Thursday, March 31, 2011

ஜெயமோகனின் இன்றைய காந்தி - நூல் விமர்சனம்

’ஒரு தலைவர் பெரும்பான்மையான மக்களால் புகழப்படுகிறார் என்றால், அவர் ஒரு அயோக்கியனாகத் தான் இருக்க வேண்டும்’ என்று எண்ணும் மனநிலைக்கு நம்மை தற்காலத் தலைவர்கள் கொண்டு சென்றுள்ளனர். இப்படி ஒரு துரதிர்ஷ்டமான நிலை, உலகில் வேறெங்கும் நிலவுகிறதா எனத் தெரியவில்லை. 

அப்படி நம்மால் மிகத் தவறாகப் பார்க்கப்படும் நம் தேசத் தந்தை மகாத்மா காந்தியைப் பற்றி, தெளிவான பார்வையைக் கொடுக்கும் புத்தகமே ஜெயமோகனின் ‘இன்றைய காந்தி’.

நான் எட்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும்போது, பழுப்பேறிய கிழிந்த ’சத்திய சோதனை’ புத்தகம் எனக்குக் கிடைத்தது.  அதில் இருந்த சம்பவங்களும் கருத்துக்களும் நான் வளர்ந்த சூழ்நிலைக்கு முற்றிலும் புதிதாக இருந்தது. சத்தியத்தைப் பற்றியும் அஹிம்சையைப் பற்றியும் ஆழமான புரிதலைக் கொடுத்தது அந்தப் புத்தகம். அதன்பிறகான எனது அத்தனை சிந்தனைகளும் காந்தியத்தின் அடிப்படையில் கட்டமைக்கப் பட்டவையே.

நான் காந்தியின் ரசிகன் ஆனேன். அவர் மேல் மிகப்பெரிய மரியாதையை அடைந்தேன். ஆனால் அதை என் பள்ளி நண்பர்களிடமும் கல்லூரி நண்பர்களிடமும் வெளிப்படுத்தியபோது, எனக்குக் கிடைத்தது கேலியும் கிண்டலுமே. காந்தியைப் பற்றி பலவாறான அவதூறுகள் சகஜமாக அவர்களால் பேசப்பட்டன. 

காந்தியைப் பற்றி பழித்துப் பேசுபவர்களே புத்திசாலிகளாகவும், காந்தியவாதிகள் அசமந்தமாகவும் இச்சமூகத்தால் பார்க்கப்படுவதை உணர்ந்தேன். எத்தனை எத்தனை அவதூறுகள்..

காந்தி ஒரு மோசமான அப்பா..அவர் பிள்ளைகள் எதுவும் உருப்படவில்லை..

தாழ்த்தப்பட்டோரின் விரோதி காந்தி..

வர்ணாசிரமத்தை தூக்கிப் பிடித்தவர் காந்தி..

முஸ்லிம்களின் விரோதி காந்தி..

இந்துக்களின் துரோகி..

ஏமாற்றுக்காரர்..

முஸ்லிகளுக்கு அதிக சலுகை காட்டி, போலி மதச்சார்பின்மையை அன்றே ஆரம்பித்து வைத்தவர்..

பகத்சிங் தூக்கிலப்படுவதை தடுக்காதவர்..

நேதாஜியின் மறைவுக்கு காரணமானவர்..

இவ்வாறு பல அவதூறுகள்..விவாதித்து, விவாதித்து அலுத்துப்போன விஷயங்கள்..அதன்பிறகு நான் காந்தியைப் பற்றி பேசுவதை நிறுத்தி விட்டேன்..

சென்ற வருடம் தன் இணைய தளத்தில் ஜெயமோகன் காந்தி பற்றிப் பேச ஆரம்பித்தார். வலுவான ஆதாரங்களுடன் காந்தியின் தரப்பை முன் வைத்தார். நீண்ட விவாதமாக சென்றது அது. அந்த விவாதங்களின் தொகுப்பே ‘இன்றைய காந்தி ‘என்ற நூல்.

காந்தியைப் பற்றி பலவித அவதூறுகள் எப்படித் திட்டமிட்டு பரப்பப்படுகின்றன, அவை எந்த அளவிற்கு பொய்யானவை என பொட்டில் அடித்தாற்போன்று எழுதியுள்ளார். நான் இழந்து விட்ட காந்தியை மீண்டும் நமக்கு மீட்டுத் தந்தார் ஜெயமோகன். மானுடம் தன்னை முன்னேற்றிக் கொள்வதற்கான வழி காந்தியமே..அதுவே இனி உலகை வழி நடத்தும் என அறைகூவல் விடுகிறார் ஜெயமோகன்.

’காந்தியின் மகனே சொன்னார், அவர் ஒரு மோசமான தந்தை என்று’. -இதுவே காந்தியைப் பற்றிய முக்கிய அவதூறு. காந்தியின் மகன் ஹரிலால் அப்படித் தான் சொன்னார், மேடை மேடையாகப் பேசினார். மதுவுக்கும் பெண்ணாசைக்கும் அடிமையான ஹரிலால் தொடர்ந்து காந்தி சாகும் வரை காந்தியைத் திட்டி வந்தார். அதைப்பற்றி விலாவாரியாகப் பேசுபவர்கள், காந்தியின் மற்ற மூன்று பிள்ளைகளைப் பற்றி எதுவும் சொல்வதில்லை.

அவர்கள் காந்தியை மதித்ததைப் பற்றியோ, சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டதைப் பற்றியோ, காந்தியைப் பற்றி அவர்கள் சொன்ன கருத்துகளைப் பற்றியோ யாரும் ஜாக்கிரதையாக எதுவும் சொல்வதில்லை. ஒரு பிள்ளை(ஹரிலால்)-யின் கருத்தைச் சொல்பவர்கள், மற்ற மூன்று பிள்ளைகள் காந்தியைப் பற்றிக் கொண்டிருந்த மதிப்பைச் சொல்ல மறுப்பதேன்? அது நமக்கு ஒத்து வராத கருத்து என்பதாலா?

’காந்தியின் மீதான தாக்குதல், உண்மையில் நமது தேசத்தின் மீதான தாக்குதல். காந்தியின் மீதான அவதூறுகளுக்குப் பின்னால் ஏதோவொரு அன்னிய நாட்டின் ஆதரவு உண்டு’ என்பதைத் திட்டவட்டமாக நிறுவுகிறது இந்நூல்.

ஒரு நண்பர் என்னிடம் காரசாரமாக ‘தன் பிள்ளைகளுக்கே நல்ல தந்தையாக இல்லாதவரை எப்படி மகாத்மாவாக, தேசத் தந்தையாக ஏற்றுக் கொள்ள முடியும்?’ என காந்தியப் பற்றி எதுவுமே படிக்காமல் வாதிட்டார். நான் அவரிடம் கீழ்க்கண்டவாறு சொன்னேன்: ‘ஒரு நல்ல தந்தையாக இருக்கும் தலைவரைத் தான் மகாத்மாவாக ஏற்பீர்கள் என்றால், கலைஞர் கருணாநிதியைத் தான் மகாத்மா என்று சொல்ல வேண்டும்’.

ஒரு சினிமாப் படத்தைப் பற்றிக் கருத்துச் சொல்லக்கூட, அந்தப் படத்தைப் பார்த்திருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கின்றோம். ஆனால் நம் தேசத் தலைவர்கள் பற்றிப் பேச, அவர்களைப் பற்றி எதுவும் படித்திருக்கத் தேவையில்லை, வம்புப் பேச்சே போதும் என்று நாம் இருப்பது சரி தானா?

காந்தியைப் பற்றி அளவிட நமக்குத் தெரியாத ஆராய்ச்சித் தகவல்கள் தேவையில்லை. நமக்குத் தெரிந்த இரு தகவல்களே போதும்.

1. உலக வரலாற்றில், ஒரு சுதந்திரப்போராட்டத்தை தலைமையேற்று நடத்திச் சென்றவர் யாரோ, அவர் தான் அந்த நாடு விடுதலை அடைந்ததும் அதிபராக ஆகி, பதவியை அனுபவிப்பர். காந்திக்கு அம்மாதிரியான எண்ணங்கள் சிறிதும் இருந்ததில்லை.

2.’காந்திக் கணக்கு’ என்று செல்லமாக அழைக்கப்பட்ட சுதந்திரப்போராட்டத்தின் மொத்த நிதியும் காந்தியின் கட்டுப்பாட்டிலேயே இருந்தன. அதிலிருந்து ஒரு பைசாவைக் கூட தனக்கோ, தன் குடும்பத்தினருக்கோ அவர் எடுத்துக் கொள்ளவில்லை.

நம் தேசத்தந்தையைப் பற்றிப் புரிந்துகொள்ள நேரமும் மனமும் உள்ள இந்தியர்கள் அவசியம் படிக்க வேண்டிய புத்தகம் ‘இன்றைய காந்தி’. (இது கட்டுரை வடிவில் ஜெயமோகனின் இணையதளத்திலும் கிடைக்கிறது.)

நூல் விபரம்:

நூல் : இன்றைய காந்தி
ஆசிரியர் : ஜெயமோகன்
பதிப்பகம் : தமிழினி பதிப்பகம்
ஆன்லைனில் வாங்க: http://www.udumalai.com/?prd=Indraya%20Gandhi&page=products&id=6320

மேலும் வாசிக்க... "ஜெயமோகனின் இன்றைய காந்தி - நூல் விமர்சனம்"
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

52 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.

Tuesday, March 29, 2011

ஏ.ஆர்.ரஹ்மானை மக்கள் மறந்துவிட்டார்களா?


பெரிய்ய டிஸ்கி : அண்ணே-அக்கா, முதல்லயே சொல்லிடறேன், எனக்கு இசை பற்றி எதுவும் தெரியாது. ஸ்ரீவித்யா ஆண்ட்டி ‘ஏழு ஸ்வரங்களில்’னு பாடுனதால ஏழு ஸ்வரம்னு ஏதோ இருக்குன்னு தெரியும். பூனைக்கண் சிவரஞ்சனியை எனக்குப் பிடிக்கும்ங்கிறதால சிவரஞ்சனி-ன்னு ஒரு ராகம் இருக்குன்னும் தெரியும். உச்சஸ்தாயி-ன்னா ஏதோ கெட்ட வார்த்தைன்னே ரொம்ப நாளா நினைச்சுக்கிட்டிருந்தேன். ---இந்தக் கர்மத்தை எல்லாம் எதுக்குச் சொல்றேன்னா பின்னூட்டத்துல ‘அந்த ராகம் தெரியுமா..இந்த ஸ்வரம் தெரியுமா’ன்னு கேட்டு என்னை நீங்க மிரட்டக் கூடாதுன்னு தான்!
தம்பீ..இது கொஞ்சம்கூட நியாயமில்லை!
கொஞ்ச நாள் முன்னே எங்க தாத்தா ஒருத்தர் டிக்கெட் வாங்கினதை ஏற்கனவே சொல்லியிருக்கேன்..அவர் இறந்த மறுநாள், அவர் அஸ்தியை கரைக்க திர்நவேலி தாமிரபரணிக்கு போறதா முடிவாச்சு. நிறைய ஆள் இருந்ததால ஒரு வேன் பிடிச்சுப் போவோம்னு முடிவாச்சு. கிளம்புனப்ப, அந்தத் துக்கத்துலயும் ஏ.ஆர்.ரஹ்மான் ஹிட்ஸ் சி.டியை எடுத்துக்கிட்டேன்.

