Sunday, January 30, 2011

The Prestige (2006) - திரை விமர்சனம்

முன் டிஸ்கி-1: இந்தப் பதிவு, என் வலையுலக குரு ஹாலிவுட் பாலாவிற்குச் சமர்ப்பணம்

முன் டிஸ்கி-2: நண்பர் ஜீ (கோச்சுக்காதீங்க ஜீ), இந்தப் படத்தைப் பார்த்து என் கருத்தைச் சொல்லச் சொன்னார்..ஆஹா..சிக்கிட்டாருய்யா ஒரு அடிமைன்னு களமிறங்கிட்டேன்! 

Are You Watching Closely?

கிரிஸ்டோபர் நோலன்.

இந்தப் பெயரைக்கேட்டதும் நம் தலைமுடிகள் அலறும். ’படம் பார்ப்பது டைம் பாஸ் மட்டுமல்ல மறக்க முடியாத அனுபவம்’ என்று பலருக்கு உணர்த்தியவர் நோலன். வழக்கமாக திரைப்படங்களில் சஸ்பென்ஸ் உருவாக்கப்பட்டு, முடிவில் உடைக்கப்படும். ஆனால் நோலனின் படங்களின் விஷேசமே பல விஷயங்கள் பார்வையாளனின் முடிவுக்கு விடப்படும். வீடு வந்து சேர்ந்தும் துரத்தும் அந்த சஸ்பென்ஸ். திரைக்கதையை மேஜிக் போல் அமைப்பதில் வல்லவரான நோலன் கையில் ஒரு மேஜிக் பற்றிய கதையே கிடைத்தால்....அதகளம் தான்.

படத்தின் கதை மேஜிக்கில் உள்ளது போல் மூன்று நிலைகளில்(Pledge, Turn, Prestige) சொல்லப்படுகிறது.

The Pledge:
மேஜிக் மேன் ஒரு பொருளைக் காட்டுவார். சில சமயங்களில் அந்தப் பொருள் உண்மையானதுதானா என பார்வையாளர்களை விட்டே சோதிக்கச் சொல்வார். ஆனால் அது உண்மையானதல்ல!

19ம் நூற்றாண்டில் நடக்கிறது கதை. ஆஞ்சியரும்(Angier) ஆஞ்சியர் மனைவியும், போர்டனும்(Bortan) ஒரே மேஜிக் மேனின் கீழ் வேலை செய்யும் இளம் மேஜிக் மேன்கள். ஒரு மேஜிக் ஷோவின் போது, போர்டன் போடும் தவறான முடிச்சால் ஆஞ்சியரின் மனைவி உயிரிழக்கிறார். போர்டன் வேண்டுமென்றே செய்ததாக நினைக்கும் ஆஞ்சியர் போர்டனைப் பழி வாங்க நினைக்கிறார். 

மேஜிக் ஷோவை வடிவமைக்கும் இஞ்சினியரான கட்டர், ஆஞ்சியரை மேஜிக்கின் மேல் கவனம் செலுத்த வைத்து, குறிப்பிடத்தக்க ஆளாக்குகிறார். போர்டன் ஒரு பெண்ணைக் காதலித்து மணந்து, ஒரு குழந்தையுடன் வாழ்கிறார். வாழ்வதற்காக பார் போன்ற இடங்களில் மேஜிக் செய்து காட்டிப் பிழைக்கிறார். ஆஞ்சியரை விடத் திற்மைசாலியான போர்டனுக்கு ஆஞ்சியர் அளவிற்கு பெரிய வாய்ப்புகள் அமைவதில்லை.

போர்டனின் மேஜிக் ஷோவில் புகுந்து, போர்டனைக் கொல்ல முயல்கிறார் ஆஞ்சியர். போர்டனும் பதிலுக்கு ஆஞ்சியர் ஷோவில் பிரச்சினை உண்டாக்கி, ஆஞ்சியரின் கரியரைக் காலி செய்கிறார். இந்த விளையாட்டு தொடர்கையில், ட்ரான்ஸ்போர்ட்டேட் மேன் எனும் புதிய ஷோவினால் பிரபலம் ஆகிறார் போர்டன். ஒரு கதவிற்குள் சென்று மறையும் போர்டன், ஒரு சில வினாடிகளில் மேடையின் மறுபுறம் அமைந்திருக்கும் கதவின் வழியாக வெளி வருவதே அந்த ஷோ. 

போர்டன் என்ன ட்ரிக்கை உபயோகிக்கிறார் எனத் தெரிந்துகொள்ள, தன் குரூப்பில் உள்ள, தன்னைக் காதலிக்கும் ஒலிவியாவை வேவு பார்க்க அனுப்புகிறார். ஒலிவியா போர்டனின் டைரியை ஆஞ்சியருக்குத் தருகிறார். அமெரிக்காவில் வாழும் விஞ்சானி டெஸ்லா தான் அந்த ஷோவின் சூத்திரதாரி என்று புரிந்துகொள்ளும் ஆஞ்சியர், அமெரிக்கா சென்று டெஸ்லாவைச் சந்திக்கிறார்.

The Turn:
மேஜிக் மேன் அந்தச் சாதாரணப் பொருளை எடுத்து, ((மறைய வைப்பது போன்ற..)அசாதாரணமான ஒன்றைச் செய்கிறார்.. இப்போது அதன் ரகசியத்தை அறிய விரும்புகிறீர்கள். ஆனால் உங்களால் அறியமுடியாது. ஏனென்றால் உண்மையில் நீங்கள் பார்ப்பதில்லை. உண்மையில் அதை அறிந்துகொள்ள நீங்கள் விரும்பவில்லை!

போர்டனைப் பற்றிய ஒரு ரகசியத்தை அறியும் அவன் மனைவி சாரா, தன்னால் இப்படி வாழ முடியாதென தற்கொலை செய்துகொள்கிறார். வேவு பார்க்க வந்து, பின்னர் போர்டனின் மேல் காதல் கொண்ட ஒலிவாவும் போர்டனைப் பிரிகிறார்.

அமெரிக்க விஞ்சானியான டெஸ்லாவிற்கும் போர்டனின் ஷோவிற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. ஆனாலும் டெஸ்லா கண்டுபிடிக்கும் புதிய மெஷினுடன் திரும்பும் ஆஞ்சியர் ‘புதிய ட்ரான்ஸ்போர்டேட் மேன்ஷொவை அதன் உதவியுடன் நடத்தி மீண்டும் புகழ்பெறுகிறார். 

இந்த ஷோவின் ரகசியத்தை அறிய விரும்பும் போர்டன், தன் ஷோவின் உதவியாளர் & இஞ்சினியரான ஃபாலனின் வார்த்தையையும் மீறி ஆஞ்சியர் ஷோவிற்குச் செல்கிறார். அங்கே நடக்கும் அசம்பாவிதத்தில் ஆஞ்சியர் உயிரிழக்கிறார்; கொலைப்பழி போர்டனின் மேல் விழுந்து, போர்டன் தூக்கிலிடப் படுகிறார்.

The Prestige:
ஒரு பொருளை மறையச் செய்வதால் நீங்கள் கை தட்டுவதில்லை. ஏனென்றால் அது ஒரு மேஜிக் ஷோவிற்குப் போதுமானதல்ல. அதைத் திரும்பக் கொண்டுவரவேண்டும். அதனால்தான் மேஜிக்கில் மூன்றாம் நிலை தேவைப்படுகிறது. மிகவும் கடினமானது அதன் பெயர் தி ப்ரெஸ்டீஜ்.

போர்டனின் ட்ரான்ஸ்போர்டேட் மேன் ஷோவின் ரகசியம் கடைசிக்காட்சியில் உடைக்கப்படுகிறது. பல சிக்கலான விஷயங்களுக்குத் தீர்வு, சிக்கலானதாகத் தான் இருக்கவேண்டும் என்று அவசியம் இல்லை. பல நேரங்களில் உண்மை நம் கண் முன்னே இருந்தாலும் நமக்கு அது தெரிவதில்லை, ஆஞ்சியருக்கு நேர்ந்ததைப் போலவே.

