Showing posts with label சினிமா ஆய்வுகள். Show all posts
Showing posts with label சினிமா ஆய்வுகள். Show all posts

Tuesday, February 28, 2023

நண்பகல் நேரத்து - மயக்கம் ஏன்?

 

சினிமா என்பது 24 கலைகளின் தொகுப்பு. அதில் ஒன்று தான், கதை சொல்லுதல். வணிக சினிமா என்பது முழுக்கவும் கதை சொல்வதையே மையமாக வைத்துச் சுழல்வது. 
 
’முழுப்படமும் கதை சொல்ல வேண்டும். ஒவ்வொரு காட்சியும் அந்தக் கதையை நகர்த்த வேண்டும். ஒவ்வொரு ஷாட்டுக்கு ஒரு அர்த்தம் இருக்க வேண்டும்’ என்பது பாலபாடம்.
 
மக்கள் கதை கேட்கவே படம் பார்க்க வருகிறார்கள். விசு, ராம.நாராயணன் போன்றோரின் படங்கள் டெக்னிகலாக சுமாராக இருந்தாலும் பெரும் வெற்றியடையக் காரணம், கதை சொன்ன விதம்.
 
எப்படி பிண்ணனி இசையோ, வசனமோ இல்லாமல் படம் எடுக்க முடியுமோ, அதே போன்றே கதையை பெரிதாக கணக்கில் கொள்ளாமலும் படம் செய்ய இயலும். ஒரு வாழ்க்கையையோ, ஒரு உணர்வையோ, ஒரேயொரு நிகழ்வையோ மட்டும் பதிவு செய்யும் சுதந்திரம் படைப்பாளிகளுக்கு உண்டு.
கலைப்படங்கள், Experimental, Avant-garde என்று பல பெயர்கள் இவ்வகைப்படங்களுக்கு உண்டு. Bergman, David Lynch, Tarkovski, Antonioni, Fellini என்று இவ்வகைப் படைப்பாளிகளை பட்டியல் இட முடியும். 
 
கதை சொல்வதோ, ஆடியன்ஸை திருப்திப்படுத்துவதோ அவர்களின் நோக்கம் அல்ல. சினிமா எனும் கலையை வெறும் சினிமாவாகவே எடுத்துப் பார்க்கும் முயற்சி அது. 
 
தமிழ் சினிமாவில் கதை கேட்டே வளர்ந்த நம் மக்களுக்கு, கதை சொல்லாத படங்களைப் பார்க்கும்போது கோபம் வருகிறது. ‘நான் இரண்டு மணி நேரம் செலவழிக்கிறேன். ஒன்னுமே சொல்லல?’ என்று கோபமாகக் கேட்கிறார்கள்.
கடந்த சில நாட்களாக ‘நண்பகல் நேரத்து மயக்கம்’ அப்படி ஒரு அதிர்வலையை சோசியல் மூடியாவில் கிளப்பிவிட்டிருக்கிறது. 
 
கதை சொல்ல ‘ஸ்ரீதர், பாரதிராஜா, மகேந்திரன், மணிரத்தினம், மிஷ்கின்’ என்று பெரும் பாராம்பரியமே இருக்கும்போது, மலையாள இயக்குநர் லிஜோ ஜோஸின் சட்டையைப் பிடித்து ’கதையை எங்க மோனே?’ என்று சண்டை போட்டுக்கொண்டு இருக்கிறார்கள். 
 
‘அவன் நடப்பான்..நடப்பான்...மெதுவாய்த்தான் வருவான்..பெருசா கதையும் சொல்ல மாட்டான்’ என்ற பொறுமையுடன் தான் இவ்வகைப் படங்களை அணுக வேண்டும்.
 
இந்த படத்தின் பிண்ணனியில் தமிழ்ப்பட வசனங்களை ஓடவிட்டது பெரும் குறையாகவே எனக்குப் பட்டது. இரண்டாம் முறை ம்யூட் செய்து பார்த்தபோது, பேரனுபமாக இருந்தது.
 
பொதுவாக ஒரு ஆவி ஒருவரின் உடம்பில் நுழையும்போது, ஆவிக்கு அது தெரியும்; பாதிக்கப்பட்டவருக்குத் தெரியாது. இங்கே அது தலைகீழாக திருப்பிப் போடப்பட்டிருக்கிறது.
 
உடலையும் வாழ்க்கையையும் இழந்துவிட்ட ஒரு தமிழ் ஆன்மா, விளக்கப்படாத ஒரு அதிசயத்தால் ஒரு மலையாள உடம்பில் வந்து அமர்ந்துவிடுகிறது. பழைய வாழ்க்கையைத் தொடர நினைக்கிறது. அது நடைமுறையில் இயலாத காரியம் என்று உணர்ந்து, பெருவலியுடன் திரும்பிச் செல்கிறது. 
 
மொழி, மதம் என்று நாம் பிடித்து வைத்திருக்கும் அடையாளங்கள் ஒரு பொருட்டே அல்ல என்றும் குறியீடாகப் பேசுகிறது இப்படம்.
’ஒரு ஆவி இன்னொரு கேரக்டரில் புகுந்தால், அந்த ஆவியைக் கொன்ற நாலுபேரை போட்டுத் தள்ளவே வரும்’ என்று கதை கேட்ட நமக்கு, ‘வந்துச்சு..அப்புறம் போய்டுச்சு’ என்று கதை சொல்வது போதாது தான். 

 
ஆனாலும், இவ்வகைப் படங்கள் ஒரு அனுபவம். உங்களின் கதை அறிவையெல்லாம் தூக்கி ஓரமாய் வைத்துவிட்டு, எளிய பிள்ளையாய் அமர்ந்தால் சில திறப்புகள் நிகழும்.

மேலும் வாசிக்க... "நண்பகல் நேரத்து - மயக்கம் ஏன்?"

Monday, December 17, 2018

விஜய் சேதுபதி-25 : ’என்ன ஆச்சு?’ - மலரும் நினைவுகள்


2010-ல் தென்மேற்குப் பருவக்காற்று மூலம் ஹீரோவாக அவதாரமெடுத்த விஜய் சேதுபதி, வெற்றிகரமாக 25ஆம் படமாக சீதக்காதியை இந்த வாரம் ரிலீஸ் செய்கிறார். எவ்விதப் பின்புலமும் இல்லாமல், சிறுசிறு வேடங்களில் ஆரம்பித்து,இன்றைக்கு மக்கள் செல்வனாக வெற்றிவாகை சூடியிருக்கும் விஜய் சேதுபதியின் பயணத்தை கொஞ்சம் திரும்பிப்பார்ப்போம்.

புதுப்பேட்டை, நான் மகான் அல்ல போன்ற ஆரம்ப காலப் படங்களில் துணைநடிகராக ஒரு ஓரத்தில் நிற்பதில் ஆரம்பித்தது அவரின் திரைப்பட வாழ்க்கை. 2004 முதல் 2010வரை சினிமாவில் கொட்டிக்கிடக்கும் உதிரிகளில் ஒன்றாகவே அவரது காலம் கடந்தது. ஆனாலும் அந்த காலகட்டத்தில் ஷார்ட் ஃபிலிம்களிலும் நடித்துக்கொண்ட்டிருந்தார்.

