Thursday, March 17, 2016

ஃபேஸ்புக்கில் யோசிச்சேன்...10



Movies to Learn Series:
கண்ணில் ஒற்றிக்கொள்ளும் அழகுடன், ஓவியம் போல் சில படங்கள் தான் வருகின்றன. அதில் முக்கியமானது, இந்த சீனப் படம் ‘Hero (2002)'.
ஒரே சம்பவத்தை வெவ்வேறு நபர்கள், வெவ்வேறு விதத்தில் சொல்கிறார்கள். உண்மையில், ’உண்மை என்ற ஒன்று உண்டா?’என்று தத்துவார்த்தமான கேள்வியை வைத்த படம், அகிரா குரோசவாவின் ‘Rashomon'. சினிமா கதை சொல்லலில் பெரும் புரட்சியை உண்டாக்கிய படம். தமிழில் கமல் இதன் இன்ஸ்பிரேசனில்விருமாண்டியைக் கொடுத்தார். இருவிதமான உண்மைகளைப் பற்றி விருமாண்டி பேசியது.
Hero, ஐந்து விதமான உண்மைகளைப் பற்றிப் பேசுகிறது. ஒரு வீரனுக்கும் மன்னனுக்கும் நடக்கும் உரையாடல் தான் கதைக்களம். ‘நடந்தது என்ன?’என்று இருவரும் மாறி, மாறிப் பேசிக்கொள்கிறார்கள். பொய்யும், பொய் கலந்த உண்மையும், உண்மையுமாக உரையாடல் நகர்கிறது. ஒவ்வொன்றும் ஒவ்வொரு கலரில் நம் கண்முன்னே
காட்சிகளாக விரிகின்றன. எனவே இயக்குநர் Zhang Yimou-ம் ஒளிப்பதிவாளர் Christopher Doyle-ம் இணைந்து ஐந்து விதமான கலர் எபிசோட்களில் படத்தை எடுத்தார்கள்.
எத்தனை முறை பார்த்தாலும் ரசிக்க வைக்கும் காட்சியமைப்புகள், அருமையான மார்ஷியல் ஆர்ட்ஸ் சண்டைக்காட்சிகள், ஜெட்லீ, ஏரி-பாலைவனம் என விரியும் கதைக்களம் என படம் வெகுஜன ரசனைக்கும் நல்ல தீனி போடுகிறது. ஒளிப்பதிவு, லைட்டிங் & ஆர்ட் டைரக்சன் எப்படி ஒருங்கிணைந்து இருக்க வேண்டும் என்பதற்கு இப்படம், ஒரு பாடம்!
கிளைமாக்ஸில் படம் சொல்லும் செய்தி, இந்தியாவுக்கும் பொருந்துவது ஆச்சரியம்!