மூன்றாம் நிலை, கடைசி 5 நிமிடங்கள் தான். ஐந்து நிமிடங்களில் ஐந்திற்கும் மேற்பட்ட ட்விஸ்ட்டைக் கொடுக்க நோலனால்தான் முடியும். படம் முழுக்க பல க்ளூக்களை விட்டிருக்கிறார்கள். ஆனாலும் The Turn-ல் சொன்னது போல் உண்மையில் நாம் படம் பார்க்கவில்லை என்பதை க்ளைமாக்ஸில் தான் உணர்வோம். அப்புறமென்ன..வழக்கம்போல் நோலனின் படத்தை முதலிலிருந்து பார்க்கத் துவங்குவோம்.
நோலனின் விஷேசம் நான் – லினியர் திரைக்கதை மட்டுமல்ல, கடைசியில் அவர் கொடுக்கும் ட்விஸ்ட். அதைப் புரிந்து கொள்ள படத்தைப் பலமுறை நாம் பார்க்கவேண்டும்..மெமெண்டோ பட்த்தை ஏழு முறைக்கு மேல் பார்த்திருக்கிறேன். இந்தப் படம் இப்போதே இரண்டு முறை பார்த்தாகிவிட்ட்து.

இந்தப் படத்தின் திரைக்கதையை கிறிஸ்டோபர் நோலனும் அவரது சகோதரரான ஜொனாதன் நோலனும் இணைந்து எழுதியிருக்கிறார்கள். நிகழ்கால நிகழ்வாக கோர்ட் மற்றும் ஜெயில் காட்சிகள் நகர்கின்றன. ஜெயிலில் போர்டன், ஆஞ்சியரின் டைரியைப் படிக்கிறார்(1). இப்போது நிகழ்வுகள் கடந்த காலத்தில் விரிகின்றன. அதில் ஆஞ்சியரின் வாழ்வும், அவர் போர்டனின் டைரியைப் படிப்பதும் காட்டப்படுகிறது(2). டைரியில் வரும் போர்டனின் வாழ்க்கை தனியாகக் காட்டப்படுகிறது(3). இந்த மூன்றும் எவ்விதமான ஒளிப்பதிவு/கலர் டோன் வித்தியாசமும் இல்லாமல் காட்டப்படுகின்றன. இருக்கும் இடமும் உடுத்தும் உடையுமே க்ளூக்கள்..நாம் தலைமுடியைப் பிய்த்துக் கொள்ள இது போதாதா...(ஆனாலும் படத்தைப் புரிந்துகொள்ள அவை தடையாக இல்லை.)

ஆஞ்சியராக ஹக் ஜாக்மேனும் போர்டனாக க்றிஸ்டியன் பேலும் கலக்கி எடுக்கிறார்கள். சாராவாக வரும் ரிபெக்கா ஹால், தற்கொலைக்கு முந்தைய காட்சியில் நடிப்பில் பின்னிவிட்டார். ஒலிவியாவாக நடித்திருக்கும் ஸ்கார்லெட் ஜோஹன்சன் ம்ம்ம்ம்ம்!
மைக்கேல் கெயின் கட்டராக பொருத்தமான தேர்வு. நோலன் எப்போதும் குறைவான கேரக்டர்களை வைத்துக் கொள்வது வழக்கம். இதிலும் அப்படியே. முக்கிய கேரக்டர்கள் பத்தைத் தாண்டாது..

படத்தின் கதை க்றிஸ்டோபர் ப்ரீஸ்ட் என்பவர் எழுதிய நாவலாகும். அதைப் படமாக்க பலர் முன்வந்தபோதும், நோலனைத் தேடி வந்து இதைப் படமாக்குமாறு கேட்டுக்கொண்டார் ப்ரீஸ்ட்..மூளையைக் குழப்பும் கதைக்கு இவனுக தான் இதுக்குச் சரியான ஆளுகன்னு கரெக்டாக் கணிச்சிருக்கார்.

டேவிட் ஜூலானின் மெஸ்மரிக்கும் இசையும், வேலி பிஸ்டரின் ஒளிப்பதிவும், மெமெண்டோவைப் போலவே இதிலும் கலக்கல். நான் லீனியர் திரைக்கதைக்கு லீ ஸ்மித்தின் எடிடிங் பெரிய அளவில் கை கொடுக்கிறது. ஒரே இடம் தொடர்ந்து 5 நிமிடங்கள்கூட காட்டப்படுவதில்லை. மேஜிக் ஷோவின் பிண்ணனியை கெவின் கவனா ஆர்ட்டின் ஆர்ட் நமக்கும் புரியும் வண்ணம் விளக்குகிறது.

ஒரு படைப்பு, ரசிகனும் பங்கு பெறுவதற்கான வாய்ப்பைக் கொடுக்கும்போது  இலக்கியம் ஆகிறது. மோனலிசா ஓவியம், பார்க்கும் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவித அனுபவத்தைக் கொடுப்பது போல..நோலனும் பல விஷயங்களைத் தன் படங்களில் வாசகனின் அனுமானத்திற்கே விட்டுவிடுகிறார். இதிலும் போர்டன் போட்ட முடிச்சு பற்றி விவாத்தை உருவாக்கினார். என்னைப் பொறுத்தவரை அது தற்செயலாக நடந்த விபத்து மட்டுமே.

ஒரு அழகிய, புத்திசாலித்தனமான படம் பார்க்க விரும்புவோர் கண்டிப்பாகப் பார்க்கவும்.


மேலும் வாசிக்க... "The Prestige (2006) - திரை விமர்சனம்"
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

26 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.

Friday, January 28, 2011

திருவள்ளுவரும் திருந்தாத நண்பனும்

”நான் ஏன்டா படிக்கணும்?”
பத்தாண்டுகளுக்கு முன், எங்கள் கல்லூரி முன் வைத்துக் கேட்டான் பொன்ராசு. எனக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. என்னைப் போன்று பஞ்சப் பராரியல்ல அவன். திருச்சியில் பெரிய மில் அதிபரின் மகன் . மறுபடியும் கேட்டான்
“ நீயாவது படிச்சு, வேலைக்குப் போகணும்ங்கிறதுல ஒரு அர்த்தம் இருக்கு. எனக்குத் தேவை என் கல்யாணப் பத்திரிக்கையில் போட ஒரு டிகிரி..இந்த டிகிரியை முடிச்சாலும் முடிக்கலைன்னாலும் நான் போட்டுக்குவேன். அப்புறம் ஏன் நான் படிக்கணும்?”
அருகிலிருந்த ஹிசாம் சையது “ இல்லைடா மச்சி, படிச்சி இஞ்சினீயர் ஆனா கூடுதல் மரியாதை தானே” என்றான். ஹிசாமும் நல்ல வசதியான வீட்டைச் சேர்ந்தவன்தான். ஆனாலும் பொன்ராசு பிடிகொடுக்கவில்லை. “நான் இப்பவே முதலாளிடா..நான் படிச்சு இன்னொரு இடத்துக்கு வேலைக்குப் போகணும்னு எந்த அவசியமும் இல்லை”

அதன்பிறகு நானும் ஹிசாமும் படித்து முடித்து ஆளுக்கொரு வேலையில் செட்டில் ஆனோம். பொன்ராசும் மில் முதலாளியாகிப் போனான். எங்களுடன் எந்தத் தொடர்பும் இல்லை.

போன மாதம் ஹிசாமிடம் இருந்து ஃபோன் வந்தது.
”செங்கோவி, பொன்ராசைப் பார்த்தேன்டா..”
”அப்படியா..எப்படி இருக்கான்?” என்றேன்.
“ரொம்ப மோசம். 2001-ல வந்த ரிசசன்ல டெக்ஸ்டைல் துறை பயங்கர அடிவாங்குச்சே..அப்போ மில்ல ரொம்ப லாஸாம். இவங்களால அப்புறம் எழுந்திரிக்கவே முடியலையாம்..ஏகப்பட்ட கடன் ஆகி, இப்போ சொந்த வீடு நிலம் எல்லாத்தையும் வித்துட்டாங்களாம். வாடகை வீட்டுலதான் இப்போ இருக்காங்களாம். எதுக்கோ சென்னை வந்துருக்கான். எப்படியோ என் ஆஃபீஸ்க்கு வந்துட்டான். பார்க்கவே கஷ்டமாப் போச்சு”

ஏறக்குறைய ஹிசாம் கதையும் அதுதான். பாகப்பிரிவினைத் தகராறில் அவர்களது தொழில் இரண்டாய்ப் பிரிக்கப் பட்டபின் வாப்பாவின் தொழிலில் பெரிதாய் லாபமேதும் இல்லை. நல்லவேளையாய் டிகிரி முடித்திருந்ததால், ஹிசாம் அதே வாழ்க்கைத் தரத்தை   தொடர முடிந்தது.