அதன்மூலம் தன்னை கூர்தீட்டிக்கொண்டதோடு, குறும்பட அலையில் ஒரு அங்கமாகவும் ஆனார். குறும்பட வட்டாரங்களில் தெரிந்த முகமாகவும் ஆனார். விளைவு, தென்மேற்குப் பருவக்காற்று படத்திற்கு ஹீரோவாக பரிந்துரைக்கப்பட்டார்.

சீனு.ராமசாமியும் இவருக்குள் இருக்கும் கலைஞனைக் கண்டுகொள்ள, ஹீரோவாக நமக்கு அறிமுகமானார் விஜய் சேதுபதி. ஆனாலும் இப்படி ஒரு படம் ரிலீஸ் ஆனதே பெரும்பாலானோர்க்குத் தெரியாது. படம் தேசியவிருது பெற்றபோது தான், படம் பற்றிய சிறிய பேச்சு எழுந்தது. ஹீரோவாக நடித்த படம் கமர்சியலாக ஊத்திக்கொள்ள, சுந்தரபாண்டியனில் வில்லன் வேடம்,வர்ணத்தில் முத்து கேரடர் என்று மீண்டும் போராட்ட வாழ்க்கை.

2012-ல் தமிழ் சினிமாவில் எழுந்தது, குறும்பட கலைஞர்களின் புதிய அலை. பீட்சா எனும் அணுகுண்டு, தமிழ்சினிமாவின் மத்தியில் விழுந்தது. ஏதோ சாதாரணப் படம் என்று உள்ளே நுழைந்தவர்களை உண்மையிலேயே மிரட்டித் துவைத்தது படம். கார்த்திக் சுப்புராஜ், சி.வி.குமார், சந்தோஷ் நாராயணன் போன்றோருடன் விஜய் சேதுபதி எனும் ‘நடிகனை’யும் பீட்சா எல்லாப்பக்கமும் கொண்டுசேர்த்தது.

அதே ஆண்டில் அடுத்து வந்த நடுவுல கொஞ்சம் பக்கத்தைக் காணோம் & சூதுகவ்வும் படமும் சூப்பர்ஹிட் ஆக, ஹாட்ரிக் நாயகனாக ஆனார் விஜய் சேதுபதி. மூன்று வெற்றிப்படங்கள், மூன்றிலும் வெவ்வேறு கதாபாத்திரங்கள். ‘என்ன ஆச்சு?’ எனும் ஒரே கேள்வியை முக்கால்வாசிப்படம்வரை திரும்பத் திரும்பக் கேட்டுகொண்டே இருப்பது ரிஸ்க்கான விஷயம்.அதற்கு விசே கொடுத்த மாடுலேசனும், கைவிரல்களின் நடனமும் அந்த வசனம் வரும்போதெல்லாம் கைதட்ட வைத்தன.

சூதுகவ்வும் படம் இன்னொரு வகையான அதகள அனுபவம். எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத, தமிழில் அரிதாக வெல்லும் ப்ளாக் ஹ்யூமர் மூவி. இன்றைய விஜய் சேதுபதியின் ஆரம்பம், அந்த தாஸ் கேரக்டர் என்று சொல்லலாம். அதை முழுமை செய்த படம், இதற்குத் தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா.

அமைதியானவன், சாமானியன், கூச்சசுபாவம் கொண்டவன் போன்ற சொந்த இயல்புகளைக் கொண்ட கேரக்டர்களையே செய்துவந்த விஜய் சேதுபதியை உடைத்து, இன்றைய கலகலப்பான, ‘நாட்டி பாய்’விஜய் சேதுபதியாக மாற்றிய படங்கள் என்று சூதுகவ்வும் & இ.ஆ.பாலகுமாராவைச் சொல்லலாம்.

ஆனாலும் இதை விஜய் சேதுபதி அப்போதே புரிந்துகொண்டார் என்று சொல்ல முடியாது. ஏனென்றால் அடுத்து 2014 & 2015-ல் வந்த படங்களில் இந்த மேஜிக் தொலைந்து போயிருந்தது. ரம்மி, பண்ணையாரும் பத்மினியும், வன்மம் (அய்யகோ!!) போன்ற படங்களில் எல்லாம் மீண்டும் பழைய விஜய் சேதுபதியே இருந்தார். இடையில் புறம்போக்கு, ஆரஞ்சுமிட்டாய் போன்ற சீரியஸ் படங்களும் நல்ல நடிகர் என்ற பெயரைக் கொடுத்தாலும் கமர்சியலாக எல்லாமே தோல்விப்படங்கள் தான்.

2012-ல் கிடைத்த ஹாட்ரிக் வெற்றி வெறுமனே அதிர்ஷ்டத்தில் கிடைத்த வெற்றி என்று பேச்சு எழுந்தது. இந்த மோசமான காலட்டத்தில் இருந்து, அவர் மீண்டது நானும் ரவுடி தான் மூலம். மீண்டும் ‘வெட்கங் கெட்ட நாட்டி பாய்’ அவதாரம். ரசிகர்கள் தன்னிடம் என்ன எதிர்பார்க்கிறார்கள் என்று அவரும், அவரிடம் என்ன எதிர்பார்க்கலாம் என்று ரசிகர்களும் புரிந்துகொண்ட டர்னிங் பாயிண்ட் என்று நானும் ரவுடி தானைச் சொல்லலாம். மீண்டும் வெற்றிப்பட நாயகனாக அவரை அது ஆக்கியது.

அதன்பிறகு, எத்தனை நடிகர்கள் இருந்தாலும் ஒரு சீனை தனதாக ஆக்கிக்கொள்ளும் வித்தை மேஜிக் அதன்பிறகு எளிதாக அவருக்கு கைகூடி வந்தது. சின்ன ஒன்லைனில் தியேட்டரை தெறிக்கவிடுவது, சட்டென்று எதிர்பாராத ஒன்றை செய்துவிடுவது, ஆக்சனில் மட்டுமல்லாமல் ரியாக்சனிலும் சரியான பீட்டில் எக்ஸ்பிரசன்ஸ் கொடுப்பது, ஒரு கேரக்டர் அந்த இடத்தில் என்ன செய்யும் என்பதை மனநிலை முதல் பாடி லாங்குவேஜ்வரை கணிப்பது போன்றவை விஜய் சேதுபதி மேஜிக்கின் அங்கங்கள்.

முறைக்காத, சிரிப்பு வருது - சேதுபதி
‘அவளும் இருந்தா..நானும் இருந்தேன்’ - கா.க.போ
எஸ்.ஜே.சூர்யா துப்பாக்கியை எடுத்ததும், கையில் இருப்பதை கீழே போட்டு, தளரும் கிளைமாக்ஸ் - இறைவி
ஒரே ஒரு ஓட்டை வடையுடன், முகம் காட்டாமலேயே தெறிக்க விட்ட ஓப்பனிங் - விக்ரம் வேதா
என நான் ரசித்த விசே மொமெண்ட்ஸை சொல்லிக்கொண்டே போகலாம்.

செக்கச் சிவந்த வானத்தில் அத்தனை ஸ்டார்ஸ் இருந்தும், தியேட்டரில் கைதட்டல்களை அள்ளியது விஜய் சேதுபதி தான். இத்தனைக்கும் எல்லாப் பக்கமும் ஆமாம் போட்டுக்கொண்டே போகிற கேரக்டர். அடுத்து வந்த 96 பற்றிச் சொல்லவே வேண்டாம். முழுக்க முழுக்க, நடிப்பாலேயே வெற்றி பெற்ற படம் அது. அந்த படத்தை ரீமேக் செய்யலாம்.ஆனால் விசே-த்ரிஷா பெர்ஃபார்மஸில் இருந்த கெமிஸ்ட்ரியை ரீமேக் செய்வது அவ்வளவு எளிது கிடையாது.

