Monday, November 23, 2015

டபுள் மீனிங் டயலாக்ஸ் : ஒரு பார்வை


கோவில்பட்டி பகுதிகளில் 'புலவர் ஆட்டம்' எனும் நரிக்குறவர் ஆட்டம் பிரசித்திபெற்றது. கோவில் திருவிழாக்களில் 'புலவர்' என்று அழைக்கப்பட்ட, அந்தக் கலைஞர் இருந்தவரை தவறாமல் இடம்பெறும்.

கதையில், அவர் வம்ச வம்சமாக சாமியாடும் நபராக வருவார். அவருக்கு எதிராக, புதிதாகச் சாமியாட இன்னொரு போலிச்சாமி களமிறங்குவார். இருவருக்குமான போட்டி தான் கதை.

ஒரிஜினல் சாமியான புலவர் காலில் ஒரு பெண் விழுவார்.

பெண்: சாமி, எனக்கு குழந்தை வரம் வேண்டும்.
புலவர்: அப்படியா? சரி, எந்திரி பார்ப்போம்.

போலிச்சாமி: ஆமா எந்திரி தாயி...சாமி நல்லாப் பார்க்கட்டும். தா*ளி, நல்ல சாமீல்ல இது!

புலவர்: ஏம்மா, உனக்கு கல்யாணம் ஆகிடுச்சா?
பெண்: கல்யாணம் ஆகாமலா பிள்ளைவரம் கேட்பாக?
புலவர்: புருசன் இருக்கானா?
பெண்: இருக்காக, துபாய்ல.

போலிச்சாமி: அப்புறம் **க்குள்ளயா குழந்தை பிறக்கும்?

புலவர்: சரி, நீ வெள்ளிக்கிழமை, வெள்ளிக்கிழமை நைட்டு என் வீட்டுக்கு வா..நான் போடறேன்.

பெண்: சாமீ??
புலவர்: திருநீறு போடறேன்மா.

போலிச்சாமி: ஏ, அது கிழட்டுச்சாமி. சக்தியெல்லாம் மங்கிப்போச்சு. அவங்கிட்டே போகாத. நீ என்கிட்ட வா. நான் இளஞ்சாமி.
புலவர்: அவனை நம்பாதே. போலிப்பய.

பெண்: சாமி, உங்களுக்குள்ள சண்டை வேண்டாம். நீங்க வெள்ளிக்கிழமை போடுங்க. அவர் செவ்வாய்க்கிழமை போடட்டும்.

போலிச்சாமி: எப்படிச் சொன்னா பாருய்யா, தீர்ப்பு. இவள்ல உத்தமி!

------------------- ஒரு பக்கம் ஊர் பெரியவர்கள், இன்னொரு பக்கம் பெண்கள், இன்னொரு பக்கம் விடலைகள் சூழ்ந்திருக்க, புலவர் ஆட்டம் நேரம் ஆக, ஆக இன்னும் களைகட்டும். சிரித்துச் சிரித்து வயிறு வலித்துவிடும். 

நமது கரகாட்டம் உள்ளிட்ட பெரும்பாலான கலைகளில் இரட்டை அர்த்த வசனங்களும் பாடல்களும் சகஜம். காரணம், செக்ஸ் என்பது வாழ்க்கையின் ஒரு பகுதி என இயல்பாக ஏற்றுக்கொண்ட மரபு அது. இத்தகைய நகைச்சுவைகள் மூலம், செக்ஸ் என்பது ஒரு கொண்டாட்டமாக வயது வந்தோருக்கு அறிமுகம் செய்யப்பட்டது.

செக்ஸை நகைச்சுவயாக அணுகுவது தவறு என்று சொல்லிவிட்டு, வாட்ஸப்பில் செக்ஸைத் தேடுகிறது இந்தத் தலைமுறை. அங்கே கிடைப்பது, வக்கிரம் தான். புலவர் ஆட்டம் பார்த்துவிட்டு, அடுத்த நாள் அன்ணன்மாரிடம் 'ஏன்ணே, புருசன் துபாய்ல இருந்தால் குழந்தை பிறக்காதா?' என்று கேட்டது ஞாபகம் வருகிறது!

'நஞ்சவெளியாக நான் இருக்கேன், நாத்து நட நீ வாறியா?' என்று பாடும் நமது பாரம்பரியக் கலைகளில் மட்டுமல்லாது கிராம வாழ்க்கையிலும் இரட்டை அர்த்த வசனங்கள் சகஜமாகவே இருந்துவந்தன/வருகின்றன.

ஒரு பெண், முந்தைய நாள் தன் வீட்டிற்குள் பாம்பு வந்துவிட்டதாக கூறினார். அதற்கு தாத்தா ஒருவர் 'அங்க, சுத்திச் சுத்தி பொந்தால்ல இருக்கு. பொந்துன்னு இருந்தால் பாம்பு வரத்தான செய்யும்!' என்றார். 'யோவ்' என்று பெண் அதட்ட, 'நான் உன் வீட்டைச் சொன்னேன்மா. வீட்டைப் பூசு!' என்று தாத்தா ஜகா வாங்கினார்.

ஒருமுறை கடைக்காரரிடம் ஒரு பெண் வாழைப்பழம் கேட்டு வந்தார். பழத்தார் ஏறக்குறைய காலியாகி, கொஞ்சம் அழுகிய பழங்கள் தான் இருந்தன. கடைக்காரர் ' நசிஞ்ச பழம் தான் இருக்குத்தா. இது வேலைக்கு ஆகாது, வேண்டாம்' என்று சிங்கிள் மீனிங்கில் தான் பதில் சொன்னார். 

