Saturday, September 22, 2012

முருக வேட்டை_36



விதாவும் சரவணனும் பாண்டியனின் வீட்டை நோக்கி நடந்தார்கள்.

“என்னங்க இது..அப்போ இது தான் மார்ஸா?”என்றாள்.

“இருக்கலாம்..இந்தத் தெரு தானே சொன்னார்?”

“ஆமா..”என்று கவிதா சொல்லும்போதே, இருவரும் அந்த புதிய அப்பார்ட்மெண்ட்டைப் பார்த்தார்கள். அப்பார்ட்மெண்ட்டை நெருங்கியதும் ‘MARS CONSTRUCTIONS' கண்ணில் தெரிந்தது. பில்டிங் நம்பரைப் பார்த்ததும் சரவணன் முகத்தில் புன்னகை வந்தது.

“நம்பர் 10......ச்சே!” என்றவன், வாட்ச்மேனை நெருங்கி “பாண்டியன் வீட்டிற்குப் போக வேண்டும்” என்றான்.

“நீங்க?”

“நான் அவர்கூட ஒர்க் பண்றேன்”

“ஓ..சாரை பார்க்க வந்தீங்களா?” என்றார்.

சரவணன் அதிர்ச்சியானாலும், கட்டிகொள்ளாமல் “ஆமா..சார் வீட்ல இருக்கிறாங்கள்ல?” என்றான்.

“இருக்காரு..போங்க” என்றார் அவர்.

அவர்கள் நடக்கத் தொடங்கியதும் “செகண்ட் ஃப்ளோர்... “என்று அவர் ஆரம்பிக்கும்போதே, கவிதா “தெரியும்..செகண்ட் ஃப்ளோர்..நாலாம் நம்பர் ஃப்ளாட் தானே?”என்றாள்.

“ஆமாங்க” என்றார் அவர்.

”பாண்டியனோ யாரோ என்கிட்ட ஒருதடவை சொன்னாங்க..சிக்கலான பிரச்சினைக்குத் தீர்வு சிக்கலானதாத் தான் இருக்கணும்னு அவசியம் இல்லேன்னு..அது கரெக்ட்டாத் தான் இருக்கு” என்றான் சரவணன்.

செகண்ட் ஃப்ளோர் வந்துவிட, நாலாம் நம்பர் ஃப்ளாட்டின் முன் சென்று நின்றார்கள். கவிதா காலிங் பெல்லை அழுத்தினாள். பதில் ஏதும் இல்லை. சரவணன் கதவை மெதுவாகத் தட்டினான். அப்போதும் பதில் இல்லை. எரிச்சலுடன் சரவணன், கதவின் கைப்பிடியைப் பிடித்துத் திருக, கதவு திறந்துகொண்டது.

உள்ளே வெற்று ஹாலைப் பார்த்ததும், சரவணன் உஷாரானான். ஆயுதம் எதுவும் இல்லாமல், கவிதாவுடன் வந்திருக்கிறோமே என்று ஒரு நிமிடம் கவலைப்பட்டான்.

கவிதாவை வெளியே நிற்கும்படி, சைகை காட்டிவிட்டு சரவணன் உள்ளே நுழைந்தான். ஹாலைக் கடந்து, அடுத்து திறந்திருந்த கிச்சனை எட்டிப் பார்த்தான். அங்கு யாரும் இல்லை.

“பாண்டியன் “என்று கத்தினான். பதில் இல்லை.

மெதுவாக அருகேயிருந்த அறையினை நெருங்கித் திறந்தான். திறந்தவன் அதிர்ச்சியாகி அப்படியே நின்றான்.

எல்லாவற்றையும் வெளியில் இருந்து பார்த்துக்கொண்டிருந்த கவிதா, சரவணன் நிற்பதைப் பார்த்துவிட்டு உள்ளே நுழைந்தாள். சரவணன் அவள்  வருவதைப் பார்த்தாலும், ஒன்றும் சொல்லாமல் நின்றான். எனவே கவிதா தைரியமாக அவனை நெருங்கி, அந்த அறையினை எட்டிப் பார்த்தாள்.

அது ஒரு பெட்ரூம். அங்கே இருந்த கட்டில் மெத்தையின் மேல் ரத்தக்கறை படிந்த கத்தி, கயிறு மற்றும் ஒரு துப்பாக்கி சிதறிக் கிடந்தன. சரவணன் உள்ளே போய், அவற்றைப் பார்த்தான். முத்துராமனைக் கட்டப் பயன்படுத்திய அதே கயிறு. கத்தியும் அவரைக் கொல்லப் பயன்படுத்தியதாய் இருக்கலாம் என்று தோன்றியது. கட்டிலுக்குக் கீழே ஒரு பெட்டி திறந்து கிடந்தது. அதில் சில நகைகள் கிடந்தன. காணாமல் போன பூர்வீக நகைகள்!

