Tuesday, July 22, 2014

திரைக்கதை சூத்திரங்கள் (பகுதி-17)

17.கதையை ஓவர் டோஸ் ஆக்காதீர்கள்
கதை எழுத மேட்டர் கிடைக்காமல் திண்டாடுபவர்கள் ஒரு பக்கம் என்றால், புதிதாக எழுதத் தொடங்கும் பலருக்கு ஐடியாக்கள் ஓவராகப் பொங்கும் அதிசயமும் நடப்பதுண்டு. நீங்களும் அந்த மாதிரி ஒரு ஐடியாமணியா என்று சரிபார்த்துக்கொள்ள, இந்த ஓவர் டோஸ் பிரச்சினையை உதாரணங்களுடன் பார்ப்போம். 
இயக்குநர் சசிக்குமார் நடிப்பில் வந்த படம், பிரம்மன். சாக்ரடீஸ் எனும் அறிமுக இயக்குநரின் திரைக்கதையில் உருவான படம். அதன் கதை இப்படி வரும்:

சினிமாத் தியேட்டர் மேல் மிகுந்த பிரியம் வைத்திருக்கும் ஹீரோ, அதை லீசுக்கு எடுத்து நஷ்டத்துடன் ஓட்டிக்கொண்டிருக்கிறான். சொந்தங்கள் எல்லாரும் வேண்டாம் என்று சொல்லியும், தியேட்டரைக் காக்க போராடிக்கொண்டிருக்கிறான் ஹீரோ.

ஹீரோவுக்கு ஹீரோயின் மேல் (பின்னே, பாட்டி மேலயா?) காதல் வருகிறது. தியேட்டர் வருமானம் குடும்பம் நடத்த போதாது என்பதால், தியேட்டரை விட்டுவிடும்படி ஹீரோயின் வீட்டார் சொல்கிறார்கள். காதலா? தியேட்டரா? (இதுவே போதுமானது. ஆனால்…)

தனது பால்ய சிநேகிதன் சினிமாத்துறையில் இருப்பதை அறிந்து, தியேட்டரை மீட்க அவன் நட்பை நாடிச் செல்கிறான். அங்கே ஹீரோவுக்கே இயக்குநர் ஆகும் வாய்ப்பு கிடைக்கிறது. அதன்மூலம் தியேட்டரை மீட்கலாம் என்று நினைக்கும்போது, நண்பனுக்காக அந்த இயக்குநர் வாய்ப்பை விட்டுவிடும் சூழ்நிலை வருகிறது. நட்பா? தியேட்டரா?

அந்த நண்பனுக்கு பெண் பார்க்கிறார்கள். அட, அது நம்ம ஹீரோயின். ஹீரோவுக்கு இது தெரிய வர….நட்பா? காதலா?

தியேட்டருக்காக காதலியை விடவா? அல்லது நட்புக்காக தியேட்டரை விடவா? அல்லது காதலிக்காக நட்பை விடவா? அல்லது நட்புக்காக தியேட்டரை விடவா? அல்லது தியேட்டர், காதல் இரண்டையும் விட்டுடலாமா? அல்லது தியேட்டர், காதல், நட்பு மூன்றையும் விட்டுவிடலாமா? சினிமா வாய்ப்பையும் விட்டுட்டமே!..........ரிசல்ட் என்னன்னா, ஆளை விடுடா சாமீ தான்!

சினிமாவிலும் ஜெயித்துவிட்டார், அரசியலில்கூட இறங்கிவிட்டார், சிஎம் போஸ்ட் வேற வெயிட்டிங்..பதவியா, நட்பா, காதலா என்றெல்லாம் கதை போய்விடுமோ என்று தியேட்டரில் பதறித்துடித்தோம். நல்லவேளையாக இரண்டரை மணி நேரத்தில் ஆபரேட்டர், புரஜக்டரை ஆஃப் செய்துவிட்டார்.
ஒரு தியேட்டருக்கும் ஹீரோவுக்குமான நெருக்கம், இந்தப் படத்தில் அற்புதமாக சொல்லப்பட்டிருக்கும். இதன் இயக்குநர் சாக்ரடீஸ் திறமையானவர் என்பதற்கு அந்தப் பகுதி நல்ல உதாரணம். ஆனால் ஐடியாக்கள் இருக்கிறது என்பதற்காக, எல்லாவற்றையும் ஒரே படத்தில் கொட்டியது தான் தவறு.