--------------
தியேட்டருக்கு மக்கள் வருவதில்லை என்று ஒரு பக்கம் புலம்பல் இருந்தாலும், நல்ல படங்கள் வந்தால் மக்கள் தியேட்டருக்கு வரவே செய்கிறார்கள். அதற்கு சமீபத்திய உதாரணம்...நானும் ரவுடி தான்.
இந்தியாவில் புதன்கிழமை படம் வெளியானது. குவைத்தில் ரிலீஸ் இல்லை. வியாழன் இரவு திருட்டி சிடி நெட்டில் வந்துவிட்டது. பிறகு, வெள்ளிக்கிழமை குவைத்தில் படம் ரிலீஸ் ஆகிவிட்டது.
நெட் புக்கிங் ஆரம்பித்த கொஞ்சநேரத்திலேயே டிக்கெட்கள் காலி. நண்பர்கள் இருவரது குடும்பங்களும் என் வீட்டிலும் தியேட்டரில்தான் அதைப் பார்க்கவேண்டும் என்று அடம்!
நேற்றி இரவுக்காட்சி போனோம். ஆடியன்ஸை சந்தோசப்படுத்துவது ஒன்றையே குறிக்கோளாகக்கொண்டு எடுத்திருக்கிறார்கள். அப்பா சாவு, அம்மா சாவு, காது கேளாமை என சோக வயலின் வாசிக்க பல வாய்ப்புகள் இருந்தும், அசால்ட்டாக காமெடி செய்திருக்கிறார்கள். கொடூர வில்லன் கேரக்டர் காமெடி செய்வதையே ஏற்றுக்கொள்கிறோம் எனும் அளவிற்கு நம்மை ரிலாக்ஸ் மூடுக்கு படம் கொண்டுவந்துவிடுகிறது.
விஜய் சேதுபதி படங்களில் அவரைவிட நன்றாக யாரும் இதுவரை நடித்ததில்லை. இதில் நயந்தாரா அவரையே மிஞ்சிவிடுகிறார்.
அப்புறம் விஜய் சேதுபதி ஏன் இதில் நடித்தார் என்று சிலர் கேட்டிருந்தார்கள். வணிக வெற்றியும் ஒரு நடிகருக்கு அவசியம். சப்பாணி கமல் தான் சகலகலாவல்லவன் ஆனார். சமீபத்தில் சிவகார்த்திகேயனிடம்விஜய் சேதுபதி உங்களுக்கு போட்டியா?’ என்று ஒரு கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அவர் சொன்ன பதில் : ‘அவர் ஆரஞ்சுமிட்டாய் மாதிரி கலைப்படம் அல்லவா கொடுக்கிறார். கமர்சியல் ஹிட் கொடுக்கட்டும், பிறகு பார்க்கலாம்!’
கமர்சியல் ஹிட் கொடுக்காமல் இருந்தால், அது தான் நிலைமை!
---------
என்ன நோக்கத்துடன் பெரும்பாலான குறும்படங்கள் எடுக்கப்படுகின்றன?
1. கற்றுக்கொள்வதற்கு!
2. கற்றுத்தேர்ந்து, ஒரு நல்ல குறும்படம் கொடுப்பதற்கு.
3. அதன் மூலமாக, சினிமா வாய்ப்புகளைப் பெறுவதற்கு.

உண்மையிலேயே நம் மக்கள் அக்கறையுடனும் கடும் உழைப்புடனும் குறும்படங்களை எடுக்கிறார்கள். குறும்படமே கற்றுக்கொள்ளத்தான் என்பதால், தரம் பற்றியும் பெரிய பிரச்சினையில்லை. 'நாலஞ்சு ஷார்ட் ஃபிலிம் எடுக்கிறோம். கத்துக்கறோம். குறைகளை எல்லாம் சரிபண்றோம். அடுத்து, ஸ்ட் ரெய்ட்டா சினிமா தான்' என்று தெளிவான திட்டத்துடன் ஆரம்பிக்கிறார்கள். முதல் படம் எடுத்து முடிக்கும்வரை எல்லாம் சரியாகத்தான் போகிறது.
பிரச்சினை, குறும்படத்தின் விமர்சனத்தை எதிர்கொள்வதில் தான் ஆரம்பிக்கிறது. 90% பேருக்கு நெகடிவ் விமர்சனங்களை எப்படி எடுத்துக்கொள்வது/எதிர்கொள்வது என்றே தெரியவில்லை. முதல்கட்ட குறும்படங்களின் நோக்கமே, 'நமக்கு என்ன தெரிகிறது? எங்கே தப்பு செய்கிறோம்?' என்று தெரிந்துகொள்வது தான். நம்முடைய படைப்பில் இருக்கும் எல்லாத் தவறும் நமக்குத் தெரியாது. அதை மற்றவர்கள் பார்த்துவிட்டுச் சொல்லட்டும் என்பது தான் அதை பொதுவில் வைக்கும் நோக்கம். அந்த நோக்கம் சரியாக நிறைவேறும்போது, சொதப்பிவிடுகிறார்கள் இந்த 'குழந்தை' படைப்பாளிகள்.

இந்த வாரம் என்ன படம் ரிலீஸ் ஆகியிருக்கிறது என்று எதிர்ப்பார்ப்பது போல், இந்த வாரம் என்ன குறும்படம் ரிலீஸ் என்று யாரும் எதிர்பார்ப்பதில்லை. உண்மையில் நண்பர்களும் சொந்தங்களும் தாண்டி, யாருக்கும் உங்கள் குறும்படங்கள் பற்றித் தெரிவதும் இல்லை. எனவே உங்கள் நெருங்கிய நட்பு வட்டத்தில் இல்லாத ஒருவர், உங்கள் குறும்படத்தைப் பார்க்கிறார் என்பதே பெரிய விஷயம். அடுத்து அவர் தன் பொன்னான நேரத்தைச் செல்வழித்து 'மொக்கைப் படம்..கொன்னுட்டான்' என்று சொல்கிறார் என்றால், அவரை கோவில்கட்டிக் கும்பிட வேண்டும்!
ஒரு குறும்படம் ரிலீஸ் ஆனதும் நமக்கு வருவது, மூன்றுவகையான விமர்சனங்கள் தான்.

