Showing posts with label ஆன்மிகம். Show all posts
Showing posts with label ஆன்மிகம். Show all posts

Monday, June 19, 2017

டுபாக்கூர்களிடம் ஜோசியம் பார்க்கப் போகலாமா?


பெரும்பாலான ஜோதிடர்கள் அரைகுறைகள், டுபாக்கூர்கள். அதுபற்றிய பதிவு இது.

நான் எப்போது இந்தியா போனாலும் செய்வது, ஒரு ஜோதிடரைப் பார்த்துவிடுவது. அதை விட சிறந்த பொழுதுபோக்கு இல்லையென்றே சொல்வேன். நானே ஒரு அரைகுறை ஜோசியன் என்பதால் ஆரம்பித்த விளையாட்டு இது.

ஒருவன் ஜோசியம் பார்க்க வருகிறான் என்றால் அவனுக்கு ஏதோவொரு பிரச்சினை என்பது ஜோதிடர்களின் திடமான நம்பிக்கை. படிப்பு, வேலை, கல்யாணம், பணம், உடல்நலம் என ஏதோவொன்றில் சிக்கல் என்று அவர்களாகவே நினைத்துக்கொள்கிறார்கள். நான் அப்படி நாறிக்கிடந்த காலங்களில் ஜோதிடம் பக்கம் திரும்பியதில்லை. இப்போது ஒரு ஹாபியாக ஜோதிடரை பார்ப்பது என் வழக்கம். சிலநேரங்களில் வீட்டு அம்மணியும் வேடிக்கை பார்க்க வருவதுண்டு.

இப்படி ஒரு கிறுக்கன் சும்மா வருவான் என்று அவர்கள் கனவிலும் நினைத்திருக்க மாட்டார்கள் போலும். ஜாதகத்தை பவ்யமாக கையில் கொடுத்துவிட்டு எதிரே அமர்வேன். ஜோதிடர் கொஞ்ச நேரம் ஜாதகத்தையும் என்னையும் எடை போடுவார். பொதுப்பலன்களுடன் ஜோதிடர் ஆரம்பிப்பார்.

‘இந்த ஜாதகர் கடின உழைப்பாளி’ என்று அவர் ஆரம்பிக்கவும் தங்கமணி என்னைப் பார்ப்பார். ‘இந்த விஷயம் உங்க மேனேஜருக்குத் தெரியுமா?’ என்பது பார்வையின் பொருள்! இந்த பார்வைப் பரிமாற்றம் ஜோதிடரை பீதியாக்கும். அடுத்த அஸ்திரத்தை எடுத்துவிடுவார். ‘ஏழில் சந்திரன்..அழகான, லட்சணமான மனைவி அமைவாள்’ என்பார். நான் ‘ஆஹான்’ என்றபடியே வீட்டுக்காரம்மாவை திரும்பிப்பார்ப்பேன். அவரோ ‘சரி, சரி...தானிக்குத் தீனி சரியாப் போச்சு’ என வேறுபக்கம் திரும்பி சுவரை வெறிப்பார். இதிலேயே ஜோதிடர் வெறுத்துவிடுவார்.

அடுத்து கொஞ்ச நேரம் மயான அமைதி நிலவும். கட்டத்தை ஸ்டடி பண்ணுகிறாராம். சரி செய்யட்டும் என காத்திருப்போம். ஜோதிடர் கணக்குகளில் ஆழ்ந்திருப்பார். ‘இவனைப் பார்த்தால் படிக்கிற குழந்தையாத் தெரியலை. கழுத்தில் செயினையும் தொப்பையையும் பார்க்கும்போது வசதியாத்தான் தெரியுது. கல்யாணமும் ஆகித் தொலைஞ்சிருக்கு. குழந்தைங்க...ஆங்’ என்று நிமிர்வார். ‘ஆண் குழந்தை இருக்க வேண்டுமே?’ என்று பாசிடிவ்வாக ஆரம்பிப்பார். ‘ஆமாம்...இரண்டு பசங்க’ என்பேன். ‘அப்போ அதுவும் பிரச்சினை இல்லையா?..அட நாதாரிகளா’ என ஜோதிடர் மனதில் திட்டுவது நன்றாகவே கேட்கும்.

’பத்தாம் அதிபதி ஏழில்...தொழில்காரகனைப் பார்க்கிறான். சுக்கிரனோடு...’எனும் ரேஞ்சில் ஏதோ தொழில் கட்டம் பற்றி சொல்லிவிட்டு முகத்தைப் பார்ப்பார். உஷாராகி ரியாக்சன்களையெல்லாம் ரிமூவ் செய்து, க்ளீன் சிலேட்டாக முகத்தைக் காட்டுவேன். வீட்டுக்காரம்மாவோ எப்போதும் பூர்ண சந்திரன். ‘இப்படி உட்கார்ந்தா எப்படிடா...இப்போ இவனுக்கு தொழில்ல பிரச்சினைன்னு சொல்றதா, இல்லேன்னு சொல்றதா?’ என ஜோதிடரே கடுப்பில் கன்ஃபியூஸ் ஆவார்.

‘சரி கழுதை அதை விடுவோம்...இப்போ இவனுக்கு 37 வயசுன்னா அப்பா-அம்மா ஓல்டு பீப்பிள்..பிடிச்சுட்டேன்...அவங்கள்ல யாருக்கோ உடம்பு சரியில்லை’ என தெளிவாகி ஜோதிடர் அடுத்த பாயிண்டைப் போடுவார். ‘அப்பா - அம்மா ரெண்டு கட்டமுமே கொஞ்சம் பிரச்சினை காட்டுதே’. நான் ‘ஆமாம்’ என்று சொன்னதும் அவர் முகத்தைப் பார்க்க வேண்டுமே...மூன்று மணி நேரம் உச்சாவை அடக்கியவன் ட்ரான்ஸ்ஃபார்மரைக் கண்டதுபோல் இருக்கும்!

அப்படியெல்லாம் நிம்மதியாக இருக்க விடுவோமா? ‘அவங்கள்லாம் போய்ச் சேர்ந்து பல வருசம் ஆச்சு’ என்று அடுத்த குண்டைப் போடுவேன். ‘ஆங்..அதான் கட்டம் சொல்லுது’ என்றபடியே என்னை உற்றுப்பார்ப்பார். ‘மீ பாவம்..உனக்கு என்ன தான் வேணும்’ என்று கண்கள் கெஞ்சும். கடைசியில் அவரே சரண்டர் ஆகி ‘சரி..இப்போ உங்களுக்கு என்ன பார்க்கணும்?’ என டைரக்ட் டீலிங்கிற்கு வருவார்.

‘இப்போ நேரம் எப்படி இருக்கு? அது எல்லாக் கட்டத்துக்கும் என்ன சொல்லுதுன்னு சொல்லுங்க’ என்பேன். ‘எல்லாக் கட்டத்துக்குமா?...மறுபடி முதல்ல இருந்தா?’ என ஜோதிடர் வெறுத்துப்போவார். பெரும்பாலும் வீட்டுக்காரம்மா தான் மனமிரங்கி ‘நாங்க சொந்த ஊர்ல எப்போ செட்டில் ஆவோம்?’ என்று கேட்பார். ஏதோ ‘2+2 எவ்ளோ சொல்லுங்க’ என்று கேட்டதுபோல் ஜோதிடர் உற்சாகமாகிவிடுவார். அஜக்குபுஜக்கு என்று வேகமாக கணக்குப் போட்டு ‘இன்னும் இரண்டே வருசம் தான்..வந்திடலாம்’ என்று தீர்ப்பளிப்பார். ‘இதைத் தான்யா ஆறு வருசமா சொல்றீங்க’ என நினைத்தபடி நன்றி கூறி விடைபெறுவோம். அப்போது அவர் ‘போய்ட்டு வாங்க’ என்று சொல்வது முப்பத்து முக்கோடி தேவர்கள் பூமாரி பொழிந்து ஆசீர்வதித்தது போல் இருக்கும்!

ஆனால் இந்தமுறை நாங்கள் பார்த்த ஜோதிடர் கொஞ்சம் சூடான பார்ட்டி. கொஞ்ச நேரத்திலேயே டென்சன் ஆனவர் ‘இது உன் ஜாதகமே இல்லை..நீ சொல்றதும் கட்டமும் மேட்ச்சே ஆகலை..ஓடிப்போயிரு’ என்று விரட்டிவிட்டு விட்டார். ‘இதைக் காட்டித்தான்யா இந்தம்மாவை நான் கல்யாணம் பண்ணியிருக்கேன்’ என்று நான் சொல்லியும் அவர் கேட்கவில்லை. ‘அதெல்லாம் தெரியாது. கரெக்டான ஜாதகத்தோடு வாங்க’ என்று கழுத்தைப் பிடித்து தள்ளாத குறையாக அனுப்பி வைத்துவிட்டார்...ஆனால் நாம் அப்படில்லாம் விட்ற முடியுமா? அடுத்த லீவில் மறுபடி போகணும்!
மேலும் வாசிக்க... "டுபாக்கூர்களிடம் ஜோசியம் பார்க்கப் போகலாமா?"