வண்டி கிளம்புனதும் டிரைவர்கிட்ட சி.டி.ஐக் கொடுத்தேன். கவரைப் பார்த்துட்டு, என்னை ஏற இறங்க பார்த்தாரு. பிறகு ஒன்னும் சொல்ல முடியாம சி.டி.ஐப் போட்டாரு. ஏ.ஆர்.ஹிட்ஸ் ஒலிக்க ஆரம்பித்தது. ‘கண்டுகொண்டேன்..கண்டுகொண்டேன்’ ல இருந்து என்னோட ஃபேவரிட் பாடலான ‘எங்கே எனது கவிதை ‘ஓடிக்கிட்டிருந்தது. திடீர்னு சித்தப்பு டிரைவரைக் கூப்பிட்டாரு. ‘ஏம்பா..என்னப்பா பாட்டு போடறே..நல்ல பாட்டாப் போடுப்பா’ன்னாரு. எனக்கு பகீர்னு ஆயிடுச்சு. 'நல்ல பாட்டா..அப்போ இது’ன்னு குழம்பிப் போயிட்டேன். டிரைவருக்கு சந்தோஷம். உடனே வேற சி.டி.யைப் போட்டாரு. ‘மெதுவாத் தந்தி அடித்தானே..என் மச்சானே’ன்னு பாட்டு ஆரம்பிச்சதும் நொந்து போயிட்டேன். சித்தப்பும் தந்தை இழந்த சோகத்தை தந்தியடிச்ச படியே தீர்த்துக் கிட்டாரு.

அதுக்கு சில மாசம் முன்னாடி, தமிழ்நாட்டைச் சுத்தி சுத்தி வந்துட்டிருந்தேன். சென்னை-கும்பகோணம்-மயிலாடுதுறை-மதுரை-திருநெல்வேலி-ராஜபாளையம் னு பெரிய ரவுண்டு. பெரும்பாலும் தனியா..பஸ் பயணம். அங்கே என்ன பாட்டு போட்டாங்கன்னு யோசிச்சுப் பார்த்தா, பெரும்பாலும் இளையராஜா ஹிட்ஸ்.இல்லைன்னா தேவா-சந்திரபோஸ். இத்தனைக்கும் அப்போதான் எந்திரன் வந்து ஓடிக்கிட்டிருந்தது.
ஒரு பேரு வந்திடக் கூடாதே!
பொதுவாக வெஸ்டர்ன் மியூசிக் பாடல்கள் இரைச்சலாகத் தான் இருக்கும். வித்யாசாகர், யுவன் சங்கர் ராஜா போன்றோரின் பாடல்களில் இதை உணரலாம். நிறைய பிண்ணனி சத்தங்களோடுதான் அவை இருக்கும். ஆனால் வெஸ்டர் பாடல்களை இரைச்சல் இல்லாமல் கொடுத்தவர் ஏ.ஆர்.ரஹ்மான். (அவர் ஒலிச்சேர்க்கை செய்யாத பாய்ஸ் பாடல்கள் விதிவிலக்கு!)..உதாரணமாக காதல் தேசம் படத்தில் வந்த ’க..க..கல்லூரிச்சாலை’ பாடலைக் கேட்டுப்பாருங்கள். இரைச்சல் இல்லாமல் தெளிவாக இருக்கும். இத்தனைக்கும் ரொம்ப ஃபாஸ்ட்டான பாடல் அது. 

’ஆகாய வெண்ணிலாவே’ போன்ற இளையராஜா பாடல்களின் பிண்ணனியில் முழுக்க ஒரே ஒரு இசை (மியூசிக் க்ளிப்) வரும். பெரும்பாலான மெலோடி பாடல்களுக்கு அப்படித்தான். ஆனால் ஏ.ஆர்.ரஹ்மான் வெஸ்டர்ன் பாடல்களுக்கும் அதையே செய்தார். அதனாலோ என்னவோ இசை தெளிவாக இருக்கும்.

ஆனால், இதுக்கு முன்ன பம்பாய், முத்து போன்ற படங்களின் பாடல்கள் வெளியானப்போ, எல்லா இடத்திலும் ஏ.ஆர்.ரஹ்மான் பாடல்கள் தான் ஒலித்தன. ஆனால் அதே பாடல்களை இப்போ எங்கேயும் பொது இடத்தில் கேட்க முடிவதில்லை. இது ஏன்?ஒருவேளை ஏ.ஆர்.ரஹ்மான் இசை நம் மண்ணோடு ஒட்டவில்லையோ?
இரு இமயங்கள் சந்தித்த போது..
எப்போதுமே ’டங்கு டக்கர’-ன்னு அடி பின்னுனாத்தான் நம்ம ஆட்களுக்கு பிடிக்கும். அதனால் தானோ என்னவோ நம்ம ஆட்கள் ஏ.ஆர்.ரஹ்மான் பாடல்களை மறந்துவிட்டார்கள் போலும்.


பிஸ்கி : அப்புறம் சொல்ல மறந்துட்டனே, மேல இருக்கிற ஃபோட்டோல பிரபல பதிவர் ரஹீம் கஸாலி பக்கத்துல நிக்காரு பாருங்க, அவர்தான் ஏ.ஆர்.ரஹ்மான்.


மேலும் வாசிக்க... "ஏ.ஆர்.ரஹ்மானை மக்கள் மறந்துவிட்டார்களா?"
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

54 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.

Monday, March 28, 2011

சசிகலா என்ற மம்மியும் ஜெ. என்ற டம்மியும் (தேர்தல் ஸ்பெஷல்)

வழக்கம் போல் இந்தத் தேர்தலின் போதும் பூனைக்குட்டி வெளியே வந்துள்ளது.

சோ, சுப்பிரமணியசாமி-திருமாவளவன், வைகோ போன்ற எதிரெதிர் துருவங்கள் கூட ஒன்றுபட்டுச் சொல்கின்ற ஒரே விஷயம் ஜெ. சசிகலாவின் பிடியில் இருக்கிறார் என்பதே. பல சந்தர்ப்பங்களில் இந்தக் குற்றச்சாட்டு சொல்லப்பட்டுள்ளது. இப்போதும் அதே குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 
யாருடன் கூட்டணி, யாருக்கு எவ்வளவு தொகுதி போன்ற எல்லா விஷயங்களும் சசிகலா குரூப்பினால் முடிவு செய்யப்பட்டுள்ளன. ஜனநாயக அரசியலின் அடிப்படையான தேர்தல் செயல்பாடுகளைக் கூட சுதந்திரமாகச் செய்ய முடியாத நிலையில் தான் ஜெ. இருக்கிறாரா? அப்படியென்றால், ஆட்சிக்கு வந்தபின் நம்மை ஆளும்போது மட்டும் சுதந்திரமான முடிவுகள் ஜெ.வால் எடுக்கப்படுமா அல்லது நம்மை ஆளப்போவதே சசிகலா தானா?

’160 பேர் லிஸ்ட் வெளியானதே தெரியாது, வைகோ வெளியேறுவார் என்பதே தெரியாது’ என்பது போன்ற பேச்சை ஒரு மாபெரும் இயக்கத்தைக் கட்டிக்காப்பவர், ஒரு மாநில முதல்வர் பதவியில் உட்காரப் போகிறவர் பேசலாமா? தேமுதிகவுடனும் கம்யூனிஸ்ட்டுகளுடன் தொகுதிப்பங்கீடு குறித்து சசிகலா, டாக்டர் வெங்கடேஷ் போன்றோர் பேச்சுவார்த்தை நடத்தியதாகச் செய்திகள் வருகின்றன. யார் இவர்கள்? இவர்களுக்கும் எம்.ஜி.ஆரின் அதிமுகவிற்கும் என்ன சம்பந்தம்? இவர்கள் எடுப்பது தான் முடிவென்றால், ஜெ. வெறும் பொம்மை தானா?

நாம், நம்மை ஆள சசிகலா குரூப்பைத் தான் தேர்வு செய்துகொண்டிருக்கிறோமா? ஜெயலலிதாவின் பல முட்டாள்தனமான செயல்பாடுகள், அதிரடி எனப் புகழப்பட்டிருக்கின்றன. உண்மையில் அத்தகைய முடிவுகளை எடுப்பது ஜெ. தானா அல்லது சசிகலா குரூப்பா என்ற சந்தேகமே இப்போது எழுந்து உள்ளது. 

ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கு விசாரணை நியாயமாக நடைபெற வேண்டும் என்றால் இந்தத் தேர்தலில் திமுக கூட்டணி தோற்கடிக்கப்பட வேண்டும். இல்லையென்றால் மத்திய-மாநில அரசு அதிகாரத்தைப் பயன்படுத்தி கலைஞரின் குடும்பம் தப்பித்து விடும் என்பது உண்மையே. சரி, ஜெ. ஜெயித்து காங்கிரஸுடன் ஐக்கியம் ஆனால் தற்பொழுது கர்நாடகாவில் நடைபெறும் ஜெ-சசி மீதான சொத்துக்குவிப்பு வழக்கு என்ன ஆகும்?
ஜெ.ஆட்சிக்கு வந்தால் என்ன செய்வார்? உருப்படியான விஷயம் கலைஞரின் குடும்பத்தை உள்ளே தள்ளுவார். நமக்கு என்ன செய்வார்?

டாஸ்மாக் வியாபாரத்தை ஆரம்பித்தவரே ஜெ. தான் என்பதாலும், சரக்கு சப்ளையில் சசிகலாவின் மிடாஸ் தான் முக்கிய நிறுவனம் என்பதாலும் மது விலக்கு எதுவும் கொண்டுவரப்போவதில்லை.

இலவசங்களை அள்ளி வழங்கி மக்களைப் பிச்சைக்காரர்களாக்கும் திமுகவிற்கும் ஜெ. விற்கும் இப்போது வித்தியாசம் இல்லை என்றாகி விட்டது. 

பத்திரிக்கை சுதந்திரத்தைப் பொறுத்தவரை கலைஞர் யாருக்கும் தெரியாமல் மிரட்டுவார், சசிகலா குரூப் வெளிப்படையாகவே மிரட்டும்.

ஊழலில் கலைஞர் குடும்பத்திற்கு சசிகலா குடும்பம் கொஞ்சமும் சளைத்ததல்ல. ஏற்கனவே இரு தேர்தல்களைச் சந்தித்து கையில் உள்ள காசை எல்லாம் இழந்துள்ள நிலையில், அக்கவுண்ட் பேலன்ஸை ஏற்றுகிற வேலையே இந்த முறை நடக்கும்.

ஈழத்தமிழர் பிரச்சினையில் ஜெ. நேரடியான எதிரி. கலைஞர் துரோகி. ஜெ. எப்போது ஆட்சிக்கு வந்தாலும் தமிழின உணர்வாளர்களை கடும் துவேஷத்துடன் ஒடுக்குவது வழக்கம். ‘தமிழினத் தலைவர்’ எனத் தன்னைத் தானே சொல்லிக்கொள்ளும் கலைஞர் அதைத் தயங்கிச் செய்வார். உண்மையில் ஜெ. சென்ற முறை ஆட்சியில் இருந்திருந்தால் என்ன செய்திருப்பார் என்பது நாம் எல்லோரும் அறிந்ததே. இப்போதும் விடுதலைப் புலிகள் விஷயத்தில் கள்ள மவுனம் சாதிப்பதன் மூலம் தான் யார் என்பதை ஜெ. உறுதி செய்கிறார்.