எனக்கு சட்டென்று வள்ளுவர் நினைவுக்கு வந்தார்.

கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவற்கு
மாடல்ல மற்றை யவை. 

கஷ்டகாலம் வந்துவிட்டதென்றால் வீடு, வாசல், சொத்து, சொந்த பந்தம் எல்லாம் பறந்துவிடுகிறது. ஆனால் எவ்வளவு கெட்ட காலத்திலும் நம்மைவிட்டு நீங்காத செல்வமாய் உடன் வருவது, நாம் கற்ற கல்வி மட்டுமே. ஆகவே கல்வியைத் தவிர மற்ற எதுவும் உண்மையான செல்வம்(மாடு) அல்ல!

மேலும் வாசிக்க... "திருவள்ளுவரும் திருந்தாத நண்பனும்"
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

43 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.

Wednesday, January 26, 2011

தாய் மண்ணே வணக்கம்

என்னைப் பொறுத்தவரை சுதந்திர தினத்தை விடவும் முக்கியமானது குடியரசு தினம். பல்லாயிரக்கணக்கான வருடங்களாக முடியாட்சியின் கீழ் வாழ்ந்துவந்த நாம், இப்போது வெற்றிகரமாக அறுபத்தியிரண்டாம் குடியரசு தினத்தில் அடியெடுத்து வைக்கின்றோம்.

பொருளாதார ரீதியாக நாம் முன்னேறிக் கொண்டிருந்தாலும், காந்தி தேசம் காந்திய வழிகளில் இருந்து விலகிச் செல்வது நமக்குப் பெரும் வருத்தத்தையே தருகிறது. 

’நம் தாய்நாடு இந்தியா’ என்று நாம் பெருமிதம் கொள்ள இப்போதும் எஞ்சியிருப்பது நமது ஜனநாயகம் தான். அரசியல்வாதிகள் எவ்வளவுதான் கொள்ளை அடித்தாலும் பல அக்கிரமங்களைச் செய்தாலும் அதற்கான எதிர்ப்பை வெளிக்காட்டும் உரிமையையாவது இன்னும் விட்டு வைத்திருக்கிறார்களே என்று சந்தோஷப்படவேண்டிய நிலையில்தான் நாம் இருக்கிறோம்.

ஜனநாயகம் என்பது எண்ணிக்கை சார்ந்தது. எவ்வளவு தூரம் நாம் பொதுப்பிரச்சினைகளில் ஒன்றுபடுகிறோமோ அவ்வளவுக்கு ஜனநாயகம் நமக்குப் பயப்படும்.

பல வேதனையான நிகழ்வுகளைத் தடுப்பதற்குக்கூட ஒன்றுபட்டு போராட முடியாதவர்களாக நாம் இருக்கின்றோம். நமது எதிர்ப்பைப் பதிவதற்கான எல்ல வாய்ப்புகளை நம் நாடு கொடுத்தும் ஒற்றுமையின்மையால் எல்லவற்றையும் இழந்துகொண்டுள்ளோம். 

மத்திய அரசில் அதிக மந்திரிகளைப் பெற்றுள்ள மாநிலங்கள் மகாராஷ்ட்டிராவும் தமிழ்நாடும் தான். அதில் காட்டும் அக்கறையை மக்கள் மீதும் காட்டும் தலைவர்களை நாம் எப்போது பெறப்போகிறோம் எனத் தெரியவில்லை. அதுவரை தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் குடியரசு தினச் சிறப்பு நிகழ்ச்சிகளில் மூழ்கியிருப்போம்.

அனைவருக்கும் குடியரசு தின நல்வாழ்த்துகள்.

ஜெய் ஹிந்த்.


மேலும் வாசிக்க... "தாய் மண்ணே வணக்கம்"
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

7 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.

Monday, January 24, 2011

அடுத்த சூப்பர் ஸ்டார் யார்?

விஜய், அஜித், சிம்பு என பலரும் கண் வைத்திருக்கும் விஷயம் ’சூப்பர் ஸ்டார்’ நாற்காலி. ரஜினிகாந்த் 60 வயதை தாண்டுவதால், அடுத்த சூப்பர் ஸ்டார் யார் என்ற கேள்வி சில வருடங்களாக பத்திரிக்கைகளாலும் சினிமா ரசிகர்களாலும் எழுப்பப்படுகிறது. எனவே நாமும் அதைப் பற்றி கொஞ்சம் யோசிப்போம்.

ரஜினிகாந்த் சினிமாவுக்கு வந்தபோது இங்கு ராஜாவாக கோலோச்சிக் கொண்டிருந்தவர் மக்கள் திலகம் என்றும் புரட்சித்தலைவர் என்றும் அழைக்கப்பட்ட எம்.ஜி.ஆர் அவர்கள். எம்.ஜி.ஆரின் விஷேசத்தன்மை அவரது படங்களின் மூலம் அவரைப் பற்றி உருவாக்கப்பட்டிருந்த இமேஜ். குடிக்க மாட்டார். புகைக்க மாட்டார். பொய் சொல்ல மாட்டார். யாராவது வயதான தாத்தா/பாட்டி தள்ளாடி வந்தால், தலைவர் ஓடிவந்து கை கொடுப்பார். கதாநாயகியை / தங்கச்சியை யாராவது கோட்-சூட் போட்ட ஆசாமி கற்பழிக்க முயற்சித்தால், நாம் டென்சனே ஆகவேண்டியதில்லை. எப்படியும் தலைவர் பாய்ந்து வந்து காப்பாற்றி விடுவார். ’மிஸ்டர்.பெர்ஃபெக்ட்’ என்பதே எப்போதும் அவரது கேரக்டர்.

ஆனால் அவரது இடத்தைப் பிடித்த ரஜினி, படங்களில் என்ன செய்தார்? குடித்தார். புகைத்தார். அவரே கற்பழித்தார்.எம்.ஜி.ஆரின் கேரக்டருக்கு நேரெதிரான கேரக்டர்களையே செய்தார். ஆனாலும் மக்கள் அவரையே எம்.ஜி.ஆரின் இடத்தில் வைத்தார். எந்தவொரு இடத்திலும்/படத்திலும் ரஜினி எம்.ஜி.ஆரின் ஸ்டைலையோ புகைப்படத்தையோ காட்டி வளரவேயில்லை. (எம்.ஜி.ஆர் வேறொரு நடிகருக்கே தன் முழுஆதரவைத் தந்தார்.ஆனாலும்...)சினிமாவுல அதிசயங்களில் இதுவும் ஒன்று.

ஆனால் இன்று ரஜினியின் இடத்தைப் பிடிக்க நினைக்கும் ஹீரோக்கள் அப்பட்டமாக ரஜினியைக் காப்பி அடிக்கின்றனர். எம்.ஜி.ஆரைக் காப்பி அடித்த ராமராஜன், சத்தியராஜ் போன்றோரை ஏன் மக்கள் ஒதுக்கினர்? ஒரிஜினல் எம்.ஜி.ஆர் படங்களே இருக்கும்போது டூப்ளிகேட் எம்.ஜி.ஆர் படங்கள் தேவையில்லை என்பதாலேயே. அப்படி இருக்கும்போது இந்த டூப்ளிகேட் ரஜினிகளை ஒரிஜினலின் இடத்தில் மக்கள் வைப்பார்களா என்பதே சந்தேகம்தான். எம்.ஜி.ஆரின் காலத்திற்கும் ரஜினியின் காலத்திற்கும் இடையில் ஜெய்கணேஷ், சிவகுமார், விஜயகுமார் என ‘சில்லுண்டி’ நடிகர்களின் காலமும் இருந்த்து. இன்றைய விஜய், அஜித் போன்றோரும் அந்த வரிசையிலோ அல்லது டூப்ளிகேட் எம்.ஜி.ஆர்கள் வரிசையிலோ  வைக்கப்படுவார்களா என்பது அவர்கள் எவ்வளவு நாள் சினிமாவில் நீடித்து வெற்றிகரமான ஹீரோவாக இருக்கப் போகிறார்கள் என்பதைப் பொறுத்தது.

இப்போது அடிப்படை விஷயமான சூப்பர் ஸ்டார் என்ற வார்த்தைக்கு வருவோம். சூப்பர் ஸ்டார் என்பதை சினிமாவின் நம்பர்-1 ஸ்டார் என்றே அர்த்தப்படுத்திக் கொள்கிறோம். உண்மையில் அது அப்படித்தானா?