Friday, April 14, 2017

இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்



சிவ சிவ
திருச்சிற்றம்பலம்
*60 தமிழ் வருடங்கள்...*
01. பிரபவ - நற்றோன்றல்
Prabhava1987-1988
02. விபவ - உயர்தோன்றல்
Vibhava 1988–1989
03. சுக்ல - வெள்ளொளி
Sukla 1989–1990
04. பிரமோதூத - பேருவகை
Pramodoota 1990–1991
05. பிரசோற்பத்தி - மக்கட்செல்வம்
Prachorpaththi 1991–1992
06. ஆங்கீரச - அயல்முனி
Aangirasa 1992–1993
07. ஸ்ரீமுக - திருமுகம்
Srimukha 1993–1994
08. பவ - தோற்றம்
Bhava 1994–1995
09. யுவ - இளமை
Yuva 1995–1996
10. தாது - மாழை
Dhaatu 1996–1997
11. ஈஸ்வர - ஈச்சுரம்
Eesvara 1997–1998
12. வெகுதானிய - கூலவளம்
Bahudhanya 1998–1999
13. பிரமாதி - முன்மை
Pramathi 1999–2000
14. விக்கிரம - நேர்நிரல்
Vikrama 2000–2001
15. விஷு - விளைபயன்
Vishu 2001–2002
16. சித்திரபானு - ஓவியக்கதிர்
Chitrabaanu 2002–2003
17. சுபானு - நற்கதிர்
Subhaanu 2003–2004
18. தாரண - தாங்கெழில்
Dhaarana 2004–2005
19. பார்த்திப - நிலவரையன்
Paarthiba 2005–2006
20. விய - விரிமாண்பு
Viya 2006–2007
21. சர்வசித்து - முற்றறிவு முழுவெற்றி
Sarvajith 2007–2008
22. சர்வதாரி - முழுநிறைவு
Sarvadhari 2008–2009
23. விரோதி - தீர்பகை
Virodhi 2009–2010
24. விக்ருதி - வளமாற்றம்
Vikruthi 2010–2011
25. கர - செய்நேர்த்தி
Kara 2011–2012
26. நந்தன - நற்குழவி
Nandhana 2012–2013
27. விஜய - உயர்வாகை
Vijaya 2013–2014
28. ஜய - வாகை
Jaya 2014–2015
29. மன்மத - காதன்மை
Manmatha 2015–2016
30. துன்முகி - வெம்முகம்
Dhunmuki 2016–2017
*31. ஹேவிளம்பி - "பொற்றடை"*
*Hevilambi 2017–2018*
*(இவ்வருடம் "பொற்றடை" தமிழ் புத்தாண்டு)*
32. விளம்பி - அட்டி
Vilambi 2018–2019
33. விகாரி - எழில்மாறல்
Vikari 2019–2020
34. சார்வரி - வீறியெழல்
Sarvari 2020–2021
35. பிலவ - கீழறை
Plava 2021–2022
36. சுபகிருது - நற்செய்கை
Subakrith 2022–2023
37. சோபகிருது - மங்கலம்
Sobakrith 2023–2024
38. குரோதி - பகைக்கேடு
Krodhi 2024–2025
39. விசுவாசுவ - உலகநிறைவு
Visuvaasuva 2025–2026
40. பரபாவ - அருட்டோற்றம்
Parabhaava 2026–2027
41. பிலவங்க - நச்சுப்புழை
Plavanga 2027–2028
42. கீலக - பிணைவிரகு
Keelaka 2028–2029
43. சௌமிய - அழகு
Saumya 2029–2030
44. சாதாரண - பொதுநிலை
Sadharana 2030–2031
45. விரோதகிருது - இகல்வீறு
Virodhikrithu 2031–2032
46. பரிதாபி கழிவிரக்கம்
Paridhaabi 2032–2033
47. பிரமாதீச - நற்றலைமை
Pramaadhisa 2033–2034
48. ஆனந்த - பெருமகிழ்ச்சி
Aanandha 2034–2035
49. ராட்சச - பெருமறம்
Rakshasa 2035–2036
50. நள - தாமரை
Nala 2036–2037
51. பிங்கள - பொன்மை
Pingala 2037–2038
52. காளயுக்தி - கருமைவீச்சு
Kalayukthi 2038–2039
53. சித்தார்த்தி - முன்னியமுடிதல்
Siddharthi 2039–2040
54. ரௌத்திரி - அழலி
Raudhri 2040–2041
55. துன்மதி - கொடுமதி
Dunmathi 2041–2042
56. துந்துபி - பேரிகை
Dhundubhi 2042–2043
57. ருத்ரோத்காரி - ஒடுங்கி
Rudhrodhgaari 2043–2044
58. ரக்தாட்சி - செம்மை
Raktakshi 2044–2045
59. குரோதன - எதிரேற்றம்
Krodhana 2045–2046
60. அட்சய - வளங்கலன்
Akshaya 2046–2047
ஆண்டின் தமிழ்ப் பெயர்களை இங்கு வழங்கியுள்ளோம்...
இனி எந்த தங்குத்தடையும் இன்றி, 60 தமிழ் வருடங்களை தமிழ்ப்பெயரோடு தமிழ் புத்தாண்டு வாழ்த்துவோம்...!
நன்றி : Surya Suresh
மேலும் வாசிக்க... "இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்"

Tuesday, December 22, 2015

அனைவரும் அர்ச்சகர் ஆகலாம்! – மேலும் சில கேள்விகள்/பதில்கள்


கேள்வி: நீங்கள் நாத்திகரா?
பதில்: நிச்சயமாக இல்லை. நான் ஒரு தீவிர மதநம்பிக்கையுள்ள இந்து.

கேள்வி: அப்புறம் ஏன் இதை ஆதரித்துப் பேசுகிறீர்கள்?
பதில்: நீங்க தானே பாஸ் ‘நாத்திகர் ஏன் இதைப் பேசறா? இது ஆத்திகர் பிரச்சினை. ஆத்திகர் பேசட்டும்’னு சொன்னீங்க?

கேள்வி: எல்லா பிராமணரும் அர்ச்சகர் ஆக முடியாது, தெரியுமா? பிராமணரே என்றாலும், குறிப்பிட்ட குலம் கோத்திரத்தில் பிறந்திருக்க வேண்டும் தெரியுமா?

பதில்: அப்படியென்றால், நீங்கள் எங்கள் பக்கம் நிற்க வேண்டும் செண்ட்ராயன்! அந்த ஏற்றத்தாழ்வையும் சட்டம் மூலம் ஒழிக்கலாம், வாருங்கள்!


கேள்வி: அவாளுக்கு வேண்டுமென்றால், பாடி காடி முனீஸ்வரர் போன்று தனியாக கோவில்கட்டி விடலாமே?

பதில்: அதை நீங்கள் சொந்தமாக உழைத்துக் கட்டிய கோவிலில் இருந்தல்லவா சொல்ல வேண்டும்? நீங்கள் உட்கார்ந்திருப்பதே, எங்கள் சொத்து. இதில் ஓனர் மாதிரிப் பேசலாமா?


கேள்வி: ஏதோ சில கோவில்களில் தான் கொஞ்சம் நல்ல வரும்படி வருகிறது. பல கோவில்களில் எங்களாவே கஷ்டப்படறா,தெரியுமோ?

பதில்: அப்படியென்றால், உங்களில் சிலர் மட்டும் உண்டு கொழுத்துக்கொண்டு, மற்றவர்களை பட்டினியில் போட்டிருக்கிறார்கள். இது தவறு என்பதை நாங்களும் ஒத்துக்கொள்கிறோம். எனவே எல்லா அரசு வேலையிலும் இருப்பது போல், இங்கேயும் ட்ரான்ஸ்ஃபர் சிஸ்டம் கொண்டுவரலாமா? அப்பாவியான அந்த பிராமணர்களுக்காக, நீங்கள் அதைத்தானே கேட்டிருக்க வேண்டும்? பரவாயில்லை, இப்போது கேட்போம்.


கேள்வி: காசுக்காகத்தானே இந்த 207பேர் வர்றா? வருமானமில்லாத கோவிலில் போட்டால் நிப்பாளா? ஓடிற மாட்டா?

பதில்: மேலே சொன்ன ட்ரான்ஸ்ஃபர் பதில் தான் இதற்கும். ஒரு சாரார் மட்டும் வருமானமுள்ள கோவில்களில் செழிக்க, மற்றவர்கள் நிரந்தரமாக கஷ்டப்படக்கூடாது இல்லையா? எனவே, ட்ரான்ஸ்பர்!


கேள்வி: காசை எதிர்பார்க்காமல் பக்தி உணர்வுடனும் அர்ப்பணிப்புடனும் எங்களவா பல கோவில்களில் சேவை செய்கிறார், தெரியுமா?

பதில்: நன்றாகவே தெரியும். எங்கள் ஊர் குலதெய்வம் கோவிலில் என் தாத்தா தான் பூசாரி. அவருக்குப் பிறகு யார் என்று கேள்வி வந்தபோது ‘நோ..நோ..ஐ ஆம் எஞ்ஞினியர்’ என்று சொல்லி தப்பி ஓடிவந்துவிட்டேன். பிறகு வேறு யாராவது பொறுப்பை ஏற்றுக்கொள்வார்களா என்று பார்த்தால், யாருமில்லை.

பிறகு, பக்கத்து நகரான கோவில்பட்டியில் இருந்து ஒருவரை அழைத்து வந்தோம். செவ்வாய், வெள்ளி மட்டும் வருவதாக ஏற்பாடு. மாதச் சம்பளம், ஆயிரம் ரூபாய். இதே மாதிரி மேலும் சில கோவில்களில் அவர் வேலை செய்கிறார். மாதச்சம்பளம் ஐந்தாயிரம் வந்தால் பெரிது.

எனவே, தட்டில் விழும் காசு தான் அவரை வாழ வைக்கிறது. கஷ்ட ஜீவனம். ஆனாலும் அம்மனை அவர் தன் குழந்தையைப் போல சீராட்டுவார். ஒவ்வொன்றையும் பார்த்துப் பார்த்துச் செய்வார். இன்றைக்கு அம்மன் அங்கே இருப்பதே அவரால் தான் என்பேன். இல்லையென்றால், பூஜையின்றி எப்போதோ கோவில் களையிழந்து போயிருக்கும்.

இதே போன்று பல பிராமணர்களை எனக்குத் தெரியும். அவர்களில் சேவைக்கு எப்போதும் நான் தலைவணங்குகிறேன். அவர்களின் கஷ்டத்திற்கு நீங்களும், உங்களின் சிஸ்டமும் ஒரு காரணம் என்பதை ஏன் புரிந்துகொள்ள மறுக்கிறீர்கள்? வாரிசுரிமை இல்லையென்று சட்டம் சொன்னாலும், சில குடும்பத்தினர் மட்டுமே வருமானமுள்ள கோவில்களை பிடித்துவைத்திருப்பது உங்களுக்கேதெரியும். ஆனால் போராட்டம் என்பது அபச்சாரம் என்று ரத்தத்தில் ஊறியிருப்பதால், வேறு யாராவது தான் போராடி இதை மாற்ற வேண்டும், இல்லையா?


