Sunday, June 10, 2018

காளி : இயக்குநர் vs விமர்சகர்கள்


காளி படம் மோசம் என்று விமர்சகர்கள் சொல்ல, இயக்குநர் கிருத்திகா உதயநிதி கொதித்து எழுந்துவிட்டார். ’எப்படி என் படத்தை நல்லா இல்லைன்னு சொல்லலாம்? நீங்க இப்படிச் சொன்னதால்தான் படம் ஊத்தி மூடிக்கிச்சு’என்று சண்டைக்குப் போய்விட்டார். அவர் தரப்புக் கருத்தாக, காளி ஏன் நல்ல படம் என்று அவர் முன்வைத்த பாயிண்ட்ஸ் இவை தான் :


1. ஹீரோ நான்கு கெட்டப்பில்...

2. ஒரே படத்தில் மூன்று வெவ்வேறு கதைகள்...

3. மூன்று கதைகளுக்கும் இடையே தொடர்பு
4. அவசரமாக ரிவ்யூ செய்வதால், உங்களால் வித்தியாசமான படங்களைப் புரிந்துகொள்ள முடியவில்லை.

ஒரு இயக்குநர் ஒரு படத்தை எடுக்க நினைக்கத் தூண்டுதலாக, தன் படத்தின் பலமாக சில விஷயங்களை மனதில் வைத்திருப்பார். கிருத்திகாவைப் பொறுத்தவரை முதல் மூன்று பாயிண்ட்ஸ் தான் அவை. ஐடியாவாகப் பார்க்கும்போது நன்றாகவே இருக்கிறது. ஆனால் திரைப்படம் என்பது ஐடியாவிற்காக ஜெயிப்பதில்லை; அந்த ஐடியா எப்படி எக்ஸிக்யூட் பண்ணப்படுகிறது (திரைக்கதையாக) என்பது தான் சூட்சுமம்.

இரண்டு ஹீரோக்கள்.அதில் ஒருவன் விக்ரமாதித்யன், இன்னொருவன் வேதாளம் என்பது ஐடியா. .போலீஸ் vs தாதா - என்று கேரக்டர் பிடித்து, திரைக்கதையையும் ‘ஒரு கதை சொல்லட்டுமா சார்?’ என்று ஃப்ளாஷ்பேக் உத்திகளாகப் பிரித்து, ஒவ்வொரு ஃப்ளாஷ்பேக்கையும் முக்கியமான கேள்வியில் நிறுத்தி விக்ரமாதித்யனை சுற்றலில் விட்டது தான் பெர்ஃபெக்ட் எக்ஸிக்யூசன். ஒவ்வொரு சீனையும் எப்படி புதிதாகச் சொல்லலாம் என்று மண்டையைப் பிய்த்துக்கொள்வது தான் திரைக்கதை எழுதுதல். ஃபர்ஸ்ட் ட்ராஃப்ட்டில் வரும் மொக்கை சீன்களை எடுத்துக்கொண்டு விஜய் ஆண்டனியையும் விக்ரம் பிரபுவையும் விக்ரம்-வேதாவாக புக் செய்வது அல்ல, ஃபிலிம் மேக்கிங்!

1. நான்கு கெட்டப் ஹீரோ என்பது தான் கதையின் பாசிடிவ்களில் ஒன்று எனும்போது, விஜய் ஆண்டனியிடம் போனது தவறு. மற்ற ஹீரோக்களிடம் போயிருந்தாலும் எஸ்கேப் ஆகியிருப்பார்கள் என்பது வேறு விஷயம். எனக்கு நடிக்கத் தெரியாது என்று வெளிப்படையாக ஒத்துக்கொள்ளும் ஒரு ஹமாம் பார்ட்டியிடம் போய் இந்தக் கதையைக் கொடுத்ததுமே, முதல் பாயிண்ட் அவுட். விமர்சனத்தில் விஜய் ஆண்டனியின் நடிப்பை எல்லோரும் சுட்டிக்காட்டுவதன் காரணம், படத்தின் பாசிடிவ்வை அவர் நெகடிவ்வாக மாற்றியது தான்.

அடுத்து திரைக்கதைரீதியாக இந்தப் பாயிண்ட்டை அணுகினால், நான்கு கெட்டப்பில் ஹீரோவே வருவதற்கான காரணம் போதுமானதாக இல்லை. முதல் ஃப்ளாஷ்பேக்கை யோகிபாபு நினைத்துப் பார்க்கிறார், ஓகே. ஆனால் மூன்றாவது ஃப்ளாஷ்பேக்கை ஹீரோ டைரியில் தானே படிக்கிறார். அங்கே ஜெயப்பிரகாஷ் தானே வர வேண்டும்? என்ன இழவு லாஜிக் இது?

