Tuesday, August 5, 2014

German Expressionism - ம் ஹிட்ச்காக்கும்

ழைய படங்களைப் பார்க்கும்போதெல்லாம் பேசியே கொல்றாங்களே என்று நமக்குத் தோன்றும். அப்போது நடந்துவந்த நாடகங்களை அப்படியே கேமிராவில் பதிவு செய்து, சினிமா என்று ஏமாற்றி ரிலீஸ் செய்திருக்கிறார்கள் என்று கோபமும் சிலருக்கு வருவதைக் காண்கிறோம். இது தமிழ் சினிமாவில் மட்டுமல்ல, உலகம் முழுக்கவே நடந்துவந்த விஷயம் தான். 

பேசும்படம் வந்தவுடன், நாடக சினிமாக்களே அதிகம் உருவாக்கப்பட்டன. வசனங்கள் மூலம் கதை சொல்வதே, அப்போதைய படைப்பாளிகளுக்குத் தெரிந்த எளிய வழி. இதைத் தான் ஹிட்ச்காக் ‘மௌனப்படக் காலத்தில் காட்சிகளின் வழியே கதை சொல்லும் கட்டாயம் இருந்தது. பேசும் சினிமா வந்து, சினிமாவைக் கெடுத்துவிட்டது.’ என்று சொன்னார்.
அந்த நாள் படத்தில் சிவாஜி
மாற்றம் என்பது ஒரே நாளில் நிகழ்வதில்லை. சினிமாவும் கொஞ்சம் கொஞ்சமாக மாறியது, மாறிக்கொண்டே இருக்கிறது. ஹிட்ச்காக் போன்ற ‘உண்மையான’ படைப்பாளிகள் (Auteur) , சினிமாக் கலையை வளர்த்தெடுத்தார்கள். அவ்வப்போது தோன்றிய கலை இயக்கங்கள், அவர்களுக்கு உதவின. அவற்றில் ஒன்று, German Expressionism. 

1905ஆம் ஆண்டு, ஓவியங்களில் பெரும் மாற்றத்தை நிழத்தியது German Expressionism. ’இருப்பதை அப்படியே வரைய வேண்டிய அவசியம் இல்லை. ஓவியம் சொல்ல விரும்பும் விஷயங்களை கலர் மூலமும் வித்தியாசமான வரையும் முறை மூலமும் (மாடர்ன் ஆர்ட் போன்று) சொல்ல வேண்டும்’ எனும் கருத்து ஜெர்மனியில் அப்போது உருவானது. பார்வையாளர்களின் உணர்ச்சிகளுடன், கலர், லைட்டிங், செட்டிங்/சூழ்நிலை மூலம் உரையாடுவதே இதன் அடிப்படை நோக்கம்.

The Bodygaurd(1924) படத்தில் ஆர்ட் டைரக்டராக பணிபுரிய ஜெர்மன் சென்ற ஹிட்ச்காக், German Expressionism-ஆல் ஈர்க்கப்பட்டார். வசனங்கள் மூலம் நாடகம் போன்று படம் எடுப்பதை வெறுத்த அவருக்கு, ஆர்ட்-ஒளிப்பதிவு-எடிட்டிங் மூலம் கதை சொல்ல German Expressionism உதவும் என்பது அங்கே புரிந்தது. அதையே Truffaut-க்கு 1967-ல் கொடுத்த பேட்டியில் இப்படிச் சொன்னார் :

I don’t care about the subject matter; I don’t care about the acting; but I do care about the pieces of film and the photography and the soundtrack and all of the technical ingredients that made the audience scream. I feel it’s tremendously satisfying for us to be able to use the cinematic art to achieve something of a mass emotion.
The Bodygaurd..ஹிட்ச்காக் போட்ட செட்.
முதலாம் உலகப்போரில் ஜெர்மனி தோல்வியடைந்த பின்னர், மக்கள் வாழ்க்கையின் மீதே நம்பிக்கை இழந்திருந்தார்கள். பெரும் மனக்கொந்தளிப்பான சூழ்நிலையே நிலவியது. அப்போது தான் ’கேரக்டர்களின் எண்ண ஓட்டத்தை வசனங்களின் மூலம் அல்லாமல் German Expressionism மூலம் சொல்லும் உத்தியை படைப்பாளிகள் கையில் எடுத்தார்கள். 1920ஆம் ஆண்டு Robert Wiene எனும் ஜெர்மானிய இயக்குநரின் இயக்கத்தில் வெளியான The Cabinet of Dr. Caligari எனும் மௌனப்படம், சினிமா கதை சொல்லும் உத்தியை புரட்டிப்போட்டது. செட்டிங், லைட்டிங் மூலம் வித்தியாசமான சூழலையும் நிழல் உருவங்களையும் உருவாக்குவதன் மூலம், ஒரு கேரக்டரின் எண்ண ஓட்டத்தை பார்வையாளனுக்கு புரிய வைக்க முடியும் என்று நிரூபித்தது அந்தப் படம்.