கவிதாவும் உள்ளே வந்து பார்த்தாள். சரவணன் வெளியேறி, வீடு முழுக்கச் சுற்றிப்பார்த்தான். அங்கே யாரும் இல்லை.

”அச்சு, வெளில வா..வீடும் திறந்துகிடக்கு. ஆளையும் காணோம்...வெளில போய்ப் பார்ப்போம்”

கவிதா சரவணனுடன் வெளியேறினாள்.

“பாண்டியன் அப்பார்ட்மெண்ட்டுக்கு உள்ள தான் இருக்கணும்.” என்றான் சரவணன்.

“ஆமாங்க..மேல, மொட்டை மாடில பார்க்கலாமா?” என்று கேட்டாள் கவிதா.

சரவணனுக்கும் அது சரியென்று தோன்றியதால் லிஃப்ட்டில் ஏறி, மேலே வந்தார்கள்.

மாடி போதுமான வெளிச்சமின்றி இருண்டு கிடந்தது. நிலவொளிக்கு கண் பழக சிறுது நேரம் பிடித்தது. ஓரளவு வெளிச்சம் கிடைத்ததும், வாட்டர் டேங்க் அருகே யாரோ உட்கார்ந்திருப்பது தெரிந்தது.

“பாண்டியன்” என்று அழைத்தான் சரவணன்.

“வெல்கம் டூ அவர் சிபிசிஐடி ஆபீசர் !” என்றான் பாண்டியன்.

சரவணனும் கவிதாவும் பாண்டியனை நோக்கி நடந்து, சற்று தூரத்தில் நின்றனர்.

“சரவணன், பரவாயில்லையே..நீ இங்க வர ரொம்ப நாள் ஆகும்னு நினைச்சேன். இவ்ளோ சீக்கிரமா கண்டுபிடிச்சு வருவேன்னு நினைக்கலை”

“கண்டுபிடிக்கறதுக்கு ஒன்னுமே இல்லியே..” என்றான் சரவணன்.

“ஹா..ஹா..அது தானே ரொம்பக் கஷ்டம் சரவணன். சிஸ்டர், வணக்கம்” என்று கவிதாவைப் பார்த்து, கைகுவித்து வணக்கம் சொன்னான் பாண்டியன்.

“என்னண்ணே இது? எதுக்கு இதெல்லாம்? நீங்களா அந்தக் கொலையைப் பண்ணது? என்னால நம்பவே முடியலை” என்று புலம்பிக்கொண்டே போனாள் கவிதா.

“ஆமா..நான் தான் முத்துராமனைக் கொன்னேன்.”

“ஏன்?”

”ஏனா? நான் போலீஸ் வேலையில் சேர்ந்ததே அதுக்குத் தானே?”என்றான் பாண்டியன்.

என்ன?..அதுக்க்காகத் தான் போலீஸ்ல சேர்ந்தியா?..ஏன்?

“ஏன்னு உனக்குப் புரியணும்னா, சித்தர் மலை பத்தி உனக்குத் தெரியணும் என்றான் பாண்டியன்.

(தொடரும்
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

4 comments:

  1. சில பாகங்கள் வாசிக்காததால் இந்த பாகத்தையும் வாசிக்கவில்லை. வரிசையாக வாசித்தால் தானே விருவிருப்பா இருக்கும்???

    ReplyDelete
  2. வணக்கம்,செங்கோவி!அருமையான திருப்பம்.இன்னும் கொஞ்சம் சஸ்பென்ஸ் மீதம் இருக்கிறது.பொறுத்திருப்போம்!

    ReplyDelete
  3. சப்புனு போயிருச்சு, என்ன கொடுமையா இருக்குது. மார்ஸ் அங்க சுத்தி இங்க சுத்தி ஒரு அபார்ட்மெண்ட் பேராவும் வைச்சுட்டீங்களே, பாண்டியன் சைடு ஸ்டோரி இப்பதான் ஆரம்பிக்குது. அதுவும் விறுவிறுப்பா இருக்கும்னு நினைக்கிறேன்.

    ReplyDelete
  4. வணக்கம் ஐயா கதை இப்படி திருப்பத்துடன் சித்தமலையை தரிசிக்க காத்து இருக்கின்றேன்!

    ReplyDelete

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.