம் ஒழுங்கு பிரச்சினைகளுக்குக் காரணம், மாவட்டம் தோறும் உருவாகிய முதிர்ச்சியற்ற வாரிசு அரசியல்’ என்பது தெரிந்திருக்கிறது. எனவே நன்றாக அறுவடையாகக்கூடிய மின்வெட்டு பிரச்சினையைப் பற்றிப் பேசுவதும் தனக்கே ஆப்பாகும் நிலை. திமுகவின் இன்னொரு சிக்கல், இப்படி அதிமுக மாநில அரசின் அவலங்களைச் சொல்லி ஓட்டுக்கேட்கும்போது, ;இவர்கள் நாடாளுமன்றத் தேர்தலுக்கு ஓட்டுக்கேட்கிறார்களா? இல்லை, சட்டமன்றத் தேர்தலுக்கா? என்ற நக்கலான கேள்வியும் குழப்பமும் வாக்காளர் மனதில் உருவாவது.

ஸ்டாலினுக்கு இந்தத் தேர்தல் மானப்பிரச்சினை என்றே சொல்லலாம். இந்த தேர்தலில் நிற்பது கலைஞரின் திமுக அல்ல, இது ஸ்டாலினின் திமுக என்று அனைவரும் அறிந்தேயிருக்கிறார்கள். எனவே இந்தத் தேர்தலில் திமுக பெறப்போகும் வெற்றி/தோல்வி தான் ஸ்டாலின் ஆளுமைக்கு சான்றாக இருக்கும். குறைந்தது பத்து தொகுதிகளாவது வென்றால்தான் மரியாதையாக இருக்கும். ஆனால் அதற்கு கடுமையாகப் போராட வேண்டிய நிலையிலேயே ஸ்டாலின் இருக்கிறார். அழகிரியின் கலகம், தென்மாவட்டங்களில் கழகத்தை பாதிக்கவே செய்யும். (நான் சுற்றித்திரிந்த விருதுநகர் மற்றும் தென்காசி தொகுதிகளில் திமுக மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டிருப்பது ஒரு உதாரணம்.)

திமுக தொண்டர்கள் ஸ்டாலினின் தலைமையை ஏற்க முடிவுசெய்துவிட்டார்கள் என்பதே நிதர்சனம். ஆனால் அழகிரியின் அலப்பறைகள் பொதுமக்கள் மத்தியில் கட்சிப்பெயரைக் கெடுக்கின்றன. கடைசி நேரத்தில் யாருக்கு ஓட்டுப்போடுவது என்று முடிவு எடுக்கும் மக்களிடம் திமுகவின் பெயர் அடிவாங்கியிருக்கிறது. உண்மையில் அழகிரிக்கு ஆதரவு இருக்கிறதோ இல்லையோ, கட்சி பலவீனமாக இருப்பது போன்ற தோற்றத்தைத் தருவதில் அழகிரி ஜெயிக்கிறார் என்றே சொல்ல வேண்டும்.

ஸ்டாலினிடம் இருக்கும் இன்னொரு குறை, தேர்தல் நேரத்தில் உள்கட்சிக்குள் அவரே குழப்பத்தை விளைவிப்பது. துரைமுருகனோடு இப்போது மனஸ்தாபம் என்று சொல்கிறார்கள். கலைஞர் கூட்டணிக்கட்சிகளிடம்கூட தேர்தல் நேரத்தில் உரச மாட்டார். ஆனால் ஸ்டாலின் உள்கட்சிக்குள் அவராகவே எதிர்ப்புகளை உருவாக்குவதன் விளைவு, தேர்தல் முடிவுகளில் தெரியும். ஈரோடு போன்ற தொகுதிகளில் வேட்பாளர் தேர்விலும் சொதப்பியிருப்பதாகத் தெரிகிறது. ஒட்டுமொத்தத்தில் அதிக சீட்களை வெல்லுவதைவிட, இந்தத் தேர்தலில் இரண்டாம் இடத்திற்கு வருவதே திமுகவின் பெரும் சாதனையாக இருக்கும்.

