Thursday, March 17, 2016

ஃபேஸ்புக்கில் யோசிச்சேன்....11



உங்கள் திறமையைக் காசாக்க முடியாதென்றால், அது என்ன எழவு திறமையாக இருந்தாலும் வீண் தான்!
---------
கேள்வி : சமீபத்தில் வந்த ஒரு படத்தில் இப்படி ஒரு டயலாக் வருகிறதே, இது பற்றி உங்கள் கருத்து என்ன? :
//
பணம் சம்பாதிக்கத் தெரிஞ்சவன், பணம் சம்பாதிப்பது எப்படின்னு எழுதிக்கிட்டு இருக்க மாட்டான். அதே போல, திரைக்கதை எழுதத் தெரிஞ்சவன்திரைக்கதை எழுதுவது எப்படின்னு எழுதிக்கிட்டு இருக்க மாட்டான். ஸ்ட்ரெய்ட்டா, திரைக்கதையே எழுதிடுவான்//
பதில்: முதலில் ஒரு விஷயத்தைப் புரிந்துகொள்ளுங்கள். ஒருவன் திரைக்கதை எழுதிவிட்டான் என்பதாலேயே, அவனுக்கு திரைக்கதை எழுதத் தெரிந்துவிட்டது என்று அர்த்தம் அல்ல...உதாரணம், அந்தப் படத்தின் ஸ்க்ரிப்ட் தான்!!
அதே போல், ஒருவன் இன்னும் திரைக்கதை எழுதவில்லை அல்லது அது படமாகவில்லை என்பதாலேயே, அவனுக்கு திரைக்கதை எழுதத் தெரியாது என்று அர்த்தம் அல்ல.
'பணம் சம்பாதிப்பது எப்படி?’என்று பல புத்தகங்களையும் செமினார்களையும் கொடுத்த Robert Kiyosaki பிச்சைக்காரன் அல்ல, அவர் ஒரு மல்டி மில்லியனர்.
அவருடன் இணைந்து ‘Why We Want You to Be Rich’ என்ற புத்தகத்தை எழுதிய Donald Trump, அமெரிக்காவின் பெரும் பணக்காரர்களில் ஒருவர். இன்றைக்கு அடுத்த அமெரிக்க ஜனாதிபதியாக தேர்தலில் போட்டிபோடுபவர். எனவே சம்பாதிக்கத் தெரிந்தவன் புக் எழுத மாட்டான் என்பதே முட்டாள்தனமான உதாரணம்.
திரைக்கதை பற்றி புத்தகம் எழுதிய Blake Snyder-ம் சுஜாதாவும் திரைக்கதை எழுதத் தெரியாத தற்குறிகள் அல்ல, இருவருமே படங்களுக்கு திரைக்கதை எழுதிய அனுபவம் உள்ளவர்கள். எனவே எழுதத் தெரிந்தவன், ‘எப்படி எழுதுவது?’என்று சொல்லித்தர மாட்டான் என்று சொல்வது பொய். பின்னர் ஏன் இப்படி ஒரு வசனம்? இரண்டு காரணங்களை நான் யூகிக்கிறேன்.
1. அது ஒரு மொக்கைப்படம். ஒரு கொரியப்படத்தை உருவ முயற்சித்து, அதையே இன்னொருவர் வெற்றிகரமாக உருவி முந்திக்கொண்டதால், சிக்கிக்கொண்ட படம். எனவே ஆன்லைன் விமர்சகர்களை சீண்டினால், ஏதாவது எதிர்த்து எழுதுவார்கள், பப்ளிசிட்டி கிடைக்குமே எனும் நப்பாசை.
2. குரு-அடிமை மனோபாவம்.
முன்பெல்லாம் ஏதாவது கற்றுக்கொள்ள வேண்டுமென்றால், விஷயம் தெரிந்தவரிடம் அடிமையாகக் கிடக்க வேண்டும். அவர் சொல்லும் வேலைகளை எல்லாம் (கால் பிடித்துவிடுவது உட்பட) செய்ய வேண்டும். எஞ்சினியரிங் முதல் சினிமா வரை இது தான் நடைமுறை. ஆனால் இண்டர்நெட், இந்த மனோபாவத்துக்கு சாவுமணியாக வந்திறங்கியது. ஒரு ASTM மெட்டீரியலுக்கு இணையான வேறொரு மெட்டீரியல் என்ன என்று தெரிய வேண்டுமென்றால், ஒரு ட்ரெய்னீ தன் சீனியரிடம் திட்டு வாங்கித்தான் தெரிந்துகொள்ள முடியும். இன்று கூகுளில் கேட்டால், பல நூறு பேர் பதில்களை கொட்டி வைத்திருக்கிறார்கள். இன்றைக்கு எங்கள் டிசைன் ஆபீஸ்களில் சீனியர்களை நம்பி யாரும் இல்லை.