1.
நண்பர்களின் 'சூப்பர் மச்சி' விமர்சனம்
2. நெகடிவ் விமர்சனங்கள்
3. காழ்ப்புணர்ச்சி விமர்சனங்கள். (என்ன குறை என்று கேட்டால் சொல்லத்தெரியாது. இத்தகைய நெகடிவ் ஆசாமிகளின் கருத்தை ஒதுக்கித் தள்ளிவிடலாம்.)

குறும்பட விமர்சனங்களிலேயே மோசமானது, சூப்பர் மச்சி விமர்சனம் தான். நண்பரின் நண்பர் ஒருவர் படு திராபையான குறும்படம் எடுத்திருந்தார். ஃபேஸ்புக்கில் என் நண்பர் ஒருவர் அதற்கு 'அருமையான படம்' என்று கமெண்ட் செய்திருந்தார். என் நண்பரிடம் சாட்டில் போய் 'யோவ், அந்த டைரக்டர்(!)கிட்டே பெர்சனலா பேசும்போதாவது உண்மையைச் சொல்வீரா?' என்று கேட்டேன். அதற்கு அவர் சொன்னது, 'நமக்கு எதுக்குய்யா வம்பு? ஏதோ முயற்சி பண்ரான், பாராட்டி வைப்போம்'.
இன்னொரு குறும்படம் பார்த்துவிட்டு தற்கொலை மனநிலைக்கே போய்விட்டேன். குறைந்தது பத்து கெட்டவார்த்தைகளால் இயக்குநரை திட்டிவிட்டு, ஃபேஸ்புக்கை ஓப்பன் செய்தால் அவருக்கு ஒரு கமெண்ட் வந்திருந்தது : 'feeling proud to be your friend'. செத்தாண்டா சேகர் என்று நினைத்துக்கொண்டேன்.
எல்லாருமே காறித்துப்பினால், அடுத்த படத்தையே எடுக்க மாட்டீர்கள் தான். எனவே உங்களை ஊக்குவிக்கும் காரணியாக, நண்பர்களின் சூப்பர் மச்சி கமென்ட் இருக்கட்டும். ஆனால் அது முழுமையான உண்மை அல்ல. அதை உண்மையென்று நம்பிவிட்டீர்கள் என்றால், அங்கேயே தேங்கிப்போய்விடுவீர்கள்.
அடுத்து கிடைப்பது நெகடிவ் விமர்சனங்கள். குறும்படம் எடுப்பதன் முதல் நோக்கமே, நெகடிவ் விமர்சனங்களை வாங்குவது தான். அப்படி எதிர்பார்த்தது கிடைக்கும்போது, படைப்பாளிகளுக்கு கடும் கோபம் வந்துவிடுகிறது. 'இத்தனை பேர் சூப்பர் மச்சின்னு சொல்லும்போது, இவன் என்னமோ அறிவுஜீவி மாதிரிப் பேசுறானே' என்று கடுப்பாகிவிடுகிறார்கள். சிலர் சண்டைக்கே வந்துவிடுகிறார்கள். சென்ற வருடம் ஒரு ஈழத்து நண்பரின் பதிவில் பெரும் சண்டை. அவர் ஒரு மொக்கை குறும்படத்தை நன்றாக இல்லை என்று சொல்லிவிட்டது தான் பிரச்சினை.
நெகடிவ் விமர்சனம் வரும்போது வலிக்கும் தான். அவமானமாகவும் இருக்கும். ஆனால் அதையெல்லாம் எதிர்கொண்டு, அதில் உள்ள நியாயமான விஷயங்களை ஏற்றுக்கொண்டால் தான் அடுத்த கட்டத்திற்கு நகர முடியும். பெரும்பாலானோர் உண்மையான/நெகடிவ் விமர்சனங்களைச் சொல்வதில்லை. எனவே உண்மையைச் சொல்கிற சிலரையும் விரட்டிவிட்டு, என்ன செய்யப் போகிறீர்கள்?