விஜய் சேதுபதி இன்றைக்கு மக்களால் மட்டுமல்லாமல் இண்டஸ்ட்ரியிலும் கொண்டாடப்படுவதற்குக் காரணம், நடிப்புத் திறமை மட்டுமே கிடையாது. அலட்டல் இல்லாத நேர்மையான பேச்சு, இன்னும் பழசை மறக்காத தன்மை, சேரன் போன்ற சம்பந்தமில்லாத மனிதருக்கும் தோள்கொடுக்கும் நட்புணர்வு என்று நிறையச் சொல்லலாம்.

நடிப்பையும் தாண்டி, எனக்கு பெர்சனலாக விஜய் சேதுபதியைப் பிடிக்க இரண்டு காரணங்கள் தான்.

1. அதிக படங்களில் நடிப்பது :

2016-ல் ஆறு படங்கள், 2017-ல் 4 படங்கள், 2018-ல் 6 படங்கள். என்னைப் பொறுத்தவரை இதுவே குறைவு தான். சென்ற தலைமுறையில் 10 படம், 18 படமெல்லாம் நடித்திருக்கிறார்கள். இன்றைய தலைமுறை, எல்லாத் துறையிலும், கொஞ்சம் உழைப்பு-நிறையப் பணம் என்று சொகுசாக வாழ விரும்புகிறது. 40 வயதில் இப்படி விஜய் சேதுபதி ஓடி, ஓடி உழைக்கவேண்டிய அவசியம் இல்லை. வெற்று பில்டப்பில் சம்பளத்தை ஏற்றிவிட்டு, வருடம் இரண்டு படம்செய்தால் போதும். அது அவரால் முடியும். ஆனாலும் அவர் அதைச் செய்வதில்லை.

ஒரு ஹீரோ படங்களைக் குறைக்கும்போது வரும் சிக்கல் என்னவென்றால், புதிய இயக்குநர்கள் அறிமுகமாவது கடினமான விஷயமாக ஆகும். அது தமிழ் சினிமாவை தேக்கத்தில் கொண்டுபோய் நிறுத்தும். மேலும், ஹீரோவுக்கு டிமாண்ட் அதிகரிக்கும்போது,ஒரு கதையை ஹீரோவை மட்டுமே திருப்தி செய்ய உருவாக்க வேண்டியதாகிறது. கடந்த மூன்று வருடத்தில் எந்தவொரு வெற்றியும் கொடுக்காத ஹீரோகூட ‘படத்தில் எல்லா சீனிலும் நான் இருக்கணும். முக்கியமான எல்லாவற்றையும் நானே செய்யணும்’ என்று சொல்லும் அவலம் இன்னும் நிலவுகிறது. அதனால் ஹீரோ கால்ஷீட்டிற்காக கதையை வளைத்து அட்ஜஸ்ட் செய்து தோற்கும் புதியவர்கள் இப்போது அநேகம்.

ஒரு ஹீரோ நான்கு படங்கள் செய்கிறார் என்றால், இரண்டு படங்களை புதியவர்களுக்கு கொடுக்க முடியும். ஆறுபடங்கள் செய்தால், இரண்டு ’நல்ல’ படங்களை கமர்சியல் வெற்றி எதிர்பாராமல் நடிக்க முடியும். அதனால் தான், விஜய் சேதுபதி ஓடி, ஓடி உழைப்பது ஒருவகையில் தமிழ் சினிமா வளர்ச்சிக்கு அவரின் சேவை என்கிறேன். (ஆனால், அவர் தனது படங்களின் ரிலீஸை கொஞ்சம் முறைப்படுத்த வேண்டும்.)

2. ஹீரோ இமேஜை உடைத்தது :

ஹீரோ இமேஜை விட ஒரு நல்ல படத்தில் தான் இருப்பது தான் முக்கியம் என்ற விஜய் சேதுபதியின் புரிதல் தான், அவரது வேகமான வளர்ச்சிக்கு முக்கியக் காரணம். முன்பெல்லாம் கதை விவாதத்தில் ஹீரோ என்றாலே 25 வயது வாலிபன் தான். அதற்கு மேலே போய்விட முடியாது, ஹீரோ கால்ஷீட் கிடைக்காது.

ஒரு ஹீரோ நரைத்தமுடியுடன் நடித்தால், தமிழ்சினிமாவே ‘பார்த்தீரா பராக்கிரமத்தை!’ என்று காணாததைக் கண்டதாக அலறும். ஆனால் இன்றைக்கு நாற்பது வயது மனிதனின் கதையையும் சொல்ல முடிகிறது, எழுபது வயது மனிதனின் கதையையும் சொல்ல முடிகிறது. நல்ல கதையும் சுவாரஸ்யமான திரைக்கதையுமே முக்கியம் எனும் தெளிவு பெரும்பாலான ஹீரோக்களுக்கு வந்திருக்கிறது.

மக்கள் இதை ஏற்றுக்கொள்வார்கள் என்று ஹீரோக்களும், தயாரிப்பாளர்களும், விநியோகஸ்தர்களும் இப்போது நம்புகிறார்கள். இன்னும் சொல்லப்போனால் ‘நான் நாற்பது வயது ஆளாக நடித்திருக்கிறேன்’என்பது பெருமையான விஷயமாக ஆகியிருக்கிறது. டாப் மசாலா ஸ்டார்ஸ் கூட, ஒரு குழந்தைக்கு அப்பாவாக நடிப்பது சகஜமாகியிருக்கிறது. இவையெல்லாம் 2010க்குப் பின் வந்த மாற்றங்கள். இந்த மாற்றத்திற்கு விஜய் சேதுபதியின் வெற்றியும் முக்கியக்காரணம்.

அஞ்சு பாட்டு, நாலு ஃபைட் என்று மசாலாவிற்குள் சிக்காமலேயே, முண்ணனி நட்சத்திரமாக உருவாவது சாதாரணம் அல்ல. அதை விஜய் சேதுபதி சாதித்துக்காட்டியிருக்கிறார். சீதக்காதியை அடுத்து, சூப்பர் டீலக்ஸும், பேட்டயும் வரிசையில் இருக்கின்றன. அந்த மனிதர் இப்போதும் நல்ல படங்களைத் தர, ஓடிக்கொண்டே இருக்கிறார்.


மேலும் வாசிக்க... "விஜய் சேதுபதி-25 : ’என்ன ஆச்சு?’ - மலரும் நினைவுகள்"

Saturday, September 29, 2018

செக்கச் சிவந்த வானம் - விமர்சனம் & New World (2013)


’பெரியவரைக் கொன்றது யார்? பெரியவருக்குப் பின் அந்த இடத்தில் யார்?’ என்ற இரு கேள்விகள் தான் படம்.

கடந்த மூன்று படங்களாக தடுமாறிக்கொண்டிருந்த மணிரத்னம், இதில் சொல்லியடித்திருக்கிறார். இவ்வளவு பரபரப்பான படத்தினை நிச்சயம் அவரிடம் எதிர்பார்க்கவில்லை.

