Friday, December 12, 2014

செங்கோவியின் திரைவிமர்சனம் : லிங்கா (2014)

அதாகப்பட்டது:
எந்திரன் வெளியானது அக்டோபர் 2010. முழுதாக நான்கு வருடங்களுக்கும் மேல் ஆன பிறகு, சூப்பர் ஸ்டாரின் நடிப்பில் வெளிவரும் படம் 'லிங்கா'. சூப்பர் ஸ்டார் படத்திற்கு அறிமுகம் தேவையா என்ன?..நேரே களத்தில் இறங்குவோம்.

ஒரு ஊர்ல...:
தாத்தா ராஜா லிங்கேஸ்வரன் கஷ்டப்பட்டுக் கட்டிய அணைக்கு, பேரன் லிங்கா காலத்தில் ஆபத்து வருகிறது. அணையையும் போனஸாக அனுஷ்காவையும் லிங்கா காப்பாற்றுவதே கதை.

உரிச்சா...:
நோய்வாய்ப்பட்டு, இனிமே நடிக்கவே மாட்டாரோன்னு நாம எல்லாம் கவலைப்பட்டதற்குப் பதிலாக, அதே ஸ்பீடுடன், அதே ஸ்டைலுடன் ‘நண்பா..நண்பா’ பாடலில் அறிமுகமாகிறார் சூப்பர் ஸ்டார்.

ரஜினியை பணக்காரன், சைண்டிஸ்ட் என்று பார்ப்பதைவிட, லோக்கல் ஆளாகப் பார்ப்பது தான் நமக்கு அதிகம் பிடிக்கும். இதில் லோக்கல் திருடனாக, சிவாஜிக்கு முந்தைய ரஜினியாக வருகிறார். கூடவே கூட்டணிக்கு சந்தானமும், கருணாகரனும்.

முதல்பாதி செம ஜாலி. சந்தானம் வழக்கம்போல் ஒன்லைன்களில் சிக்ஸர் விளாச, ரஜினியும் வழக்கம்போல் காமெடியில் கலக்குகிறார். மரகத நெக்லஸைத் திருடும் சீனில் ஆக்சனைவிட காமெடிக்கே முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார்கள். 

சோலையூர் அணையை செக் செய்த எஞ்சினியர் கொல்லப்படுகிறார். அவர் சாகும்போது, கோவிலைத் திறந்தால்தான் ஊரையையும் அணையையும் காப்பாற்ற முடியும் என்று சொல்லிவிட்டுச் சாகிறார். கோவிலை ராஜா அல்லது அவரின் வாரிசான லிங்கா தான் திறக்க வேண்டும். ராஜா அணையையும் சோனாக்‌ஷியையும் கட்டியே ஓட்டாண்டி ஆன கோபத்தில் இருக்கும் லிங்கா ரஜினி, வரமறுக்கிறார். அவரை விடாமல் விரட்டி, ஊருக்கு அழைத்து வரும் வேலை அனுஷ்காவிற்கு!

அனுஷ்கா-ரஜினி ரொமான்ஸிலும் ரஜினி ஸ்டைல் காமெடி தான். தாத்தா ரஜினி பற்றிய கிளைமாக்ஸ் ஆரம்பிக்கும்வரை, படம் செம ஸ்பீடு, செம மசாலா.

ஃப்ளாஷ்பேக்கில் ‘ராஜா லிங்கேஸ்வரன்’ ரஜினி சாதாரணமாக, நமது Joseph Campbell எழுதிய The Hero with a Thousand Faces புத்தகத்தைப் படித்தபடியே அறிமுகம் ஆகிறார். ரஜினி படங்களில் குறியீடு இருக்காது. ஆனால் இதில் அதிசயமாக அந்த ரஜினி கேரக்டர் எப்படி என்று இந்த புத்தகத்தின் மூலமே சொல்லிவிடுகிறார்கள். உடனே அடுத்து வரும் ஃபைட், ரஜினி ரசிகர்களுக்குச் செம விருந்து. ட்ரெய்னிங் மேல் ஓடியபடியே பறந்து, பறந்து பட்டையைக் கிளப்புகிறார். கிராஃபிக்ஸ் அதிகம் என்றாலும் ரசிக்க முடிகிறது.

பிறகு தான் ஆரம்பிக்கிறது பிரச்சினை. ரஜினிக்கு அல்ல, நமக்கு. அவர் சோலையூர் வருவதும், மக்கள் வறட்சியில் வாடுவதும், அவர் அணை கட்ட முயற்சிப்பதுமாக நகரும் காட்சிகளில் சுவாரஸ்யம் அதிகம் இல்லை. வெள்ளைக்கார வில்லன் அணைகட்டுவதைத் தடுக்க முயற்சிப்பதும், அதைமீறி ரஜினி அணைகட்டி ஜெயிப்பதையும் விலாவரியாகக் காட்டுகிறார்கள்.

