Showing posts with label வள்ளுவம். Show all posts
Showing posts with label வள்ளுவம். Show all posts

Sunday, November 13, 2011

திருவள்ளுவரும் மேனேஜ்மெண்டும்

பல வருடங்களுக்கு முன் நான் ஒரு தொழிற்சாலையில் தரக்கட்டுப்பாட்டு பொறியாளனாக வேலை பார்த்த நேரம். திடீரென்று உற்பத்திப் பொருட்கள் அதிகளவு ரிஜெக்ட் ஆகத்தொடங்கின. அதனால் ஏற்பட்ட நஷ்டமும் லட்சங்களைத் தாண்டியது. அது எதனால் ஏற்படுகிறதென கண்டுபிடித்து நிறுத்தும் பொறுப்பை என் மேனேஜர் என் தலையில் போட்டார்.

பொதுவாக பொறியியலில் நடக்கும் தவறுகளுக்கு நான்கு Mகள் தான் காரணமாக அமையும். அவை Man, Machine, Method, Material. அடுத்த இரண்டு மாதங்களுக்கு ஒவ்வொன்றாக்க் கண்காணித்ததில் Material தான் இவ்வளவுக்கும் காரணம் எனக் கண்டுகொண்டேன்.

ஃபெர்ரோசிலிக்கான் (Fe-Si) என்ற மெட்டீரியல் கடந்த சில மாதங்களாக புது சப்ளையரிடமிருந்து வாங்குவதையும் 'ஸ்பெக்ட்ரம் ஊழல்’ போன்று எந்த விதமான  விதிமுறைகளும் பின்பற்றப்படாததையும் கண்டுபிடித்தேன். பழைய சப்ளையரின் Fe-Siஐ மீண்டும் உபயோகப் படுத்திப் பார்த்து என் சந்தேகத்தை உறுதிப்படுத்தினேன்.

அதற்கான முழுக்காரணமும் என் மேனேஜர்தான் என்பதும் எனக்கு நன்றாகவே தெரிந்த்து. எனவே கோபத்துடன் அவரது அறைக்குள் நுழைந்து என் ரிப்போர்ட்ஸைக் காட்டினேன்.

“இதை நீங்கள் நினைத்திருந்தால் ஆரம்பத்திலேயே தவிர்த்திருக்கலாம்” என்றேன்.


அவரோ கூலாக “ தம்பி..திருவள்ளுவர்.. திருவள்ளுவர்னு ஒருத்தர் முன்னாடி இருந்தார். தெரியுமா?” என்றார்.


“தெரியும்”


“அவர் சொல்லியிருக்கார்:


சொல்லுதல் யார்க்கும் எளிது அரியவாம்
சொல்லிய வண்ணம் செயல்”(664) என்றார் என் மேனேஜர்.


தன் தவறுக்கு திருக்குறளைத் துணைக்கு இழுக்கவும் என் கோபம் கூடியது.


“அதே திருவள்ளுவர்தான் சொல்லியிருக்கார் :
இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து
அதனை அவன்கண் விடல்.(517)


உங்களை வேலைக்கு எடுக்கும்போதே இந்த வேலையை நீங்க சரியா செய்வீங்களான்னு ஆராய்ந்து எடுத்திருக்கணும். அப்படிச் செய்யாதது தான் நம்ம GM பண்ண தப்பு “என்றேன்.


அப்புறம்..என்னாச்சுன்னா..


அந்த வருசம் பெர்மனெண்ட் ஆகவேண்டிய நான் வேலை இழந்து வீட்டுக்குப் போனேன். அப்புறம்தான் எனக்கு இந்த திருக்குறளுக்கு அர்த்தம் புரிந்தது:


யாகாவா ராயினும் நாகாக்க காவாக்கால்
சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு.(127)


டிஸ்கி : இன்று கொஞ்சம் அதிக வேலை..இன்னும் ஆஃபீஸில் தான் இருக்கிறேன்..எனவே ரொம்ப நாளாக ட்ராஃப்ட்டில் இருந்த இந்தப் பதிவு..இது பதிவுலகிற்கு வந்த புதிதில், நல்லபிள்ளையாக இருந்த போது எழுதியது!!
மேலும் வாசிக்க... "திருவள்ளுவரும் மேனேஜ்மெண்டும்"

Wednesday, June 29, 2011

அன்னிய மொழிக்கு மரியாதை...தாய்மொழிக்கு?


