Showing posts with label சூப்பர் ஸ்டார். Show all posts
Showing posts with label சூப்பர் ஸ்டார். Show all posts

Tuesday, July 12, 2011

நாளை சென்னை திரும்பும் சூப்பர் ஸ்டார் (Rajini Returns)

நீண்டநாட்களாக நாம் எதிர்பார்த்திருந்த சந்தோஷச் செய்தி வந்து விட்டது. ஆம், நமது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நாளை இரவு சென்னை திரும்புகிறார்.
எந்திரன் என்ற மெஹா ஹிட் கொடுத்து இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைத்தார் ரஜினிகாந்த். இந்தியப் படவுலகம் என்றால் பாலிவுட் மட்டும் தான் என்பதை உடைத்து, மற்ற மாநிலப்படங்களும் உள்ளன என்று சர்வதேச அளவில் உணர்த்திய பெருமை சூப்பர் ஸ்டாரையே சேரும். சிவாஜி முதல் எந்திரன் வரை ரஜினி பட ரிலீஸ் என்பது சர்வதேசத் திருவிழா என்று ஆகியது. 

வெளிநாடு வாழ் தமிழர்கள் மட்டுமல்லாது பிற மாநிலத்தவரும் ரஜினி படம் பார்க்க ஆர்வம் காட்டுவதை நேரில் பார்த்த அனுபவம் எனக்கு உண்டு. அத்தகைய வரவேற்பின் மூலம் நமது தமிழ்சினிமாவும் பிறருக்கு அடையாளம் காட்டப்பட்டது.

தமிழகத்தில் சூப்பர் ஸ்டாராக இருந்தாலும், இந்தியில் மிகப்பெரிய வெற்றியைக் கொடுக்கவில்லை என்ற குறை ரஜினியின் வரலாற்றில் இருந்தது. எந்திரன் மூலம் அதுவும் தீர்ந்தது. சிவாஜி ரிலீஸ் ஆனபோது ‘அமிதாப்பா-ரஜினியா’ என்று பட்டிமன்றம் நடத்திய வடநாட்டுச் சேனல்கள்கூட எந்திரனைக் கண்டு மிரண்டன. இந்திய அளவில் தன்னுடைய பெயரை எந்திரன் மூலம் நிலைநாட்டினார்.
பொதுவாகவே இரு படங்களுக்கிடையே போதிய இடைவெளி விடும் சூப்பர் ஸ்டார், இந்த முறை ராணா வேலைகளில் உடனே இறங்கினார், எந்திரன் வெற்றி கொடுத்த கண் திருஷ்டி அறியாமல். படத்துவக்க விழா அன்றே ஆஸ்பத்திரியில் அட்மிட் ஆனார்.

அதன்பிறகு தான் எத்தனை எத்தனை செய்திகள்..இனி அவ்வளவு தான்.அவருக்கு நேரம் சரியில்லை, உயிர் பிழைப்பாரா-என பல ஆராய்ச்சிகள் இங்கு நடத்தப்பட்டன. ஆண்டவனின் அருளும் ரசிகர்களின் அன்பும் இருக்கையில் அவ்வளவு சீக்கிரம் பிறரின் எதிர்பார்ப்பு நிறைவேறிவிடுமா என்ன?

கடந்த மாதமே அவர் ஆஸ்பத்திரியில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகிவிட்டதாகச் செய்திகள் வந்தன. கடந்த ஒரு மாதமாக சிங்கப்பூரில் ஒரு வீட்டில் வாடகைக்கு தங்கி,  உடல்நிலை சீராகிவிட்டதை உறுதிப்படுத்தினர். கடந்த சில நாட்களுக்கு முன் ஐஸ்வர்யா தந்தையை அழைத்து வர சிங்கப்பூர் பயணமானார். இப்போது அடுத்த நல்ல செய்தியும் வந்துவிட்டது.