சினிமாவிலும் இதே கதை தான். சென்றமுறை சென்னையில் ஒரு அசிஸ்டெண்ட் டைரக்டரைச் சந்தித்தேன். ஒரு டைரக்டரிடம் (பெயர் வேண்டாம்) ஏழு வருடங்களாக அசிஸ்டெண்ட்டாகப் பணிபுரிகிறார். டைட்டில் கிரெடிட்கூட உண்டு. ஆனால் அந்த டைரக்டர் இதுவரை ஒருவிஷயம்கூட இவருக்கு சொல்லித்தந்தது இல்லை. கேட்டால், ’நான் செய்றதை உத்துக்கவனிச்சு கத்துக்கோப்பாஎன்பது தான் பதில். செய்வதைக் கவனிக்கலாம், சிந்தனையை எப்படிக் கவனிப்பது? கருந்தேள் மற்றும் நான் எழுதும் தொடர் தான் பல விஷயங்களை அறிமுகம் செய்ததாக நன்றி தெரிவித்தார்.
முன்பெல்லாம் 15 வருடங்கள்வரை அசிஸ்டெண்ட்டாகவே காலத்தை பலர் வீணடித்ததற்குக் காரணம், அந்த குரு-அடிமை மனோபாவம் தான். ஆனால் இப்போது நிலைமை வேறு. டிஜிட்டல் கேமிரா வந்தபின் சினிமா வெகுஜன படைப்பாளிகளின் கையில் வந்துவிட்டது. யூ-டியூப்பிலும் கூகுளிலும் திரைக்கதை முதல் லைட்டிங் வரை அனைத்தையும் கற்றுக்கொடுக்க, பலரும் தயாராக இருக்கிறார்கள். நல்ல இண்டர்நெட் கனெக்சன், குருவின் இடத்தைப் பிடித்துவிட்டது.
நான் பலமுறை சொல்லிவரும் விஷயம், நம் தமிழ் சினிமாவில் அற்புதமான கலைஞர்கள் இருக்கிறார்கள். ஆனால் நல்ல ஆசிரியர்கள் இல்லை. வெளிப்படையாக ஒரு ஷாட் பற்றியோ, ஸ்க்ரிப்ட் பற்றியோஇப்படித்தான் செய்தேன்என்று பேட்டி கொடுக்கும் ஆட்கள் இங்கே யாரும் இல்லை. ‘அவர் கோபக்காரர், நடிகையுடன் காதல்என்பதைத் தாண்டி, ஒரு படைப்பாளியின் டெக்னிகல் அறிவு பற்றி ஊடகங்களும் கேட்டு எழுதுவதில்லை. எனவே தான் நாங்கள் எழுதவேண்டிய கட்டாயம் வந்தது. சினிமா அறிவை ஏதோ சித்தர் ரகசியம் போல் பேணிக்காத்த சென்ற தலைமுறை மூளைகளுக்கு, இது அதிர்ச்சியாகவே இருக்கும்.
பொறியியல் துறையில் இவ்வகை அதிர்ச்சியை நாங்கள் பாஸ்களுக்கு அடிக்கடி கொடுத்துக்கொண்டே இருக்கிறோம். எனவே அதே போன்ற அதிர்ச்சி தரும் கடுப்பில், இந்த மொக்கைப்படக் குழுவினரும் எங்கள்மேல் பாய்வதை சந்தோசத்துடன் ரசிக்கிறேன்.
ஓல்டு பாய்ஸ், உங்கள் காலம் முடிந்தது. நான்கு வேதங்களில் ஆரம்பித்து, இங்கே இனி எதுவும் ரகசியம் அல்ல. திறமையும் ஆர்வமும் உள்ளவன் ஆன்லைனில் கற்றுக்கொண்டு மேலே வந்தே தீருவான். நீங்கள் புலம்பியபடியே மொக்கைப்படம் கொடுக்கும்போது, அவனது படமே உங்களுக்கு ஒரு பாடமாக ஒருநாள் ஆகும்!
------------
கையில் நோக்கியா 1110 இருந்தால்,
நீ தான் அதற்கு எஜமானன்.
கையில் ஸ்மார்ட் ஃபோன் இருந்தால்
அது தான் உனக்கு எஜமானன்.
(எம்புட்டுப் பத்திரமா பார்க்க வேண்டியிருக்கு!!)
-----------------------------------------
'புலி படம் ஹாலிவுட் படம் மாதிரி இருக்குன்னு தலைவர் சொன்னப்போ, ரூம் போட்டு சிரிச்சீங்களே! இப்போ என்னய்யா சொல்றீங்க? :
PULI movie copied scenes with proof :
https://www.youtube.com/watch?v=H-u-qmXVjxA
ஆனாலும் தலைவருக்கு இம்புட்டுக் குசும்பு ஆகாதுய்யா!