பெரியவராக வரும் பிரகாஷ்ராஜ் கரியரில் இந்தப் படம் முக்கியமான ஒன்றாக இருக்கும். அலட்டல் இல்லாத நடிப்பில் மிரட்டுகிறார் மனுசன். முரட்டுத்தனமான மகனாக அரவிந்த்சாமி. என்ன தான் உயிரைக் கொடுத்து நடித்தாலும், கார்போரேட் ஆபீசர் லுக்கை மறைக்க முடியவில்லை. ‘எல்லாருமே சைஃபர் தான்’ என்று சொல்லும் இடத்தில் தான் 100% ஸ்கோர் செய்கிறார்.

சிம்புவிற்கு நல்ல கம்பேக் மூவி. அருண்விஜய்யை விட மூத்தவராக சிம்பு தெரிவது தான் சோகம். எதையும் கேர் பண்ணாத, எதையும் செய்யத் துணியும் கேரக்டர் சிம்புவிற்கு எளிதாக பொருந்திப் போகிறது.

அருண் விஜய்யை தியேட்டருக்குள் நுழையும்வரை யாரும் கண்டுகொள்ளவில்லை. அதனாலேயே அவரது கேரக்டரும் நடிப்பும் நம்மை எளிதில் வசீகரிக்கின்றன. இரண்டாம் பாதியில் அரவிந்த்சாமியைத் தேடி வீட்டிற்குள் வரும் சீன் அதகளம்.

ஜோதிகா முதல்பாதியில் வீணடிக்கப்பட்டாலும், ‘முடிவில்’ ஒரு நல்ல இம்பாக்ட்டை கொடுத்துவிட்டுப் போகிறார்.

இப்படி இத்தனை பேர் இருந்தாலும், கை தட்டல்களை அள்ளிச்செல்வது விஜய் சேதுபதி தான். மற்ற மூன்று ஹீரோக்களின் கேரக்டர்களுடன் நாம் ஐடெண்டிஃபை ஆக முடியாமல் கஷ்டப்படும்போது, சிம்பிளான ஒன்லைனர்களால் நம்மை கொள்ளை கொண்டுவிடுகிறார். யாருக்கும் பயப்படாமல், யாரையும் பயமுறுத்தாமல், படத்தில் அதிரடியாக ஒன்றுமே செய்யாமல், மொத்த அப்ளாஸையும் விஜய் சேதுபதி அள்ளிச்செல்கிறார். சான்ஸே இல்லை.

வசனங்கள் புதிதாக இருந்தன. நிறைய இடங்களில் புன்னகைக்க முடிந்தது.
படத்தில் இரண்டு ட்விஸ்ட்கள். கடைசி ட்விஸ்ட்டை மட்டும் யூகிக்க முடிந்தது.

மணிரத்தினத்தின் முந்தைய மூன்று படங்களை ஒப்பிடுவதாலேயே, இந்தப் படத்தை கொண்டாடுகிறோம். தனியே இந்தப் படத்தைப் பார்த்தால்...
மணிரத்னம் டச் மிஸ்ஸிங்..மனதில் நிற்கிற ஷாட், லைட்டிங் மேஜிக் என்று எதுவுமே மனதில் நிற்கவில்லை.

மூன்று கேரக்டர்களுக்கும் முக்கியத்துவம் தர சில சீன்கள்..அவை நன்றாகவே இருந்தாலும், யாருடனும் நாம் கனெக்ட் ஆக முடியாமல் வெறுமனே வேடிக்கை பார்க்கும் மனநிலை தான் நமக்கு. எனவே யார் செத்தாலும் பெரிதாக ஃபீல் பண்ண முடியவில்லை.

முதல்பாதி வேகமும் கலகலப்புமாக போய்விடுகிறது. இரண்டாம் பாதியை சகோதரச் சண்டையை வைத்தே ஓட்ட வேண்டிய கட்டாயம். எனவே கொஞ்சம் ஸ்லோவாகவும் காதைச் சுற்றி மூக்கைத்தொடுவதாகவும் படம் நகர்கிறது. கடைசி இருபது நிமிடங்களில் தான் படத்தில் கதை நகர்கிறது.
சோக சீனா? ’போடு பூமி..பூமி’ பாடலை..ஆக்சன் சீனா? போடு ’சிவந்து போச்சு நெஞ்ச’ - என்று பிஜிஎம்மில் கொடுமை செய்திருக்கிறார்கள். சோக சீனில் கிக்கான வாய்ஸில் பூமி..பூமி ஒலிக்கும்போது ஜென் நிலைக்குப் போகிறோம்.
ஹிந்தி-தெலுகு-தமிழ் என எல்லா ரசிகரையும் திருப்திப்படுத்த முனையாமல், திருந்திய மணிரத்தினத்திற்கு ஒரு கோடி நன்றிகள். அதற்காகவே இந்தப் படத்தை பார்க்கலாம்!!



New World(2013) Vs CCV (2018)

பொதுவாக இணையத்தில் எழுப்பப்படும் ’காப்பி..காப்பி’ கூச்சலுக்கு எதிரானவன் நான். இதுபற்றி விரிவாக பலமுறை எழுதியிருக்கிறேன். டேக்கன் படம் முதலில் வந்து மகநாதி பிறகு வந்திருந்தால், மகாநதியை காப்பி என்று சொல்லியிருப்பார்கள். அந்தளவிற்கு மண்வாரித் தூற்றும் போக்கு இங்கே உண்டு.

நாயகன் படம் வரதராஜ முதலியாரின் உண்மைக்கதை. அதை காட் ஃபாதர் படத்தின் மேக்கிங் ஸ்டைலை எடுத்தாண்டு சொன்னார்கள். டைம் மேகசின் உலகின் சிறந்த 100 படங்களில் ஒன்றாக நாயகன் படத்தினை லிஸ்ட் செய்திருக்கிறது. அந்த லிஸ்ட்டில் காட் ஃபாதரும் உண்டு. இது தெரிந்தும், காட் ஃபாதர் காப்பி தான் நாயகன் என்று இன்றுவரை சொல்வோர் உண்டு.

தேவர் மகன் கதையில் காட் ஃபாதரின் தாக்கம் அதிகம் உண்டு. ஆனாலும் அது வேறு கதை தான். கட் ஃபாதருக்கும் மைக்கேலுக்கும் வன்முறை மேல் வெறுப்பு கிடையாது, இதை விட்டு வெளியேற வேண்டும் என்ற எண்ணமும் கிடையாது. ஆனால் பெரிய தேவரும் சக்திவேலும் அடிப்படையிலேயே வன்முறைக்கு எதிரானவர்கள்.

ஒரு வன்முறைச் சூழலில் இருக்கும் இனத்தை, அதிலிருந்து மீட்காமல், அப்படியே வைத்திருந்து காப்பாற்றுபவர்கள் காட் ஃபாதர்& சன்ஸ்; ஒரு வன்முறைச் சுழலில் சிக்கிக்கொண்ட இனத்தை மீட்டு, வெளியே கூட்டிட்டுப் போக முயல்பவர்கள் பெரிய தேவரும் மகனும். எனவே இங்கே கதையே வேறு ஒன்றாக பரிமாணம் பெற்றுவிடுகிறது. மேக்கிங்கும் காட் ஃபாதரில் இருந்து வேறுபட்டது என்பதால், தேவர் மகன் தனித்துவமான படமாக ஆகிறது.