அடுத்த செகண்ட், அந்த பெண் சொன்ன பதில் : அப்படியா மாமா? பாவம், அக்கா!

சொல்லிவிட்டு,அவர் போய் ஒரு நிமிடம் கழித்துத்தான் அவருக்கே அர்த்தம் புரிந்தது.

'சரிய்யா, இப்போ என்ன ஆச்சு? ஏன் இப்படி பிட்டா ஓட்டிக்கிட்டு இருக்கிறே?'ன்னு கேட்கிறீங்களா? சொல்றேன். 'யாமிருக்க பயமே' படத்தில் ஓவியா 'பூரிச்சண்டை' போட்டதைக் கண்டித்து சிலர் பொங்கியிருந்தார்கள். அப்போதே எழுத நினைத்தேன். ஐ ஆம் பிஸி. இப்போது நயந்தாரா 'உங்களைப் போடணும் சார்' என்று சொன்னதும், பலருக்கும் ஹார்ட் அட்டாக். தலைவியைவே தப்புத்தப்பா பேச வச்சிட்டாங்களே என்று! அதற்கான ஆறுதல் பதிவு தான் இது!!

செக்ஸ் சம்பந்தப்பட்ட எதையும் வெளிப்படையாகப் பேசக்கூடாது, அதே நேரத்தில் பாலியல் கல்வி வேண்டும் என்று இரண்டு மாறுபட்ட முற்போக்குக் கருத்துகள் ஒரே நபர்களால் இப்போதெல்லாம் சொல்லப்படுகின்றன. இதற்கு இரண்டு  காரணங்கள் தான்.

1. காமத்தை பாவமென்று கருதும் விக்டோரிய ஒழுக்கவிதிகளின் ஆதிக்கம். அது தான் நாகரீகம் என்று நம்பும் மனப்பான்மை.

2. பெண்ணியவாதம். பெரும்பாலான பெண்ணியவாதிகளைப் பொறுத்தவரை, காமம் என்பது ஆண் பெண்மீது செலுத்தும் ஆதிக்கம் மட்டுமே, அது அன்புக்கான வழியே அல்ல! எனவே காமத்தையும் காமம் சம்பந்தப்பட்ட எல்லாவற்றையும் டெரராகவே அணுகுவது.

முந்தைய தலைமுறையிடம் இந்தப் பிரச்சினை இல்லை. வாழ்க்கையை எளிமையாகவும் சந்தோசமாகவும் வாழ்ந்த தலைமுறை அது. 

உண்மையில் இரட்டை அர்த்த வசனங்களைப் பேசுவது என்பது ஒருவகைக் கலை. கொஞ்சம் ஆபத்தான கலை என்றும் சொல்லலாம்.

மதில் மேல் பூனையாக வார்த்தைகளை கவனமாக உபயோகிக்க வேண்டும். அதிலும் சினிமா போன்ற வெகுஜன ஊடகத்தில் மிகவும் ஜாக்கிரதையாகப் பயன்படுத்த வேண்டும். கீழ்க்கண்ட விஷயங்களை, டபுள் மீனிங் டயலாக் பேசும்/எழுதும்போது கவனத்தில் கொள்ள வேண்டும்.

1. ஈவ் டீஸிங் செய்ய, அதை உபயோகிக்கக்கூடாது. ஒரு பெண்ணை உடல்ரீதியாக இழிவுபடுத்தவோ அல்லது படுக்கைக்கு அழைக்கும் கருவியாகவோ பயன்படுத்தக்கூடாது.

2. யாராவது பொங்கி எழுந்தால், நான் நல்ல மீனிங்கில் தான் சொன்னேன் என்று நீங்கள் சாதிக்கும் அளவிற்கு வார்த்தைகளில் கவனம் வேண்டும்.

3. பெரியவர்களுக்கு, அந்த இரண்டாவது மீனிங் தெளிவாகப் புரிய வேண்டும். டீன் ஏஜ் வயதினருக்கு 'அதைத் தான் சொல்றாங்களோ?'எனும் குறுகுறுப்பைக் கொடுக்க வேண்டும். சிறுவர்களுக்கு கண்டிப்பாகப் புரியக்கூடாது.

4. எனவே, கண்டிப்பாக அது விஷுவலாக காட்டப்படக்கூடாது. காட்சி, நாகரீகமானதாக இருக்க வேண்டும்.

5. வலிந்து திணிக்கப்பட்டதாக இருக்கக்கூடாது. அந்த சூழ்நிலைக்கு, அந்த முதல் மீனிங் தேவைப்பட வேண்டும்.

6. முடிந்தவரை டபுள் மீனிங் பேசுபவர் அப்பாவியாக இருப்பது நல்லது.

முந்தானை முடிச்சு படத்தின் பாக்கியராஜ், ஊர்வசியை மனைவியாக ஏற்றுக்கொள்ளாமல் ஒதுக்கி வைத்திருப்பார். பிறகு கொஞ்சம், கொஞ்சமாக அவர் மனது மாறும். முதலில் ஊர்வசியின் சமையலை மட்டும் ஒத்துக்கொள்வார். அதையே ஊர்வசி தனக்கு சாதமாக ஆக்கிவ்டக்கூடாதே? எனவே..

பாக்கியராஜ்: சாப்பிட ஒத்துக்கிட்டதால, இறங்கி வந்துட்டேன்னு நினைச்சுடாதே!

ஊர்வசி: நீ ஏறவும் வேண்டாம், இறங்கவும் வேண்டாம். வந்து சாப்பிடு!

அவ்ளோ தான் பாஸ், டபுள் மீனிங்!
 
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

2 comments:

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.