நாளை இரவு சென்னை திரும்புவதாக உறுதியான தகவல் இப்போது வெளியாகி உள்ளது. பலநாட்களாக பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் செய்து வந்த பிரார்த்தனை வீண் போகவில்லை. நாளை மீண்டும் நம் முன் தோன்றுகிறார் சூப்பர் ஸ்டார். அவரை வரவேற்க தடபுடலான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. 
ரஜினி படம் ரிலீஸ் என்பதே திருவிழா எனும்போது, ரஜினியே ஒரு சிக்கலில் இருந்து ரிலீஸ் ஆகி வருவது மெகா திருவிழா தான். சென்னை திரும்பிய பின் சில நாட்களில் ராணா படப்பிடிப்பு தொடங்கும் என்று சொல்கிறார்கள். நாம் ஏற்கனவே சொன்னது போல் நமக்கு முக்கியம் ரஜினியே, ராணா அல்ல. இனி அவர் நடித்துத் தான் சாதிக்க வேண்டும் என்று எதுவும் இல்லை. உடல்நிலை ஒத்துழைத்துத் தொடர்ந்தால் மகிழ்ச்சியே.

நாளை அவர் முகம் காண லட்சக்கணக்கான ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர், நாமும்!

மேலும் வாசிக்க... "நாளை சென்னை திரும்பும் சூப்பர் ஸ்டார் (Rajini Returns)"

Tuesday, May 17, 2011

ராணாவில் ரஜினி அவசியம் நடிக்க வேண்டுமா?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மீண்டும் உடல்நிலைக் குறைவால் மருத்துவமனையில் அனுமதி என்று செய்திகள் வருகின்றன. ’சிகிச்சைக்காக அமெரிக்கா போகலாம்’ என்றும் சொல்கிறார்கள். அதே நேரத்தில் சில விஷமிகள் மனித நேயமற்ற முறையில் தொடர்ந்து விஷமத்தனமான வதந்தியைப் பரப்புகிறார்கள். 

பொதுவாகவே ஒரு படத்திற்கும் அடுத்த படத்திற்கும் இடையே போதிய இடைவெளி விடுவதும், இமயமலைப் பகுதியில் ஓய்வெடுப்பதும் ரஜினியின் வழக்கம். எத்தனை ஆண்டுகள் கழித்து வந்தாலும் சூப்பர் ஸ்டார் நாற்காலியில் வேரு யாரும் அமர்ந்து விட முடியாது என்பதை பலமுறை நிரூபித்தவர். எதனாலோ இப்போது அவசர அவசரமாக அடுத்த படமான ராணா வேலையில் இறங்கினார்.

’சுல்தான் தி வாரியர்’ படத்திற்கு கோடி கோடியாகக் கொட்டிய பின்னும், படச்சுருளைக் கண்ணில் காண முடியாத தயாரிப்பு நிறுவனங்கள் கொடுத்த பிரஷர் கூடக் காரணமாக இருக்கலாம். ஏற்கனவே காசு விஷயத்தில் சுத்தமானவரான ரஜினியும், கணக்கை செட்டில் செய்ய ராணாவை நடித்துக் கொடுக்க முன் வந்திருக்கலாம். 

ஆனால் ஆரம்பித்தில் இருந்தே இந்தப் படம் நம் மனதைக் கவரவில்லை என்பதே உண்மை. எந்திரனுக்கு இருந்த வரவேற்பும் இதற்கு இல்லை. எதனாலோ ‘பாபா’ ஃபீலிங் வந்து கொண்டே இருந்தது. படப்பிடிப்பு பூஜை போஸ்டரைப் பார்த்த போது, அந்த ஃபீலிங் கன்ஃபார்ம் ஆகியது.

தொடர்ந்த கெட்ட செய்தியாக அவருக்கு மூச்சுத் திணறல் என்று செய்தி வந்து சேர்ந்தது. நாமும் ஆரம்பத்தில் சாதாரண விஷயம் என்றே நினைத்து, அதை சீரியஸாக எடுத்துக் கொள்ளவில்லை. ஆனால் தொடர்ந்து வரும் செய்திகளைப் பார்க்கும்போது, ஏதோவொரு கவலை மனதில் குடிகொள்கிறது.

உடல்நலம் தேரும்வரை இந்தப் படத்தைத் தள்ளி வைப்பதும், முடிந்தால் இதைத் தலைமுழுகுவதுமே நல்லது. 