கேள்வி: தகுதியற்ற நபர்களும் இந்த சட்டத்தால் வேலைக்கு வந்துவிடலாம், இல்லையா?

பதில்: மாமனார் ஊரில் ஒரு கோவிலை எடுத்துப் பெரியதாக கட்டி நிர்வகிக்கிறார். அந்தக் கோவில் அர்ச்சகரும் சேவைக்கு ஒரு நல்ல உதாரணம். வம்சவம்சாக, இதே தொழிலில் இருக்கும் குடும்பம். அம்மனை அலங்கரித்து தீபம் காட்டினார் என்றால், அம்மனே நேரில் வந்துவிட்டது போல் உடல் சிலிர்க்கும். ஆனால் அவர்கள் பிராமணர்கள் அல்ல, புலவர் இனத்தைச் சேர்ந்தவர்கள். இதே போன்றே வேளார், பிள்ளைவாள் அர்ச்சகர்களும் உண்டு.

பிராமணர்களிடம் இருக்கும் மாயை, தாங்கள் மட்டுமே தகுதியானவர் – தங்களை மட்டுமே ஆண்டவன் அர்ச்சகராக அனுப்பி வைத்திருக்கிறான் என்பது. அது உண்மையல்ல என்று கொஞ்சம் யோசித்தாலே புரியும். பழனி கோவிலையும், சமயபுரம் கோவிலையும் டெவலப் செய்து, உங்களுக்குக் கொடுத்ததே நான் – பிராமின்ஸ் தானே? தகுதி இல்லையென்றால், அவையெல்லாம் டெவலப் ஆகியிருக்குமா? மற்ற கோவில்களில் தான் தெய்வம் குடியிருக்குமா?

இருப்பினும்………………………உங்கள் கேள்வியில் உள்ள நியாயத்தை நான் ஒத்துக்கொள்கிறேன்.

தகுதியற்ற நபர்களை அர்ச்சகராகப் பார்க்க நேரிட்டால், உங்களுக்கு எப்படி வலிக்கும் என்று எனக்குத் தெரியும். ஏனென்றால் கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோவில் பூசாரி, தன் இடுப்பில் பான்பராக் சொருகியிருந்ததைப் பார்க்கும்போது எனக்கு வலித்திருக்கிறது. திருச்செந்தூர் பூசாரிகள் எப்போதும் பக்தர்களிடம் நாய் மாதிரி எரிந்து விழும்போதும் எனக்கு வலித்திருக்கிறது. அவர்கள் எல்லாம் பிராமணர்கள் என்பதை விட்டுத்தள்ளுவோம்.

இப்போது வரும் நான் – பிராமின்ஸில் சிலரும் அப்படி நடக்க வாய்ப்பிருக்கிறது. அப்படி நடந்தால், நீங்கள் கொதித்தெழுவீர்கள். இதுவரை உங்களவா தவறு செய்தபோது கொதிக்காத ரத்தம் அப்போது கொதிக்கும். எனவே கோவில்களில் நடக்கும் தவறுகளைத் தடுக்க, சரியான அமைப்பை நீங்கள் உருவாக்குவீர்கள். ஏற்கனவே அப்படி ஒரு அமைப்பு இருந்தால், அது செயல்பட ஆரம்பிக்கும். இது கோவில்களுக்கு நல்லது தானே?

அப்புறம் இன்னொரு விஷயம்…மேலே ஒரு புலவர் குடும்பம் பற்றிச் சொன்னேன், இல்லையா? அதில் அந்தக் குடும்பத்துப் பையனும் அரசு நடத்திய ஆகம பயிற்சிப் பள்ளியில் பயிற்சி பெற்றிருக்கிறார். இந்த சட்டம் அமலுக்கு வந்தால், வம்சவம்சமாக வறுமையில் வாடிய ஒரு பூசாரிக் குடும்பத்திற்கு ஒரு வழி பிறக்கும்.

நாத்திகர்கள் இந்த விஷயத்தை முன்னெடுப்பதால், அர்ச்சகர்களின் தகுதி பற்றி சந்தேகம் வருவது இயல்பு தான். ஆனால் உண்மையில் பல பூசாரி குடும்பங்கள் இந்த சட்டத்தால் பயன்பெறும் என்பதே யதார்த்தம்.


கேள்வி: சரி, பயிற்சி பெற்றவர் ஆகமவிதிகளின்படி நடக்கலாம். அவர் குடும்பமும் அப்படியே நடக்கலாம். ஆனால் அவர்களின் சொந்தங்கள் அப்படி ஆச்சாரமாக இருப்பார்கள் என்று சொல்ல முடியுமா? அந்த வீடுகளில் இவர் அன்னந்தண்ணி எடுக்காமல் இருப்பாரா?

பதில்: உங்கள் கேள்விக்கு என்ன அர்த்தம் என்றால்…

ஒரு பிராமணர் அர்ச்சகராக இருக்கிறார். அவர் மற்ற சொந்தக்கார பிராமண வீடுகளில் புழங்குகிறார். அத்தனை பிராமணர்களும் ஆச்சாரத்துடன் தான் இருக்கிறார்கள். அவர்களின் சொந்தத்தில் ஒருவர்கூட, ஆச்சாரம் கெட்டவர்கள் இல்லை. அத்தனையும் சொக்கத் தங்கங்கள். ஆனால் மற்றவர்கள் மட்டும் தான் மோசம், இல்லையா?

நான் டெல்லியில் வேலை செய்தபோது, என் அலுவலக /அறை நண்பன் ஒருவன் இருந்தான். மாலை ஆனதும், கையில் சிகரெட்டுடனும் பிராந்தி பாட்டிலுடன் தான் உட்காருவான். அவன் ஒரு பிராமின். அவன் அப்பா ஒரு கோவில்குருக்கள்.

என்ன செய்யலாம், குருக்களை வேலையை விட்டுத் தூக்கிவிடலாமா? குருக்களின் சொந்தக்கார குருக்களையும் வேலையை விட்டுத் தூக்கிவிடலாமா? அதை விடுங்கள், காஞ்சிபுரம் கில்மா குருக்களின் சொந்தக்கார குருக்களை என்ன செய்யலாம்?

முதலில், பிராமணர்கள் அத்தனை பேரும் சுத்தமானவர்கள்; மற்ற எல்லோரும் அசுத்தமானவர்கள் என்று நினைப்பதை விட்டொழியுங்கள். உங்கள் பிரச்சினைக்கெல்லாம் மூல காரணமே, இந்த மனநிலை தான்!


கேள்வி: இந்து மதத்தை அழிக்கவே, ஆச்சாரத்தைக் கெடுக்கும் இந்த சட்டத்தை நாத்திகர்கள் கொண்டுவருகிறார்களா?
 
பதில்: ஒட்டுமொத்த நோக்கில், இந்து மதத்திற்கு நன்மை செய்வதாகவே இது அமையும். ஆந்திராவிலும், கேரளாவில் நடைமுறைப்படுத்தப்பட்ட சட்டம் தான் இது. இது ஒன்றும் புதிய விஷயம் அல்ல. இது காலத்தின் கட்டாயம். 

மேலும், விதவை மறுமணம், பெண் விடுதலை போன்ற விஷயங்களை எல்லாம் இதே நாத்திகர்கள் எழுப்பியபோது, நீங்கள் இதே வாதத்தைத் தான் முன்வைத்தீர்கள். இப்போது அந்த விஷயங்களால், அதிக பயன்பெற்றிருப்பது நீங்கள் தான்.

அதே போன்றே, இந்த மாற்றத்தையும் ஒருநாள் புரிந்துகொள்வீர்கள் என்ற நம்பிக்கையுடன்.................ஒரு சக இந்து!


மேலும் வாசிக்க... "அனைவரும் அர்ச்சகர் ஆகலாம்! – மேலும் சில கேள்விகள்/பதில்கள்"

Sunday, December 20, 2015

அனைவரும் அர்ச்சகர் ஆகலாம்! - பாகம் 1

அனைவரும் அர்ச்சகர் ஆகலாம்!


நான் காந்தியத்தை கற்றுக்கொள்ள ஆரம்பித்த கொஞ்சநாட்களிலேயே என்னை ஆச்சரியப்படுத்திய ஒரு விஷயம், காந்தியத்திற்கும் பிராமண சுபாவத்திற்கும் உள்ள சில ஒற்றுமைகள். நமக்கெல்லாம் தெரிந்த ஒற்றுமை அஹிம்சை. அதையும் தாண்டி பல ஒற்றுமைகள் அங்கே உள்ளன.

எப்போதும் சமரசத்திற்கு தயாராக இருப்பதும், முதலில் கிடைப்பதை தக்க வைத்துக்கொண்டு பிறகு அடுத்த அடியை எடுத்து வைப்பது, எந்த நிலையிலும் எதிராளியுடனான உறவை முறித்துக்கொள்ளாமல் பேச்சுவார்த்தைக்கு தயாராகவே இருப்பது போன்றவை முக்கியமான அம்சங்கள்.

ஒரு கற்பனை உதாரணத்தை இப்போது பார்ப்போம். ஒரு அலுவலகத்தில் சனிக்கிழமையும் வேலைக்கு வரவேண்டும் என்று புதிய ரூல்ஸ் வருகிறது என்று வைத்துக்கொள்வோம். எல்லோரும் போய், அன்றைக்கு ஃபார்மலில் வராமல் கேஷுவல் ட்ரெஸ்ஸில் வரலாமா என்று கேட்கிறார்கள். பாஸ் தீர்ப்பு சொல்கிறார், ”வரலாம்..ஆனால் லெக்கின்ஸுக்கும் டைட்டான ஜீன்ஸிற்கும் அனுமதி இல்லை.”.