ஆங்கிலத்திலும் இத்தகைய படங்கள் உண்டு. Bitter Moon & Gone Girl படங்கள் ஒரு உதாரணம். இரண்டுமே ஒரே கதைக்களம் தான். ஆனால் இரண்டு படங்களின் பேசுபொருள் வேறு;எனவே கதையும் வேறு ஆகிறது. யாரும் அங்கே Gone Girl படத்தை காப்பி என்று சொல்வதில்லை, அதையும் கொண்டாடவே செய்கிறார்கள்.

இங்கே காப்பி என்ற ஒன்று கிடையாதா என்றால் நிச்சயம் உண்டு. அப்படியே ஒரு டிவிடியைப் பார்த்து,நம் சூழலுக்கு ஏற்பவும் மாட்டிக்கொள்ளாமல் இருக்கவும் சில மாற்றங்களைச் செய்து ஒரு கதையைத் தேற்றிவிடுவார்கள். கதையையும் நானே எழுதுவேன் என்று அடம்பிடிக்கும் கதையறிவற்ற ஜந்துக்கள் இதைச் செய்வது இங்கே வழக்கம்.

New World படத்தினை இன்று பார்த்தபோது, உண்மையிலேயே பெரிய அதிர்ச்சிக்கு ஆளானேன். ’இப்படி அப்பட்டமாக ஒரு கதையை உருவ வேண்டிய அவசியம் மணி சார் என்ற மகானுக்கு ஏன் வந்தது? தமிழ் மண்ணின் கதைகளையெல்லாம் தமிழ் சினிமா பேசி முடித்துவிட்டதா?’ என்று குழம்பிப் போனேன்.

New World படத்தின் கதை : ஒரு தலைமை கொல்லப்பட, தலைமைப் பதவிக்காக முட்டிமோதும் மூன்று பேர்..தலைமையைக் கொன்றது யார், அடுத்த தலைமை யார்? என்பது தான் கதை. கூடவே ஒரு கேஷுவலான ’அண்டர்கவர் ஆபரேசன்’ போலீஸ்கார்..அய்யகோ!

திரைக்கதை, மேக்கிங் என்று எல்லாவற்றிலும் வேறு பாதையில் செக்கச் சிவந்த வானம் பயணித்தாலும், கதை என்பது அடிப்படையில் அங்கே இருந்து உருவப்பட்டது தான். மாட்டிக்கொள்ளாமல் இருக்க, ஒரு முக்கியமான ட்விஸ்ட்டை மாற்றி, பதவிக்கு மோதும் முன்று பேரை அண்ணன் தம்பிகளாக்கி, கைமா பண்ணியிருக்கிறார்கள், நமது ஜந்துக்கள் ஸ்டைலில்.

முடிவில் சப்டைட்டில் இல்லாமல் New World படத்தைப் பார்த்து எழுதிய கதை போல் இருக்கிறது செக்கச் சிவந்த வானம். தமிழ்சினிமாவின் ஐகான்களில் ஒருவரான மணிரத்னம் இதைச் செய்திருக்கக்கூடாது.

அவர் சொந்தமாக யோசித்த படங்களே காப்பி என்று குற்றம் சாட்டப்படும் சூழலில், இணையம் உலகத்தில் உள்ள சினிமாக்களை உள்ளங்கையில் கொண்டு வந்துவிட்ட காலத்தில், மணிரத்னம் இதைச் செய்திருக்கவே கூடாது!

மேலும் வாசிக்க... "செக்கச் சிவந்த வானம் - விமர்சனம் & New World (2013)"

Saturday, September 15, 2018

மேற்குத் தொடர்ச்சி மலை – தமிழில் ஒரு உலக சினிமா


ஒரு படத்தின் கதாநாயகன் என்பவன் எதிலும் ஜெயிக்கும் அசகாய சூரன், படத்தின் காட்சிகள் என்பவை கதாநாயகனின் சாகசங்களின் தொகுப்பு என்பதே வழக்கமான மைய நீரோட்டப் படங்களின் அம்சங்களாக இருக்கும். ஆனால் இயல்பு வாழ்க்கையில் சின்னச்சின்ன ஆசைகளுடன், எவ்வித சாகசங்க நிகழ்வுகளிமின்றி முடியும் மனிதர்களே அதிகம்.

காட்சி இலக்கியமான சினிமாவுக்கு அத்தகைய மனிதர்களைப் பதிவுசெய்யும் கடமை உண்டு. அந்தவகையில் உருவாகியிருக்கும் படம் தான் மேற்குத் தொடர்ச்சி மலை.

பொழுதுபோக்கு சினிமாக்களுக்கென்று ஒரு திரைமொழி உண்டு. அதே போன்றே திரைக்கதை/ஒளிப்பதிவு/எடிட்டிங் போன்ற தொழில்நுட்ப விஷயங்களை வைத்து புத்திசாலித்தனமாக விளையாடும் சினிமாக்களுக்கென்று ஒரு திரைமொழி உண்டு. இந்த மாதிரியான ஜிம்மிக்ஸ் வேலைகள் இல்லாமல் உள்ளதை உள்ளபடி பதிவு செய்வதை மட்டுமே செய்யும் சத்யஜித் ரே வகைப் படங்களுக்கென்று ஒரு டாகுமெண்டரி ஸ்டைல் திரைமொழி உண்டு.

மேற்குத் தொடர்ச்சி மலை அந்தவகைப் படம். எனவே அந்த திரைமொழியை கிரகித்துக்கொள்ளும் மனநிலையுடன் இந்தப் படத்தை அணுக வேண்டியது அவசியம்.

ரங்கசாமி எனும் மனிதனின் கதையைப் பேசிக்கொண்டே, அங்கே வாழும் எளிய மனிதர்களின் கதையை போகிற போக்கில் பதிவு செய்கிறது படம். அந்தவகையில் படத்தில் ரங்கசாமி மட்டுமே கதாநாயகன் என்று சொல்லிவிடமுடியாது.

படத்தின் முதல் நாற்பது நிமிடம், ரங்கசாமி காலையில் குளித்துக் கிளம்பி மலையுச்சியை அடையும் பயணத்தை மட்டுமே பதிவு செய்கிறது. பத்திரிக்கை கொடுக்க வரும் கேரக்டர் வாயிலாக,அதில் உள்ள சிரமங்களும் அவர்களின் பழக்க வழக்கங்களும் இயல்பாகப் பதிவு செய்யப்படுகின்றன.

அந்த மனிதர்கள் ஒருவருக்கொருவர் உதவிக்கொள்வதும், மெலிதாக கேலிசெய்துகொள்வதும் அவர்களின் வீம்பும் எவ்வித ஜோடனையும் இன்றி காட்சிகளாக விரிகின்றன. ரங்கசாமி நிலம் வாங்கப் போகிறான் என்பது அமைதியான நதியாக இந்த காட்சிகளுக்கு இடையே ஓடிக்கொண்டிருக்கிறது.

ரங்கசாமி ஏன் நிலம் வாங்க வேண்டும் என்பதை வசனங்களோ, கதாநாயகனின் தேவைகள் மூலமோ சொல்லப்படுவதில்லை. அதை நாம் புரிந்துகொள்ள, வனகாளி கேரக்டரின் வாழ்க்கையே போதுமானதாக இருக்கிறது. இளவட்டங்களுடன் போட்டிபோட்டு மூட்டை தூக்கி, வயோதிகத்தால் ரத்தம் கக்கிச் சாகும் வனகாளி, ரங்கசாமி பாத்திரத்தின் வருங்கால வடிவம். மலை மத்தியில் மரணித்த எத்தனையோ வனகாளிகளுள் ஒருவனாக ரங்கசாமியும் ஆகிவிடும் ஆபத்தை,நம் மனதில் ஆர்ப்பாட்டமில்லாமல் படம் பதியச் செய்கிறது.