எம்.ஜி.ஆரின் காலத்தில் சூப்பர் ஸ்டார் என்ற வார்த்தை பரவலாக பயன்படுத்தப்பட்டதா? அந்த வார்த்தைக்கு இன்று உள்ள மரியாதை அன்று இருந்ததா? இல்லை என்பதே பதில். சூப்பர் ஸ்டார் என்ற பட்டம் கலைப்புலி தாணுவால் ரஜினிக்கு கொடுக்கப்பட்டபோதுகூட அதுவொரு புகழ்ச்சி வார்த்தை மட்டும்தான். இன்று இருக்கும் அர்த்தம் அன்று அதற்கு இல்லை. பின் எப்படி இன்று கவர்ச்சிகரமான வார்த்தையாக அது மாறியது?

அது ரஜினிகாந்த் என்ற தனி மனிதனின் கடும் உழைப்பாலேயே நிகழ்ந்தது. தன் உடல்நலத்தை முழுதாகக் கெடுத்துக்கொண்டு இரவும் பகலும் அயராது வெறித்தனத்துடன் நடித்தார் ரஜினி. தொடர்ந்து தயாரிப்பாளர்களுக்கு லாபத்தைக் கொடுத்து அவர்களின் செல்லப்பிள்ளையாக மாறினார். எப்போதும் படிக்காதவனாக, சாமானிய மனிதனாக படங்களில் தன் கேரக்டரை வடிவமைத்துக் கொண்டார். எந்தவொரு சூழ்நிலையிலும் எம்.ஜி.ஆர் எனும் பிரமாண்டத்தின் நிழலில் ஒதுங்காமல் தனக்கான சாம்ராஜ்ஜியத்தைக் கட்டி எழுப்பினார்.

இவ்வளவும் செய்து, எம்.ஜி.ஆரின் இடத்தில் அமர்ந்தபொழுது எம்.ஜி.ஆரின் பட்டங்களான ‘மக்கள் திலகம்’ மற்றும் ‘புரட்சித் தலைவர்’ போன்ற பட்டங்களை தனக்கு சூடிக்கொள்ளாமல் தாணு கொடுத்த சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தையே வைத்துக்கொண்டார்.

ரஜினி ஏன் எம்.ஜி.ஆரின் பட்டத்திற்கு ஆசைப்படவில்லை? ஏனென்றால் தன்னைப் போன்றே பல வருடங்களாகத் தன் சொந்த உழைப்பின் மூலம்தான் எம்.ஜி.ஆர் அந்தப் பட்டங்களை அடைந்தார் என ரஜினிக்குத் தெரியும். ஒரு உழைப்பாளி மற்றொரு உழைப்பாளிக்குத் தந்த மரியாதை அது.
The making of Endhiran
அது ஏன் இன்றைய நடிகர்களுக்குப் புரிவதில்லை? இவர்களும் தனக்கென உள்ள பட்டங்களுக்கான மரியாதையை தன் சொந்த உழைப்பால் ஏன் உண்டாக்கக் கூடாது? 60 வயதைக் கடந்தும் இன்னும் தனக்கான மரியாதையைத் தக்க வைத்திருக்கும் ரஜினிகாந்த் என்ற பெரியவருக்கு இன்றைய இளைய தலைமுறை நடிகர்கள் தருகின்ற மரியாதை சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தை அவரிடமே விட்டு விடுவதுதான்.

எனவே அடுத்த சூப்பர் ஸ்டார் யார் என்ற கேள்விக்கு அன்றும் இன்றும் என்றும் ரஜினிகாந்த் என்பதே சரியான பதிலாக இருக்கும்.
மேலும் வாசிக்க... "அடுத்த சூப்பர் ஸ்டார் யார்?"
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

51 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.

Sunday, January 16, 2011

முந்து (கண்டிப்பாக புத்திசாலிகளுக்கு மட்டும்)

இந்த முறை போட்டி கடுமைதான். 

மூச்சு வாங்கியதால் நீச்சலின் வேகத்தைக் குறைத்தேன். சுற்றிலும் பார்த்தேன். 

இன்னும் சிலர் தான் எனக்கு முன் இருந்தனர். எப்படியும் இந்த முறை ஜெயித்துவிடவேண்டும். இல்லையென்றால், நினைக்கவே கஷ்டமாக இருந்தது. பல கொடுமையான நினைவுகள் ஞாபகத்திற்கு வந்தன.

‘டேய் நாயே, ஓரமாகப் போக முடியாதா” என்றொரு குரல் கேட்டது. பக்கத்தில் திரும்பிப் பார்த்தேன். ஒரு பெண் நீந்திக்கொண்டிருந்தாள்.

“என்னை ஏற்கனவே தெரியுமா உனக்கு?” என்றேன்.

இல்லையெனத் தலையசைத்தவாறே “ ஏன் கேட்கிறே?” என்றாள்.

“நீ பேசியவிதம் என் அம்மாவை ஞாபகப்படுத்தியது. அதனால்தான்” என்றேன்.

“கண்டார ஓளி..உன்னைக் கொல்லாம விடமாட்டேன்” எனக் கூறியபடியே என் அம்மாவின் வாயில் மிதித்தேன். உதடு கிழிந்து ரத்தம் கொட்டியது.

“அய்யய்யோ..கொல்றானே” என்று அலறினாள் அம்மா. வழக்கம்போல் பக்கத்துவீட்டு மாமா ஓடி வந்தார்.

“விடுப்பா..குடிச்சாலே உனக்கு புத்தி கெட்டுப் போகுது..எந்திரிம்மா. நீயும் கொஞ்சம் வாயைக் குறைக்கணும் தாயி” என இருபக்கமும் சமாதானப் படுத்துவதில் இறங்கினார். 

இது வழக்கமான நிகழ்வு என்பதால் வேறு யாரும் கண்டுகொள்ளவில்லை.

“அப்புறம்?” என நீந்தியவாறே கேட்டாள் அவள். “கொஞ்ச நாளில் அம்மாவை விட்டுவிட்டு, வேறு ஊருக்குப் போய்விட்டேன்”

“அப்படியென்றால், இப்போது நீ உன் அம்மாவை நல்லபடியாக்க் காப்பாற்றவேண்டும்” என்றாள்.

“அப்படி ஒரு எண்ணமே இல்லை” என்றேன்.

“அப்படிச் சொல்லாதே. நீ ஏன் இந்தப் போட்டியில் இறங்கினாய். இது உனக்குச் சரியான இடமல்ல. இதில் நீ ஜெயித்தால் உடனே தாயில்லாப் பிள்ளை ஆவாய். தெரியாதா?” என்றாள்.

“தெரியும்..செத்து ஒழியட்டும். நிம்மதி.. பெண்கள் இல்லாத வாழ்க்கையை நோக்கியே என் பயணம் போகிறது. பெண்கள் இருந்த இடங்களில் மட்டுமே நான் தவறு செய்திருக்கிறேன். பெண்களிடம் எப்போதும் நான் கருணையுடன் நடந்துகொண்டதில்லை, இப்போதும்” என்று சொல்லியவாறே அவளின் இடுப்பில் எட்டி உதைத்தேன்.

‘வீல்’ என அலறியபடியே மூழ்கினாள்.

இந்தப் பெண்களால் எத்தனை தவறுகள்..அதனால் எவ்வளவு வலி..தூங்க  விடாமல் துரத்தும் நினைவுகள்..அப்பப்பா..நகக் கணுவில் குத்தியிருக்கும் மரத் துணுக்கு போல பழைய நினைவுகள் என்னைச் சித்திரவதை செய்துகொண்டிருக்கின்றன, அதை மறப்பதற்கே இந்தப் போட்டியில் குதித்தேன்.

எல்லையை நெருங்கிக்கொண்டிருப்பதை உணர்ந்தேன். திரும்பிப்பார்த்தேன். வெகுதொலைவில்தான் சிலர் களைப்புடன் வந்துகொண்டிருந்தனர். 

முன்னால் பார்த்தேன். ஒரே ஒரு ஆள். அவன் இடுப்பையும் ஒடித்தால், வெற்றிதான். சர சர வென அந்த ஆளை நெருங்கினேன். அருகில் போனதும் அது ஒரு பெண் எனப் புரிந்தது. கோபத்துடன் நெருங்கினேன்.

எல்லைக்கோட்டின் மிக அருகில் இருந்தோம். அவள் என்னைத் திரும்பிப் பார்த்தாள். பார்த்தவுடன் இருவரும் ஒருசேர அதிர்ந்தோம்.