நெகடிவ் பாயிண்ட்ஸ்:
1. மின் வெட்டு : அம்மையாராவது இந்த பிரச்சினையை தீர்த்திருக்கலாம். அவரும் மகா தியானத்தில் ஆழ்ந்துவிட்டதால், இன்னும் மின்வெட்டுப் பிரச்சினைக்கு திமுக திட்டு வாங்க வேண்டியுள்ளது.
2. பிரதம வேட்பாளர் யார் என்று சொல்லாமல் ஓட்டுக்கேட்பது பெரும் பலவீனம்.
3. காங்கிரஸ் அரசின் விலைவாசி உயர்வு, தமிழர்களிடம் மாற்றாந்தாய் மனப்பான்மை போன்ற தவறுகளைக்கூட சொல்ல முடியாமல், கூட்டுக்களவாணியாக மாட்டிக்கொண்டது (மீத்தேன் திட்டம் ஒரு உதாரணம்)
4. வயோதிகத்தால் கலைஞரின் பிரச்சாரம் குறைந்து போனது
5. பல தொகுதிகளில் கடும் போட்டியைக் கொடுக்கும் பாஜக அணி
6. அழகிரி + உள்கட்சிப்பூசல்
7.கனிமொழி+ ராசா+ 2ஜி ஊழல்
8. மக்கள் இன்னும் முந்தைய திமுக (மாநில) அரசு மீதான கோபத்தில் இருந்து மீளாமல் இருப்பது.
பாசிடிவ் பாயிண்ட்ஸ்:
1. கலைஞர் 
2. தி கிரேட் மதச்சார்பின்மை
3. மோடிப் பூச்சாண்டி
4. முஸ்லிம் ஓட்டுகள் 
5. சில தொகுதிகளில் கிடைக்கப்போகும் காங்கிரஸ் ஓட்டுகள்
6. என்ன நடந்தாலும் கட்சியை விட்டுக்கொடுக்காத உண்மையான தொண்டர்கள்
7. அதிமுகவை விட்டால் வேறு வலுவான கட்சியின்றி தமிழன் இருக்கும் இழிநிலை


மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

17 comments:

  1. சூப்பர்யா. ஆனால் பாதிக்கும் மேற்பட்ட தொகுதிகளில் திமுக ஜெயித்து விடும் என்றே நினைக்கிறேன்.

    ReplyDelete
  2. சூப்பர்யா. ஆனால் பாதிக்கும் மேற்பட்ட தொகுதிகளில் திமுக ஜெயித்து விடும் என்றே நினைக்கிறேன்.

    ReplyDelete
  3. எந்த கட்சி வந்தாலும் மக்கள் பிரச்சினை தீரப்போவது இல்லை, திமுக ஈழம் விஷயத்தில் துரோகம் செய்திருப்பது வரலாற்றில் பதிக்கப்பட்டு விட்டது என்பதே சத்தியமான உண்மை !

    ReplyDelete
  4. @ரஹீம் கஸாலி ஒன்னும் கணிக்க முடியலை கஸாலி.

    ReplyDelete
  5. // MANO நாஞ்சில் மனோ said...
    எந்த கட்சி வந்தாலும் மக்கள் பிரச்சினை தீரப்போவது இல்லை, திமுக ஈழம் விஷயத்தில் துரோகம் செய்திருப்பது வரலாற்றில் பதிக்கப்பட்டு விட்டது என்பதே சத்தியமான உண்மை !//

    உண்மை.

    ReplyDelete
  6. நடுநிலையான அலசல். இது ஸ்டாலினுக்கு முக்கியமான தேர்தல் என்பது நூறு சதவீத உண்மைதான். இதற்கு நிறைய கோணங்கள் இருக்கிறது. ஸ்டாலினை சுற்றியிருக்கும் அவரது நலம் விரும்பிகள் மற்றும் ஆலோசனை சொல்பவர்கள் அனைவருமே சமகால பிரச்சனைகளையும் மக்களின் எண்ணங்களையும் தெளிவாக புரிந்துகொண்டவர்கள். குறிப்பாக இணையத்தில் என்ன விதமான விமர்சனங்கள் திமுகவுக்கு எதிராக வருகிறது என்பதை உன்னிப்பாக கவனிக்கிறார். தேர்தலின் வெற்றிக்கு இணையமும் முக்கியப் பங்கை வகிக்கிறது என்பதை உணர்ந்துதான் சமீபத்தில் முகநூளில் இயங்கும் திமுக ஆதரவாளர்களை சந்தித்து வாழ்த்தும் தெரிவித்தார்.