”கான்ஸ்டிபேசன்..சொல்லு”

"கான்ஸ்டிஃபேசன்"

"அப்படி இல்லைப்பா.கொஞ்சம் ஸ்ட்ரெஸ் பண்ணு"

"கான்ஸ்டிஃபே..சார், வரமடேங்குது சார்.."

"கான்ஸ்டிபேசன்னாலே அப்படித்தான்..வராது..நல்லா ஸ்ட்ரெஸ் பண்ணாத் தான் வரும்..நல்லா..ம்..இப்போ சொல்லு"

"கான்ஸ்டிபேசன்"

”வெரி குட்!”
ன்று ஆஃபீஸ் நண்பர்களுடன் பேசிக்கொண்டிருக்கும்போது ஒரு நண்பர் ஃபேன் என்று சொல்ல வந்தவர் ஸ்பேன் என்று சொல்லிவிட்டார். ஏதோ மிகக் கேவலமான ஒரு செயலைச் செய்துவிட்டது போல் அவர் கிண்டல் செய்யப்பட்டார். அவரைப் பார்க்கவே பரிதாபமாக ஆகிவிட்டது.

எனக்கு அது கடும் கோபத்தைக் கிளப்பியது. அவர்களில் பெரும்பாலோனோர் தமிழர்கள். “உங்களில் யாருக்கு ல,ழ,ள சரியாக உச்சரிக்கத் தெரியும்?”என்று கேட்டேன்.

எல்லோரும் அமைதியாக இருந்தனர். “அப்போ தாய்மொழியை சரியாக உச்சரிக்க யாருக்கும் தெரியவில்லை இல்லையா? அது பற்றிய வருத்தமோ அவமானமோ நமகு இல்லை. ஆனால் ஆங்கிலத்தில் ஒரு எழுத்தைத் தவறாகப் பேசிவிட்டலும் முட்டாள் ரேஞ்சிற்கு அவரை ட்ரீட் பண்றோம். ஏன் இப்படி? ஸ்ஃபேன் சொல்லும்போது வர்ற இளக்காரம் வாலைப்பலம்னு சொல்லும்போது ஏன் வரலை? தமிழைச் சரியாப்பேசுன்னு சொல்றதும் பேசுறதும் இண்டீஸண்ட்..இங்க்லீஸ் கரெக்டாப் பேசுடான்னு சொன்னா பெருமை, இல்லையா?’ன்னு கேட்டேன். 

ஒரே ஒரு நண்பர் மட்டும் ‘நீங்க சொல்றது சரிதான்..ஆனால் எல்லாருமே அப்படித் தானே?” என்றார்.

உண்மையில் அங்கு இருந்த யாருக்குமே நான் உட்பட, ழகர உச்சரிப்பு சரியாக வராது.பேசும் வேகத்தில் நாம் கவனிப்பதும் இல்லை.

”உண்மைதான், இங்கு தமிழைச் சரியாக உச்சரித்தல் பிரச்சினை அல்ல. அதைச் செய்யும்போது வராத அவமானம் அன்னிய மொழியைப் பேசும்போது வருவது ஏன்?” என்றேன்.

ஆங்கிலத்தை நாம் பேணிப் பாதுகாக்கும் அளவிற்கு ஆங்கிலேயர்களே செய்வதில்லை. அமெரிக்கர்களின் ஆங்கிலேயம் ஏறக்குறைய சென்னைத் தமிழுக்கு ஈடானது தான். ’எஃப் பாம்’ போடாமல் பேசவே மாட்டர்கள். வார்த்தையைக் கொத்துவதிலும் வல்லவர்கள். நான் அவர்களுடன் பேசும்போதெல்லாம் ஒரு அசமஞ்சம் ரேஞ்சுக்கு நம் ஆங்கிலம் தோன்றும். அந்த உரையாடல் இந்த மாதிரி இருக்கும்:

”ஐயா, தாங்கள் கொடுத்த வரைபடத்தை முடித்துவிட்டேன். அடுத்து நான் என்ன செய்ய வேண்டும் என்று சொல்கிறீர்களா?”