பொதுவாக கலைஞர் கொண்டு வந்த திட்டங்கள், நல்லவையாகவே இருந்தாலும் குப்பைத் தொட்டியில் வீசுவது ஜெ. வழக்கம். அந்த வகையில் கலைஞர் காப்பீட்டுத் திட்டம், 108 ஆம்புலன்ஸ் திட்டம்(இது அவருடையதல்ல என்றாலும்!) போன்றவற்றின் நிலை என்ன ஆகும்?

கலைஞரின் குடும்பத்தினர் ரியல் எஸ்டேட்டில் ஆரம்பித்து சினிமா வரை எல்லாத் தொழிலையும் கபளீகரம் செய்துள்ள நிலையில், சட்டம்-ஒழுங்கு அந்தக் குடும்பங்களின் பிடியில் சிக்கி உள்ள நிலையில் அதற்கு ஒரு அணை தேவையே. ஆனால் அதற்கு மாற்று ஜெ. தான் என்பதை எம்போன்ற நடுநிலையாளர்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. வேறெதும் மாற்று இல்லாத நிலையிலேயே நாம் ஜெ.வை ஆதரிக்கிறோம். இருப்பினும் கொதிக்கும் கொப்பரைக்குப் பயந்து எரியும் நெருப்பில் விழுகிறோமோ என்ற சந்தேகமும் கூடவே எழுகிறது. 
இவர் ஊழல் செய்தால் அவர், அவர் ஊழல் செய்தால் இவர் என மாற்றி, மாற்றி ஓட்டுப்போட்டு இருவரையும் நலமாக வைத்திருக்கிறோம்.இந்தத் தேர்தல் அதிமுகவிற்கு வாழ்வாச் சாவா என்ற முடிவைத் தரப்போகும் தேர்தல். இந்தத் தேர்தலில் இருக்கும் இரு ஊழல் குரூப்பில் ஒன்றான ஜெ.-சசி குரூப் ஒழிவதால், நம் குடியா முழுகி விடும்? இந்தத் தேர்தலில் ‘கள்ளத் தொடர்பில் இருக்கும் காங்கிரஸையும், அதிமுகவையும் ஒருசேர நாம் தோற்கடிக்கும் சாத்தியம் நமக்கு இருக்கவே செய்கிறது. 

ஒரு ஊழல்வாதியை ஒழிக்க, இன்னொரு ஊழல்வாதிக்கு ஆவேசப்பட்டு ஆதரவளித்து,  நாம் நம் உடம்பைப் புண்ணாக்கிக் கொள்வது அவசியம் தானா?

இவை ஒரு சாமானியனின் மனதில் எழும் சிந்தனைகளே. கலைஞர் குடும்பத்தின் மீதுள்ள ’நியாயமான’ கோபத்தில், நாம் மறுபக்கத்தைச் சரியாக எடை போடத் தவறுகிறோமோ என்ற எண்ணத்தின் தொடர்ச்சியே இந்தப் பதிவு. 

எம்மைத் தெளிவாக்கும் மாற்றுக்கருத்துகள் வரவேற்கப்படுகின்றன!
மேலும் வாசிக்க... "சசிகலா என்ற மம்மியும் ஜெ. என்ற டம்மியும் (தேர்தல் ஸ்பெஷல்)"
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

59 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.

Saturday, March 26, 2011

சி.வி.(Resume) தயாரிப்பது எப்படி?

டிஸ்கி: என்ன வேலையில் சேரலாம்? (மெக்கானிகல் என்ஜினியர்களுக்கு) தொடரின் 8வது பகுதி இது. இருப்பினும் எல்லோரும் படிக்கலாம். தப்பில்லை!


இந்த சமூகத்தில் கல்யாணத்துக்கு ஜாதகம் எப்படி முக்கியமோ அப்படித்தான் உங்களுக்கு Resume-ம். இதை curriculum vitae (C.V)ன்னும் சொல்வாங்க.

சி.வி.-ங்கறது சுருக்கமா உங்களைப் பத்தின தகவல்களைச் சொல்ற ஒரு டாகுமெண்ட். நல்லாப் படிக்கிற பலரும் கோட்டை விடுகிற விஷயம், இந்த சி.வி. தயாரிப்பு. ஒரு கம்பெனிக்கு ஆள் தேவைன்னு பத்திரிக்கையில் விளம்பரம் கொடுப்பாங்க. நீங்களும் சி.வி. அனுப்புவீங்க. உங்களை மாதிரியே நூற்றுக்கணக்கான/ஆயிரக்கணக்கான பேர் தங்களோட சி.வி.-யை அனுப்புவாங்க. அதில இருந்து உங்க சி.வி.யை கம்பெனி செலக்ட் பண்ணனும்னா, ஏதோ ஒரு விதத்தில் அவங்களை உங்க சி.வி. அட்ராக்ட் பண்ணனும். (அதுக்காக பதிவர் மாதிரி நமீதா படத்தை அட்டாச் பண்ணிடாதீங்க!). அது எப்படிப் பண்றதுன்னு பார்ப்போம்.

ஒரு சி.வி. இப்படித் தான் இருக்கணும்னு வரையறை எதுவும் கிடையாது. தேவையான தகவல்கள் எந்த வரிசையிலும் சொல்லப் படலாம். முதல்ல ஒரு சி.வி.-யில் இருக்க வேண்டிய முக்கியப் பகுதிகளைப் பார்ப்போம்.

Objective :
ஒரு சிவியோட ஆரம்பமே இது தான். சில பேர் ஒரு பாராகிரஃபே எழுதுவாங்க இங்கே. அது தேவையில்லை. இதுல நீங்க ஒரு வரி/ ரெண்டு வரில விஷயத்தைத் தெளிவாச் சொல்லிடனும். உதாரணமா ‘To obtain a challenging career as a Piping Engineer  in the field of Oil & Gas’-ன்னு சொன்னாப் போதும். கம்பெனி ’Piping Engineer  - Oil & Gas’ -ங்கிற ரெண்டு விஷயத்தைத் தான் பார்க்கும். 

நீங்க யார், என்ன போஸ்ட்டுக்கு அப்ளை பண்றீங்கன்னு தெரிஞ்சுக்க இது போதும். ஒரு பாரா எழுதுனா, அதுல தேடி, இதைக் கண்டுபிடிக்கவே கடுப்பாகிடும்.

Career Summary:
நீங்க ஃப்ரெஷ் கேண்டிடேட்-னா இதை 'Area of Interest'னு போடுங்க. உங்களுக்கு எந்த ஏரியா (Strength of Materials/Thermodynamics/Production Techmology etc) விருப்பமானதோ அதை இங்கே நீங்க சொல்லணும். உங்களுக்கு ஏதாவது எக்ஸ்பீரியன்ஸ் இருந்தா, Career Summary-ல சுருக்கமா 4-5 பாயிண்ட்ல சொல்லுங்க. முதல் பாயிண்ட்ல நீங்க எத்தனை வருசம் அனுபவம் உள்ளவர்னு சொல்லிடுங்க. என்ன பண்ணுனீங்கன்னு தான் இங்க சொல்லணும். கம்பெனி டீடெய்ல்ஸை பின்னாடி சொல்லலாம். 

இது எதுக்குன்னா, உங்களுக்கு என்ன தெரியும், இதுவரை எவ்வளவு நாளா, என்ன பண்ணியிருக்கீங்கன்னு கம்பெனி புரிஞ்சிக்க உதவும். இதுல மேட்ச் ஆகலைன்னா, பின்னாடி வர்ற எதையும் அவங்க படிக்க மாட்டாங்க. தூக்கி ஓரமா வச்சுடுவாங்க. ஏன்னா வர்ற சிவி எல்லாத்தையும் முழுசா உட்கார்ந்து படிக்க முடியாது. அதனால ரொம்பக் கவனமா இந்தப் பகுதியை எழுதுங்க. உதாரணமா 

-Design Engineer having totally 5 years experience in Product Modeling
- Modeling of Valve parts using Pro-E, Solidworks and AutoCAD

ஒரு கம்பெனி Pro-E Software-ல் 3 வருச எக்ஸ்பீரியன்ஸ் உள்ள ஆளைத் தேடிக்கிட்டிருக்கலாம். முதல் ரெண்டு வரிலயே ‘இது நம்ம ஆளு’ன்னு அவங்களுக்குப் புரிஞ்சிடும்.

Academic Qualification:
இங்கே நீங்க உங்களோட கல்வி பற்றிய விபரங்களைக் கொடுங்க. பத்தாவது வகுப்புல இருந்தே விவரங்கள் இருக்கணும்னு கம்பெனிகள் எதிர்பாக்குறாங்க. அதனால அட்டவணை வடிவத்துல கொடுங்க.

Course - Institution - Year of Passing(Batch)-Marks% இந்த வரிசைல 10, 12, Degree டீடெய்ல்ஸைக் கொடுங்க. இது எதுக்குன்னா, சில கம்பெனிகள் 70%க்கு மேல இருந்தாத் தான் எடுப்போம்-னு விதிமுறைகள் வச்சிருக்கலாம். அதனால இந்த டேபிளைப் பார்த்ததுமே, தொடர்ந்து உங்க சி.வி.யைப் பாக்குறதா வேணாமா-ன்னு முடிவு பண்ண இது உதவும். 

கடந்த இரு பகுதியும் ஓ.கே-ன்னா உங்க சி.வி. 80% செலக்ட் ஆகிடும்.


Professional Experience: (Current to Previous)

நீங்கள் கொஞ்சம் எக்ஸ்பீரியன்ஸ் உள்ளவர் என்றால், நீங்கள் இப்போது வேலை பார்க்கின்ற/பார்த்த கம்பெனி விவரங்களில் இருந்து ஆரம்பித்து, ரிவர்ஸில் முந்தைய கம்பெனி, அதற்கு முந்தைய கம்பெனி எனக் கொடுக்கவும். ஃப்ரெஷ் ஆளென்றால், Inplant Training சென்ற கம்பெனி விவரங்களையும், அங்கு நீங்கள் என்ன செய்தீர்கள் என்பதையும் சொல்லவும்.

ஒரு பொழுதும் கதை மாதிரி பத்தி பத்தியாக எழுதாதீர்கள். பாயிண்ட், பாயிண்டாகவோ, டேபிள் ஃபார்மேட்டிலோ இருப்பது நல்லது. உதாரணமாக:

Organization : மன்னார் & மன்னார் கம்பெனி
Designation : வெட்டி ஆபீசர்
Duration       : May.2001 – Aug.2010/Till Date

Job description: 

Lay-out planning and 3D Pipe Routing in PDMS, CADWorx, AutoCAD
Leading a Piping Designers team 
Iso-extraction, Checking and Issuing for fabrication


இவ்வாறு எழுதினால் படிப்போர்க்கு எரிச்சல் வராமல் உங்கள் சிவியை மதிப்பிட எளிதாக இருக்கும்.