    அதேவேளையில் , இணையத்தில் திமுகவிற்கு எதிரான விமர்சனங்களை அவர் உணராமல் இல்லை. ஆனால் அதற்குத் தகுந்தாற்போல் கட்சி முடிவுகளில் நேரடியாக தலையிட நிறைய தடைகள் முன்பு அவருக்கு இருந்தது. FDA வுக்கு ஆதரவாக செயல்பட கனிமொழியும் அழகிரியும் கடுமையான அழுத்தம் கலைஞருக்கு கொடுத்தபோது அதை எதிர்த்தவர் ஸ்டாலின். கடைசியில் கனிமொழியின் கையே ஓங்கியது.

    காங்கிரசை விட்டு திமுக வெளியேற வேண்டும் என்பதில் அனைத்து திமுக உடன்பிறப்புகளும் உறுதியாக இருந்ததை உணர்ந்துதான் தன் அண்ணனையே பகைத்துக் கொண்டு காங்கிரசுக்கான ஆதரவை விலக்க வைத்தார் ஸ்டாலின். கட்சியை உயிர்ப்புடன் வைக்கவேண்டுமானால் தெளிவான கொள்கை முடிவுவேண்டும் . அதற்கு கட்சி ஒருவரின் கட்டுப்பாட்டில் இருக்கவேண்டும் என்பதை உணர்ந்துதான் கட்சியை தன் வயப்படுத்தியிருக்கிறார் ஸ்டாலின் என நினைக்கிறேன்.

    அழகிரி நீக்கம் பற்றியோ அல்லது காங்கிரஸ் உறவுக்கு அடிகோலும் மற்ற தலைவர்களை ஸ்டாலின் மதிக்காதது பற்றியே(கலைஞராக இருந்தாலும் !) திமுக தொண்டர்கள் மத்தியில் எந்த சலனமும் இல்லை என்பதுதான் என்பார்வை. வெற்றியோ தோல்வியோ இந்த தேர்தலில் திமுகவின் வாக்கு வங்கி சிதறாமல் அந்தக்கட்சிக்கு விழும் என்பதில் சந்தேகமில்லை.

    ReplyDelete
  7. This comment has been removed by the author.

    ReplyDelete
  8. முழுமையான அலசல்...
    2009ஐ பொறுத்தவரை அப்பொழுது திமுக, அதிமுக இரண்டில் எந்த கட்சி மாநிலத்தில் அதிகாரத்தில் இருந்திருந்தாலும் விளைவு ஒன்றே!
    அப்பொழுது திமுக ஆட்சியில் இருந்த காரணத்தினால் வரலாற்றில் பதிக்கப்பட்ட கெட்ட பெயரை அவர்கள் பெற்று கொண்டார்கள்!

    ReplyDelete
  9. இதில் பாசிடிவ் பாயிட்ஸ் முஸ்லிம் ஓட்டுகள் மட்டுமல்ல. சிறுபான்மையினர் + தலித் ஓட்டுகள். இந்தத் தேர்தலில் திமுக மொத்தமாக அறுவடை செய்ய வாய்ப்பிருக்கிறது. திருமாவின் கூட்டால் வழக்கமான வன்னியர் ஓட்டுகள் விழாமல் போவதற்கும் வாய்ப்பிருக்கிறது.

    ReplyDelete
  10. சமீபத்தில் அனைத்திந்திய லட்சிய திமுகவின் அகில உலகத் தலைவர் T.ராஜேந்தரின் பேட்டியை காண நேர்ந்தது. கலைஞர் கூப்பிட்டு கட்சியில் பதவி தருகிறேன் என்று சொல்லி தராமல் விட்டுவிட்டதால் திமுகவுக்கு ஆதரவு இல்லையென தீர்க்கமாக சொல்லியிருந்தார். இது திமுகவுக்கு மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தும் என்பதில் அணுவளவும் சந்தேகமில்லை. பல தொகுதிகளில் இதனால் திமுகவுக்கு டெபாசிட் கிடைக்க வாய்ப்பில்லாமல் போகலாம். இதை நீங்கள் நெகடிவ் பாய்ண்டில் சேர்க்காததற்கு கடுமையான் கண்டனங்கள்.:-)