இப்போது நான் - பிராமின்ஸ், குறிப்பாக நம் போராளிகள் எப்படி ஹேண்டில் செய்வார்கள் என்று பார்ப்போம். முதலில் அவர்கள் புரட்சி மோடுக்குப் போவார்கள். ’பெண்ணிய விடுதலை, ஆடை சுதந்திரம், அடே காமக்கொடூரா...நாங்கள் என்ன உடுத்துவது என்று முடிவு செய்ய நீ யாரடா, உன் பொண்ணே காலேஜுக்கு லெக்கின்ஸ் தான் போட்டுட்டுப் போறா..உன் லட்சணம் தெரியாதா?’போன்ற வார்த்தைகள் வெடித்துச் சிதறும்.

தீர்ப்பு சொன்ன பாஸ் இன்னும் கடுப்பாகி, ‘நான் சொன்ன தீர்ப்பை வாபஸ் வாங்குகிறேன். எப்போதும்போல் ஃபார்மல்ஸிலேயே வாங்கடா நொண்ணைகளா!’ என்று ஆப்பு வைப்பார். ’உள்ளதும் போச்சுடா நொள்ளைக்கண்ணா’என்பது புரிந்தாலும், ‘வெற்றி..வெற்றி..பாஸ் பயந்துட்டார்’ என்று கெத்தாக நிற்கும் புரட்சிக்கூட்டம்.

இதையே பிராமின்ஸ் எப்படி டீல் செய்வார்கள் தெரியுமா? முதலில் ‘வெற்றி..வெற்றி..பாஸ் மாதிரி நல்லவரைப் பார்ப்பது அரிது. லெக்கின்ஸ், ஜீன்ஸ் தவிர்த்து மற்ற கேஷுவல்ஸூக்கு அனுமதி அளித்த பரந்தாமனே போற்றி’ என்று சொல்லி, முதலில் கிடைத்த தீர்ப்பை மட்டுமல்லாது தீர்ப்பு சொன்ன பாஸையும் தன் பக்கம் கொண்டுவருவார்கள். கொஞ்சநாள் பாஸ் சொன்னதை கர்மசிரத்தையாக கடைப்பிடிப்பார்கள்.

அப்போது ஏதாவது ஒரு முட்டாள் ஒரு பத்திரிக்கையில் லெக்கின்ஸ் பற்றி ஒரு கட்டுரை எழுதுவான் (அல்லது இவர்களே ஒரு முட்டாளைவிட்டு எழுத வைப்பார்கள்.) ஊரே லெக்கின்ஸ் பிரச்சினைக்காக பற்றி எரியும். அப்போது பாஸிடம் போவார்கள். ‘சார், நம்ம ஆபீஸைப் பற்றியும் எவனாவது எழுதிடப்போறான். கம்பெனிப் பேர் கெட்டுவிடக்கூடாது என்பதால், லெக்கின்ஸ்/டைட் ஜீன்ஸையும் அனுமதிங்க சார்’ என்று பாஸ் மற்றும் கம்பெனியின் நலனுக்காகவே பிறப்பெடுத்தமாதிரி பேசுவார்கள். லெக்கின்ஸுக்கும் அனுமதி கிடைக்கும்.

ஒருவன் தனக்கு எதிராக 25%ம், ஆதரவாக 75%ம் கருத்து சொல்கிறான் என்றால், அவனை தகுந்த விதத்தில் ‘டீல்’ செய்து 100% எதிரியாக ஆக்குவது பெரும்பாலான நான் - பிராமின்ஸ் ஸ்டைல். ஆனால் தனக்கு எதிரான 25%-ஐ மறந்துவிட்டு, ‘வள்ளலே வாழ்க’ என்று ஃப்ளெக்ஸ் போர்டு மாட்டிவிடுவது பிராமின்ஸ் ஸ்டைல். (பிராமின்ஸ் பாராட்டிவிட்டான் என்றால், அது தனக்கு எதிரானது தான் என சில மண்டூஸ் கொதித்தெழுவார்கள் என்பதும் இதில் உள்ள சூட்சுமம்!)

பிராமணர்களை குறை சொல்லும் தொனியில் இதை நான் சொல்லவில்லை. அவங்ககிட்டே இருந்து கற்றுக்கொள்ள வேண்டிய விஷயம் என்று தான் சொல்கிறேன். (இந்த ஸ்டைல், எனக்கு அலுவலத்தில் மிகுந்த பயன் அளிப்பதை கண்கூடாக கண்டிருக்கிறேன். :) )

இப்போது அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆக்கும் சட்டம் பற்றி வந்த தீர்ப்பினைப் பார்ப்போம்.

1971ல் நடந்த சேஷம்மாள் வழக்கிலேயே ‘அர்ச்சகர் பதவி என்பது வாரிசுரிமை அடிப்படையில் வருவது அல்ல’ என்று தீர்ப்பு வந்துவிட்டது. ஆனால் ‘ஆகமவிதிகள் அறிந்த, தகுதியானவரைத்தான் அர்ச்சகர் ஆக்க வேண்டும்’ என்றும் தீர்ப்பில் சொல்லப்பட்டது.

வழக்கம்போல் ‘அடே, உச்சிக்குடுமி நீதிமன்றமே’என்று பொங்கிவிட்டு, நாம் சைலண்ட் ஆகிவிட்டோம். பிறகு 2006ல் தெளிந்து ‘அனைத்து சாதியினருக்கும் ஆகமவிதிகள் கற்றுக்கொடுத்தால் போதுமே..சட்டப்படி அது செல்லுமே’ எனும் முடிவுக்கு அப்போதைய திமுக அரசு வந்தது. ‘அனைத்து சாதியினரும் அர்ச்சர் ஆகலாம்’ எனும் அரசாணை பிறப்பிக்கப்பட்டது. அதற்கான பயிற்சிக்கூடங்களும் ஏற்படுத்தப்பட்டு, 207 பேர் தேர்ச்சிபெற்றார்கள்.

இதை எதிர்த்து பிராமணர்கள் உச்சநீதிமன்றம் போனார்கள். இப்போது தீர்ப்பு வந்திருக்கிறது. என்னவென்று....?

1. தமிழக அரசு கொண்டு வந்த, அனைவரும் அர்ச்சகர் ஆகலாம் எனும் அரசாணையை நீக்க முடியாது. அது செல்லும். (75% பாசிடிவ்)
2. ஆனால் ஆகம விதிகளின்படி தான் நியமனம் நடைபெற வேண்டும். (25% நெகடிவ்)

சரி, இதை ஊடகங்கள்...குறிப்பாக பிராமண ஊடகங்கள் தீர்ப்பு வந்த உடனேயே செய்தி வெளியிடுகின்றன. என்னவென்று...........??

"அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் எனும் சட்டம் ரத்து!”

இது கடைந்தெடுத்த அயோக்கியத்தனம். ‘அறிவிருக்கா? தீர்ப்பை முழுசாப் படிச்சியா?’என்று கேட்க வேண்டிய விஷயம். ஏன் இப்படி செய்தி வெளியிட்டார்கள் என்று, முந்தைய லெக்கின்ஸ் உதாரணம் படித்த உங்களுக்கு இப்போது புரிந்திருக்கும். உடனே ஃபேஸ்புக்கில் பலர் புரட்சி மோடுக்கு போனார்கள். ‘ஏ, உச்சிக்குடுமி நீதிமன்றமே..’என்று ஆரம்பித்தார்கள். பிராமணர்களுக்கு கொண்டாட்டம், அவர்கள் எதிர்பார்த்தது இதைத் தானே!

பகுத்தறிவுவாதிகள் என்ற போர்வையில் இறங்கும் சில மாற்றுமத போராளிகள்கூட ‘ச்சீ..இந்துக்களே, நாண்டுக்கிட்டு சாகுங்கள்’எனும் ரேஞ்சில் தங்கள் காரியத்தை செவ்வனே செய்தார்கள். கம்யூனிஸ்ட், வைகோ போன்றோர், உடனே மேல்முறையீடு செய்யுங்கள் என்று அறிக்கையும் விட்டார்கள். நல்லவேளையாக எப்போதும் உளறிக்கொட்டும் கி.வீரமணியும், கூடவே சுப.வீ.யும் இதில் தெளிவான அறிக்கை கொடுத்தார்கள்.

உண்மையில், இந்த தீர்ப்பு ‘அனைவரும் அர்ச்சகர் ஆகலாம்’ என்றே சொல்கிறது.

1. தமிழக அரசின் அரசாணை ரத்து செய்யப்படவில்லை.
2. ஆகமவிதிகளின் படி தான் அர்ச்சகர் நியமனம் செய்யப்படவேண்டும்.

ஓகே..இதில் ஆகமவிதிகள் ‘பிராமணர் தான் அர்ச்சகர் ஆகவேண்டும்’ என்று சொல்வதாக பிராமணர்கள் அடித்துவிட, எப்போதும்போல் ஃபேஸ்புக் புரட்சி நடந்தது. உண்மையில், எந்தவொரு ஆகமத்திலும் அர்ச்சகரின் ஜாதி பற்றி குறிப்பிடப்படவே இல்லை. அதாவது ஆகமங்களின்படி ‘அனைவரும் அர்ச்சகர் ஆகலாம்’ என்பது தான் கதையில் பெரிய ட்விஸ்ட்!

1971ல் முட்டாள்தனமாக பொங்கி கோட்டைவிட்டது போன்றே, இப்போதும் நடக்க வேண்டும் என்பது தான் பிராமணர்களின் ஆசை. அதனால்தான் பிராமண ஊடகங்களும், பிராமணர்களும் ‘சுப்ரீம் கோர்ட்டே சொல்லிடுத்து..எல்லோரும் ஆத்துக்குப் போய் புள்ளகுட்டிகளை படிக்க வைங்கோ..போங்கோ..போங்கோ’என சபையைக் கலைப்பதிலேயே குறியாக இருக்கிறார்கள். அதை உண்மை என்று நம்பும் அப்பாவி நான் - பிராமின்ஸ் இந்துக்களே, இப்போது காந்திய வழியில் இறங்குவோம். நிதானமாக இதை அணுகுவோம்.