நம்மையெல்லாம் மகிழ்விக்க ஏற்கனவே வேலைக்காரன் - ராஜாதிராஜா-படிக்காதவன் - நெற்றிக்கண் - மூன்றுமுகம் - அண்ணாமலை - பாட்ஷா - சந்திரமுகி-எந்திரன் போன்றவை இருக்கும்போது, இப்படிக் கஷ்டப்பட்டு நடித்து ராணாவை உருவாக்குவது அவசியம் தானா?

உடல்நிலை சரியில்லாமல் போன அமிதாப் திரும்பி வரும்வருவதர்கு பல ஆண்டுகள் ஆனபோதும், அவரது ரசிகர்கள் அவரை மறந்து விடவில்லை. அவருக்கான எதிர்பார்ப்பு குறையவும் இல்லை. அமிதாப்பை விடவும் உணர்ச்சிகரமான ரசிகர்களை வைத்திருக்கும் ரஜினி, பூரண ஓய்வு எடுத்துக் கொண்டு புதுப் பொலிவுடன் வரவேண்டும்.

ஜக்குபாயைச் சுருட்டி விட்டு, சந்திரமுகியுடன் திரும்பி வந்தது போல், இம்முறையும் ரஜினி செய்யலாம். ரஜினியின் நீண்ட நாள் ஆசையான ஐஸ்வர்யா ராயுடன் நடிப்பதே நிறைவேறி விட்டபின், கொஞ்ச நாள் ஓய்வு எடுப்பதில் என்ன தயக்கம்?

ஒரு ரசிகராக நமக்குத் தேவை ரஜினி தானேயொழிய ராணா அல்ல!
மேலும் வாசிக்க... "ராணாவில் ரஜினி அவசியம் நடிக்க வேண்டுமா?"

Wednesday, February 23, 2011

ரஜினிகாந்தும் தமிழகமும் (தேர்தல் ஸ்பெஷல்)

நான் டவுசர் போட்ட காலத்தில் அடிக்கடி பத்திரிக்கைகளில் வரும் பரபரப்புச் செய்தி ரஜினி அரசியலுக்கு வரபோகிறார், கிளம்பிட்டார், இதோ முக்குத் திரும்பிட்டார்என்பது தான். இப்போது என் பையனே டவுசர் போட ஆரம்பிச்சுட்டான். இப்பவும் மீடியாவுக்குப் போரடிச்சா வாராரு, வாராருஎன அதே செய்தியைப் போட்டுடறாங்க.இப்போ உங்களுக்கும் போரடிச்சா, தொடர்ந்து படிங்க..
மன்னன் படத்து சூட்டிங் சமயத்தில் ரஜினிக்கு உண்டாக்கப்பட்ட சம்பளப் பிரச்சினையில் இருந்துதான், மீடியாக்கள் ரஜினி அரசியலுக்கு வருவார் என முழு வீச்சில் சொல்ல ஆரம்பித்தன. அண்ணாமலை முடிந்து பாட்ஷா வந்தபோது, அது உச்சத்தில் நின்றது. 

அப்போதுதான் ஜெயலலிதா எம்.ஜி.ஆரின் வாரிசாக முதல் ஆட்சியை நட்த்திக் கொண்டிருந்தார். ஆனால் எம்.ஜி.ஆருக்கும் ஜெ.வுக்கும் உள்ள மலையளவு வித்தியாசத்தை உணர்ந்துகொண்ட தமிழர்கள், எம்.ஜி.ஆரின் இடம் நிரப்ப வேறொரு நபரைத் தேடவேண்டிய சூழ்நிலை!

சினிமாவில் எம்.ஜி.ஆரின் இடத்தைப் பிடித்த ரஜினியே அனைவரின் கண்ணுக்குத் தெரிந்த்து அச்சரியமில்லை. மீடியாவின் ஹைக்கும் சேர்ந்துகொள்ள, இயல்பாகவே ரஜினி அரசியலுக்கு வருவதற்கான சூழ்நிலை 1996ல் அமைந்தது.அப்போது ரஜினி வந்திருந்தால் ஒருவேளை ஜெயித்திருக்கவும் முடியும். ஆனால் அவர் வரவில்லை. ஏனென்றால் சினிமாவில் மட்டுமே எம்.ஜி.ஆராகவும் நிஜவாழ்வில் சிவாஜி கணேசனாகவும் ரஜினி இருந்ததுதான்.

