Sunday, June 22, 2014

திரைக்கதை சூத்திரங்கள் (பகுதி-9)


9.கதாநாயகனை ஆக்டிவேட் செய்யுங்கள்

ஹீரோவைப் பற்றிய முந்தைய பதிவுகளில் சொன்னது போல், உங்கள் கதையின் நாயகன் யார் என்று தெளிவாகிவிட்டீர்களா? அடுத்து ஹீரோவின் குணத்திலும் சூழ்நிலையிலும் முரண்பாடுகளை உருவாக்க முடிந்ததா? நல்லது. முதல்பகுதியைக் காப்பாற்ற அவை போதும். இப்போது ஹீரோ கேரக்டர் இறுதிவரை எப்படி செயல்பட வேண்டும் என்று பார்ப்போம்.

நாம் ஏற்கனவே பார்த்தபடி, பார்வையாளர்கள் ஹீரோவுடன் தன்னை ஐக்கியப்படுத்திக்கொள்கிறார்கள். இறுதிவரை அந்த பிணைப்பை முறிக்காமல் கொண்டு செல்வது, நம் முன் இருக்கும் அடுத்த சவால். அதற்கு ஹீரோ எப்போதும் ஆக்டிவ் வாய்ஸிலேயே இருக்க வேண்டும். அதென்ன ஆக்டிவ் வாய்ஸ் என்கிறீர்களா? சரி, தமிழ் இலக்கணப் பாடத்தை ஒருமுறை மீண்டும் பார்த்துவிடுவோமா?
ஒரு செயலானது இருவகைகளில் செய்யப்படலாம். ஒன்று செய்வினை, மற்றொன்று செயப்பாட்டு வினை. திருவள்ளுவரை விட்டால் இதை விளக்க நல்ல ஆள் கிடையாது. எனவே…..

திருவள்ளுவர் திருக்குறளை எழுதினார் -- இது செய்வினை (ஆக்டிவ் வாய்ஸ்). இங்கே திருவள்ளுவரே ஹீரோ (Noun-ஐ ஹீரோன்னு தமிழ்ல சொன்னா தப்பா?). அவரே செயலையும் செய்கிறார்.

திருக்குறள் திருவள்ளுவரால் எழுதப்பட்டது - இது செயப்பாட்டு வினை (பேசிவ் வாய்ஸ்) - இங்கே திருக்குறள் தான் ஹீரோ. ஆனால் செயலைச் செய்தது திருவள்ளுவர் திருக்குறள்(ஹீரோ) மீது வள்ளுவர் ஆதிக்கம் செலுத்துகிறார். திருக்குறள் டம்மியாக ஆகிவிடுகிறது.

ஒரு படத்தில் ஹீரோ தான் எல்லாச் செயல்களையும் செய்பவராக, முக்கிய முடிவுகளை எடுப்பவராக இருக்க வேண்டும். கதைப்படி அது முடியாதென்றால், அந்த முக்கிய முடிவை முழுக்க ஏற்றுக்கொண்டு செயல்படுத்துபவராக இருக்க வேண்டும். இதற்கு இரு உதாரணங்களைப் பார்ப்போம்.
 
பில்லாவில் பாலாஜி(பிரபு) தான் முக்கியமான முடிவை எடுக்கிறார். அதற்கு ஆரம்பத்தில் தயங்கினாலும், துணிந்து இறங்கி செயல்படுத்துவது ரஜினி(அஜித்) தான். அதனால் தான் அந்த படம் இன்றளவும் வெற்றிகரமான சப்ஜெக்ட்டாக இருக்கிறது. அதே போன்று இரண்டாம் உலகத்தைப் பார்ப்போம்.

இரண்டாம் உலகம் படத்தின் கதை என்ன? இரண்டாவது உலகத்தில் காதல் இல்லை. பெண்கள் எல்லாரும் வன்முறைக்கு ஆளாகிறார்கள். இதைத் தடுக்க அங்கே காதல் மலர வேண்டும் என்று முடிவு செய்கிறார் இரண்டாவது உலக கடவுள். அதற்கு பூமியில் இருந்து காதல் எக்ஸ்பெர்ட்(?) ஆர்யாவைக் கொண்டு வருகிறார். காதல் மலர்கிறது.

