Tuesday, September 22, 2015

திரைக்கதை சூத்திரங்கள் - II - பகுதி 56



காதல் ஜெனர் - இன்னும் கொஞ்சம்

சென்ற பதிவில் காதல் என்றால் என்ன எனும் கேள்விக்கு கிடைக்கும் பதில்களை எல்லாம் பார்த்தோம். மற்ற ஜெனர்களைப் போல் அல்லாமல் காதல் ஜெனரில் வந்த
படங்களை வகைப்படுத்துவது கொஞ்சம் கஷ்டம் தான். இருப்பினும் சில வகைகளை இங்கே பார்ப்போம்.

தேவதாஸ்:
நெஞ்சை உருக வைக்கும் சோக காவியங்களுக்கு எல்லாம் இது தான் ஆரம்பம். வாழ்க்கையை சந்தோசமாக கொண்டாடும் ஒரு இளைஞனின் வாழ்வில் காதல் வந்தால்...’ என்பது தான் ஒன்லைன். பெரும்பாலும் சோகமுடிவு. மிகவும் சீரியஸான காதல் வகை இது. ‘நீ இல்லை என்றால் உயிர் வாழ மாட்டேன்’ எனும் நிலைக்கு ஒரு மனிதனைத் தள்ளுவது இவ்வகைக் காதல். 

தேவதாஸ்(1953) எனும் திரைப்படம் தான் இவ்வகைக் காதலுக்கு முன்னோடி.  இதையே வசந்தமாளிகையும், வாழ்வே மாயமும் வெவ்வேறு முறைகளில் சொல்லின. ஒரு வசதி படைத்த இளைஞன் - அவன் வாழ்வில் குறுக்கே வரும் ஒரு பெண் -  இருவருக்கும் மலரும் காதல் - ஆனாலும் ஒரு தடைக்கல் (ஈகோ/நோய்)-காதலை மறைக்க வேண்டிய கட்டாயம் - கிளைமாக்ஸ் பிரிவு அல்லது சேர்தல். இந்த ஐந்து  புள்ளிகளை வைத்துக்கொண்டு, விதவிதமான கோலங்களைப் போட முடியும். வசந்தமாளிகையில் தாயன்பு கிடைக்காத ஹீரோ எனும் பின்கதையை வைத்திருந்தார்கள்.

இதயம், பருத்திவீரன் போன்ற படங்களிலும் தேவதாஸின் கூறுகளைப் பார்க்க முடியும். ’காதல் மட்டும் வராமல் இருந்திருந்தால், இந்த ஹீரோக்களின் வாழ்க்கை எவ்வித சிக்கலும் இல்லாமல் போயிருக்குமோ?’என்ற எண்ணத்தையும் கொடுப்பவை தேவதாஸ் டைப் கதைகள். :)

கண்டதும் காதல்:
காதல் உண்டாக காரணம் ஏதுமின்றி, பார்த்ததும் காதலில் விழும் ஹீரோக்களைக் கொண்டவை இவ்வகைப் படங்கள். பொதுவாக ரொமாண்டிக் காமெடி போன்று லைட்டான சப்ஜெக்ட் படங்களாக இவை இருக்கும். அன்பே வா, அலை பாயுதே, விண்ணைத்தாண்டி வருவாயா என இளைஞர்களை அப்படியே பிரதிபலிப்பவை  இவ்வகைக் காதல் படங்கள்.

ஹீரோ, ஹீரோயினைப் பார்ப்பது - அவள் யார் என்று கண்டுபிடிப்பது-அவளை நெருங்குவது-காதல் மலர்வது வரை முதல்பாதியாகவும், காதலில்/காதலுக்கு வரும் பிரச்சினை - பிரிவு-மீண்டும் சேர்தல்/பிரிதல் என்பது இரண்டாம் பகுதியாகவும் கதை சொல்லப்படும்.

முக்கோணக் காதல் கதைகள்:

ஒரு ஹீரோ & இரண்டு ஹீரோயின்கள் அல்லது ஒரு ஹீரோயின் & இரண்டு ஹீரோக்கள் எனும் முக்கோணத்தில் சிக்கும் கதைகள் இவை. மின்னலே, மௌனராகம், நெஞ்சில் ஓர் ஆலயம், கல்யாணப் பரிசு போன்றவை மிகச்சிறந்த உதாரணங்கள். இரண்டு ஹீரோக்கள் இருந்தாலும், ஆடியன்ஸை ஏதேனும் ஒரு ஹீரோவுடன் மட்டுமே ஐடெண்டிஃபை செய்ய வைப்பது இவ்வகைப் படங்களில் முக்கியம். இதில் கோட்டைவிட்ட படங்கள் எல்லாம் அடிவாங்கியிருக்கின்றன.