Technical/Software Skills:

இந்தப் பகுதியில் நீங்கள், உங்களுக்குத் தெரிந்த சாஃப்ட்வேர் டீடெய்ல்ஸ் மற்றும் CNC Machining போன்ற வேறு ஏதேனும் கோர்ஸ் செய்திருந்தால் அவை பற்றிய விவரங்களைக் குறிப்பிடவும். ஃப்ரெஷ் கேண்டிடேட்டுக்கு முக்கியமான பகுதி இது.

Extra-Curricular Activities:

ஃப்ரெஷ் கேண்டிடேட்டுக்கு மட்டுமே இது கட்டாயம். கொஞ்சம் எக்ஸ்பீரியன்ஸ் ஆனவர்கள் இதை எடுத்துவிடலாம். இந்தப் பகுதியில் நீங்கள் NSS/NCC, Sports போன்றவற்றில் பங்கு பெற்ற விபரங்களைக் கொடுக்கவும். நீங்கள் ஏதெனும் செமினார் எடுத்திருந்தாலும் அது பற்றிய விவரங்களைக் கொடுக்கலாம்.

Personal Data:

உங்களைப் பற்றிய தனிப்பட்ட விவரங்களை இங்கு கொடுக்கவும் தனியார் கம்பெனிக்கு ஜாதி தேவையில்லை. அப்படியே கேட்டாலும் FC/BC/MBC/SC என பொத்தாம்பொதுவாகப் போடுவது நல்லது. கீழே உள்ளது போன்றும் விவரங்களைக் கொடுக்கலாம்:

Date of Birth                 : xxxxxx
Marital Status                 : Single/Married
Languages Known : English, Tamil
Academic Qualification : B.E (Mechanical)
Year of Passing      : xxxx
Residing Address : xxxxxxxxx
Permanent Address : : xxxxxxxx


முடிந்தவரை சி.வி.யை சுருக்கமாகவும், தெளிவாகவும் தயார் செய்யவும். படிக்கக்கூடிய ஃபாண்ட்-ல் கொடுங்கள். பக்கத்தைக் கூட்டவோ/குறைக்கவோ ஃபாண்ட்-ஐ மாற்றி சி.வி.யின் அழகைக் கெடுக்க வேண்டாம்.

நீங்கள் ரொம்பவும் நல்ல பிள்ளையென்றால், எவ்விதக் கோல்மால் வேலைக்கும் பழக்கப்படாதவ்ர் என்றால் இதுவரை சொன்னது போதும். All the Best!
--------------------------------

சரி, இந்த மாதிரி ‘நாம் யார், என்ன தெரியும், என்ன செய்தோம்’-னு கரெக்டாகப் போட்டால் நம் சி.வி.யை செலக்ட் செய்து விடுவார்களா? அது தான் இல்லை. எப்போது உங்கள் சி.வி.க்கு ஏற்ற வேலை ஒரு கம்பெனியில் காலி ஆகிறதோ அப்போது தான் கூப்பிட்டாலும் கூப்பிடுவார்கள். 

‘காலுக்கு ஏற்ற செருப்பு கிடைக்கவில்லை எனில் செருப்புக்கு ஏற்ற மாதிரி காலை வெட்டத் துணிபவர் ’என்றால்....தொடர்ந்து வாருங்கள். என்ன கோல்மால் செய்ய வேண்டும் எனச் சொல்லித் தருகிறேன். அது அடுத்த வாரம்.
மேலும் வாசிக்க... "சி.வி.(Resume) தயாரிப்பது எப்படி?"
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

35 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.

Thursday, March 24, 2011

100வது ஃபாலோயரும் முதல் ஃபாலோயரும் பின்னே நானும்..

நேத்து பதிவு வழக்கத்துக்கு மாறா ரொம்ப சூடாப் போயிடுச்சு. அதனால முதல்ல ரிலாக்ஸ் பண்ணிப்போம்:

ஓ.கே..இப்போ இன்றைய பதிவைப் பார்ப்போமா..

சாதிச்சுட்டேன் மக்கா, சாதிச்சிட்டேன்..புதுசா ராக்கெட் ஏதும் ஏவிட்டனா-ன்னு யோசிக்காதீங்க...பதிவு எழுத வந்து 100 ஃபாலோயர்ஸைச் சேர்த்துட்டேன்..அதாவது அவங்களாச் சேர்ந்துட்டாங்க. நண்பர் செல்வன் 100வது ஃபாலோயராகச் சேர்ந்திருக்கிறார். அவருக்கு என் மனப்பூர்வமான நன்றியையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். வாழ்த்து எதுக்குன்னா யாருமே என் பதிவுல 100வது ஃபாலோயரா சேரலை..அவர் மட்டும் தான் 100வது ஃபாலோய்ரா ஆகி இருக்காரு. அதுக்குத் தான்!(என்னவே, நான் சரியா பேசுதனா?) அவர் 100வது ஃபாலோயராச் சேர உதவி செய்த மீதி 99 ஃபாலோயர்ஸ்-க்கும் நானே அவர் சார்புல நன்றியைத் தெரிவிச்சுக்கிறேன்.

என்னோட தளத்திற்கு முதல் ஃபாலோயரா சேர்ந்தது ஈஸ்வரி ரகு-ங்கிற சகோதரி. அவங்க ரொம்ப ஸ்பெஷலான ஃபாலோயர்! எப்படின்னு சொல்றேன் கேளுங்க.

2010-ல ஒரு ஆறு மாசம் வேலை வெட்டி இல்லாம சும்மா இருந்தேன். சரி, சும்மாதானே இருக்கோம்,பதிவர் ஆகலாம்..ஹாலிவுட் பாலாண்ணன் வேற அன்பா கூப்பிட்டாரேன்னு நவம்பர்ல இந்த வலைப்பூவை உண்டாக்குனேன்!.நம்ம வலைப்பூ சும்மா இருக்கக்கூடாதேன்னு பக்திப்பூர்வமா ஒரு முருகர் படத்தையும் ‘குருவாய் வருவாய்’ போன்ற சில பாடல்களை எங்கிருந்தோ சுட்டு சும்மா போட்டுருந்தேன்.

அப்புறம் ஒரு மாசமா நானே என் ப்ளாக்கை ஓப்பன் பண்ணி முருகரைப் பாக்குறதும் ஃபீல் பண்றதுமா பொழுது போச்சு. திடீர்னு ஒருநாள் பாக்குறேன்..ஃபாலோயர் லிஸ்ட்ல ஒரு ஆளு சேர்ந்திருக்கு. என்ன அதிசயம், நாம தான் ஒன்னுமே எழுதலியே..அப்புறம் எப்படி.யாரும் நம்மளை வச்சு காமெடி பண்றாங்களோன்னு டவுட்டு. அதனால வழக்கமா அந்த வேலையைச் செய்யுற தங்க மணிகிட்டயே காட்டுனேன்..

அவங்க ‘பாத்தீங்களா.. எவ்வளவு நல்லவங்களா இருக்காங்க...அதுக்காகவாவது நீங்க எழுதாம இருக்கலாமே..பாவம் இல்லையா அவங்க’ன்னு ஓட்டுனாங்க.  அப்புறமா விளக்கிச் சொன்னேன், ‘அவனவன் எம் எல் எம்காரன் மாதிரி சொந்தக்காரன்/நண்பன் கழுத்துல கத்தியை வச்சு மிரட்டி ஃபாலோயராச் சேத்துக்கிட்டிருக்கான்! நமக்கு தன்னாலயே சேர்றாங்களே’ன்னு! அப்புறமென்ன..இனியும் பொறுக்கக்கூடாதுன்னு பதிவு எழுத ஆரம்பிச்சுட்டேன்.

அந்த அன்புச் சகோதரி இப்பவும் படிக்காங்களா..இல்லே நான் போடுற படங்களைப் பார்த்து தலை தெறிக்க ஓடிட்டாங்களான்னு தெரியலை! இருந்தாலும் நான் ஒன்னும் எழுதாத போதே என் திறமையைப் புரிஞ்சுக்கிட்டு(?), ஃபாலோயராச் சேர்ந்து என் பதிவுலக வாழ்க்கையை குத்துவிளக்கேத்தி துவக்கி வைத்த அந்த அன்புச் சகோதரிக்கு நன்றி. நீங்க எங்கிருந்தாலும் எல்லா வளமும் பெற்று நல்லா இருக்கணும்னு என்னப்பன் முருகன்கிட்ட வேண்டிக்கிறேன். 

100 பேர் சேரும்வரை என்னைப் பற்றிய விவரங்களை வெளியிடக்கூடாது என்று வைராக்கியத்தோடு இருந்தேன். இனி என்னைப்பற்றிய விவரங்கள் கொஞ்சம் கொஞ்சமாக லீக் செய்யப்படும். இப்போதைக்கு நான் ஒரு ஆம்பிளை என்றும் குவைத்தில் பொறியாளனாக வேலை செய்கிறேன் என்றும் தெரிவித்துக்கொள்கிறேன். எனது முத்துன முகத்தைப் பார்க்க உங்களைத் தயார்ப்படுத்தும் விதமாக, என் பிஞ்சு முகத்தை இங்கே போடுகிறேன்.
மேல தமன்னா..கீழ குஷ்பூ..ம்ம்..கலக்குற செங்கோவி!
தினமும் 100 பேர் வந்தாலே போதும், சந்தோசமா எழுதலாம்னு நினைச்சுத்தான் வந்தேன். அதனால ஃபாலோயர்ஸ் டார்கெட்டை 100ஆ ஃபிக்ஸ் பண்ணிக்கிட்டேன். அந்த 100 பேரும் முன்னப்பின்னத் தெரியாதவங்களாத்தான் இருக்கணும்னு முடிவு பண்ணேன்! அதனால மொய்க்கு மொய் சிஸ்டத்தையும் ஃபாலோ செய்யவில்லை. எப்படியோ பதிவுலகிற்கு வந்த மூன்று மாதங்களில் டார்கெட்டை அச்சீவ் பண்ணீட்டேன்.(இண்ட்லியில் உள்ள ஃபாலோயர்ஸ் லிஸ்ட் தனி.) அதனால இப்போ என்ன செய்யப் போறேன்னா......
கரெக்ட்..திரும்பிப் பார்த்து ஆரம்ப காலத்தில் எனக்கு ஆதரவளித்தோருக்கு நன்றி சொல்லப் போறேன்.

முதல் பதிவிற்கு முதல் பின்னூட்டம் போட்டு மங்களகரமாகத் துவக்கி வைத்த பிரபல பதிவர் கேபிள் சங்கர் அவர்களுக்கு நன்றி. எனது ஆரம்ப காலத்தில் நான் தனியே தன்னந்தனியே இருந்த போது பின்னூட்டம் போட்டு என்னை உற்சாகப்படுத்திய பாரத்..பாரதி, கஸாலி, இரவு வானம், ஜீ, சிவகுமார், சே.குமார், சித்ரா போன்றோருக்கு நான் நிச்சயம் கடமைப்பட்டிருக்கிறேன்.

எனது தேர்தல் ஸ்பெஷல் தொடரை தனது தளத்தில் குறிப்பிட்டு, எனக்கு விளம்பரம் தேடித்தந்த நண்பர் தொப்பிதொப்பிக்கும் அதே பதிவில் அதை ஆமோதித்து பாராட்டிய (மீண்டும்) பாரத்..பாரதி & ஆனந்தியக்காவிற்கும் நன்றிகள்.