அதன்பிறகு ஆர்யா ஆக்டிவாக ஒன்றுமே செய்வதில்லை. கடவுளின் விருப்பப்படியே கடத்தல் நடக்கிறது. கடவுள் எதிர்பார்த்தபடியே ஆர்யா-2 காப்பாற்ற வருகிறார். அந்த ஆர்யா-2வைத் தேடி அனுஷ்கா-2ம் வருகிறார். துணைக்கு பூமியில் இருந்து கொண்டுவரப்பட்ட ஆர்யா-1. அனுஷ்காவிற்கு சாப்பாடு கொண்டுவருவது, பனியில் பயணப்படும் அனுஷ்காவிற்கு பேச்சுத்துணைக்கு வருவது ஆகிய இரண்டு வேலைகளை மட்டுமே ஆர்யா செய்கிறார். 

பில்லா பாலாஜி கேரக்டரும், இரண்டாம் உலகம் கடவுள் கேரக்டரும் ஒன்று தான். இருவருமே ஹீரோவின் உதவியை நாடுகிறார்கள். பில்லாவில் என்ன நடக்கிறது, அடுத்து என்ன செய்வது என்று எல்லாமே பில்லாவால் முடிவெடுக்கப்படுகிறது. ஆனால் இரண்டாம் உலகம் ஆர்யாவிற்கு என்ன நடக்கிறதென்றே தெரியவில்லை.

படம் பார்த்த எல்லாரும் அதையே சொன்னார்கள் ‘என்னென்னவோ நடக்குய்யா..ஆனா என்ன நடக்குன்னு தான் தெரியலை’. நாம் ஏற்கனவே பார்த்தபடி, ஹீரோவுடனே பார்வையாளர்கள் தன்னை ஐக்கியப்படுத்திக்கொள்கிறார்கள். முதல்பாதியின் ஆர்யாவுடன் ஐக்கியமான பார்வையாளர்கள், இரண்டாம்பாதியில் தேமேயென்று ஆர்யா அலைவதால் பெரும் அதிருப்திக்கு ஆளானார்கள்.

அதனால் தான் திரைக்கதையின் விதிகளில் ஒன்று சொல்கிறது, ஹீரோ செய்வினை(ஆக்டிவ் வாய்ஸ்) யிலேயே இருக்க வேண்டும் என்று. இல்லையென்றால், படத்திற்கு செய்வினை வைத்தது போல் ஆகிவிடும். ஒரு காரியத்திற்கான காரணகர்த்தா யாராக வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் அந்த காரணத்தைப் புரிந்து, செயல்படுத்துபவனாக ஹீரோ இருக்க வேண்டியது அவசியம்.

இப்போது உங்கள் ஒன் லைனை மீண்டும் சரிபார்த்துக்கொள்ளுங்கள். ஹீரோ ஆக்டிவ்வாக இருப்பாரா? இல்லையென்றால் பில்லா ஸ்டைலில் ஹீரோவை ஆக்டிவ் ஆக்குங்கள். 60 கோடி ஸ்வாஹா ஆகாமல் தப்பிக்க, இந்த ஒரு திரைக்கதை விதி உதவும்!

சரி, இப்போது திரைக்கதை எழுத ஆரம்பிக்கும்போது தோன்றும் ஒரு குழப்பத்தைப் பற்றிப் பார்ப்போம். இந்தக் கதையை எந்த ஹீரோவை மனதில் வைத்து எழுதுவது? அப்படி குறிப்பிட்ட ஹீரோவை மனதில் வைத்து எழுதுவது சரியா? என்பது போன்ற குழப்பங்கள் ஆரம்பத்தில் தோன்றும்.

நடிகரைத் தேர்ந்தெடுப்பது இயக்குநரின் வேலை தான். தமிழ் சினிமாவில் திரைக்கதை ஆசிரியர் என்று தனியாக ஆள் இல்லாமல் இயக்குநரே எல்லாவற்றையும் செய்வதால், இந்தக் குழப்பம் நமக்கு வருகிறது. எனவே குறிப்பிட்ட நடிகரை மட்டுமே மனதில் வைத்து எழுதாமல் இருப்பது நல்லது. ஆனாலும் முதல் முயற்சி செய்பவர்களுக்கு, கேரக்டரை மட்டுமே வைத்து எழுதுவது கஷ்டமாக இருக்கலாம், குறிப்பாக இலக்கிய பரிச்சயம் இல்லாதவர்களுக்கு.

எனவே அவர்கள் டாப் ஹீரோக்களை மனதில் வைத்து எழுதலாம். ஆக்சன் மூவி என்றால் எமது சாய்ஸ், ரஜினி தான். அவரது இமேஜ் அதிக உத்வேகத்தைக் கொடுக்கும். நடிப்புத் திறமையைக் கொட்ட வேண்டிய கேரக்டர் என்றால் கமல் தான். இன்றைய ஹீரோக்கள் எல்லாருமே இவர்களை காப்பி அடிப்பவர்கள். எனவே அந்த ஐகான்களை மனதில் வைத்தால், பின்னாடி கிடைக்கிற நடிகருக்கு ஏற்றபடி மாற்றிக்கொள்ளலாம்.