எம்.ஜி.ஆருக்கென அரசியல் சார்ந்த கொள்கையும் திட்டமும் ஆரம்ப காலத்திலேயே இருந்தது. அது அவரது இளமைப் பருவத்திலேயே தானாக உருவாகி வந்தது. பிறகு சினிமா மூலம் சேர்ந்த ரசிகர் கூட்ட்த்தை தன் அரசியல் திட்டத்திற்குப் பயன்படுத்திக் கொண்டார். 
ஆனால் சிவாஜிக்கும், சிவாஜி ராவுக்கும் (என்னே ஒற்றுமை!) அம்மாதிரித் திட்டங்கள் ஏதும் இல்லை. ரசிகர் கூட்டம் சேர்ந்துவிட்டது. எல்லாரும் சொல்றாங்க, எனவே ஏதாவது செய்வோம்என முடிவு செய்து பிறகு கொள்கை, திட்டங்களைத் தேடத் துவங்கினர். துட்டு விஷயத்தில் இருவரும் கெட்டி என்பதும் மற்றொரு ஒற்றுமை!

கண்டக்டர் வேலையை விட்டு சென்னை ஃப்ளாட்ஃபார்முக்கு வர ரஜினி யோசிக்கவில்லை. யோசிக்காமல் வந்து ஜெயித்தார். ஆனால் அரசியலுக்கு வர யோசிக்கிறார், யோசிக்கிறார், இன்னும் யோசிக்கிறார். அரசியல் போன்ற தீவிர விஷயங்களில் ஈடுபட, சினிமா மீது இருந்த அதே வெறி தேவை. அப்படி எதுவும் அவரிடம் இல்லை என்பதே உண்மை.

ரஜினி போன்ற ஆன்மீக நாட்டம் கொண்டோரிடம் இருப்பதை ஏற்றுக்கொண்டுதனக்குள் மூழ்கும் தீவிரம் தான் இருக்குமேயொழிய, அரசியலுக்குத் தேவையான எதையும் மாற்றும் /எதிர்க்கும் தீவிரம் இருப்பதில்லை. அவ்வாறு இருப்பது சிவாஜி ராவ் என்ற தனிமனிதருக்கு நன்மையே. அதில் தவறேதும் இல்லை. ஆனால் தொடர்ந்து சில மீடியாக்களாலும் அறிவுஜீவிகளாலும் ரஜினி முன்னிறுத்தப் படுவதால் நாம் அவரது அரசியல் தலைமைப் பண்புபற்றி மதிப்பீடு செய்யத்தான் வேண்டியிருக்கிறது.

அரசியலில் நல்லவனாய் இருந்தால் மட்டும் போதாது, வல்லவனாகவும் இருக்க வெண்டும். வல்லவனாக இருக்க கொஞ்சம் சூது வாது தெரியவேண்டும். அது இவருக்குச் சுட்டுப் போட்டாலும் வராது.வாக்குவன்மையும் செயல்திறனும் அரசியலில் முக்கியப் பங்கு வகிக்கும் விஷயங்கள்.

ஜக்குபாய் படத்தை திருட்டுத் தனமாய் இணையத்தில் வெளியிட்டவர்களைக் கண்டிக்க நடந்த கூட்டத்தில் கலந்துகொண்டு இந்தப் படமே ஒரு ஃப்ரெஞ் பட்த்திலிருந்து சுட்ட்துதான்’  என உண்மையைப் போட்டுடைத்தார் ரஜினி.

அழகிரி மகன் திருமண விழாவில் எனக்கு அழகிரியைத் தெரியாது, ஸ்டாலினைத் தான் ரொம்ப நாளாப் பழக்கம்என்று பேசி, அழகிரி பொதுவாழ்வுக்கு நேற்று வந்தவர் என எடுத்துக்காட்டி, திமுகவின் தலையாய பிரச்சினைக்கே தீர்ப்பு சொல்லிவிட்டு வந்தார்.