கல்யாணம் என்பதைக்கூட கதாநாயகனால் ரொமாண்டிக்காக அணுக முடிவதில்லை. அதையும் கூடுதல் பொறுப்பு என்பதாகவே அணுகி யோசனையில் ஆழ்கிறான். ஹீரோயின் வெட்கச்சிரிப்புடன் நிற்க, ரங்கசாமி யோசனையில் ஆழ்கின்ற அந்தக் காட்சி இந்தப் படத்தில் குறிப்பிடத்தக்க ஒன்று.

இயக்குநர் லெனின் பாரதி, ஒளிப்பதிவாளர் தேனி ஈஸ்வர், படத்தொகுப்பாளர் காசி விஸ்வநாதன் மூவரும் இணைந்து உருவாக்கியிருக்கும் இந்த திரைமொழி, எளிதில் நம் தமிழ்சினிமாவில் காணக்கிடைப்பது அல்ல.

இளையராஜாவின் இசை இயக்குநரின் கூப்பிட்ட குரலுக்கு மட்டும் வந்து கூவுகிறது. பிண்ணனி இசை என்பது கதை சொல்ல கை கொடுக்கும் தோழன் மட்டுமே என்ற தெளிவு இயக்குநருக்கும் இசைஞானிக்கும் இருந்திருக்கிறது.

படத்தில் சினிமாத்தனமான வசனங்கள் என்று ஏதுமில்லை. அந்த சூழலில் அந்த மக்கள் என்ன பேசுவார்களோ, அவை மட்டுமே வசனங்களாக வருகின்றன. வழக்கமான சினிமாவுக்கு வசனம் எழுதுவதைவிட, இது கஷ்டம். அதை வசனகர்த்தா ராசீ.தங்கதுரை சிறப்பாகச் செய்திருக்கிறார்.

கங்காணி, கடைக்கார பாக்கியம்மாள், கழுதைக்கார கிழவர், கிறுக்குக்கிழவி, கணக்கு, ஹீரோவின் தோழன், பாய், ஏலக்காய் முதலாளி என ஒவ்வொரு கதாபாத்திரமும் தனித்துவத்துடன் நம் நெஞ்சில் நிறைகிறார்கள். எல்லோருக்கும் ஒரு வாழ்க்கை இருக்கிறது. ஒரே காட்சியில்கூட அவை உணர்த்தப்பட்டுவிடுகின்றன.

கதாநாயகனாக நடித்திருக்கும் ஆண்டனி மற்றும் படக்குழுவினரின் கடின உழைப்பை எவ்வளவு பாராட்டினாலும் தகும். ‘துபாயை என் மொட்டை மாடிக்கு கொண்டு வாங்க’ என்று சொல்லும் ஜிகினா ஹீரோக்களுக்கிடையே, உண்மையான ஹீரோக்களாக இவர்கள் உயர்ந்து நிற்கிறார்கள். சினிமாவை இவ்வளவு சின்சியராக அணுகிய தன்மைக்கே தனி பாராட்டுவிழா நடத்த வேண்டும்.படத்தை தயாரித்த விஜய் சேதுபதியும் நம் நன்றிக்கு உரியவர்.

குறைகளற்ற படைப்பென்று எதுவுமில்லை. அங்கிருக்கும் மனிதர்களையே நடிக்க வைத்திருப்பதால், சில காட்சிகளில் நாடகத்தனமான வசன ஒப்புவித்தல் நடந்திருக்கிறது. அது காட்சிகளின் வீரியத்தைக் குறைக்கிறது.

ரங்கசாமி நிலம் வாங்கும் போராட்டத்தில் ஏலக்காய் மூட்டை விழுந்து சிதறும் காட்சி நம்மைப் பதற வைக்கிறது. அது விழுவதற்கான காரணம், தற்செயலானது. வாழ்க்கையில் இப்படியான சிறிய தற்செயல் நிகழ்வுகள் பெரும் பாதிப்பை ஏற்படுத்துவதைக் காணலாம். எனவே அந்தக் காட்சியை உளப்பூர்வமாக வலியுடன் ஏற்றுக்கொள்கிறோம்.

ஆனால் ரங்கசாமி கொலைசெய்யப் போகும் காட்சி படத்தின் ஆகப்பெரிய குறை. அதுவரை கட்டிக்காத்து வந்த யதார்த்தத்தை ஏலக்காய் மூட்டையாக இயக்குநர் போட்டு உடைக்கும் இடம் அது.

கல்யாணம் செய்வதற்கே யோசிப்பவன் கதாநாயகன். சகாவு கூப்பிட்டவுடன் அரிவாளுடன் கிளம்புவான் என்பது அபத்தம். கம்யூனிஸ்ட் தோழரின் துரோகத்தால் பாதிக்கப்படுவது கூலித்தொழிலாளிகள். நில முதலாளி ஆகிவிட்ட கதாநாயகனுக்கு அதனால் பாதிப்பில்லை. ரோடு வருவதும் கதாநாயகனின் நிலத்தைப் பிடுங்குவதாக இல்லை.

பின்னே, எதற்காக கதாநாயகன் கொலைசெய்யப் போகிறான்? அப்படிப் போனால் தான் ஜெயிலுக்குப் போக முடியும், நிலத்தை இழக்க முடியும்’ என்பதாலா? இந்த இடத்தில் இறுதிக்காட்சிவரை வரும் எல்லாமே வலிந்து திணிக்கப்பட்டவை ஆகின்றன.

ஆனாலும்…

’காணி நிலம் வேண்டும்’ எனும் பாரதியின் ஆசை தான் ரங்கசாமியின் ஆசையும். அதை லட்சியம் என்று சொல்லிவிட முடியாது. அதற்காக பெரிய சாகசங்களில் ரங்கசாமி ஈடுபடுவதில்லை. வருகிற வாய்ப்பை பயன்படுத்த முனைகிறான். தோற்றால், மெல்லிய வருத்ததுடன் அதைக் கடந்து செல்கிறான். உட்கார்ந்து அழவோ,திட்டங்கள் தீட்டவோ முடியாத அளவிற்கு, விடியற்காலையில் இருந்து மாலை வரை வாழ்க்கை அவனை ஓட வைத்துக்கொண்டே இருக்கிறது.

நம்மை பெரும் அளவில் தொந்தரவு செய்வது இது தான். கொஞ்சம் கண் திறந்து சுற்றுமுற்றும் பார்த்தால், விதிக்கப்பட்ட வாழ்க்கையை நொந்தபடி வாழ்ந்து மடியும் லட்சக்கணக்கான ரங்கசாமிகளைப் பார்க்கலாம்.

பெருவாரியான சினிமாக்கள் நம்மை மயக்கத்தில் ஆழ்த்தி அனுப்பும்போது,முகத்தில் அறைந்து சபிக்கப்பட்டவர்களைப் பார்க்கச் சொல்கிறது.நமது சென்ற தலைமுறைகளில் ஒன்று இப்படித்தான் தடயமே இல்லாமல் வாழ்ந்து மறைந்ததும் நினைவுக்கு வந்து தைக்கிறது.