அது கருப்பு வெள்ளைக் காலம் என்பதால், நிழல்களுக்கும் வெளிச்சத்துக்குமான் முரண்பாட்டைப் பயன்படுத்தியே விஷுவலாக கதை சொல்லவேண்டியிருந்தது. அதில் Murnau  இயக்கிய Nosferatu (1922 ) படம், உச்சத்தைத் தொட்டது. தொடர்ந்து வந்த இரண்டாம் உலகப்போர், இந்த இயக்கத்தை ஒரு முடிவுக்குக் கொண்டுவந்தாலும், விஷுவலாக கதை சொல்ல விரும்புவோருக்கான இலக்கணமாக German Expressionism நிலைத்தது. 
Nosferatu
German Expressionism-ன் கூறுகளாக இவற்றைச் சொல்லலாம்:
  • படத்தின் தீம் ஆனது சைக்காலஜி, ஹாரர், கொலை, செக்ஸ் போன்ற டார்க் சப்ஜெக்ட்டாக இருக்க வேண்டும். 
  • முக்கிய கேரக்டர்களின் மனக்கொந்தளிப்பையும் உள்மனவோட்டத்தையும் காட்சியமைப்பின் மூலம் சொல்வதே முக்கியக் குறிக்கோள்.
  • ஹீரோ சைக்கோவாக, ஆண்டி-ஹீரோவாக, விரக்திக்கு ஆளாகும் நபராக இருப்பது நலம்!
  • ரியாலிட்டியில் இருந்து முடிந்தவரை விலகியதாக சூழலும் காட்சிகளும் இருக்க வேண்டும். எனவே பெரும்பாலும் கிராமங்களைத் தவிர்க்க வேண்டும். சிட்டியிலேயே கதை நடக்கும்.
  • நடிகர்களின் மேக்கப், உடை, நடக்கும்விதம், நடிக்கும் விதம் எல்லாமே ரியாலிட்டியில் இருந்து விலகி இருக்க வேண்டும். எனவே ஓவர் ஆக்ட்டிங் இதில் சகஜம்.
  • நடிகர்களின் நடிப்பை நம்பாமல், காட்சியமைப்புகள் (Composition - mise-en-scene) மூலமே கதை சொல்ல வேண்டும்.
  • லைட்டிங்கில் விளையாட, பெரும்பாலும் இருட்டில் நகரும் காட்சிகள்
  • பொதுவாக நடிகர்களை 1/3 விதியின் கீழ், ஸ்க்ரீனில் வலதுபுறமோ இடதுபுறமோ வரும்படி தான் காட்சிகளை அமைப்பார்கள். ஸ்க்ரீனின் செண்டரில் கேரக்டரை வைத்து, செட்டிங்கை Symmetric ஆக அமைத்தால், ஆடியன்ஸை அது உளவியல்ரீதியில் தொந்தரவு செய்யும். எனவே அதை இங்கே கட்டாயம் கடைப்பிடிப்பார்கள். (பின்னாளில் Stanely Kupric இதை அதிகம் உபயோகித்தார்.)
  • படத்தின் முடிவு, சந்தோசமானதாக இருக்கக்கூடாது. ஏமாற்றத்தையும் அதிர்ச்சியையும் தருவதாக இருக்க வேண்டும்.
  • ஒட்டுமொத்த படத்தின் நகர்வும்(திரைக்கதை), ஆடியன்ஸை தொந்தரவு செய்வதாகவே இருக்க வேண்டும். மறந்தும் குஷிப்படுத்திவிடக்கூடாது.
  • ஒரு காட்சியை நிறுத்திவிட்டுப் பார்த்தால், ஒரு ஓவியத்தைப் பார்ப்பது போன்ற லுக் இருக்க வேண்டும்.
  • ஒரு மாய உலகில் மாய மனிதர்களுக்கு நடக்கும் மாயமான நிகழ்வுகள் எனும் தோற்றத்தைப் படம் தர வேண்டும்
தமிழில் German Expressionism கூறுகளைக் கொண்ட படங்களாக சட்டென்று நினைவுக்கு வருவது நடிகர் திலகம் நடிப்பில் உருவான அந்த நாள்(1954) படமும், புதிய பறவை(1964)யும். குறிப்பாக, புதியபறவையில் வரும் ‘எங்கே நிம்மதி’ பாடலில் German Expressionism-ன் தாக்கம் அதிகம். சரோஜாதேவிக்கும் சௌகார்ஜானகிக்கும் கொடுத்திருக்கும் வெவ்வேறு வகையான லைட்டிங், அது கொடுக்கும் மூட் மற்றும் நிழல் உருவங்கள், சிவாஜியின் நகங்கள் தரும் எஃபக்ட் என அசத்தியிருப்பார்கள் அந்தப் பாடலில். அந்த வீடியோ இங்கே: 


(சிவாஜியைப் பற்றியும் அவர் படங்கள் பற்றியும் எவ்வித அடிப்படை அறிவும் இல்லாமல் ’Torrent சவலைப் பிள்ளைகள்’ விமர்சிக்கும்போது, சினிமா தெரிந்தவர்கள் ஏன் கடுப்பாகிறார்கள் என்று இப்போது உங்களுக்குப் புரியும் என்று நம்புகிறேன்!!!)