தீர்ப்பின்படி, இப்போது நிலவரம் என்ன?

1. தமிழக அரசின் அரசாணை ரத்து செய்யப்படவில்லை. (எனவே அனைவரும் அர்ச்சகர் ஆகலாம்.)
2. ஆகமவிதிகளின் படி தான் அர்ச்சகர் நியமனம் செய்யப்படவேண்டும். (ஆகமவிதிகள் பிராமணர்தான் அர்ச்சகர் ஆகவேண்டும் என்று சொல்லவில்லை. எனவே அனைவரும் அர்ச்சகர் ஆகலாம்.)


‘அதர்வண வேதத்தில் ஏவுகணை தொழில்நுட்பம் இருக்கு. சாம வேதத்தில் சொன்னபடி, ஏரோப்ளேனே செய்யலாம். உண்மையான இந்துவாக இருந்தால், இதைப் பகிருங்கள்’ என்று வரும் அண்டப்புளுகுகளை ஷேர் செய்யும் அப்பாவிகள் நீங்கள் என்பதால் தான், ’ஆகமத்தின்படி பிராமணர்தான் அர்ச்சகர் ஆகணும்’ எனும் புரளி பாரம்பரிய ஊடகங்கள் மூலமாகவே பரப்பப்படுகின்றன. முதலில் அதை நம்பாதீர்கள், பரப்பாதீர்கள். ‘வெற்றி..வெற்றி’ என்று நாம் கூவ வேண்டிய நேரமிது. இப்போதும் ஏமாந்து போகாதீர்கள்.

இன்னொரு வேடிக்கையான தகவல். இந்து அறநிலையத்துறையின் கீழ் இருப்பது 36000 கோவில்கள். அதில் ஆகமவிதிப்படி இருப்பது 1200 கோவில்கள் தான் என்று அவாளே சொல்கிறார். ஆகமவிதிகள் தான் பிரச்சினை என்றால், முதலில் 1200 கோவில்கள் தவிர்த்து, மற்ற கோவில்களில் இந்த 207 பேரை நியமிக்கலாம் தானே?

உச்சநீதிமன்றத் தீர்ப்பின்படி, தமிழக அரசே ஆகமவிதிகள் பயின்ற, தகுதியான நபர்களை அர்ச்சகர் ஆக்கலாம். ஏற்கனவே 207 பேர் தகுதி பெற்று இருக்கிறார்கள். அவர்களை உடனே அர்ச்சகராக நியமிப்பது தமிழக அரசின் கடமை.

 எனவே இளையராஜாவை எங்காவது பார்த்தால் ‘இந்த 207 பேரையும் அர்ச்சகராக நியமிப்பீர்களா?’என்று கேட்கும்படி ஊடக நண்பர்களை தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

------------------------------------

அனைவரும் அர்ச்சகர் ஆகலாம் – கேள்வி 1:
பிராமணர்களை அழிக்க வேண்டும் என்பதற்காகவே கொண்டுவரப்படுகிறதா இந்த சட்டம்?

பதில்:

நாத்திகர்கள் இதை முன்னெடுப்பதால், இந்த சந்தேகம் வருவது இயல்பு தான். இந்த சட்டத்திற்குப் பின்னால் இருக்கும் நோக்கம், பிராமணர்களுக்கு மட்டுமல்ல; அனைத்து ஆதிக்க சாதிகளுக்குமே எதிரான, உயர்வான நோக்கம். பிறப்பை மட்டுமே தகுதியாகப் பார்க்கும் இழிநிலையை மாற்றுவது தான் இதன்பின்னால் இருக்கும் நோக்கம். இந்த நோக்கத்தினால் பாதிப்பு பிராமணர்களுக்கு மட்டும் என்பதே பெரும் பொய்.

நமது சமூக அமைப்பில் தொழில்கள் ஜாதிவாரியாக பிரிக்கப்பட்டிருந்தன. ஒரு ஜாதியில் பிறந்தோர், இன்னொரு ஜாதியினரின் தொழிலைச் செய்ய முடியாது. உதாரணமாக, காவல் தொழில் தென்மாவட்டங்களில் தேவர் சாதி போன்ற ஆதிக்கசாதியினர் கையில் இருந்தது. காவல் அமைப்பில் ஒரு அங்கமான தலையாரி பதவியும் வாரிசு அடிப்படையிலேயே காலங்காலமாக இருந்து வந்தது.

அப்படித்தான் கோவில்பட்டி அருகே, என் நண்பனின் ஊரிலும் இருந்துவந்தது. தலையாரி குடும்பம் என்றே ஒரு குடும்பம் அங்கே இருந்தது. பரம்பரை பரம்பரையாக அவர்களின் வாரிசுகளே தலையாரிகளாக இருந்துவந்தார்கள். வாரிசு அடிப்படையில் பதவி என்பது வர்ணாசிரமத்தை கட்டிக்காக்கும் விஷயம் என்பதால், வாரிசுரிமை 1970களில் நீக்கப்பட்டது. (சரியான ஆண்டு, நினைவில் இல்லை).

அப்போது தலையாரியாக இருந்த தேவருக்கு பிரச்சினை இல்லை. ஆனால் அவர் மகன் வளர்ந்து பெரியவன் ஆனபோது, அதாவது தேவர் ஓய்வுபெற்றபோது பெரும்சிக்கல் எழுந்தது. 1980களில் அவரது பையனுக்கு வாரிசுரிமை அடிப்படையில் வேலை மறுக்கப்பட்டது. அதற்குப் பதிலாக, வேறொருவர் அந்த வேலையைப் பெற்றார். அவர் ஒரு தலித். சிக்கலின் தீவிரம், இப்போது உங்களுக்குப் புரிந்திருக்கும்.

வாரிசு, தேவர் என்றாலும் ஒரு அப்பாவி. எப்படியும் அப்பா வேலை கிடைத்துவிடும் என்று நம்பி வளர்ந்தவர். அது இல்லையென்றானதும், பதறிப்போனார். சொந்தங்கள் மீசை முறுக்கி, என்ன செய்யலாம் என்று ஆலோசித்தன. தலித்தை கொன்றுவிட்டால் என்ன எனும் யோசனை உதித்தது. இது தெரிந்த தலித், ஊரைவிட்டு ஓடிப்போனார்.

தலித்தைக் கொன்றாலும் வேலை வாரிசுக்கு கிடைக்காது, ஜெயில்வாசம் தான் மிஞ்சும் எனும் அறிவுரை தேவர்சாதியில் இருந்த சில பெரியோர்களாலேயே சொல்லப்பட்டது. எனவே சட்டப்படி, நீதிமன்றத்தை நாடி வேறு ஊரிலாவது வேலை கேட்போம் என்று முடிவுசெய்து கோர்ட் படியேறினார்கள்.

அந்த தலித் தலையாரியாக அந்த ஊரில் ரிட்டயர்டு ஆகும்வரை பணியாற்றினார். ஊரில் 90% தேவர்கள் தான். சிலசில முணுமுணுப்புகள் எழுந்தாலும், மிகக்கவனமாக பணியாற்றி, அந்த தலித் நல்ல பெயர் எடுத்தார். அவர் என் அப்பாவின் நண்பர் என்பதால், எனக்கு முழுக்கதையும் தெரியும். அதுபற்றி பேசும்போது அவர் ஒருமுறை சொன்னார்: காலங்காலமாக எங்கள் முன்பு நெஞ்சு நிமிர்த்தி நடந்தவர்கள். இப்போது என்னிடம் வந்து நிற்கவேண்டும் என்றால் கூசவே செய்யும். நாம் தற்செயலாக ஏதாவது செய்தால்கூட, அவர்களின் ஈகோ அடிவாங்கும். இப்போது நடந்துகொண்டிருப்பது ஒரு பெரிய சமூக மாற்றம். அதைப் பொறுமையாக, அட்ஜஸ்ட் செய்து தான் நாம் நடத்திக்காட்டவேண்டும். அடுத்த தலைமுறையில் இவ்வளவு எதிர்ப்பு இருக்காது.

அப்படித்தான் ஆனது. 2000ஆம் ஆண்டிற்கு அப்புறம், அவர் தலையாரியாக இருப்பது யாருக்கும் பெரிய விஷயமாகத் தெரியவில்லை. ஏனென்றால், தலித்கள் கலெக்டராக இருப்பதே சாதாரணமான நேரத்தில், தலையாரி ஒன்றும் பெரியவிஷயம் இல்லையே!

சரி, கோர்ட்டுக்குப் போன தேவரின் வாரிசு கதையைப் பார்ப்போம். 20 வருடங்களுக்கு மேலாக போராடினார். தாங்கள் இந்த நாட்டிற்கு(ஜமீனுக்கு) செய்த உயிர்த்தியாகங்கள் மற்றும் சேவைகளை எல்லாம் பட்டியல் போட்டார். எனவே, நியாயப்படி இந்த வேலை தனக்கு வருவது தான் சரியாக இருக்கும் என்று மன்றாடினார். ஆனாலும் கோர்ட் ‘இனியும் பிறப்பின் அடிப்படையில் தகுதியை நிர்ணயிக்க முடியாது’ என்று மறுத்துவிட்டது. பலவருட நீதிமன்றப் போராட்டம், சொந்தங்கள் மத்தியில் தலைகுனிவு, வறுமை எல்லாம் சூழ, தன் நாற்பதாவது வயதில் அவர் மனநிலைப் பாதிப்புக்கு உள்ளானார். நாற்பத்தி இரண்டாவது வயதில் தற்கொலை செய்துகொண்டார்.