பெரும்பாலான குறும்பட இயக்குநர்களுக்கு விஷுவலாக கதை சொல்வது எப்படி என்றே தெரிவதில்லை. ஐந்து நிமிடங்களுக்கு அசையாத கேமிரா, ரியாக்சன் ஷாட்டே இல்லாத எடிட்டிங் என கூச்சப்படாமல் புரட்சி செய்கிறார்கள். நல்ல கதை(?) கிடைத்தால், ஷூட்டிங் கிளம்பிவிடுகிறார்கள். நல்ல கதை என்பது வேறு, நல்ல குறும்படம் என்பது வேறு.

கற்றுக்கொள்வது என்பது, படிப்பதும் படித்ததை அப்ளை செய்து படமாக்கிப் பார்ப்பதும், அதில் செய்த தவறுகளை விமர்சனங்கள் மூலம் தெரிந்து திருத்திக்கொள்வதும் தான். கற்றுக்கொள்ள படமெடுக்கிறேன் என்று சொல்லிவிட்டு, அதே தவறையே திரும்பத் திரும்ப செய்வது சரியான அணுகுமுறை அல்ல. குறைந்தபட்சம் The Five C's of Cinematography -புக்கையாவது ஒருமுறை வாசிக்கலாம்!
ஷார்ட் ஃபிலிம் எடுத்தவுடனே மணிரத்னம் ரேஞ்சுக்கு ஃபீல் பண்ணாமல், கொஞ்சம் நிலத்தில் கால் ஊன்றி விமர்சனங்களைக் கவனியுங்கள். ஒருவர் த்ரில்லர் படம் எடுத்து அனுப்பியிருந்தார். ‘த்ரில்லருக்கான அம்சங்களே இல்லையேஎன்றேன். அதற்கு அவர் சொன்ன பதில் , ‘தெரியும் பாஸ், த்ரில்லர் எல்லோருக்கும் பிடிக்காது.இப்படி நெகடிவ் விமர்சனம் வரும்ன்னு தெரியும்’. என்னத்தச் சொல்ல!!!
இப்போதெல்லாம் நான் குறும்படங்களுக்கு பொதுவில் விமர்சனம் எழுதுவதில்லை. சினிமாவுக்குக்கூட விமர்சனம் எழுத முடிகிறது. குறும்படங்களுக்கு..அய்யய்யோ! நிலைமை அவ்வளவு மோசமாக இருக்கிறது.
Update: நெகடிவ் விமர்சனங்களை எதிர்கொள்ள சிறந்த வழி, அதற்கு விளக்கம்/பதில் சொல்லாமல்ஓகே பாஸ்என்று பம்மிவிடுவது தான். பிறகு கொஞ்சநாள் கழித்து அதைப் படித்துப்பார்த்தால், அதில் உள்ள நியாயம் புரியலாம்.

-----------
நீண்ட நாட்களாக சொதப்பி வந்த விஜய் சேதுபதி, மீண்டும் பேக் டூ ஃபார்ம் ஆகிவிட்டார் என்று விமர்சனங்கள் தெரிவிக்கின்றன. இந்த வாரம் பார்க்கவேண்டிய பொழுதுபோக்குப் படமாக நானும் ரவுடி தான் ஃபார்ம் ஆகியிருக்கிறது.
விக்னேஷ்வரனுக்கு நயனுடன் லவ் என்றெல்லாம் செய்தி வந்தபோது, படத்தை எப்படி எடுத்து வைத்திருக்கிறாரோ என்று பயமாக இருந்தது. ஆனால் நல்ல ரொமாண்டிக் காமெடியாக கொடுத்து, கலக்கியிருக்கிறார். பெரிய விஷயம் தான்.
ஏறக்குறைய கேரக்டர் ஆர்டிஸ்ட்டாகவே ஆகிக்கொண்டு வந்த விஜய் சேதுபதி, இனியாவது இந்த வெற்றியைத் தொடரட்டும்.
அப்புறம், இங்கே நானும் ரவுடி தான் ரிலீஸ் இல்லை!
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

0 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.