வலைச்சரத்தில் என்னை அறிமுகப்படுத்திய சிரிப்பு போலீஸ் ரமேஷ் அவர்களுக்கும் கஸாலிக்கும் நன்றிகள் பல. அது என்னைப் பல வாசகர்களிடம் கொண்டு சேர்த்தது.

மேலும் பல உற்சாகமான நண்பர்களிடம் என்னைக் கொண்டு சேர்த்த நமீதா, குஷ்பூ, சிநேகா, பாவனா, சில்க் ஸ்மிதா போன்றோருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

எனக்கு இத்தனை பேர் ஃபாலோயராகச் சேர்ந்தாலும், நான் இன்னும் பெரும்பாலானோருக்கு ஃபாலோயராகச் சேரவில்லை. இனி சேர முயற்சிக்கிறேன். சென்னைப்பித்தன், அமுதா கிருஷ்ணா, இக்பால் செல்வன், ராஜராஜேஸ்வரி போன்ற பலரின் எழுத்துக்களை நான் விரும்பிப் படித்தாலும் பின்னூட்டம் இடுவதில்லை..நேரமின்மையே காரணம். யாரும் தவறாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.

இதுவரை எழுதியதில் எனக்குப் பிடித்தது முந்து சிறுகதை தான். எனது பதிவுகளில் அட்டர் ஃப்ளாப்பும் அதுவே!

பொதுவாக யாரையும் காயப்படுத்தக் கூடாது என்ற மனப்பான்மை கொண்டவன் நான். ஆனாலும் நான் நடிகைகளின் படத்தைப் போடுவது சிலருக்கு வருத்தத்தையும் கோபத்தையும் உண்டாக்கி இருப்பதை அறிவேன். நான் எந்தவிதமான சமூகப் புரட்சியும் செய்ய பதிவுலகிற்கு வரவில்லை. சும்மா ரிலாக்ஸ் பண்ணவே வந்தேன். 

’நீங்கள் காசு கொடுத்து வாங்கும் குமுதம்/விகடன் போன்ற பத்திரிக்கைகளில் வரும் படங்களை விட எனது பதிவில் வரும் படங்கள் பெட்டர், எனவே அதில் தவறேதும் இல்லை ’என்றே இத்தனை நாளாக நினைத்து வந்தேன். ஆனால் இப்போது அது தவறு என்பதை மனதார உணர்ந்துவிட்டேன். தவறு என்று தெரிந்தபின் மன்னிப்பு கேட்க நான் தயங்குவதில்லை.எனவே இதுவரை போட்ட கவர்ச்சிப் படங்களுக்காக அன்புச்சகோதரிகள்+நல்ல ஆத்மாக்களிடம் மன்னிப்பு கோருகின்றேன்.

அப்புறம் இனிமேல் போடப்போகும் கவர்ச்சிப் படங்களுக்காகவும் இப்போதே அவர்களிடம் அட்வான்ஸ் மன்னிப்பைக் கோருகிறேன். இன்னும் நூறு பேர் ஃபாலோயராகச் சேர்ந்தால் மட்டுமே புது மன்னிப்பு கேட்பேன் . அதுவரை இதையே பத்திரமாக வைத்துக் கொள்ளவும். தொலைத்தால் எங்கள் சங்கத் தலைவரைத் தொடர்பு கொள்ளவும்.

வேறு ஏதேனும் மாற்றங்களை என் பதிவுகளில் எதிர்பார்க்கிறீர்களா? அப்படி ஏதேனும் இருந்தால் தெரிவிக்கவும்.

என்னை, எனது கிறுக்குத்தனங்களோடு ஏற்றுக்கொண்டு பின் தொடரும் நல்ல உள்ளங்களுக்கு மீண்டும் நன்றி! நன்றி! நன்றி!

மேலும் வாசிக்க... "100வது ஃபாலோயரும் முதல் ஃபாலோயரும் பின்னே நானும்.."
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

50 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.

Wednesday, March 23, 2011

மானங்கெட்ட வைகோவை விரட்டிய மானமுள்ள தமிழர்கள்! (தேர்தல் ஸ்பெஷல்)

எங்கள் கிராமத்தில் வாழும் பேச்சியக்கா கணவனை இழந்தவர். ஒரே ஒரு குழந்தை மட்டுமே. அதுவும் பொறுக்கவில்லை அந்தக் கடவுளுக்கு. குழந்தையின் இதயத்தில் ஓட்டை என்றும் ஆபரேசன் செய்ய 5 லட்சமாவது வேண்டும் என்றும் டாக்டர்கள் இடியை இறக்கினார்கள். ஏழைப் பெண் இடிந்து போய் பல இடங்களில் பணம் கடனாகக் கேட்டுப்பார்த்தார். இவ்வளவு பெரிய தொகையை அந்த ஏழைப்பெண்ணை நம்பி யார் தான் கொடுப்பார்கள்? 

அப்போது தான் அந்த போஸ்டர் அக்காவின் கண்ணில் பட்டது. எங்கள் பக்கத்து ஊருக்கு கொடியேற்ற வைகோ வருவதாக அந்த போஸ்டரில் போட்டிருந்தது. வைகோவைப் பற்றி உங்களுக்குத் தெரிந்திருக்கும். சுத்த மானங்கெட்ட அரசியல்வாதி அவர். ஆனால் நல்லவேளையாக அக்காவிற்கு அது தெரியவில்லை. அக்கா குடும்பம் அதிமுக. எனவே யாரிடமும் சொல்லாமல் ஒரு வெள்ளைப்பேப்பரில் தன் நிலைமையை எழுதினார்.

வைகோ கார் எங்கள் ஊர் வயல்காட்டுப் பாதை வழியே தான் கொடியேற்றப் போக வேண்டும். அங்கு போய் கையில் பேப்பருடன் நின்று கொண்டார். வைகோவின் கார் வந்தது. அக்கா கையை நீட்டினார். ஒரு தன்மானமுள்ள அரசியல்வாதியோ, தமிழனோ காரை நடுக்காட்டில் நிறுத்துவானா? ஆனால் வைகோ தான் சுத்த மானங்கெட்டவராயிற்றே. காரை நிறுத்தி ‘யாரும்மா நீங்க? ஏன் இங்க வெயில்ல நிக்கீங்க’ன்னு கேட்டார். அக்காவிற்கு பேச முடியவில்லை. அழுதுகொண்டே அந்த பேப்பரை நீட்டினார். மனுவா? ச்சே..ஒரு நல்ல அரசியல்வாதி நடுக்காட்டிலா மனுவை வாங்குவார்? 

நாளைக்கு ஆஃபீசுக்கு வா என்று சொல்லிவிட்டு அன்றிரவே டெல்லிக்கு பறந்தால்தானே அவர் பொழைக்கத் தெரிந்த அரசியல்வாதி. வைகோ அந்த விஷயத்திலும் சுத்த வேஸ்ட். மனுவை வாங்கிப் படித்தார். மிகுந்த வருத்தத்துடன் ‘கவலைப்படாதீங்கம்மா. நாளைக்கு எங்க கட்சி ஆபீசுக்கு வந்து இவரைப் பாருங்க. கண்டிப்பா உதவி செய்றோம்’ என்று அருகில் இருந்தவரை அறிமுகப்படுத்தி விட்டு விடை பெற்றார். அப்படியே ஓடிப்போயிருந்தாக் கூட பரவாயில்லை.

ஆனால் மறுநாள் சொன்னபடியே எல்லா உதவிகளும் செய்யப்பட்டன. அந்தக் குழந்தையை திருநெல்வேலிக்கு கட்சிக்காரர்களே அழைத்துச் சென்று ஆபரேசனும் செய்ய உதவினர். இன்று குழந்தை நலம். அந்த உதவி கட்சி நிதியில் செய்யப்பட்டதா அல்லது மானங்கெட்ட தனமாக கூட்டனி வைத்துக் கிடைத்த எம்.பி நிதியில் செய்யப்பட்டதா என்று தெரியவில்லை.
இப்படி ஒரு விவரங்கெட்ட அரசியல்வாதியைப் பார்த்திருக்கிறீர்களா? ஒருவர் உதவி கேட்டால் ‘நீ எந்தக் கட்சி? உறுப்பினர் அடையாள அட்டை எங்கே? ஓஹொ.அதிமுகவா? அப்புறம் என்ன இதுக்கு எங்கிட்ட வந்தே?’ன்னு தானே ஒரு மானமுள்ள அரசியல்வாதி கேட்பான்? அடுத்து ‘நீ என்ன ஜாதி? ஓஹோ.அந்த ஜாதியா..நீங்கள்லாம் எனக்கு ஓட்டுப் போட மாட்டீங்களே.அந்தக்கட்சிக்குத் தானே போடுவீங்க. உங்க ஊரே அப்படித்தானே? என் கட்சியா இல்லாட்டியும் பரவாயில்லை, என் ஜாதியா இருக்க வேண்டாமா?’ன்னு கேட்க வேண்டாமா? அப்படி கேட்க வேண்டும் என்று கூடத் தோன்றாமல் மனுவை வாங்கி தேம்பித் தேம்பி அழுதா உருப்பட முடியுமா?

குடுகுடுப்பைக்காரன் மாதிரி மக்களோடு மக்களா கெக்கேபிக்கேன்னா ஒரு அரசியல்வாதி இருக்குறது? ஜெயலலிதாவை வழில பாத்து மனு கொடுத்தவங்க யாராவது இருக்கீங்களா? கருணாநிதிகிட்ட இப்படி வேறொரு கட்சிக்காரன் உதவி வாங்குனதா சரித்திரம் இருக்கா? (அவர் நீ என்ன ஜாதின்னு கேட்கமாட்டாரு..நீ என்ன முறை.. பேரனா மகனான்னு தான் கேட்பாரு!)
அவங்களை மாதிரி தன்மானத்தோட இருக்க வேண்டாமா வைகோவும்? அப்புறம் எப்படி மக்கள் மதிப்பாங்க?

ஆனால் எனக்கு ஒரே ஒரு ஆறுதல் என்னன்னா, நம்ம மக்கள் தன்மானச் சிங்கங்களா, மாசுமறுவற்ற தங்கங்களா இருக்குறது தான். வைகோ அந்த அக்காவிற்கு உதவி செஞ்சதைப் பார்த்ததும் அக்கா குடும்பமோ உறவினர்களோ மதிமுகவில் சேரலை. மானங்கெட்ட வைகோவும் அந்த டீலிங்-கைப் பேசாமல் உதவி செஞ்சுட்டார். எங்க ஊர்ல எல்லாருக்கும் இது தெரியும். ஆனாலும் யாரும் வைகோவிற்கு ஓட்டுப்போடலை. ஏன்? ஏன்னா நாங்க மானமுள்ள தமிழர்கள்.

நான் சொல்றதாவது உங்களுக்குப் புதுசா இருக்கலாம். ஆனால் செய்தித்தாளில் வந்த ஒரு கூத்தைக் கேளுங்க. விருதுநகர் பக்கத்துல நெடுஞ்சாலைல நடுராத்திரியில் ஒரு விபத்து. ஒரு குடும்பமே அடிபட்டு ரத்தக்களறியாக் கிடக்கு. மானமுள்ள தமிழன்லாம் பாத்துட்டு காரை நிப்பாட்டாமல் போனார்கள். அப்பப் பார்த்து நம்ம மானங்கெட்ட வைகோ வந்துட்டார். தன் காரில் அவங்களை ஏத்தி, ஆஸ்பத்திரியில் சேர்த்துட்டுத் தான் போனாரு. அதோட விட்டாப் பரவாயில்லை. காலைல ஃபோன் வேற. ‘நீங்க நல்லா இருக்கீங்களா’ன்னு. இப்படி வெண்ணைத்தனமா இருந்தா தமிழன் எப்படி அவரைத் தலைவரா ஏத்துக்க முடியும்? 