படத்தின் துவக்கித்திலேயே அணை கட்டிவிட்டார் என்று ஆடியன்ஸுக்குச் சொன்னபிறகு, ஃப்ளாஷ்பேக்கில் அவர் அணைகட்டப் போராடுவது நம்மிடம் எந்த ஒரு எஃபக்ட்டையும் உண்டாக்கவில்லை. அணைகட்டி முடிக்கும்வரை ஒரு இருபது நிமிடம், நாமும் அந்த கஷ்டத்தில் பங்கேற்கிறோம். இதெல்லாம் ரஜினிக்கு சப்பை மேட்டர், வெற்றிக்கொடிகட்டு என்று ஒரே பாட்டில் அணையைக் கட்டி முடித்திருக்கலாம்.!

ஆனால் அணை கட்டிமுடித்ததும் வரும் செண்டிமெண்ட் பகுதி அட்டகாசம். வழக்கமான முத்து எஃபக்ட் என்றாலும், ராஜாவின் தியாகம் நம்மையும் நெகிழ வைத்துவிடுகிறது. ஃப்ளாஷ்பேக் முடியும்போது, மிச்சம் இருப்பது அரைமணி நேரம். வில்லன்கள் வேகமெடுக்க, லிங்கா களத்தில் இறங்க, படமும் விறுவிறுப்பாக முடிகிறது.


பொதுவாகப் படங்களில் ஃப்ளாஷ்பேக் இரண்டுவகை தான். ஒன்று பாட்ஷா டைப் தீப்பொறி பறக்கும் ஃப்ளாஷ்பேக். இரண்டாவது, முத்து டைப் ‘வள்ளல்-தியாகி’ ஃப்ளாஷ்பேக். பாட்ஷா டைப் ஃப்ளாஷ்பேக்கை எவ்வளவு வைத்தாலும் போரடிக்காது, ஆனால் முத்து டைப் ஃப்ளாஷ்பேக்கை முத்து மாதிரியே சுருக்கமாக வைப்பது நல்லது. இதில் நீட்டி முழக்கி, ஒருமணி நேரத்திற்கு இழுத்தது தான் சறுக்கல்.

ஆனாலும் இடைவேளைக்கு முந்தைய மற்றும் பிந்தைய பத்து நிமிடங்களை ஒதுக்கிவிட்டுப் பார்த்தால், செம டைம்பாஸ் மூவி

சூப்பர் ஸ்டார்:

எமனுக்கு ஹாய் சொல்லித் திரும்பியபின் ரஜினி நடித்திருக்கும் படம். எனவே படம் எப்படி என்பதை விட, தலைவர் எப்படி இருக்கிறார் என்பதில் தான் நமக்கு முதலில் ஆர்வம். எந்த மாற்றமும் இல்லாமல், அதே ரகளையான ரஜினியாக களமிறங்கியிருக்கிறார். ஏறக்குறைய 25 ஆண்டுகளுக்கு முன் பாட்ஷாவில் என்ன வைப்ரேசனை உண்டாக்கினாரோ, அதையே 25 ஆண்டுகளுக்குப் பின்பும் உண்டாக்க முடிகிறதென்றால்...அதனால் தான் அவர் சூப்பர் ஸ்டார்.

திரையில் அவர் காட்டும் எனர்ஜியைப் பார்க்கும்போது, இன்னும் பத்து வருடங்கள் ஆனாலும் அவரை அடுத்த தலைமுறையால் நெருங்க முடியாது என்றே தெரிகிறது. தன் ரசிகர்களுக்கு என்ன பிடிக்கும் என்று தெரிந்து, விருந்து வைப்பதில் வல்லவர் அவர். உலக சினிமா ஆர்வலர்கள் புழுங்கிச் செத்தாலும் கவலையில்லை என்று, ரஜினி மார்க் மசாலாவுடன் இறங்கி அடித்திருக்கிறார்.

ஒருவிதத்தில் ரஜினியும் ரஜினி படங்களும் ஒன்று தான். அங்கே என்ன ஸ்பெஷலாக இருக்குன்னு புரியாது, ஆனாலும் பிடிக்கும். இந்தப் படமும் அதே வகை தான்!

அனுஷ்கா:
இப்போது இருக்கும் நடிகைகளில் அழகும், நடிப்புத்திறமையும் கூடவே கொஞ்சம் முதிர்ச்சியும் உள்ள நடிகை. எனவே ரஜினிக்குப் பொருத்தமான ஜோடியாக செட் ஆகிறார். டிவி நிருபர் என்று சொல்கிறார்கள். ஆனாலும் ஃபுல் டைம் டூட்டி, லிங்காவுடன் தான். 