வெளியில் கொட்டும் மழையால் சென்னை மிதக்க, மாண்புமிகு முதல் அமைச்சர் இளஞன் பாடல் வெளியீட்டு விழா அரங்கில் ரஜினியுடன் அமர்ந்திருந்தார். அங்கு பேசிய ரஜினி மக்கள்லாம் கடும் மழையால கஷ்டப்படுறாங்க.அதனால ரொம்ப நேரம் பேசி முதல்வரின் நேரத்தை வீணாக்கவில்லைஎன அக்கறையோடு பேசினார். 

நிறைய நேரங்களில் இவர் தெரிந்துதான் குத்துகிறாரா இல்லை சும்மா பேசுகிறாரா என்பதே யாருக்கும் புரிவதில்லை. அப்போது இவரையும் இழுத்துக்கட்டிக் கொண்டு போக வேண்டியிருக்கேன்னு கலைஞரே நொந்து போயிருப்பார்.

இப்படித் தொடர்ந்து அப்பாவித் தனமாகப் பேசுபவர் அரசியலுக்கு வந்தால் என்ன ஆகும்?

ஜெ.மாதிரி விஜயகாந்த்துடன் கூட்டணிப் பேசுவார்த்தை நட்த்தினால் ஓப்பனாக மீடியாவிடம், ‘என்னங்க இது, 50 தொகுதி கேட்காரு. அதுகூடப் பரவாயில்ல, செலவுக்கு 100 கோடி கேட்காரு. திஸ் இஸ் டூ மச்னு சொல்லியிருப்பாரு. ஜெ. மாதிரி பல்லைக் கடிச்சுக்கிட்டு இருடி, உன்னை பின்னாடி கவனிச்சுக்கிறேன்என நினைக்கத் தெரியாது.

ரஜினியின் ஜாதகத்தில் 2ல் சனி..அதாவது நாக்கில் சனிஎனப் படித்திருக்கிறேன். அது உண்மைதானோன்னு நினைக்கும்படியாத்தான் நிறைய நேரங்களில் அவரது பேச்சு அமைந்துவிடுகிறது. சரி, அதை விட்டு விட்டுவோம். அரசியல் செயல் திறமை?

  பாபா படப் பிரச்சினையின்போது பாமகவினர் ரஜினி ரசிகர்களை ஓடஓட விரட்டி உருட்டுக்கட்டையால் அடித்தனர். தனக்காக அடிவாங்கிய அவர்களுக்கு ஆதரவாக என்ன செய்தார் ரஜினி? அறிக்கை அரசியல் நடத்தினார், கலைஞர் மன்மோகனுக்கு கடிதம் அனுப்புவதுபோல. 

வெறும் காகிதப் புலியாக மட்டுமே மிஞ்சினார் ரஜினி.

அந்தச் சம்பவத்தில் இருந்துதான் நாம் ரஜினியின் அரசியல் தகுதியை எடைபோட வேண்டும்..

ஜனநாயகத்தில் தனக்காகவும் தன்னைச் சார்ந்தோர்க்காகவும் தெருவில் இறங்கிப் போராடத் துணியாதவர் யாராக இருந்தாலும், அரசியலில் நுழைவதற்கான அடிப்படைத் தகுதியை இழந்தவர் ஆகிறார்.

1996-துக்ளக் சோ - ஜெ-தற்போதைய ரஜினியின் போக்கு-பற்றி...நாளை!
மேலும் வாசிக்க... "ரஜினிகாந்தும் தமிழகமும் (தேர்தல் ஸ்பெஷல்)"

Monday, January 24, 2011

அடுத்த சூப்பர் ஸ்டார் யார்?

