Tuesday, August 19, 2014

ஹிட்ச்காக்கின் Jamaica Inn (1939) - விமர்சனம்

டிஸ்கி: இது மொக்கைப்பட வாரம் என்பதால், ஹிட்ச்காக்கின் ஒரு மொக்கைப்படம் பற்றிப் பார்ப்போம்.

டைட்டானிக் பற்றிய படம் ஒன்று எடுக்க ஹாலிவுட் தயாரிப்பாளர்  David O. Selznick  ஹிட்ச்காக்கை அழைப்பு வந்தது. அவரும் சந்தோசமாகக் கிளம்பிப்போய், அதற்கான வேலைகளில் இறங்கினார். கப்பல் மூழ்குவது பற்றிப் படம் எடுத்தால் எங்கள் தொழில் பாதிக்கும் என சில கப்பல் கம்பெனிகள் பிரச்சினையைக் கிளப்பினர். படம் ஆரம்பிக்க மேலும் சில மாதங்கள் ஆகும் என்று தோன்றியது. 

அந்த நேரத்தில் Charles Laughton ஹிட்ச்காக்கை ஒரு பிரிட்டிஷ் சினிமா எடுக்க அழைத்தார். ஹிட்ச்காக்கும் ஹாலிவுட்டில் கிடைத்த இடைவெளியை இதற்கு உபயோகிக்கலாம் என்று மீண்டும் பிரிட்டனுக்கே திரும்பி வந்து, இந்தப் படத்தை எடுத்தார். அது அவர் செய்த பெரும் தவறு என்று உணர்ந்தார். ஆம், ஹிட்ச்காக் படங்களில் மோசமான படம் எனும் பெயரைப் பெற்றது 
கடத்தல்காரர்களின் இருப்பிடமாக விளங்குகிறது ஜமைக்கா இன் எனும் இடம். அங்கே வாழும் தன் ஆண்ட்டியைப் பார்க்க வருகிறார் ஹீரோயின்(Maureen O'Hara). ஆண்ட்டியின் கணவன், அந்த கொள்ளைக்கூட்டத் தளபதியாக இருக்கிறான். அந்தக் கூட்டத்திற்குத் தலைவர், வெளியில் நல்லவராக வாழும் ஒரு பணக்கார நீதிபதி (Charles Laughton). அந்தக் கூட்டத்தைப் பிடிக்க உளவாளியாக வந்த போலீஸ் ஹீரோ(Robert Newton), அவர்களிடம் மாட்டிக்கொள்கிறான். ஹீரோயின் அவனைக் காப்பாற்றி, அவனுடனே தப்பி ஓடுகிறாள். அவர்கள் உதவி கேட்டுப் போவது, வில்லன் நீதிபதியிடம். அதன்பின் என்ன ஆனது, வில்லன் பிடிபட்டாரா என்பதே கதை.

 Daphne du Maurier என்பவர் இதே பெயரில் எழுதிய புகழ்பெற்ற நாவலின் கதை இது. ‘உயிர் தப்பி ஓடியபடியே தன்னை நிரபராதி என்று நிரூபித்தல்’ எனும் ஹிட்ச்காக்கின் ஃபேவரிட் தீம் தான் இது. ஆனால் படத்திற்குப் பிரச்சினை வில்லன் வேடத்தில் நடித்த Charles Laughton-ஆல் வந்தது. அவர் இந்தப் படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவர் என்பதால், ஹிட்ச்காக்கால் அவரை கண்ட்ரோல் பண்ண முடியவில்லை. தனக்கு முக்கியத்துவம் வேண்டும் என்று அதிக காட்சிகளில் தான் வரும்படி Charles Laughton, திரைக்கதையை மாற்றினார். ‘அவர் நல்லவர் அல்ல..வில்லன்’ என்பதை படத்தின் பின்பாதியில் சொல்வதே ஹிட்ச்காக்கின் ஐடியாவாக இருந்தது. ஆனால் மனிதர், அதை முதலிலேயே சொல்ல வைத்தார். ‘வசமாகச் சிக்கிக்கொண்டோம்’ என்பது ஹிட்ச்காக்கிற்கு அப்போது தான் புரிந்தது.