சோனாக்ஷி சின்ஹா:
 நீண்ட நெற்றியழகி..நடிப்பதற்கு கொஞ்சம் ஸ்கோப் உள்ள கேரக்டர். ஃப்ளாஷ்பேக்கில் கிராமத்துப் பெண்ணாக, ராஜா மேல் ஆசை கொள்ளும் பெண்ணாக வருகிறார் துடுக்குத்தனமான நடிப்பு. தைரியமாக ஜாக்கெட் இல்லாமல் நடித்திருக்கிறார். (ஆனால் சேலை அணிந்திருக்கிறார். - உபரித் தகவல்!!!)

சந்தானம் & கருணாகரன்:
எந்திரனுக்குப் பிறகு இதிலும் சந்தானம். ஆனால் எந்திரனைவிட இதில் காமெடி அதிகம். ’நண்பேண்டா’ என்று சொல்ல வந்து, ரஜினியைப் பார்த்து யோசித்து ‘நண்பேன்’ என்று நிறுத்துவதும், ரஜினி ‘டா’ என்று சொல்லிமுடிப்பதுமாக அறிமுகமே அமர்க்களம். இருவருக்குமான ஃப்ரீக்வென்ஸி அதிலேயே செட் ஆகிவிடுகிறது.

சமீபத்தில் நல்ல காமெடி நடிகராக உருவாகிவரும் கருணாகரன், இதிலும் இருக்கிறார். ரஜினி, சந்தானம் என இரண்டு காமெடி ஜாம்பவான்களுக்குப் பின், இவரும் சிரிக்க வைக்கிறார்.


கே.எஸ்.ரவிகுமார்:
 இந்தப் படத்தின் இரண்டாவது ஹீரோ. (பயப்படாதீங்க, அவர் நடிக்கலை. கிளைமாக்ஸில் தான் வருகிறார்!) இவ்வளவு பிரம்மாண்டப் படத்தை, ஆயிரக்கணக்கான நடிகர்கள் பங்கேற்கும் காட்சிகள் நிரம்பிய ஒரு படத்தை ஆறுமாதத்தில் எடுப்பது சாதாரண விஷயம் அல்ல. குவாலிட்டியிலும் காம்ப்ரமைஸ் செய்துகொள்ளாமல், ரஜினியையும் கஷ்டப்படுத்தாமல், இப்படி ஒரு படத்தைக் கொடுப்பதற்கு அதீத திறமை வேண்டும். அவரது பெரும்பாலான படங்களில்பொழுதுபோக்கிற்கு உத்தரவாதம் இருக்கும். இதிலும் அப்படியே. 
நெகடிவ் பாயிண்ட்ஸ்:
 - அதீத எதிர்பார்ப்பு. ரஜினி படத்திற்கு வில்லனே, நாம் அதிகமாக எதிர்பார்ப்பது தான். ரஜினி படம் பார்க்கப் போகவேண்டுமென்றால், அறிவுஜீவி மூளையையும் அதிக எதிர்பார்ப்பையும் கழற்றி வைத்துவிட்டுத் தான் செல்ல வேண்டும்.

- நீளமான ஃப்ளாஷ்பேக். அதை ஃப்ளாஷ்பேக்காக சொல்வதை விட, அது தான் முக்கியக் கதை போன்று சொல்லியிருக்கிறார்கள். ஆனால் மற்ற காட்சிகளை விட ஃப்ளாஷ்பேக் வேகமாக இருந்திருக்க வேண்டும். 20-30 நிமிடங்கள் மொக்கை போடுகிறார்கள்.

- ஃபைட் சீன்களில் ஓவர் கிராபிக்ஸ் காட்சிகள், குறிப்பாக கிளைமாக்ஸில். எந்திரனிலும் இதே பிரச்சினை தான். அனிமேசன் படமோ என்று டவுட் வந்துவிடுகிறது.

- வலுவான வில்லனோ, வில்லனுடன் ரஜினி ஆக்ரோசமாகச் சவால்விடும் காட்சிகளோ இல்லாதது ஏமாற்றமே. அந்த பிரிட்டிஷ் வில்லன் ரசிக்க வைத்தாலும், டெரராக இல்லை. ஜெகபதி பாபுவும் வேஸ்ட்.

- மக்கள் எதிர்பார்க்காங்க, நீங்க வரணும் என்பது போன்ற கி.மு. காலத்து அரசியல் கிளுகிளுப்பு வசனங்கள். இங்கே யாரும் எதிர்பார்க்கலை சாமிகளா, புரிஞ்சிக்கோங்க!