விஜய், அஜித், சிம்பு என பலரும் கண் வைத்திருக்கும் விஷயம் ’சூப்பர் ஸ்டார்’ நாற்காலி. ரஜினிகாந்த் 60 வயதை தாண்டுவதால், அடுத்த சூப்பர் ஸ்டார் யார் என்ற கேள்வி சில வருடங்களாக பத்திரிக்கைகளாலும் சினிமா ரசிகர்களாலும் எழுப்பப்படுகிறது. எனவே நாமும் அதைப் பற்றி கொஞ்சம் யோசிப்போம்.

ரஜினிகாந்த் சினிமாவுக்கு வந்தபோது இங்கு ராஜாவாக கோலோச்சிக் கொண்டிருந்தவர் மக்கள் திலகம் என்றும் புரட்சித்தலைவர் என்றும் அழைக்கப்பட்ட எம்.ஜி.ஆர் அவர்கள். எம்.ஜி.ஆரின் விஷேசத்தன்மை அவரது படங்களின் மூலம் அவரைப் பற்றி உருவாக்கப்பட்டிருந்த இமேஜ். குடிக்க மாட்டார். புகைக்க மாட்டார். பொய் சொல்ல மாட்டார். யாராவது வயதான தாத்தா/பாட்டி தள்ளாடி வந்தால், தலைவர் ஓடிவந்து கை கொடுப்பார். கதாநாயகியை / தங்கச்சியை யாராவது கோட்-சூட் போட்ட ஆசாமி கற்பழிக்க முயற்சித்தால், நாம் டென்சனே ஆகவேண்டியதில்லை. எப்படியும் தலைவர் பாய்ந்து வந்து காப்பாற்றி விடுவார். ’மிஸ்டர்.பெர்ஃபெக்ட்’ என்பதே எப்போதும் அவரது கேரக்டர்.

ஆனால் அவரது இடத்தைப் பிடித்த ரஜினி, படங்களில் என்ன செய்தார்? குடித்தார். புகைத்தார். அவரே கற்பழித்தார்.எம்.ஜி.ஆரின் கேரக்டருக்கு நேரெதிரான கேரக்டர்களையே செய்தார். ஆனாலும் மக்கள் அவரையே எம்.ஜி.ஆரின் இடத்தில் வைத்தார். எந்தவொரு இடத்திலும்/படத்திலும் ரஜினி எம்.ஜி.ஆரின் ஸ்டைலையோ புகைப்படத்தையோ காட்டி வளரவேயில்லை. (எம்.ஜி.ஆர் வேறொரு நடிகருக்கே தன் முழுஆதரவைத் தந்தார்.ஆனாலும்...)சினிமாவுல அதிசயங்களில் இதுவும் ஒன்று.

ஆனால் இன்று ரஜினியின் இடத்தைப் பிடிக்க நினைக்கும் ஹீரோக்கள் அப்பட்டமாக ரஜினியைக் காப்பி அடிக்கின்றனர். எம்.ஜி.ஆரைக் காப்பி அடித்த ராமராஜன், சத்தியராஜ் போன்றோரை ஏன் மக்கள் ஒதுக்கினர்? ஒரிஜினல் எம்.ஜி.ஆர் படங்களே இருக்கும்போது டூப்ளிகேட் எம்.ஜி.ஆர் படங்கள் தேவையில்லை என்பதாலேயே. அப்படி இருக்கும்போது இந்த டூப்ளிகேட் ரஜினிகளை ஒரிஜினலின் இடத்தில் மக்கள் வைப்பார்களா என்பதே சந்தேகம்தான். எம்.ஜி.ஆரின் காலத்திற்கும் ரஜினியின் காலத்திற்கும் இடையில் ஜெய்கணேஷ், சிவகுமார், விஜயகுமார் என ‘சில்லுண்டி’ நடிகர்களின் காலமும் இருந்த்து. இன்றைய விஜய், அஜித் போன்றோரும் அந்த வரிசையிலோ அல்லது டூப்ளிகேட் எம்.ஜி.ஆர்கள் வரிசையிலோ  வைக்கப்படுவார்களா என்பது அவர்கள் எவ்வளவு நாள் சினிமாவில் நீடித்து வெற்றிகரமான ஹீரோவாக இருக்கப் போகிறார்கள் என்பதைப் பொறுத்தது.

