Sunday, June 15, 2014

திரைக்கதை சூத்திரங்கள் (பகுதி-7)


7. இன்னும் கொஞ்சம்…கதை நாயகர் பற்றி..

மறுமணம் பற்றி நினைக்காத ஒரு மனிதனின் வாழ்க்கையைப் பற்றிப் பேசிய படங்கள், முதல் மரியாதையும் முந்தானை முடிச்சும். முதலாவது குரு பாரதிராஜாவின் மாஸ்டர்பீஸ். இரண்டாவது சிஷ்யர் பாக்கியராஜின் மாஸ்டர்பீஸ். இதுவரை பார்த்த ஒன்லைன் மற்றும் கதையின் நாயகர் கான்செப்ட்டைக் கொண்டு இந்தப் படங்களை இன்று அலசுவோம்.

முதல் மரியாதையின் கதை என்ன?
கிராமத்துப் பெரிய வீட்டுப் பெண்ணான பொன்னாத்தா, காதல் என்ற பெயரில் ஒருவனிடம் ஏமாந்து வயிற்றில் பிள்ளையுடன் நிற்கிறாள். குடும்ப கௌரவம் காக்க,மாமாவின் சொல்லுக்குக் கட்டுப்பட்டு ஏழை மலைச்சாமி பொன்னாத்தாவை மணக்கிறார். அவளுக்குப் பிறக்கும் பெண் குழந்தையை தன் குழந்தையாகவே எண்ணி வளர்த்து, திருமணம் செய்து கொடுக்கிறார். ஆனாலும் பொன்னாத்தா மலைச்சாமியை மதிப்பதே இல்லை. அதே நேரத்தில் ஊருக்குப் புதிதாக வரும் குயிலியுடன் மலைச்சாமிக்கு நட்பு ஏற்படுகிறது. அதுவே அவளின் அன்பினால், காதலாக ஆகிறது.

பொன்னாத்தாவுக்கு விஷயம் தெரிய வந்து, அவர்களைப் பிரிக்க முற்படுகிறாள். அதே நேரத்தில் பொன்னாத்தாவின் காதலன் அவளைத் தேடி அந்த ஊருக்கு வர, மலைச்சாமியின் குடும்ப கௌரவத்தைக் காக்க குயிலி அவனைக் கொன்றுவிட்டு, ஜெயிலுக்குப் போகிறாள். வாழ்க்கையின் இறுதிக்கட்டத்தை நெருங்கும் மலைச்சாமி, பெயிலில் வரும் குயிலியைப் பார்த்துவிட்டு மனநிறைவுடன் இறக்கிறார். குயிலியும் அவர் பிரிவு தாளாது மரணமடைய,  வாழ்க்கையை அடுத்த உலகிலாவது மகிழ்ச்சியுடன் வாழ, அந்த உன்னத காதல் ஜோடி நம்மிடமிருந்து விடை பெறுகிறது! (நன்றி: www.tamilss.com – தமிழில் ஒரு உலக சினிமா தொடர்!)

முதல் மரியாதை கதை இரண்டு தலைமுறைகளாக நடக்கும் பெரிய கதை. பொன்னாத்தாவின் காதல் முதல் பொன்னாத்தா மகளின் கல்யாணம்/குழந்தை வரை அந்தக் கதை பேசுகிறது. இந்தக் கதையின் நாயகராக மூன்றுபேரைத் தேர்ந்தெடுக்க முடியும்.
  • வடிவுக்கரசி
  • ராதா
  • சிவாஜி
 
பொன்னாத்தாவை கதையின் ஹீரோ(யின்) ஆகக் கொண்டால், ஒன்லைன் இப்படி வரும் :
குடும்ப கௌரவத்தைக் காரணம் காட்டி பொன்னாத்தாவின் காதல், அவள் பெற்றோரால் மறுக்கப்படுகிறது. வேறொருவருக்கு மணம் முடித்து வைக்கிறார்கள். ஆனாலும் அவள் கணவனை தன் வாழ்க்கைத்துணையாக ஏற்கவில்லை. காதலனை நினைத்தே வாழ்கிறாள். காதலனுடன் சேர்வாளா?