பாசிடிவ் பாயிண்ட்ஸ்:

- சூப்பர் ஸ்டார், சூப்பர் ஸ்டார், சூப்பர் ஸ்டார்
- பொன்.குமரனின் வலுவான கதை
 - ரஜினி+ரவிகுமார் காம்பினேசனுக்காகவே ஏ.ஆர்.ரஹ்மான் எப்போதும் கொடுக்கும் ஸ்பெஷல் மசாலா டைப் பாடல்கள். ஓ நண்பா, மோனா, சின்னச் சின்ன....என எல்லாமே கலக்கல்.
 - ரத்னவேலுவின் கேமிரா. அதிலும் அந்த அணை காட்சிகள் கொள்ளை அழகு. வயதான ரஜினியை ரசிக்க வைப்பதில் ரத்னவேலுவின் கேமிராவிற்குப் பங்கு அதிகம். (ஆனால் கூட்டத்தைக் காட்டிக்கொண்டே கேமிரா நகரும்போது ப்ளர் அடிப்பது ஏனோ?)
- ரஜினி படங்களுக்கே உரிய அனைத்து மசாலாக்களும் ஆஜர் ஆகியிருப்பது.
- அந்த ட்ரெய்ன் ஃபைட்டும் கிளைமாக்ஸ் ஃபைட்டும்
- ஷூட்டிங் நடந்த நாட்கள் மிகவும் குறைவு. எனவே இருக்கிற ஷாட்டை வைத்து, பல இடங்களில் திருப்பித்திருப்பிப் போட்டு ஒப்பேற்றியிருக்கிறார்கள். ’வாங்கப்பா’ என்று சோனாக்‌ஷி சொல்லும் ஷாட், மீண்டும் பாடலில் வரும் அளவிற்கு ஃபுட்டேஜ் பற்றாக்குறை. சமாளித்த எடிட்டர் சம்ஜித் வாழ்க.
பார்க்கலாமா?
பக்கா ரஜினி மூவி...பார்க்கலாம்.

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

16 comments:

  1. நல்லது உங்க விமர்சனத்துக்காக மூணு மணியில் இருந்து வெயிட்டிங்

    ReplyDelete
    Replies
    1. உங்க அன்புக்கும் நம்பிக்கைக்கும் நன்றி.

      Delete
  2. நன்றி செங்கோவி ஓ நண்பா நண்பா

    ReplyDelete
    Replies
    1. ஓ நண்பா....ஹே நண்பா..எஸ்.பி.பி வாய்ஸ் செம!

      Delete
  3. கலக்கல் நண்பா

    ReplyDelete
  4. ///பார்க்கலாமா?
    பக்கா ரஜினி மூவி...பார்க்கலாம்.////
    அப்ப 2 டிக்கெட் எடுத்து அனுப்பி வைங்க

    ReplyDelete
  5. ஆனால் சேலை அணிந்திருக்கிறார். - உபரித் தகவல்!!!
    படிச்சவுடனே வெடிச்சிரிப்பு...

    பாட்சா எப்போங்க 25 வருசம் ஆச்சு? 95ல வந்தது இல்ல?

    அருமையான விமர்சனம்!! நன்றி!!

    ReplyDelete
  6. தங்களின் விமர்சனத்துக்காகத்தான் வெயிட்டிங்ணா ! காலைக்காட்சி புக் செஞ்சாச்சு ! தைரியமா போய் பார்த்துடவேண்டியதுதான் .

    // தைரியமாக ஜாக்கெட் இல்லாமல் நடித்திருக்கிறார். (ஆனால் சேலை அணிந்திருக்கிறார். - உபரித் தகவல்!!!) // ஹா ஹா ஹா !!!

    ReplyDelete
  7. அருமையான விமர்சனம் படம் பாத்தாச்சு நவ் விமர்சனம் எழுதுகிறேன்

    ReplyDelete
  8. ஜூனியர் எப்பவுமே சூபர் ஃபாஸ்ட்தான்

    ReplyDelete
  9. நன்றிங்கோ..பகிர்ந்துள்ளேன்...

    ReplyDelete
  10. தையில் பார்ப்போம் நேரம் ஒதுக்கி!

    ReplyDelete
  11. விமர்சனம்(நையாண்டியுடன்) நன்று.(நாளை)படம் பார்த்து விட்டு..........

    ReplyDelete
    Replies
    1. பாத்துட்டேன்!எனக்குப் புடிச்சிருந்தது.தொய்வில்லாமல் ஆயிரக்கணக்கான 'உபரிகளை' க் கட்டியாள்வது சிரமமே!ரவிக்குமார் ஜெயித்திருக்கிறார்.பாடல்கள் சூப்பர்.///படத்தை,நிறைவு செய்த விதம் அருமை!

      Delete

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.