‘இந்த நாட்டிற்கு ஒரு ஆபத்தென்றதும், வேல்கம்புடன் போருக்குப் போனது நாங்க. மற்ற ஜாதிகளின் பாதுகாப்பிற்காக, தாலியறுத்தது நாங்க. எல்லோரும் வணிகம் செய்து துட்டு எண்ணிக்கொண்டிருந்தபோது, எத்தனை பேர் செத்தார்கள் என்று பதறிக்கிடந்தது நாங்க. எங்க தியாகத்திற்கு பொருள் இல்லையா?’ என்று அந்த வீட்டுப்பெண்கள் கதறினார்கள்.

இன்றைக்கு பிராமணர்கள் அதையே கேட்கிறார்கள். ஒரு கோவிலுக்காக ஒரு குடும்பம் காலங்காலமாக உழைத்திருக்கிறது என்றால், அவர்களுக்குத் தானே அர்ச்சகர் வேலையில் முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்று கேட்கிறார்கள்.

ஆனால் இங்கே ‘பிறப்பால் அனைவரும் சமம்’ எனும் சமூகநீதி நிலைநாட்டப்படுவது தான் முக்கியம். ஒருவனின் தகுதி என்பது, அவனின் சொந்த உழைப்பால் தான் வரவேண்டும். ஒரு குலத்தில் பிறந்ததாலேயே அவனுக்கு தகுதி உண்டு என்பதோ இல்லை என்பதோ ஜனநாயகப் பண்பும் அல்ல, மனிதநேயமும் அல்ல.

இன்றைக்கு பிராமணர்கள் சந்திக்கும் இந்த கஷ்டத்தை(?), ஏற்கனவே ஏதோவொரு விதத்தில் எல்லா ஜாதிகளும் அனுபவித்துத்தான் இங்கே சமூகநீதி நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. எல்லா ஜாதிகளுமே தங்களுக்கான தொழிலை, பிறருடன் பகிர்ந்துகொண்டாக வேண்டிய கட்டாயம் இங்கே எப்போதோ வந்துவிட்டது. நீங்கள் கொஞ்சம் மேலே உட்கார்ந்து இருந்ததால், உங்களுக்கு இது தெரியாமல் போயிருக்கலாம்.
மொத்தத்தில், பழைய நாட்கள் போய்விட்டது. இந்த மாற்றம் பிடிக்கிறதோ இல்லையோ, இதை எதிர்கொண்டு தான் ஆக வேண்டும். ’எல்லோரும் மனுஷா தான்’ என்று இப்போதாவது உணர்வது தானே நியாயம்!

(தொடரும்)
 
மேலும் வாசிக்க... "அனைவரும் அர்ச்சகர் ஆகலாம்! - பாகம் 1"

Wednesday, October 30, 2013

தீபாவளியைக் கொண்டாடலாமா?

இந்த சுதந்திர நாட்டுல நிம்மதியா ஒரு பண்டிகை கொண்டாட முடியலை.அந்நிய எலும்புத்துண்டுக்கு குரைக்கிற நாய்கள், இந்த வருடமும் ஆரம்பித்துவிட்டது. நரகாசுரன் தமிழனாம்..அவனை ஆரிய(!) சக்திகள் கொன்னதைப் போய்க் கொண்டாடுறீங்களே பதர்களா என்று வழக்கம்போல் வாங்கியகாசுக்கு கூவ ஆரம்பித்துவிட்டார்கள்.
 
நம்ம மரமண்டைக்கும் பகுத்தறிவுக்கும் ரொம்ப தூரம் தான்..ஆனாலும் புராணத்துல சொல்லியிருக்கிற மேட்டரைப் புரிஞ்சிக்கிட்டுத்தான் இந்த பகுத்தறிவுவியாதிகள் பேசுதான்னு குழப்பமா இருக்கு.
 
விஷ்ணு தன்னோட வராக அவதாரத்துல பூமாதேவிகூட லவ்ஸ் ஆகுறாரு..அதுக்கு கைமேல பலனா நரகாசுரன் பிறக்கிறாரு..அப்பாலிக்கா இப்போதைய அஸ்ஸாம் ஏரியாவுல, அப்போதைய தமிழன் ஒரு ராஜ்ஜியத்தையே அமைக்குறாரு..பவர் கைக்கு வந்தா, நம்மாளுக பவர் ஸ்டாரைவிட ஓவரா ஆடுவாங்களே..அதனாலாவரு ஆட்டம் ஓவராப் போகுது.
 
ஆனாலும் தமிழன் நரகாசு புத்திசாலி. அதனால பிரம்மாவை குடையாக்குடைஞ்சு ஒரு வரம் வாங்கிடுதாரு, என்னன்னா மம்மியைத் தவிர வேற யாரலயும் தனக்கு சாவு வரக்கூடாதுன்னு! மம்மின்னா பூமாதேவி, 'அய்யய்யோ..கொல்றாங்களே' புகழ் மம்மி இல்லை.
 
புராணத்தோட இன்னொரு வெர்சன் என்ன சொல்லுதுன்னா, விஷ்ணுவோட இன்னொரு அவதாரத்தால தான் 'சன்'ன்னுக்குச் சாவுன்னு தெரிஞ்ச மம்மி, 'நோ..நோ..சன்னை என்னைத் தவிர எவனும் காலி பண்ணக்கூடாது'ன்னு வரம் வாங்கிக்குது. எப்படியோ, மம்மியால தான் சாவுன்னு மட்டும் கன்ஃபார்ம் ஆகுது. பூமாதேவி வேற, சோ கள்ளக்காதலால் மகனின் தலையில் கல்லைப் போட்ட தாய்-ன்னு நியூஸ் வர சான்ஸே இல்லைன்னு நம்ம நரகாசுக்கும் நிம்மதி!
 
புராணத்துல ஒரு ட்ராபிக் ராமசாமி உண்டு..யாராவது ஓவரா ஆடுனா, விஷ்ணு/சிவன்கிட்ட மனு கொடுக்கிறது அவர் வழக்கம். அவரு பேரு இந்திரன். அவரே ஒரு குஜால் பேர்வழிதான்னாலும், நரகாசு ஆட்டம் தாங்காம, விஷ்ணுகிட்டப் போய் கம்ளைண்ட் பண்ணுதாரு. 'டி.எஸ்.பியா புரமோசன் வரட்டும், பார்த்துக்கிறேங்கிறேங்கிற மாதிரி அவரும் 'கிருஷ்ண அவதாரம் எடுக்கும்போது கவனிச்சுக்கிறேன், அந்தப்பயல'ன்னு சொல்லி அனுப்புதாரு.
 
 
வின்டோஸ் புது வெர்சன் இறங்குற மாதிரி, விஷ்ணு-பூமாதேவி கப்புள்ஸ், கிருஷ்ணா-சத்யபாமாவா 'யாதவ' ஜாதில அவதரிக்கிறாங்க. இப்போ இந்திரலோக லேடீஸ்லாம் புது மம்மிகிட்ட  வந்து நரகாசு ஆட்டத்தைச் சொல்ல, மம்மி காண்டாகிடுது. வீட்டுக்காரரைக் கூப்பிட்டு, அவனைத் தூக்குய்யான்னு சொல்லிடுது. கடவுளே ஆனாலும் கணவன்னு ஆனப்புறம் எதிர்த்துப் பேச முடியுமா?
 
கிருஷ்ணர் பீகார்ல இருந்து படையெடுத்து அஸ்ஸாம் போயி, ஃபைட் பண்றாரு. விதின்னு ஒன்னு இருக்கும்போது நைனாவால என்ன செய்ய முடியும்? சோ, கிருஷ்ணரையே சாச்சுப்புடுதான் நரகாசு. அவ்வளவு தான், மம்மிக்கு வந்துச்சே கோவம்..'என் புருசனை அடிக்கிற ரைட்ஸு என்னைத் தவிர எவனுக்கும் இல்லைடா ங்கொய்யால'ன்னு ஒரே போடு, நரகாசு காலி!
 
அப்படி மண்டையைப் போடும்போது தான் நரகாசுக்கே மேட்டர் எல்லாம் புரியுது.அதனால எல்லாரும் என் ஆட்டத்தை படிப்பினையா வச்சு, இதை மறந்திடாம இருக்கும்படியா வருசாவருசம் கொண்டாடுடுங்கன்னு கேட்டுக்கிடுதாரு. ஆக்சுவலா தீபாவளிங்கிறது அஞ்சுநாள் பண்டிகைய இருந்து, மூணுநாளா ஆகி, இப்போ ஒருநாளா நிக்குது. அதுல முதநாள் மட்டும்தான் நரகாசுக்கு!
 
ஒகே..இப்போ இந்த பகுத்தறிவுக் கும்பலுக்கு ஏன் ***ல எரியுதுன்னு பார்ப்போம். அவங்க என்ன சொல்றாங்கன்னா, 'நரகாசு ஒரு தமிழ்மன்னன்..ஒரு தமிழனோட ராஜ்ஜியத்தை அழிச்சதைப் போய்க் கொண்டாடுறீங்களே, இது நியாயமா?' ன்னு.
 
முதல்லயே சொன்ன மாதிரி நமக்குப் பகுத்தறிவெல்லாம் கிடையாது. 'படிச்சிருக்கோம், உழைக்கத்தெம்பிருக்கு..நமக்கு எதுக்கு நக்கிப் பொழைக்கிற பொழப்பு'ன்னு பகுத்தறிவுப்பக்கம் நான் போறதே இல்லை. பகுத்தறிவில்லாத கூமுட்டையான நமக்குத் தோணுறது இது தான்..

1. அஸ்ஸாம் அப்போ தமிழ்நாடாத்தான் இருந்துச்சு...நரகாசுரன் தமிழந்தான்னே வச்சிக்குவோம். அப்போ அந்த தமிழனோட அப்பா-அம்மா யாரு? அவங்களும் தமிழங்க தானே? அட்லீஸ்ட் விஷ்ணுவோ அல்லது பூமாதேவியோ தமிழாத்தானே இருக்கணும்? இப்படி விஷ்ணுவைஅல்லது பூமாதேவியை தமிழராக் காட்டுன புராணத்தை, ஆக்சுவலி நாம பாரட்டத்தானே செய்யணும்? நியாயத்துக்கு தமிழனுக்காக பொங்குறவங்க, அந்த தமிழனைப் பெத்த தமிழர்களை வணங்கலாமே!
 