(இந்த ஒன்லைன் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் என்றால், காதலன் நல்லவன் ஆக வேண்டும். அந்த காதல் விவரிக்கப்பட வேண்டும். கணவன் டம்மியாகவோ வில்லனாகவோ ஆக வேண்டும். அப்புறம் அது முதல்மரியாதையாக இருக்காது, அந்த ஏழு நாட்கள் ஆகிவிடும்!)

குயிலினை மையப்படுத்தினால்..
ஏழைப் பெண்ணான குயில், தன் தந்தையுடன் வாழ இடம்தேடி ஒரு கிராமத்திற்குச் செல்கிறாள். அவளுக்கு உதவும் அந்த ஊர்ப்பெரியவர் மேல் அவளுக்கு காதல் வருகிறது. அவர் ஏற்கனவே திருமணம் ஆனவர். அதையும்தாண்டி அந்தக் காதல் ஜெயித்ததா?
(முதல்மரியாதை கதையைவே பெரிய மாற்றமின்றி இந்த ஆங்கிளில் சொல்லிவிடலாம். ராதாவின் பின்புலம் பற்றிய காட்சிகளை அதிகப்படுத்த வேண்டிவரும். ராதா ஏன் வயதானவரைக் காதலிக்க வேண்டும் என்பதற்கு ஏதாவது பின்புலக் காரணம் சொல்ல வேண்டிவரும்.)

மலைச்சாமியை மையப்படுத்தினால்..
ஊர்ப்பெரியவரான மலைச்சாமிக்கு மனைவியுடன் சுமூக உறவில்லை. அந்த ஊருக்குப் பிழைக்க வரும் குயில் மேல் அவருக்குக் காதல் வருகிறது. அந்தக் காதல் ஜெயித்ததா?
(இதைத்தான் பாரதிராஜா எடுத்துக்கொண்டார்.)

எனவே இந்தக் கதையைச் சொல்ல இரு வாய்ப்புகள் உண்டு. பாரதிராஜா சிவாஜியின் கோணத்திலேயே சொல்லும் ஆப்சனை எடுத்துக்கொண்டார். அதனாலேயே படம் சிவாஜியிடம் ஆரம்பிக்கிறது.
ஹீரோ : சிவாஜி
குறிக்கோள் : காதல்/அன்பு
வில்லன்: திருமணம்/கௌரவம்

பெர்ஃபெக்ட்..இல்லையா? (படம் டிராஜடி வகை என்பதால், முடிவு ஹீரோவின் தோல்வி!)

மறுமணத்தில் விருப்பமில்லாத ஹீரோவைக் கொண்ட முந்தானை முடிச்சு படத்தை எடுத்துக்கொள்வோம்.
மனைவியைப் பறிகொடுத்துவிட்டு கைக்குழந்தையுடன் இருப்பவர் பாக்கியராஜ். ஒரு கிராமத்திற்கு வாத்தியாராகச் செல்கிறார். அந்த ஊர் நாட்டாமையின் மகள் ஊர்வசி. ஊரில் உள்ள ஆண்கள் எல்லாம் வைப்பாட்டி வைத்திருப்பதைப் பார்த்து வெறுத்துப்போயிருக்கும் அவருக்கு, மனைவி இறந்தும் வேறுபெண்ணை ஏறெடுத்துப் பார்க்காத ஹீரோ மேல் காதல் வருகிறது.

