Tuesday, June 26, 2012

நித்தியானந்தாவிற்கு நன்றி!


இந்து மதத்தில் துறவிகளுக்கு எப்போதுமே சிறப்பு மரியாதை உண்டு. திருவோடு, காவி உடையுடன் ஒருவர் வீட்டின் முன் வந்து நின்றுவிட்டால், அவருக்கு உணவளிப்பது நம் கடமைகளுள் ஒன்றாகவே இருந்து வந்துள்ளது. இப்போதும் எங்கள் பகுதியில் சிலர் அவ்வாறு வரும்போது ‘அவர் உண்மையோ போலியோ...அது அவன்பாடு..உணவளிப்பது/காசு கொடுப்பது நம் கடமை’ என்று அந்த காவி உடைக்குரிய மரியாதையைச் செய்துவிடுவது வழக்கம்.

மனித மனங்கள் அனைத்துமே ஒரே அலைவரிசையில் சிந்திப்பவை அல்ல. சிலருக்கு பக்தி மார்க்கம் மட்டுமே போதுமானதாக இருப்பதும் இல்லை. எனவே ஞான மார்க்கத்தில் சுகபோகங்களைத் துறந்து இறை சிந்தனை ஒன்றே தொழிலாக உள்ள அடியோரைப் பேணுவது இல்லற வாழ்வில் உள்ள இந்துக்களின் கடமையாகச் சொல்லப்பட்டது. ‘அன்பர்பணி செய்ய எனை ஆட்கொண்டுவிட்டால், இன்பநிலை தானே வந்தெய்தும் பாராபரமே’ என்று தாயுமானவர் பாடியதும் அதைத் தான்.

எல்லாமே நவீனமயமாகிவிட்ட இந்த காலகட்டத்தில், முற்றும் துறக்க வேண்டிய துறவிகளில் சிலரும் நவீனமாகி ‘கார்ப்போரேட் சாமியார்’களாக வலம் வர ஆரம்பித்தனர். முன்பிருந்த சமூகக் கட்டமைப்பில் உண்மையான துறவிகளை இனம் காணுவதும், பேணுவதும் எளிதாக இருந்தது. ஆனால் தற்போது இரண்டுமே சராசரி இந்துக்களுக்கு கடினமானதாக ஆகிவிட்டிருக்கிறது. எனவே எளிதான வழியாக கார்ப்போரேட் சாமியார்களை நம் மக்கள் நாட ஆரம்பித்தனர். தங்கள் சொந்தப்பிரச்சினைகளைத் தீர்க்கும் ஆற்றல் உள்ளவரே ஞானி என்ற தவறான புரிதலே, எல்லா தவறுகளுக்கும் அடிப்படை ஆனது.

இந்து மதத்தில் உள்ள நல்ல மற்றும் கெட்ட விஷயம், சுதந்திரப் பெருவெளியாக இருப்பதும் இதற்கென்று தனிப்பட்ட தலைமைப்பீடம் இல்லாததும் தான். அதனால் விளைகின்ற நன்மைகள் பலவாயினும், சில தீமைகளும் விளையாமல் இல்லை. அத்தகைய தீமைகளுள் ஒன்று தான் நித்தியானந்தா என்ற பீடை.

ரஞ்சிதாவுடனான நித்தியின் லீலைகள் வெளிப்பட்ட உடனே அவரை நம்பியிருந்த சராசரி இந்துக்கள் அதிர்ச்சியடைந்து விலகிவிட்டனர் என்பதே உண்மை. தற்போது ஆயிரம் கோடிக்கு மேற்பட்ட சொத்துக்களும், அதை நிர்வகிக்கும் (அனுபவிக்கும்) சிஷ்யகோடிகளுமே துணை என்ற நிலையில், நித்தி பாதுகாப்பு வேண்டி செய்த பெரும் தவறு மதுரை ஆதீனத்தை கைப்பற்றியது.