”ஆத்தா..அந்தாண்ட குவாலிட்டி டிபார்ட்மெண்ட்க்காரன் குந்திக்கினு இருப்பான்..அவங்கைல சொல்லு..”

சிங்கப்பூர்க்காரர்கள் தனியாக ஒரு ஆங்கிலத்தை உண்டாக்கி வைத்திருக்கிறார்கள். நான் பார்க்கவில்லை என்பதை ‘ஐ நோ சீ” என்பார்கள். அங்கு இருக்கும் நம் ஆட்கள் அவர்களைத் திருத்த முற்படுவது இல்லை. ஆனால் ஒரு எழுத்தை சக தமிழன் சரியாக உச்சரிக்காவிட்டால், கேலி..கிண்டல்.

நாம் இன்னும் ஆங்கிலேய அடிமை மனப்பான்மையில் இருந்து வெளிவரவில்லையோ என்று தான் தோன்றுகிறது.

மும்பைக்கு ரிக்‌ஷா ஓட்டிப் பிழைக்கச் செல்லும் ஒருவர் ஒரே மாதத்தில் ஹிந்தி பேசுகிறார். அதைக் கற்றுக்கொள்வதில் அவர்களுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. 

ஆனால் கோடி ரூபாய் சம்பளம் வாங்கிக் கொண்டு நடிக்கும் இந்தி இறக்குமதி நடிகைகள், பெரும்பாலும் பேசுவது ஆங்கிலம்..அல்லது டமிங்லீஸ். படிக்காத பாமரன் பொழைப்புக்காக ஒரு மொழியைக் கற்றுக்கொள்ளும்போது, இவர்களுக்கு மட்டும் ஏன் தமிழ் வர மறுக்கிறது.

ஒரு மொழியை அறிந்து நடித்தால் இன்னும் நன்றாக உணர்ச்சியை வெளிப்படுத்தலாமே..இவர்களுக்கு வாய்ப்புக் கொடுக்கும் இயக்குநர்கள் தமிழில் பேசினால் தான் வாய்ப்பு என்று சொல்லலாமே? சீமானைத் தவிர வேறு யாரும் அதைச் செய்வதாகத் தெரியவில்லை.

நமக்குத் தெரிந்து குஷ்பூ போன்ற சிலர் மட்டுமே மார்க்கெட் இருக்கும்போதே தமிழ் பேசியது.(கோபமா இருக்கேன் மக்கா..படம் நாளைக்குப் போடுறேன்!) மற்றவர்கள் நாக்கில் அந்த சரஸ்வதிதேவியின் சூலாயுதத்தால் சூடு போட்டுத் தான் தமிழை வரவைக்கவேண்டும் போலும். 

தாய்மொழியிலும் அதற்கு ஆதரவாகவும் பொதுவில் (குறிப்பாக அலுவலம், வங்கிகளில்) பேசவே தயங்க வெண்டிய நிலை தான் உள்ளது. அப்படிப் பேசுபவர்கள் பழம்பஞ்சாங்கம் ரேஞ்சுக்கு பார்க்கப்படுகிறார்கள். ’தாய்மொழியை எப்படி வேண்டுமானாலும் ரேப் பண்ணு, ஆங்கிலத்தை மட்டும் பொத்திப் பேணு’ என்ற மனநிலைக்கு நம் தாழ்வு மனப்பான்மை தான் காரணமோ?

‘தமிழ் சோறு போடுமா? அப்புறம் ஏன் அதைப் இடித்துத் தொங்க வேண்டும்? தூக்கி எறி’என்பது இன்னும் சிலரின் மனப்பான்மை. ‘எது எல்லாம் பணம் கொடுக்குமோ அதை மட்டுமே பேண வேண்டும். வரவு இல்லையென்றால் அதைக் குப்பையில் போடு’ என்பது ஆரோக்கியமான சிந்தனை தானா? 