பழைய காதல் அல்லது புதிதாக நடக்கப்போகும் திருமண ஏற்பாடுகள் தான் இதில் வில்லன். எல்லோரும் நல்லவர்களே எனும் விக்ரமன் பாணி அப்ரோச் இவ்வகைக் கதைகளில் உத்தமம். வாழ்க்கை போகிற போக்கில் உண்டாக்கும் சூழ்நிலைகள் தான் நமக்கு நிஜவாழ்வில் வில்லனாக இருக்கின்றன. அதை அப்படியே பிரதிபலித்தால், வெற்றி நிச்சயம்.

பக்குவப்பட்ட காதல்கள்:
கண்டதும் காதல், பின்னாலேயே சுற்றுவது போன்ற அச்சுப்பிச்சுத்தனங்கள் இல்லாமல் உருவாகும் காதல்கள் இந்தவகையில் வரும்.  முதல் மரியாதை, மூன்றாம் பிறை, காதல் கோட்டை போன்ற படங்களை இதற்கு
உதாரணமாகக் கொள்ளலாம். காதல் வரும் முறையும், காதலர்கள் அதைக் கையாளும் விதமும் இங்கே முக்கியமான விஷயங்கள்.

காதலுக்கு எதிரான படங்கள்:
காதல் தான் வாழ்க்கையில் முக்கியமான அம்சம், காதல் இல்லையேல் வாழ்க்கையில்லை என்றெல்லாம் மற்ற வகைகள் ஜல்லியடிக்கும்போது, அதற்கு மாறுபட்டு வரும் படங்கள் இவை. காதலை வைத்தே காதல்
முக்கிமல்ல என்று கருத்து சொல்பவை இந்தப் படங்கள்.

பன்னீர் புஷ்பங்கள் படத்தினை இவ்வகைப் படங்களின் முன்னோடி எனலாம். இனக்கவர்ச்சியில் மயங்கி, வாழ்க்கையைத் தொலைக்காதீர் என்று சொன்னது அந்தப் படம். சமீபத்தில் வந்த காதல் திரைப்படத்தை, பன்னீர் புஷ்பங்களின் தொடர்ச்சியாக , அலைகள் ஓய்வதில்லை படத்தின் கிளைமாக்ஸில் ஆரம்பிக்கும் படம் என்று சொல்லலாம். (அலைகள் ஓய்வதில்லையும் ஹிட்..காதலும் ஹிட். இது தான் சினிமாவின் பவர்!)

அந்த 7 நாட்கள், ஆட்டோகிராஃப் போன்ற படங்களும் காதலை வாழ்க்கையின் எபிசோடுகளில் ஒன்றாகக் காட்டின. இந்த வரிசையில் காதலுக்கு மரியாதை படமும் முக்கியமானது. காதலை விட பெற்றோரே முக்கியம் என காதல் ஜோடி பிரிய, பெற்றோர் அதனாலேயே சேர்த்துவைக்க, தமிழ் சினிமா திடீரென பற்றிக்கொண்டது. அடுத்த 2-3 வருடங்களுக்கு விதவிதமாக, காதலை தியாகம் செய்து ஜெயித்தார்கள்.


நாம் முன்பே சொன்னபடி சென்ற பகுதியில் உள்ள ஒவ்வொரு வரியையும் எடுத்துக்கொண்டு, புதிய வகை காதல் படத்தைக் கொடுத்துவிடமுடியும். கடந்த இரண்டு பகுதிகளில் பார்த்தவை மட்டுமல்லாது, கீழ்க்கண்ட விஷயங்களையும் கவனத்தில் வைக்கவும்:

- ஹீரோ அல்லது ஹீரோயினுக்கு காதல் ஏன் தேவை என்று ஒரு காரணம் இருந்தால், ஆடியன்ஸ்  மனதில் அந்த கேரக்டருடன் ஒன்ற முடியும். உதாரணம், அமர்க்களம், முதல் மரியாதை, வசந்தமாளிகை

- மோதலுக்குப் பின் காதல் என்பது சலிக்காத செட்டப். இருவர் பார்த்தார்கள், காதலிக்க ஆரம்பித்தார்கள் என்பதில் முரண்பாடு இல்லை. எனவே சுவாரஸ்யமும் இல்லை. முதலில் முட்டிக்கொள்ள வேண்டும். அதன்பிறகு, அதைத் தாண்டி எப்படி காதல் மலர்கிறது என்பது தான் விஷேசம். உதாரணம், துப்பாக்கி.