‘இன்னொரு பெண்ணை திருமணம் செய்துகொள்ள மாட்டேன்’ எனும் சத்தியத்தின் காரணமாகவும், ‘சித்தி வந்தால் பையனை கொடுமைப்படுத்துவாள்’ எனும் பயத்தின் காரணமாகவும் பாக்கியராஜ் மறுக்கிறார். ஆனாலும் அவர் தன்னிடம் தவறாக நடந்ததாகப் பழிசுமத்தி, அவரை மணம் முடிக்கிறார் ஊர்வசி. அதனால் பாக்கியராஜ் அவருடன் ‘சந்தோசமாக’ வாழ மறுக்கிறார். இறுதியில் ஊர்வசியின் அன்பினாலும் தியாகத்தாலும் மனம் மாறி, பாக்கியராஜ் அவரை ஏற்றுக்கொள்கிறார்.

இந்தக் கதையில் இரண்டே முக்கியக் கேரக்டர்கள் தான். அவர்களின் பார்வையில் ஒன்லைன் அமைத்தால்…

பாக்கியராஜ்: இன்னொரு திருமணம் செய்வதில்லை எனும் வைராக்கியத்துடன் இருக்கும் ஹீரோவின் மேல் ஹீரோயின் காதல் கொள்கிறாள். ஹீரோ ஏற்றுக்கொண்டாரா? (அதாவது..ஹீரோ தோற்றாரா?)

ஊர்வசி : தன் தந்தை உட்பட பெரும்பாலான ஆண்கள் மனைவி இருக்கும்போதே வைப்பாட்டி வைத்துக்கொண்டிருப்பதைக் கண்டு நொந்துபோகும் ஹீரோயின், சுத்தமான ஆம்பிளையைத் தான் கல்யாணம் செய்வேன் என்ற ‘உயர்ந்த’ குறிக்கோளுடன் இருக்கிறாள். அப்படி ஒரு ஆணை சந்திக்கிறாள். ஆனால் அவரோ மறுமணம் செய்வதில்லை எனும் வைராக்கியத்துடன்(கவனிக்க..அது குறிக்கோள் அல்ல!) இருக்கிறார். அவர் மனதை ஹீரோயின் வென்றாரா?

இந்த இரண்டு ஆப்சனில் எது நன்றாக இருக்கிறது? முதலாவதில் ஹீரோவிடம் குறிக்கோளே இல்லை, அது ஒரு தற்காப்பு வைராக்கியம் தான். இரண்டாவதில் ஹீரோயினிடம் இருப்பது தான் குறிக்கோள். கதையின் வில்லன், ஹீரோவின் வைராக்கியம். இந்தக் கதையின் நாயகி ஊர்வசி தான். அதனாலேயே படம், ஊர்வசியின் பார்வையிலெயே நகர்கிறது.

படம் ஆரம்பிக்கவுமே, ஊர்வசி கேரக்டர் நமக்கு விளக்கப்படுகிறது. அவர் ஒரு தைரியமான, விளையாட்டுத்தனமான புத்திசாலிப்பெண். அவருடைய ஒரே குறிக்கோள் ‘ஒரு வைப்பாட்டி..கிப்பாட்டி வைக்காமப் பார்த்துக்கணும்’ என்று காமெடியாக காட்சிகளிலும் பாடலிலும் சொல்லப்படுகிறது. அதன்பிறகு தான் ஹீரோவே படத்தில் எண்ட்ரி ஆகிறார், படம் ஆரம்பித்து 18 நிமிடங்கள் கழித்து!

படம் முழுக்க அட்டாக் செய்வது ஊர்வசி தான். காதல்-பொய்ப்பழி-காமம்-அன்பு-தியாகம் என ஐந்து விதங்களில் அதே வரிசையில் ஊர்வசி அட்டாக் செய்கிறார். பாக்கியராஜின் வேலை அதைத் தடுப்பதும், இறுதியில் தோற்பதும் தான்.

கதாசிரியர்-திரைக்கதையாசிரியர்-இயக்குநர்-ஹீரோவாக இருந்தும், பாக்கியராஜ் ஏன், தான் பின்வாங்கி ஹீரோயினை முக்கியப்படுத்தினார் என்று புரிகிறதா? அது புரிந்ததென்றால், அவரை ஏன் திரைக்கதை மன்னன் என்று கொண்டாடுகிறோம் என்பதும் புரிந்துவிடும்.

