Sunday, June 8, 2014

திரைக்கதை சூத்திரங்கள் (பகுதி-5)

5.ஒன்லைன்……மேலும்!

ஒன் லைன் என்பது படத்தின் ஆரம்பத்தில் இருந்து இறுதிவரை படம் விறுவிறுப்பாகச் செல்ல உதவுவதாக இருக்க வேண்டும். ஒரு கல்லை விட்டெறிய கொடுக்கப்படும் விசை போன்றது தான் ஒன் லைன். அதிக விசை, கல்லை அதிக தூரத்திற்கு பயணிக்க வைக்கும். இல்லையென்றால் பாதியிலேயே கல் கீழே விழுந்துவிடும். சிலர், முதல்பாதிக்கான விசை கிடைத்தவுடனேயே ஷூட்டிங் கிளம்பி விடுகிறார்கள். அதனால்தான் நாம் படம் பார்த்துவிட்டு ‘ஃபர்ஸ்ட் ஹாஃப் நல்லாயிருக்கு..செகண்ட் ஹாஃப் தான் மொக்கை’ என்று சொல்கிறோம்.


தீயா வேலை செய்யணும் குமாரு ஹீரோ சித்தார்த் ஆங்கிளில் ஒன் லைன் சொன்னால் இப்படி வரும்: காதலித்து கல்யாணம் செய்வதையே வழக்கமாகக் கொண்ட குடும்பத்தில், காதலிக்கத் தெரியாதவராக இருக்கிறார் ஹீரோ. ஒரு காதல் குருவின் துணையுடன் அதில் அவர் வெற்றியடைகிறார்.
 
மேலே சொன்னதில் முரண்பாடு என்று ஏதாவது இருக்கிறதா? ஆம், காதலுக்கு மரியாதை குடும்பத்தில் காதலிக்கத் தெரியாத ஹீரோ. இது முதல்பாதிக்கு மட்டுமே செல்லுபடியாகும் முரண்பாடு. படம் ஆரம்பித்த 5 நிமிடத்திலேயே இந்த முரண்பாடு காட்சிப்படுத்தப்படுகிறது. மேக்ஸிமம்,அதை அரைமணி நேரத்திற்கு இழுக்கலாம். பின்னர் மீதிப் படத்திற்கு? அதனால் தான் சந்தானம் கேரக்டர் மிகப்பெரும் முரண்பாட்டுடன் வருகிறது. அந்த படத்தைக் காப்பாற்றியதும் சந்தானம் கேரக்டர் தான்.

எனவே உங்கள் ஒன்லைனின் விசை எந்த அளவிற்கு வரும் என்று நன்றாக யோசித்துக்கொள்ளுங்கள். இந்த நேரத்தில் படத்தின் கரு பற்றிய இன்னொரு ஆங்கிளையும் பார்த்துவிடுவோம். 

நாம் சென்ற பதிவில் பார்த்தபடி, படத்தின் கருவினை ஒரே வார்த்தையில் சொல்வதும் வழக்கம். நட்பு - பாசம் - பழிக்குப்பழி போன்ற வார்த்தைகளிலேயே முழுப்படத்தையும் சுருக்கமாகச் சொல்லிவிடலாம். சிலர் அதையும் ஒன்லைன் என்று சொல்லும் வழக்கத்தைக் கொண்டிருக்கிறார்கள். ஆனாலும் இவை ஒன் லைன் ஆகாது, கரு மட்டுமே.
ஒன்லைன்களை டெவலப் செய்யும் முன் என்ன ஜெனரில் கதையைச் சொல்லப்போகிறோம் என்று முடிவு செய்வது நல்லது. பொதுவாக கீழ்க்கண்ட ஜெனர்கள் தமிழ் சினிமாவில் உள்ளன:
  • ஆக்சன்
  • காதல்
  • காமெடி
  • ஃபேமிலி டிராமா
  • த்ரில்லர்
  • ஹாரர் / பேய்ப்படங்கள்
  • ஆன்மீகம்
  • கலைப்படங்கள்

ஒரு பெண்ணைக் கட்டிக்கொடுப்பது எனும் கான்செப்ட்டை கண்ணீர் வரவழைக்கும் சோகப்படமாகவும் சொல்லலாம். கலாட்டாக் கல்யாணம் போன்று காமெடியாகவும் சொல்லலாம். சிலநேரங்களில் பாதிக்கு மேல் கதையை டெவலப் செய்துவிட்டு, இது இந்த ஜெனரில் சரிவராது என்று மாற்ற வேண்டி வரலாம். திரைக்கதை எழுதுவது என்பது டிரையல் & எர்ரர் கான்செப்ட்டில் நடக்கும் விஷயம் தான். சிலநேரங்களில் நாம் எடுத்துக்கொண்டிருக்கும் ஒன்லைன் மற்றும் கான்செப்ட்டில் வேறொரு படம் ரிலீஸ் ஆகிவிடலாம். அதை திரைத்துறையில் ”கருக்கள் காலாவதியாவது” என்று சொல்வார்கள். அந்தச் சூழ்நிலையில் அதே கருவின் ஜெனரை மாற்றிக் கதையை டெவலப் செய்யலாம். இவையெல்லாம் ஒன்லைன், முழுக்கதையாக உருவெடுக்கும்போது உள்ள சிக்கல்கள்.