“கலைக்கிறதுன்னா சீக்கிரம் சொல்லுங்க..ஏற்கனவே ரெண்டு மாசம் முடியப்போகுது” டாக்டர் அக்கறையுடனும் கடுப்புடனும் சொன்னார்.

“யோசிச்சுச் சொல்றோம்” என்று சொல்லிவிட்டு அவளுடன் வெளியே வந்தேன்.

“இதுல யோசிக்க என்ன இருக்கு..எதுக்குக் கலைக்கணும்.நாம எங்காவது ஓடிப்போயிடலாம். என் வீட்டில் ஏற்கனவே ஒத்துக்க மாட்டாங்க. இப்போ கர்ப்பம்னு வேற சொன்னா..அவ்வளவு தான்.” என்றாள்.

ஒன்றும் சொல்லாமல் யோசித்தவாறே நின்றிருந்தேன்.

“இன்னைக்கு நைட் கொஞ்சம் துணிமணியோட வர்றேன். எங்காவது போய்ப் பிழைச்சுக்கலாம்” என்றாள்.

“சரி, ஆனால் நைட் வேண்டாம். நளைக்குக் காலையில் வெறும் கையோட வா. அப்போதான் உன் வீட்டில் யாருக்கும் சந்தேகம் வராது. பஸ் ஸ்டாண்டில் இருக்கிற லாலாக் கடை முன்னாடி காலையில் 9 மணிக்கு வந்து நில். நாம் மெட்ராஸ் போயிடலாம்” என்றேன்.

அவளுக்கு முகமெல்லாம் சிரிப்பு பொங்கியது. சந்தோசத்துடன் கிளம்பினாள். 

‘இனியும் இங்கு இருந்தால் சரிப்படாது’ என்பதால் அன்று இரவே நான் மட்டும் ஊரைக் காலி செய்துவிட்டுக் கிளம்பினேன்.

அதன்பின் இப்போதுதான் அவளைப் பார்க்கிறேன். ’இவள் எப்படி இங்கே? அதன்பின் என்ன நடந்தது, அந்தக் குழந்தை என்ன ஆனது? என நான் யோசிக்கும்போதே அவள் திடீரென பின்னோக்கி நீந்த ஆரம்பித்தாள்.

”நில்” எனக் கத்தினேன்.

என்னைப் பார்க்கக்கூட அவள் தயாராக இல்லை. நான் நீந்துவதை நிறுத்தினேன். ஆனாலும் நீரோட்டம் என்னை எல்லைக் கோட்டில் கொண்டு சேர்த்தது.

நான் திரும்பி அவளிடம் போக வேண்டுமென விரும்பினேன். 

ஆனால் வந்த வேகத்தில் அண்ட அணுவின் மீது மோதினேன். 

அது என்னைச் சூழ்ந்துகொண்டு என் பழைய நினைவுகளை அழிக்க ஆரம்பித்தது. “வேண்டாம்...வேண்டாம்...என் குழந்தை..என் குழந்தை.”என நான் கதறக் கதற என்னைச் சித்திரவதை செய்த நினைவுகள் அனைத்தும் அழிக்கப்பட்டன.

கருப்பையில் பேரமைதி சூழ்ந்தது. விந்துவாக இருந்த நான் கரு ஆனேன்..

மேலும் வாசிக்க... "முந்து (கண்டிப்பாக புத்திசாலிகளுக்கு மட்டும்)"
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

22 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.

Friday, January 14, 2011

ஆடுகளம் - விமர்சனம்

பொல்லாதவன் என்ற ‘டைரக்டர் மூவி’யைக் கொடுத்த வெற்றிமாறன்-தனுஷ் கூட்டணியின் அடுத்த படைப்பு என்பதாலும் தனுஷின் சமீபத்திய படங்கள் சரியாகப் போகாததாலும், சன் பிக்சர்ஸ் படம் என்பதாலும் ஓரளவு நல்ல எதிர்பார்ப்பு ஏற்படுத்தியிருந்த படம்.

தமிழ்சினிமாவுக்கு புதிய ‘ஆடுகளமான’ சேவல் சண்டையை மையமாகக் கொண்டு எடுக்கப் பட்டுள்ள படம். பேட்டைக்காரன் (ஈழக்கவிஞர் வ.ஐ.ச.ஜெயபாலன்?) என்ற பெரியவரின் குரூப்பிடம் தொடர்ந்து தோற்றுக்கொண்டு வருகிறது ரத்தினம் குரூப். ரத்தினத்தின் அப்பா சேவல் சண்டையில் பெரிய ஆளாய் இருந்தவர். மேலும் ரத்தினம் ஒரு போலீஸ் இன்ஸ்பெக்டர். தனுஷ் பேட்டைக்காரன் குரூப்பில் உள்ள விசுவாசமான சிஷ்யன். குரு பேட்டைக்காரனிடம் கற்றுக்கொண்டதை வைத்து,ஒரு சேவலைத் தனியாக வளர்த்து வருகிறார். ஆனாலும் பேட்டைக்காரன் அது பந்தயத்தில் ஜெயிக்காது என்று கணிக்கிறார். ரத்தினத்திற்கும் பேட்டைக்காரனுக்கும் நடக்கும் ஃபைனல் சேவல் சண்டையில் தனுஷ் குருவை மீறி தன் சேவலைக் களமிறக்கி ரத்தினத்தை தோற்கடிக்கிறார். அதனால் குரு அடையும் மனமாற்றமும், செய்யும் செயல்களும் தனுஷின் வாழ்வைப் புரட்டிப்போடுகின்றன. அதை அறியாமல் தொடர்ந்து விசுவாசமாக இருக்கும் தனுசும், அவரது குருவும் என்ன ஆகிறார்கள் என்பதே படம். இதுவொரு உண்மைக்கதை என்பது கூடுதல் தகவல்.

பிட்ச்சை ரெடி பண்ணுவதிலேயே முதல் பாதி போய்விடுகிறது. ஆனாலும் இடைவேளைக்கு முந்திய அரைமணி நேரத்தில் ஆரம்பிக்கும் விறுவிறுப்பு, இறுதி வரை தொடர்கிறது.

தனுஷ் மதுரைக்காரராகவே வாழ்ந்திருக்கிறார். பொல்லாதவன் போலவே, பஞ்ச் டயலாக் பேசாமல் டைரக்டர் சொல்படி கேட்டு நடித்திருக்கிறார்.  நாயகி டாப்ஸி அழகான பொம்மை போல் இருக்கிறார். வருங்காலத்தில் நடிக்கலாம். ஆங்கிலோ-இந்தியப் பெண்ணாகப் பொருந்திப்போகிறார்.

பேட்டைக்காரனாக நடித்திருக்கும் ஜெயபாலனை படத்தின் தூண் எனலாம். அடர்ந்த தாடி மீசைக்குள்ளும் உணர்ச்சிகளை அனயாசமாகக் காட்டுகிறார். கிஷோர், தனுஷின் தாயாக வருபவர், நண்பர் என எல்லோரும் கேரக்டரை உணர்ந்து நடித்திருக்கிறார்கள். 

ஜி.வி.பிரகாஷின் இசையில் ‘யாத்தே’ பாடல் கலக்கல். தனுஷ் ஆடும் ஆட்டத்திற்கு தியேட்டரும் சேர்ந்து ஆடுகிறது. மற்ற பாடல்கள் கேட்கக் கேட்கப் பிடிக்கலாம். வேல் ராஜின் ஒளிப்பதிவு வித்தியாசமான ஏறக்குறைய பிளாக்&ஒயிட் டோனைப் பல காட்சிகளில் பயன்படுத்தி உள்ளார். நன்றாக உள்ளது. சேவல் சண்டைக் காட்சிகள் கிராஃபிக்ஸ் என்று கூறினாலும், பார்க்க அப்படித் தெரியவில்லை.

முதல் பாதியில் பேஸ்மெண்டைப் பலமாகப் போடுவதாக நினைத்து கொஞ்சம் இழுப்பது, புதுக்கோட்டையைப் போல் படத்தை ட்ரை ஆக்குகிறது. வித்தியாசமான கதைகளத்தைத் தேர்ந்தெடுத்து, ஒரு நல்ல கதையையும் கொடுத்த மொத்த டீமையும் பாராட்டலாம்.மற்றபடி, படம் கமர்சியலாக வெற்றியடைவது சன் டி.வி.யின் கையில் உள்ளது.
மேலும் வாசிக்க... "ஆடுகளம் - விமர்சனம்"
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

30 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.