காதலா, தியேட்டரா எனும் தளத்திலேயே படத்தின் கதையை முடித்திருக்கலாம். அதைச் செய்யாதது பெரும் தவறாகப் போனது.அதே போன்ற இன்னொரு உதாரணம், மாற்றான் திரைப்படம். 
குழந்தைகளுக்கான பால் பவுடரில் ஆபத்தான விஷயங்களை கலந்து விற்பனை செய்கிறார் ஹீரோவின் தந்தை. ஹீரோ எப்படி அதை தடுக்கிறான் என்பதே படத்தின் ஒன்லைன். ஹீரோ-குறிக்கோள்-வில்லன் என மூன்றும் இணைந்த சிம்பிளான ஒன்லைன் தான் இது. ஆனால் அதை கதையாக டெவலப் செய்த விதம் தான் நம்மை திக்குமுக்காடச் செய்தது.
ஒட்டிப்பிறந்த இரட்டையர்கள் தான் ஹீரோ. அவர்களில் ஒருவனுக்குக் காதல் அது இருவருக்கும் இடையே தரும் பிரிவு எனும் பாசமா, காதலா கதையுடன் படம் ஆரம்பிக்கிறது.

ஒரு ஃபாரின் லேடி சூர்யாவிடம் பழகி துப்பறிகிறாள். அதன்மூலம், சூர்யாவின் அப்பா, விளையாட்டு வீரர்களுக்கு சோதனையில் கண்டுபிடிக்க முடியாத ஊக்கமருந்து கண்டுபிடித்து, பெரிய ஆள் ஆனதை கண்டுபிடிக்கிறார்.

இரட்டையரில் ஒருவன் இறந்துபோக, அதற்குக் காரணானவர்களை பழி வாங்க புறப்படுகிறார் இன்னொரு சூர்யா. அதுசம்பந்தமாக ஃபாரின் எல்லாம் சென்று(!) ஆராயும்போது, பால்பவுடரில் அப்பா சில ரசாயனங்களைக் கலப்பது தெரியவருகிறது.

அங்கேயிருந்து அடுத்து குஜராத்தில் லேண்ட் ஆகிறார் ஹீரோ. அதை வைத்து கொஞ்ச நேரம்.

அடுத்து, ஹீரோ பத்துப்பேரின் விந்தணுவை மிக்ஸ் செய்து பிறந்தவன் எனும் மரபணு ஆராய்ச்சிக்கதை.

தான் எப்படியெல்லாம் அவமானப்படுத்தப்பட்டேன் எனும் ஹீரோவின் அப்பா கதை.

எழுத்தாளர்கள் சுபா மிகத்திறமையானவர்கள் தான். அதற்காக அந்த திறமையை எல்லாம் ஒரே படத்தில் கொட்டினால், இத்தனை விஷயங்களை இரண்டரை மணி நேரத்துக்குள் யார் ஜீரணிப்பது?

எனவே ஒரே கதையில் பல ஐடியாக்களைக் கொட்டி, ஓவர்டோஸ் ஆக்குகிறோமா என்று சரி பார்த்துக்கொள்ளுங்கள். சில நேரங்களில் நாம் எடுத்துக்கொண்ட கதையே, பல விஷயங்களை உள்ளடக்கியதாக இருக்கும். அதற்கு உதாரணங்கள், பருத்தி வீரனும் மங்காத்தாவும்.

பருத்திவீரன் கதை இரண்டு தலைமுறையாக நடப்பது. பருத்திவீரனின் அப்பா வேறு ஜாதியில் கல்யாணம் முடித்ததால், ஹீரோ-ஹீரோயின் குடும்பங்கள் பகையானது ஒரு முன் கதை.

ஹீரோவுக்கும் ஹீரோயினுக்கும் இடையே அறியாத வயசில் புரியாத மனசில் வந்த காதல் இன்னொரு முன்கதை.

நிகழ்காலத்தில் பருத்திவீரனுக்கும் முத்தழகுக்குமான காதலும் முடிவும் தான் முக்கியக்கதை. ஆனால் அதில் உள்ள பிரச்சினையை விளக்க முதல் முன்கதையும், காதலை விளக்க இரண்டாவது முன்கதையும் தேவைப்பட்டது. அதை ஒன்றாகச் சொல்லாமல் பிரித்து, இரு ஃப்ளாஷ்பேக்கில் சொல்லி இருப்பார் அமீர். இரு தலைமுறைக்கதை என்றாலும், அது பருத்திவீரன் – முத்தழகுக்கு இடையேயான காதலை மையம் கொண்டே இருக்கும். மேலே பார்த்த உதாரணங்களில் அப்படியான மையப்புள்ளி, மிஸ்ஸிங். 