    ReplyDelete
  11. //Manimaran said... வெற்றியோ தோல்வியோ இந்த தேர்தலில் திமுகவின் வாக்கு வங்கி சிதறாமல் அந்தக்கட்சிக்கு விழும் என்பதில் சந்தேகமில்லை.//

    பதிவிலேயே சொன்னபடி, ஸ்டாலினை திமுகவினர் மனதார ஏற்றுக்கொண்டுவிட்டார்கள். அழகிரியால் பாதிப்பு, வெளிஓட்டுக்கள் மீது தான்.

    ReplyDelete
  12. //Manimaran said...
    இதை நீங்கள் நெகடிவ் பாய்ண்டில் சேர்க்காததற்கு கடுமையான் கண்டனங்கள்.:-)//
    ஆமாம், தவறு தான். மேலும் லதிமுக கலைக்கப்படவில்லை எனும் நல்ல செய்தியையும் தலைவர் டி.ஆர்.சொல்லி இருந்தார். நன்றி தலைவா என்று கைகூப்பி அழுதேன்.

    ReplyDelete
  13. // மொ.ராசு (Real Santhanam Fanz ) said...
    முழுமையான அலசல்...
    2009ஐ பொறுத்தவரை அப்பொழுது திமுக, அதிமுக இரண்டில் எந்த கட்சி மாநிலத்தில் அதிகாரத்தில் இருந்திருந்தாலும் விளைவு ஒன்றே!
    அப்பொழுது திமுக ஆட்சியில் இருந்த காரணத்தினால் வரலாற்றில் பதிக்கப்பட்ட கெட்ட பெயரை அவர்கள் பெற்று கொண்டார்கள்!//

    உண்மை தான் மொக்கை..என்னைக்கும் போடாத சீதேவி தானம் போடலை, எப்பவும் போடற மூதேவிக்கு என்ன கொள்ளை?-ங்கிற கதைதான். திமுகவால் எதையும் நிறுத்தியிருக்க முடியாது. ஆனால் எம்.பிக்கள் பதவி விலகல் மூலமாக இந்த அவப்பெயரைத் தவிர்த்திருக்கலாம். அந்த நேரத்தில் 2ஜி முக்கியமாகப் போய்விட்டது என்பதே குற்றச்சாட்டு.

    ஜெ. அப்போது முதல்வராக இருந்திருந்தால், கலைஞரைவிட மோசமாகவே நடந்திருப்பார் என்பதும் உண்மை. நேரம் அவர் பக்கம், தப்பித்துவிட்டார்.

    ReplyDelete
  14. சிறப்பான அலசல்.///திமுக தொண்டர்கள் ஸ்டாலினின் தலைமையை ஏற்க முடிவுசெய்துவிட்டார்கள் என்பதே நிதர்சனம்.///வேறு தேர்வின்றி...........அப்படித் தானே?///"அழகு"ப் புள்ள 'ரௌடி' ங்கிறதால ன்னும் சொல்லலாம்!

    ReplyDelete
  15. மின் வெட்டு : அம்மையாராவது இந்த பிரச்சினையை தீர்த்திருக்கலாம். அவரும் மகா தியானத்தில் ஆழ்ந்துவிட்டதால், இன்னும் மின்வெட்டுப் பிரச்சினைக்கு திமுக திட்டு வாங்க வேண்டியுள்ளது.///:ஓஹோ........

    ReplyDelete
  16. திருடர் முன்னேற்றக் கழகத்துக்கு,ஒரு பன்னிரண்டு தொகுதிகள் கிட்டலாம்.

    ReplyDelete
  17. நல்லதொரு அலசல்! முன்பை விட இப்போது ஸ்டாலினிடம் கொஞ்சம் பக்குவம் தென்படுகிறது! பதினைந்து சீட்டாவது பிடிக்கும் என்றே நினைக்கிறேன்! நன்றி!

    ReplyDelete

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.