Wednesday, January 12, 2011

பாஸ்போர்ட் சேவைகள் - ஒரு விளக்கம்

சக பதிவர் செல்வனூரான் பாஸ்போர்ட் - போலீஸ் வெரிஃபிகேசன் பற்றி தன் வலைப்பதிவில் புலம்பியிருந்தார். அதற்கு புரிந்தும் புரியாமலும் நான் அறிவுரை சொல்லியிருந்தேன். அடுத்தவங்களுக்கு அட்வைஸ் பண்றதுன்னா நமக்கு அல்வா சாப்பிடற மாதிரி ஆச்சே..

போனமாதம் நானும் போலீஸ் க்ளியரன்ஸ் சர்டிஃபிகேட்(PCC) விண்ணப்பிக்க வேண்டி வந்தது. மதுரை பாஸ்போர்ட் அலுவலகம் போய் விண்ணப்பித்தேன். என்னுடன் விண்ணப்பித்த பலருக்கும் அன்று மாலையே PCC கொடுத்துவிட்டார்கள். எனக்கு போலீஸ் ஸ்டேசன் போய் சரிபார்த்த பின்பே தர முடியும் என்று கூறி பாஸ்போர்ட்டையும் வாங்கி வைத்துக்கொண்டார்கள். நண்பர்களிடம் விசாரித்ததில் ‘எப்படியும் 3 வாரம் ஆகும்’ என்று சொன்னார்கள். நானும் மன்மதன் அம்பு பார்த்து விமர்சனம் எழுதி சமூக சேவை செய்வதில் மூழ்கிவிட்டேன்.

திடீரென மூன்றாவது நாளே PCC பாஸ்போர்ட்டுடன் வீட்டிற்கு வந்துவிட்டது. எனக்கோ ஆச்சரியம். ’வழக்கமாக போலீஸ்க்கு மாமூல் கொடுத்தபின்பே வேலை நடக்கும். இப்போது நம்மிடம் கேட்காமலே PCC அனுப்பிவிட்டார்களே, இந்தியா ஒளிர்கிறதே’ எனச் சந்தோசம் தாங்கவில்லை. வந்த PCC ஐ அலுவலகத்தில் சமர்பித்துவிட்டு, தொடர்ந்து பதிவுலக சேவையில் மூழ்கினேன்.

நேற்று போலீஸ் ஸ்டேசனிலிருந்து அழைப்பு வந்தது. போய்ப் பார்த்தால் PCC விண்ணப்பித்த படிவத்துடன் எழுத்தர் அமர்ந்திருந்தார். ரேசன் கார்டையும் வாங்கி சரிபார்த்துவிட்டு உரிமையோடு ‘சார், ஒரு 300 ரூபாய் கொடுங்க’ எனக் கேட்டார். எனக்கோ கோபம் பொங்கியது. ஆனாலும் ’இது பதிவுலகம் அல்ல, நிஜவுலகம்..ஆப்பு அடித்துவிடுவார்கள்’ என என் அதிரடிக்கார மச்சான் எச்சரித்ததால், பணத்தைக் கொடுத்துவிட்டு வீடு வந்து சேர்ந்தேன்.

முன்பெல்லாம் PCC விண்ணப்பித்தால், எல்லா விசாரணையும் முடிந்து போலீஸ் ஸ்டேசனிலிருந்து பாஸ்போர்ட் ஆஃபீஸுக்கு PCC போகும். பிறகு அவர்கள் நமக்கு அனுப்புவார்கள். ஆனால் இப்போது பாஸ்போர்ட் ஆஃபீஸில் இருக்கும் டேட்டா பேஸின் அடிப்படையில் PCC கொடுத்துவிட்டு, பிறகு போலீஸ் விசாரணைக்கு அனுப்புகிறார்கள்.

இதை நமக்குச் சொன்னாலாவது பரவாயில்லை..நான் ஒருவேளை PCC வந்த அடுத்தநாளே கிளம்பியிருந்தால், போலீஸ் விசாரித்துவிட்டு ‘நான் இந்த முகவரியில் இல்லை’ என ரிப்போர்ட் அனுப்பியிருப்பார்கள். மற்றொரு முக்கிய விஷயம், இப்போது போலீஸ் ஸ்டேசன் லெட்ஜரில் நம் புகைப்படத்தை ஒட்டி, ஒரு கையெழுத்தும் வாங்கி வைக்கும்படி போலீஸார் அறிவுறுத்தப் பட்டிருக்கிறார்கள். எனவே மாமூலே கொடுத்தாலும் போலீஸால் ஒரு அளவுக்கு மேல் நமக்கு உதவ முடியாது. யாராவது உங்களுக்குப் பதிலாக ஃபோர்ஜரி கையெழுத்து போட்டால் மட்டுமே முடியும்.   அதற்கு போலீஸ் துணிந்து ஒத்துக்கொள்ள வேண்டும்.(அதற்கு கூடக் கொஞ்சம் செலவாகும்,)

எனவே போலீஸ் விசாரணை முடிக்காமலே, PCC வந்தால் எதற்கும் ஒரு நடை போலீஸ் ஸ்டேசன் போய் சொல்லிவிட்டு வந்துவிடுங்கள். பதிவர் செல்வனூரான் இப்பொது என்ன செய்திருக்கிறார் எனத் தெரியவில்லை..சீக்கிரம் அடுத்த பதிவில் சொல்வார் என நம்புகிறேன்.

மதுரை பாஸ்போர்ட் அலுவலத்தின் உள்ளே அமர்ந்திருக்கும் முன்னாள் ராணுவ வீரர்களிடம் படிவத்தை வாங்கி நிரப்பினீர்கள் என்றால், உங்களை அலைக்கழிக்கும் வாய்ப்புக் குறைவு. வெளியே நிரப்பிப் போனால், எதோவொரு காரணம் சொல்லித் திருப்பி அனுப்பப்படுவீர்கள்.உள்ளே பணமும் குறைவாகத்தான் வாங்குகிறார்கள்.

இதையெல்லாம் மனதில் வைத்து, சீக்கிரம் பாஸ்போர்ட் வாங்கி, இந்தியாவை விட்டு வெளியேறி, தாய்நாட்டைச் சுத்தமாக வைத்திருக்க உதவுங்கள். நன்றி,


மேலும் வாசிக்க... "பாஸ்போர்ட் சேவைகள் - ஒரு விளக்கம்"
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

32 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.

Friday, January 7, 2011

மன்மதன் அம்பு – தோல்வி ஏன்?

டிஸ்கி:மன்மதன் அம்பு தோல்விப்படம் அல்ல, வெற்றிதான் என அடம்பிடிக்கும் அப்பாவிகள் இந்தப் பதிவைத் தவிர்க்கவும்.
தமிழ் சினிமாவில் இரண்டாவது இடத்தில் இருக்கும் ஒரு நடிகரின் படத்திற்கு இவ்வளவு மோசமாக மார்க்கெட்டிங் செய்த்து ஏன் என எனக்குப் புரியவேயில்லை. கமலின் தசாவதாரத்திற்கும் ரஜினியின் எந்திரனுக்கும் செய்த விளம்பரங்களை ஒப்பிடும்போது, மன்மதன் அம்புக்கு செய்யப்பட்ட விளம்பரம் தூசு எனலாம். கடைசி நேரத்தில் உதயநிதி படத்தை ஜெமினி சர்க்யூட்டிற்கு விற்றதாக வந்த தகவல் வேறு எதிர்ப்பார்ப்பை டேமேஜ் பண்ணியது. ஆர்யா படத்திற்கு உருவாகும் எதிர்பார்ப்புகூட மன்மதன் அம்புக்கு இல்லை என்பதே உண்மை. கமல் ரசிகர்களுக்கு மட்டுமே தெரிந்த ரகசியமாக இருந்தது இப்படம் ரிலீஸ் ஆகும் விபரம்.