சமீபத்தில் ஒரு போலீஸ்காரர் வெட்டப்பட்டு கிடந்தப்போ, கார் ரத்தக்கரை ஆகிடுமேன்னு ஆம்புலன்சுக்கு ஃபோன் போட்ட அமைச்சரை வீடியோவில் பார்த்திருப்பீங்க. அப்படி விவரமா இருக்கப்போய்த் தான் அவர் அமைச்சரா இருக்காரு, வைகோ கலிங்கப்பட்டில கல்லு உடைக்கப் போய்ட்டாரு.

இந்த விஷயமும் விருதுநகர்காரங்களுக்குத் தெரியும். ஆனா அவங்க விவரமானவங்க. வைகோ போன தேர்தல்ல விருதுநகர்லயே நின்னாரு. நம்ம மக்கள் பார்த்தாங்க..இவர் ஜெயிச்சு டெல்லிக்குப் போய்ட்டா யாரு ஆக்ஸிடண்ட் கேஸ்களை அட்டெண்ட் பண்றது? ஜெ.வோ கலைஞரோவா வருவாங்க? அவங்கள்லாம் தலைவர்கள் ஆச்சே. அதனால நல்லபடியா வைகோவை தொகுதில தோற்கடிச்சுட்டாங்க. இப்போ கருணையே வடிவான ‘அம்மா’வும் ‘நீயே ஜெயிக்கலை..உனக்கெதுக்கு 21 தொகுதி’ன்னு வைகோவை விரட்டி விட்டிடுச்சு.

வைகோ கட்சி ஆரம்பிச்சப்போ தனியா நின்னாரு. ஆனால் நாம யாரு?  இந்த மாதிரி கூறுகெட்ட ஆளை முதல்வரா ஆக்குவோமா? டெபாசிட்டைக் காலி பண்ணோம். நாம ஓட்டுப் போடணும்னா கலர் கலரா போஸ்டர் ஒட்டணும்..வீதி வீதியா பெட்ரோல் செலவழிச்சுச் சுத்தணும். எல்லாத்துக்கும் மேல ஓட்டுக்கு காசும் கொடுக்கணும். ஆனால் அந்த தலைவர் செலவழிக்க மட்டும் தான் செய்யனும். செலவைச் சமாளிக்க ஊழல் செஞ்சாத்தான் முடியும். அதுக்கு ஆட்சில ஒரு தடவையாவது இருக்கணும். அதுக்கும் விட மாட்டோம். 

ஆனால் செலவைச் சமாளிக்க முடியாமல் யார்கூடவாவது கூட்டணியும் சேரக்கூடாது. சேர்ந்தா மானங்கெட்டவன். நம்மளை மாதிரி மானத்தோட இருக்க வேண்டாமா? எங்களுக்காக தேர்தலப்போ செலவளி. ஆனால் ஊழலோ கூட்டணியோ கூடாது. இவ்வளவு விவரமா யோசிக்கிற மக்களுக்குத் தலைவரா இருக்குற தகுதி வைகோவுக்கு இருக்கா?

எப்பத் தனியா நின்னாலும் தோற்கடிப்போம். யார்கூடவாவது கூட்டணி சேர்ற வரைக்கும் துரத்தி துரத்தி அடிப்போம். கூட்டணி வச்சுட்டா மானங்கெட்டவன்னு சொல்வோம். ஏன்னா நாங்க மானமுள்ள தமிழர்கள்.இது தான் எங்கள் கொள்கை. இது மாதிரி வைகோகிட்ட கொள்கை ஏதாவது இருக்கா? 

1991-ல ஜெ.வுக்கு ஆதரவு தெரிவிச்சு ஓட்டுப்போட்டோம். 1996ல் ச்சீ..ச்சீ..இதுவும் பொம்பளையான்னுட்டு கலைஞ்சருக்கு ஓட்டுப் போட்டோம். 2001ல் கலைஞரெல்லாம் ஒரு மனுசனா-ன்னு கேட்டுட்டு மானத்தோட புரட்சித் தலைவிக்கு ஓட்டுப் போட்டோம். 2006ல் திரும்பக் கலைஞருக்கே ஆதரவு. இதெல்லாம் நாம செய்யலாம். ஏன்னா நாம மானமுள்ள தமிழர்கள். அதுக்கான எல்லாக் காரணமும் நம்மகிட்ட இருக்கும்.  ஆனால் வைகோவும் நம்மை மாதிரியே ஜெ-கலைஞர்னு மாறலாமா? என்ன அநியாயம்..

ஜெ.வின் பாசிச ஆட்சியை ஒழிப்பேன்னு சொல்லிட்டு ஜெ.கூடயே கூட்டணி வச்சாரு மானங்கெட்ட வைகோ! ஆனால் பிறந்ததில் இருந்தே மானத்தோட வாழுற ஜெ. ஏன் இப்படிப் பேசுனவரைச் சேர்த்துக்கிச்சு? கேட்க மாட்டோம். ஏன்னா ஜெ.வும் நாங்களும் வைகோவைக் கேவலப்படுத்தி துரத்தியதில் பார்ட்னர்ஸ்.

மானங்கெட்டு திமுக கூடவே மறுபடி கூட்டணி வச்சாரு வைகோ. ஆனால் திமுக-காங்கிரஸ் கூட்டணியை ஒழிப்பேன்னு வீரவசனமும் அடுத்த தேர்தல்ல பேசுனாரு வைகோ. சரி, அப்படிபட வைகோவை ஏன் கலைஞர் இப்போ ’தம்பீ வா’-ன்னு அழைக்காரு. அவரும் நம்மளை மாதிரி மானமுள்ள தமிழனங்கிறதாலயா?

’மக்கள் எப்படியோ அப்படியே தலைவர்களும் உருவாகி வருவார்கள்’. எனவே  வைகோ கலிங்கப்பட்டியில் களை புடுங்கட்டும். நமக்கு விஜயகாந்த்தே அதிகம்!


மேலும் வாசிக்க... "மானங்கெட்ட வைகோவை விரட்டிய மானமுள்ள தமிழர்கள்! (தேர்தல் ஸ்பெஷல்)"
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

96 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.

Sunday, March 20, 2011

போராட்டக் குணத்தை இழந்த போர்வாள் வைகோ (தேர்தல் ஸ்பெஷல்)

அதிமுக கூட்டணியில் இருந்து விலகுவது என்ற முடிவை மதிமுக எடுத்துள்ளது. நிச்சயம் இது சுயமரியாதை கொஞ்சமாவது மிச்சம் உள்ள எந்த வொரு மனிதரும் எடுக்கும் முடிவே. அந்த வகையில் இப்போதாவது வைகோ தன் சுயமரியாதையை மீட்டதில் சந்தோசமே.

ஆனால் தேர்தலில் போட்டியிடுவதில்லை என்பது எந்த அளவிற்கு சரியானது என்று தெரியவில்லை. நாம் ஏற்கனவே முந்தைய தேர்தல் பதிவில் சொன்ன மாதிரி, காங்கிரஸ் நிற்கும் தொகுதிகளிலும், மதிமுகவிற்கு வாக்கு வங்கி உள்ள தொகுதிகளிலும் மதிமுக நிற்க வேண்டும் என்பதே தமிழின உணர்வாளர்களின் ஆவல்.

ஏற்கனவே தேர்தல் கமிசனின் அங்கீகாரத்தை இழந்துள்ள நிலையில், இந்தத் தேர்தலை முழுக்க புறக்கணிப்பது கட்சிக்கு நல்லதல்ல. மேலும் மதிமுகவின் நாயக்கர் சமூக ஓட்டை விஜயகாந்த்திற்கு தாரை வார்த்ததாகவே இது ஆகும். ஏற்கனவே பெரும்பாலான நாயக்கர் இன ஓட்டுக்களை விஜயகாந்த கவர்ந்துவிட்ட நிலையில், இந்த முடிவு மதிமுகவிற்கு பெரும் பாதகமாகவே முடியும்.

வேறு வழியின்றியே அதிமுகவை ஆதரிப்பதாக சீமான் போன்றோர் சொல்லி வரும் நிலையில், வைகோ இந்த நல்ல வாய்ப்பை உதறுவது நல்ல முடிவல்ல. வைகோ என்ற போர்வாள் மனதளவில் தளர்ந்து விட்டாரா? தனியே நிற்கக்கூடிய நல்ல வாய்ப்பு வந்துள்ள நிலையிலும் பின் வாங்குவது ஏன்? சீமான், நெடுமாறன் போன்ற உணர்வாளர்கள் வைகோவை இந்தத் தேர்தலில் நிற்குமாறு அறிவுறுத்துவதே சரியாக இருக்கும். அவர்கள் அம்மாவில்ம் விலை போகவில்லை என்பதற்கு அதுவே சாட்சியாகும்!

வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் ‘ஜெயலலிதாவின் அணுகுமுறையில் ஆரம்பத்திலிருந்தே எந்த மாற்றமும் இல்லை. அவரது அணுகுமுறையில் அகந்தை, ஆணவம், தன்னிச்சையான போக்கு ஆகியவையே திட்டவட்டமாகப் புலப்பட்டது’ என்று நேரடியாக ஜெ.வை தாக்கியதிலிருந்தே இனி சமரசத்திற்கு இடமில்லை என்றே படுகிறது.

மதிமுக தொண்டர்களை இந்தத் தேர்தலைப் புறக்கணிக்கச் சொன்னாலும், நடைமுறையில் அவர்கள் வேறு யாருக்காவது ஓட்டுப் போடவே செய்வர். அதனால் மதிமுக தேர்தலில் நிற்பதன் மூலமே எஞ்சியிருக்கும் தொண்டர்களைத் தக்க வைக்க முடியும். இல்லையென்றால் கட்சி கரைந்து விடும் என்பதே யதார்த்தம்.

பாஜக, பகுஜன் சமாஜ் கட்சி, கார்த்திக்கின் ஏதோவொரு டப்பா கட்சி எல்லாம் இந்தத் தேர்தலில் துணிந்து நிற்கும்போது வைகோ தயங்குவது ஏன்? காங்கிரஸுக்கு எதிரான ஓட்டு சிதறக்கூடாது என்பதனாலா? இனியும் ஜெ.வைப் பற்றி வைகோ கவலைப்படலாமா?

அதிமுக, திமுக வின் மேல் வெறுப்பில் இருக்கும் சில நடுநிலையாளர்கள், வைகோ என்ற தனி மனிதருக்காக மதிமுகவிற்கு ஓட்டுப் போடுவதைக் கண்டிருக்கிறேன். அவர்களுக்கு இருக்கும் அந்த ஆப்சனையும் வைகோ மூடுவது சரியா? நல்ல மனிதர்களும் அரசியலை விட்டு ஒதுங்கும் நிலையில், மிக்ஸியும் கிரண்டரும் தான் எங்கள் தலைவிதியா?