ஒருவேளை உங்களுக்கு ரஜினியைவிட அஜித்/விஜய்யோ, கமலை விட சூர்யா/விக்ரமோ சரியாகத் தோன்றினால், எமக்கு ஆட்சேபணை இல்லை. ஆனாலும் முதலிலேயே சொன்னபடி, நடிகர்களை நினைக்காமல், கேரக்டர்களை மட்டுமே வைத்து எழுதப் பாருங்கள்.


திரைக்கதை எழுதும்போது வரும் இன்னொரு பிரச்சினை, ஹீரோவையும் உங்களைப் போன்றே(அவ்வ்!) படைப்பது. நீங்கள் திருமணம் ஆனவரென்றால், ஹீரோவையும் அப்படி படைக்கவே ஆர்வம் எழும். நீங்கள் ஒரு மூடி டைப் என்றால், ஹீரோவையும் அப்படியே படைக்க எண்ணுவீர்கள். செல்வராகவன் போன்ற சில இயக்குநர்கள், அப்படிச் செய்து வெற்றியும் பெற்றிருக்கிறார்கள். ஆனால் இன்றைக்கு தியேட்டருக்கு வருவது இளைஞர் கூட்டம் தான். அவர்கள் வெளியே போய் நன்றாக இருக்கிறது என்று சொன்னபிறகே, மற்ற கூட்டம் வரும்.

எனவே ஹீரோ-ஹீரோயின் அவர்களுக்கு ஏற்றவர்களாக இருப்பது, கமர்சியல் சினிமாவிற்கு அவசியம். அதனால்தான் 40 வயதுக்கு மேல் ஆனாலும், நம் ஹீரோக்கள் 25 வயது வாலிபனாகவே வருகிறார்கள். இன்றைக்கு அஜித் அதை உடைக்க முயற்சிக்கிறார். முதல் படத்திலேயே உங்களுக்கு அஜித் கால்ஷீட் கிடைக்கும் என்றால், அப்படிப்பட்ட கதையை நீங்கள் முயற்சி செய்யலாம், வாழ்த்துகள்!

ஓகே, ஹீரோவுக்கான அடிப்படைப் பண்புகளைப் பற்றி ஓரளவு பார்த்துவிட்டோம். ஒன் லைன் எழுதத் தேவையான மூன்று விஷயங்களில் ஒன்றான ஹீரோவை இதுவரை பார்த்துவிட்டோம். அடுத்து இரண்டாவது முக்கிய விஷயமான குறிக்கோள் பற்றிப் பார்ப்போம். ஒன் லைனில் தெளிவாகிய பிறகே, கதை நோக்கி நகர்வோம். அதன்பிறகே, திரைக்கதை எனும் ரியல் ஷோ!


(தொடரும்)

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

9 comments:

  1. ஒரு கமர்சியல் சினிமாவிற்கு திரைகதை எழுதுவதை குறிகோளாக கொண்டு தொடர் மெருகேறுகிறது..

    ReplyDelete
  2. விளக்கங்கள் தெளிவா யோசிச்சு எழுதியிருக்கிங்க....

    ReplyDelete
  3. யோவ் திரைக்கதை சூத்திரம்கிற டைட்டில மாத்தும்யா.... ப்ரவுசர் டேப்ல பார்க்கும் போது வில்லங்கமா தெரியுது.........

    ReplyDelete
  4. திருவள்ளுவர் உதாரணமே பெரிய ஒரு கட்டுரையின் சுருக்கம் அருமை அருமை... அண்ணா

    ReplyDelete
  5. @பன்னிக்குட்டி ராம்சாமி யோவ், அதுவும் நல்லாத்தானே இருக்கு!

    ReplyDelete
  6. @mathi sutha தமிழ்நாட்டில் அனைத்துப்பள்ளிகளிலும் அந்த உதாரணம் தான் ஃபேமஸ்!

    ReplyDelete
  7. சிறப்பான விளக்கம்! தொடர்கிறேன்!

    ReplyDelete
  8. விளக்கம் சுவாரசியத்துடன் !தொடர்கின்றேன்!

    ReplyDelete
  9. தொடரட்டும்............

    ReplyDelete

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.