சமையல் கட்டில் ஓரத்தில் கிடக்கும் ஏலக்காய் என்பதை இனி நாம் இயல்பாகப் பார்க்க முடியாது. கடுகும் சீரகமும்கூட ரங்கசாமிகளின் முதுகில் ஏறி நம்மை வந்தடைந்திருக்கலாம்.

சக மனிதர்களை மட்டுமல்லாமல், அன்றாடம் நாம் பயன்படுத்தும் பொருட்களைக்கூட கனிவுடன் பார்க்க வைப்பதால் தான் இது உலக சினிமா ஆகிறது.
மேலும் வாசிக்க... "மேற்குத் தொடர்ச்சி மலை – தமிழில் ஒரு உலக சினிமா"

Wednesday, July 4, 2018

சுப்ரமணியபுரம் : தமிழில் ஒரு உலக சினிமா




உலகம் முழுக்க பல்வேறு மொழிகளில் பல்லாயிரம் சினிமாக்கள் படைக்கப்பட்டுக்கொண்டே இருக்கின்றன. அவற்றில் சில முத்துக்கள் மட்டுமே உலக சினிமா என்று கொண்டாடப்படுகின்றன. உலக சினிமா என்பதற்கான வரையறை சிக்கலானதாக இருந்தாலும், எளிமையாகப் பின்வருமாறு சொல்லலாம். தன் சொந்த மக்களின் வாழ்க்கையை யதார்த்தமாக முன்வைக்கின்ற, அதே நேரத்தில் மனித வாழ்வின் அபத்தத்தை/மேன்மையை நமக்கு உறைக்கின்றாற் போன்று சொல்கின்ற, இதுவரை நாம் தரிசிக்காத கோணத்தில் வாழ்வைப் பேசுகின்ற சினிமாவே உலக சினிமா ஆகின்றது. அந்த வகையில் இந்த தலைமுறை இயக்குநர்களின் படைப்பில் முக்கியமான உலக சினிமாவாக நிற்கின்றது சுப்ரமணியபுரம்.

படத்தின் கதை நீங்கள் அறிந்ததே என்றாலும் சுருக்கமாக அதைப் பார்த்துவிட்டே முன்னகர்வோம். 1980ல் வாழ்ந்த அழகர், பரமன், டும்க்கான், காசி, டோப்பன் ஆகிய 5 நண்பர்களின் கதை இது. அழகருக்கு முன்னாள் கவுன்சிலர் பெண் துளசிடன் காதல். வேலையில்லாமல், ஊரில் சண்டியர்த்தனம் செய்யும் இவர்களை போலீஸ் தொல்லையில் இருந்து காப்பது அந்த அரசியல்வாதியே. எனவே அழகரும் நண்பர்களும் அந்த அரசியல்வாதியின் நலனுக்காக ஒரு அரசியல் கொலையைச் செய்துவிட்டு, ஜெயிலுக்குப் போகிறார்கள். அரசியல்வாதி தங்களைக் காப்பார் எனும் நம்பிக்கை பொய்த்துப்போகையில், சிறையில் இருக்கும் இன்னொரு தாதா உதவுகிறார். அவருக்காக இன்னொரு கொலை செய்ய, வன்முறைச் சுழலுக்குள் வாழ்க்கை சிக்குகின்றது. அரசியல்வாதியைப் பழி வாங்க இவர்கள் முயல, காதலியின் துரோகத்தால் அழகர் கொல்லப்படுகிறான். அதற்கு பரமன் பழி வாங்க, காசியின் துரோகத்தால் பரமன் கொல்லப்படுகிறான். சிறைத்தண்டனை முடிந்து திரும்பும் காசியை, டும்க்கான் காத்திருந்து பழி வாங்குகிறான்

இதில் சுவாரசியமான விஷயம் என்னவென்றால் கிளைமாக்ஸ் காட்சி ஷூட்டிங்வரை, சசிக்குமார் தவிர யாருக்குமே படத்தின் கிளைமாக்ஸ் தெரியாது. எனவே தான் கண்கள் இரண்டால் பாடலிலும் படத்திலும் காதல் உயிர்ப்புடன் இருந்தது

மனிதர்களின் வாழ்க்கையின் பெரும் அபத்தமே, அது நம்பிக்கை எனும் பலவீனமான கண்ணியால் இணைக்கப்பட்டிருப்பது தான்.  அந்த நம்பிக்கைக்கண்ணி அறுந்தால், ஒரு நண்பருடன் அறையைப் பகிர்வதில் ஆரம்பித்து, பிறருடன் நம் சொந்த விஷயங்களைப் பகிர்வது வரை எல்லாமே நின்று விடும். சமூக வாழ்க்கையே சிக்கலாகி விடும். சமூக வாழ்க்கையின் அச்சாணியே அந்த நம்பிக்கையில் தான் இருக்கிறது.

எனவே தான் எல்லாக் கலைகளும் வாழ்க்கையின் மேன்மையை முன்வைக்கின்றன. வாழ்க்கையின் மற்றும் உறவுகளின் நேர்மறைத்தன்மையைப் பேசுகின்றன. ’பியூட்டிபுல் மைண்ட்படம் போன்று வாழ்க்கையை நேர்மறையாய் எதிர்கொள்வது பற்றிப் பேசுகின்றன. ஆனாலும் வரலாறு முழுக்க, துரோகத்தின் ரத்தத்தடம் விரவிக்கிடக்கின்றது. வாழ்க்கையில் ஏதேனும் ஒரு கட்டத்தில் ஏதேனும் ஒரு துரோகத்தை எதிர்கொள்ளாமல் தப்பிப்பவர் வெகு சிலரே

ஆனாலும் தமிழ்சினிமா போன்ற கமர்சியல் ஊடகத்தில், துரோகம் போன்ற வாழ்வின் அபத்தங்களை முன்வைப்பது கடினமான் காரியம். அதை முன்வைத்து வெற்றி பெறுவது மிகவும் கடினமான காரியம். அந்த வகையில் தான் சுப்பிரமணியபுரம் தமிழ்சினிமாவின் மகுடங்களில் ஒன்றாக இருக்கிறது

உண்மையில் காதலின் துரோகம் சினிமாவுக்குப் புதிதல்ல. ஒரு கதாநாயகி ஏமாற்றுவதும், இன்னொரு கதாநாயகிரோசாப்பூ சின்ன ரோசாப்பூஎன்று எண்ட்ரி கொடுப்பதும் நம் சினிமாக்களில் சகஜம் தான். ஆனாலும் அவற்றை துரோகம் என்பதை விட ஏமாற்றுதல்/கழட்டி விடுதல் என்றே நாம் புரிந்து கொள்கிறோம். ஏனென்றால் அது திரும்பிப் போக முடியாத ஒற்றை வழிப்பாதை அல்ல. ஆனால் துரோகம் என்பது நம்மை முழுமையாக ஆன்மரீதியாகவோ, உடல்ரீதியாகவோ அழித்து விடுவது

சுப்பிரமணியபுரத்தில் துளசியின் துரோகம், முற்றாக அழகரை அழித்து விடுகிறது. அதனால் தான் இந்தப்படம் பார்வையாளனுக்கு பேரதிர்ச்சியைக் கொடுத்தது. அதுவும் வாழ்க்கைக்கு மிக நெருக்கமான, யதார்த்தமான ஒரு கதையில், இத்தகைய முடிவு தந்த வலி பெரியது