இவர்கள் தன் பெற்றோர் சம்பாதிப்பதை நிறுத்திய பின் என்ன செய்வார்கள்? இனி வரவு இல்லையென்று வெளியில் விரட்டி விடுவார்களா? கவனிக்காது சோற்றுக்கு வழியின்றி அலைய விட்டு விடுவார்களா? தாய்மொழியாகவே இருந்தாலும் லாபம் இருந்தால்தான் கற்றுக்கொள்வோம் என்பவர்கள், அடுத்து எந்தமாதிரித் தலைமுறையை உண்டாக்குவார்கள் என்பதை நினைக்கவே அச்சமாக உள்ளது.

தாய்ப்பாசம் போன்ற பணத்தால் எடை போட முடியாத, எடை போடக்கூடாத விஷயங்கள் இன்னும் இந்த உலகில் இருக்கவே செய்கின்றன.தாய்மொழியும் அவற்றில் ஒன்று. எந்த மொழியைத் தாய்மொழியாகக் கொண்டவராக இருந்தாலும் அதைப் பேணுங்கள். 

அதில் தான் மறைந்துள்ளது நம் வரலாறும் அடையாளமும்!



மேலும் வாசிக்க... "அன்னிய மொழிக்கு மரியாதை...தாய்மொழிக்கு?"

Friday, January 28, 2011

திருவள்ளுவரும் திருந்தாத நண்பனும்

”நான் ஏன்டா படிக்கணும்?”
பத்தாண்டுகளுக்கு முன், எங்கள் கல்லூரி முன் வைத்துக் கேட்டான் பொன்ராசு. எனக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. என்னைப் போன்று பஞ்சப் பராரியல்ல அவன். திருச்சியில் பெரிய மில் அதிபரின் மகன் . மறுபடியும் கேட்டான்
“ நீயாவது படிச்சு, வேலைக்குப் போகணும்ங்கிறதுல ஒரு அர்த்தம் இருக்கு. எனக்குத் தேவை என் கல்யாணப் பத்திரிக்கையில் போட ஒரு டிகிரி..இந்த டிகிரியை முடிச்சாலும் முடிக்கலைன்னாலும் நான் போட்டுக்குவேன். அப்புறம் ஏன் நான் படிக்கணும்?”
அருகிலிருந்த ஹிசாம் சையது “ இல்லைடா மச்சி, படிச்சி இஞ்சினீயர் ஆனா கூடுதல் மரியாதை தானே” என்றான். ஹிசாமும் நல்ல வசதியான வீட்டைச் சேர்ந்தவன்தான். ஆனாலும் பொன்ராசு பிடிகொடுக்கவில்லை. “நான் இப்பவே முதலாளிடா..நான் படிச்சு இன்னொரு இடத்துக்கு வேலைக்குப் போகணும்னு எந்த அவசியமும் இல்லை”

அதன்பிறகு நானும் ஹிசாமும் படித்து முடித்து ஆளுக்கொரு வேலையில் செட்டில் ஆனோம். பொன்ராசும் மில் முதலாளியாகிப் போனான். எங்களுடன் எந்தத் தொடர்பும் இல்லை.

போன மாதம் ஹிசாமிடம் இருந்து ஃபோன் வந்தது.
”செங்கோவி, பொன்ராசைப் பார்த்தேன்டா..”
”அப்படியா..எப்படி இருக்கான்?” என்றேன்.
“ரொம்ப மோசம். 2001-ல வந்த ரிசசன்ல டெக்ஸ்டைல் துறை பயங்கர அடிவாங்குச்சே..அப்போ மில்ல ரொம்ப லாஸாம். இவங்களால அப்புறம் எழுந்திரிக்கவே முடியலையாம்..ஏகப்பட்ட கடன் ஆகி, இப்போ சொந்த வீடு நிலம் எல்லாத்தையும் வித்துட்டாங்களாம். வாடகை வீட்டுலதான் இப்போ இருக்காங்களாம். எதுக்கோ சென்னை வந்துருக்கான். எப்படியோ என் ஆஃபீஸ்க்கு வந்துட்டான். பார்க்கவே கஷ்டமாப் போச்சு”