(செவ்வாய்..தொடரும்)
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

12 comments:

  1. நல்லதொரு அலசல் பெயர் குயிலி அல்ல குயில்

    ReplyDelete
  2. @r.v.saravanan மாத்திடறேன்..ஹிஹி..நிலா அது வானத்து மேல....!!

    ReplyDelete
  3. தமிழில் வெளிவந்த இன்னும் சில மறுமணம் பற்றி நினைக்காத ஹீரோ/ஹீரோயினின் வாழ்க்கையைப் பற்றிப் பேசும் படங்கள் சிலவற்றை லிஸ்ட் பண்ணி வாசகர்களை அவற்றில் திரைகதை அமைக்கப்பட்ட விதத்தை யோசிக்க சொல்லியிருக்கலாமே!
    ரிதம் எல்லாம் அந்த கேட்டகரிலதானே வருது?

    ReplyDelete
  4. நல்லதொரு கிளைத்திரைக்கதைப் பிரிப்பு அண்ணா திரைக்கதை ஒழுங்கமைப்புக்கு பிரயொசனமாக இருந்தது...

    நான் முந்தானை முடிச்சில் குழந்தையையும் வைத்து கியைாகப் பிரித்தப் பார்த்தேன்... ஆனால் அப்படி குழந்தைக்குள்ளால் போயிருந்தால் ஊர்வசியும் ஊரின் வப்பாட்டி பிரச்சனையும் திரைக்கதை திணிப்பாகியிருக்குமோ என எண்ணத் தோன்றுகிறது...

    அன்புச் சகோதரன்...
    ம.தி.சுதா
    WWW.mathisutha.COM

    ReplyDelete
  5. இரண்டு அருமையான படங்களை வித்தியாசமான கோணத்தில் விளக்கிப் புரியவைத்தமை சிறப்பு! தொடருங்கள்!

    ReplyDelete
  6. //மொ.ராசு (Real Santhanam Fanz ) said...
    சிலவற்றை லிஸ்ட் பண்ணி வாசகர்களை அவற்றில் திரைகதை அமைக்கப்பட்ட விதத்தை யோசிக்க சொல்லியிருக்கலாமே!
    //

    ஓ..இதையெல்லாம் சொன்னாத்தான் செய்வீங்களா?

    ReplyDelete
  7. //mathi sutha said...
    நான் முந்தானை முடிச்சில் குழந்தையையும் வைத்து கியைாகப் பிரித்தப் பார்த்தேன்...//

    குழந்தைக்கு குறிக்கோள் இல்லையே!

    ReplyDelete
  8. //தளிர்’ சுரேஷ் said...
    இரண்டு அருமையான படங்களை வித்தியாசமான கோணத்தில் விளக்கிப் புரியவைத்தமை சிறப்பு! தொடருங்கள்!//

    நன்றி சுரேஷ்.

    ReplyDelete
  9. //செங்கோவி said... [Reply]

    ஓ..இதையெல்லாம் சொன்னாத்தான் செய்வீங்களா?
    ///

    ஆகா, இதுநாள் வரைக்கும் நம்மள கேள்வி கேட்ட வாத்தி, இனிமே நம்மள சுயமா யோசிக்க சொல்லிட்டாரு!

    ReplyDelete
  10. இல்லண்ணே குழந்தைக்கு 2 வயசைக் கூட்டி ஒரு எதிர்பார்ப்பு மனநிலையை தோற்று வித்த நான் புதிதாக ஒன்றை யோசித்துப் பார்த்தேன் ஆனால் அது மொக்கை

    ReplyDelete
  11. இரண்டும் அருமையான பிடித்த படங்கள் விரிவான விளக்கம் தொடரட்டும் தொடர்கின்றேன்!

    ReplyDelete

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.