இப்போது அடிப்படை விஷயமான சூப்பர் ஸ்டார் என்ற வார்த்தைக்கு வருவோம். சூப்பர் ஸ்டார் என்பதை சினிமாவின் நம்பர்-1 ஸ்டார் என்றே அர்த்தப்படுத்திக் கொள்கிறோம். உண்மையில் அது அப்படித்தானா?

எம்.ஜி.ஆரின் காலத்தில் சூப்பர் ஸ்டார் என்ற வார்த்தை பரவலாக பயன்படுத்தப்பட்டதா? அந்த வார்த்தைக்கு இன்று உள்ள மரியாதை அன்று இருந்ததா? இல்லை என்பதே பதில். சூப்பர் ஸ்டார் என்ற பட்டம் கலைப்புலி தாணுவால் ரஜினிக்கு கொடுக்கப்பட்டபோதுகூட அதுவொரு புகழ்ச்சி வார்த்தை மட்டும்தான். இன்று இருக்கும் அர்த்தம் அன்று அதற்கு இல்லை. பின் எப்படி இன்று கவர்ச்சிகரமான வார்த்தையாக அது மாறியது?

அது ரஜினிகாந்த் என்ற தனி மனிதனின் கடும் உழைப்பாலேயே நிகழ்ந்தது. தன் உடல்நலத்தை முழுதாகக் கெடுத்துக்கொண்டு இரவும் பகலும் அயராது வெறித்தனத்துடன் நடித்தார் ரஜினி. தொடர்ந்து தயாரிப்பாளர்களுக்கு லாபத்தைக் கொடுத்து அவர்களின் செல்லப்பிள்ளையாக மாறினார். எப்போதும் படிக்காதவனாக, சாமானிய மனிதனாக படங்களில் தன் கேரக்டரை வடிவமைத்துக் கொண்டார். எந்தவொரு சூழ்நிலையிலும் எம்.ஜி.ஆர் எனும் பிரமாண்டத்தின் நிழலில் ஒதுங்காமல் தனக்கான சாம்ராஜ்ஜியத்தைக் கட்டி எழுப்பினார்.

இவ்வளவும் செய்து, எம்.ஜி.ஆரின் இடத்தில் அமர்ந்தபொழுது எம்.ஜி.ஆரின் பட்டங்களான ‘மக்கள் திலகம்’ மற்றும் ‘புரட்சித் தலைவர்’ போன்ற பட்டங்களை தனக்கு சூடிக்கொள்ளாமல் தாணு கொடுத்த சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தையே வைத்துக்கொண்டார்.

ரஜினி ஏன் எம்.ஜி.ஆரின் பட்டத்திற்கு ஆசைப்படவில்லை? ஏனென்றால் தன்னைப் போன்றே பல வருடங்களாகத் தன் சொந்த உழைப்பின் மூலம்தான் எம்.ஜி.ஆர் அந்தப் பட்டங்களை அடைந்தார் என ரஜினிக்குத் தெரியும். ஒரு உழைப்பாளி மற்றொரு உழைப்பாளிக்குத் தந்த மரியாதை அது.
The making of Endhiran
அது ஏன் இன்றைய நடிகர்களுக்குப் புரிவதில்லை? இவர்களும் தனக்கென உள்ள பட்டங்களுக்கான மரியாதையை தன் சொந்த உழைப்பால் ஏன் உண்டாக்கக் கூடாது? 60 வயதைக் கடந்தும் இன்னும் தனக்கான மரியாதையைத் தக்க வைத்திருக்கும் ரஜினிகாந்த் என்ற பெரியவருக்கு இன்றைய இளைய தலைமுறை நடிகர்கள் தருகின்ற மரியாதை சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தை அவரிடமே விட்டு விடுவதுதான்.

எனவே அடுத்த சூப்பர் ஸ்டார் யார் என்ற கேள்விக்கு அன்றும் இன்றும் என்றும் ரஜினிகாந்த் என்பதே சரியான பதிலாக இருக்கும்.
மேலும் வாசிக்க... "அடுத்த சூப்பர் ஸ்டார் யார்?"