ஏறக்குறைய ஹிசாம் கதையும் அதுதான். பாகப்பிரிவினைத் தகராறில் அவர்களது தொழில் இரண்டாய்ப் பிரிக்கப் பட்டபின் வாப்பாவின் தொழிலில் பெரிதாய் லாபமேதும் இல்லை. நல்லவேளையாய் டிகிரி முடித்திருந்ததால், ஹிசாம் அதே வாழ்க்கைத் தரத்தை   தொடர முடிந்தது.

எனக்கு சட்டென்று வள்ளுவர் நினைவுக்கு வந்தார்.

கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவற்கு
மாடல்ல மற்றை யவை. 

கஷ்டகாலம் வந்துவிட்டதென்றால் வீடு, வாசல், சொத்து, சொந்த பந்தம் எல்லாம் பறந்துவிடுகிறது. ஆனால் எவ்வளவு கெட்ட காலத்திலும் நம்மைவிட்டு நீங்காத செல்வமாய் உடன் வருவது, நாம் கற்ற கல்வி மட்டுமே. ஆகவே கல்வியைத் தவிர மற்ற எதுவும் உண்மையான செல்வம்(மாடு) அல்ல!

மேலும் வாசிக்க... "திருவள்ளுவரும் திருந்தாத நண்பனும்"

Thursday, December 30, 2010

திருவள்ளுவரும் ஹனிமூனில் வாங்கிய தர்ம(பத்தினி) அடியும்

டிஸ்கி: கதையல்ல நிஜம்.

நம்ம அதிரடிக்கார மச்சான் தன் தர்மபத்தினியுடன் கொடைக்கானலுக்கு ஹனிமூன் போயிருந்தபோது, சனியன் மாதிரி அறுவைக்கார நண்பன் ஒருவன் அவருக்கு ஃபோன் செய்தான். இவரும் எடுத்துப் பேசினார். அவன் போன கதை வந்த கதை என பேசிக்கொண்டேயிருந்தான்.

நம்ம அக்காவும் இவரைப் பார்த்துக்கொண்டே இருந்தார். மச்சானும் ’அறுக்கானே ’என நினைத்துக்கொண்டு, வாயை லேசாகக் கோணிக்கொண்டே உஷ்..உஷ்.. என மெதுவாக சொல்லிக்கொண்டேயிருந்தார்..அரை மணி நேர அறுவைக்குப் பின் ஒருவழியாய் ஃபோனைக் கீழே வைத்தார்.

உடனே அக்கா கேட்டார்:” ஏன் ஃபோன்ல பேசும்போது, வாயை வாயைக் கோணிக்கிறீங்க?”

மச்சானும் பெருமையாக “அவன் சரியான பிளேடும்மா!..யாராவது ஃபோன்ல பேசி ரொம்ப அறுத்தா அந்த மாதிரி வாயைக் கோணிப்பேன்..ஆமா, ஏன் கேட்கிறே?” என்றார்.

அவரது மனைவி கடுப்புடன் சொன்னார்:” இல்லே, நேத்து எங்கப்பா பேசும்போதும் இப்படித்தான் பண்ணீங்க..அதான் என்ன விவரம்னு கேட்டேன்”

“ஹே..அது..அதுவந்து..சும்மா..ஹி..ஹி..”

டம்..டும்..டமார்..

நீதி:
திறனறிந்து சொல்லுக சொல்லை அறனும்
பொருளும் அதனினூஉங்கு இல். (644)

பொருள்:
கேட்பவரின் மனப்பான்மை அறிந்தே எந்தச் சொல்லையும் சொல்லவேண்டும். அதைவிட மேலான அறமும் பொருளும் இல்லை.

மேலும் வாசிக்க... "திருவள்ளுவரும் ஹனிமூனில் வாங்கிய தர்ம(பத்தினி) அடியும்"