பின்னாளில் உருவான Film Noir ஜெனருக்கு அடிப்படை, German Expressionism தான். ஓவர் ஆக்டிங், Symmetric shots போன்ற சில விஷயங்களைத் தவிர்த்துவிட்டு, ஆடியன்ஸை உளவியல்ரீதியில் தொந்தரவு செய்யாத, ஆனால் வாழ்வின் அபத்தத்தையும் இருண்ட பக்கங்களையும் பேசும் ஜெனராக Film Noir உருவானது. 1930களில் ஹாலிவுட்டுக்கு பெருமளவிலான ஐரோப்பிய சினிமா மேதைகள் முடிபெயர்ந்தார்கள். Film Noir-ஐ ஹாலிவுட்டில் அவர்களே வடிவமைத்தார்கள். அதில் ஒருவர், நம் ஹிட்ச்காக். 

ஹிட்ச்காக் அதை தனது முதல் ஹிட்ச்காக் ஸ்டைல் படமான The Lodger(1927)லேயே உபயோகிக்க ஆரம்பித்தார். படத்தின் முதல் காட்சியே, குளோசப்பில் ஒரு ப்ளாண்ட் பெண் அலறுவதாக எடுத்தார். ஒரு கண்ணாடி மேல் அந்தப் பெண்ணை குப்புறப்படுக்க வைத்து, கீழே இருந்து லைட்டிங்கை அவர் முகத்தில் அடித்து, முடியை ஸ்க்ரீன் முழுக்க பரவும்படி பரப்பி வைத்து, ஒரு ஷாட்டுக்கு ஹிட்ச்காக் செய்த அக்கப்போரைப் பார்த்து, அப்போதே எல்லாரும் மிரண்டார்கள். அந்த பெண்ணை நிற்க வைத்து, வீல் என்று அலற விட்டால் போதாதா என்று புலம்பினார்கள்.
இது என்ன வகையான உணர்ச்சியை எழுப்பும் எனும் தெளிவு ஹிட்ச்காக்கிற்கு இருந்தது. திரைக்கதையில் ‘ஒரு பெண் அலறுகிறாள்’ என்று மட்டுமே இருக்கும். அதை எப்படி காட்சிப்படுத்துவது என்பதில் தான், இயக்குநரின் தனித்தன்மை இருக்கிறது. ஹிட்ச்காக் German Expressionism உதவியுடன், தனக்கென தனி ஸ்டைலை அப்போதே (1920களில்) உருவாக்கினார். தொடர்ந்து, தன் இறுதிப்படம்வரை அதை மெருகேற்றிக்கொண்டே வந்தார்.

ஹிட்ச்காக் இயக்குநர் ஆகும்முன் The Bodygaurd(1924) படத்தில் ஆர்ட் டைரக்டராக பணியாற்றியபோது, அவர் உருவாக்கிய படிக்கட்டு செட் பிரபலமானது. German Expressionism-ன் படியே அமைத்தார். அவரது கடைசிப்படமான The Family Plot(1976) படத்தின் கடைசிக்காட்சியும் அதே போன்று படிக்கட்டிலேயே முடிந்தது ஒரு தற்செயலான ஆச்சரியம் தான்!

சைக்காலஜி படமானாலும், ஹாரர் படமானாலும், சீரியல் கில்லர் படமானாலும் ஹிட்ச்காக்கை ரெஃபர் செய்யாமல், ஹிட்ச்காக் பாதிப்பு இல்லாமல் யாரும் படமெடுத்துவிட முடியாது. இதற்கு அர்த்தம், German Expressionism பாதிப்பு இல்லாமல் டார்க் சப்ஜெக்ட்களை படமாக எடுக்க முடியாது. 

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

7 comments:

  1. அற்புதம். இந்த உழைப்பிற்கு, ஒரு நாள் நிச்சயம் பலன் கிடைக்கும்.

    ReplyDelete
    Replies
    1. ஆசானின் வாக்கு பலிக்கட்டும்.

      Delete
  2. Short, but still the writing made sense to every word.

    ReplyDelete
  3. Small doubt, I think we cant say "Authors", the apt word for a filmmaker can be "Auteur"

    ReplyDelete
    Replies
    1. Since Auteur is the french word for Author, I used it. But you are right. updated. Thanks.

      Delete
  4. நல்ல விளக்கமும்,அலசலும்!அநேக ஐரோப்பிய சினிமா மேதைகள் 'குடி' பெயர்ந்து அங்கேயே செட்டில் ஆனார்கள்.அது,இப்போதும் தொடர்கிறது.

    ReplyDelete
    Replies
    1. ஹாலிவுட் என்றாலே ஐரோப்பிய மேதைகளுக்கு ஒரு மயக்கம் தான்.

      Delete

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.