2. மூதாதையர் வழிபாடுங்கிறது நம்ம கலாச்சாரத்துலயே இருக்கிற விஷயம். நம்ம தாத்தா நரகாசுரர்(!), நம்மகிட்ட வேண்டி இதை ஒரு விழாவாக் கொண்டாடுங்கன்னு சொன்னப்புறம், உங்களை மாதிரி மூஞ்சைத் தொங்கப்போட்டுக்கிட்டிருந்தா, அவர் ஆவி ஃபீல் பண்ணாது? தாத்தா செத்தன்னிக்கே குத்தாட்டம் போடற இனம்யா நாங்க.

3. திராவிடம்-ஆரியம் பேசுற/ஆராய்கிற பலரும் ஒத்துக்கிட்டவிஷயம், யாதவ ஜாதிங்கிறது திராவிடத்தைச் சேர்ந்தது! அப்போ ஒரு திராவிட மன்னன் கிருஷ்ணனால, தமிழன் நரகாசுரன் கொல்லப்பட்டானா? நாம் தமிழர் இயக்கம் மாதிரி சில ப்யூர் தமிழ்வாதிங்க, பகுத்தறிவுவாதிகளின் திராவிடக்கொள்கையால தான் தமிழன் வீழ்ந்தான்னு சொல்றாங்களே..அது அப்போ நரகாசுரன் பீரியடுலேயே ஸ்டார்ட் ஆகிடுச்சா?..ஓ, அதனால தான் இந்தப் பண்டிகை பேரைக் கேட்டாலே எரியுதா பிரதர்ஸ்!

4. கிராமத்துல சில கிழவிங்க இருக்கும். பிடிக்காத பக்கத்து வீட்டுக்காரன் வீட்ல விஷேசம்னா என்னத்தையாவது புலம்பித் திட்டிக்கிட்டே திரியும்ங்க..முடிஞ்சா சண்டையும் இழுப்பாங்க..அதுகளுக்கு விவரம் அவ்வளவு தான்...பகுத்தறிவுக்குமா? பிடிக்கலைன்னா மூடிக்கிட்டு இருக்கலாமேய்யா!
 
5. எந்த ஒரு விஷயமானாலும் நாங்க நல்லதையே பார்க்கும்போது, அது எப்படிய்யா அதுல இருக்கிற/இல்லாத குறைகள் மட்டும் அவங்களுக்குத் தெரியுது..இந்த மனநோய்க்குப் பேரு என்ன?

எது எப்படியோ, நம்ம தாத்தா திவசத்தை விஷேசமாக் கொண்டாட வேண்டியது நம்ம கடமை..வெடிங்கய்யா பட்டாசை!
 

அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்...பரவும் தீபஒளி, எல்லார் வாழ்விலும் இருளை அகற்றட்டும்!
 
மேலும் வாசிக்க... "தீபாவளியைக் கொண்டாடலாமா?"

Monday, December 24, 2012

கேளுங்கள் தரப்படும் (கிறிஸ்துமஸ் ஸ்பெஷல்)

இந்திய ஞான மரபில் உள்ள ஞானிகளைத் தவிர்த்துவிட்டுப் பார்த்தால், என் மனதுக்கு நெருக்கமானவராக நான் எப்போதும் உணர்வது  இயேசுநாதரைத் தான்.இந்திய ஞான நூல்களைப் படிக்கும் ஒருவருக்கு அடிப்படை ஆன்மீக அறிவு அவசியமாய் உள்ளது. இன்னும் சரியாகச் சொல்வதென்றால், அவை ஆன்மீகத் தேடல் கொண்டோருக்காக எழுதப்பட்டவை. 

பின்னர் புராணங்கள் அவற்றை எளிமைப்படுத்தினாலும், புராணங்களின் மறைபொருளை சரியானபடி உணர, ஆன்மீக அறிவு தேவையாகவே உள்ளது. அவ்வாறு அடிப்படைப் பயிற்சிகள் இல்லாமல், கீதையைவோ தம்மத்தையோ படிக்கும் ஒருவர் தவறான புரிதலுக்குச் செல்லும் வாய்ப்புகளும் அதிகம். (கீதை ஒரு கொலைநூல் என்று கண்டுபிடித்த புத்திசாலி சைண்டிஸ்ட்களை நினைவுகூறுங்கள்!)

ஆனால் வாழ்க்கையில் அடிபடாத சிறு வயதிலேயே இயேசுநாதரின் வார்த்தைகள் என்னை வசீகரித்திருக்கின்றன. அதற்குக் காரணமாக பின்னர் நான் புரிந்துகொண்டது, அவற்றின் எளிமை தான்.என் வாழ்வில் நான் முதன்முதலாகக் கேட்ட, இயேசுவின் வாக்கியம் ‘கேளுங்கள் தரப்படும்..தட்டுங்கள் திறக்கப்படும்..தேடுங்கள் கிடைக்கும்’ என்பது தான். புகழ்பெற்ற அந்த கிறிஸ்தவப்பாடல், இப்போதும் என் மனதை உருக்குவது, என் வாழ்வின் பல இக்கட்டான சூழ்நிலைகளிலும் வழித்துணையாய் வருவது.


கல்லூரி முடிந்து, உண்மையான உலகை நான் எதிர்கொண்ட காலம் தான், என் வாழ்வின் மோசமான காலகட்டம். சரியான வேலையும் அமையாமல், நண்பர்களுடன் தொடர்பும் இல்லாமல், குடும்பத்தின் அரவணைப்பும் இல்லாமல் தனித்துத் திரிந்த நாட்கள் அவை.அந்த நேரத்தில் ஆன்மீகப் புத்தகங்களை என்னை வாழ வைத்தன. அதன்பின், சில வருடங்களில் நான் கற்றுக்கொண்டது ஒன்றே ஒன்று தான்:

‘நாம் ஒரு விஷயத்திற்கு ஆசைப்படுகிறோம் என்றால் அதற்கு நம்மை தகுதிப்படுத்திக்கொள்ள வேண்டும். அவ்வாறு தகுதிப்படுத்திக்கொண்டபின் இறைவனிடம் வேண்டினால் கேட்பது தரப்படும். பன்றிகளுக்கு முன் முத்தை யாரும் வீச மாட்டார்கள். நாம் நம்மை தகுதிப்படுத்திக்கொள்ளாதவரை எதுவும் நம்மை வந்தடையாது;வந்தாலும் நம்மிடம் நிலைக்காது.’

எனது தனிப்பட்ட வாழ்க்கையிலும், பொறியியல் வாழ்க்கையிலும் பல சிக்கலான தருணங்கள் வருவதுண்டு.சில முக்கியமான பிரச்சினைகளை தீர்க்க முடியாமல் திணறும்போதோ அல்லது முடிவெடுக்க முடியாமல் தவிக்கும்போதோ எனக்கு கை கொடுப்பது இயேசுவின் அந்த வார்த்தைகள் தான்...’கேளுங்கள் தரப்படும்..தட்டுங்கள் திறக்கப்படும்..தேடுங்கள் கிடைக்கும்’. இந்த வார்த்தைகளை மனதிற்குள் சொல்லிக்கொள்ளும்போது, தன்னம்பிக்கை பிறக்கும். இறைவன் நம்மைக் கைவிட மாட்டான் என்று தோன்றும். அது உண்மையாகவும் ஆகும்.


பைபிளில் எனக்குப் பிடித்த பகுதி என்றால் மலைப்பிரசங்கம் தான். தன் வாழ்வின் செய்தியனைத்தையும் அந்த சொற்பொழிவிலேயே இயேசுநாதர் சொல்லிவிட்டதாகவே எனக்குத் தோன்றும். ‘’கேளுங்கள் தரப்படும்’-க்கு அடுத்த படியாக எனக்குப் பிடித்த வாக்கியம் ‘நீங்கள் தர்மம் செய்யும்போது, உங்கள் வலக்கை செய்வது இடக்கைக்கு தெரியாதிருக்கட்டும்.’ என்பது தான். இந்த உலகிற்கு வரும்போது ஆடைகூட இல்லாமல் தான் வந்தோம். இப்போது இங்கே நாம் பெற்றிருப்பது அனைத்தும், இந்த உலகிடமிருந்து பெற்றுக்கொண்டவையே. அப்படி இருக்கும்போது, பிறருக்கு உதவுவதை பெரிய விஷயமாகப் பேசுவது நகைப்புக்குரியது அல்லவா? மண்டை காய வைக்கும் ஆன்மீக விளக்கங்கள் ஏதுமின்றி, இயேசுநாதர் நேரடியாகவே சொல்கிறார் :தர்மத்தை மறைவாய் செய்யுங்கள். மறைபொருளை இறைவன் அறிவான்.


மலைப் பிரசங்கத்தின் வார்த்தைகள் அனைத்துமே எளிமையானவை, உண்மையானவை. நாம் இறைவனிடம் பலவாறு வேண்டிக்கொள்கிறோம். தினமும் வேண்டினாலும், வேண்டியது கிடைத்தாலும் நம் கோரிக்கைகள் தீர்வதேயில்லை. இறைவன் நம்மை நல்லபடியாக கவனித்துக்கொள்வானா என்ற கவலை, ஆன்மீகவாதிகளுக்கு இருந்துகொண்டே இருக்கிறது. அத்தகைய நம்பிக்கை குறைந்தோர்க்கு, இயேசுநாதர் சொல்வது ஒன்று தான் : தீயோர்களாகிய நீங்களே உங்கள் பிள்ளைகளுக்கு நற்கொடைகள் அளிக்க அறிந்திருக்கிறீர்கள். அப்படியென்றால் விண்ணுலகில் உள்ள உங்கள் தந்தை, தம்மிடம் கேட்போருக்கு இன்னும் மிகுதியாக நன்மைகள் அளிப்பார் அல்லவா?

