இந்த இந்தியப் பயணத்தில் என்னை அசர வைத்த மனிதர் ஆபீசர் என்று நம்மால் அன்போடு அழைக்கப்படும் உணவுலகம் சங்கரலிங்கம் அவர்கள் தான். என்னைப் பார்க்க வேண்டும் என்ற விபரீத ஆசையை அவர் சொன்னபோது, நான் ’வேலைப்பளு காரணமாக என்னால் திருநெல்வேலி வரமுடியாது. எனவே அடுத்த முறை பார்ப்போம்’ என்று சொன்னேன்.
அதற்கு அவர் ‘அதனால் என்ன..கோவில்பட்டியில் எங்கேன்னு சொல்லுங்க. நானே வர்றேன்’ என்றார். எவ்வளவு பெரிய மனிதர்..தானே வருவதாகச் சொல்கிறாரே என்று மெல்ட் ஆகிவிட்டேன். ஆனாலும் கோவில்பட்டியில் சந்திக்க முடியாதபடி, தொடர்ந்து வேலை. கடைசியாக கிளம்புவதற்கு முதல்நாள் சங்கரலிங்கம் சாரை சங்கரன்கோவிலில் சந்திப்பது என்று முடிவு செய்தேன். அவரும் அங்கு வருவதாக ஒத்துக்கொண்டார்.
ஆனால், அதுவே எனக்கு ஆப்பாகும் என்று நான் நினைக்கவேயில்லை.
(தொடரும்)
ச்சே..தொடர்கதையா எழுதி, ஏதாவது (கேவலமான) சஸ்பென்ஸ் வந்தாலே கை தன்னால தொடரும் போடுது..சரி, அதை விடுங்க. என்ன ஆப்புன்னு சொல்றேன்..
தங்கமணிகிட்ட சங்கரன்கோவிலில் ஆபீசரைப் பார்க்கப் போறேன்னு சொன்னேன். அவங்க சந்தோசமா “அந்த ஜவுளிக்கடைப் பக்கத்துல என் ஃப்ரெண்ட் வீடு இருக்கு.நானும் அவளைப் பார்க்கணும். என்னை அங்கே விட்டுட்டுப் போங்க”ன்னாங்க. அந்த ஜவுளிக்கடைல தான் ரெண்டு வாரம் முன்ன இருபதாயிரம் ரூபாய்க்கு வேட்டு வச்சாங்க.அங்கிருந்த சேல்ஸ் கேர்ள்ஸ் என்னைப் பரிதாபமாப் பார்த்து “சார், உங்களுக்கு எதுவும் எடுக்கலியா? கூல் ட்ரிங்ஸ் வேணா சாப்பிடுறீங்களா?” என்று கேட்டு என்னை கேவலப்படுத்தியது ஞாபகம் வந்தது. ‘மறுபடியும் அந்தப் பக்கமா’ என்று பயந்தேன். நான் பயந்தது சரியாப் போச்சு.
சங்கரன்கோவில் போய் ஃப்ரெண்ட் வீட்ல தங்கமணியை இறக்கி விட்டப்போ “என்னாங்க...எனக்கு இன்னும் ஒரே ஒரு ட்ரெஸ் எடுக்க வேண்டியிருக்கு. நான் இவளைப் பார்த்துட்டு அங்கே இருப்பேன்..வந்திடுங்க” என்று அடுத்த அணுகுண்டைப் போட்டார். ஆபீசரால நமக்குச் செலவு தானா என்று நொந்துகொண்டேன். சரி என்று சொல்லிவிட்டு, ஆபீசரைச் சந்திக்க பஸ் ஸ்டாண்ட் விரைந்தேன்.
ஆபீசர் பஸ் ஸ்டாண்ட்டிலிருந்து ஸ்லோ மோசனில் வெளியே வந்தார். ஃபோட்டோவில் பார்த்ததை விடவும் ஹேண்ட்சமாக இருந்தார். காலேஜ் படிக்கும்போது எப்படியும் பத்துப் பதினைந்து தேற்றியிருப்பார் என்று தோன்றியது. புகைச்சலை மறைத்தபடியே “ஹலோ சார் “என்று கை கொடுத்தேன். முகமெல்லாம் மலர ”நல்லாயிருக்கீங்களா?” என்று கேட்டார்.
பிறகு அருகில் இருந்த ஹோட்டலில் போய் உட்கார்ந்தோம். காஃபி ஆர்டர் செய்துவிட்டு ரொம்ப நேரம் பதிவுலகம் பற்றியும் அதை மேலும் எப்படி முன்னேற்றுவது என்றும் விவாதித்தோம். ”20 நாளா நான் ஒன்னுமே எழுதலை “ என்றார் ஆபீசர். ”நானும் கம்மியா தான் எழுதறேன்” என்றேன். ‘இப்படியே தொடர்ந்தால், பதிவுலகம் உருப்பட்டுவிடும்” என்று முடிவு செய்தோம்.
அடுத்து காஃபி சாப்பிட்ட பில் வந்தது. காஃபி மட்டும் தான் என்பதால், நானே காசு கொடுத்து விடலாம் என்று முடிவு செய்தேன். ஆனாலும் ஆபீசர் விடவில்லை..அவரே பில் பே பண்ணினார்..என்ன இருந்தாலும் பெரிய மனுசன், பெரிய மனுசன் தான்யா!
அடுத்து ஆபீசர் செண்ட் பாட்டில் ஒன்றை எனக்குப் பரிசாக அளித்தார். எதை வைத்து என்னை நாத்தம் பிடிச்ச மனுசன்னு முடிவு செய்தார்ன்னு தெரியலை. இருந்தாலும் ஓசிக்கு வருவதை வேண்டாம்னு சொல்லக்கூடாது என்பதால், வாங்கிக் கொண்டேன்.