தனியாக நின்றால் கேவலமாகத் தோற்க வேண்டியிருக்கும் எனப் பயப்படுகிறாரா? நல்ல அரசியலுக்காக ஏங்கும் எம் போன்ற சாமானியர்கள் ஒவ்வொரு தேர்தலிலும் தோற்றுக் கொண்டுதானே இருக்கிறோம். எங்களோடு சேர்ந்து நீங்களும் தோற்பது, உண்மையில் கௌரவமே!
மதிமுக தேர்தலில் நிற்க வேண்டும். அதற்கு தமிழின உணர்வாளர்கள் முயற்சி எடுக்க வேண்டும். இல்லையென்றால் மதிமுக என்ற கட்சி இத்தோடு அழிந்து போகும்!
மேலும் வாசிக்க... "போராட்டக் குணத்தை இழந்த போர்வாள் வைகோ (தேர்தல் ஸ்பெஷல்)"
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

68 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.

Saturday, March 19, 2011

என்ன வேலையில் சேரலாம்? (மெக்கானிகல் என்ஜினியர்களுக்கு)_7

டிஸ்கி: இந்தப் பதிவு மெக்கானிக்கல் என்ஜினியரிங்கில் டிப்ளமோ/டிகிரி படிக்கும் மாணவர்களுக்காக. உங்களுக்குத் தெரிந்த மாணவர்கள் யாராவது இருந்தால்அவர்களிடம் இந்தப் பதிவை அறிமுகப் படுத்தவும். மற்றபடி உங்கள் பொன்னான நேரத்தை வீணாக்க விரும்பவில்லை..அடுத்த பதிவில் சந்திப்போம். நன்றி.

இன்று நாம் பார்க்கப் போவது MAINTENANCE டிபார்ட்மெண்ட் பற்றி...

எதுக்கு இது?
ஒரு கம்பெனியில் பல இயந்திரங்கள்/உபகரணங்கள் இருக்கும். அவற்றுக்கான பராமரிப்பு வேலைகளைத் தொடர்ந்து செய்து, இயந்திரம் பழுது படாமல் பார்த்துக் கொள்வதும் பழுதானால் அதனைச் சரி செய்வதுமே இவர்களின் முக்கியப் பணி.

என்ன செய்வாங்க?
ஒரு கம்பெனியில் உள்ள அனைத்து இயந்திரங்களும் இவர்களின் கட்டுப்பாட்டில் தான் இருக்கும். இயந்திரக்களுக்குத் தேவையான ஆயில் போன்றவற்றை தேவையான இடைவெளியில் செலுத்தப்படுகின்றதா, சரியான லோடில் தான் இயந்திரங்கல் இயங்குகின்றனவா என ரெகுலராகச் சோதிப்பர். ஏதேனும் இயந்திரம் பழுதானால், அதனைப் பிரித்து எந்த உதிரி பாகம் பழுதடைந்திருக்கிறது எனச் சோதித்து அதனை மாற்றுவர்.

இவர்கள் தான் உண்மையான ’இயந்திர’ப் பொறியாளர்கள் எனச் சொல்லலாம். ஏனென்றால் இயந்திரங்களைப் பற்றிய நல்ல அறிவு இவர்களுக்கு அனுபவத்தின் மூலம் கிடைக்கும்.

இந்த வேலையில் உள்ள முக்கியப் பிரச்சினையே இது நேரம் காலம் பார்க்காமல் இயந்திரம் சரியாகும்வரை வேலை பார்க்கவேண்டும் என்பதே. மேலும், தீபாவளி பொங்கல் போன்ற விடுமுறை நாட்களில்தான் ஷட்-டவுன் செய்து மெயிண்டனன்ஸ் வேலை பார்க்க வேண்டியிருக்கும்.

இங்கே சேரணும்னா..
சிறுவயதிலிருந்தே எதையாவ்து பிரித்து மேயும் பழக்கம் உள்ளவரா நீங்கள்?..அது போதும், இந்த வேலை கிடைக்கவும், வேலையில் நல்ல பெயர் எடுக்கவும். இந்த வேலைக்கான இண்டர்வியூவுக்கு போகும்போது, அங்கு பயன்படுத்தப்படும் உபகரணங்கள் & இயந்திரங்கள் பற்றியும் கொஞ்சம் தெரிந்து கொண்டு போகவும்.

டப்பு தேறுமா
சம்பளத்தைப் பொறுத்தவரை புரடக்சனுக்கும் மெயிண்டனஸ்க்கும் பெரிய வித்தியாசம் இருப்பதில்லை. ஆனாலும் சிக்கலான பிரச்சினைகளைத் தீர்க்கும்போது, சில கம்பெனிகள் இன்செண்டிவ் கொடுப்பதுண்டு.

PRODUCT DEVELOPMENT:
இந்த டிபார்ட்மெண்டைப் பற்றியும் இன்று பார்த்துவிடுவோம். ஒரு கம்பெனி பல உதிரிப் பாகங்களைத் தயாரிப்பதாக வைத்துக் கொள்வோம். அந்த வேலையை நாம் ஏற்கனவே பார்த்த மாதிரி புரடக்சன் & குவாலிட்டி டிபார்ட்மெண்ட் பார்த்துக்கொள்ளும். ஆனால் புதிதாக ஒரு புராடக்ட் கிளையண்ட்டாலோ R&D டிபார்ட்மெண்ட்டாலோ அறிமுகப் படுத்தப்பட்டால், முதலில் சில மாதிரி பீஸ்களைத் தயாரித்து, அது சரியாக உள்ளதா என முடிவு செய்வர். அதன் பிறகே மாஸ் புரடக்சனுக்கு போக முடியும். அந்த மாதிரி (Sample) தயாரிப்புப் பொறுப்பை இந்த டிபார்ட்மெண்ட் பார்த்துக்கொள்ளும்.

இதில் வேலை செய்பவர்களுக்கு டிசைன், புரடக்சன், குவாலிடி & ப்ளானிங் அறிவு முக்கியம். எனவே பெரும்பாலும் ஃப்ரெஷ் என்சினியர்களை இங்கு எடுப்பதில்லை. எடுத்தால், நீங்கள் நிறையக் கற்றுக் கொள்ள முடியும்.

இதைத் தவிர பெயிண்டிங், ஃபைனல் இன்ஸ்பெக்சன் & டெலிவரி போன்ற சில டிபார்ட்மெண்ட்கள் உண்டு. அவற்றின் வேலையும் சூப்பர்வைசிங்/குவாலிட்டி போன்றே இருக்கும். தனியாகச் சொல்ல ஏதுமில்லை.

இனி Resume தயாரித்தல் பற்றி அடுத்த வாரம் பார்ப்போம்.

மேலும் வாசிக்க... "என்ன வேலையில் சேரலாம்? (மெக்கானிகல் என்ஜினியர்களுக்கு)_7"
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

30 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.

Thursday, March 17, 2011

வைகோவை விடுதலை செய்த ஜெயலலிதாவுக்கு நன்றி!

அதிமுக 160 தொகுதிகளில் போட்டியிடும் பட்டியலை வெளியிட்டுள்ளார் ஜெயலலிதா. இதன் மூலம் வைகோவிற்கு அதிமுக கூட்டணியில் இடம் இல்லை என்பது தெளிவாகியுள்ளது. முதலில் இதற்காக ’மூன்று மாத கால்ஷீட்டுடன் சென்னை வந்திருக்கும் ‘ஜெயலலிதாவிற்கு நன்றி தெரிவித்துக் கொள்வோம்.
ஏழு வருடங்களாக கூட்டணி தர்மத்தை மீறாமல், கடந்த தேர்தல்களில் அதிமுகவிற்காக கடும் பிரச்சாரம் மேற்கொண்ட வைகோவிற்கு அன்புச்சகோதரி காட்டியுள்ள மரியாதை, பாத்திரம் அறிந்து பிச்சை போடு என்ற பழமொழிக்கு எடுத்துக் காட்டாக ஆகியுள்ளது. 

தீவிர அதிமுகவாசிகளான என் நண்பர்களே அதிர்ச்சியில் உள்ளார்கள். ‘இந்தம்மா என்ன தான் நினைச்சுக்கிட்ட்டு இருக்கு’என புலம்புகிறார்கள்.  வைகோவும் கார்த்திக்கும் சேர்ந்தால் விஜயகாந்த் ஏற்படுத்திய அதே இழப்பை அதிமுக கூட்டணிக்கு ஏற்படுத்த முடியும். விஜயகாந்த்தின் வரவால் தான் இந்தத் தெனாவட்டு என்றால் இது சுத்த மடத்தனம்.
வி..டு..த..லை...விடுதலை!
மதிமுக ஓட்டுகளையும் நம்பியே கம்யூனிஸ்ட்டுகள் இருந்தனர். இப்போது மதிமுகவும் நாமகவும்(அதாங்க கார்த்திக் கட்சி) இல்லையென்றால், அவர்களுக்கு இழப்பே ஏற்படும். தற்பொழுது கம்யூனிஸ்ட்களும் தேமுதிகவும் தங்கள் நிலையை மறுபரிசீலனை செய்ய வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

மதிமுகவின் பெரிய பலம் உற்சாகமான விசுவாசமான தொண்டர்கள். வைகோ என்ற தனி மனிதரின் மேல் உள்ள மரியாதையில் திரண்ட கூட்டம் அது. தேர்தல் வேலை செய்வதில் அவர்கள் காட்டும் தீவிரத்தைப் பார்த்து அசந்திருக்கிறேன். அந்த தொண்டர் படை இல்லாமல் தேர்தலைச் சந்திப்பது அதிமுகவிற்கு பேரிழப்பே.

கார்த்திக் திமுகவிடம் பெட்டி வாங்கிக்கொண்டு தனியே நின்று ஓட்டைப் பிரித்து உதவினார். அவரையும் சீட்டு தருவதாகச் சொல்லி கூப்பிட்டு, கழுத்தறுத்து நடு ரோட்டில் நிறுத்தியுள்ளார் ஜெ. வைகோவை விட கார்த்திக் பரவாயில்லை, நேற்றே வெளியேறி விட்டார். வைகோவையும் வெளியேறி வருமாறு அழைப்பு விடுத்துள்ளார்! ’தன்னை நம்ப வைத்து கழுத்தறுத்து தேவரினத்தை அவமதித்து விட்டதாக’ கார்த்திக் தன் பிரச்சாரத்தை முன்னெடுத்தால் அதிமுகவின் ஓட்டு வங்கியான தேவரின ஓட்டுகள் கலையும்.

திமுகவிற்கும் காங்கிரஸ்க்கும் இணக்கமான உறவில்லாத இந்தச் சூழ்நிலையில் வைகோ செய்ய வேண்டியதெல்லாம் காங்கிரஸ் நிற்கும் 63 தொகுதிகளிலும் தீவிரமாக எதிர்த்துப் போட்டியிடுவதே. அதற்கு சீமான் போன்ற இன உணர்வாளர்கள் உதவ வேண்டியது கடமையாகும். மீண்டும் தமிழின உணர்வுடன் ஒரு கூட்டணி இங்கு அமைக்கப்பட வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. 