அதே போன்றே வெங்கட் பிரபு எழுதிய மங்காத்தா கதையில் அஜித் டிஸ்மிஸ் ஆவது, ஜெயப்ரகாஷுடன் நட்பாவது, த்ரிஷாவுடன் காதலாவது, பணத்தை கொள்ளையடிக்க திட்டமிடும் ஒரு கும்பலின் கதைகள் என கொஞ்சநேரத்துக்கு எங்கெங்கோ படம் அலைபாய்வது போல் இருக்கும். அது எல்லாமே சூதாட்டப் பணம் எனும் ஒரு விஷயத்தை சுற்றி நடப்பது விளக்கப்பட்டவுடன், கதை நமக்கு தெளிவாகிவிடுகிறது.

எனவே ஓவர்டோஸ் ஆகக்கூடாது என்பதன் அர்த்தம், பல விஷயங்கள் கொண்ட ஒரு கதையை எடுத்துக்கொள்ளக்கூடாது என்பதல்ல. அதை ஒரு மையப்புள்ளியில் குழப்பமில்லாமல் இணைக்க முடியுமா என்று உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும். அதற்கு மேலே சொன்ன உதாரணப் படங்கள் உதவும்.


(தொடரும்)

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

14 comments:

  1. ஓவர் டோஸ் என்பது திவார் [[தமிழில் தீ]] படத்தில் அமிதாப் குண்டடி பட்டு அம்மா மடியில் சீக்கிரம் சாகாமல் டையலாக் பேசி பேசி நோகடிப்பதை பார்த்து, டூப்ப்ளிகட் அமிதாப் ஒருவரை வைத்து அதே டயலாக்கை பேச வைத்து கடைசியில்...

    "மர் சாலே மர் " என்று தாயே அடித்து கொல்வதாக காட்டி இருப்பார்கள்.

    ReplyDelete
  2. அருமையான விளக்கத்துடன் ஓவர் டோஸ் குறித்து சொல்லியிருக்கிறீர்கள் செங்கோவி...
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி குமார், தொடர்ந்த ஆதரவிற்கு.

      Delete
  3. மேற்சொன்ன கதைகள் அருமையான நாவலாக வந்திருக்கலாம்.. இரண்டரை மணி நேரம் என்பது உட்கிரகிக்க கொஞ்சம் குறைவான நேரம் தான்!!

    ReplyDelete
    Replies
    1. ஆம், குறிப்பாக சுபா இன்னும் நாவல் தான் எழுதுகிறார்கள்..திரைக்கதை ஃபார்மேட்டிற்கு இன்னும் முழுதாக அவர்கள் வரவில்லை!

      Delete
  4. அண்ணா,இந்த PRESTIGE அப்படிங்ற ஆங்கிலப்படமும் கிட்டத்தட்ட நீங்க சொன்னமாதிரி பலவிதமான கதைகள கொண்டு நகர்ற மாதிரி இருக்கும்.அதாவது ப்ளாஸ்போக் உள்ள இன்னொரு ப்ளாஸ்பேக்.அதுக்குள்ள இன்னோரு ப்ளாஸ்பேக் ங்ற மாதிரி நகரும்.ஆனா,அது ரொம்ம அருமையா போகும்.அது எந்த மாதிரியான வகைல வரும்னு கொஞ்சம் சொல்லுங்ணா ப்ளீஸ்

    ReplyDelete
    Replies
    1. நோலன் திரைக்கதை வித்தகர்..கனவு பற்றிப் படம் எடுக்கும்போது கனவு போன்று திரைக்கதை அமைப்பதும் மேஜிக் பற்றி படம் எடுக்கும்போது மேஜிக் போன்றே திரைக்கதை அமைப்பதும் அவர் ஸ்டைல்..மெமெண்டோ இன்னொரு உதாரணம்.

      இங்கே மேலும்...

      http://sengovi.blogspot.com/2011/01/prestige-2006.html

      http://umajee.blogspot.com/2011/02/prestige.html

      Delete
    2. அட நா ஒரு கேள்வி கேட்டதுக்கு இப்படி விமர்சனத்த படிக்க வச்சிட்டிங்களே ணா! நா மறுபடியும் இப்போ ப்ரஸ்டீஜ் பாத்துட்டு வந்து உங்க கிட்ட கேள்விக்கனைய தொடுக்கறேன்

      Delete
    3. இப்போ எனக்கே மறந்திடுச்சு...!

      Delete
  5. அழகான டோஸ் விபரம் தொடரட்டும் விளக்கம்.

    ReplyDelete
  6. ஓவர்டோஸுக்கு அழகான விளக்கம்! நன்றி!

    ReplyDelete
  7. நன்றி நண்பர்களே!

    ReplyDelete

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.