கமல் ரசிகர்களுக்கு (மட்டும்) வயதாகிவிட்டதா? அல்லது தற்போது இருக்கும் இளைஞர்களை கமல் கவரவில்லையா என்று தியேட்டரில் அமர்ந்து யோசித்துக்கொண்டிருந்தேன். ஒரு குடும்ப நிகழ்வுக்காக படம் வெளியான வாரம் ராஜபாளையத்தில் இருந்தேன். நான் சென்னைபோல் 11.30தான் காலைக் காட்சி என நினைத்து ரிலாக்ஸாக்க் கிளம்பிக்கொண்டிருந்தேன். திடீரென நண்பர் ஒருவர் அங்கு காலை 10.30 மணிக்கே முதல் ஷோ எனச் சொன்னார். பிறகு அடித்துப் பிடித்து ஓடினேன். டிக்கெட் கிடைக்குமா, கிடைத்தாலும் உட்கார சீட் கிடைக்குமா என பதைபதைத்துப் போனால், தியேட்டரில் மொத்தம் 18 பேர்தான். (உட்கார்ந்து எண்ணினேன்; பதிவர்னா சும்மாவா!). படம் போட்டபின் மேலும் 10 பேர் வந்து சேர்ந்தனர். ரசிகர்கள் இப்படத்தைக் கைவிட்டதாகவே எனக்குத் தோன்றியது. (மன்மதன் அம்பு –விமர்சனம் எழுதியபோது இதை வேண்டுமென்றே குறிப்பிடவில்லை!)

மேலும், தற்பொழுது விஜய் படம்கூட 2 /3 தியேட்டர்களில் ரிலீஸ் செய்யப்படுகிறது. ஆனால் கமல் படம் ரிலீஸ் ஆனது ஒரு தியேட்டரில் தான். அதற்கே ஆளில்லை என்பது உண்மையில் வருத்தமான விஷயம்தான். ரஜினி, கமலுக்கு அடுத்து நல்ல ஓப்பெனிங் உள்ள நடிகர் என விஜய்யைச் சொல்வார்கள். (டாக்டருடன் என்னதான் நமக்கு வாய்க்கால் தகராறு இருந்தாலும் உண்மையைச் சொல்லணும்ல). ஆனால் இப்போது கமல் தானாகவே இந்த ஆட்டத்திலிருந்து விலகுகிறாரா எனத் தோன்றுகிறது.


பொதுவாக கமல் பேசுவது மட்டும்தான் புரியாது. இதில் இன்னும் ஒரு ஸ்டெப் முன்னேறி பெரும்பாலான காட்சிகளில் என்ன பேசுகிறார்கள் என்றே புரியவில்லை. லைவ்-சவுண்ட் ரெகார்டிங் அவசியம்தானா என சினிமாக்காரர்கள் கண்டிப்பாக யோசிக்கவேண்டும். மேலும் ஆங்கிலம், மலையாளம், தெலுகு என எல்லாவித பாஷைகளும் வந்து விழுந்து, பாமர மக்களை படத்தில் ஒன்ற விடாமல் செய்தது. ஓவர் அறிவுஜீவித்தனம் நம் மக்களுக்கு ஆவதில்லை.

எளிய சினிமா ரசிகர்களுக்குத் தேவை கொஞ்சம் விறுவிறுப்பான திரைக்கதையும் சரிவிகிதத்தில் கலக்கப்பட்ட மசாலா ஐட்டங்களும் தான். தொடர்ந்து அறிவுஜீவிகளுடன் பழகுவதாலும், உலத் திரைப்படங்களைப் பார்ப்பதாலும் கமல் நம் மக்களின் ரசனையைக் கணிக்கத் தவறுகிறாரோ எனத் தோன்றுகிறது.

அடுத்து வரும் ‘தலைவன் இருக்கின்றான்’ படத்திலாவது கமல் கொஞ்சம் ‘இறங்கி’ யோசிப்பார் என நம்புவோம்.  
மேலும் வாசிக்க... "மன்மதன் அம்பு – தோல்வி ஏன்?"
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

62 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.

Tuesday, January 4, 2011

சீமானும் சீமானின் தாத்தாக்களும்.....(தேர்தல் ஸ்பெஷல்)

யாருக்கும் தெரியாமல் ரகசியமாக(!) நான் எழுதி வரும் ’தேர்தல் ஸ்பெஷல்’ தொடரில் வைகோவை அடுத்து இன்று நாம் பார்க்கப் போவது சீமான் அவர்களைப் பற்றி.

தாத்தா#1: சீமானின் முதல் படமான பாஞ்சாலங்குறிச்சியில் வந்த முதல் பாடலான ‘வந்தனமய்யா’ வில் வரும் வரிகள் இவை:
மன்னாதி மன்னவராம்
மறவர் குல மாணிக்கமாம்
முக்குலத்து சிங்கமுங்க
முத்துராமலிங்கமுங்க
பொறந்து வளர்ந்த பூமி
அதைப் போற்றிப் பாடறோம் சாமி.

தொடர்ந்து இனியவளே, வீரநடை என இரு டப்பா படங்களைக் கொடுத்தபின் சீமான் எடுத்த புரட்சிப் படமான தம்பியில் முத்துராமலிங்கத் தேவரின் படத்தைக் காட்டினார்.

சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டவரும் சுபாஷ் சந்திரபோஸாலேயே ‘தென்னாட்டு போஸ்’ எனப் பாராட்டப் பட்டவருமான முத்துராமலிங்கத் தேவரைத் தலைவராக ஏற்றுக் கொண்ட லட்சக்கணக்கான தேவரின மக்கள் இங்கு இருக்கிறார்கள். அவர்களில் ஒருவராக தேவரினத்தில் பிறந்த(?) சீமானும் இருப்பதில் பெரிய தவறேதும் இல்லை தான். ஆனால் எதனாலோ திடீரென புரட்சியாளராக ஆவதென சீமான் முடிவு செய்தார். அடுத்து கீற்றுக்கு கொடுத்த பேட்டியில் தேவர் பற்றி கேட்கப் பட்டபோது கொஞ்சநாள் முன்பு வரைக்கும் எனக்கு முத்துராமலிங்கத் தேவர் பத்தின உண்மைகள் எதுவும் தெரியாது. தம்பி படம் வந்தபிறகு அண்ணன்களெல்லாம் சொன்னபிறகு தான் என்னோட பிழை தெரிஞ்சது... முத்துராமலிங்கம் படத்தை நான் பயன்படுத்தியது முழுக்க முழுக்க அறியாமல் நடந்த பிழைதான்.என்று சொன்னார். சரி..மாறுவது மனம்..அதனால் மாறிவிட்டது என்றே நினைத்தோம். 

பிறகு நாம் தமிழர் இயக்கம் பிறந்தது. தொடர்ந்து தேவர் ஜெயந்தியும் வந்தது. அப்போது சீமான் செய்த காரியம் நம்மைத் திடுக்கிட வைத்தது. ‘தனது சினிமாவில் காட்டுவதற்குக் கூட தகுதியில்லாதவராக ஆகிவிட்ட’ தேவரின் சிலைக்கு தொண்டர் படையுடன் சென்று மாலை அணிவித்து போஸ் கொடுத்தார் சீமான். இப்போது நமக்கு எழும் கேள்வியெல்லாம் இவைதான்:
அண்ணன்மார் தேவரைப் பற்றி சொன்ன உண்மைகள் என்ன? அவற்றுக்கு இப்போது என்ன ஆனது? மாலை அணிவித்த கையோடு அந்த உண்மைகளை கூடியிருந்த தேவரின மக்களுக்கு அறிவித்து அவர்களின் அறிவுக்கண்ணை அண்ணன் சீமான் திறக்காதது ஏன்? ‘தேசியமும் தெய்வீகமும் எனது இரு கண்கள்’ என அறிவித்தவர் தேவர். சீமானுக்கோ தேசியமும் தெய்வீகமும் வேப்பங்காயை விடவும் கசப்பானவை. அப்படியிருக்கும்போது இந்த நாடகம் எதற்காக?

தாத்தா #2: இவ்வாறாக தனது ஒரிஜினல் தாத்தாவான தேவரைப் பற்றி ’எதையோ’ தெரிந்துகொண்ட சீமான் அவரைத் தாத்தா போஸ்ட்டிலிருந்து டிஸ்மிஸ் செய்துவிட்டு தந்தை பெரியாரை வளர்ப்புத் தாத்தாவாக வரித்துக் கொண்டார். ’கழுதை கெட்டால் குட்டிச்சுவர்’ என்பதற்கிணங்க தேசியத்தை வெறுத்தோர் திராவிடத்திற்கும் திராவிடத்தை வெறுத்தோர் தேசியத்திற்கும் மாறுவது வழக்கம் என்பதால் இதிலும் நமக்குப் பிரச்சினை இல்லைதான். 