திருஞான சம்பந்தர் போன்ற மகான்களால் நடத்தப்பட்ட ஆதீனத்தை கைப்பற்றியதோடு, ஆகம விதிகளை காற்றில் பறக்கவிட்டபடி மனம்போன போக்கில் ஆட ஆரம்பித்தார் நித்தி. ஆதீனமாக பொறுப்பேற்பவர்கள் செய்ய வேண்டிய முதல் வேலையான ‘தலையை மழித்தல்’-ஐக் கூட செய்ய நித்தி தயாராக இல்லை என்பதிலேயே அவரது நோக்கம் ஆதீனத்தை கேடயமாக பயன்படுத்துவது தான் என்று தெளிவாகத் தெரிந்து போயிற்று. தற்போது ஆர்த்தி ராவின் கடுமையான பாலியல் குற்றச்சாட்டைத் தொடர்ந்து ஏற்பட்ட கலவரத்தில் பிடதி ஆசிரமமே அரசின் பிடியில் சென்றுள்ளது. 

கார்ப்போராட் சாமியார்களின் பின்னால் கண்மூடித்தனாமான நம்பிக்கையுடன் சென்ற மக்கள், தங்கள் நிலைப்பாட்டினை மறுபரிசீலனை செய்ய வேண்டிய நேரம் இது. முற்றும் துறந்த துறவிக்கு ஏன் ஆயிரம் கோடிக்கு மேற்பட்ட சொத்துகள் என்ற எளிய வினாவில் நம் மறுபரிசீலனையை ஆரம்பிக்க வேண்டியுள்ளது. அதற்கு வழிவகை செய்த நித்தியானந்தாவிற்கு நாம் எல்லோரும் கடமைப்பட்டவர்களே!

எந்தவொரு விஷயமானாலும் ஒரு நிலைப்பாட்டிலிருந்து நேர் எதிரான நிலைப்பாட்டுக்கு நகர்வதே சராசரி மனிதர்களின் வழக்கம். அதன்படி, இனி சாமியார்களையே தூக்கி எறிந்திடலாமா என்ற சிந்தனையும் சிலரால் முன்வைக்கப்படுகிறது. இந்து மதம் என்ற பண்பாட்டுத் தொகுப்பை புரிந்துகொண்டவர்களும், முன்பிருந்த துறவிகள் இந்து மதத்திற்கு ஆற்றிய பங்களிப்பையும் கவனத்தில் கொண்டால், அது முற்றிலும் நிராகரிக்கப்பட வேண்டிய தரப்பல்ல என்று நமக்குப் புரியும்.


இந்தப் பிரச்சினையில் இன்னொரு சிக்கலும் உண்டு. நித்தியானந்தாவிடன் யோகா பயின்று பல வியாதிகளை தீர்த்துக்கொண்ட மக்களும் இங்கே உண்டு. அதுவே நித்திக்கு பெயரினைப் பெற்றுத் தந்தது. அங்கே நம் மக்கள் செய்த தவறு நித்தியை ஒரு நல்ல யோகா மாஸ்டராக மட்டுமே எடுத்துக்கொள்ளாமல், ஆன்மீகக் குருவாகவும் நினைக்கத் தொடங்கியது தான். 

எனவே ஆன்மீகத்தை ஒரு பிஸினஸாக நடத்துபவர், யோகா போன்ற பிற விஷயங்களில் தேர்ந்தவராக இருந்தாலும்,அவர்களை ஆன்மீகக் குருவாக ஏற்றுக்கொள்வதை நிறுத்துவோம்.
நவீனமயமாகிவிட்ட சூழலிலும், தனக்கென்று சொத்துக்கள் சேர்க்காமல், ஆன்மவிடுதலை ஒன்றையே நோக்கமாகக் கொண்ட துறவிகளை இனம் காண முடிந்தால், அவர் முன் அடிபணிவோம். இல்லையேல் கார்ப்போரேட் புரோக்கர்களை புறம்தள்ளி, இறையே சரணம் என்று நம் ஆன்மீகத் தேடலைத் தொடர்வோம்.

மதுரை ஆதீனத்தையே ஸ்வாஹா செய்யத் துணிந்த நித்தியானந்தாவிற்கென்று, புதிதாக நாம் சொல்ல வேண்டியது ஏதுமில்லை. 

சிவன் சொத்து குல நாசம்.


மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

19 comments:

  1. சிவன் சொத்து குல நாசம்.

    ReplyDelete
  2. ennaa velakkam.super punch *சிவன் சொத்து குல நாசம்.*

    ReplyDelete
  3. இரவு வணக்கம்,செங்கோவி!என் பெயரை துஷ்பிரயோகம்(யோகா மாஸ்டர்)செய்ததற்குக் கண்டனங்கள்!