Charles Laughton ஒன்றும் சாதாரண ஆளும் அல்ல. நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர் என பல தளங்களில் தன்னை வெற்றிகரமான திறமைசாலி என்று நிரூபித்தவர். ஆனாலும் படத்தின் இயக்குநரையே டைரக்ட் செய்ததால் தான், படம் ஏடாகூடம் ஆகியது. படத்தின் ஹீரோவான Robert Newton-ஐ டம்மியாக்கி, தன்னை முன்னிலைப்படுத்தியே பெரும் தவறு. முதலில் இந்த பின்புலம் தெரியாமல் படத்தைப் பார்த்துவிட்டு, இது ஹிட்ச்க்காக் படம் தானா என்று நான் கதறியது தனிக்கதை.
Hero with REAL Villain
இவ்வளவு சிக்கலிலும் படத்தில் தப்பிப்பிழைத்த ஒரு விஷயம், ஹீரோயினின் மனப்போராட்டம். அவள் ஹீரோவுக்கு உதவ வேண்டும், அதே நேரத்தில் கொள்ளைக்கூட்டத்தில் இருக்கும் ஆண்ட்டியையும் அவள் கணவனையும் காப்பாற்ற வேண்டும். அந்த போர்சனை மட்டும் கெடுக்காமல் நன்றாக எடுத்திருப்பார்கள். படத்தில் நம்மை ரசிக்க வைத்த ஒரே ஆளாக இருப்பது, ஹீரோயின்  Maureen O'Hara தான்.

கேமிரா மூலமே கதை சொல்வது, சட்டென்று வந்துவிழும் நக்கல் வசனங்கள், குறும்புத்தனமான ஹீரோ, சஸ்பென்ஸை கூட்டிக்கொண்டே செல்வது போன்ற ஹிட்ச்காக்கின் அடையாளங்கள் எதையும் இந்தப் படத்தில் பார்த்துவிட முடியாது. அதிலும் The Lady Vanihses போன்ற கிளாசிக்கல் படத்தைக் கொடுத்துவிட்டு, அடுத்து இப்படி ஒரு படம் எடுத்தார் என்றால், அவர் நிலைமையை நாம் புரிந்துகொள்ள வேண்டியது தான். இந்தப் படத்தை ஹிட்ச்காக் படம் என்று சொல்வதைவிட, Charles Laughton படம் என்று சொல்வதே சரி.  

ஏற்கனவே பிரிட்டிஷ் சினிமாவை விட்டு ஓடுவோம் என்று நினைத்திருந்த ஹிட்ச்காக்கை, இந்தப் படம் வெறியேற்றி ஹாலிவுட்டுக்கு விரட்டியிருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. அவரது 22வது படம் இது. பிரிட்டிஷ் சினிமாவில் அவர் மொத்தம் 24 படங்கள் இயக்கினார். (Stage Fright, Frenzy ஆகிய இரு படங்களை பலவருடங்களுக்குப் பிறகு எடுத்தார்.) Jamaica Inn வரையிலான படங்களில் ஹிட்ச்காக்கின் சிறந்த 5 படங்களாக கீழ்க்கண்ட படங்களைச் சொல்லலாம்:

The Lodger (Silent Movie)
The Man Who Knew Too much (இது பின்னர் ஹாலிவுட்டில் ஹிட்ச்காக்கால் ரீமேக் செய்யப்பட்டது)
The 39 Steps
Sabotage
The Lady vanishes
ஹிட்ச்காக் மௌனப்படங்களின் காலத்தில் இருந்து சினிமாவில் இருப்பவர். பேசும் படங்கள் வந்த பின்னர், சினிமாவை நாடகம் ஆக்கிவிட்டார்கள் எனும் வருத்தம் ஹிட்ச்காக்கிற்கு உண்டு. படம் முழுக்க வசனம் நிரம்பி வழிவதை அவர் வெறுத்தார். சினிமா ஒரு விஷுவல் மீடியம். விஷுவலாகச் சொல்லவே முடியாத விஷயத்தை மட்டும் தான் வசனத்தில் சொல்ல வேண்டும் என்பது அவர் கொள்கை. அதைச் செயல்படுத்த, அவரது மௌனப்பட அனுபவம் உதவிகரமாக இருந்தது. 

இதுவரை எடுத்த படங்களில் இருந்து, ஹிட்ச்காக் ஒரு முக்கியமான விஷயத்தை உணர்ந்துகொண்டார். அது, ‘நாம் நடிகர்களை இயக்கவில்லை..ஆடியன்ஸை இயக்குகிறோம்’ எனும் ஹிட்ச்காக் தியரி!

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

1 comment:

  1. ஹி,ஹி,ஹீ...........இன்னிக்கு ஹிட்ச்காக்கு மாட்னாரு!

    ReplyDelete

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.