2. ஒரே படத்தில் மூன்று வெவ்வேறு கதைகள் :
ஹீரோ அப்பாவைத் தேடுவது ஒரு ப்லாட். அதில் மூன்று வெவ்வேறு கதைகளை கோர்த்து திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கிறது பார்த்தீர்களா? என்பது அடுத்த பாயிண்ட். ஆமாம், அப்படித்தான் இருக்கிறது. ஆனாலும் ஏன் அதை யாரும் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை? காரணம், மூன்று கதைகளுமே அரதப்பழசான மொக்கைக் கதைகள் என்பதால் தான். மெயின்கதையில் சட்டென்று ஒரு சுவாரஸ்யமான கதையை ஓப்பன் செய்து, மீண்டும் மெயின் கதைக்கு வந்து, மறுபடியும் இன்னொரு சுவாரஸ்யமான கதையைச் சொல்லியிருந்தால், படம் ஹிட் ஆகியிருக்கும்.

ரோமியோ-ஜூலியட்டாக நடித்து காதலில் விழும் காதலர்களின் முடிவும் ரோமியோ-ஜூலியட் முடிவு போலவே அமைந்துவிடுகிறது..த்சொ..த்ச்சொ..அடடே, ஆச்சரியக்குறி! இந்த மாதிரி நெஞ்சை நக்கும் கதை எல்லாம் இந்தக் காலத்தில் சொல்ல அசாத்திய துணிச்சல் வேண்டும். இதே தான் மற்ற இரண்டு கதைகளிலும். ஒரு நல்ல ஐடியாவை மொக்கை சீன்களால் நிரப்பிவிட்டு, குய்யோ முறையோ என்று கத்தி ஆகப்போவதென்ன?

3. ஒன்றுக்கொன்று தொடர்புடைய 3 கதைகள்:

‘மூணு கதைகளுக்கு இடையில் லின்க் இருக்கு..அதையாவது பார்த்தீங்களா?’ என்று அடம்பிடித்து அழுகிறார் இயக்குநர். முதல் கதை இல்லையென்றால் இரண்டாம்/ மூன்றாம் கதை புரியாது என்று சொல்லும் அளவிற்கு திரைக்கதை பின்னப்பட்டிருந்தால் தான் இதை ஒரு வலுவான பாயிண்ட்டாகச் சொல்ல முடியும். மூன்று கதைகளையும் விருமாண்டி போல் ஒன்றையொன்று நிரப்பும் ஃப்ளாஷ்பேக்-களாக ஆக்கியிருக்க முடியும். அதற்கு கொஞ்சம் வேலை செய்யணும். முதல் இரண்டு கதைகளை கட் செய்துவிட்டு, ஸ்ட்ரெய்ட்டாக மூன்றாவது கதைக்குப் போனாலும், அது புரிகிறது. அப்புறம் எதற்கு வேஸ்ட்டா மூணு கதை என்று தான் ஆடியன்ஸே நினைப்பார்கள். அது தான் நடந்தது.

4. அவசரத்தில் விமர்சனம்:

’என்னுடைய திரைக்கதை சித்துவேலைகள் எல்லாம் புரியற அளவுக்கு உங்களுக்கு கெப்பாக்குட்டி இல்லை’ என்று வெள்ளந்தியாகப் பேசுகிறார் இயக்குநர். முகமும் மனதும் குழந்தையாகவே அமைவது வரம். இருக்கட்டும்...ஆரண்ய காண்டம், உறியடி, அருவி என்று வித்தியாசமான படங்களை இணைய விமர்சகர்கள் கொண்டாடவே செய்திருக்கிறார்கள். யாரும் அவசரத்தில் படம் புரியாமல் சொதப்பியதில்லை. எனவே வித்தியாசமான படங்களை வரவிடாமல் விமர்சனங்கள் தடுப்பதாகச் சொல்வதில் நியாயமில்லை.

நான் பல நுண்ணிய வேலைப்பாடுகள் செய்தும் நீங்கள் குறிப்பிடவில்லை, கண்டுகொள்ளவில்லை என்பது தான் இயக்குநரின் ஆகப்பெரிய மனக்குறை. அதற்குப் பதில் சிம்பிள்: படம் கொஞ்சமாவது நன்றாக இருந்தால் தான், அதைப் பற்றி மீண்டும் நினைத்துப் பார்த்து, அடடே..இது நல்லா இருந்ததே...அது நல்லா இருந்ததே’ என்று யோசிப்பார்கள். அதிகம் அது பற்றிப் பேசாமல், துயரங்களை மனம் மறக்கவே விரும்பும்!


 போனஸ் : ’எங்க வீட்ல வேலை செய்றவங்களைக் கேட்டேன். அவங்களுக்கு படம் புரிஞ்சிருக்கு, பிடிச்சிருக்கு’ என்று கிருத்திகா சொன்னதைக் கேட்டு அப்படியே ஷாக் ஆகிட்டேன். ஏன் தாயீ, பிடிக்கலைன்னு சொன்னால் அடுத்த நிமிசமே வேலையை விட்டுத் தூக்கிற மாட்டீங்களா? எனக்கு உங்க கம்பெனியில் வேலை கொடுத்தால், நானே மேலே எழுதிய எல்லாவற்றையும் அழித்துவிட்டு சூப்பர்னு தான் சொல்வேன். நமக்கு சோறு தான் முக்கியம்!

படத்தில் எனக்குப் பிடித்தது அரும்பே பாடல் & அஞ்சலி ..அவ்ளோ அழகு!
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

0 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.