மாபெரும் நம்பிக்கை தரும் விஷயத்தை எளிமையாகச் சொல்லிச் செல்லும் இயேசுநாதரின் மலைப்பிரசங்கத்தின் உச்சமாக நான் நினைக்கும் வரிகள் இவை தான்: பிறர் உங்களுக்குச் செய்ய வேண்டும் என விரும்புகிறவற்றை எல்லாம், நீங்கள் அவர்களுக்குச் செய்யுங்கள்.

இந்த உலகம் மேன்மை பெற, இதை விடவும் நாம் வேறெதும் செய்ய வேண்டாம். நம் பொருளை பிறர் திருடக்கூடாது என்று நினைக்கிறோம்; நாமும் அப்படியே நினைப்போமாக! நம்மை யாரும் இழிவாக நடத்தக்கூடாது என்று நினைக்கின்றோம், நாமும் அப்படியே இருப்போமாக!

இந்த உலகிற்கு அன்பைப் போதித்த இயேசுமகான் அவதரித்த நன்னாளில், மலைப்பிரசங்கத்தை ஒரு முறையேனும் படிப்போம்.அந்த மாபெரும் ஞானியின் வார்த்தைகளை வாழ்வில் கடைப்பிடித்து, கடைத்தேறுவோம்.


நண்பர்கள் அனைவருக்கும் இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்!

மேலும் வாசிக்க... "கேளுங்கள் தரப்படும் (கிறிஸ்துமஸ் ஸ்பெஷல்)"

Monday, November 19, 2012

கெட்டவங்க நல்லா இருக்காங்களா?

உப தலைப்பு : உப்பைத் தின்றோர் கதைகள்

சமூகத்தில் நல்லவர்களின் வாழ்க்கையையும் கெட்டவர்களின் வாழ்க்கையையும் பொதுவாகப் பார்க்கும்போது நமக்கு அயற்சியே மிஞ்சும். கெட்டவர்கள் வசதியாக, சந்தோசமாக வாழ்வதாகவும், நல்லோர் மட்டுமே கஷ்டப்படுவதாகவுமே தெரிகிறது. 

ஆண்டவன் நல்லவர்களை மட்டுமே சோதிப்பது ஏன் என்ற புலம்பலுடனே, நாம் நம் வாழ்க்கையை ஓட்டிக்கொண்டு இருக்கிறோம். ஆனால் கடவுள் இந்த ஒட்டுமொத்த பிரபஞ்சத்தை இயக்கும்முறை, கொஞ்சம் வித்தியாசமானதாகவே உள்ளது. மேலோட்டமாக தவறு செய்தோருக்கு தண்டனை கிடைப்பதில்லை என்று நினைத்தாலும், உண்மை வேறுவிதமாகவே உள்ளது. இதை நான் அனுபவப்பூர்வமகவே உணர்ந்திருக்கிறேன்.

அந்த அனுபவத்தை கொஞ்சம் கொஞ்சமாக உங்களிடன் பகிர விரும்புகிறேன். இதற்கு உப தலைப்பாக ‘உப்பைத் தின்றோர் கதைகள்’ என்றும் வைத்துக்கொள்வோம். வழக்கம்போல் இதில் வரும் பெயர்கள், இடங்கள் மட்டும் கற்பனையே. வாருங்கள், சில வாழ்க்கையைப் பார்ப்போம்.


“எனக்கு இப்போ கல்யாணம் பண்ணி வைக்கப் போறீகளா, இல்லியா?” என்று மாடசாமி கேட்டபோது வீடே அதிர்ச்சியில் உறைந்தது.

அடுக்களையில் இருந்த மாடசாமியின் ஆத்தா “ஏலே, உனக்கு கிறுக்கு ஏதாவது பிடிச்சிருக்கா?” என்று கேட்டபடியே பாய்ந்து வந்தார்.

“ஏன்? நான் கேட்டதுல என்ன தப்பு?” என்று விறைத்தபடியே நின்று கேட்டான் மகன்.

“உன்னைவிட நாலு வருசம் மூத்தவ இன்னும் கல்யாணம் ஆகாம இருக்கும்போது, உனக்கு எப்படிலே கல்யாணம் பண்ணி வைக்கிறது?”

“ஆமா..அவளுக்கு எப்போ கல்யாணம் ஆக, நான் எப்போ கல்யாணம் முடிக்க!”

மாடசாமியின் வாயிலிருந்து வந்த வார்த்தைகள், அவனது கல்யாணமாகாத அக்கா லட்சுமியின் மனதை குத்திக்கிழித்தது. நான்கு வயது மூத்தவளாக இருந்தும் லட்சுமியின் கல்யாணம்

தடைபட்டதற்குக் காரணம்,அவளுக்கு இருந்த டி.பி. எனும் காச நோய் தான்.

மாடசாமியின் ஐயா வாய் திறந்தார். “மூத்தவ இருக்கும்போது உனக்கு கல்யாணம் முடிச்சா, அப்புறம் அவளை கரையேத்த முடியாதேப்பா? இன்னும் கொஞ்சநாள் பொறு. அவளுக்கு

ரெண்டு வருசமா வைத்தியம் பார்த்துக்கிட்டுத்தானே இருக்கிறோம்?”

“இப்போ சரியானாலும் யாரு இவளைக் கட்டுவா? சொந்தக்காரங்க எல்லாருக்கும் விஷயம் தெரியுமா? நான் ஒன்னே ஒன்னு கேட்கிறேன்..இப்போ நீங்களா பொண்ணு பார்த்துக் கல்யாணம்

பண்ணி வைக்கிறீகளா, இல்லே நானே எவளையாவது இழுத்துக்கிட்டு வரவா?”

அதற்குப் பின் அவனிடம் பேச ஏதுமில்லை. வீடு மௌனமாய் அழுதபடியே அவனுக்கு கல்யாணம் செய்து வைக்கும் வேலையில் இறங்கியது. சீக்கிரமாக அவனுக்கு பெண் பார்த்து

கல்யாணம் செய்துவைத்தார்கள்.

கல்யாண வாழ்க்கை நன்றாகவே சென்றது. அதற்கு அடையாளமாய் இரண்டு குழந்தைகள் வேறு. அவ்வப்போது வருகின்ற காய்ச்சல்-சளி-இருமலைத் தவிர வேறு பிரச்சினை இல்லை.

அக்காவிற்கும் அதே நேரம் காசநோய் மட்டுப்பட்டது. அனைவரும் சந்தோசமாய் அக்காவிற்கான கல்யாண வேலைகளைப் பார்க்க ஆரம்பித்தபோது, தம்பி கல்யாணம் முடித்தது பற்றிய

கேள்விகளை எப்படி எதிர்கொள்வது என வீடு திகைத்தது.அந்நியத்திலேயே மாப்பிள்ளை பார்த்ததால், அவர்கள் முழு விவரம் தெரியாமல் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்ல

முடியவில்லை.

பின்னர் பெரியவர்கள் கூடிப் பேசி, தம்பியை கூடப்பிறந்தவன் என்று பொதுவாகவும் ரொம்பக் கேட்டால் அண்ணன் என்றே அறிமுகப்படுத்துவது என்று முடிவு செய்தார்கள். நல்ல ஒரு

வரனும் கூடிவர, கல்யாணம் நல்லபடியாக முடிந்தது. அக்காவும் அதன்பின் காசநோயின் அறிகுறியே இல்லாமல், நல்லபடியாக வாழ ஆரம்பித்தார்.


அதன்பின் அடுத்த இரண்டு வருடங்களில் அக்கா, நல்லதொரு குழந்தையைப் பெற்றெடுக்க அனைவரும் இனி அவள்பாடு பிரச்சினை இல்லை என்று நிம்மதி ஆனார்கள்.

தம்பிக்குத் தான் அடிக்கடி சளியும் இருமலுமாய் வர ஆரம்பித்தது.கூடவே குடும்பத்தில் மனைவியுடன் பிரச்சினை வர, மாமியாரிடம் அடிவாங்கும் அவலமும் நடந்தது. ஒரு கட்டத்தில்

உடல்நிலை ரொம்பப் படுத்தியெடுக்க, மருத்துவரிடம் சென்றபோது தான் தெரிந்தது தம்பிக்கு காச நோய் என்று!

மெதுவாக காசநோய் தம்பியின் உடலை உருக்க ஆரம்பித்தது. அக்காவின் வாழ்க்கை வளமாக ஆகிக்கொண்டிருந்த அதே வேலையில் தம்பியின் வாழ்க்கையும் உடல்நிலையும் மோசமாகிக்

கொண்டே வந்தது. அடுத்த இரண்டு வருடங்களில் தம்பி காலமானார்.வாலிப வயது-முறுக்கேறிய உடல்-திமிர்த்தனமான பேச்சு எல்லாம் அர்த்தமிழந்து போக, தம்பி அடக்கமானார்.


இந்த மாதிரி பல சம்பவங்களைப் பல வருடங்களாக உற்றுக்கவனித்தபின், நாம் செய்யும் செயல்களுக்கான பலன்கள் காலம் கடந்தேனும் மெல்ல மெல்ல நம்மை வந்தடைகின்றன. அவை

நல்ல செயல்களாய் இருந்தால் நன்மையாகவும், தீய செயல்களாக இருந்தால் தீமையாகவும் இறைவன் நமக்கு திருப்பிச் செலுத்துகிறான். இது ஏதோ ஓரிடத்தில் அத்திப்பூத்தாற்போன்று

நடந்த சம்பவமாய்த் தெரியலாம். ஆனால் இது போன்ற பல சம்பவங்களை என் வாழ்விலும் உற்றார் வாழ்விலும் கண்டுவிட்டே இதைச் சொல்கிறேன்.

அந்த சம்பவங்களை இன்னும் சொல்வேன்.

(தொடரும்)

மேலும் வாசிக்க... "கெட்டவங்க நல்லா இருக்காங்களா?"