கொஞ்சகாலம் பெரியாரின் பேரனாக வலம் வந்த சீமான் திடீரென ‘பெரியார் தாழ்த்தப் பட்டோருக்கு எதுவும் செய்யவில்லை. திராவிடத்தால் வீழ்ந்தோம். இனி நாம் திராவிடர் அல்ல. தமிழர் மட்டுமே “ என்றெல்லாம் பேட்டி கொடுக்க ஆரம்பித்தார். எப்போது திராவிடத்தை தூக்கியெறிந்தாரோ அப்போதே தந்தை பெரியாரையும் தாத்தா போஸ்டிலிருந்து டிஸ்மிஸ் செய்தார் என்றே அர்த்தம். அதையும் செய்துவிட்டு சென்ற வாரம் பெரியார் பற்றி நடந்த பொதுக்கூட்டத்திலும் கலந்து கொண்டிருக்கிறார். இதற்கு என்ன அர்த்தம்?

தாத்தா #3: இரண்டாவது தாத்தாவும் தன் அறிவுக்கு ஈடானவராக இல்லாமல் போனதால் இப்போது மூன்றாவதாக ஆதித்தனாரைப் பிடித்திருக்கிறார். ஆதித்தனார் கண்ட நாம் தமிழர் இயக்கத்தின் கொள்கைகள் :” தமிழ்நாடு தமிழருக்கே. அரசாளும் உரிமையும் தொழில் நடத்தும் உரிமையும் தமிழருக்கே”. சீமான் ஆதித்தனாரின் இயக்கத்தை மீண்டும் உயிர்த்தெழ வைத்திருப்பதால் வரும் கேள்விகள் இவை: தமிழ்நாட்டில் வாழும் தெலுங்கு பேசும் மக்களான நாயுடு சமூகத்தவர், அருந்த்தியினத்தோர், மற்ற மலையாளிகள், கன்னடர் போன்றோர் நிலை என்னவாகும்? அவர்களை என்ன செய்வதாக உத்தேசம்? நாம் இவர்களை அடித்து விரட்டினால். பிற மாநிலங்களில் வாழும் தமிழரின் பாதுகாப்புக்கு நீங்கள் தரும் உத்தரவாதம் என்ன? நோக்கியா, ஃபோர்ட், டிசிஎஸ், விப்ரோ மற்றும் இன்னபிற அயல்நாட்டு/பிற மாநில தொழில்முனைவோரின் நிறுவங்களை என்ன செய்வீர்கள்? அங்கே பொட்டி தட்டிப் பிழைக்கும் ‘மானங் கெட்ட ‘ தமிழர்களின் வாழ்வாதாரத்திற்கான வழி என்ன?

தாய் : ஒரு மனிதனுக்கு தாத்தாவை விடவும் முக்கியத் தேவை தாய்தான். எனவே தாத்தாக்களைக் கண்டுபிடிப்பதில் எக்ஸ்பெர்ட்டான சீமான் அடுத்து தாயைக் கண்டுபிடித்தார். சாதாரணத்தாய் அல்ல. ஈழத்தாய். திடீரென ஜெயலலிதாவை வணங்கினார். அதற்குக் காரணம் தமிழீழத்திற்கு ஜெ. ஆதரவு கொடுத்ததுதான் என்றே வைத்துக்கொள்வோம்.
இப்போது மற்றொரு தமிழீழ ஆதரவாளரான வைகோ விடுதலைப் புலிகளுக்கு எதிரான தடையை நீக்க வேண்டும் என நேரில் ஆஜராகி வாதாடிக்கொண்டிருக்கிறார். அதைப்பற்றி ஜெ. மூச்சுக்கூட விடுவதில்லை. அவ்வளவு ஏன் ஆரம்பித்திலிருந்தே ஜெ. விடுதலைப்புலிகளைப் பற்றியும் பிரபாகரனைப் பற்றியும் ஆதரவாக எதுவும் பேசவேயில்லை. இந்த நிலையில் சீமான் ஜூனியர் விகடனிலும் பொதுக்கூட்டங்களிலும் வரும் தேர்தலில் அதிமுகவிற்கே ஆதரவு எனச் சொல்லிக்கொண்டிருக்கிறார். ஜெ. காங்கிரஸுடனும் கூட்டணி வைக்க இன்னும் முயன்றுகொண்டு இருக்கிறார் என்பது கூடுதல் தகவல். இப்போது நம்முடைய கேள்விகள் இவைதான்: ”காங்கிரஸூடன் கூட்டணியில்லை. புலிகள் மீதான தடையை நீக்க ஆதரவுக்குரல்’ ஆகிய இரு நிபந்தனைகளை ஏற்றுக் கொண்டால் மட்டுமே அதிமுகவிற்கு ஆதரவு என சீமான் ஜெ.விடம் கேட்காதது ஏன்? இதைக் கேட்கக்கூட திராணியில்லையென்றால் சீமானுக்கும் ஓ.பன்னீர் செல்வத்திற்கும் என்ன வித்தியாசம்?

தம்பி: தாயைக் கண்டடைந்த சீமானின் அடுத்த கண்டுபிடிப்பு ‘மானமுள்ள தமிழன்’ஆன தம்பி விஜய். கொஞ்சகாலம் முன்புதான் விஜய் ராகுல்காந்தியை நேரில் சந்தித்து காங்கிரஸில் சேர ஆலோசனை நட்த்தினார். இவர் கேட்ட அப்பாவுக்கு ஒரு எம்.பி. சீட் அல்லது இவருக்கு இளைஞர் அணித்தலைவர் பதவி (வயசாயிடுச்சு-ராகுல்) கிடைக்காததால் இப்போது தனிக்கட்சி ஆரம்பிப்பது பற்றி தீவிரமாக யோசித்துக்கொண்டிருப்பவர் விஜய். 

நமக்கு உண்மையிலேயே புரியாத விஷயம் என்னவென்றால் ‘காங்கிரஸுக்கு ஓட்டுப் போடுபவர்களும், காங்கிரஸூடன் கூட்டணி வைப்பவர்களும்’ மானங்கெட்ட தமிழனாக சீமானுக்குத் தெரியும்போது காங்கிரஸில் சேரவே முயன்ற விஜய் மட்டும் மானமுள்ள தமிழனாக ஆனது எப்படி? ஒரு பட வாய்ப்பினாலா? இதுபுரியாமல் சீமானைச் சிறையில் போட்டு சித்திரவதை செய்த கலைஞரை என்னவென்று சொல்வது?

நமது ஈழச் சகோதரர்கள்:

போரினால் பேரழிவைச் சந்தித்து இருக்கும் நம் ஈழச் சொந்தங்களுக்கு இப்போதைய உடனடித் தேவை மீள்குடியேற்றப் பணிகளை விரைவு படுத்தலும், சம உரிமையுடன் சிங்கள அரசால் நடத்தப் படுவதுமே. அதற்கு சிங்கள அரசை வற்புறுத்தும் வல்லமை கொண்டது இந்திய மத்திய அரசு. துரதிர்ஷ்டவசமாக பேரழிவுக்குத் துணை போனதும் இதே மத்திய காங்கிரஸ் அரசு தான். காங்கிரஸ் தன் தவறை உணரவேண்டுமென்றால், ஈழ விஷயத்தில் நமது உடனடித் தேவைகளுக்கான அழுத்தத்தைக் கொடுக்கவேண்டுமென்றால் வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் முழுதாக காங்கிரஸ் தோற்கடிக்கப் படவேண்டும். அவ்வாறு நடந்தால் மட்டுமே, இனி தமிழ்நாட்டில் ஒரு சீட் பிடிக்கவேண்டும் என்றால்கூட ஈழ விவகாரத்தில் இனியாவது நேர்மையுடன் நடக்க வேண்டும் என காங்கிரஸ் உணரும்.

 எனவே கண்டிப்பாக காங்கிரஸுக்கு எதிரான பிரச்சாரப் பீரங்கி வேண்டுமானால் இருப்பார் சீமான். அவர் இதுவரை உருவாக்கியிருக்கும் அவரது அரசியலுக்கான இடமும் அவ்வளவு தான்.

மற்றபடி அதிமுகவிற்கும் திமுகவிற்கும் மாற்றுசக்தி என நாம் நம்புகிற அளவிற்கு சீமான் தகுதியடையவில்லை என்பதே  உண்மை.

சீமான் தங்க ஊசியாகவே இருக்கலாம். அதற்காகக் கண்ணில் குத்திக்கொள்ள முடியுமா?
மேலும் வாசிக்க... "சீமானும் சீமானின் தாத்தாக்களும்.....(தேர்தல் ஸ்பெஷல்)"
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

33 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.