நேரம் ஆகிவிட்டதால் கிளம்புகிறேன் என்றார் ஆபீசர்.’ஃபேமிலியோ சென்னையில..ஆனாலும் வீட்டுக்குபோக ஏன் அவசரப்படுறார்..சம்திங் ராங்’-ன்னு தோணினாலும் அவர் மேல் உள்ள மரியாதையால் கேட்கவில்லை.
’என் ஃபேமிலி இங்கே தான் இருக்காங்க..வாங்க, பார்த்துட்டே போகலாம்’ன்னு சொல்லி அவரை அழைச்சுக்கிட்டு ஜவுளிக்கடைக்குப் போனேன் அங்கே லேடீஸ் செக்சனுக்குச் சென்றால், தங்கமணியைக் காணவில்லை. ஏற்கனவே இங்கே வந்து நொந்து நூலானவன் என்பதால், அங்கிருந்த சேல்ஸ் கேர்ள்ஸ்க்கு என்னை ஞாபகம் இருந்தது.
‘என் வீட்ல வந்தாங்களா?” என்று ஒரு பெண்ணிடம் கேட்டேன்.
அவர் ‘இல்லையே சார்..நீங்க வேணா வெயிட் பண்ணுங்க சார்..வரட்டும்’ என்றார்.
இடையில் புகுந்த இன்னொரு பெண் “ஏ, உனக்கு இவங்களைத் தெரியுமா?’ என்றார்.
“ஹே, சாரை எனக்கு நல்லாத் தெரியும்டி.” என்று அவர் பதில் சொல்லும்போது தான் ஆபீசர் இருப்பதே ஞாபகம் வந்தது. திரும்பிப் பார்த்தால் பேயறைந்தது போல் நின்றுகொண்டிருந்தார் ஆபீசர். ‘இவன் இங்க வந்தே ஒரு மாசம் தானே ஆகுது..அதுக்குள்ளயே இப்படியா..’ன்னு அவரு யோசிப்பது புரிந்தது.
“இல்லை சார்..நான் ஏற்கனவே இங்க பர்ச்சேஸ்..” என்று நான் ஆரம்பிக்கவும் ‘போதும்..மூடு’ என்பது போல் கையைக் காட்டினார். ‘ஆஹா..பதிவரைக் கூட வச்சுக்கிட்டு வேண்டாத வேலை பார்த்துட்டமே’ன்னு நினைச்சுக்கிட்டேன். அவருக்கு என்ன ஞாபகம் வந்துச்சோ ‘சரிங்க..நான் வீட்டுக்குப் போகணும்..கிளம்புறேன்’ன்னு ஆரம்பிச்சார். ‘சரிதான்..மனுசன் பேச்சுலர் லைஃபை எஞ்சாய் பண்றார் போல’ என்று நினைத்துக்கொண்டேன்.
நாங்கள் கீழே இறங்கி வரவும் என் மகனும் தங்கமணியும் வரவும் சரியாக இருந்தது. ‘சார் தான் எங்க ஆபீசர்’ என்று அறிமுகப்படுத்தி வைத்தேன். ஒரு பதிவரின் மனைவி என்பதால் என் தங்கமணிக்கு பதிவர்கள் மேல் பெரும் மரியாதை(!) உண்டு. ஆனாலும் அன்று ஆபீசருக்கு பணிவுடன் வணக்கம் வைத்தார்.
திடீரென ஆபீசர் கேமிராவை வெளியே எடுத்தார். ‘பயப்படாதீங்க..பதிவுல போட மாட்டேன்’ என்று உறுதி கொடுத்தார். ‘போட்டுட்டாலும்..ஹூம்’ என்று தங்கமணி ஒரு நக்கல் சிரிப்பு சிரித்தார். பதிவில் போடுவதற்கு ஏற்றவாறு ஸ்பெஷல் ஃபோட்டோக்களும் எடுத்துக்கொண்டோம்.
பிறகு தங்கமணியை ஜவுளிக்கடைக்குள் அனுப்பிவிட்டு, மீண்டும் பஸ் ஸ்டாண்ட் நோக்கி பேசிக்கொண்டே நடந்தோம். ’ஆக்சுவலி பதிவர்கள் அனைவரும் நல்லவர்கள் தான்..பதிவர்கள் பற்றி வரும் எந்தவொரு வதந்தியையும் நீங்க நம்பக்கூடாது’ என்று அட்வைஸ் பண்ணினார்.
பஸ் ஸ்டாண்ட்டை நெருங்கவும் ‘சரிங்க..நான் கிளம்புறேன்’ என்று அவசர அவசரமாக ’பேச்சுலர்’ ஆபீசர் விடை பெற்றார்.
அடுத்த இரண்டு மணி நேரம் கழித்து, டெபிட் கார்டை பழுக்க வைத்துவிட்டு ஜவுளிக்கடையில் இருந்து தங்கமணியுடன் வெளியில் வந்தேன்! ‘சாப்பிட்டுட்டே போகலாம்’ என்று தங்கமணி சொன்னதால், பஸ் ஸ்டாண்ட் அருகே பைக்கை நிறுத்தி விட்டு சுற்றும் முற்றும் பார்த்தேன். ஆபீசர் எங்குமே தென்படவில்லை. ‘
அப்பாடி’ என்று நிம்மதிப் பெருமூச்சுடன் கொத்துப்புரோட்டா கடைக்குள் நுழைந்தோம்.