காங்கிரஸ் நிற்கும் தொகுதிகள் மட்டுமல்லாது கோவில்பட்டி, சிவகாசி, விளாத்திகுளம் போன்ற மதிமுக செல்வாக்கு பெற்ற தென்மாவட்ட தொகுதிகளில் நின்றால் நிச்சயம் மரியாதையான வெற்றியைப் பெற முடியும். குறைந்தது அதிக வாக்குகளைப் பெற்று கட்சி அங்கீகாரத்தையும் மீட்க முடியும். முதலில் காங்கிரசுக்கு மாற்றாகவாவது மதிமுகவை நிலை நிறுத்த முடியும்.

பொதுஜனங்கள் மத்தியில் ஜெயலலிதாவின் போக்கு கடும் அதிருப்தியை உண்டு பண்ணியுள்ளது.  வேறு வழியின்றி ஜெ.வை ஆதரிக்கத் துணிந்த தமிழின உணர்வாளர்களும் வைகோவின் நிலையைப் பார்த்து வருத்தப் படுகின்றனர். மதிமுக தொண்டர்களும் விட்டது சனியன் என உற்சாகமாக உள்ளனர். ஆனால் தலைவர் தயாரா?


மேலும் வாசிக்க... "வைகோவை விடுதலை செய்த ஜெயலலிதாவுக்கு நன்றி!"
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

37 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.

Wednesday, March 16, 2011

நான் எந்தக் கட்சியைச் சேர்ந்தவன்? (தேர்தல் ஸ்பெஷல்)

தேர்தல் ஸ்பெஷல் தொடரில் இதுவரை ஒவ்வொரு தலைவர்களைப் பற்றியும் பார்த்து வந்தோம். தேர்தல் வேறு நெருங்கி விட்டதால் இனியும் இப்படி நிதானமாக அலசிக்கொண்டிருக்க முடியாது.. எனவே ஜெயலலிதா-கலைஞரை மையமாக வைத்து இனி கூட்டணி அலசல் செய்யலாம் என்று இருக்கிறேன். இப்போது ஏதாவது ஒரு கூட்டணியை ஆதரிக்க வில்லையென்றால் வெறும் திண்ணைப் பேச்சாகவே இந்த தொடர் வரலாற்றில்(!) கருதப்பட்டு விடும். ஆகவே நான் எந்தக் கட்சியின் சார்பு நிலை எடுப்பது என்று யோசிக்கிறேன்...
என் தாய்-தந்தையர் தீவிர திமுக ஆதரவாளர்கள். ‘என்ன இருந்தாலும் எம்.ஜி.ஆரு ஒரு நடிகன் தானப்பா’ என என் அப்பா (இருந்த வரை) அடிக்கடி இளக்காரமாகச் சொல்வார். எம்.ஜி.ஆருக்கே அப்படியென்றால் ஜெயலலிதாவைப் பற்றி கேட்கவே வேண்டாம்..வைகோ மீது அவருக்கு தனி மதிப்புண்டு. அதிமுககாரங்க எங்க வீட்டுக்கு ஓட்டு கேட்டு வரவே மாட்டாங்க. 

ஆனால் பெரும்பாலான என் உறவினர்களும் நெருங்கிய நண்பர்களும் அதிமுகவைச் சேர்ந்தவர்கள். ஒருமுறை ஒரு பாராளுமன்றத் தேர்தல் நடந்தபோது வைகோ போட்டியிட்டார். அவருக்கு எதிராக யாரோ ஒரு அதிமுககாரர்! தேர்தல் நேரத்தில் நான் அதிமுக நண்பர்களுடன் தேர்தல் வேலை பார்த்தேன். தேர்தலுக்கு முதல் நாள் இரவும் ஓட்டு ஸ்லிப் கொடுத்தோம். மிகமுக்கிய புள்ளிகளுக்கு மட்டும் சரக்கு சப்ளை. இப்போதுள்ளது போல் அப்போது பணம் விளையாடவில்லை. கட்சிப்பொறுப்பில் உள்ளவர்களுக்கு மட்டும் சில ஆயிரங்கள் மிஞ்சும். அதுவும் தண்ணியாகச் செலவழியும்!

விடியவிடிய வேலை செய்துவிட்டு, மறுநாள் ஓட்டுப்போட எல்லாரும் ஒன்றாகச் சென்றோம். மெசின் கிடையாது. ஓட்டுச் சீட்டு தான். மதிமுக சின்னம் மேலே இருந்தது. இரட்டை இலை கீழே இருந்தது. இரண்டிற்கும் இடையில் நல்ல கேப்!. நான் மதிமுகவிற்கே குத்தினேன். அதை அதிமுக பூத் ஏஜெண்டாக இருந்த நண்பர் பார்த்துவிட்டார். ‘டேய்..மேல ஏண்டா குத்துறே’ன்னு கத்திவிட்டார். உடனே அவரை வெளியே அனுப்பிவிட்டார்கள்.

நான் வெளியே வந்தபோது மொத்த அதிமுக நண்பர்களிடம் அவர் சொல்லிக்கொண்டிருந்தார். ‘அநியாயமா கவுத்திட்டான்யா...ஏண்டா அந்தாளுக்குப் போட்டே’ன்னு கேட்டார். ‘வைகோ பார்லிமெண்டில் நன்றாக வாதம் செய்பவர். நம் பகுதி பிரச்சினைகளுக்காக பலமுறை பேசி இருக்கிறார்.ஆனால் அதிமுக சார்பில் நிற்கும் அந்த மனிதர் யார் என்றே நமக்குத் தெரியலையே.. அந்தம்மா இப்படித்தான் யாரையாவது புதுசா நிப்பாட்டுது. அவங்களும் சம்பாதிச்சிட்டு ஒதுங்கிடுதாங்க.அதான்..’ என்றேன். மற்ற அதிமுக நண்பர்கள் புன்சிரிப்புடன் கேட்டுக்கொண்டிருந்தனர். அவர்களுக்குத் தெரியும் ‘ரொம்ப படிச்சாலே பிரச்சினை தான்’னு!

சமீபத்தில் ஒரு ஜாதிக்கட்சி தலைவர் புதிதாகக் கிளம்பினார். என் பெரியப்பா அதில் ஒரு முக்கிய புள்ளி. எனவே அவர் மூலம் என்னைப் பற்றி கேள்விப்பட்டு, என்னிடம் நேரடியாகப் பேசினார். ’என்னைப் போன்ற படித்த இளைஞர்களுக்கு இன உணர்வு மிகமிக முக்கியம்’ என்றும் ‘கட்சிக்கு ஆள் சேர்த்துத் தருமாறும், ஏதாவதொரு பொறுப்பை ஏற்றுக் கொள்ளவேண்டும்’என்றும் உணர்ச்சிப் பிழம்பாய் எடுத்துச் சொன்னார். ’எப்படியும் திமுக/அதிமுக கூட்டணியில் இரண்டு இடங்கள் வாங்கிவிட வேண்டும். அதில் ஒரு சீட் என் பெரியப்பாவிற்கு ’என்பது கூடுதல் டீலிங்! ஆனாலும் கடைசிவரை நான் ஒத்துழைக்க மறுத்து விட்டேன். என் பெரியப்பாவும் முடிந்தவரை முயற்சித்தார். அவர்களுக்கு ஒரு படித்த ‘பழமான’ முகம் தேவைப்பட்டது போலும். 

என்னைப் பொறுத்தவரை எந்தவொரு ஜாதியும், இருக்கின்ற பெரிய கட்சிகளின் பெயரில் கூடுவதே நம் ஜனநாயகத்திற்கு நல்லது. மேலும் ஜாதியின் பெயரால் கூடுவது நம் சமூக அமைதிக்கு நல்லதல்ல என்பது அனுபவப் பூர்வமாகவே எனக்குத் தெரியும். தேவர்-கவுண்டர் போன்றோருக்கு பிடித்தமான கட்சியாக அதிமுகவும், நாயக்கர்களுக்கு பிடித்ததாக மதிமுக-தேமுதிகவும், நாடார்களுக்கு நெருங்கியதாக திமுகவும் இருப்பது பலவகையில் நன்மையே..ஒரு பிரச்சினை என்று வரும்போது இவர்கள் கட்சிரீதியாகவே மூவ் பண்ணி, விஷயத்தை முடிப்பதைக் கண்டிருக்கிறேன். இது ஜாதி வெறியை ஜாதி அபிமானம் என்ற அளவிற்காவது குறைக்கும் என்பது என் அனுபவம்.

1991ல் ஜெ-சசியின் மோசமான ஆட்சி பிடிக்காமல் அடுத்து வந்த தேர்தலில் திமுக கூட்டணிக்கு வாக்களித்தேன் (தலைவர் வாய்ஸ் வேற..ம்..அது ஒரு கனாக்காலம்!)..தொடர்ந்து அதிமுகவிற்கும் திமுகவிற்கும் அவ்வப்போதைய நிலைமையைப் பொறுத்து வாக்களித்திருக்கிறேன். மேலே சொன்னபடி, இரு பெரியகட்சிகளுமே எனக்கு வேண்டியவையே. அதனால் யாராவது ஒருவருக்கு ஓட்டுப் போடுவது பெரிய பிரச்சினையாக இல்லை!

இப்போ உங்களுக்கே புரிஞ்சிருக்கும் நான் எந்தவொரு கட்சி சார்பும் இல்லாதவன்னு. ஓட்டுப் போடறவங்கள்ல 30% பேரு என்னை மாதிரி தான். கட்சி சார்புல விழுகிற ஓட்டுதான் வெற்றியைத் தீர்மானிக்கும்னா ஒரே கட்சி ஆட்சியில் தொடர்ந்திருக்கும். ஆனால் இங்கெ அப்படி இல்லை. எனது நண்பர்கள்/உறவினர்கள் சிலரும் என்னை மாதிரியே..நாங்க தான் ஆட்சியைத் தீர்மானிகிறதே..மற்றபடி, கட்சியின் தீவிர விசுவாசிகள்/தொண்டர்கள் கட்சி என்ன செய்தாலும் விட்டுத் தர்றதே இல்லை. அவங்களுக்கே ஓட்டு போடுவாங்க..என் தாய்-தந்தையர் உதய சூரியனுக்கு ஓட்டு போட்ட மாதிரி..என் நண்பர்கள் இரட்டை இலைக்கு ஓட்டு போட்டமாதிரி!

பெரும்பாலான மற்ற வலைப்பூக்களில் வரும் தேர்தல் கட்டுரைகளுக்கும் என் பதிவுகளுக்கும் உள்ள மிகப்பெரும் வித்தியாசமே ’நான் ஒரு சாமானியன்..சராசரி தமிழரை பிரதிபலிப்பவன்..சராசரித் தமிழனும் என்னைப் போன்றே குழப்பத்தில் இருப்பவன்’ என்பதே. ’அம்மா ஆட்சிக்கு வரணும்னு ஜிங்சா அடிப்பதாக’வும் கமெண்ட் வாங்கியிருக்கிறேன். ’தீவிர திமுக அனுதாபி’ என்றும் கமெண்ட் விழுந்திருக்கிறது. 

எந்தவிதமானதொரு கொள்கைக்கும் கட்சிக்கும் கட்டுப்படாத சாமானிய மனதின் சிந்தனைகளே இந்தத் தொடர். தற்போதைய ஆட்சி தொடர வேண்டுமா வேண்டாமா என்பதை அடுத்த பகுதியில் சொல்கிறேன்!


மேலும் வாசிக்க... "நான் எந்தக் கட்சியைச் சேர்ந்தவன்? (தேர்தல் ஸ்பெஷல்)"
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

33 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.