    ReplyDelete
  4. எப்படிச் சொன்னாலும் திருந்தப் போவதில்லை!நித்தியானந்த சுவாமி?!களுக்கு நன்றிகள்!

    ReplyDelete
  5. மதங்கள் பணம் புரளும் நிறுவனங்களாகி வருவதால் ஏற்படும் வினையினை தெளிவுப் படுத்தி உள்ளீர்கள் .. நன்றி !!! மக்கள் கேட்பார்களா ???

    ReplyDelete
  6. திரு செங்கோவி சொல்கிறார்: 'சிவன் சொத்து குல நாசம்' - அருமையான பதிவு. படித்துப் பாருங்கள்.
    நன்றி திரு செங்கோவி.

    எனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன். வாழ்த்துகள் திரு செங்கோவி.

    ReplyDelete
  7. சார் நல்லா சொல்லி இருக்கீங்க சார்....

    நித்தி யோகா மாஸ்டராய் இருந்து....ஸ்வாஹா மாஸ்டராயிட்டாரு!

    ReplyDelete
  8. நித்தியின் தியானமுறைகளைப் பயின்று, அதில் மட்டுமே அவரின் வழிகாட்டலை பெற்றுக்கொண்டவர்கள், நித்தியின் தற்போதைய நடவடிக்கைகள் குற்த்து கவலைகொள்ளவோ, அவமானப்படவோ எந்தத் தேவையுமில்லை. அவரைக் கடவுளாக ஏற்றுக்கொண்டவர்கள் நிலைமைதான் பரிதாபம்!
    இதுபற்றி எனக்குக் கொஞ்சம் அனுபவம் இருக்குண்ணே..சிலரைச் சந்தித்திருக்கிறேன்! :-)

    ReplyDelete
  9. மீள்பரிசீலனைக்காலம் இந்துக்களுக்கு ம்ம்ம் காத்திரமான ஆதீதனம் இப்படி ம்ம்ம்

    ReplyDelete
  10. நித்தியின் முகத்திரை கிழிந்தும் ஆதினம் அவரை நம்பியது காலத்தின் கோலம்! தெய்வம் நின்று கொல்லும்! அருமையான பதிவு!

    ReplyDelete
  11. எப்படியோ நித்திக்கு நன்றி சொல்லி ஒரு எதிர்பதிவு அவருக்கு பதிவு செஞ்சுட்டிங்க.

    ReplyDelete
  12. இவ்ளோ நடந்தும் நித்தியின் போக்கில் எந்த மாற்றமும் ஏற்பட்டதா தெரியல, அதான் ஆச்சர்யமா இருக்கு.......!

    ReplyDelete
  13. //சிவன் சொத்து குல நாசம்.// வேறு எதுவும் சொல்லவே வேண்டாம்,செங்கோவி

    ReplyDelete
  14. உங்க ஒவ்வொரு பதிவும் சாட்டை பதிவுகள் செங்கோவி!
    எழுத்து நடை அபாரம் !!ஒரு முழு நேர எழுத்தாளர் ஆகி இருக்கவேண்டியவர் நீங்கள்!

    ReplyDelete
  15. சிவன் சொத்து குல நாசம்.////சாட்டை அடி

    ReplyDelete
  16. Nithi done a great social service to T.Viewers,bloggers.twitters,facebook users.
    Sasikala teaching a lesson how many holes in our IPC in court
    Nithi teaching lesson to peoples how an enjoy life as a bachlor

    ReplyDelete
  17. //இந்து மதத்தில் உள்ள நல்ல மற்றும் கெட்ட விஷயம், சுதந்திரப் பெருவெளியாக இருப்பதும் இதற்கென்று தனிப்பட்ட தலைமைப்பீடம் இல்லாததும் தான். அதனால் விளைகின்ற நன்மைகள் பலவாயினும், சில தீமைகளும் விளையாமல் இல்லை. அத்தகைய தீமைகளுள் ஒன்று தான் நித்தியானந்தா என்ற பீடை.///
    கருத்து களஞ்சியமையா உமது பதிவு...

    ReplyDelete

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.