அது போன்றதே காசியின் துரோகமும். துளசியின் துரோகத்திற்காவது லீடு காட்சிகள் உண்டு. காசியின் துரோகம், முகத்தில் அறைவது. ஒரு நிமிடம், நாம் கொண்டிருக்கும் எல்லா நம்பிக்கைகளையும் சிதற வைப்பது. அவ்வாறு சொல்ல வந்த விஷயத்தை, நேரடியாக தெளிவாகச் சொன்னதாலேயே இந்தப் படம் உயர்ந்த இடத்தினைப் பெற்றது. ஆனாலும் காசியின் கேரக்டர், காசு இல்லாமல் சந்திக்கும் அவமானங்கள் படம் முழுக்க சொல்லப்பட்டிருக்கும். ஒரு பீடிக்குக்கூட கெஞ்சும் நிலைமை, எச்சில் டீ முகத்தில் பட்டாலும் ஒன்றும் சொல்ல முடியாத சூழ்நிலை என பணம்-மரியாதை இல்லாமல் வாழும் ஒரு கேரக்டராகவே அது சித்தரிக்கப்பட்டிருக்கும். அதனாலேயே அவனது துரோகம், அதிர்ச்சி என்றாலும் யதார்த்தமே என்று உறைத்தது.

சுப்பிரமணியபுரம் படத்தின் சிறப்பே, சினிமாவில் யாரும் சொல்லாத புதிய விஷயங்களைக் கொண்டிருந்ததே. அதே நேரத்தில் அந்த புதிய விஷயங்கள், நாம் வாழ்வில் சந்திக்கும் உண்மையாகவும் அமைந்தது தான் படத்தின் தரத்தைக் கூட்டியது. படத்தில் வில்லன் என காசியையோ, துளசியையோ, காசியின் சித்தப்பா கனகுவையோ நாம் நினைத்தாலும், படத்தில் முக்கிய வில்லன் கேரக்டர், கவுன்சிலரின் மனைவி தான்! அவள் பேசும் ஒரு வசனம் தான் பலரின் வாழ்வைப் புரட்டிப்போடுகிறது. முன்னாள் கவுன்சிலர் ஆகி, பதவி-அதிகாரம் இழந்து நிற்கும் கணவனைப் பார்த்து அவள் சொல்லும்திருவிழாக்குக்கூட மூஞ்சியைக் காட்ட முடியாம, மாடில போய் உட்கார்ந்துக்கிட்டாரு பொட்டச்சி மாதிரிஎனும் வசனம் தான் பலரின் வாழ்வை அழிக்கும் நெருப்புப் பொறி.

வாழ்க்கையில் யாரும் முழு வில்லனாகவோ முழு கதாநாயகனாகவோ இருப்பதில்லை. சூழ்நிலைக்கேற்ப, உறவுக்கேற்ப ஏதேனும் ஒரு வேடத்தை அணிந்து கொள்கிறோம். அதை சசி இந்தப் படத்தில் நன்றாகவே காட்டியிருப்பார். கேரக்டரைசேசனில் அத்தகைய நுணுக்கமான வேலைப்பாடுகளில் தான் சசிக்குமாரின் திறமை தெரிகின்றது. கவுன்சிலரின் மனைவிக்குதன் கணவன் நிரந்தர வேலையிலோ, மதிப்பு தரும் பதவியிலோ இல்லையேஎனும் சராசரிப் பெண்ணின் கவலை. கவுன்சிலருக்கு முன்பு மாதிரி கௌரவமாக வாழ பதவி வேண்டுமே எனும் கவலை, இதனால் எழும் கணவன் - மனைவி பிரச்சினையில் குடும்ப அமைதி குலையுதே எனும் கவலை கனகுவுக்கு, துளசிக்கோ காலில் விழும் குடும்பத்தை எப்படி உதறுவது எனும் கவலை, காசிக்கு பணம்-மரியாதை இல்லையே எனும் கவலை. இப்படி படத்தில் எல்லாருமே அவரவர்க்குரிய நியாயங்களுடன் தான் நிற்கின்றார்கள். நீங்கள் எந்த பாத்திரத்தின் சார்புநிலை எடுத்தாலும், அந்த பாத்திரத்தை நியாயப்படுத்திவிட முடியும். தமிழ்சினிமாவில் சமீபகாலத்தில், இத்தகைய கேரக்டரைசேசனுடன் எந்தவொரு படமும் வந்ததில்லை என்று சொல்லலாம்.

இயல்பு வாழ்க்கைக்கும், ரவுடியிசம் போன்ற வன்முறை வாழ்க்கைக்கும் இடையில் இருப்பது உணர்ச்சிகளால் ஆன ஒரு மெல்லிய திரை தான். எந்த நிமிடமும் சிறு உணர்ச்சிவசப்படலும் அந்த மெல்லிய திரையைக் கிழித்து, நம்மை வேறு உலகத்திற்குள் தள்ளி விடும். உணர்ச்சிவசப்பட்டு கையை/தலையை வெட்டிவிட்டு, சிறைத்தண்டனை பெற்று, ஒரு நிமிட தவறுக்காக வாழ்நாளெல்லாம் நரகமாக்கிக்கொண்டோர் ஏராளம். சிறையிலிருந்து மீண்டும் வெளியே வந்தாலும்,சமூகத்தில் மீண்டும் இணக்கமாக வாழ்வது பெரும் சவாலான விஷயம். சுப்பிரமணியபுரம் படத்தின் சிறப்பம்சம், வன்முறையில் இறங்குவதில் உள்ள அபாயத்தை ஜோடனையின்றி நேரடியாகக் காட்டியது தான். பழக்கத்துக்காக கொலை செய்வது எனும் மதுரைப்பகுதி வாழ்வியலைச் சொன்னதுடன், அதில் இறங்கியவர்கள் எப்படி தன் மொத்த வாழ்க்கையைத் தொலைக்கின்றார்கள் என்றும் பேசியது இந்தப் படம்.

இந்த படத்தை ஒவ்வொரு முறை பார்க்கும்போதும், புதிய புதிய விஷயங்களை நாம் கண்டுகொள்ள முடிகிறது. இந்தப் படத்தின் உண்மையான ஹீரோ, கால் ஊனமான டும்க்கான் தான் என்பது முதல்முறை பார்க்கும்போது நமக்குத் தெரிவதில்லை. அழகர்-துளசி போன்றே இன்னொரு காதல் ஜோடியும் படத்தில் பேக்ரவுண்ட்டில் தோன்றிக்கொண்டே இருக்கும். போலீஸ் ஸ்டேசனுக்கு அழகர் குரூப் பற்றி போன் செய்து தகவல் சொல்வது கனகு தான், 1980 எனும் எம்.ஜி.ஆரின் முதல் ஆட்சிக்கால அரசியல் என பல விஷயங்களை அங்காங்கே புதையல் போன்று மறைத்து வைத்திருக்கிறார் சசிக்குமார்.

மொத்தத்தில் இந்த கலைப்படைப்பைப் புரிந்துகொள்ள, நம் வாழ்க்கையை ஒப்பிட்டுப் புரிந்துகொள்ள மீண்டும் ஒருமுறை சுப்பிரமணியபுரம் பாருங்கள்








மேலும் வாசிக்க... "சுப்ரமணியபுரம் : தமிழில் ஒரு உலக சினிமா"