சென்ற பகுதியில் பார்த்தபடி, ஒன்லைன் என்பது ‘அடுத்து என்ன?’ எனும் ஆவலைத் தூண்டுவதாக இருக்க வேண்டும். ஆரம்ப நிலையில் உள்ள நாம், கீழ்க்கண்ட மூன்று விஷயங்களை உள்ளடக்கியதாக ஒன்லைனை அமைப்பது நலம்:
  • ஒரு ஹீரோ
  • ஒரு குறிக்கோள்
  • அதைத் தடுக்கும் ஒரு பிரச்சினை அல்லது எதிரி

இந்த மூன்றும் தெளிவாக இருந்தால், படம் முக்கால்வாசி பிழைத்துவிடும். இந்த மூன்றையும் உள்ளடக்கிய ஒரு அருமையான ஒன் லைனை எடுத்துக்கொள்ளுங்கள்.
உங்கள் நம்பிக்கைக்குரிய ஒருவரையோ, சில நண்பர்களையோ கூடவே பிடித்துக்கொள்ளுங்கள். ஏனென்றால் காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு. நீங்கள் யோசிப்பதும் எழுதுவதும் உங்களுக்கு நன்றாக இருப்பதாகவே தோன்றும். அந்த நண்பர்களிடம் அந்த ஒன் லைனைச் சொல்லி ‘மாப்ளே, சூப்பருல்ல?’ என்று கேட்டு, அவர்கள் உயிரை வாங்குவது நல்லது. உங்கள் வாழ்க்கைத்துணையிடமும் ஒன் லைனைச் சொல்லலாம். ஆனால் அவரும் ‘அந்த’ பழமொழியை ஃபாலோ செய்பவராக இருந்தால், கஷ்டம் பாஸ்!

ஒன்றல்ல பல ஒன் லைன்களை ரெடி செய்யுங்கள். எங்கேயாவது அவற்றைக் குறித்து வையுங்கள். இந்த தொடரைப் படிக்கப் படிக்க, அதைத் திருத்த வேண்டியதும் வரலாம். உங்களுக்கு முழு திருப்தி வரும்வரை, திருத்தி எழுதுங்கள். எழுதிக்கொண்டே இருங்கள். ஒன்லைனின் மூன்று அம்சங்கள் பற்றித் தொடர்ந்து பேசுவோம்.

(தொடரும்)

டிஸ்கி: நண்பர்களின் வேண்டுகோளுக்கு இணங்க, இனி திரைக்கதைத் தொடர்  செவ்வாய்க்கிழமையும் வெளிவரும்.
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

10 comments:

  1. திரைக்கதை சூத்திரம்...சித்திரம் !

    ReplyDelete
  2. நல்லா சுவாரசியமாஎழுதறீங்க நண்பா

    ReplyDelete
  3. தொடர்ந்து பேசுங்கள்,நாங்களும் தொடர்கிறோம்!

    ReplyDelete
  4. அளவா, அழகா வந்துகிட்டிருக்கு தொடர்..! சூப்பர் நண்பா!

    ReplyDelete
  5. கலக்குங்க..!

    ReplyDelete
  6. சூப்பர் அண்ணே, ஒன் லைன் பத்தி அருமையா சொல்லிட்டீங்க.... இதையே பதிவுக்கு சிறுகதை எழுதறதுக்கும் பயன்படுத்தலாம்...

    ReplyDelete
  7. கேட்கனும்ன்னு நெனச்சேன்.. தமிழில் பல சிறந்த திரைகதையுள்ள படங்கள் வெளிவந்திருக்கின்றன, ஆனாலும், சுந்தர்.சியின் தீயா வேலை செய்யணும் குமாருவை அடிக்கடி உதராணமாக்குவதன் காரணம் என்னண்ணே?
    F.Y.I உங்களுக்கு தெரிஞ்சிருக்கும், இந்த படத்தின் திரைகதை டிஸ்கஷன் டீமில் சூது கவ்வும் நலன் குமாரசுவாமி முக்கிய பங்கு வகித்துள்ளார்....

    ReplyDelete
  8. கருத்துரையிட்ட நண்பர்களுக்கு நன்றி.

    ஸ்கூல் பையன் : ஆம், கதை, நாவல், நாடகம், சினிமா எல்லாவற்றுக்கும் இந்த தொடரில் வரும் எல்லாமும் பொருந்தும்.

    மொ.ராசு: நீங்க நினைக்கிற காரணம் இல்லை. இந்தப் பதிவு, அந்தப் படம் பார்த்த சமயத்தில் எழுதியது. மேலும், சீரியஸ் படங்களில் உள்ளது தான் நல்ல திரைக்கதை என்றும் அர்த்தம் இல்லையே!!

    ReplyDelete

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.