- காதல் மலர்ந்தபின், காதலுக்கு வரும் பிரச்சினை என்ன என்பதில் தான் நம் க்ரியேட்டிவிட்டியைக் காட்ட முடியும். குஷி, சேது போன்ற படங்கள் புதுமையானவையாகத் தெரியக் காரணம்,அது தான்.

-காதல் படங்களில், குறைந்த பட்சம் முதல்பாதியில் ரொமான்டிக் காமெடி வருவது நன்றாக எடுபடும்.

- வன்முறையையும் கொடூரமான வில்லனையும் காதல் கதைகளில் தவிர்க்க வேண்டும்.  ஃபீல் குட் படமாகவே கொண்டு செல்வது தான் இதில் முக்கியம். (டிராஜடிக்கு மட்டும் இதில் விதிவிலக்கு)

காமெடி ஜெனர் பற்றி, அடுத்த பகுதியில் பார்ப்போம்.


ஃபேஸ்புக்கில் எழுதியது :
திரைக்கதையில் முக்கியமான விஷயம், நகைச்சுவை. நகைச்சுவை என்பது சிரிப்பதற்கு மட்டும் தான் பயன்படுவதாக நினைக்கிறீர்களா? உண்மை அதுவல்ல.

ஹிட்ச்காக் ஒருமுறை சொன்னார் ‘தியேட்டருக்கு வரும் கூட்டம், படம் ஆரம்பிக்கும்போது தனித்தனி ஆளாகத்தான் இருக்கும். அவர்களை ஒரே நபராக சேர்க்க வேண்டுமென்றால், அதற்கான எளிய வழி நகைச்சுவை தான். சோகமோ அல்லது கோபமோ ஒரே தாக்கத்தை எல்லோருக்கும் ஏற்படுத்தாது (படத்தின் ஆரம்பத்தில்). ஆனால் சிரிப்புக்கு அந்த சக்தி உண்டு. தியேட்டர் குலுங்கிச் சிரித்துவிட்டது என்றால், அனைவரும் ஒரே புள்ளியில் கூடிவிட்டார்கள் என்று தான் அர்த்தம். அதன்பின் விரும்பிய திசைக்கு அவர்களை இழுத்துவிடலாம்’.

Plant & Pay-off எனப்படும் நமது ‘நட்டு வச்ச ரோஜா செடி’ விஷயத்தில் மிகவும் கைகொடுக்கும் விஷயம், நகைச்சுவை. உதாரணமாக, கலகலப்பு படத்தில் ஹீரோவின் நாய், எதை தூக்கிப்போட்டாலும் கவ்விக்கொண்டுவந்துவிடும். இதை சாதாரண ஜோக்காக ஆரம்பத்தில் காட்டியிருப்பார்கள். பின்னர் ஹீரோ போலீஸ் இன்ஸ்பெக்டரிடம் மாட்டும்போது, அந்த நாய் தான் கவ்விக் காப்பாற்றும்.

நகைச்சுவையால் வரும் இன்னொரு நன்மை, எங்காவது லாஜிக் இடித்தால் ஆபத்பாந்தவனாக இது காப்பாற்றும். அதாவது நேராகச் சொன்னால் ஆடியன்ஸ் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் எனும் விஷயத்தைக்க்கூட, அவர்கள் சிரிக்கும்போது செய்தால் கண்டுகொள்ளமாட்டார்கள். உதாரணம், ஓகே கண்மணி. பிரகாஷ்ராஜ் போன்ற ஒரு கேரக்டர், கண்டிப்பாக லிவிங் டுகெதரை தன் வீட்டில் அனுமதிக்காது. இந்த ஜோடி கதைப்படி அவர் வீட்டில் தங்க வேண்டும். எப்படிச் செய்யப் போகிறார் மணி என்று படம் பார்க்கும்போது யோசித்துக் கொண்டிருந்தேன். அங்கே பிரகாஷ்ராஜின் மனைவி ஒரு டயலாக் சொல்கிறார் ‘அவர் கொஞ்சம் ஓல்டு டைப்..லெஃப்ட்ல இண்டிகேட்டர் போட்டுட்டு, ஜன்னல் வழியே கையையும் காட்டிட்டுத் தான் வண்டியைத் திருப்புவார்’ என்று. தியேட்டரே சிரித்துக்கொண்டிருந்தபோது, அந்த ஜோடி உள்ளே நுழைந்துவிட்டது. மேட்டர் ஓவர்!!

எனவே திரைக்கதையில் நகைச்சுவைக்காட்சி என்பது சிரிக்க வைக்க மட்டும் தான் என்று எளிதாக எடுத்துக்கொண்டு விடாதீர்கள். அது அதையும் தாண்டிப் புனிதமானது!

 (தொடரும்)


மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

0 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.