------------------------------------------
நிர்வாண உண்மை:
.பி.யிலோ பீகாரிலோ ஒரு தலித்துக்கு பிரச்சினை என்றால், எவ்வளவு ஆவேசமாக பதிவு வருகிறது!
ஆனால்....சில நாட்கள் முன்பு, ஒரு தலித்தை தமிழ்நாட்டிலேயே சிலர் தாக்கிவிட்டதாக செய்தி வந்தது. அப்போது இந்த நடுநிலைநக்கிகள் வாய் மூடிக்கொண்டார்கள், காரணம், தாக்கியது சிறுபான்மை மதத்தினர்..அதாவது சொந்தக்காரன்!
வடமாநிலத்தில் கலப்பு திருமணஜோடி கௌரவக்கொலை செய்யப்பட்டால், பார்த்தீர்களா ஜாதிவெறியை என்று ஓலம்!
இதே தமிழ்நாட்டில் கலப்புமணம் செய்துகொண்ட பெண்ணை, ஏற்றுக்கொண்டதாகச் சொல்லி வரவழைத்து வெட்டிக்கொன்றது ஒரு கும்பல். ஜூ.வி.யில்கூட கட்டுரை வந்தது. அந்த கௌரவக் கொலை பற்றி ஒரு வார்த்தை எழுதுவதில்லை..காரணம், கொன்றது சிறுபான்மை..சொந்தக்காரன்!
சொந்த ஜாதிக்காரனோ அல்லது சொந்த மதத்துக்கரனோ செய்தாலும், குற்றம் குற்றமே என்று உரைப்பது தான் நடுநிலைமை. ஆனால் இவர்கள் செய்வது, மறைமுக மதப்பிரச்சாரம்.
பல நடுநிலைநக்கிகள் நிர்வாணமாக மாட்டிக்கொண்ட நாள் நேற்று!
இன்னும் எத்தனை காலம் தான் ஏமாற்றுவார், நாட்டிலே!

---------------------
இப்போதெல்லாம் ஒரு படத்தை நமக்கு காட்டும் முன் தேசிய விருது, சர்வதேச திரைப்பட விழாக்களில் விருது வாங்கிவிட்டுத்தான் திரைக்குக் கொண்டுவருகிறார்கள். நல்ல படங்களுக்கு இதுவொரு நல்ல மார்க்கெட்டிங் உத்தி தான். ஆனால் இந்த விருதுகளையெல்லாம் பார்த்துவிட்டு, நம் விமர்சகர்கள் பம்மிவிடுகிறார்கள் என்றே நினைக்கிறேன். இந்த வருடம் ஆஸ்காருக்கு அனுப்பட்ட கோர்ட் என்ற 1980 காலத்திய சினிமாவுக்கு வந்த விமர்சனங்கள் ஒரு உதாரணம். இந்திய நீதிமன்றங்களின் அவலத்தைச் சாடும் கதை என்பதைத் தவிர்த்து, திரைமொழி ரீதியில் மிகவும் பின் தங்கிய படம் அது. நல்ல கதை + ஆஸ்கார் பரிந்துரை என்றதும் எல்லா மீடியாக்களும் படத்தைக் கொண்டாடித் தள்ளிவிட்டன. இந்தியாவை அவமானப்படுத்துகிறது என்பதைத் தவிர்த்து, ஆஸ்கார் வாங்க அங்கே ஒன்றுமில்லை. அதவிட நம் பொன்முட்டை(!) 100% பெட்டர்.

குற்றம் கடிதல் படமும் விருதுக் கவசங்களுடன் களமிறங்கி இருக்கிறது. உண்மையில், தமிழில் வந்திருக்கும் முக்கியமான படங்களில் குற்றம் கடிதலும் ஒன்று. சைக்காலஜிக்கல் த்ரில்லர் தமிழில் வருவதில்லை என்று என் திரைக்கதை தொடரில் வருத்தப்பட்டிருந்தேன். அதைப் போக்கும்விதத்தில் வந்திருக்கும் படம் இது. மெர்லினின் ஆழ்மன நம்பிக்கைகளையும், அது கொடுக்கும் மன அழுத்தத்தையும், அதனால் சிதையத் திடங்கும் மனநிலையையும் காட்சிகள் & குறியீடுகளின் மூலமாகவே அற்புதமாக சித்தரித்திருந்தார் இயக்குநர் பிரம்மா.

ஆனால் இதை உலக சினிமா என்று கொண்டாட முடியாமல் இரண்டு விஷயங்கள் தடுத்துவிட்டன:

1. செக்ஸ் எஜுகேசன் பற்றி படம் முழுக்க வரும் பிரச்சாரம். ஆட்டோ டிரைவர், ரிப்போர்ட்டர், டீச்சர்ஸ் என போகிற வருகிற ஆட்கள் எல்லாம் திரும்பத் திரும்ப அதையே ‘வலி’யுறுத்திக் கொல்கிறார்கள். போனவாரம் தான் 49-ஓ எனும் நல்ல நாடகம் பார்த்தேன். அதில் இருந்த பிரச்சாரத்தொனிக்கு சற்றும் குறையாதது இந்த செக்ஸ் எஜுகேசன் பிரச்சாரம். மெர்லின் போர்சனில் நல்ல திரைமொழியுடன் இயக்குயவர், ஏன் இப்படிச் செய்தார் என்று புரியவில்லை.

காக்கா முட்டையில் இலவச டிவிக்கு எதிராக, டாஸ்மாக்கிற்கு எதிராக, முதலாளித்துவத்திற்கு எதிராக பல விஷயங்கள் சொல்லப்பட்டிருக்கும்; ஆனால் எவையுமே வசனங்களால் அல்ல. காக்கா முட்டையில் கமர்சியல் தன்மை அதிகம் என்றாலும், சினிமாவை விஷுவல் மீடியமாக மட்டுமே உபயோகித்த படம் அது. ’பாதி’ குற்றம் கடிதல், நடிகர்களின் வாயை அதிகம் நம்பிவிட்டது.

2. மெர்லின் மயங்கிவிழும் காட்சியிலேயே படம் முடிந்துவிட்டது. அங்கே அவர் இறந்திருந்தால், அதுவொரு உணர்வுப்பூர்வமான காவியமாக ஆகியிருக்கும் (நெஞ்சில் ஓர் ஆலயம் போல்!). ஆனால் படம் முடிந்தபின்னும் ஒரு கிளைமாக்ஸ் காட்சி. ஒரு பிரஸ்மீட். மொக்கையான கேள்விகளும், வசனங்களுமாக. திருப்தியாக விருந்து பரிமாறிவிட்டு, ‘மறக்காமல் மொய் செஞ்சுட்டுப் போங்க’ என்று சொன்னது போல் ஆகிவிட்டது.

இருப்பினும், குற்றம் கடிதல் கொண்டாடப்பட வேண்டிய சினிமா தான். ஏறக்குறைய எல்லாருமே புதுமுகங்கள். ஆனால் நடிப்பில் அனைவரும் பின்னி இருக்கிறார்கள். சின்னஞ்சிறு கிளியே பாடலும் ஒளிப்பதிவும் எடிட்டிங்கும் சேர்ந்து, மனதை என்னவோ செய்துவிட்டது. தாயும் ஆசிரியையும் சந்திக்கும் காட்சி, பல நாட்களுக்கு நினைவில் இருந்து அழுத்தும்!

கண்டிப்பாக பார்க்க வேண்டிய நல்ல படம்!
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

0 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.